Thursday 28 August 2014

தமிழ் இனி மெல்ல 40உடலைத் துன்புறுத்தும் நோவைக் கசப்பான மருந்தை உண்டு

தமிழ் இனி மெல்ல 39  [சென்ற இதழ் இறுதிப்பதிவின் தொடர்ச்சி]“நங்கை, நிலவுமொழி என்னிடம் நரேந்திரனைப் பற்றிப் பேசிய பொழுதே அவளை வேங்கை நாட்டிலிருந்து அனுப்பி விடாதது எனது தவறோ என்று அடிக்கடி உள்ளுணர்வு என்னைச் சாடுகிறது.” பெருமூச்சு விடுகிறான் சிவாச்சாரி.

“நரேந்திரன் முறையற்று நடந்தது அவனுடைய பிழை. அத்தையார் அவன் மீது சினம் கொள்ளாமல் மெச்சவா செய்வார்கள்? அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்? ஐயனே, நீங்கள் தேவையில்லாமல் மனதை வருத்திக் கொள்கிறீர்களோ என்று எனக்குத் தோன்றுகிறது.” என்று அவனைத் தேற்ற முயல்கிறாள் அருள்மொழிநங்கை.

“அவன் முறை தவறி நடந்ததோடு நின்றிருந்தால் ஏதோ இளமை வேகத்தில் பிழை செய்து விட்டான், தான் விரும்பியது கிடைக்காத சினத்தில் இப்படி நடந்து கொள்கிறான் என்று விட்டுவிடலாம். ஆனால்...” என்று இழுத்த சிவாச்சாரி, “உன் அத்தையிடம் தெலுங்கிலேயே பேச ஆரம்பித்து விட்டானாம். இது தமிழ்த் திருப்பணிக்குத் தடங்கலாக அமையுமோ என்று ஐயுறுகிறேன். சக்கரவர்த்தி அவர்களின் திருப்பணி ஆலோசகனான நான் பெரிய பிழை செய்து விட்டேனோ என்றும் அஞ்சுகிறேன். அதனால்தான் என் மனம் அமைதியின்றித் தவிக்கிறது.” என்று முடிக்கிறான்.

“நரேந்திரன் மிகவும் செல்லப் பிள்ளையாக வளர்க்கப் பட்டவன். அதனால்தான் இப்படித் தாறுமாறாக நடந்து கொள்கிறான். அவனது கவனத்தைத் திருப்ப, எந்தக் குதிரை அவனைக் கீழே தள்ளியதோ, அந்தக் குதிரையையே அவனுக்குப் பரிசாகக் கொடுத்து, அவனுக்குக் குதிரை ஏற்றமும், போர்க்கலைகளும் கற்பியுங்கள். அவன் மனம் இந்த ஏமாற்றத்திலிருந்து விடுபடும்.

“பாட்டனாரும், தந்தையாரும் உங்கள் மீது அளவு கடந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள். தந்தையாரோ உங்களை ஆருயிர் நண்பராகக் கருதித்தானே என்னையே உங்களுக்குப் பரிசளித்திருக்கிறார். உங்கள் சேவையை வருங்காலம் போற்றும். பெருவுடையார் உங்கள் முயற்சிகளைத் திருவினையாக்குவார்.” என்று அவனைத் தன்னுடன் சேர்த்து இழுத்துக் கொள்கிறாள்.
                                                                                                        * * *
தமிழ் இனி மெல்ல 40
அரிசோனா மகாதேவன் [தொடர்கிறது]
அத்தியாயம் 15
பழையாறை அரண்மனை
பிரமாதீச, ஆனி 18 - ஜூலை 3, 1013

யாழ் இசையை முடித்த பாணர்கள், இராஜராஜரை வணங்கிவிட்டு வெளியேறுகிறார்கள். இராஜேந்திரனும், குந்தவைப் பிராட்டியாரும் அவருக்கருகே ஆசனங்களில் அமர்ந்திருக்கிறார்கள். அருகே இராஜாதிராஜனும், சிவாச்சாரியனும் நிற்கிறார்கள். இராஜராஜர் தனக்குப் பிடித்த மஞ்சத்தில் சரிந்தபடி கால்களை நீட்டி அமர்ந்திருக்கிறார். பணிப்பெண்கள் சாமரம் வீசிக்கொண்டிருக்கிறார்கள். நிலாமுற்றத்திலிருந்து வெப்பமான காற்று வீசுவதால் விளாமிச்ச வேர் தட்டிகள் தொங்க விடப்பட்டு அதில் நீரை ஊற்றி வைத்திருக்கிறார்கள். இனிய மணமும், சற்றுக் குளிர்ந்த காற்றும் அதிலிருந்து வருகிறது. இராஜராஜர் கையசைத்தவுடன் சாமரம் வீசும் பெண்கள் அங்கிருந்து அகலுகிறார்கள்.

