Monday 11 August 2014

தமிழினி மெல்ல [33]எனது வாள் உயிர் இருக்கும் வரை கீழே விழாது!

தமிழினி மெல்ல [32]சென்ற பதிவின் தொடர்ச்சி 
இராஜராஜனைச் சிறைப்பிடிக்காமல் போரிட்டுத் தோற்றால் அதோடு நின்றுவிடப் போவதில்லை. இராஜேந்திரனின் அளவு கடந்த சினத்திற்கும், அவனுடன் திரண்டு வரக்கூடிய இலட்சம் வீரர்களுக்கும் அவனது வயநாட்டால் பதில் சொல்ல முடியாது போய்விடுமே! மின்னல் தாக்குதல், மின்னல் தாக்குதலாக இல்லாவிட்டால் அதன் விளைவு நாம் விரும்பியபடியா நடக்கும்? மிஞ்சிய படைகளுடன் சேரநாட்டிற்குத் திரும்பி சென்றால் இராஜேந்திரனின் கோபத்திற்குத் தப்பலாம் என்றுதான் அவன் நினைக்கிறான். அவன் மேலே பேசி அமரபுஜங்கனுக்கு நிலைமையை விளங்கவைக்கலாம் என்று சொல்ல அவன் தொண்டையைச் செருமிக் கொள்வதற்குள் அமரபுஜங்கனின் குரல் அவையில் ஒலிக்கிறது.

“நமது நண்பரும், ஆதரவாளருமான சேரமானின் கருத்து வலுவானதே. அதை முற்றிலும் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் அவர் சொன்னதில் ஒன்றை மட்டும் நன்றாக அலசி ஆராய்ந்து பார்த்தோம். அவர் சொன்ன போர்த் தந்திரத்தை உபயோகித்து இராஜராஜனை இரண்டு நாள்களில் சிறைப்பிடிப்போம். அதற்காக நமது வீரர்கள் யாரும் உயிரிழக்கத் தேவை யில்லை. நாம் இராஜராஜனைத் தேடி எங்கும் செல்ல வேண்டாம்! அவனை நாம் இருக்கும் இடத்திற்கு வரவழைப்போம்!” என்று நிதானமாக அவைக்கு எடுத்துரைக்கிறான்.

“அது எப்படி இயலும் அமரபுஜங்கரே?” கேள்வி பிறக்கிறது மார்த் தாண்டனிடமிருந்து.

“இராஜராஜன் எப்படிப் போர் புரிவான் என்று எமக்கு நன்றாகத் தெரியும் மார்த்தாண்டரே! இன்று காலை நடந்த போர் இராஜராஜனது முறை அல்ல. என்றும் அவன் நேருக்கு நேராக மோதுவானே தவிர, மறைந்திருந்து தாக்கியதாக சரித்திரமே இல்லை. எனவே இந்தத் தாக்குதல் வேறு யாராலேயோதான் நடத்திப் பட்டிருக்க வேண்டும். அல்லது, மிகவும் குறைவான அளவு அவனிடம் படைகள் இருந்திருக்க வேண்டும். எனவே, இப்படிப்பட்ட போரை நடத்த யாரோ ஒரு போர்த்தந்திரி இராஜராஜனுக்கு ஆலோசனை வழங்கி இருக்கவேண்டும்.

“எம்மைப் பொறுத்தவரை அந்த இரண்டுமே உண்மை என்று நினைக்கிறோம். அதுமட்டுமல்ல, இராஜராஜன் வெள்ளாற்றைக் கடந்து நம்மைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டிருக்கிறான் என்றம் நினைக்கிறோம். அவன் நம்மீது நாளையோ, அல்லது நாளை மறுநாளோ மீண்டும் பனைமர வண்டிகள் மூலம் தாக்குதலைத் துவங்குவான் என்றும் நம்புகிறேன். அதை நடத்தவேண்டும் என்றால் அவன் நமது அருகில், அதாவது ஒரு காத தூரத்திற்கு வந்தாக வேண்டும். ஆகவே அவன் நமக்கு அருகில்தான் இருக்கிறான். அவனைப் பொன்னமராவதிக்கு வரவழைக்க வேண்டும்.” அவன் குரல் உறுதியாக ஒலிக்கிறது.

