Monday 6 October 2014

தமிழ் இனி மெல்ல.. [ 3:6 ]தொடர்கிறது

தமிழ் இனி மெல்ல.. [ 3:5  ]    சென்ற பதிவின் தொடர்ச்சி 
நூறடி விட்டமும், இருபத்தைந்தடி ஆழமும் உள்ள ஒரு பெரிய பள்ளம் தோண்டி, அதற்குச் செல்ல சிக்கலான ஒரு வழி அமைத்தான். அந்தப் பள்ளத்திற்கு கருங்கற்களால் சுவர்களும், தரையும், மேல் தளமும் கட்டி, நடுவில் பதினைந்தடி அகலத்தில் ஆறு பட்டை உள்ள ஒரு அறை கட்டி, அந்த அறையில் பாண்டியப் பொக்கிஷங்களை வைத்து மறைத்தான். ஓரொரு பட்டையிலும் வெளியே செல்ல சுரங்க வழிகள் அமைத்தான். அந்த அறையில் மேல் தளத்தில் ஒரு சிறிய சிவன் கோவில் அமைக்கப்பட்டது. பொக்கிஷ அறை கீழே இருப்பது தெரியா வண்ணம்.

அந்தச் சுரங்கப் பாதைகள் ஒன்றை ஒன்று மூன்று முறை சுற்றி வந்து பிறகு தனித் தனியாக வெவ்வெறு திசையில் பிரிந்து சென்றன. சில வழிகள் ஒன்றோடு ஒன்று பதினைந்து அடிக்குப் பதினைந்து அடி அகலமான அறைகளில் சந்தித்தன. கடைசியில் இரண்டே வழிகள் வெளியில் வந்தன. ஒன்று முருகேசனின் குடிசைக்கும், இன்னொன்று, ஒரு சிறிய மண்டபத்தின் இரகசிய அறைக்கும் சென்றன. வழி தெரியாதவர் சுரங்கப் பாதையில் நுழைந்தால் வழி தவறித் திண்டாட வேண்டும் என்றே குழப்பான வகையில் அவை கட்டிப்பட்டிருந்தன.

சுரங்கப் பாதையும், ஒருவர் செல்லும் அளவுக்கே இருந்தபடியால் உள்ளே வருபவர் எவராக இருந்தாலும், சுரங்கப் பாதைகள் சந்திக்கும் அறையில் தாக்கிக் கொல்லப்படுவது எளிது. அது மட்டுமன்றி சுரங்கப் பாதையை அடைத்துக் கொண்டு காவலாக நின்று விட்டால், அவர்களைத் தாக்கிக் கொன்று கீழே வீழ்த்தினால்தான் மேலே செல்ல இயலும். கடைசியில் அவர்கள் மேலே செல்ல இயலாதவாறு வழியும் அடைக்கப்பட்டு விட ஏதுவாகும். எனவே, நூற்றுக்கும் குறைவான வீரர்களே கடைசி நிலையில் பொக்கிஷத்தை நன்கு காவல் காக்க முடியும்.

இந்த அமைப்பைக் கட்டி முடிக்க பதிமூன்று மாதங்கள் ஆயிற்று. விக்கிரம பாண்டியன் ஆறு மாதங்கள் முன்பு வந்து பார்த்து விட்டு, முருகேசனைப் பாராட்டி விட்டுச் சென்றிருந்தான். அப்பொழுது அவன் முகத்தில் கவலைக் கோடுகள் நிறைய இருந்ததைப் பார்த்துக் கவலையுற்ற முருகேசன் அவனிடம் விசாரித்த போது சுரத்தில்லாமல்தான் பதிலளித்தான் விக்கிரமன்.

