Tuesday 7 February 2017

மணல்வெளி மான்கள் -3

மணல்வெளி மான்கள் -3
---------------------------------------
கையில் தம்ளரோடு ஆதி திரும்புவதைக் கண்டதும் மனசுக்குள் யாரோடு நாம் சண்டை போடுகிறோம் என்று விழிப்பு வந்தது. யாரிடமுமில்லை. சொந்த ஊர் என்பதால் மட்டும் சொந்தம் வந்து விடாது.
சொந்த ஊர் இல்லாததால் அது போய் விடாது.
ஆதி தம்ளரைக் கழுவிக் கொண்டு வந்திருந்தான்.
அவன் மிதமான உயரம். சிரிக்கும் போது ஒரு பேதைமை. உழைக்கும்போது ஒரு மூர்ச்சனை. ஆதிக்கு இது சொந்த ஊர். காலின் சக்கரம் சென்னை, பம்பாய், தில்லி என்று திரிந்து சுற்றிவிட்டு இப்போது துபாய்போக துடிக்கிறது.
அவன் கையிலிருந்த கூழை வாங்கி ஒரு மிடறு குடித்தான்.
ஆலிலையில் எலுமிச்சையளவு புளியும் வெங்காயமும் வைத்து அரைத்த துவையல்.
“இதைத் தொட்டுக்கோ தம்பி...”
கூழில் மிதமான உப்பு. லேசாக மோர் விட்டிருந்தாள் மகாலட்சுமி. துவையல் நாவில் ஊறிய நீரில் ஐக்கியமாகி, சுகம் மண்டையைத் தொட்டது .
“அற்புதம் ஆதி!”
“சும்மானாச்சும் சொல்லாத தம்பீ!”
எளிமையான சொல் , எளிமைதான் எளிமையானதே என்று உணர்ந்திருப்பதால் அது எத்தனை சத்தியம்!
“இந்த ஊரை விட்டுட்டு, இந்த ஆத்தோர நெலத்தை விட்டுட்டு, இந்தக் கூழை விட்டுட்டு, ஏன் எங்கேயோ பறந்து போயிடணும்னு துடிக்கிறே ஆதி?”
அவன் வாயைத் துடைத்துக் கொண்டான். ஏதோ தவறு நேர்ந்து, அதற்கு நீதி உபதேசம் கேட்கிற பாவனையில் ஆதியின் முகம் பவ்யமாயிற்று.
“இதுக்கு மேல நிம்மதியும், திருப்தியும் வெளியே கிடைக்கும்னா நினைக்கிறே?”
ஆதி அவனையே ஒரு முறை கண் சிமிட்டாமல் பார்த்தான். பிறகு தலைகுனிந்து இன்னொரு தம்ளர் கூழ் வார்த்தான்.
“அப்படியில்லே தம்பி...” சொல்லிக் கொண்டே தம்ளரை நீட்டினான்.
கௌதம் வாங்கிக் கொண்டான்.
“நீ பட்டம் வாங்கினே. வேலை கிடைக்கலேன்னு ரோதனை கொட்டிக்காம,பொலம்ல் அலம்பல் இல்லாமே தெரிஞ்ச வேலைகளைச் செஞ்சு காலம் தள்றே. தெம்பா இருக்கே. மனசைச் சஞ்சலப்பட விடாமே கட்டுலே நிக்கிறே.”
“இதெல்லாம் எதுக்கு இப்போ? காதுக்குப் பூ சுத்தறியா?”
“அட நீ ஒண்ணு! உள்ளதுதானப்பா.”
“இப்ப நான் சொல்லட்டா?”
“சொல்லு.”
“எனக்குக் கட்டும் இல்லே. கத்தரிக்காயும் இல்லை. வேலைக்கு எழுதிப் போடறேன். வர்றதில்லை. வந்து தான் எதுவும் ரொம்பணும்னு விதியில்லே. அப்பா பென்ஷன் வந்துட்டிருக்கு. போன வருஷம் ஊர்ல புஞ்சை மோட்டிலே ரெண்டு புட்டிக் கடலைக்காய் வந்தது. கைச்செலவுக்கு அவருக்குப் போதும். படிக்க மட்டும் தானா செஞ்சேன்? எத்தனையோ கைத்தொழில் கத்துகிட்டேன் அதுங்க எல்லாம் எங்கே போறது? பழங்கடத்துப் பானையிலே போட்டு மூடியா வக்கச் சொல்றே?”
ஆதி துவையலை வழித்த விரலைப் பார்த்துக் கொண்டே கேட்டான்;
“வெள்ளிக்கிளமை சினிமாக் கொட்டாயிலே பாதில மிஷின் ரிப்பேர்ன்னு அவுட் பாஸ் குடுத்தானே! அதை நீதான் ரிப்பேர் பண்ணினியா?”
ஆதி திடீரென்று விஷயத்தை விட்டு விட்டு தன் அதிசயோக்திகளுக்குத் தாவி விட்டான். புரிந்தது.
“ஆபரேட்டர் சொன்னாரா?”
“அடடா அவரு ஒன்னைப் புகழ்ந்ததை நீ கேட்டிருக்கணுமே!”
“நீயும் ஒரு கிளாஸ் கூழ் ஊத்திக்க.”
ஆதியை மேலே பேச விடாமல் கரை மாற்றினான். ஆதியும் சொல்லுக்குக் கட்டுப்பட்டான்.
ஒரு வாய் அவன் விழுங்கட்டும் என்று காத்திருந்து கௌதம் கேட்டான்.
“நீ இன்னும் என் கேள்விக்குப் பதில் சொல்லலே ஆதி.”
“நான் மறக்கலியே.”
“சொல்லு.”
ஆதி ஆற்றைப் பார்த்தான், திடீரென்று முகம் திரும்பி அவனது கீழ்க் கன்னச்சதை நடுங்குவது தெரிந்தது.
