Wednesday 6 August 2014

தமிழ் இனி மெல்ல..[29] “நிலவுமொழி, இவனுக்கு நீ தமிழ் பேசக் கற்றுக் கொடு"

தமிழ் இனி மெல்ல..[28] சென்ற பதிவின் இறுதியில் 

இதற்கிடையில் பாண்டிய ஒற்றன் ஒருவன் திருமாறனை அணுகி ஏதோ அவன் காதில் சொல்கிறான். உடனே திருமாறனின் முகம் மாறுகிறது. குனிந்து அமரபுஜங்கனின் காதுகளில் ஒற்றன் கூறிய செய்தியை உரைக்கிறான். அமரபுஜங்கனின் முகம் மாறுகிறது.

“அமைதி, அமைதி, அமைதி!” என்று கையை உயர்த்துகிறான். அவனது முகமாறுதலைக் கண்ட அனைவரும் மகிழ்ச்சிக் கூச்சலை நிறுத்துகின்றனர்.

“இராஜராஜனின் படைகள் தொண்டித் துறைமுகத்தில் நாவாய்களில் வந்து இறங்கி இருக்கிறார்களாம். கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர்கள் இருக்குமாம். நமது ஒற்று மூலம் செய்தி வந்திருக்கிறது.” என்று கோபத்துடன் கூச்சலிடுகிறான் அமரபுஜங்கன்.

“யார் தலைமையில் அப்படை வந்திருக்கிறது?” என்று கேட்கிறான் சேரன் மார்த்தாண்டன்.

“தெரியவில்லை. அவர்கள் தொண்டியில் இறங்கியவுடனேயே, துறைமுகத்துக்குப் போக்குவரத்தை நிறுத்தி விட்டார்களாம். நமது ஒற்றன் யார் கண்ணிலும் படாமல் மறைந்து மதுரைக்கு வந்திருக்கிறான். சோழப்படை தொண்டியில்தான் தண்டூன்றி இருக்கிறதாம்.”

“அவர்கள் மேற்கொண்டு என்ன செய்யப் போகிறார்கள்? நமது படைக்குவிப்பைப் பற்றி அவர்களுக்குத் தெரியுமா? மொத்தம் பதினையாயிரம் பேர்களே இராஜராஜனிடம் இருக்கும் பொழுது பத்தாயிரம் பேரை எதற்காகத் தொண்டிக்கு அனுப்பியிருக்கிறான்?” என்ற கேள்வி பிறக்கிறது.

சிறிது நேரம் யோசித்த முதலமைச்சர் கடகடவென்று சிரிக்கிறார்.அதைக் கேட்ட அனைவரின் முகத்திலும் ஈயாடவில்லை.

“இராஜராஜனுக்கு தன்னம்பிக்கை, அதுவும் அசட்டுத் தன்னம்பிக்கை அதிகமாகிவிட்டது, அரசே!”

முதலமைச்சர் தொடருகிறார். “தனது கடற்படைகள் எதையோ தொண்டிக்குக் கொண்டுவரப் போவதை எதிர்பார்த்து அவன் இப்படைகளை அனுப்பியிருக்கிறான். அவனிடம் குதிரைகள் குறைந்திருக்கின்றனவோ என்னவோ, அதனால் அராபியர்களின் கப்பல்களில் குதிரைகள் வருகின்றனவோ என்னவோ?” அவர் குரலில் விஷமம் தொனிக்கிறது.

“அமைச்சரே! உமக்கு ஏதாவது தெரியுமா?” என்று வினவுகிறான் அமரபுஜங்கன்.

“அரசே! நான்தான் பாண்டியர்களுக்காக பத்தாயிரம் குதிரைகள் அராபியக் கப்பல்கள் மூலம் தொண்டிக்கு வந்துகொண்டிருப்பதாகச் சோழர்களுக்குத் தவறான செய்தியை அனுப்பினேன். அதை உண்மையென நினைத்து அக்குதிரைகளைக் கைப்பற்றவே இராஜராஜன் தனது வீரர்களை அனுப்பியிருக்கிறான் போலும்!” என்று தனது திட்டம் பயனளித்திருப்பதைத் தெரிவிக்கிறார் முதலமைச்சர்.

