Sunday 15 February 2015

அது பணக்காரர்களுக்கான தேசம்..

அது பணக்காரர்களுக்கான தேசம்..


                                             மாதவன் இளங்கோ

சீன தேசத்து நண்பன் ஒருவனின் தந்தையிடம் அன்று நீண்ட நேரம் அளவளாவிக் கொண்டிருந்தேன்.

கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்பு என் நண்பன் குழந்தையாக இருக்கும் போது ஒரு நாடோடியைப் போன்று ஐரோப்பாவிற்கு வந்திருக்கிறார். நண்பனுக்கு பதினைந்து வயது ஆகும்வரை ஒவ்வொரு வருடமும் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்று வருவாராம். இப்போதெல்லாம் செல்வதில்லை. மகன் தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்கிறார். தந்தை நீண்ட காலமாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

"நீ எப்போது இங்கு வந்தாய்?" என்று கேட்டார்.

"நான்கு வருடங்களுக்கு முன்பு. உங்களைப்போலவே என் மகன் கைக்குழந்தையாக இருக்கும் போது வந்தேன்" என்றேன்.

"இந்தியாவிற்கு அடிக்கடி செல்வதுண்டா?" என்றார்.

"வருடத்துக்கு ஒருமுறை சென்று வருகிறோம்." என்றேன்.

"இந்தியாவிற்குத் திரும்பிச் சென்றுவிடும் எண்ணம் இருக்கிறதா?"

"நிச்சயமாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் எல்லா புலம் பெயர்ந்தோரைப் போன்று நானும் ஒரு மதில் மேல் பூனை! நிச்சயம் சென்று விடுவேன். இன்னும் சில வருடங்கள் தான். இப்படிச் சொல்லிக்கொண்டே வாழ்க்கையை கழித்துவிடுவார்கள். ஏதோ ஒருபுறம் குதித்துவிடுவது நல்லது என்று தோன்றுகிறது." என்றேன்.



சிரித்துக்கொண்டே, "இதோ எனக்கும் அப்படி முப்பது வருடங்கள் ஓடிவிட்டது." என்றார்.

"உங்கள் தேசத்துக்கே திரும்பிச் சென்றுவிட வேண்டும் என்று தோன்றியதே இல்லையா?" என்று கேட்டேன்.

"என்னுடைய தேசத்தை நான் நேசிக்கிறேன். மதிக்கிறேன். வாசிக்கிறேன். சுவாசிக்கிறேன். ஆனால் என்ன செய்வது, 'அது பணக்காரர்களுக்கான தேசம்!'." என்று கூறிவிட்டு, சில நொடி மௌனத்திற்குப் பிறகு, "ஏழைகள் அதிகமாக இருப்பதாலேயே அவை ஏழைகளுக்கான நாடுகளாக ஆகிவிடப்போவதில்லை. அவை உள்ளவர்களுக்கும், ஆள்பவர்களுக்குமான தேசங்கள்!" என்று கூறியவர், மீண்டும் சில நொடிகள் நெற்றியை தேய்த்தபடி சிந்தித்துவிட்டு,  "உன்னுடைய தேசமும் அப்படித்தான்." என்று அவர் கூறியதைக் கேட்டு சிரித்துவிட்டு வந்துவிட்டேன்.

அவரது வார்த்தைகளை இப்போது அசைபோட்டுக்கொண்டே இருக்கிறேன். எத்தனை ஆழமான வார்த்தைகள்?

"அது பணக்காரர்களுக்கான தேசம்!"

Flash
"ஏழைகள் அதிகமாக இருப்பதாலேயே அவை ஏழைகளுக்கான நாடுகளாக ஆகிவிடப்போவதில்லை. அவை உள்ளவர்களுக்கும், ஆள்பவர்களுக்குமான தேசங்கள்!"

