Saturday 31 August 2013

படக்கதை :உழைப்பு


படக்கதை 

மாறுதலுக்காக ஒரு படக்கதை (வாசகர் வரவேற்றால்  தொடரலாம்)

 


உயிரோட்டம்

 உயிரோட்டம்
(நாவல் )
1
உலகம் எத்தனை எத்தனைபரிணாம கதிகளைக் கண்டிருக்கிறது? யுகத்திற்கு ஒரு தரம் இயற்கையும் எத்தனை எத்தனைஜீவராசிகளை உற்பத்தி செய்து அவற்றிற்கு எத்தனை எத்தனைப் புதிய புதிய வளர்ச்சி களைக் கொடுத்திருக்கும்?
முடிவற்ற இந்தப் பிரபஞ்ச இயக்கத்தின் புதிர் தான் என்ன?
ஜனன மரணம் என்ற தொடர் நிகழ்ச்சியில்,  அர்த்தங்களையும் அனுபவங்களையும் தேடுவதுமான - வாழ்க்கை என்ற - இந்த மாயமான வேட்டை எதைக் கருதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது?
இதன் ஆரம்பம் எங்கே? முடிவு எங்கே?
கன்யாகுமரிக் கடற்கரை.
சித்ரா பௌர்ணமிக்கு முந்திய தினம். பதினாலாம் பிறை.அன்று கடற்கரை மனித நடமாட்டமே இன்றி வெறிச்சோடிக் கிடந்தது.
யாருமற்ற அந்த நெடுமணற் பரப்பில், மார்பின் மீது கைகளைக் கட்டிக் கொண்டு, கால் சட்டையும் அரைக்கைச் சட்டையும் அணிந்தவாறு, எதிரில் அலை மோதுகின்ற சமுத்திரத்தைப் பார்த்தவாறு நின்றிருந்தான் ரகுநாதன்.
புதிர்களில் எல்லாம் பெரும் புதிர் போன்ற அந்தச் சமுத்திரம் அவனது சித்த வெளியில் எண்ணிலா அலைகளை எழுப்பி விட்டது.
வானிலே அமுதகலசம் வைத்தாற் போன்ற நிலவு. மத்தியானமெல்லாம் தகித்த வெயிலின் கொடுமை, ஒரு துர்க் கனவு போல் நீங்கி, விறுவிறுப்போடு காற்று வீசிக் கொண்டிருந்தது.
ரகுநாதன் மெல்லக் கரையோரமாக நடக்கத் தொடங்கினான்.
எல்லையற்ற அந்தச் சமுத்திரவெளி, அதில் பொதிந்த மகத்தான அர்த்தங்கள்.
ஓங்கார கர்ஜனைக்குள்ளே - அந்த ஓசைகளின் கர்ப்பக்கிரகத்தில் கொலு வீற்றிருக்கும் அந்த மஹா சாந்தியையும் நிதானமாகத் தரிசித்துக் கொண்டிருந்தான் ரகுநாதன்.
மனத்தின் அடிவாரத்தில் நினைவுகள் புரண்டு கொண்டே இருந்தன. சந்திர ஒளியின் வெள்ளி ஜரிகைகள், ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் அலைகளின் மேலே கண்ணின் எல்லை வரை சிந்தி இருந்தன.
ஜலப் பரப்பில் அங்கங்கே சின்னஞ்சிறு தீபங்கள் வைத்தது போல் ஜொலிப்பு...அலைகள்...அலைகள்..சீறும் அலைகள்...ஓங்கி எழுந்து விஸ்வரூபம் காட்டும் அலைகள்.தணிந்து தலை குனிந்து புதிய மனைவியைப் போல், நாணத்துடன் கரையை முத்தமிடும் அலைகள்... தாயின் அணைப்பை நாடி ஆவேசத்தோடு வருவது போன்ற அலைகள்.
ரகுநாதன் வானை நிமிர்ந்து பார்த்தான்.
மேலே நிலவிய நிலவு வெளிச்சம்!
குழந்தையின் விளையாட்டைப் புன் சிரிப்போடு பார்ப்பது போல் வானம் சாந்தமாக இருந்தது.
ஆறடி உயரமுள்ள அந்த ஆஜானுபாகுவான உடல், நிலவெரியும் வானின் கீழ் கடலின் முன்னால் மார்பின் மீது கைகளைக் கட்டிக் கொண்டு நிற்கும் அந்தக் காட்சி, மனித குலத்தின் லட்சியம் ஒன்று இயற்கையின்நினைவுகளையும் உலக ஞாபகங்களையும் ஒரு கணம் மறந்தான்.
இரண்டு கடல்கள் ஒரு மகாசமுத்திரத்தின் மடியில் ஐக்கியமாகி நிற்க, நூற்றியொரு  கோடி மக்களின் ஜன்ம பூமியான ஒரு தேசமே - அவர்களது  நிலைக்களமான ஒரு மாபெரும் தேசமே அந்தச் சங்கமத்தை மௌனமாகச் சந்தித்துக் கொண்டிருப்பது போல் ஓர்  நினைவு அவன் நெஞ்சில் மூண்டது.
அவன் மெல்லக் கண்களை மூடினான்.
ஒவ்வொரு தரமும் வீசிய காலத்தின் அலைகளால், இந்த தேசத்தின் மீது வந்து குவிந்த மாற்றங்கள், ஒவ்வொரு அலையும் எழுதி விட்டுச் சென்ற நாகரிகச் சின்னங்கள்.
இதன் உயர்வு தாழ்வு மாண்புகள், சீர்கேடுகள் யாவற்றையும் இதோ ஆர்ப்பரிக்கும் இந்தச் சமுத்திரம்....இதே வானம்....இவை பார்த்துக் கொண்டே இருந்தன என்று எண்ணுவதில் ஓர் இணையற்ற சோகம் நெஞ்சில் மூள்கிறது.
(தொடரும்)