“அமைச்சரே! நீர் ராஜதந்திரத்தில் சாணக்கியனையும் மிஞ்சிவிட்டீர்!” என்று பாராட்டிய அமரபுஜங்கன், “இனி நமக்குத் தடையென்ன இருக்கிறது? தஞ்சையை நோக்கிப் படைகளை நடத்துவோம். அதிரடித் தாக்குதல் நடத்தினால்தான் தஞ்சை விழும்!”  என்று வீராவேசமாக முழங்குகிறான்.

“அப்படியே! அப்படியே!!” என்று அனைவரும் ஆர்ப்பரிக்கிறார்கள்.

தமிழ் இனி மெல்ல..[29] தொடர்கிறது 

அரிசோனா மகாதேவன் 


 குந்தவியின் அந்தப்புரம், வெங்கி, வேங்கைநாடு
        பரிதாபி, ஆனி 3 - பொது ஆண்டு 1012
நிலவுமொழியை வைத்த கண் வாங்காமல் மறைந்திருந்து பார்க்கிறான் இராஜராஜ நரேந்திரன். கருமைக்கும் இத்தனை கவர்ச்சி உண்டா என்று தனக்குத்தானே கேட்டுக் கொள்கிறான்.

அவனது தாய் குந்தவியின் பணிப்பெண்கள் எட்டு பேர்களுக்கு நிலவுமொழி தமிழ் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். அவள் அரண்மனைக்கு வந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. அதற்குள்ளாகவே குந்தவியின் பணிப்பெண்கள் ஐவருக்குத் தமிழ் பேச் கற்றுக் கொடுத்து விட்டாள். தெலுங்கு தெரியாமலே எப்படி அவளால் தமிழ் கற்றுக் கொடுக்கமுடிகிறது என்பது அவனுக்கு வியப்பாகவே இருக்கிறது. அவள் தமிழ் கற்றுக் கொடுக்கும் முறையும் புதுவிதமாகத்தான் இருக்கிறது. காலையானால் திருப்பள்ளியெழுச்சி, மதியமானால் சிவபுராணம், மாலையானால் தேவாரம் என்று பணிப்பெண்கள் தமிழில் ஓதுவது என்று நடப்பதால், அவள் வந்ததிலிருந்து குந்தவி கொஞ்சம் மகிழ்ச்சியாகவே இருக்கிறாள் என்பதும் அவனுக்குப் புரிகிறது.

அவளுடன் பேசவேண்டும் என்று சில சமயம் அவனுக்குத் தோன்றும். ஆனாலும் ஏதோ ஒன்று அவனைத் தடுத்து வருகிறது. அவன் வந்தாலே அவள் எழுந்து வணங்கிவிட்டு அவன் கண்ணைவிட்டு மறைந்து போய்விடுகிறாள். இருந்தாலும் எங்கோ மறைந்து இருந்து தன்னைக் கவனித்துக் கொண்டு இருக்கிறாள் என்று அவனுக்கு ஏதோ உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருக்கிறது.

அவளும், தனது மாமனான இராஜேந்திரனின் மகளான அம்மங்கையும் இணைபிரியாத தோழியர்களாக இருக்கிறார்கள் என்றும் தெரிகிறது. அம்மங்கை திரும்பிச் செல்லும்பொழுது அவளும் திரும்பிச் சென்றுவிடுவாளோ என்று நினைத்தால் அவனுக்கு ஏதோ ஒன்றை இழப்பது போலத் தோன்றும். அவள்மீது தனக்கு ஏன் இந்த ஈர்ப்பு என்று தன்னையே கேட்டுக் கொள்கிறாள்.

