Saturday 14 February 2015

சிந்தித்துப் பார்க்கிறேன் :பெருமாள்முருகன் விவகாரம்

சிந்தித்துப் பார்க்கிறேன் ...
[இப்படி ஒரு புதிய பகுதி இந்தப் பதிவு முதல் தொடங்குகிறோம். எதை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எவ்வித வரம்பும் இன்றி பகிர்ந்து கொள்ளலாம்.இங்கே எதற்கும் தடை இல்லை ]
ஜவாஹர் பிரேமலதா 

பெருமாள்முருகன் விவகாரம் 

பெண்கள் முன்னேறிவிட்டார்கள். இன்னும் ஆண்கள்தான் பெண்கள் பற்றிய சிந்தனையில் முன்னேறவில்லை என நினைக்கிறேன். பெருமாள்முருகன் விவகாரத்தில் பெண்களின் கற்பு சாா்ந்த எதிர்ப்புக் குரலைக் காட்டிய அதே ஆண்கள், படைப்பாளர்களில் பலா் ஆண்கள் பல பெண்களோடு தொடர்பு வைத்திருப்பதாக எழுதப்படும் படைப்புகளை எதிர்த்து ஏன் குரல் கொடுக்கவில்லை? இது அவர்களின் ஆண்மைக்கான அடையாளமாக, பெருமிதமாகக் கருதுவதாலா? கற்பு பெண்ணுக்குரியதாக மட்டும் கருதும் போக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடரும்? நேர்மையானவர்கள் என்றால் ஆணின் கற்பு இழிவுபடுத்தப்படும் போதும் குரல் கொடுத்திருக்க வேண்டுமல்லவா? அதுபோல் பெண் படைப்பாளர்களில் பலர் படிக்கவே முடியாத தலைப்புகளை தம் கவிதைநூலுக்கு வைத்து எங்களுடைய உரிமை எனக் கூறிக்கொண்டு, பாலியல் மற்றும் உறுப்பு சார்ந்த சொற்களை அப்பட்டமாகப் படைப்புகளில் வெளிப்படுத்தி வருகிறார்கள். அவர்களையெல்லாம் இவர்கள் போற்றிக் கொண்டாடி வருவது (பெண்களின் அந்தரங்க வக்கிரஉணர்வுகளை  உள்ளுக்குள் இரசிக்கும் கயமைத்தனத்தை மறைத்து)இரட்டைவேடமல்லவா? இந்தப் போராட்டங்கள் எதிர்ப்புகள் அனைத்தும் ஒரு நாடகம்  பார்ப்பது போல்தான் இருக்கிறது. ஒரு படைப்பை எடுத்துக்கொண்டு அதில் வரும் பாத்திரங்களுக்கு  x y z எனப் பெயரிட்டு அதன் வாழ்க்கையை ஒரு பொதுத்தன்மைக்குள் கொண்டு வந்து, ஆண் பெண் வேறுபாடகற்றி ஆராயும் பொழுதுதான் உண்மை புலப்படும். 


பெண் எழுத்து, ஆண் எழுத்து  என்பது குறித்தான பார்வைகள் இருவேறு உலகத்தியற்கை வேறு என்ற முரண்பாடுகளிலிருந்துதான் எழுகின்றன. அகவயம் புறவயம் என்பதெல்லாம் ஒரு காலம். இன்று பெண்ணும் புறவயப்பட்டுவிட்டாள். அவளுக்கும் புறஉலகம் நிறைய அனுபவங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. என்ன ஒரு சிக்கல் என்றால் ஆண் இன்னும் புறவயத்திலேயே நிற்கிறான். அவனும் அகவயப்பட்டு பெண்ணின் உலகத்திற்குள் வரும் பொழுதுதான் ( குழந்தைவளர்ப்பு. இல்லறப்பணி,முதியோர் பராமரிப்பு, கற்பு பெண்ணுக்குள்ளதுபோல் கட்டாயமாக்கப்படும்பொழுதுதான்-(இப்போது பரவாயில்லை) இது சாத்தியமாகும்) ஆண் எழுத்து,பெண் எழுத்து என்பதான வேறுபாடகலும் என்று நினைக்கிறேன்.

No comments:

Post a Comment