இராஜராஜரின் உடல்நிலை பலவீனமாக இருப்பதால் இராஜேந்திரன் அவர் நலம் விசாரித்துச் செல்ல வந்திருக்கிறான். பொன்னமராவதிப் போருக்குப் பிறகு அவரது உடல்நலம் பழைய அளவுக்குத் திரும்பவில்லை. இருந்த பொழுதும் மனத்தளவில் புலியாகத்தான் இருந்து வருகிறார். கடந்த ஆறு மாதங்களில் மூன்று தடவை சுரம் அவரை வாட்டி எடுத்து விட்டிருக்கிறது. அதனால் அவர் சற்று ஆடித்தான் போயிருக்கிறார். உடம்பும் மெலிந்து காணப்படுகிறது.தந்தையை இந்த நிலையில் பார்த்ததும் இராஜேந்திரனுக்கு நெஞ்சில் ஏதோ அடைக்கிறது. இருப்பினும் உடல்நிலை குறித்து வருத்தம் தெரிவிப்பதை அவர் சற்றும் விரும்பமாட்டார் என்பதை அவன் நன்றாகவே அறிந்திருந்ததால், அரசு அலுவல் நிமித்தமாக வந்திருப்பதாகக் காட்டிக் கொள்கிறான். அவனது கேள்விகளுக்குப் பதில் அளித்து வந்த இராஜராஜர், தனது பேரனையும், சிவாச்சாரியனையும் அமரும்படி சைகை செய்கிறார்.

“மதுராந்தகா, ஓலைநாயகத்தையும், நரேந்திரனையும் நீலமலை நாட்டுக்கு அனுப்புவது சிறந்தது என்பது எனது கருத்து. திரை செலுத்த மறுப்பவர்களுக்கு ஞாபகப் படுத்துவதுமட்டுமல்ல, தமிழ்த் திருப்பணியையும் சேரநாட்டில் நிலைநிறுத்த சிவாச்சாரியார் கூடச் செல்வது நரேந்திரனுக்கும் தமிழ்ப்பணியில் ஆர்வத்தை வளர்க்கும்.”

நீலமலையில் இருக்கும் உதகையில் அரசாண்டு வரும் (இரண்டாம்) பாஸ்கர ரவிவர்மன் கடந்த ஆறு மாதங்களாகத் திரை அனுப்பவில்லை, ஒரு சிறிய படையை அனுப்பலாம் என்று இருப்பதாக இராஜேந்திரன் தெரிவித்ததற்குத் தன் கருத்துத் தெரிவிக்கிறார் இராஜராஜர்.

“தந்தையே, தமிழ்த் திருப்பணி என்று சொன்னீர்களே, அது என்ன?” என்று வினவுகிறான் இராஜேந்திரன்.

“மதுராந்தகா, தற்பொழுது சேரமான்கள் அரசுப் பட்டயங்களை வடமொழியில் பொறித்து வருகிறார்களாம். இனிமேல் தமிழைத்தான் அரசு மொழியாகக் கையாள வேண்டும். அரசவையில் தமிழில்தான் அலுவல்கள் நடத்தப்பட வேண்டும் என்று சேரமானுக்கு ஓலைநாயகம் மூலம் நீ ஆணை அனுப்பவேண்டும் என்பது எனது அவா!” என்று பதிலளிக்கிறார் இராஜராஜர்.
இப்பொழுது அவரது வாயிலிருந்து ஆணைகள் வருவது இல்லை. இராஜேந்திரனுக்கு முடிசூட்டியதற்குப் பிறகு கருத்துகளைச் சொல்வதோடு நிறுத்திக் கொள்கிறார். அது இராஜேந்திரனுக்கும் நன்றாகவே தெரிகிறது. தன்னை சோழநாட்டின் மன்னனாகத்தான் தந்தையார் நடத்துகிறார் என்பது அவனுக்குப் பெருமையாக இருக்கிறது. எனவே, அவர் எதைச் சொன்னாலும் மறுத்துப் பேசாமல் நிறைவேற்றியே வருகிறான். அவருடைய உடல் நலத்தைக் கருதி, மிக முக்கியமான விஷயங்களுக்கு மட்டுமே அவருடைய கருத்துகளைக் கேட்டும் வருகிறான்.