“முருகேசா, இராஜேந்திரன் இலங்கையின் மீது படையெடுத்து வரத் தீர்மானித்து விட்டான். கிட்டத்தட்ட முந்நூறு நாவாய்கள் ரோகணத்தைச் சுற்று வளைத்துக் கொள்ளும் என்று தெரிகிறது. தொண்டித் துறைமுகம் நமது கைவிட்டுப் போய் விட்டது. தொண்டிக்கு நான்கு கல் தூரத்திற்கு முன்னரே அனைவரும் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். இப்பொழுது கொற்கைதான் நமது கைவசம் இருக்கிறது. அதை முதலில் கைப்பற்ற இராஜேந்திரன் திட்டம் தீட்டியே நாவாய்களை அமைத்து வருகிறான் என்று ஒற்று கூறுகிறது.

“கொற்கை பிடிபட்டால் பாண்டி நாட்டிலிருந்து இலங்கை வருவது குதிரைக் கொம்பாகி விடும். சேரத் துறைமுகமான விழிஞத்திலிருந்துதான் வர இயலும். எனவே இராஜேந்திரன் கொற்கையைத் தாக்க முற்பட்டால் அங்கு குவிந்திருக்கும் பாண்டியப் படை முழுவதும் உயிரைக் கொடுத்துப் போராடுவார்கள். உனது கடமை நமது பரம்பரைச் சொத்து இருக்குமிடத்தை மிகவும் இரகசியமாக வைத்திருப்பதுதான். நீ நிறைவேற்றி இருக்கும் பாதாள அரணமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.” என்று பொக்கிஷ அறையில் மேல் தளத்தில் இருந்த சிவன் கோவிலில் வழிபட்டுவிட்டு, மேலும் இரண்டாயிரம் பாண்டியவீரர்களையும் விட்டுவிட்டுச் சென்றான்.

தன் அரசனைச் சந்திக்கும் கடைசிச் சந்திப்பாக அது அமைந்து விடுமோ என்று முருகேசன் அஞ்சியபடியே நடந்து விட்டது.

இராஜேந்திரனின் ஒற்றர்கள் தவறான தகவலை அனுப்பி பாண்டிய ஒற்றர்களைக் குழப்பி இருந்ததால் பாண்டியப் படை கொற்கையில் கட்டிப் போடப்பட்டது. நாகைப்பட்டினத்திலிருந்து திரிகோணமலைக்கு இருநூறு நாவாய்கள் மூலம் நிறைய சோழவீரர்களை அனுப்பி ரோகணத்தைத் தாக்கினான் இராஜேந்திரன்.

அவனுடன் தோள் கொடுத்து சோழப் படைவீரர்களுடன் முன்னிருந்து வீரப் போர் புரிந்தான் இராஜாதிராஜன். தனக்குப் பிடித்த யானைப் படைகளை அணிவகுத்துப் போர் புரிந்து சிங்களப் 

படைகளைச் சின்னா பின்னாமாக்கினான். பாண்டியர்களின் பரம்பரைச் சொத்தைக் கைப்பற்றி சோழ நாட்டிற்குக் கொண்டு வருவதும், வணிக நாவாய்களைக் காப்பாற்ற இலங்கையிலிருந்து தாக்கும் கடல் கொள்ளைக்காரர்களைப் பூண்டறுப்பதும் சோழர்கள் திட்டமாக இருந்தது.
தமிழ் இனி மெல்ல.. [ 3:6 ]தொடர்கிறது 
அரிசோனா மகாதேவன் 

பொலனருவையைத் தாண்டியதும், சோழப் படைகள் இரண்டாகப் பிரிந்து தாக்கின. ஒரு பகுதியை இராஜேந்திரன் நடத்திச் சென்று ஐந்தாம் மகிந்தனைச் சிறைப் பிடித்தான். இன்னொரு பகுதியை நடத்திச் சென்று பாண்டியப் பொக்கிஷத்தைக் கைப்பற்ற விழைந்தான் இராஜாதிராஜன்.