“அமரபுஜங்கரே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான்கு நாட்களாகப் பெய்த மழையில் நம்மைத் தென்கரையில் கட்டிப்போட்டு விட்டது வெள்ளாறு. அப்படியிருக்க நம் வீரர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இராஜராஜன் படையுடன் எப்படி வெள்ளாற்றைக் கடந்து இருக்க இயலும்? தவிர நாளையோ, நாளை மறுநாளோ மறுபடியும் தாக்குதலைத் துவங்குவதற்கு பனைமர வண்டிகளை நமது கண்ணில் படாமல் இழுத்துச் செல்ல இராஜராஜன் என்ன மந்திரவாதியா?” அமரபுஜங்கன் மீது கேள்வி தொடுக்கிறான் மார்த்தாண்டன்.

“நம்புவதற்கு அரியது என்பதையெல்லாம் நீக்கிவிட்டால், மீதி இருப்பது - எவ்வளவுதான் .இயலாததாக இருந்தாலும் - அதுதான் உண்மை மார்த்தாண்டரே!”40 திடுமென்று ஒரு பொய்த் திரை நீங்கி உண்மையைக் கண்டவன் போல பேசுகிறான் அமரபுஜங்கன்
.
“நாம் மதுரையில் போர் ஆலோசனை செய்வதற்குச் சில நாட்கள் முன்னர்தான் இராஜராஜனின் தமிழ்ப் பணி ஆலோசகன் என்று ஒரு சிவாச்சாரி வந்து போனான். நான் கொல்லத்தில் இருந்து மதுரை வரும் முன்னரும் அவன் மதுரை வந்திருந்தான். அப்பொழுது மதுரையின் கோட்டைச் சுவர்களைச் சுற்றிப் பார்த்தான் என்று அமைச்சர் கூறினார். அதுதவிர படைக்கலன்களிலும் கவனம் செலுத்தினான் என்றும் சொன்னார். மேலும், அவனது உடற்கட்டைப் பார்த்தால் கோவிலில் பூசை செய்யும் சிவாச்சாரி மாதிரித் தோன்றவில்லை, ஒரு போர்வீரன் மாதிரியே இருந்தது என்றும் தெரிவித்தார்.

“கூட்டிக் கழித்துப் பார்த்தால் அவன் இராஜராஜனின் தலைமை ஒற்றனாகவோ, அல்லது போர்த்தந்திரம் தெரிந்த ஆலோசகனாகவோ இருக்கவேண்டும் என்றே நினைக்கிறோம். அவன் வந்தபோது நமது கோட்டைக்குள் மறைந்திருந்த வீரர்களைப் பற்றி அறிந்து கொண்டதோடு மட்டுமில்லாமல், பொன்னமராவதியைச் சுற்றியுள்ள நிலப் பரப்பைப் பற்றியும் தெரிந்து கொண்டு சென்றிருக்கிறான் என்று துணியலாம்.
“அவன்தான் வெள்ளாற்றுக்கு இருகரையிலும் இருந்த பனைமரங்களை வெட்டி கவண் கல் வீசும் வண்டிகளைத் தயாரித்திருக்கிறான் என்றே நம்புகிறேன்.

அவனுடைய திறமையைத் தெரிந்து கொண்டதால்தான் முன் பின் அறியாத ஒருவனாகிய அவனுக்கு இராஜராஜன் தன் முத்திரை இலச்சினை அளித்திருக்கிறான். அவன் இராஜராஜனுக்கு வழி வகுத்துக் கொடுத்திருக்கும் போர்முறைகள் முறையற்றதாகத்தான் இருக்கும். அவனது போர்முறை நம் தமிழ்நாட்டுப் போர்முறையோ, பாரதப் போர்முறையோ அல்ல. பின்னிருந்து தாக்கும் பேடிகள் தொகுத்திருக்கும் வெளிநாட்டுப் போர்முறையாக இருக்கக் கூடும்.