“ஓலைநாயகத்தை அனுப்புவது சாலச் சிறந்ததுதான் தந்தையாரே! நரேந்திரனை எதற்கு அனுப்பவேண்டும்? சாளுக்கிய இளவரசனை ஓலைநாயகத்திற்குத் துணையாக அனுப்புவதை இளஞ்சேரமான் எப்படி எடுத்துக் கொள்வான்? இராஜாதிராஜனை அனுப்புவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” அவரது அடிமனதில் இருப்பதை அறிந்துகொள்ள வேண்டித் துருவிக் கேட்கிறான் இராஜேந்திரன்.

அவன் மனதில் ஓடுவதைப் புரிந்து கொண்ட இராஜராஜரின் முகத்தில் புன்னகை மலர்கிறது. “இராஜாதிராஜன் அங்கு சென்றால் சோழப் படையுடன் இளஞ்சேரமானைத் தண்டிக்கத்தான் செல்லவேண்டும். தூதனாகவோ, திரை ஏன் செலுத்தவில்லை என்ற கணக்கன் நிலையிலோ அல்ல என்பதைத் தெரிந்துகொண்டே, மற்றவர்களுக்குப் புரியவேண்டும் என்பதற்காக, என் வாய் மூலம் அதை வரவழைக்கிறாய் போலும்!” என்கிறார்.

இராஜேந்திரனுக்கு நன்றி மிகுகிறது. தனக்குத் தெரியாத ஒன்றை தனக்குத் தெரிந்ததாக அறிவிப்பதன் மூலம் தனது நிலையை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், தனது கேள்விக்கும் கச்சிதமாகப் பதில் சொல்லிவிட்டாரே!
மெல்ல அவரைப் பார்த்துத் தலையசைக்கிறான். அவரும் பதிலுக்குத் தலையசைக்கிறார்.

“சாளுக்கிய இளவரசன் நமது ஓலைநாயகத்துடன் செல்வது மூலம் இளஞ்சேரமான் தமிழைச் சாளுக்கியர்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்து கொள்வான். அது நமது ஆணைக்கு வலுக் கொடுக்கும். அது இரட்டை பலம் அல்லவா!” என்று நரேந்திரனை சிவாச்சாரி கூட அனுப்புதற்கான விளக்கத்தைத் தருகிறார்.

“மேலும், நரேந்திரனும் கீழைச் சாளுக்கிய நாடு சோழநாட்டிற்குக் கட்டுப்ட்டது என்பதையும் அறிந்து கொள்ள அது ஒரு வாய்ப்பாகும். சிவாச்சாரியாரும், அவன் உடன் இருக்கும் பொழுதினை அரச தந்திரமும், படைநடத்தும் திறனைப் பற்றியும் அவனுக்குக் கற்றுத்தரப் பயன்படுத்தலாம் அல்லவா! நமது பேரரசுக்கு வடகிழக்குக் காவலனாக நரேந்திரன் விளங்கவேண்டுமே! அதற்கான கல்வியை நம்மிடமிருந்து அவன் கற்றுக் கொள்வது சிறந்தது என்பது நீயும் அறிந்ததுதானே!”

தந்தையாரின் விளக்கம் இராஜேந்திரனை அசர வைக்கிறது. சதுரங்கக் காய்களைப் போலல்லவா அவர் ஆட்களை நகர்த்துகிறார்! அவர்கள் இருவரையும் அனுப்புவதற்குப் பின்னால் இத்தனை விஷயங்களைக் கோர்த்துள்ளாரே! தானும் இனி எந்த விஷயத்தையும் ஆழ்ந்து சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்று மனதிற்குள் உறுதி கொள்கிறேன்.

மதுராந்தகா! சோழ சாம்ராஜ்ஜியம் உன் தோள் வலிமையைத்தான் நம்பி இருக்கிறது என்பது அருள்மொழிக்கு நன்றாகத் தெரியும். ஆகவே அவனுக்குச் சிறிது ஓய்வு கொடுக்கிறாயா? அவன் சற்று உறங்கட்டும்! நேற்று இரவு கூட அவன் சரியாக உறங்கவில்லை.” அரசு விஷயங்களைச் சொல்லித் தம்பியை தொந்திரவு செய்யாதே என்று மறைமுகமாக அறிவிக்கிறாள் குந்தவைப் பிராட்டியார்.

“அக்கையாரே! நானென்ன சிறு குழந்தையா? தூங்க வேண்டும், தொந்திரவு செய்யாதே என்று சொல்வதற்கு?” என்று தமக்கையைச் செல்லமாகக் கடிந்து கொள்கிறார்.

“தந்தையாரே! நான் தஞ்சை புறப்படுகிறேன். ஏதாவது என்னிடம் சொல்ல வேண்டுமா?” என்று கேட்கிறான் இராஜேந்திரன்.