கடைசியில் ஒரு சிற்றூரில் ஐயாயிரம் பாண்டிய வீரர்கள் முகாமிட்டிருப்பது ஒற்றர்கள் மூலம் அறியவே, அங்குதான் பாண்டியர் பரம்பரைச் சொத்து இருக்கக்கூடும் எனத் தீர்மானித்து அவர்களைத் தாக்க விரைந்தான் இராஜாதிராஜன். அவர்களை எதிர்கொள்ளத் தயாராக இருந்தனர் பாண்டியர்கள். இதுவரை அவன் காணாத வகையில் அவர்கள் சிறப்பாகப் போரிட்டனர். அவர்களின் திறமை இராஜாதிராஜனை மிகவும் கவர்ந்தது. அதிலும் குறிப்பாக அவர்களுக்குத் தலைமை தாங்கிப் போரிட்ட வீரனின் மன உரம் அவனுக்கு மிகவும் பிடித்தது. இவன் எதிரியாக இல்லாமல் நண்பனாக இருந்தால் எப்படி இருக்கும் என்றும் எண்ண வைத்தது.

ஏழு மணி நேரம் நடந்த போரில் பாண்டியப் படையில் பெரும் பகுதி அழிக்கப்பட்டது. அதற்காகச் சோழவீரர்கள் கொடுத்த விலை மிகமிக அதிகம். இரவு வந்ததும் சண்டை நிறுத்தப்பட்டது...

...கடைசி நிலைக்குத் தள்ளாடியவாறே வந்து சேர்கிறான் முருகேசன். இரத்தக் காயங்கள் அவனது உடலைச் சிவப்பாக ஆக்கி இருக்கின்றன. பொக்கிஷ அறைக்குச் செல்லும் சுற்றுப் பாதைச் சுரங்கத்தின் கடைநிலை அறையை அடைகிறான். அங்கே அவன் தேர்வு செய்த வீரர்கள் இருபத்தைந்து பேர் இருக்கின்றனர். அவனைக் கண்டதும் அவர்கள் மரியாதையுடன் ஓடி வந்து தாங்கிப் பிடிக்கின்றனர்.

“முருகேசரே,  என்ன ஆயிற்று?” என்று அவனுக்குக் குடிநீரை அளிக்கின்றான் தலைமை வீரன். மடக், மடக்கென்று தண்ணீரைக் குடிக்கிறான் முருகேசன்.

“நம் பாண்டி நாட்டிற்காக நமது உயிரைக் கொடுக்கும் தருணம் வந்து விட்டது. சோழர்கள் சுரங்கப் பாதையில் நுழைந்து விட்டனர். நமது முதல், மற்றும் இடைநிலை வீரர்கள் அவர்களுடன் போரிட்டு சுரங்கம் முழுவதும் அவர்களின் பிணக்குவியல்களை நிரப்பி வீர சுவர்க்கம் அடைந்தனர். இனி நாம் மட்டும்தான் இருக்கிறோம். இன்னும் எத்தனை நேரம் நமக்கு வாழ்வு இருக்கிறதோ தெரியாது. ஆயினும் நமது கடைசி மூச்சு இருக்கும்வரை போராடுவோம்.” என்று உறுதியான குரில் தெரிவிக்கிறான்.

அனைவருக்கும் இளைஞனாக இருக்கும் ஒரு வீரனைப் பார்த்துக் கண்ணசைக்கிறான். அந்த வீரன் தன் இடுப்பில் கட்டியிருக்கும் ஒரு சிறிய மூட்டையைப் பிரிக்கிறான்.

“செல்லக்கண்ணா, நீதான் அனைவருக்கும் இளையவன். ஆகவே, நீ எங்கள் அனைவருக்கும் வாக்கரிசியைக் போட்டு விட்டு இரகசிய வழியாகத் தப்பிச் செல். எப்படியாவது உன் உயிரை நீ பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நமது அரசருக்கு நாங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றினோம் என்று தெரிவிப்பது உனது பொறுப்பு!” என்று கரகரத்த குரலில் கூறுகிறான்.