“சிந்தித்துப் பாருங்கள். மழை பெய்ய ஆரம்பித்த போதே இராஜராஜன் வெள்ளாற்றைக் கடந்திருக்கலாம். அது நாம் வெள்ளாற்றங்கரையை அடைவதற்கு இரண்டுநாள் முன்பு நடந்திருக்கக்கூடும் அடித்துப் பெய்த மழையில் நம்மால் சோழப்படையின் முன்னேற்றத்தைப் பார்த்திருக்கவோ, கேட்டிருக்கவோ முடியாது. எனவே இராஜராஜன் இங்கு எங்கோதான் ஒளிந்திருக்கிறான்.

“குறிப்பாகச் சொன்னால் அவன் பிரான்மலையில்தான் ஒளிந்திருக்க வேண்டும். அவன் நம்மைத் தாக்க தகுந்த தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான். அவன் மேற்கிலிருந்து நம்மைத் தாக்கும்பொழுது, தொண்டியிலிருந்து வரும் அவனது படைகள் தெற்கிலிருந்தோ, தென் கிழக்கிலிருந்தோ நம் படைகளின் பின்பகுதியைத் தாக்கிச் செயலிழக்கச் செய்யத் திட்டம் தீட்டியிருக்கக் கூடும்.

“எது எப்படியிருந்தாலும், நமது கிழக்குப் பக்கம் யாரும் இல்லை. அது இராஜராஜனுக்கும் தெரியும். நாம் கிழக்கு நோக்கி நகர இயலாதவண்ணம் நாளை தாக்குதலைத் தொடங்கினாலும் தொடங்கலாம். அதற்காக அவன் தனது படையில் ஒரு பகுதியை கிழக்கு நோக்கி அனுப்ப வேண்டியதிருக்கும். நமது படைகள் இன்றுதான் திரும்பி வந்ததால், அவனது படைகள் இன்று பகலில் கிழக்கு நோக்கிச் செல்லச் சாத்தியமில்லை. எனவே இன்றிரவுதான் அவன் அனுப்பக் கூடும். அதை நாம் தடுக்கவேண்டும். பனைமர வண்டிகளில் மரங்கள் நிறுத்தப்பட்டால் இழுத்துச் செல்வது கடினம். எனவே, கிழக்கே சென்றுதான் அதை ஒருங்கிணைப்பார்கள். அதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.

“அதுமட்டுமல்ல, இராஜராஜனுக்கு நாம் செய்தி அனுப்ப வேண்டும் - அவனது திட்டம் நமக்குத் தெரிந்து விட்டதாக. அது மட்டுமல்ல, பேடி மாதிரிப் போர் நடத்தாதே, வீரன் மாதிரி நேருக்கு நேர் வந்து போர் நடத்து என்று அவனுக்கு அழைப்பு  விடவேண்டும். இதுதான் என் திட்டம்!”  என்று தன் திட்டத்தை விவரிக்க ஆரம்பிக்கிறான் அமரபுஜங்கன். மகுடி இசையில் கட்டுண்ட நாகம் மாதிரி அவனது திட்டத்தை உள்வாங்குகின்றனர் அனைவரும். அமரபுஜங்கன் தன் வாழ்விலேயே மிகப்பெரிய சூதாட்டத்தை ஆட ஆரம்பித்திருக்கிறான் என்பதும் அனைவருக்கும் புரிகிறது
தமிழினி மெல்ல [33] தொடர்கிறது



அரிசோனா மகாதேவன்

                                                பிரான்மலை
                   பரிதாபி, ஆனி 15  -  ஜூலை 30, 1012
தீப்பந்தங்கள் நெருங்கி வருகின்றன. இருபது குதிரை வீரர்கள் பாண்டியர்களின் மீனக் கொடிகளையும், சமாதானக் கொடியையும் பிடித்தவாறு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் ஆயுதங்கள்எதுவும் இல்லை. இவர்களின் வரவை சோழப் படையின் முன்னிலையில் இருக்கும் கண்காணிகள் உடனே படைத்தலைவருக்குச் சேதி சொல்லி அனுப்புகிறார்கள்.

