Tuesday 7 February 2017

மணல்வெளி மான்கள் -3

மணல்வெளி மான்கள் -3
---------------------------------------
கையில் தம்ளரோடு ஆதி திரும்புவதைக் கண்டதும் மனசுக்குள் யாரோடு நாம் சண்டை போடுகிறோம் என்று விழிப்பு வந்தது. யாரிடமுமில்லை. சொந்த ஊர் என்பதால் மட்டும் சொந்தம் வந்து விடாது.
சொந்த ஊர் இல்லாததால் அது போய் விடாது.
ஆதி தம்ளரைக் கழுவிக் கொண்டு வந்திருந்தான்.
அவன் மிதமான உயரம். சிரிக்கும் போது ஒரு பேதைமை. உழைக்கும்போது ஒரு மூர்ச்சனை. ஆதிக்கு இது சொந்த ஊர். காலின் சக்கரம் சென்னை, பம்பாய், தில்லி என்று திரிந்து சுற்றிவிட்டு இப்போது துபாய்போக துடிக்கிறது.
அவன் கையிலிருந்த கூழை வாங்கி ஒரு மிடறு குடித்தான்.
ஆலிலையில் எலுமிச்சையளவு புளியும் வெங்காயமும் வைத்து அரைத்த துவையல்.
“இதைத் தொட்டுக்கோ தம்பி...”
கூழில் மிதமான உப்பு. லேசாக மோர் விட்டிருந்தாள் மகாலட்சுமி. துவையல் நாவில் ஊறிய நீரில் ஐக்கியமாகி, சுகம் மண்டையைத் தொட்டது .
“அற்புதம் ஆதி!”
“சும்மானாச்சும் சொல்லாத தம்பீ!”
எளிமையான சொல் , எளிமைதான் எளிமையானதே என்று உணர்ந்திருப்பதால் அது எத்தனை சத்தியம்!
“இந்த ஊரை விட்டுட்டு, இந்த ஆத்தோர நெலத்தை விட்டுட்டு, இந்தக் கூழை விட்டுட்டு, ஏன் எங்கேயோ பறந்து போயிடணும்னு துடிக்கிறே ஆதி?”
அவன் வாயைத் துடைத்துக் கொண்டான். ஏதோ தவறு நேர்ந்து, அதற்கு நீதி உபதேசம் கேட்கிற பாவனையில் ஆதியின் முகம் பவ்யமாயிற்று.
“இதுக்கு மேல நிம்மதியும், திருப்தியும் வெளியே கிடைக்கும்னா நினைக்கிறே?”
ஆதி அவனையே ஒரு முறை கண் சிமிட்டாமல் பார்த்தான். பிறகு தலைகுனிந்து இன்னொரு தம்ளர் கூழ் வார்த்தான்.
“அப்படியில்லே தம்பி...” சொல்லிக் கொண்டே தம்ளரை நீட்டினான்.
கௌதம் வாங்கிக் கொண்டான்.
“நீ பட்டம் வாங்கினே. வேலை கிடைக்கலேன்னு ரோதனை கொட்டிக்காம,பொலம்ல் அலம்பல் இல்லாமே தெரிஞ்ச வேலைகளைச் செஞ்சு காலம் தள்றே. தெம்பா இருக்கே. மனசைச் சஞ்சலப்பட விடாமே கட்டுலே நிக்கிறே.”
“இதெல்லாம் எதுக்கு இப்போ? காதுக்குப் பூ சுத்தறியா?”
“அட நீ ஒண்ணு! உள்ளதுதானப்பா.”
“இப்ப நான் சொல்லட்டா?”
“சொல்லு.”
“எனக்குக் கட்டும் இல்லே. கத்தரிக்காயும் இல்லை. வேலைக்கு எழுதிப் போடறேன். வர்றதில்லை. வந்து தான் எதுவும் ரொம்பணும்னு விதியில்லே. அப்பா பென்ஷன் வந்துட்டிருக்கு. போன வருஷம் ஊர்ல புஞ்சை மோட்டிலே ரெண்டு புட்டிக் கடலைக்காய் வந்தது. கைச்செலவுக்கு அவருக்குப் போதும். படிக்க மட்டும் தானா செஞ்சேன்? எத்தனையோ கைத்தொழில் கத்துகிட்டேன் அதுங்க எல்லாம் எங்கே போறது? பழங்கடத்துப் பானையிலே போட்டு மூடியா வக்கச் சொல்றே?”