செல்லக்கண்ணனின் முகத்தில் சோகம் ஒருகணம் நிழலாடுகிறது. ஒன்றுமே சொல்லாமல் முருகேசனில் துவங்கி, அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரின் வாயிலும் சிறிது அரிசியைப் போடுகிறான். அனைவரும் அப்படியே அந்த அரிசியை விழுங்குகின்றனர். முருகேசன் தன் இடுப்பில் இருக்கும் ஒரு சாவியை எடுத்து செல்லக்கண்ணனிடம் நீட்டுகிறான்.

அறையில் இரண்டடி உயரத்தில் இருக்கும் ஒரு சிறிய கதவில் தொங்கும் பூட்டைத் திறக்கிறான் செல்லக்கண்ணன். கதவைத் திறந்து ஒரு ஆளே தவழ்ந்து செல்லும் அளவுக்கு இருந்த சுரங்கத்தில் நுழைகிறான் அவன். உடனே கதவைச் சாத்தித தாளிட்டு விடுகிறான் முருகேசன்.

ஆளரவம் கேட்கிறது.

“நீங்கள் ஐவரும் உயிருடன் இருக்கும் வரை உங்களைத் தாண்டி யாரும் மேலே செல்லக் கூடாது!” என்று ஆணையிட்டு விட்டு, மீதி இருப்பவரை ஆறாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவையும் ஒவ்வொரு வழியாகச் செல்லச் சொல்லிவிட்டு, தானும் ஒரு பிரிவுடன் செல்கிறான் முருகேசன். பொக்கிஷ அறைக்குச் செல்லும் ஒவ்வொரு கதவுக்கும் காவலாகத் தாங்கள் இருக்கப் போகிறோம் என்பது பேசாமலே அவர்கள் அறிந்து கொள்கிறார்கள்.

அவர்கள் செல்லவும், முதல் சோழவீரன் தலையை நீட்டவும் சரியாக இருக்கிறது. நீட்டிய தலை உடனே ஒரு பாண்டிய வீரனால் துண்டிக்கப் படுகிறது.

பதினைந்து நிமிடங்கள் கழிகின்றன. இருபத்தி எட்டு சோழ வீரர்களின் உயிரை எடுத்த பின்னர் அந்த ஐந்து பாண்டிய வீரர்களும் பலியாகிறார்கள். அந்த அறையிலிருந்து ஆறு சுரங்கங்கள் பிரிவதைக் கண்டு திகைக்கின்றனர் உள்ளே வந்த சோழவீரர்கள். அவர்களும் ஒருவர் பின் ஒருவராக ஆறு சுரங்கங்களிலும் செல்ல ஆரம்பிக்கிறார்கள்.

அதற்கு ஆறு மணி நேரம் கழித்து நூற்று இருபது வீரர்களை இழந்த பின்னர் பாண்டியர்களின் பரம்பரைச் சொத்து சோழர் வசம் வந்து சேருகிறது. முருகேசன் மட்டுமே இருபது பேரை எமனுலகுக்கு அனுப்பிய பின்னர் கடைசிப் பாண்டிய வீரனாக இறக்கிறான்.

நான்கு நாள்களுக்குள் அவன் கட்டிய அரண் தகர்க்கப் பட்டு பொக்கிஷங்கள் நிலமட்டத்திற்கு வந்து சேருகின்றன. இதை மேற்பார்வை பார்த்த இராஜாதிராஜனின் கவனத்தைக் கவருகிறது பாண்டியரின் அரியாசனத்திற்கு அருகில் கிடந்த - இடது கை, கால்கள் இரண்டும் துண்டிக்கப்பட்டு, ஒரு கண் குத்தப்பட்டு, மார்பில் எண்ணற்ற விழுப்புண்களுடனும், வலது கையில் வாளுடனும் கிடந்த - முருகேசனின் உயிரல்லா உடல். பாண்டியர் படைத் தலைவன் அவன்தான் என்று கண்டுகொள்கிறான் இராஜாதிராஜன்.