அவள்மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதுபோல அவளுக்கும் தன்மீது ஈர்ப்பு இருக்குமா என்று அறிந்துகொள்ள அவனுக்கு மிகவும் ஆவலாக இருக்கிறது. ஆனால் அவள் இளவரசி அல்ல, பணிப்பெண்தான், அவள்மீது இப்படி ஒரு ஆசை தனக்கு இருக்கக்கூடாது என்றும் தோன்றுகிறது. இது பருவக் கோளாறா அல்லது, உண்மையான ஈர்ப்பா என்று எப்படித் தெரிந்து கொள்வது?

இது தந்தையிடமோ, தாயிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளக்கூடிய ஒன்றா? தம்பி விஜயாதித்தனிடம் அவனுக்கு அதிகப் பழக்கம் இல்லை. அவன் வேறு அரண்மனையில்தான் இருக்கிறான். யாரிடம் கேட்பது?

அவனது தோளில் பலமாக ஒரு தட்டு விழுகிறது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்கிறான் நரேந்திரன். அவனது மாமன் இராஜேந்திரன்தான் அது. அட்டகாசமாகச் சிரித்தபடி, “நரேந்திரா! என்ன இது, ஒற்றன் மாதிரி மறைந்து என் தங்கையின் அந்தப்புரத்தை வேவு பார்க்கிறாய்!” என்று அவனை நகையாடுகிறான் இராஜேந்திரன்.

“லேதன்டி மாமாகாரு,” என்று ஆரம்பித்த நரேந்திரன் நாக்கைக் கடித்துக் கொள்கிறான், “ஒன்னும் லேது, சும்மாத்தான், அம்மாவைப் பாக்க ஒஸ்தேன்.” என்றும் தெலுங்கு கலந்த தமிழில் பதில் சொல்கிறான். தன்னுடைய தமிழ் பேசும் முறை இராஜேந்திரனுக்குப் பிடிக்கவில்லை என்பதை மாமனின் முகத்தைப் பார்த்தே அறிந்து கொள்கிறான். மாமனின் தயவு கடைசிவரை தங்களுக்குத் தேவை என்பதை உணர்ந்தவன்தான் அவன்.

“நரேந்திரா! நீ தெலுங்கு பேசத் தெரிந்து கொள்ள வேண்டியதுதான்! ஏனென்றால் நீ தெலுங்கு பேசும் வேங்கை நாட்டை ஆளப் போகிறாய்! ஆனால் உன் தாயின் மொழி தமிழ். அதையும் நீ நன்கு கற்கவேண்டும்! அப்பொழுதுதான் சோழநாடு உன்னை ஏற்றுக் கொள்ளும். அதை மறந்து விடாதே! நீ சாளுக்கியன் மட்டுமல்ல, சோழனும் கூட!” என்றவன், “ ‘மாமனே, எனக்கு அறிவுரை கூறும் நீ ஏன் தெலுங்கைக் கற்றுக் கொள்ளவில்லை?’  என்று கேட்க நினைத்தாலும் நினைப்பாய்! நான் சோழச் சக்கரவர்த்தியின் மகன், நாளை சோழ சாம்ராஜ்யத்தை ஆளப் போகிறவன். நான் பேசும் மொழியைத்தான் மற்றவர்கள் கற்றுக் கொள்ளவேண்டும்! ஹ, ஹ, ஹ!” என்று உரக்கச் சிரிக்கிறான். 

நரேந்திரனுக்கு அது புலி உறுமுவதுபோல இருந்தது. மாமன் சொல்வது பற்றித் தந்தை விமலாதித்தனிடம் விவரமாகக் கேட்கவேண்டும் என்று நினைத்துக் கொள்கிறான்.