Saturday 14 February 2015

சிந்தித்துப் பார்க்கிறேன் :பெருமாள்முருகன் விவகாரம்

சிந்தித்துப் பார்க்கிறேன் ...
[இப்படி ஒரு புதிய பகுதி இந்தப் பதிவு முதல் தொடங்குகிறோம். எதை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எவ்வித வரம்பும் இன்றி பகிர்ந்து கொள்ளலாம்.இங்கே எதற்கும் தடை இல்லை ]
ஜவாஹர் பிரேமலதா 

பெருமாள்முருகன் விவகாரம் 

பெண்கள் முன்னேறிவிட்டார்கள். இன்னும் ஆண்கள்தான் பெண்கள் பற்றிய சிந்தனையில் முன்னேறவில்லை என நினைக்கிறேன். பெருமாள்முருகன் விவகாரத்தில் பெண்களின் கற்பு சாா்ந்த எதிர்ப்புக் குரலைக் காட்டிய அதே ஆண்கள், படைப்பாளர்களில் பலா் ஆண்கள் பல பெண்களோடு தொடர்பு வைத்திருப்பதாக எழுதப்படும் படைப்புகளை எதிர்த்து ஏன் குரல் கொடுக்கவில்லை? இது அவர்களின் ஆண்மைக்கான அடையாளமாக, பெருமிதமாகக் கருதுவதாலா? கற்பு பெண்ணுக்குரியதாக மட்டும் கருதும் போக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடரும்? நேர்மையானவர்கள் என்றால் ஆணின் கற்பு இழிவுபடுத்தப்படும் போதும் குரல் கொடுத்திருக்க வேண்டுமல்லவா? அதுபோல் பெண் படைப்பாளர்களில் பலர் படிக்கவே முடியாத தலைப்புகளை தம் கவிதைநூலுக்கு வைத்து எங்களுடைய உரிமை எனக் கூறிக்கொண்டு, பாலியல் மற்றும் உறுப்பு சார்ந்த சொற்களை அப்பட்டமாகப் படைப்புகளில் வெளிப்படுத்தி வருகிறார்கள். அவர்களையெல்லாம் இவர்கள் போற்றிக் கொண்டாடி வருவது (பெண்களின் அந்தரங்க வக்கிரஉணர்வுகளை  உள்ளுக்குள் இரசிக்கும் கயமைத்தனத்தை மறைத்து)இரட்டைவேடமல்லவா? இந்தப் போராட்டங்கள் எதிர்ப்புகள் அனைத்தும் ஒரு நாடகம்  பார்ப்பது போல்தான் இருக்கிறது. ஒரு படைப்பை எடுத்துக்கொண்டு அதில் வரும் பாத்திரங்களுக்கு  x y z எனப் பெயரிட்டு அதன் வாழ்க்கையை ஒரு பொதுத்தன்மைக்குள் கொண்டு வந்து, ஆண் பெண் வேறுபாடகற்றி ஆராயும் பொழுதுதான் உண்மை புலப்படும். 


பெண் எழுத்து, ஆண் எழுத்து  என்பது குறித்தான பார்வைகள் இருவேறு உலகத்தியற்கை வேறு என்ற முரண்பாடுகளிலிருந்துதான் எழுகின்றன. அகவயம் புறவயம் என்பதெல்லாம் ஒரு காலம். இன்று பெண்ணும் புறவயப்பட்டுவிட்டாள். அவளுக்கும் புறஉலகம் நிறைய அனுபவங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. என்ன ஒரு சிக்கல் என்றால் ஆண் இன்னும் புறவயத்திலேயே நிற்கிறான். அவனும் அகவயப்பட்டு பெண்ணின் உலகத்திற்குள் வரும் பொழுதுதான் ( குழந்தைவளர்ப்பு. இல்லறப்பணி,முதியோர் பராமரிப்பு, கற்பு பெண்ணுக்குள்ளதுபோல் கட்டாயமாக்கப்படும்பொழுதுதான்-(இப்போது பரவாயில்லை) இது சாத்தியமாகும்) ஆண் எழுத்து,பெண் எழுத்து என்பதான வேறுபாடகலும் என்று நினைக்கிறேன்.