“வீரனே! நீ யாரோ, எவனோ, உன் பெயர் என்னவோ, எனக்குத் தெரியாது. உன் வீரத்தால் என் மனதை வென்று விட்டாய்! இப்படிப்பட்ட வீரனான நீ சோழநாட்டுக்கு நண்பனாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! உன் கடமையைச் செய்து விட்ட நிம்மதியுடன் நீ போய்ச் சேர்ந்து விட்டாய்! நானும் உன்னை மாதிரியே போரில் மார்பில் விழுப்புண் ஏந்தித்தான் உயிர் நீக்க விரும்புகிறேன். வயதாகி, நலங்குன்றி, பார்வை மழுங்கி, நடை நழுவி, மற்றவர் பரிதாபப்படும் அளவுக்கு முதியவனாகி, நடைப் பிணமாகி இறக்க நான் விரும்பவில்லை.” என்று மனதிற்குள் சொல்லிக் கொள்கிறான் இராஜாதிராஜன்.

கணக்குப் பார்த்தால் ஐயாயிரம் பாண்டிய வீரர்களுடன் பதிமூவாயிரம் சோழ வீரர்கள் இப்போரில் உயிர் துறந்திருக்கிறார்கள் என்று அறிந்து கொள்கிறான் இராஜாதிராஜன். இதுவரை நடந்த எந்தப் போரிலும் சோழவீரர்களுக்கு இந்த அளவு விகிதத்தில் உயிர்ச் சேதம் ஏற்பட்டதில்லை. தான் முதலில் கலந்து கொண்ட போரில் ஒரு சோழ வீரன் கூட இறக்காமல் அமரபுஜங்கனை தனது பாட்டனார் வென்றதை நினைவு கூர்கிறான்.

இங்கே வீரமாகப் போரிட்டு அந்தத் தோல்வியை நிறைவு செய்து விட்டனர் பாண்டியர் என்றும் மனதில் சொல்லிக் கொள்கிறான். இங்கு அவர்கள் போரிடவில்லை, தங்கள் நாட்டிற்காக ஒரு வேள்வி இயற்றி, தங்களையே பலியாகக் கொடுத்திருக்கிறார்கள் என்றே அவன் நம்புகிறான். எனவே இங்கு உயிரழந்த அனைவருடைய உடல்களையும் எடுத்து வந்து முறையாக ஈமச் சடங்குகள் செய்ய வேண்டும் என்று அந்தணர்களை வரவழைக்கிறான்.

அப்பொழுது சோழ வீரர்கள் ஒரு இளைஞனை அங்கு இழுத்து வருகிறார்கள். அவனைப் பார்த்தால் ஒரு பாண்டிய நாட்டான் போல இருக்கிறது.

“அரசே! இவன் ஒரு மரத்தின் பின் மறைந்து நின்று இங்கு நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தான். ஒரு வேளை ஒற்றனோ என்று ஐயப்பட்டு இழுத்து வந்தோம்!” என்று பணிவுடன் தெரிவிக்கின்றனர் சோழ வீரர்கள்.
அவனை உற்று நோக்குகிறான் இராஜாதிராஜன். ஒரு புலி தனது இரையைப் பார்ப்பது போல இருக்கிறது அவனது பார்வை.

“யாரடா நீ?” உறுமுகிறான் அவன்.