நரேந்திரனின் தோள்மேல் கையைப் போட்டுத் தரதரவென்று இழுத்துக் கொண்டு உள்ளே நுழைகிறான் இராஜேந்திரன். அவர்கள் இருவரையும் கண்டதும், நிலவுமொழியிடம் தமிழ் பயின்று கொண்டிருந்த பணிப்பெண்கள் எழுந்து இருவரையும் வணங்கிவிட்டு, அவர்கள் வந்ததைக் குந்தவிக்குச் சொல்ல விழைகிறார்கள்.

“பெண்ணே நிலவுமொழி, கொஞ்சம் நில்லம்மா!” என்று நிறுத்துகிறான் இராஜேந்திரன்.

தலையைக் குனிந்து கொண்டு அவனை வணங்கி நிற்கிறாள் நிலவுமொழி. இராஜேந்திரனைக் கண்டால் இன்னமும் அவளுக்குக் கொஞ்சம் அச்சமாகத்தான் இருக்கிறது. அவனது பெரிய மீசையும், கணீர் என்ற குரலும், உருட்டி விழிக்கும் பெரிய கரிய விழிகளும், மன்னர்களையே நடுங்க வைக்கும்பொழுது அவள் அச்சமடைவதில் வியப்பில்லைதான்!

“உத்தரவு அரசே! ஆணையிடுங்கள்!”

“என்னம்மா இது? எப்பொழுது பார்த்தாலும் என்னை சிம்மாசனத்தில் அமர்த்தி வைக்கிறாய்! நான் உன் தகப்பன் மாதிரி என்று எத்தனை தடவை சொல்வது? மங்கை என்னிடம் நடந்துகொள்வதுபோல நடந்துகொள், புரிகிறதா?” இராஜேந்திரன் கனிவாக அவளிடம் சொல்வதுகூட ஆணையிடுவது போலத்தான் அவளுக்குத் தோன்றுகிறது.

“அப்படியே அரசே!” குரல் நடுங்குகிறது நிலவுமொழிக்கு.
அவளருகில் சென்று அன்புடன் அவள் தலையை வருடுகிறான் இராஜேந்திரன். “நீ இவனுக்கும் தமிழ் பேசக் கற்றுக் கொடுக்கவேண்டும்.” என்று நரேந்திரனைச் சுட்டிக்காட்டுகிறான். 

நரேந்திரனுக்கு ஒருகணம் இதயம் நின்றுவிட்டுத் துடிக்கிறது. அவளுடன் பேசவேண்டும் என்று விரும்பியவனுக்கு இப்படி ஒரு வாய்ப்பை, தன் மாமனே வழங்குகிறானா? அவனால் நம்பவே முடியவில்லை.

“இந்தப் பேதைப் பெண்ணிடம் நகைச்சுவை செய்கிறீர்களா, அரசே? இளவரசருக்கு நான் ஆசிரியை ஆகமுடியுமா! எனக்கு என்ன தகுதி இருக்கிறது?” மெல்லிய குரலில் கேட்கிறாள் நிலவுமொழி.

“குந்தவி தேவி உன்னுடைய தகுதியை மெச்சாத நாளே கிடையாது. நான்கே திங்கள்களில் ஐந்து பணிப்பெண்களுக்குத் தமிழ் நன்றாகப் பேசக் கற்றுக் கொடுத்து விட்டாயாமே! இதை விட வேறு என்ன தகுதி வேண்டும்! ஆனால் இவனைத் தமிழ் பேச வைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. உன் திறமைக்குச் சவாலாக அமைவான்!” சிரித்துக் கொண்டே நடக்கிறான் இராஜேந்திரன்.

இருவரும் அவனைப் பின் தொடர்கிறார்கள். 

அவன் உண்மையிலேயே தனக்கு ஆணையிடுகிறானா, அல்லது கிண்டல் செய்கிறானா என்று புரியாமல் குழம்புகிறாள் நிலவுமொழி. அப்படியே அவன் ஆணையே இட்டாலும் அதை எப்படித் தன்னால் நிறைவேற்ற இயலும்? வேங்கை நாட்டு இளவரசன் தன்னிடம் அமர்ந்து பாடம் கற்றுக்கொள்வானா ?