ஆதி துவையலை வழித்த விரலைப் பார்த்துக் கொண்டே கேட்டான்;
“வெள்ளிக்கிளமை சினிமாக் கொட்டாயிலே பாதில மிஷின் ரிப்பேர்ன்னு அவுட் பாஸ் குடுத்தானே! அதை நீதான் ரிப்பேர் பண்ணினியா?”
ஆதி திடீரென்று விஷயத்தை விட்டு விட்டு தன் அதிசயோக்திகளுக்குத் தாவி விட்டான். புரிந்தது.
“ஆபரேட்டர் சொன்னாரா?”
“அடடா அவரு ஒன்னைப் புகழ்ந்ததை நீ கேட்டிருக்கணுமே!”
“நீயும் ஒரு கிளாஸ் கூழ் ஊத்திக்க.”
ஆதியை மேலே பேச விடாமல் கரை மாற்றினான். ஆதியும் சொல்லுக்குக் கட்டுப்பட்டான்.
ஒரு வாய் அவன் விழுங்கட்டும் என்று காத்திருந்து கௌதம் கேட்டான்.
“நீ இன்னும் என் கேள்விக்குப் பதில் சொல்லலே ஆதி.”
“நான் மறக்கலியே.”
“சொல்லு.”
ஆதி ஆற்றைப் பார்த்தான், திடீரென்று முகம் திரும்பி அவனது கீழ்க் கன்னச்சதை நடுங்குவது தெரிந்தது.
அழுகிறானோ?
கௌதமுக்கு அழுகை பிடிக்காது. அதுவும் ஆண் அழுகை.
எதற்காகவும் என்ன நேரிட்டாலும் அழுது அழுது புலம்புவதும் அழுகையை ரசிப்பதும், ரசிக்கிறார்கள் என்பதற்காக அழுவதும்!
எட்டாவது முடித்த கையோடு பூந்துறை ஸ்டேஷனில் கௌதமின் அம்மா சாவித்திரியின் பிரேதத்தை இறக்கிய போது, ஓவென்று அவன் கதறிய கதறல் பூந்துறை ஸ்டேஷனைக் கலக்கிற்று.
அம்மாவின் பிரேதத்தோடு உடன் இறங்கிய அவன் தந்தை சபாநாயகம், அவனைக் கட்டிப் பிடித்துக் கதறுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். அவன்கூட.
ஆனால் அவர் கண்களில் மாலை மாலையாகக் கண்ணீர் வந்தது.
சீச்சீ, இதென்ன வெட்கக்கேடு! என்று அவர் வெட்கப்பட்டவர் போலக் கண்ணீர் முகத்தில் வழியுமுன் தோளில் போட்ட துண்டால் துடைத்துக் கொண்டார்.
பிறகு அவனை ஆழமாக, இடைவெளியின்றி வெகு நேரம் பார்த்துவிட்டு அவன் வலக்கையைத் தம் கையால் இறுகப் பற்றிக் கொண்டார்.
அதற்கப்புறம் அவர் அவனுக்கு அழ வாய்ப்பளித்ததே இல்லை.
“என்ன ஆதி?”
அவன் முகம் திரும்பினான். விழிகள் பளபளத்தன. அழுகை கரைகட்டி நின்றது. அதைச் சந்திக்க விரும்பாமல் இமை தாழ்த்தினான் கௌதம்.
“அம்மாவுக்கு, எனக்குக் கல்யாணம் பண்ணிடணும்னு ஆசை தம்பீ... என் கைல நாலு காசு இல்லன்னா ஊமை மாமியாரை எந்த மருமவ மதிப்பா சொல்லு?”
ஆதி மனசைத் தாக்கி விட்டான்!