“என்னது? சமாதானக் கொடிகளுடன் பாண்டிய வீரர்கள் குதிரைகளில் வந்துகொண்டு இருக்கிறார்களா?” என்று குழம்புகிறார் தென்மண்டலப் படைத்தலைவர். ”அவர்களை இடைமறித்து, விவரமறிந்து என்னிடம் அழைத்து வரவும்.” என்று திரும்ப உத்தரவை அனுப்புகிறார்.

பாண்டிய வீரர்களிடம் ஒரு ஆயுதம்கூட இல்லாததால், அவர்களால் ஆபத்து வர சாத்தியக்கூறு இல்லை என்று தெளிந்து, அவர்கள் அரை நாழிகைக்குள்ளாகவே படைத் தலைவரின் முன்பு அழைத்து வரப்படுகிறார்கள்.

தலைவன் போல இருந்த பாண்டிய வீரன், “நாங்கள் பாண்டிய மன்னர் அமரபுஜங்கரிடமிருந்து இராஜராஜருக்கு திருமுகம் கொணர்ந்திருக்கிறோம்.” என்று தெரிவிக்கிறான். அதைத் தன்னிடம் கொடுக்குமாறு படைத்தலைவர் கேட்டும், அதே பணிவுடன் மறுத்து விடுகிறான்.

“இங்கு சோழச் சக்கரவர்த்தி இல்லை!” என்று பதில் சொல்கிறார் படைத்தலைவர்.

“அப்படியானால் எங்களைத் திருப்பி அனுப்பி விடுங்கள். நாங்கள் இச் செய்தியை எங்கள் மன்னர் பிரானுக்குத் தெரிவிக்கிறோம்.”  என்று பதில் சொல்கிறான் பாண்டிய வீரன்.

கட, கடவென்று சிரிக்கிறார் படைத்தலைவர். “ஆயுதமில்லாமல் சமாதானக் கொடியுடன் வந்திருப்பதால்தான் உங்கள் உயிர் இதுவரை உங்கள் உடம்பில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. உங்களை உயிருடன் திருப்பி அனுப்ப எங்களுக்குப் பித்தா பிடித்திருக்கிறது? எங்கள் பாசறைக்கு வந்தவர்களை எப்படி நாங்கள் திருப்பி அனுப்புவோம்? நீங்கள் தந்திரம் நிறைந்த ஒற்றர்களாக இருக்கலாம் அல்லவா? சக்கரவர்த்திகளுக்குத் திருமுகம் கொணர்ந்திருந்தால் என்னிடம் கொடு. இல்லாவிட்டால் நாங்களாகத் திருப்பி அனுப்பும் வரை இங்கேயே சோழநாட்டு விருந்தினராக இருந்து விடு!” அவர் குரலில் ஏளனம் இருக்கிறது.

ஆனால் சிரிக்கும் அவர் முகத்திற்குப் பின் சோழப் படையின் இருப்பிடம் நள்ளிரவில் வந்திருக்கும் இவர்களுக்கு எப்படித் தெரிந்திருக்கக்கூடும் என்ற சிந்தனை அரித்துப் பிடுங்குகிறது. இந்த வீரர்கள் மட்டும் இராஜராஜருக்குத் திருமுகம் கொண்டு வந்திருக்க முடியாது என்று அவரது உள்ளுணர்வு கூறுகிறது. சோழப் படை எங்கு இருக்கிறது என்று தெரிந்து கொள்ள பாண்டிய மன்னன் ஆடும் நாடகம் இது என்று நினைக்கிறார். ஆனால் இந்தப் பாண்டிய வீரன் கையில் பாண்டிய மன்னனின் இலச்சினை உள்ள திருமுகம் இருக்கிறதே! திருமுகத்தில் என்ன இருக்கிறது என்று இராஜராஜருக்குத் தெரிய வேண்டுமே! ஒரு முடிவுக்கு வருகிறார் அவர்.