“இல்லையப்பா. சிவாச்சாரியாரை நான் நாளைக்கு தஞ்சைக்கு அனுப்பி வைக்கிறேன்.” என்ற இராஜராஜர், “சிவாச்சாரியாரே! நீர் நங்கையிடம் நீலமலைக்குச் செல்வதாகத் தெரிவித்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து விட்டு ஒரு சாமம் கழித்து இங்கு வாரும். உம்மிடம் சில விஷயங்களைப் பேச வேண்டியது இருக்கிறது.” என்று கண்களை மூடிக் கொள்கிறார்.

குந்தவைப் பிராட்டியார் அனைவருக்கும் “இங்கிருந்து செல்லலாம்” என்பது போலக் கண்களைக் காட்டுகிறாள். மூவரும் அருள்மொழிநங்கையைக் காணப் பழையாறை மாளிகைக்குச் செல்கிறார்கள்.

அவர்கள் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள் அருள்மொழிநங்கை. அவளுடன் எட்டு வயதான கடைசித் தம்பி வீரனும்51 இருக்கிறான். இராஜேந்திரனைக் கண்டதும், “தந்தையே!” என்று ஓடிவந்து கட்டிக் கொள்கிறான்.

“என் வீர மகனே!” என்று வீரனை உயரத் தூக்கிப் போட்டுப் பிடிக்கிறான் இராஜேந்திரன்.

சிறிது நேரம் அருள்மொழிநங்கையிடம் உரையாடிய இராஜேந்திரன், “நான் இப்பொழுதே தஞ்சை கிளம்ப வேண்டும், நங்கை! நாளை உனது கணவர் தஞ்சைக்கு வந்துவிட்டு நீலமலைக்கு நரேந்திரனுடன் செல்லப் போகிறார். அவருடன் செல்லுவதற்கு காப்புப் படையினரை நான் ஏற்பாடு செய்ய வேண்டும். தவிரவும், நகரத்தார் வணிகர்கள் கடாரம், ஸ்ரீவிஜயம், சீன வணிகம் பற்றி என்னைப் பேட்டி காண வருகிறார்கள். ஆகவே உணவு உண்டு செல்ல எனக்கு நேரமில்லை. அடுத்த தடவை பார்த்துக் கொள்ளலாம். என்னுடன் வீரனையும் அழைத்துச் செல்கிறேன்.” என்று தன்னை உணவு உண்ண அழைக்க வேண்டாம் என்பதை அருள்மொழிநங்கைக்கு மறைமுகமாகச் சொல்கிறான் இராஜேந்திரன்.

“அரசு அலுவல்கள் அழைக்கும் பொழுது நான் ஏன் தந்தையே உங்களைத் தடை சொல்லப் போகிறேன்!” என்ற அருள்மொழிநங்கை, “இராஜனும் உங்களுடன் வரப் போகிறானா?” என்று கேட்கிறாள்.

“இல்லை அக்கா, நான் நாளை சிவாச்சாரியாருடன் தஞ்சைக்குச் செல்கிறேன். நான் தந்தையை வழியனுப்பிவிட்டு இன்றிரவை உன் மாளிகையிலேயே கழிக்க முடிவு செய்திருக்கிறேன்.” என்று தன் திட்டத்தைச் சொல்கிறான் இராஜாதிராஜன். தந்தையும், தம்பியும் ஏதோ அரச அலுவல்களைப் பற்றி உரையாடத்தான் சிறிது தூரம் உடன் செல்கிறார்கள் என்று அறிந்து கொண்ட அருள்மொழிநங்கை அவனையும் தடுக்கவில்லை.

குளிர்ந்த மோரை அருந்திவிட்டு இராஜேந்திரன் இராஜாதிராஜனுடனும் வீரனுடனும் விடை பெற்றுக் கொள்கிறான். சிவாச்சாரியனை உணவுண்ண அழைக்கிறாள் அருள்மொழிநங்கை. அவளுடன் அமர்ந்து உணவு கொள்ள ஆரம்பிக்கிறான் சிவாச்சாரி.

“பாட்டனார் உடல்நலம் எப்படி இருக்கிறது?” என்று விசாரிக்கிறாள் அருள்மொழிநங்கை.

அதை நினைத்தால்தான் எனக்கும் கவலையாக இருக்கிறது, நங்கை!” என்ற சிவாச்சாரி, “அவர் நாளுக்கு நாள் தளர்ச்சி அடைந்து வருகிறார். அது பாண்யனுடன் நடத்திய வாட்போரின் விளைவு என்றுகூட நான் சொல்ல மாட்டேன். அவர் மனதை ஏதோ ஒன்று அறித்து வருகிறது. அவர் நன்கு நலம் பெற்று எழுந்து வரவேண்டும் என்று நான் தினமும் தில்லை நடராஜரை வேண்டிக்கொண்டுதான் இருக்கிறேன்.” என்று தன் மனக் கவலையைத் தெரிவிக்கிறான்.