அண்ணனை அன்புடன் வரவேற்கிறாள் குந்தவி. 

நான்கு மாதங்கள்தான் எவ்வளவு விரைவாகக் கழிந்துவிட்டன! 

விமலாதித்தன் அரியணை ஏறியதும் ஒரு மாதம் கழித்து கப்பம் வாங்கி வருவதற்காகச் சென்ற இராஜேந்திரன் கிட்டத்தட்ட ஆறு வாரங்கள் கழித்துதான் திரும்பி வந்தான். இப்பொழுதும் ஒரு திங்கள் கடலில் எங்கோ சென்றுவிட்டுத்தான் வருகிறான். சில சமயம் விவரமாகச் சொல்வான், சில சமயம் அரசு விஷயம் உனக்கு எதற்கு என்று தட்டிக் கழித்து விடுவான்.
விமலாதித்தனிடம்கூட சோழ நாட்டு அரசு விஷயங்களை அவ்வளவாகப் பேசமாட்டான் என்பது குந்தவிக்கு நன்றாகவே தெரியும். அவனது பல நடவடிக்கைகள் புரியாத புதிர்களாகத்தான் அவனுக்கு இருந்து வருகின்றன. இருந்தாலும் ஏதோ முக்கியமான அலுவலுக்காகத்தான் இராஜேந்திரன் இத்தனை நாட்கள் வேங்கை நாட்டில் இருந்து வருகிறான் என்று மட்டும் அவனுக்கு நன்றாகவே புரிகிறது.

பணிப் பெண்கள், பழச்சாறும், தின்பண்டங்களும் கொண்டு வந்து வைத்துவிட்டு, அருகில் நின்று சாமரம் வீசுகிறார்கள். தந்தை வந்திருக்கிறான் என்று தெரிந்தவுடன் நந்தவனத்தில் பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்த அம்மங்கை ஓடிவருகிறாள்.

“அண்ணா, அண்ணியாரை ஏன் அழைத்து வரவில்லை?” என்று செல்லமாகக் கடிந்து கொள்கிறாள் குந்தவி.

“அம்மங்கைகைய அழைத்துச் செல்ல வேண்டும் என்றுதான் நானே இங்கு வந்திருக்கிறேன் குந்தவி. தஞ்சைக்குத் திரும்ப ஆயத்தங்கள் செய்ய வேண்டும். தந்தையாரைத் தனியாக விட்டு வந்திருக்கிறேன். பாண்டியர்களும், சேரர்களும் ஏதாவது தொல்லை தராமல் இருக்க வேண்டும்!” என்று இலேசான மனக் கவலையுடன் பதில் சொல்கிறான் இராஜேந்திரன். தங்கையிடம் சில சமயம் தன் மனக் கவலைகளைப் பகிர்ந்து கொள்வான்.

“அண்ணா, தந்தையார் புலிக்கு நிகரானவர். அவரைப் பற்றி நீ ஏன் கவலைப் படுகிறாய்?” என்று வினவுகிறாள் குந்தவி.

“அது எனக்கு நன்றாகத் தெரியும் குந்தவி. இப்பொழுது அவர் புலியாக இல்லாமல் கிளியாக மாறிக்கொண்டிருக்கிறார்.”

“கிளியா? புரியும்படி சொல் அண்ணா.” என்று ஆர்வத்துடன் கேட்கிறாள் குந்தவி.