அழுகிறானோ?
கௌதமுக்கு அழுகை பிடிக்காது. அதுவும் ஆண் அழுகை.
எதற்காகவும் என்ன நேரிட்டாலும் அழுது அழுது புலம்புவதும் அழுகையை ரசிப்பதும், ரசிக்கிறார்கள் என்பதற்காக அழுவதும்!
எட்டாவது முடித்த கையோடு பூந்துறை ஸ்டேஷனில் கௌதமின் அம்மா சாவித்திரியின் பிரேதத்தை இறக்கிய போது, ஓவென்று அவன் கதறிய கதறல் பூந்துறை ஸ்டேஷனைக் கலக்கிற்று.
அம்மாவின் பிரேதத்தோடு உடன் இறங்கிய அவன் தந்தை சபாநாயகம், அவனைக் கட்டிப் பிடித்துக் கதறுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். அவன்கூட.
ஆனால் அவர் கண்களில் மாலை மாலையாகக் கண்ணீர் வந்தது.
சீச்சீ, இதென்ன வெட்கக்கேடு! என்று அவர் வெட்கப்பட்டவர் போலக் கண்ணீர் முகத்தில் வழியுமுன் தோளில் போட்ட துண்டால் துடைத்துக் கொண்டார்.
பிறகு அவனை ஆழமாக, இடைவெளியின்றி வெகு நேரம் பார்த்துவிட்டு அவன் வலக்கையைத் தம் கையால் இறுகப் பற்றிக் கொண்டார்.
அதற்கப்புறம் அவர் அவனுக்கு அழ வாய்ப்பளித்ததே இல்லை.
“என்ன ஆதி?”
அவன் முகம் திரும்பினான். விழிகள் பளபளத்தன. அழுகை கரைகட்டி நின்றது. அதைச் சந்திக்க விரும்பாமல் இமை தாழ்த்தினான் கௌதம்.
“அம்மாவுக்கு, எனக்குக் கல்யாணம் பண்ணிடணும்னு ஆசை தம்பீ... என் கைல நாலு காசு இல்லன்னா ஊமை மாமியாரை எந்த மருமவ மதிப்பா சொல்லு?”
ஆதி மனசைத் தாக்கி விட்டான்!
“அட பொம்பளை வேணும்னா எங்கியோ போய்ப் பொரண்டு எவனையாவது இஸ்தாந்து வச்சுக்கலாம். இந்த வாயில்லா ஜன்மத்து மனசு கலங்காம அதுக்குச் சோறு போட்டு, துணி தொவிச்சு, வாரிப் போடறதுக்கு முன்னே கால் மாட்டிலே ஒக்கார ஒருத்தியாப் பார்க்கறேன். எல்லாம் பணம். எதுக்கும் பணம். ம்ம்ம்.போவுது காலம்! நானும் தேடறேன்.”
ஆக இதுவும் அம்மாக்கள் விவகாரம்.
அம்மா.அம்மா. இப்படி சின்னச்சின்னப் பல் சக்கரங்களாக ஒன்றையொன்று தள்ளி, சிறியது பெரியதைத் தள்ளி, எதற்கோ எங்குமே இயங்கும் யந்திரங்களின் உந்துவிசை அவள்தானா? இருக்கலாம். யார் அறிவார்?
பேச்சை மாற்றியாக வேண்டியிருக்கிறது. இதோ பாம்பு உரித்துப் போட்ட தோல் கிடக்கிறதே இது மாதிரி. புது வளர்ச்சிக்கு, புதிய பரிமாணத்திற்கு புகழ்ச்சியில் மூச்சுத் திணறி விடாமல் இருக்க, ஆள் மாற்றமடைவது போல் பேச்சும் மாற வேண்டும்.
“நொணாமரத்து மாசிலாகிட்டே என்னத்துக்குத் தகராறு?”
“நானா பண்றேன்?”
“பின்னே?”
“நல்ல கதையா இருக்கே! அவ கொளுந்தியா மச்சினன் துபாய்ல வேலை வாங்கித் தர்றான்னு ஆயிர ரூபாயை வாங்கிக்குடுத்தேன். அஞ்சு வட்டி அசலுக்கு நெஞ்சு முட்ட வட்டி ஆயிடுச்சி. வேல வேணாம். ரூபா குடுண்ணு மூணுமாசமாகக் கேக்கறேன். தோ தோண்ணு வாய்தா வக்கிறான். போன செவ்வாச் சந்தையிலே ஆறாந் தேதி தர்றதா சொன்னான். இன்னிக்குத் தேதி எட்டு.”
“என்ன சொல்றான்?”
“கேக்கப்போனா அவன் கொளுந்தியாள வுட்டுட்டு எங்கியோ ஓடிட்டான்னாம். இவன் தானே ஜாமீனு. பொறுப்பா பதில் சொல்லணுமில்லே.”
கௌதம் காது கொடுத்தான்.
“நீ என்ன பண்றியோ பண்ணிக்கன்னான். கொலவுழும்ணு கத்தினேன். கொடலை உருவிடுவேன்னான். உருவுடா பார்க்கலாம். நீ ஆம்பளையானாக் கொடலை உருவுடான்னேன்.”
“கை வச்சுட்டான். இல்லியா?”
ஆதி பதில் சொல்லவில்லை.
“அவனாலே  கொடுக்க முடியாது. அவன் நெலையே ஆட்டம் கண்டு போச்சு. தெரியும்லே.”
“தெரியும் தெரியும்.”
“ஆறு மாசத்துக்குள்ளே ஒருத்தன் ரெண்டு அடி வாங்கினான்னா...அதுவும் என்ன மாதிரி அடி?”
கௌதம் நினைவில் தோய்வது போன்று பேச்சை நிறுத்தினான்.