“தாங்கள் நீலமலைக்கு நரேந்திரனுடன் செல்ல இருப்பதாகத் தந்தையார் கூறினாரே! அந்த மலையின் மீது ஏறிச் சென்றால் குளிராக இருக்கும் என்று சொல்கிறார்களே? நீலமலை எங்கு இருக்கிறது?  அது மிகவும் உயரமான மலையா? நீங்கள் முன்பு அங்கு சென்றதுண்டா?” என்று வினவுகிறாள் அருள்மொழிநங்கை.

“நீலமலை கொங்கு மண்டலத்திற்கு வடக்கே இருக்கிறது. தொலைவிலிருந்து பார்க்கும் பொழுது கருநீல நிறமாகத் தெரிவதால் அதை நீலமலை என்று அழைக்கிறார்கள். தென்னாட்டிலேயே அதைத்தான் மிகவும் உயரமான மலை என்று கூறுகிறார்கள். நானும் அதைப் பார்த்திருக்கிறேன். அதன் மீது ஏறியதில்லை. மலையின் மேல் ஊர்கள் உள்ளதாம். உதகை என்னும் பேரூரில் இளஞ்சேரன் ஆட்சி செய்து வருகிறான். அவன் திரை செலுத்தாமல் நாள் கடத்தி வருகிறான். அதை நினைவு படுத்தவும், வடமொழியை விடுத்து, தமிழில் அரசுப் பட்டயங்களை எழுதவும், பேச்சு மொழியாகக் கையாலும்படியுமான கோப்பரசேகரியாரின் ஆணையைத் தெரிவிக்கவும் நான் செல்கிறேன்.” என்று விளக்குகிறான்.“அதற்கு நரேந்திரன் எதற்கு உங்களுடன்...” என்று இழுத்த அருள்மொழிநங்கைக்கு இராஜராஜரின் விளக்கத்தையே கொடுக்கிறான் சிவாச்சாரி.

“சில திங்களுக்கு முன்னர் நரேந்திரனைப் பற்றிக் கவலை தெரிவித்தீர்களே, இப்பொழுது அவன் உடன் வருவதால் அவனை மாற்ற உங்களுக்கு வாய்ப்பு வந்திருக்கிறது.” என்று மகிழ்கிறாள் அருள்மொழிநங்கை.

“தற்பொழுதெல்லாம் ஒரு எதிரியைப் பார்ப்பதைப் போலத்தான் என்னைப் பார்க்கிறான். மேலும், என்னுடன் பேச நேரிட்டால், ஓரிரு வார்த்தைகளுடன் முடித்துக் கொள்கிறான். என் கண்களை நோக்கும் போது அவனது விழிகளில் ஒருவித அச்சம் தாண்டவமாடுவதையும் கவனித்து வருகிறேன். ஏதோ, நீ சொல்வதுபடி அவன் மனம் மாற்றம் அடைந்தால், அதுவும் எனக்கு மகிழ்ச்சியே!” அவனது பதிலில் ஒரு உற்சாகம் இல்லாமல் இருப்பதைக் கவனிக்கிறாள் அருள்மொழிநங்கை.

“ஐயனே! வேறு ஏதோ ஒன்று தங்கள் மனதை உறுத்துகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. அது நரேந்திரனைப் பற்றி இல்லை என்றும் ஊகிக்க இயலுகிறது. தங்களது மனப் பளுவை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்களேன்! உங்கள் மனச் சிக்கலைத் தீர்க்க என்னால் இயலாவிட்டாலும், பளுவைச் சிறிது இறக்கி வைப்பது உங்களுக்கு நிம்மதியைத் தருமே?” என்று கேட்கிறாள் அருள்மொழிநங்கை.

“நங்கை. குறிப்பறிதல் உன்னிடம் நிறையவே இருப்பதைக் காண்கிறேன். என் மனதில் ஓடும் எண்ணங்களை அறிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் என் உள்ளப் பளுவை இலேசாக்கிக் கொள்ளும்படி குறிப்பறிந்து கூறும் உன்னை எனக்கு வாழ்க்கைத் துணையாக அளித்த கோப்பரகேசரியாருக்கும், சக்கரவர்த்தி அவர்களுக்கும் நான் மிகக் கடமைப்பட்டுள்ளேன்.