“போர்ப் பணியை விட்டுவிட்டு தமிழ்த் திருப்பணி என்று ஒன்று ஆரம்பித்திருக்கிறார். சோழ சாம்ராஜ்யம் மட்டுமல்லாது இப் பாரதம் முழுவதும் தமிழைப் பரப்ப வேண்டுமாம். அதற்காக திருப்பணி ஆலோசகராக ஒரு சிவாச்சாரியாரை வேறு நியமித்திருக்கிறார். கருவூர்த் தேவர் அதற்காக ஒரு பெரிய திட்டமே தீட்டிக் கொடுத்திருக்கிறார். அதனால்தான் இந்த நிலவுமொழியை தமிழ் பரப்ப சிவாச்சாரியார் இங்கு அனுப்பியிருக்கிறார்.” என்று விவரமாக விளக்குகிறான்.

அதைக் கேட்ட குந்தவியின் முகம் மலர்ந்து கண்களில் நீர்முத்துகள் கோர்க்கின்றன. “அண்ணா, நீ சொல்வது என் காதில் இன்பத் தேனைப் பாய்ச்சுகிறது தெரியுமா? தெலுங்கே தெரியாமல் இருக்கும் நிலவுமொழி, தெலுங்கைத் தவிர வேறு எதுவும் தெரியாத இந்தப் பெண்களுக்கு தமிழ் பேச எப்படிக் கற்றுக்கொடுத்திருக்கிறாள் தெரியுமா! இவளைத் தோந்தெடுத்த சிவாச்சாரியார் ஒரு சிறந்த தமிழ் அறிஞராகத்தான் இருக்கமுடியும். அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். அதுமட்டுமல்ல, இந்தத் தமிழ்த் திருப்பணியை மேற்கண்ட தந்தையாரின் முயற்சி வெற்றி பெற தில்லையில் ஆடும் கூத்தபிரானை ஏத்துகிறேன்! மேலும் சொல் அண்ணா! இந்தப் பெண்ணையே நரேந்திரனுக்கு தமிழ்ப் பேச்சு கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்து விடுவோமா?” 

தொடர்ந்து பேசும் குந்தவியின் உற்சாகத்தைப் பார்த்த இராஜேந்திரன் அசந்து போகிறான்.

“அம்மா, நேனு தமிலு மாட்ட  கத்துக்க ஒஸ்தானு!”  என்று உளறுகிறான் நரேந்திரன். சட்டென்று அவனைக் குந்தவி திரும்பிப் பார்க்கிறாள். இவனுக்கு தமிழ் பேசத் திடுமென்று உற்சாகம் எப்படிப்பிறந்தது?  இராஜேந்திரன் நரேந்திரனைத் திரும்பிப் பார்க்கிறான்.

“நான்தான் இவனைத் தமிழ் பேச கற்றுக் கொள்ளச் சொன்னேன் குந்தவி, அதுவும் இந்தப் பெண்ணிடம் கற்றுக் கொள் என்று சொன்னேன். பாதி விளையாட்டாகவும், பாதி உண்மையாகவும்தான்! அது உடனே இவன் மனதில் பதிந்தது எனக்கு மகிழ்ச்சிதான்.” என்று சிரிக்கிறான் இராஜேந்திரன்.
“இன்று நான் நரி முகத்தில்தான் விழித்திருக்கிறேன் அண்ணா! நல்ல செய்திக்கு மேல் நல்ல சேதியாகச் சொல்லிக் கொண்டே போகிறாய்! நரேந்திரனைப் பெற்றபோது பெற்றபோது பெற்ற மகிழ்ச்சியைவிட, தமிழ் பேசக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன் அவன் என்று இப்பொழுது சொன்ன இந்தச் சொற்கள்தான் எனக்கு பலமடங்கு மகிழ்ச்சியைத் தருகிறது.” குந்தவியின் குரல் கம்முகிறது.

அவள் நரேந்திரன் பக்கம் திரும்பி, “நரேந்திரா! உண்மையிலேயே நீ தமிழ் பேசக் கற்றுக் கொண்டால் நான் மிகவும் பெருமைப் படுவேனடா கண்ணே! உடனே தலைசிறந்த தமிழ் ஆசிரியரை அனுப்பும்படி உனது பாட்டனாருக்கு உடனே ஓலை அனுப்புகிறேனடா!”  என்று பெருமிதம் தொனிக்கும் குரலில் கூறுகிறாள்.