கூழ் தீர்ந்து விட்டது. ஆதி இரண்டு தம்ளர்களையும் பாத்திரத்தையும் கழுவ எழுந்தான். கௌதம்,  தாம்போகிப் பாலத்தின் மீது வீட்டு வேலை முடிந்து துணி வெளுப்பதற்காக இடுப்பில் ஆளுக்கு ஓர் அன்னக் கூடையோடு கைவீசி நடந்துவரும் பெண்களைப் பார்த்தான். பாத்திரங்களை அலம்பிக் கொண்டே ஆதி பேசினான்.
“நான் கொடுத்த பணத்தைக் கேக்கத் தானே போனேன், தம்பீ?”
“நீ போன வேளை சரியில்லே.”
“நான் என்ன செய்யட்டும், என் கடன்காரன் பொழுது விடியறப்பவே என் வீட்டுக் கதவைத் தட்டிடறான்.”
கிழக்கேயிருந்து லேசான காற்று வந்தது. அலையலையாகப் பயிர் வரிசைகளை, மயில் கழுத்து நெளிவது போல அசையச் செய்தபடி, அந்த அலை நுணாமரத்துப் பம்பு ஷெட் வரை ஒரு சிறு தூரப் பயணம் போயிற்று.
காற்றோட்டத்தோடு கண்ணோட்டம் செலுத்திய கௌதம் பார்வையை மாசிலாவின் குத்தகை நிலத்தில் நிறுத்தினான்.
பதின்மூன்று ஏக்கர் நிலம் அது!
முதலில் மாசிலா பத்து வயதுப் பையனாக மண் மிதித்த பூமி. அவனுடைய அப்பன் மாரிமுத்துதான் கைபிடித்து அவனை அழைத்து வந்தானாம்.
விட்டலாபுரமே சொல்லும்.
கோரையும் காட்டுச் செடிகளுமாகப் புதர் மண்டியிருந்த நிலம். ஆற்றை ஒட்டிய சிறு மேடு. குறுக்கு வழியென்று மாட்டு வண்டிப் பாதைக்காகச் சக்கரங்கள் ஓடி ஓடி திமிசு வாங்கிய பூமி.
மாரிமுத்துவை கௌதம் பார்த்ததில்லை. விட்டலாபுரம் சொல்லியிருக்கிறது.
கருங்காலி மரத்துச் சட்டம் மாதிரி, வலுவான கட்டடம் உள்ள உடம்பாம். ஆள் வைத்து வேலை வாங்கினான் என்றாலும் வெள்ளி முளைத்ததும் தெரியாது; மறைவதும் தெரியாதாம். அப்படி ஓர் ஈடுபாடு! அவன் சமப்படுத்திய நிலம் அது!
இன்றுதானே டிராக்டர்!
அன்று மாரிமுத்து கலப்பையைப் பிடித்தால் ஏர்முனை அரையடி இறங்குமாம். மாசிலாவின் ஏர்முனை முக்கால் அடி இறங்குவதைக் கௌதம் பார்த்திருக்கிறான்.
எவ்வளவு வியர்வை. எல்லாம் ரத்தம். வியர்வையான ரத்தம். அவன் அப்பன் மாரிமுத்து மஞ்சள் காமாலையில் உயிர் விட்டான். விட்டலாபுரத்து விளைச்சல். காண கொல்லி மலையில் இருந்து இறங்கி வந்து உதிரம் ஊற்ற வந்த சொந்தம்.
நுணா மரத்துப் பம்பு ஷெட் அவர்கள் முன்னின்று வெட்டியதுதான். முகம் தெரியாத முதலாளி, பணம்தான் அனுப்ப முடியும். பணமா கிணற்றை வெட்டும்? மனிதர்கள் தேவைப்பட்டனர். மாரிமுத்துவையும் மாசிலாவையும் போல் மண்ணை நேசித்த மனிதர்கள்.
மண் கூட மாதா மாதிரிதான். அம்மாவேதான். முட்டி முட்டிக் குடிக்கிற கன்றுக்குத் தாய்ப் பசு நிறையத்தான் சுரக்கிறது. சொந்தமா சொந்தமில்லையா என்ற கணக்கு வழக்குப் பார்க்காமல் மாதாவின் மார்பில் முட்டி முட்டி வெட்டிய கிணறு அது.
வருஷத்தில் பத்து நாட்கள் மட்டுமே வெள்ளம் ஓடும் பாலாற்றில், மீதி நாட்களில் விட்டலாபுரம் பெண்களுக்கு நுணா மரத்துப் பம்பு ஷெட்தான். படித்துறை, வம்பளப்பு கவுண்ட்டர்.
“கரண்ட் வந்துச்சு தம்பி.”
“போ... போ, போயி மோட்டார் ஸ்விட்சைப் போடு.”
ஆதி ஸ்விட்சைப் போட்டு விட்டான்.
உறுமிக் கொண்டே  உதறி எழுந்து துள்ளிப்பாயும் சிறுத்தையாக  ஹூங்காரமாக ஒலிக்கத் தொடங்கியது மோட்டார்.[தொடரும்]

Monday 6 February 2017

மணல்வெளி மான்கள் 1.1&2.0

வையவன்
மணல்வெளி மான்கள் 1.1
‘தா...ஹை’ என்று மாடுகளைத் தட்டி விட்டதும் தாழ்வாகக் குழி போல் இறங்கிய நடைபாதையில் அவை நகர்ந்தன. கூடவே போய் ஒருவாகாக சிவுக்கென்று வடக்கயிற்றின் மீது உட்கார்ந்தான். அவற்றின் இழுவைப் பளு சற்றே குறைந்தது.
கிரிகிரிகிரியென்று ராட்டின சங்கீதம். இன்னும் கொஞ்சம்... இன்னும் கொஞ்சம் என்று கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல.
தொட்டியில் கொக்கரித்துக் கொண்டு தண்ணீர் பாய்ந்தது.