“ஆம், என் மனதில் மிகப் பெரிய பளு ஒன்று இருக்கிறது. அது சக்கரவர்த்தி அவர்களைப் பற்றியதுதான் அது.” என்று நன்றி கலந்த குரலில் பேசினாலும், குரலில் இருக்கும் இலேசான நடுக்கம், அவனது கவலையை அருள்மொழிநங்கைக்கு உணர்த்துகிறது.

“சக்கரவர்த்தி அவர்களுக்கு ஒருவிதமான அச்சம் இருந்து வருவதை நான் உணர்கிறேன். தனது தமிழ்த் திருப்பணி எந்த அளவுக்கு நிறைவேறுமா - தான் ஊன்றிவைத்த அந்தக் கன்று தன் காலத்திலேயே நன்றாக வேர் பிடித்துக் கொள்ளுமா என்று அவர் உள்ளூர ஐயறுவது போல சிலசமயம் அவரது பேச்சிலிருந்து என்னால் மறைமுகமாக ஊகிக்க இயலுகிறது. அதோடு மட்டுமல்லாது எதையோ பறிகொடுத்தவர் மாதிரி அவர் தென்படுகிறார். அதுதான் என் உள்ளத்தைக் கசக்கிப் பிழிகிறது. நங்கை!” சிவாச்சாரியின் குரலில் இருந்த கரகரப்பு அருள்மொழிநங்கைக்கும் ஒருவித அச்சத்தைத் தருகிறது.

“தாங்கள் என்ன சொல்கிறீர்கள், ஐயனே? பாட்டனாரின் திருப்பணியைப் பற்றி இரண்டாம் முறையாகக் கலக்கமுற்றுப் பேசுகிறீர்களே! எனக்குத் தெரியாத உண்மை ஏதாவது இருக்கிறதா? சில சமயம், வெளியிடப்படாத உண்மைகள் மிகுந்த மனப் பளுவைத் தரும். அரச இரகசியங்கள் என்றால் என்னிடம் சொல்ல வேண்டாம். மற்றபடி - பாட்டனாரின் உடல், உள்ள நலத்தில் எனக்கு மிகுந்த அக்கரை உண்டு, ஐயனே! அவர் மடியில் அமர்ந்து எத்தனை வீரக் கதைகளைக் கேட்டிருக்கிறேன்! எதிரிகளுக்குப் புலியாக விளங்கிய அவர், அருள்மொழி என்ற பெயருக்கு ஏற்ப என்னிடம் கனிவான மொழியைத்தான் பேசக் கேட்டிருக்கிறேன். எங்கள் இருவருக்கும் இடையே உள்ள பாசப் பிணைப்பு அனைவரும் அறிந்ததே. அதனால்தான் தங்களை மணாளனாக மனதில் வரித்ததை அவரிடம்தான் முதலில் வெளியிட்டேன். அவர் அதற்குத் தடையேதும் சொல்லாமல் என் விருப்பத்தைத் தந்தையிடமும், என் அன்னையிடமும் பேசி, அவர்களைச் சம்மதிக்க வைத்தார். அப்படிப்பட்ட அவர் துவங்கிய திருப்பணியை நிறைவேற்றத் தாங்கள் என்றும் உழைக்க வேண்டும். தகுந்த ஒருவரிடம் திருப்பணியை விட்டுச் செல்கிறோம் என்று அவர் மன நிம்மதி அடைய வேண்டும். இதற்கு மேல் என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை, ஐயனே!” அருள்மொழிநங்கையின் குரலில் உருக்கம் இருக்கிறது.

“வெளியே சொல்ல முடியாத உண்மைகள் சில இருக்கின்றன நங்கை! அவற்றை சக்கரவர்த்தி அவர்களே கேட்டால்தான் என்னால் சொல்ல இயலும். அப்படி உண்மைகள் உள்ளன என்பது அவருக்கும்கூடத் தெரியாது. என் நாவை நான் கொடுத்த உறுதிமொழி கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. சக்கரவர்த்தி அவர்கள் அதைப் பற்றி என்னிடம் கேட்க மாட்டாரா, அதை அவரிடம் கொட்டிவிட மாட்டேனா என்று நான் நாளும் தவிக்கிறேன். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அந்த உண்மைகளை என் மனதில் வேலி போட்டு வைத்துப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன். அது வெளிவருமா, அல்லது என்னுடன் அவை எரிந்துபோமா என்றுதான் ஒவ்வொரு நாளும் உருகிக் கொண்டிருக்கிறேன்.” அவனது தவிப்பு அருள்மொழிநங்கைக்கு நன்றாகவே புரிகிறது.
“ஐயனே! அந்த உண்மைகள் வெளிவரட்டும், பாட்டனாருக்கும், தங்களுக்கும் நிம்மதி கிட்டட்டும் என்று ஆலம் உண்ட பெருவுடையாரை நான் வேண்டிக்கொள்கிறேன். என்னிடம் இவ்வளவு சொன்னதில் தங்களுக்கு ஓரளவு மனப்பளு குறைந்தால் அது என் முயற்சிக்கான வெற்றி என்று கொள்கிறேன்.” என்று ஆறுதலளிக்கிறாள் அருள்மொழிநங்கை.