சிறிதும் அச்சப்படாமல் அவனை நோக்குகிறான் அந்த இளைஞன். அவன் பார்வையில் இருக்கும் வெறுப்பை இராஜாதிராஜனால் புரிந்து கொள்ள முடிகிறது. இவன் ஒற்றனாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வருகிறான். ஒற்றன் என்றால் அவனை நேருக்கு நேராகப் பார்க்க மாட்டான். தவிரவும் இவ்வளவு வெறுப்பைத் தன் கண்களில் காட்டி இருக்கவும் மாட்டான். எப்படியாவது தப்பித்துச் செல்வதில்தான் கவனத்தைச் செலுத்தி இருப்பான். இப்படி அசட்டையாக இருந்து எதிரிகளிடம் மாட்டிக் கொண்டிருக்கவும் மாட்டான்.

“நான் பாண்டிய வீரன். உங்களில் ஒருவரைக்கூட எமனுக்கு அனுப்பிய மகிழ்வுடன் என் நண்பர்களுக்குத் தோள்கொடுத்து வீரமரணம் அடைய இயலாத ஒரு நற்பேறற்றவன். எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தால் உங்களில் யாருடனாவது போரிட்டு வீரமரணம் அடைய விரும்புகிறேன்.” அவனது குரலில் ஒரு கலக்கமோ, அச்சமோ இல்லை.

“உன் பெயரென்ன?”

“செல்லக்கண்ணன்.”

“உன் ஊர்?”

“நெல்லை”.

“தென்பாண்டி நாட்டானா?”

“ஆமாம்!”

“உன் நண்பர்களுடன் சேர்ந்து வீரமரணம் எய்தவில்லையே என்று வருந்தினாயே, பின் ஏன் ஒரு மரத்தின் பின்னர் மறைந்து ஒற்றனைப் போல வேவு பார்த்துக் கொண்டிருந்தாய்?” என்று நகைக்கும் இராஜாதிராஜன், தன் இரையைச் சீண்டி விளையாடும் புலியைப் போலத்தான் பாண்டிய வீரனுக்குத் தென்படுகிறான்.

“இங்கு பாண்டிய நாட்டின் பரம்பரைச் சொத்துக்கு என்ன விளைவு ஏற்படுகிறது என்பதை அறிந்து என் மன்னரிடம் தெரிவிப்பதற்காக என் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டார் எங்கள் தலைவர் முருகேசன்,பாண்டிய மன்னர்களின் பரம்பரை மெய்காப்பாளர் - பாண்டிய மன்னர் அமரபுஜங்கர் இறந்தவுடன் உங்கள் பாட்டனாரின் சிறையில் தன் தலையைத் தானே கொய்துகொண்டு வீர மரணம் எய்திய  திருமாறனின் தம்பி.

“அவரது உடலை நீங்கள் தீக்கிரையாவதைப் பார்த்து, எனது இறுதி மரியாதை அவருக்குத் தெரிவித்துவிட்டுச் செல்லலாம் என்று இருந்தேன். எனது கவனக் குறைவால் பிடிபட்டுவிட்டேன். இனி நான் உயிருடன் பாண்டி நாடு திரும்ப முடியாது என்று முடிவாகி விட்டது. எனவேதான் ஒரு வீரனாக என் உயிரைவிடத் தீர்மானித்து விட்டேன். நீங்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் என்னுடன் போரிட அனுப்புங்கள். என் கதையும் ஒரு வீரனுடையதாகவே முடியட்டும். சொக்கநாதரிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறேன்.”

கடகடவென்று சிரிக்கிறான் இராஜாதிராஜன். இளவரசன் முன் சற்றும் பயமில்லாமல் எதிர்த்துப் பேசுகிறானே என்று அவனைச் சாடச் சென்ற சோழவீரனையும் தடுத்து நிறுத்துகிறான் அவன்.

“உன் வேண்டுகோளை என்னால் நிறைவேற்ற இயலாது. செல்லக்கண்ணா! உன் தலைவர் சொன்ன கட்டளையை நீ நிறைவேற்றுவாயாக. உன்னை விடுவிக்கிறேன். சோழ வீரர்கள் உன்னைப் பாண்டிய நாட்டுக் கடற்கரை அருகில் ஒரு படகில் இறக்கி விடுவார்கள்.