“பரவால்லே. எண்பது மார்க்!” என்றாள் நித்யா.
திரும்பி அவளைப் பார்த்தான். அவள் கண்களில் வேறு பார்வை. பொய்க் கூச்சமின்றி, மாசுபடாத சௌஜன்யத்தோடு, தன்னை வெளியிடும் அந்த வெளியீட்டிலேயே கிட்டும் பரவசத்தோடு...
...தொட்டி நீர் மாதிரி மனசு உள்ளே நிறைந்தது. மாடுகளை விட்டு விட்டு... அவன் மனசில் இச்சை ஓடிய ஓட்டத்தை இழுத்துப் பிடித்தான் - மூக்கணாங்கயிறு போட்டான். வேலை முக்கியமானது. உரம் ஊட்டுவது!
“ரெண்டு சாலோட நிறுத்திக்கோ. நான் மொதல்லே துணியை நனைச்சுக்கணும்!”
இரண்டாவது சாலுக்கு மாடுகளைக் கிணற்று மேட்டுக்க ஏற்றும் போது தான் கௌதம் திரும்பிப் பார்த்தான். நுணா மரத்துப் பம்பு ஷெட் தெரிந்தது. சிறு கூட்டம். ஆதி கையை ஆட்டி ஆட்டிப் பேசும் அங்க அசைவு. தகராறு யாருடன்?
சால் கிணற்றில் அமிழ்ந்து சாலுடன் இணைந்த தொண்டலக் கயிறு எவ்வி இழுத்தது. ஆதி கையை நீட்டி நீட்டிப் பேசக் கண்ட அதிர்ச்சியில் கௌதம் சால் நிரம்பியதைப் பொருட்படுத்தவில்லை. ஆதி அப்படிப் பேசுகிறவன் அல்ல! கன்னத்தில் அறைந்தால் கூட மென்று விழுங்கி வாங்கிக் கொள்பவன்.
கூட்டத்தைப் பிளந்து, இழுத்துப் பிடித்த இரண்டு புஜங்களை உதறிக் கொண்டு, நுணா மரத்துப் பம்பு ஷெட்டில் குடியிருக்கும் மாசிலா, ஓங்கி ஆதி மார்பில் ஒரு குத்து விட்டது இங்கிருந்து தெரிந்தது. கௌதம் கூர்ந்து கவனித்தான்.
ஆதி பதிலுக்கு மாசிலா மீது தாவி விட்டான். அதற்குள் நாலைந்து பேர் இழுத்து, அவனைத் தடுத்துக் கொண்டு நின்றனர்.
“மாட்டுக்காரே! நீ இப்படி ஒட்டினா நான் துணியை நனைச்ச மாதிரிதான்!” நித்யா அதட்டினாள். கவனம் திருப்பி, நிற்கும் மாடுகளை தட்டிக் கொடுத்தான். இரண்டாவது சால் நீர் தொட்டிக்குள் கொப்புளித்தது.
“நுணா மரத்துப் பம்பு ஷெட்டிலே அடிதடிபோல இருக்கு நித்யா!”
அவளும் திரும்பினாள். தூரத்தில் நுணா மரத்தடியில் கூட்டம் இரு பிளவாக ஆதியையும் மாசிலாவையும் பிரித்து நிறுத்திக் கொண்டிருந்தது.
“யாரு யாரை அடிச்சது?”
“மாசிலா ஆதியை அடிச்சுட்டான்.”
நித்யா பார்த்துக் கொண்டே நின்றாள். முகம் திரும்பாமல் சொன்னாள்.
“இது இத்தோட நிக்கப் போறதில்லே...”
அவள் குரலில் அருள் வாக்கு சொல்கிற மாதிரி ஒரு தூர திருஷ்டி ஒலி.
“என்ன சொல்றே?”
“ஆமா! நாலஞ்சு நாளுக்கு முன்னாடி கூட ஊர்ல ஆதியண்ணனுக்கும் மாசிலாவுக்கும் தகராறுன்னு பேச்சு அடிபட்டது.”
“தகராறா?”
“ஒனக்குத் தெரியாது! நீ எங்கே இருக்கே? ஊர் ஊரா பம்பு ஷெட் ரிப்பேருக்குப் போயிடறே...”
“என்ன விஷயம்?”
“ஆதியண்ணன் மாசிலாவுக்குத் தெரிஞ்சவன் யார்கிட்டேயோ துபாய்க்குப் போறதுக்காக ஆயிரம் ரூபாய் பணம் குடுத்திருக்காம். ஆறு மாசமாகப் போவுது. இதோ அதோன்னு இழுக்கிறானாம் அந்த ஆளு....”
ஆதிக்கு அப்படி ஓர் ஆசை உண்டு என்று கௌதம் அறிவான். இருபத்தெட்டு வயசாகியும் எதிலும் நிலை கொள்ள முடியவில்லை அவனால். மேஸ்திரி வேலை செய்தான். டீக்கடை வைத்தான். டைலராயிருந்தான். ஜவ்வாது மலையில் மூங்கில் கூப்பு காண்ட்ராக்டராக இருந்த முனீம்சாயபுக்கு உதவியாளாய்ப் போனான்.
இந்த நிலம் கூட குத்தகைப் பயிர்தான். நிலை கொள்வதற்கு, தன்னைக் கண்டுபிடிப்பதற்கு, அவன் செய்து வரும் இடைவிடாத பரிசோதனைகளில் இதுதான் சமீபமானது.
துபாய்! எத்தனை மனக்கோட்டைகளுக்கு அங்கே கதவு திறந்திருக்கிறது? தங்கம் தெருவிலே கொட்டிக் கிடக்கிறதென்று போகிறார்களோ!
“பா... பா... பா” என்று குரல் கேட்டுத் திரும்பினான்.
தலையில் கஞ்சிக் கலயத்தோடு ஆதியின் அம்மா மங்கலட்சுமி நின்றாள்.