“ஒத்.. வேணாம் அம்மா. ஈ அம்மாயி...” என்று நிலவுமொழியைச் சுட்டிக் காட்டுகிறான். “ஈ அம்மாயி சாலு அம்மா.” என்று அசட்டுச் சிரிப்பு சிரிக்கிறான். “ஈ அம்மாயி சால தமிலு மாட்லாட கத்து செஸுவாரு.” என்று உளறிக் குமுறுகிறான்.

அவனைப் பொருள் செறிந்த பார்வையுடன் பார்க்கிறான் இராஜேந்திரன். “நரேந்திரா. நீ எதை நினைத்து இவள் தமிழ் கற்றுக் கொடுக்கவேண்டும் என்று சொல்கிறாயோ தெரியாது. நீ எப்படியாவது தமிழ் பேசக் கற்றுக் கொண்டால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிதான்.” என்று சிரித்தபடி அவன் முதுகில் ஓங்கித் தட்டிய இராஜேந்திரன், “நிலவுமொழி, இவனுக்கு நீ தமிழ் பேசக் கற்றுக் கொடு. இவனுக்கு தமிழ் பேச மட்டுமே கற்றுக் கொடு” என்று “மட்டுமே” என்ற வார்த்தையை அழுத்திச் சொல்கிறான்.

செங்கம் ஹார்ட்பீட் டிரஸ்ட் வெளியிட்ட செய்தி மடல் 
செய்தி மடல் இதழ் குறித்து முனைவர் ஜவாஹர் பிரேமலதாவின் கருத்து
-------------------------------------------------------------------------------------------------------------------
முனைவர் ஜவாஹர் பிரேமலதா
என் இதயத் துடிப்பே நின்றுவி்ட்டது . அட்டைப்படத்தில் நான்.இது மிகப்பெரிய கௌரவம். அதேசமயம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற எண்ணமும் வலுப்பட்டுள்ளது. வையவன் சார் அவர்களே மிகச் சிறந்த படைப்பாளர். பல சிறுகதைகளை படைத்துள்ளார். அவர் தன் சிறுகதையை வெளியிடாமல் எனக்கு அந்த வாய்ப்பை தந்திருக்கிறார். அவருடைய பெருந்தன்மையை வியக்காமல் இருக்க முடியவில்லை. அவரைப் போன்றவர்களின் தொடர்பு எனக்கு கிடைத்திருப்பதற்கு இறையருள்தான் காரணம்.

தாங்கள் மிகச் சிறந்த சாதனையாளர். அணுவிஞ்ஞானி. சிறந்த படைப்பாளர். மொழிபெயர்ப்பாளர். அறிவியல் தமிழுக்குப் பெரும் பங்காற்றி வருபவர். கடுமையான உழைப்பினாலும்,கடமை உணர்வினாலும் பிறந்த தாய்நாட்டுக்குப் பெரிய தொண்டாற்றியிருப்பவர். தங்களை அட்டைப்படத்தில்  வெளியிட்டிருப்பது சாலச் சிறப்பு. 

இதழ் மிகச் செறிவாக வந்துள்ளது. பல புதிய அரிய செய்திகள். விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் வெளிவந்திருப்பது கொண்ட கொள்கையின் உறுதியைக் காட்டுகிறது.  
-----------------------------------------------------------------------------------------------------------------------
   புரிந்தது என்றமாதிரி இராஜேந்திரனின் கண்களில் தன் கண்பார்வையை ஒருகணம் நிறுத்தித் தலையை ஆட்டுகிறாள் நிலவுமொழி. இவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த குறியீட்டு உத்தரவையும், அதற்குச் சம்மதமும் தெரிவித்ததையும் யாரும் புரிந்து கொள்ளவில்லை.