“உன் மன்னரிடம் பாண்டியரின் பரம்பரைச் சொத்து சோழ இளவரசன் இராஜாதிராஜன் கைக்கு வந்து விட்டதாகவும், அவை கோப்பரகேசரி இராஜேந்திரருக்கு காணிக்கையாகக் கொடுக்கப்படும் என்றும் கூறு. முடிந்தால் சோழநாட்டுக்கு வந்து மீட்டுக் கொள்ளச் சொன்னதாக நான் உனது மன்னருக்குச் சேதி அனுப்பியதாகவும் சொல்லு.

“இந்தப் போரில் வீரமரணம் எய்திய பாண்டிய வீரர்களை பாராட்டி முறைப்படி ஈமச் சடங்குகளுக்கு ஏற்பாடு நான் செய்ததாகவும் கூறு. உன்னை யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள்.” என்று புன்னகைத்த இராஜாதிராஜன், “ஏனாதி அவர்களே! எனது கட்டளையை நிறைவேற்றும். ஈமச் சடங்கை இவன் கண்ணுறட்டும். அதன் பின்னர் எந்த ஊறும் வராமல் இவனைப் பாண்டிய நாட்டுக்குத் திருப்பி அனுப்பி விடுங்கள்.” என்று முடிக்கிறான்.

செல்லக்கண்ணனை சோழவீரர்கள் இழுத்துச் செல்கிறார்கள்.

சிறிது நேரம் கழித்து தன் பாசறைக்குச் செல்கிறான் இராஜாதிராஜன். ஐயாயிரம் பாண்டிய வீரர்களை அழிக்க பதிமூவாயிரம் சோழவீரர்களை காவு கொடுத்ததைப் பற்றித் தன் தந்தைக்கு எப்படிச் சொல்லப் போகிறோம் என்று யோசிக்கிறான் அவன். சுரங்கப் பாதையை எப்படி அரணாக அமைத்து தன் பலத்தை முருகேசன் பெருக்கிக் கொண்டான் என்று நினைக்க நினைக்க அவனுக்கு வியப்பாக இருக்கிறது. சிவாச்சாரி இலங்கைக்கு வந்திருந்தால் உயிர்ச் சேதத்தைத் தவிர்க்க ஏதாவது வழி சொல்லியிருப்பானா என்றும் எண்ணிப் பார்க்கிறான். அவனை தஞ்சைக்குக் காவலாகவும், தான் திரும்புவதற்குள் ஜெயங்கொண்ட சோழபுரத்தைக் கட்டி முடிக்குமாறும் ஏன் தனது தந்தை ஆணையிட்டார் என்பதையும் நினைத்துப் பார்க்கிறான்.
* * *
         பொலனருவைக்கு அருகே, இலங்கை
        பிங்கள, கார்த்திகை 12 - நவம்பர் 27, 1017

கெட்டுப் போன சோற்றின் வாடையைத் தாங்காமல் முகம் சுளிக்கிறான் மகிந்தன். அருகிலே அவன் மனைவி எடுத்திருந்த வாந்தி அந்த வாடையைப் பரப்பிக் கொண்டிருந்தது. அவனது மகன் கசபனை நம்பிக்கையானவர்கள் மூலம் அரண்மனையை விட்டு அனுப்பிய மூன்று நாழிகைக்குள் ரோகணத்தில் அவனும், அவனது குடும்பமும் இராஜேந்திரனால் சிறைப் பிடிக்கப்பட்டார்கள்...