அவன் பிறவி ஊமை.
மகன் எங்கே என்று கேட்கிறாள்.
என்ன சொல்வது?
“கஞ்சிக் கலயத்தை வச்சுட்டுப் போகச் சொல்லு. வேற விவரம் சொல்லாதே. அதுக்கு மனசு துடிச்சிடும். வாயும் பேச முடியாம பேபேன்னு கத்திக்கிட்டு கண்ணிலே மாலை மாலையாகத் தண்ணி விடும்” என்றாள் நித்யா.
2.0
“ஐயய்ய...இது வேணாம் தம்பி.”
சண்டையிலிருந்து திரும்பிய சக்தி தடுத்தாள்.
“ஏன்?”
“உனக்கு நாஷ்டா வாங்கியாரச் சொல்லியிருக்கேன்.”
“இருக்கட்டும். அதையும் ரெண்டு பேரும் சாப்பிடுவோம்.”
“இது கேப்பக் கூளு. நீயெல்லாம் சாப்பிடக் கூடாது.”
ஒரு மணி நேரத்துக்கு முன் சண்டை போட்ட ஆதியா இவன்? என்னமாய்க் கூசிக் குறுகுகிறான்? மனிதன் கூச்சப்படும்போதுதான் அவன் மேன்மை வெளிப்படுகிறது.
“நானும் கிராமத்தான் தான் ஆதி! நான் ஒண்ணும் மகாராஜா பிள்ளை இல்லே. சாதாரண ஹெட் கான்ஸ்டபிள் மகன்.”
“அதுக்கில்லே.”
“அம்மா போனப்புறம் அப்பாவுக்குப் பிடிக்குமேன்னு கூழ் கிண்டக் கத்துக்கிட்டேன்.”
“பட்டம் வாங்கியிருக்கியே தம்பீ! பம்பு செட்டு ரிப்பேர் பண்ண வச்சதே தப்பு. அப்புறம் வேற கூளைக் கொடுக்கணுமா?”
மேலும் அவனைப் பரிதவிக்க அனுமதியாமல் ஈய டிபன் தூக்கின் மூடியைத் திறந்தான். கும்மென்று மணம் தூக்கிற்று.
“சுடக் கூழா.”
“ஏன் உனக்குப் புடிக்காதா தம்பீ?”
“நானா சொன்னேன்? இங்கே ஒரே ஒரு டம்ளர்தானே இருக்கு? இன்னும் ஒரு டம்ளர் வேணுமே!”
“இரு... பம்பு ஷெட்டிலே வேற ஒரு கிளாஸ் வச்சிருக்கேன்.”
ஆதி எழுந்து போனான்.
யதேச்சையாகப் பார்வையைத் திருப்பிய போது சின்னதாகத் தேய்ந்து போன டிடர்ஜெண்ட் கட்டி தெரிந்தது. நித்யா விட்டு விட்டுப் போனது. ஆதி சண்டையிலிருந்து மீண்டு வருமுன்பே அவள் போய்விட்டாள்.
அவன் அவளுக்காகத் தண்ணீர் இறைத்ததையும், துணி துவைத்துக் கொண்டே அவர்கள் வம்பளந்ததையும் கூட்டம் பார்த்திருக்கிறது. கௌதம் நினைத்தான் ‘விட்டலாபுரத்தில் ஒருவன் பார்த்தாலே ஊரே பார்த்த மாதிரி. இது கூட்டம். கொஞ்சம் சிறகு வைத்துப் பறக்க விடுவார்கள். சிலருக்கு ஆதங்கம். பலருக்கு வயிற்றெரிச்சல்.’
“வெளியூரானுக்குத் தாண்டா நாம் ஊர்லே யோகம்!”
அன்றைக்கு பஸ் ஸ்டாப்பில் டீக்கடை வைத்திருக்கிற நாயருக்கும், தனக்கும் என்று பொதுவாக ஒருவன் வீசிவிட்டுப் போன சொல் நினைவு வந்தது.
அவன் திரும்பி, எத்தனையோ தாம்போகிப் பாலத்தையும் ஆற்று மணல் வெளியையும் கரையோரம் இமைத்து நிற்கும் தென்னை மர வரிசையையும், ஊருக்கு மகுடமிட்டு நிற்கும் அனந்த சயனப் பெருமாள் கோயிலையும் பார்த்தான்.
நெஞ்சில் ஏதோ கேவிற்று. ஆறாம் வகுப்பிலிருந்து ப்ளஸ் டூ வரை ஏழு வருஷம். ஆற்றில் ஏழு வெள்ளங்கள். தாம்போகிக் கண்மாய்க்குள் ஆற்று வெள்ளம் பாயும் போது எதிர் நீச்சல்கள்.
பிறந்து வளர்ந்து இந்த ஊரின் அழகும் அருமையும் அறியாது மாண்டு போன ஆயிரக்கணக்கானோருக்கு அனுமதிக்கப்பட்ட சொந்தம் எனக்கில்லையா?
அம்மா கையைப் பிடித்துக் கொண்டு போய் ஹைஸ்கூலில் சேர்த்தாள். ‘பையன் எப்படிப் படிக்கிறான் சார்?’ என்று மாதம் தவறாமல் வகுப்பு விடாமல் வந்து, ஆசிரியருக்குத் தாய்மைக் கரிசனத்தைக் கூச்சமின்றி வெளிப்படுத்தினாள். கடைசியில் அதோ அந்த ஈச்ச மரப் புதர் அருகே சாம்பலானாள். அப்புறம் அவன் பதக்கம் வாங்கியதைப் பத்திரிகைகள் படம் போட்டு வெளியிட்டன. விட்டலாபுரம் மேல் நிலைப் பள்ளியின் பெயரையும் சேர்த்து.
தான் வெளியூர், இங்கே தனக்குச் சொந்தமில்லை என்று பொறுமுகிறவர்களை நினைத்தான்.