“நரேந்திரா! எம்மிடம் ஒரு வேலை செய்கிறேன் என்று ஒப்புக் கொண்டால் அதைச் செய்து முடித்தால்தான் எமது ஆதரவு தொடர்ந்து இருக்கும், அதைப் புரிந்து கொள்!”  என்று இராஜேந்திரன் சிரித்துக்கொண்டே சொன்னாலும், நரேந்திரனின் அடிவயிறு கலங்குகிறது.

இப்பொழுது இராஜேந்திரன் தனக்கு உத்தரவு இடுகிறான் என்று தெளிவாகப் புரிந்து கொள்கிறான் நரேந்திரன். தான் தமிழ் நன்றாகப் பேசக் கற்றுக் கொள்ளாவிட்டால் இராஜேந்திரனது கோபத்திற்கு உள்ளக நேரிடும் என்ற அறிவிப்பு பிறந்ததாகவே தெரிகிறது.

ஒரு பெண்ணிடம் பேசுவதற்காக இப்படித் தான் தமிழ் பேச் கற்றுக் கொள்கிறேன் என்று சொன்னதே கொஞ்சம் அவசரத்தனமோ என்றும் தோன்றுகிறது. தனது தாயான குந்தவியை ஏமாற்றுவதுபோல இராஜேந்திரனை ஏமாற்ற முடியாது என்பதைத் தன் தந்தை விமலாதித்தன் இராஜேந்திரனிடம் குழைவதைப் பார்த்துத் தெரிந்து கொண்டிருக்கிறான்.
அவர்கள் மேற்கொண்டு பேச ஆரம்பிப்பதற்குள் திரிபுவனமாதேவி அங்கு வேகமாக வருகிறாள். அவளைக் கண்டதும் எழுந்து அன்புடன் வரவேற்கிறாள் குந்தவி. ஆனால் திரிபுவனமாதேவியின் முகத்தில் பதட்டம் இருக்கிறது.

“அரசே! இந்த ஓலையைப் படியுங்கள். முக்கியமான செய்தி, தங்களிடம் இதை உடனே சேர்ப்பிக்க வேண்டும் என்று நமது ஓலைதாங்கி நாம் தங்கியிருக்கும் விடுதிக்கு உங்களைத் தேடி வந்தான். நான்தான் அவனை என்னுடன் அழைத்துக் கொண்டு வந்தேன். அந்தப்புரத்திற்குள் அவன் நுழையக்கூடாதே என்றுதான் நானே ஓலையைக் கையில் வாங்கிக் கொண்டு வந்தேன்!” என்று சிவப்புத்துணியில் சுற்றப்பட்டிருந்த ஓலையை இராஜேந்திரனிடம் கொடுக்கிறாள்.

சிவப்புத் துணி என்றால் என்ன என்று இராஜேந்திரனுக்குத் தெரியுமாதலால் உடனே தனியிடத்திற்குச் சென்று அதைப் படிக்கிறான். குறியீட்டுச் சொல்லில் எழுதப்பட்டிருக்கும் விவரங்களைப் படித்ததும் அவன் முகம் சிவக்கிறது. ஒன்றுமே பேசாமல் திரும்பி வருகிறான்.

“குந்தவி. அவசரமான ஒரு வேலை வந்துவிட்டது. நான் உடனே என் விடுதிக்குச் செல்லவேண்டும். மகாராணி, இருந்து குந்தவியிடம் பேசிவிட்டு ஒரு நாழிகையில் விடுதிக்கு மங்கையுடன் திரும்பி வா!”  என்று விடுவிடுவென்று நடந்து செல்கிறான் இராஜேந்திரன். அனைவரும் திகைத்து நிற்கிறார்கள். ஓலையில் என்ன செய்தி வந்திருக்கிறது என்பதுதான் எல்லோரின் மனதிலும் ஓங்கி எழுகிறது.[வளரும்]

No comments:

Post a Comment