அன்றே அந்த உண்மைகள் இராஜராஜர் முன்பு வைக்கப்படும் என்று அப்பொழுது அவர்களால் அறிய இயலாது போகிறது.
* * *
இராஜராஜர் மஞ்சத்தில் சாய்ந்திருக்கிறார். மெதுவாகக் கண்களைத் திறந்தவர் சிவாச்சாரி நின்று கொண்டிருப்பதைப் பார்த்து வியப்படைகிறார். பொதுவாகவே மெல்லிய ஒலி கேட்டால்கூட விழிப்படைந்துவிடும் தான், சிவாச்சாரி வந்ததுகூட அறியாமல் கண்ணயர்ந்திருக்கிறோமே, இதுதான் முதுமை வந்துவிட்டது என்பதின் அறிகுறியா என்று மனதில் நினைத்துக் கொள்கிறார்.

“சிவாச்சாரியாரே, எவ்வளவு போதாகிறது நீர் இங்கு வந்து?” கேள்வி பிறக்கிறது.

“கிட்டத்தட்ட அரை நாழிகை (பன்னிரண்டு நிமிடங்கள்) ஆகியிருக்கலாம், சக்கரவர்த்தி அவர்களே!” பணிவாகப் பதிலளிக்கிறான் சிவாச்சாரி.
“என்னை எழுப்பாமல் அவ்வளவு நேரமாக நின்று கொண்டா இருந்தீர்?”

“அவசியமாக இருந்தால் ஒழிய மற்றபடித் தங்களை எழுப்புவது தவறானதல்லவா, சக்கரவர்த்தி அவர்களே!”

“சிவாச்சாரியாரே, நீர் என் பேத்தியின் கணவர். அதனால் நானும் உமக்குப் பாட்டனார் உறவாகிப் போயிருக்கிறேன். இன்னமும் அரச மரியாதை கொடுக்கிறீரே!” இலேசான நகைப்புடன் விசாரிக்கிறார் இராஜராஜர். சிவாச்சாரி அமைதி காக்கிறான்.

“அமரும், உம்மிடம் மனம் விட்டுப் பேச வேண்டியதிருக்கிறது. அதனால்தான் அக்கையார் கோவிலுக்குச் செல்லும் சமயம் உம்மை வரச் சொன்னேன். நீர் அதில் அரை நாழிகையை மரபுச் சீர்முறையைக் காட்டி வீணடித்து விட்டீரே! அது போகட்டும். அருகே அமர்ந்து கொள்ளும்.” என்ற தன் மஞ்சத்திற்கு அருகிலுள்ள ஆசனத்தைச் சுட்டிக் காட்டுகிறார் இராஜராஜர். தயக்கத்துடன் அமர்ந்து கொள்கிறான் சிவாச்சாரி.

மெல்லத் தொண்டைச் செருமிச் சரிசெய்து கொண்டு மெதுவாகத் துவங்குகிறார் இராஜராஜர். “சிவாச்சாரியாரே, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக விடை காணாது ஒரு நிகழ்ச்சி என் மனதை அரித்துக் கொண்டிருக்கிறது. உமக்கு அதற்கு விடை தெரிந்திருக்கலாம் என்று என் உள்மனம் இப்பொழுது அடிக்கடி கூறுகிறது.”பீடிகையுடன் துவங்குகிறார் இராஜராஜர்.

“உமக்கு நினைவிருக்கும் என்றே நினைக்கிறேன். தமிழ்த் திருப்பணியைப் பற்றி உற்சாகமாக உரையாடி வந்த கருவூரார், சற்றும் எதிர்பார்க்காத நிலையில், திடுமென்று திருக்கயிலைக்குச் செல்வதாகப் புறப்பட்டு விட்டார். சாதாரணமாக அப்படிச் செல்வதானால் என்னிடம் அதுபற்றி முன்கூட்டியே பேசி, செல்லும் நாளையும் உடன்பாடு செய்திருந்திருப்பார். அப்படிச் செய்யாமல் திடுமென்று அவர் புறப்பட்டுச் சென்றது ஏதோ ஒரு வலுவான காரணத்தால்தான் என்று இப்பொழுது எனக்குத் தோன்றுகிறது.