இதற்கு மேல் ஒரு சொந்தமா? யார் வழங்குவது அதை? கிராம நிர்வாக அதிகாரியா? ஜனன மரண ரிஜிஸ்தரா?
நித்யா விட்டலாபுரத்தில் பிறந்தவள். அந்த ஊர் மண் காலில் ஒட்டிக்கொண்டு கூட அடுத்த ஊருக்குப் போய்விடக் கூடாதாம்[Contd]

Sunday 5 February 2017

மணல்வெளி மான்கள்:1

மணல்வெளி மான்கள்
1
------------------------------------------------------------------------------------------------------------
வியர்த்தது,
பின்னங் கழுத்தில். பனியனுக்குள், உடம்பின் ஒவ்வொரு மயிர்க் காலிலும்...
பனியனையும் உரித்துச் சுருட்டிக் கிடாசி விட்டு அப்படியே கிணற்றில், நிற்கிற திட்டிலிருந்தே ஒரு டைவ் அடிக்க வேண்டும்.
‘பொறு!’ அவன் உடம்பு அரிப்புக்குக் கட்டளையிட்டான். கட்டியிருந்த லுங்கி அவிழ்ந்தது. ஸ்பேனரை ஸக்ஷன் பம்ப் கட்டை மீது வைத்து லுங்கியை இறுகக் கட்டினான்.
இன்னும் இரண்டு சுற்று சுற்றினால் அந்த நட்டு இறுகிவிடும். ஸ்பானர்தான் வழுக்குகிறது. கொஞ்சம் வாய் விரிசல். இருந்தாலென்ன? கௌதமுக்குச் சவால்கள். இப்படிச் சின்னச்சின்ன இடைஞ்சல்கள் பிடிக்கும்.
கௌதம் இரண்டு சுற்று வழுக்கி வழுக்கி ‘டைட்’ வைத்தான். ஸக்ஷன் பம்பின் நட்டு, மாடு பிடித் திருவிழாவில் பிடித்து நிறுத்திய காளை மாதிரி ஸ்தம்பித்தது.
அவன் ஸ்பானரைக் கீழே வைத்தான். நெற்றி வியர்வையை விரல் வைத்து வழித்தெறிந்தான்.
ஏழு மணிக்குக் கிணற்றில் இறங்கியது. ஒரு மணி நேரம் ஆகியிருக்கலாம்.
போனது ஃபுட் வால்வ் லெதர் என்று தெரியாமல் ஆதிகேசவன் அலைமோதிவிட்டான். கார் நெல்லுக்கு அன்றாடம் நீர் பாய்ச்ச மோட்டார் பம்ப் கை விட்டு விட, பழைய பாணியில் கவலை மாடுகளை நம்பினான்.
ஏழு நாட்களாக மோட்டார் சப்தம் ஓய்ந்து போன கிணற்றில் இனி அது பலிக்கும்.
ஆதி கிணற்றுக்கு மேலே தான் நின்று கொண்டிருப்பான். கௌதம் உள்ளே இருந்து குரல் கொடுத்தான்.
“ஆதி... மோட்டாரைப் போடு.”
கிணற்றின் சுற்றுச் சுவரில் பட்டுப்பட்டு எதிரொலிகள். ஒன்று, இரண்டு, மூன்று முறை... பதில் வரவில்லை. எங்கே போய்விட்டான்?
தன் சிரமம் பலித்திருக்கிறதா என்று கௌதமுக்கு உடனே முடிவை எதிர்பார்க்கும் தவிப்பு. மேலே போகலாமா? ஸ்பானரை எடுக்கக் கௌதம் குனிந்தபோது அவன் முதுகில் லொட்டென்று குறி பார்த்து அடித்த மாதிரி எதுவோ தாக்கியது. முதுகைத் தாக்கிவிட்டு அந்த ஏதோ ஒன்று தாவி விழுந்து தண்ணீரில் மறைந்தது.
சிவுக்கென்று தலை நிமிர்த்தினான். கிணற்றுக்கு மேலே சாலும் வடக்கயிறும் தொங்கின. யாரும் தென்படவில்லை. ஆனாலும் யாரோ விளையாடுகிறார்கள். ஆதியா? இல்லை. அவனிடம் ஆதி விளையாடமாட்டான். ஸ்பானரை இன்னும் வைத்த இடத்திலிருந்து எடுக்கவில்லை. எனவே மீண்டும் குனிந்தான்.
லொட்டென்று மீண்டும் முதுகில் பனியனின் ஈர நைப்புக்கு உறைக்கிற மாதிரி ஒரு கொட்டையளவு ஏதோ விழுந்தது. அதிகம் வலிக்கவில்லை.
வெள்ளி மணலாக அடி தெரிந்த கிணற்று நீரின் இள நீலத்தில் ஒரு சிலும்பல். இப்போது விழுந்தது ஒரு சின்னஞ்சிறு மாம் பிஞ்சு.
கௌதம் மனசில் ஒரு முகம் தெரிந்தது. நித்யாவாகத் தான் இருக்கும்.
“மேலே ஏறி வந்தா என்ன நடக்கும் தெரியுமா நித்யா?” என்று தலை உயர்த்தாமல் கத்தினான்.
‘நித்யா’ என்று கிணற்றில் எதிரொலி வந்தது. மும்முறை. கிணற்று நீரின் ஒருபுறத்தில், கரை மீதிருந்த நித்யாவின் பிம்பம் சிலும்பலில் நெளிந்தது.
“என்ன பண்ணுவே?” மேலே நின்றபடி நித்யா கேட்டாள்.
அவன் பிம்பத்தைப் பார்த்தே பேசினான்.
“ஆத்து மணல்லே, அன்னக் கூடையை இடுப்பிலே தூக்க வச்சு ஓட ஓடத் துரத்துவேன்.”