...முதன் முதலாக இராஜேந்திரனைப் பார்த்த மகிந்தனுக்கு ஒரு புலியிடம் மாட்டிக் கொண்ட மானைப் போலத்தான் இருந்தது. எவனிடம் மாட்டிக் கொள்ளக்கூடாது என்று நினைத்தானோ, கடைசியில் அவனிடமே மாட்டிக் கொண்டதை நினைத்தால் எரிச்சலாகவும் இருந்தது. பதினோரு வருட ஆட்சிக்குப் பிறகு இராஜராஜருக்குப் பயந்து அனுராதபுரத்திலிருந்து பொலனருவை - பின்பு பொலனருவையிலிருந்து ரோகணத்திற்கு ஓடி ஒளிந்த அவனும் இருபத்திநான்கு ஆண்டுகள் அங்கேயே இருந்துகொண்டு சோழர்களுக்குப் பலவிதமான தொல்லைகளையும் கொடுத்துப் பார்த்தான். பாண்டியர்களுக்கு உதவி செய்தும், சோழ வணிக நாவாய்களைக் கடலில் மடக்கி மூழ்கடித்தும், கொள்ளை அடித்தும் இடைவிடாது சோழர் காலில் குத்தி உட்சென்ற முள்ளாக இருந்து வந்தான்.

இராஜேந்திரனுக்குப் பயந்து எங்கு ஓட முடியும்! தெற்கே பெருங்கடலைத் தவிர வேறு என்ன இருக்கிறது! நாற்பத்தேழு வயதிலும் கட்டிளங்காளையாகத்தான் தென்பட்டான் இராஜேந்திரன். அவனது மகன் இராஜாதிராஜன் பாண்டியரின் பரம்பரைச் சொத்தைக் கைப்பற்றி விட்டான் என்று சோழக் காவலர்கள் பேசியதிலிருந்து அறிந்து கொண்டான்...

...இலங்கையையும் இழந்து, இப்பொழுது குடும்பத்துடன் சோழர்களின் கைதிகள் ஆனதுதான் மிச்சம் என்று நினைக்கிறான் மகிந்தன். ஆளரவம் கேட்கிறது. மூன்று வீரர்களுடன் ஒரு சோழ அதிகாரி வருகிறான். அவர்களைப் பூட்டி வைத்திருந்த கதவு திறக்கப்படுகிறது. அறைக்குள்ளிருந்து வரும் கெட்ட வாடையின் தாக்குதலால் மூக்கைச் சுளித்த அவன், தன்னுடன் வந்தவனிடம் ஏதோ கோபமாகக் கத்துகிறான். அவனருகில் இருந்த வீரன் பணிவுடன் தலையாட்டியவாறே ஓடுகிறான்.

 “நான் சோழநாட்டின் இலங்கைப் பகுதி ஓலைநாயகம். உம்மையும், உமது குடும்பத்தாரையும் சோழநாட்டின் அமைதியைக் குலைக்கும் வண்ணம் நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டி, அந்தக் குற்றத்தை விசாரிக்க தஞ்சைக்கு அழைத்து வரும்படி கோப்பரகேசரி இராஜேந்திர சோழ தேவரின் ஆணை. உமது மனைவியார் உடல் நலம் குன்றி இருப்பதை அறிந்து கொண்டோம். இந்த இடத்தை சுத்தம் செய்ய ஆள் வந்து சேரும். உமது மனைவியாரின் உடல் நலத்தைக் கவனிக்க மருத்துவருக்குத் தகவல் சொல்லி அனுப்பி இருக்கிறோம். விரைவில் வந்து விடுவார் நாளை பயணம் துவங்கும். ஏதாவது கேட்க வேண்டுமா?” சுருக்கமான குரலில் அறிவிக்கிறான் அந்தச் சோழ அதிகாரி.

“எமது தளபதிகள், அதிகாரிகள்?”

“சோழ நாட்டின் அமைதியைக் குலைத்ததற்காகவும், அளவில்லாப் பொருட்சேதம் ஏற்படுத்தியதற்காகவும், அவர்களுக்கு கொடுத்த மரணதண்டனை இன்று காலைதான் நிறைவேற்றப்பட்டது.”[வளரும்]

No comments:

Post a Comment