“தமிழ்த் திருப்பணிக்குத் திட்டம் தீட்டித் தந்த கருவூரார், அதற்கு எந்தவிதமான இடையூறுகள் வரக்கூடும் என்று சிந்திக்காமல் இருந்திருக்க மாட்டார். எனவே, அந்த இடையூறுகளை எதிர்நோக்கி, அவை வரும் நேரத்தில், அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று அறிவுரையும் தந்திருப்பார். கற்களே இல்லாத தஞ்சையில் பெருவுடையாருக்கு கற்றளி கட்ட கற்களை எப்படிக் கொணர்வது என்பதோடு மட்டுமல்லாமல், கோபுர உச்சியிலிருக்கும் பெருங்கல்லை மேலே கொண்டு செல்லவும் வழி வகுத்துக் கொடுத்தவர் அவர். அப்படியிருக்கையில் ஒரு மாபெரும் திருப்பணிக்குத் திட்டத்தைத் தீட்டிக் கொடுத்தவுடன், கையைத் தட்டிக் கொண்டு எழுந்து சென்றிருக்க மாட்டார்.

“அப்படிச் சென்றதற்கு ஏதோ ஒரு காரணம் இருந்திருக்கிறது. அச்சமயம் அவருக்கு வலக்கையாக விளங்கிய உமக்கு அவரது திடீர் முடிவின் காரணம் தெரியாமல் இருந்திருக்காது. அதே மாதிரி, திருப்பணிக்கு என்னென்ன இடையூறுகள் வரக்கூடும் என்பது பற்றியும் உம்மிடம் உரையாடாமல் இருந்திருக்க மாட்டார். எனவே, உமக்கு அந்த உண்மைகள் தெரிந்திருந்தால், அதை எமக்குத் தெரிவிக்குமாறு சோழப் பேரரசின் சக்கரவர்த்தியாக அல்ல - திருப்பணி நிறைவேற வேண்டுமே என்று துடிக்கும் நான் - உமது மனைவியின் பாட்டனாக - உம்மைக் கேட்கிறேன். முன்னறிவிப்பின்றி என் ஆசான் என்னை விட்டு நீங்கியதின் வலியைச் சுமந்து கொண்டிருக்கும் நான், அதன் காரணம் தெரியாது இந்த உலகை விட்டு நீங்க விரும்பவில்லை. அது எதுவாக இருந்தாலும், அதை நீர் எமக்குச் சொல்லவேண்டுமாறு உம்மை மன்றாடுகிறேன்!”

தழுதழுத்த இராஜராஜரின் குரலைக் கேட்டுப் பதறிவிடுகிறான் சிவாச்சாரி. பழையாறை மாளிகையில் அருள்மொழிநங்கையிடம் எந்த உண்மையை இராஜராஜர் கேட்பாரா என்று காத்திருப்பதாகச் சொன்னானோ, அந்த உண்மையை இரண்டு நாழிகைப் பொழுதுக்குள் அவரே கேட்பது அவனுக்கு நிம்மதியைத் தருகிறது. இருப்பினும் அந்தக் கசப்பான உண்மையை எப்படிச் சொல்வது?

“தயங்காதீர், சிவாச்சாரியாரே! நான் அனுமானித்தது சரியென்று உமது முகமே தெளிவாகப் பறை சாற்றுகிறது. உண்மைகளை உம் மனதிலிருந்து வெளியேற்றுவது உமது மனதையும் இலேசாக்கும் அல்லவா! அவைகளை உடனே சொல்லும்!” இப்பொழுது இராஜராஜரின் குரலில் சிறிது அதிகாரத் தொனியும் கலந்திருப்பதை சிவாச்சாரியனால் உணர முடிகிறது. இராஜராஜரை நோக்குகிறான் அவன். அவன் கண்களில் நீர் கோத்து நிற்கிறது.

“உமது கண்களைப் பார்த்தால் நீர் சொல்லப் போவது என் மனதிற்குத் துன்பம் விளைவிக்கும் என்று நீர் கருதுகிறீர் போல இருக்கிறது. எதையும் மறைக்காமல் சொல்லும். சில சமயம், உடலைத் துன்புறுத்தும் நோவைக் கசப்பான மருந்தை உண்டு நீக்குவதே சிறந்ததாகும் என்று நானும் அறிவேன்.” அவனை வற்புறுத்துகிறார் இராஜராஜர்.[வளரும்]
------------------------------------------------------------------------------------------------------------------------
51இவன்தான் பிற்காலத்தில் இராஜாதிராஜனுக்கும், இராஜேந்திரதேவனுக்கும் பிறகு வீரராஜேந்திரனாக சோழப் பேரரசை ஆட்சி செய்தான்.

No comments:

Post a Comment