“நீ?” என்றாள் நித்யா – எகத்தாளம். கொஞ்சம் சவால்.
கிணற்றின் அலைகள் தத்தித் தத்தி, கோடை வானத்தின் வெளிர் நீலப் பின்னணியில் நித்யாவின் முகபிம்பத்தை அலைக்கழித்தன. அவள் பற்கள் தெரியச் சிரித்தாள்.
“மேலே யாரும் இல்லியா?”
அவன் பிம்பத்தைப் பார்த்துப் பேசினான். அவளும் அவன் பிம்பத்தைப் பார்த்துப் பதில் சொன்னாள்.
“கேக்கறே பாரேன் கேள்வி!”
நாக்கைக் கடித்துக் கொண்டான்.
முட்டாள்! யாராவது இருந்தால் அவள் இப்படி விளையாடுவாளா?
“ஆதி இருப்பானே!” அவன் சமாளித்தான்.
“நுணா மரத்துப் பம்பு ஷெட்டாண்ட ஒரு கூட்டம் நிக்குது. அவரு அங்கே நிக்கறாரு.”
“கூட்டமா?”
“ஆமா...என்னமோ தகராறுன்னு நெனைக்கிறேன்.”
“சரிதான். இப்பத்திக்கி வர மாட்டான்! அப்ப ஒண்ணு செய்யி...”
“என்ன?”
“கெணத்திலே குதிச்சுடு!”
“ஐயா வந்து காப்பாத்திடுவீங்க...”
“நீ குதிச்சா உன்னைக் காப்பாத்தற சாக்கிலே சேர்ந்து குளிக்கலாம் பாரு.”
“இப்ப நெஜமாலும் ஒன் தலை மேல குதிச்சுடுவேன்.”
“இன்னும் சௌகரியம்.”
“வர வர உனக்கு வாய் கொழுத்துப் போச்சு. நான் போறேன்.”
அவள் முகம் விருட்டென்று மறைந்தது.
“நித்யா..நித்யா!”
என்ன?” மீண்டும் அவள் பிம்பம்.
“மோட்டார் ஸ்விட்சு தெரியுமில்லே ஒனக்கு?”
“சொல்லு...”
“அதைப் போடேன். ஃபுட் வால்வ் லெதர் மாத்தினேன். தண்ணி எடுக்குதான்னு பார்க்கணும்.”
“கரெண்ட போயி அரை மணி நேரம் ஆவுது.”
அவன் வெறுத்துப் போனான். பிறகு அவள் வாயைக் கிண்டினாள்.
“வழக்கமா ஒங்க அம்மாதானே துணி துவைக்க வருவாங்க?”
“ஆமா! அவங்க சொந்தக்காரங்க கருமாதிக்குப் போயிருக்காங்க.”
“அதான் நேரா இங்கே வந்துட்டே.”
“ஆமா. பம்ப் ஷெட் ரிப்பேருக்குக்காக கெணத்திலே எறங்கி இருப்பாருன்னு ஞான திருஷ்டியிலே தெரிஞ்சது.” மீண்டும் தலை மறைந்தாள்.
“துணி துவைக்கணுமா வேண்டாமா?”
“அதான் கரண்ட்டும் இல்லே... தண்ணியும் இறைக்கலியே!”
“மாடுங்க நுகத்தடி பூட்டி நிக்குதுங்க இல்லே?”
“நிக்குதுங்க.”
“இரு... தோ வர்றேன்.”
அவன் செருகு செருகாகப் படிக்குப் பதில் கிணற்றோடு பதித்திருந்த ஜல்லிக் கல்லில் ஒவ்வொரு கல்லாகத் தாவித்தாவி ஏறினான். என்ன வேகமாக ஏறுகிறான்! கால் வழுக்கி விடாது என்று நினைத்தாள் நித்யா.
அவளுக்கு அவன் வேகத்தின் மீது இலேசான பயம்.
அவன் கடைசி ஜல்லிக் கல்லில் நின்றபோது கண் பூத்து விடுகிற மாதிரி கிழக்கு மேற்காய் ஆற்று மணல் தெரிந்தது. விட்டலாபுரத்திற்கும் அன்னவாசலுக்கும் இடையில் பாலாற்றின் குறுக்கே போட்ட நீண்ட தாம்போகிப் பாதை தெரிந்தது.
கல் பரவிய அந்தப் பாதை மீது எட்டரை மணி ரயிலின் வரவுக்காகப் பூந்துறை ஸ்டேஷனுக்குச் செல்லும் டவுன் பஸ் போவது தெரிந்தது.
அந்த எட்டரை மணி பஸ்ஸைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு மீன்கொத்தி மாதிரி மனசு இறந்த காலத்திற்குப் பாய்கிறது.
ஒரு நொடி - இல்லை; ஒரு நொடியில் ஒரு சிறு கூறு...
அந்த பஸ்ஸில்தான் பூத்துறையில் அம்மா இறங்குவாள் என்ற ஆவலோடு பதினாலு வயது கௌதம் பூந்துறைக்குப் போவான்.
மனசு விசித்தரமானது. பழக்க வாசனையுள்ள புறா மாதிரி ஒரே கூட்டிற்குத் திரும்பித் திரும்பிப் போகிறது.
நினைவை உதறி விட்டு நித்யாவைப் பார்த்தான். பத்தொன்பது வயசில் எதற்குக் கோடாலி முடிச்சு? சாக்லேட் பாவாடை. பொன்னிழை ஓடிய கறுப்புத் தாவணி... அவன் அவன் நெற்றித் திலகத்தை, கண்மையை, முகத்தை ரசித்துக் கொண்டே நிற்பதை நித்யாவும் ரசித்தாள்.
“இவ்வளவு சிவப்பு ரொம்ப ஓவர்!”
அவன் தன் நிறத்தைச் சொல்கிறான் என்று அவளுக்கும் புரிந்தது.