“அட பொம்பளை வேணும்னா எங்கியோ போய்ப் பொரண்டு எவனையாவது இஸ்தாந்து வச்சுக்கலாம். இந்த வாயில்லா ஜன்மத்து மனசு கலங்காம அதுக்குச் சோறு போட்டு, துணி தொவிச்சு, வாரிப் போடறதுக்கு முன்னே கால் மாட்டிலே ஒக்கார ஒருத்தியாப் பார்க்கறேன். எல்லாம் பணம். எதுக்கும் பணம். ம்ம்ம்.போவுது காலம்! நானும் தேடறேன்.”
ஆக இதுவும் அம்மாக்கள் விவகாரம்.
அம்மா.அம்மா. இப்படி சின்னச்சின்னப் பல் சக்கரங்களாக ஒன்றையொன்று தள்ளி, சிறியது பெரியதைத் தள்ளி, எதற்கோ எங்குமே இயங்கும் யந்திரங்களின் உந்துவிசை அவள்தானா? இருக்கலாம். யார் அறிவார்?
பேச்சை மாற்றியாக வேண்டியிருக்கிறது. இதோ பாம்பு உரித்துப் போட்ட தோல் கிடக்கிறதே இது மாதிரி. புது வளர்ச்சிக்கு, புதிய பரிமாணத்திற்கு புகழ்ச்சியில் மூச்சுத் திணறி விடாமல் இருக்க, ஆள் மாற்றமடைவது போல் பேச்சும் மாற வேண்டும்.
“நொணாமரத்து மாசிலாகிட்டே என்னத்துக்குத் தகராறு?”
“நானா பண்றேன்?”
“பின்னே?”
“நல்ல கதையா இருக்கே! அவ கொளுந்தியா மச்சினன் துபாய்ல வேலை வாங்கித் தர்றான்னு ஆயிர ரூபாயை வாங்கிக்குடுத்தேன். அஞ்சு வட்டி அசலுக்கு நெஞ்சு முட்ட வட்டி ஆயிடுச்சி. வேல வேணாம். ரூபா குடுண்ணு மூணுமாசமாகக் கேக்கறேன். தோ தோண்ணு வாய்தா வக்கிறான். போன செவ்வாச் சந்தையிலே ஆறாந் தேதி தர்றதா சொன்னான். இன்னிக்குத் தேதி எட்டு.”
“என்ன சொல்றான்?”
“கேக்கப்போனா அவன் கொளுந்தியாள வுட்டுட்டு எங்கியோ ஓடிட்டான்னாம். இவன் தானே ஜாமீனு. பொறுப்பா பதில் சொல்லணுமில்லே.”
கௌதம் காது கொடுத்தான்.
“நீ என்ன பண்றியோ பண்ணிக்கன்னான். கொலவுழும்ணு கத்தினேன். கொடலை உருவிடுவேன்னான். உருவுடா பார்க்கலாம். நீ ஆம்பளையானாக் கொடலை உருவுடான்னேன்.”
“கை வச்சுட்டான். இல்லியா?”
ஆதி பதில் சொல்லவில்லை.
“அவனாலே  கொடுக்க முடியாது. அவன் நெலையே ஆட்டம் கண்டு போச்சு. தெரியும்லே.”
“தெரியும் தெரியும்.”
“ஆறு மாசத்துக்குள்ளே ஒருத்தன் ரெண்டு அடி வாங்கினான்னா...அதுவும் என்ன மாதிரி அடி?”
கௌதம் நினைவில் தோய்வது போன்று பேச்சை நிறுத்தினான்.
கூழ் தீர்ந்து விட்டது. ஆதி இரண்டு தம்ளர்களையும் பாத்திரத்தையும் கழுவ எழுந்தான். கௌதம்,  தாம்போகிப் பாலத்தின் மீது வீட்டு வேலை முடிந்து துணி வெளுப்பதற்காக இடுப்பில் ஆளுக்கு ஓர் அன்னக் கூடையோடு கைவீசி நடந்துவரும் பெண்களைப் பார்த்தான். பாத்திரங்களை அலம்பிக் கொண்டே ஆதி பேசினான்.
“நான் கொடுத்த பணத்தைக் கேக்கத் தானே போனேன், தம்பீ?”
“நீ போன வேளை சரியில்லே.”
“நான் என்ன செய்யட்டும், என் கடன்காரன் பொழுது விடியறப்பவே என் வீட்டுக் கதவைத் தட்டிடறான்.”