“என்ன பண்ணச் சொல்றே? கறுப்பு பெயிண்ட் அடிச்சுக்கவா?”
“முயற்சி பண்ணு!”
“இதைச் சொல்றதுக்குத்தான் கெணத்தை விட்டு மேல வந்தியா?”
பூட்டிய நுகத்தடியோடு சிவனே என்று நிற்கும் கவலை மாடுகளை நோக்கி அவன் நடந்தான்.
“தா... ஹை!” என்று மாடுகளை அதட்டினான். ஒன்று திரும்பிப் பார்த்துக் கொம்புகளை ஆட்டிற்று. கலகலவென்று கழுத்துச் சலங்கை மணிகள் அதிர்ந்தன.
“அது முட்டற மாடு. ஒன்னைக் கெணத்துலே தள்ளப் போவுது” என்று நித்யா மிரட்டினாள்.
“இப்பப் பாரு...”
கௌதம் அவற்றின் அருகே சென்று கழுத்தை நீவி, முதுகை இதமாகத் தட்டிக் கொடுத்தான். கொம்பை ஆட்டிய மாட்டின் முதுகுத் தோல் சிலிர்த்துத் துடித்தது.
வடக்கயிற்றைப் பிடித்துக் கொண்டு பின்னோக்கி இழுத்தான். மாடுகள் இரண்டும் பின்வாங்கி நடந்தன. கிணற்றை எட்டிப் பார்த்தான். சால் கிணற்று நீரை முத்தமிட்டது. அமிழ்ந்தது. நிறைந்தது.
[தொடரும்]

மணல்வெளி மான்கள்
-----------------------------------
                                                                  முன்னுரை
ஆசை தான் கானல் நீர் ஓடுகின்ற  மணல் வெளி.மணல் வெளியில் மான்கள் வசிப்பதில்லை. அதன் வெயில் காலத்து வெப்பமும், குளிர்காலத்துக்குளிரும்  அவற்றினால்
 தாங்க முடியாதவை .ஆனால் குரூர சக்திகள் துரத்தி வரும்போது அவை மணல் வெளிகளைக் கடக்க முயலும். சில சமயம் தாண்டிச் சென்றுவிடும் ; சில சமயம் மடியும்.
 இன்றைய மணல்வெளி மான்கள் மனிதகுலமேதான். துரத்துவது வன்முறை. தடுப்பதற்கு அல்லது தவிர்ப்பதற்கு மனிதர்களைத் தவிர வேறு எவருமில்லை.
எதிர்த்துத்தாக்கு!
தீயைத் தீயால் அணை!
முள்ளை முள்ளால் எடு!
இதுதான் காட்டுமிராண்டி வாழ்வின் ஆதி அம்சம். மனிதனின் அந்த விலங்குத் தன்மையை மாற்ற,மாற்றி மாற்றி எழுந்த மகான்களின் குரல்கள் மறு பரிசீலனை செய்தன; பக்குவப்படுத்தின. ஆனால் அது முற்றுப்பெறவில்லை எனினும் அது இடையறாத போராட்டம் ஆயிற்று. நன்மைக்கும் தீமைக்குமான நிரந்தர யுத்தமாகியது.
இதை நீக்க மெய்யறிவு உதவியதைப் போல் அறிவியல் உதவவில்லை. அறிவியல் இதயத்தை, உணர்வுகளை, மனிதனிடம் உள்ள மனிதத்துவத்தை மேன்மைப் படுத்துவதற்கு மாறாக ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளவே அதிநவீன ஆயுதங்களையே உற்பத்தி செய்து வருகின்றது.
அதன் விளைவுகளை அமெரிக்காவில் ‘பெண்டகன்’ சந்தித்தது.  சமீபத்தில் சிரியா .இன்னும் எத்தனையோ!அறிவுத் தீவினைக்கு  மாற்று மருந்து உணர்வின் மேன்மை தான் , கலைகள் அதற்கே முயலுகின்றன.
கலைகளின் தலைமைப்பீடம் அன்றும் இன்றும் என்றும் , இலக்கியமாகவே இருந்து வருகிறது. இலக்கிய ஆசிரியனுக்கு ஒரு பொறுப்பு உண்டு உலகெங்கும் நிகழும் வன்முறைகளைக் கண்டு மனங் கசிந்து வெற்றுக் கண்ணீர் விடாமல் மேலான பாத்திரங்களைச் சிருஷ்டித்துக் காட்ட வேண்டிய பொறுப்பு .இந்த நாவல் அதையே உத்தேசமாகக் கொண்டது. இதன் கதாநாயகனும் கதாநாயகியும் வாழ்ந்து காட்டி, வன்முறைக்கு இரையாகாமல் நிமிர்ந்து நிற்பது எப்படி என்று நிரூபிக்க முனைந்துள்ளார்கள்.நாவலைப் பொழுது போக்குச் சாதனமாகக் கருதாமல் ஆத்மீக வழிபாடாகக் கொண்டு படைத்த முயற்சி இது. படித்துப்பாருங்கள்.
சென்னை – 20 மிக்க அன்புடன்
        வையவன்
1987-88ல்கல்கியில் தொடர்கதையாக வெளிவந்த இந்த நாவல் இன்னும் பலரால் மறக்க முடியாததாக, மீண்டும் படிக்க விரும்புவதாக இருந்து வருவது எழுதிய எனக்கே வியப்பாக
உள்ளது.கலைஞன் மக்களின் சேவகன். அவர்களின் ஆணையின் கீழ் இயங்க வேண்டியவன்.அவர்களில் பலர்  இது மீண்டும் ஒரு தொடராக வரவேண்டுமெனக் கோரியதால்
நாளை முதல் பேஸ்புக்கில்  இது மீண்டும் தொடராக வரும். இதன் பதிவை இங்கும் காணலாம்.