கிழக்கேயிருந்து லேசான காற்று வந்தது. அலையலையாகப் பயிர் வரிசைகளை, மயில் கழுத்து நெளிவது போல அசையச் செய்தபடி, அந்த அலை நுணாமரத்துப் பம்பு ஷெட் வரை ஒரு சிறு தூரப் பயணம் போயிற்று.
காற்றோட்டத்தோடு கண்ணோட்டம் செலுத்திய கௌதம் பார்வையை மாசிலாவின் குத்தகை நிலத்தில் நிறுத்தினான்.
பதின்மூன்று ஏக்கர் நிலம் அது!
முதலில் மாசிலா பத்து வயதுப் பையனாக மண் மிதித்த பூமி. அவனுடைய அப்பன் மாரிமுத்துதான் கைபிடித்து அவனை அழைத்து வந்தானாம்.
விட்டலாபுரமே சொல்லும்.
கோரையும் காட்டுச் செடிகளுமாகப் புதர் மண்டியிருந்த நிலம். ஆற்றை ஒட்டிய சிறு மேடு. குறுக்கு வழியென்று மாட்டு வண்டிப் பாதைக்காகச் சக்கரங்கள் ஓடி ஓடி திமிசு வாங்கிய பூமி.
மாரிமுத்துவை கௌதம் பார்த்ததில்லை. விட்டலாபுரம் சொல்லியிருக்கிறது.
கருங்காலி மரத்துச் சட்டம் மாதிரி, வலுவான கட்டடம் உள்ள உடம்பாம். ஆள் வைத்து வேலை வாங்கினான் என்றாலும் வெள்ளி முளைத்ததும் தெரியாது; மறைவதும் தெரியாதாம். அப்படி ஓர் ஈடுபாடு! அவன் சமப்படுத்திய நிலம் அது!
இன்றுதானே டிராக்டர்!
அன்று மாரிமுத்து கலப்பையைப் பிடித்தால் ஏர்முனை அரையடி இறங்குமாம். மாசிலாவின் ஏர்முனை முக்கால் அடி இறங்குவதைக் கௌதம் பார்த்திருக்கிறான்.
எவ்வளவு வியர்வை. எல்லாம் ரத்தம். வியர்வையான ரத்தம். அவன் அப்பன் மாரிமுத்து மஞ்சள் காமாலையில் உயிர் விட்டான். விட்டலாபுரத்து விளைச்சல். காண கொல்லி மலையில் இருந்து இறங்கி வந்து உதிரம் ஊற்ற வந்த சொந்தம்.
நுணா மரத்துப் பம்பு ஷெட் அவர்கள் முன்னின்று வெட்டியதுதான். முகம் தெரியாத முதலாளி, பணம்தான் அனுப்ப முடியும். பணமா கிணற்றை வெட்டும்? மனிதர்கள் தேவைப்பட்டனர். மாரிமுத்துவையும் மாசிலாவையும் போல் மண்ணை நேசித்த மனிதர்கள்.
மண் கூட மாதா மாதிரிதான். அம்மாவேதான். முட்டி முட்டிக் குடிக்கிற கன்றுக்குத் தாய்ப் பசு நிறையத்தான் சுரக்கிறது. சொந்தமா சொந்தமில்லையா என்ற கணக்கு வழக்குப் பார்க்காமல் மாதாவின் மார்பில் முட்டி முட்டி வெட்டிய கிணறு அது.
வருஷத்தில் பத்து நாட்கள் மட்டுமே வெள்ளம் ஓடும் பாலாற்றில், மீதி நாட்களில் விட்டலாபுரம் பெண்களுக்கு நுணா மரத்துப் பம்பு ஷெட்தான். படித்துறை, வம்பளப்பு கவுண்ட்டர்.
“கரண்ட் வந்துச்சு தம்பி.”
“போ... போ, போயி மோட்டார் ஸ்விட்சைப் போடு.”
ஆதி ஸ்விட்சைப் போட்டு விட்டான்.
உறுமிக் கொண்டே  உதறி எழுந்து துள்ளிப்பாயும் சிறுத்தையாக  ஹூங்காரமாக ஒலிக்கத் தொடங்கியது மோட்டார்.[தொடரும்]

No comments:

Post a Comment