“உன்னை நான் சக்கரவர்த்திகளிடம் அழைத்துச் செல்கிறேன். அதற்கு முன் உன் கண்கள் கட்டப்படும்!” என்று தன் முடிவைப் பாண்டிய வீரனிடம் தெரிவிக்கிறார். அவனும் அதற்குச் சம்மதித்துத் தலையசைக்கிறான். அனைத்துப் பாண்டிய வீரர்களின் கண்களும் கருப்புத் துணியினால் இறுக்கட்டப் படுகின்றன. தலைமை வீரனை ஒரு குதிரையில் ஏற்றி அரை நாழிகை சுற்றிச் சுற்றி - தாங்கள் செல்லும் இட அமைப்பை பாண்டிய வீரன் அறிய முடியாத வண்ணம் குழப்பி, சுற்று வழியில் இராஜராஜரிடம் அழைத்துச் செல்கிறார் படைத்தலைவர்.

இராஜராஜரின் கம்பீரம் பாண்டிய வீரனிடம் தானாகப் பணிவை வரவழைக்கிறது. படைத்தலைவரை வணங்காத அவன், அவரை வணங்கித் திருமுகத்தை நீட்டுகிறான். படைத்தலைவர் அதை வாங்கி இராஜராஜரிடம் சமர்ப்பிக்கிறார்.

பாண்டிய வீரனைக் காத்திருக்கும்படி சைகை செய்துவிட்டு, பேச்சு காதில் விழாத இடத்திற்கு படைத்தலைவரை அழைத்துச் சென்று திருமுகத்தைத் தீவட்டி வெள்ளிச்சத்தில் விரிக்கிறார். அவர் முகத்தில் ஒரு ஏளனப் புன்னகை மலர்கிறது.

“அமைச்சரே! உம்மால் வட்டெழுத்து படிக்க இயலுமா?” என்று அருகிலிருந்த போர் அமைச்சரிடம் வினவுகிறார். ஆமென்று தலையசைத்த அமைச்சரிடம் திருமுகத்தை நீட்டுகிறார் இராஜராஜர்.

“ஒரு சொல்லையும் நீக்காமல் உள்ளதை உள்ளபடியே நீர் நவிலும்படி பணிக்கிறோம்.”  உத்தரவு பிறக்கிறது இராஜராஜரிடமிருந்து.

அமைச்சர் திருமுகத்தைப் படிக்கப் படிக்க இராஜராஜரின் முகத்தில் வேதனையும், சினமும், பின்னர் பெருமிதமும் தோன்றுகின்றன. திருமுகம் படிக்கப்பட்டு, ஒரு நிமிடம் சென்ற பின்னர் நிதானமாக, படைத் தலைவருக்கும் அமைச்சருக்கும் தனது கருத்தைத் தெரிவிக்கிறார்.

“பாண்டியன் எழுதியது எமக்கு ஒருபுறம் வேதனையை அளித்தாலும், அது உண்மைதான்! எவரிடமும் இதுவரை யாம் நேருக்கு நேரில்தான் போரிட்டிருக்கிறோம். சூழ்நிலை எம்மை மறைமுகப் போர் நடத்தும்படி செய்து விட்டது. காலையில் நடந்த தாக்குதலால் நிலைகுலைந்து போயிருப்பான் என்று நினைத்த அமரபுஜங்கன் தெளிவாகியதோடு மட்டுமன்றி, தான் ஒரு சிறந்த மதியூகி என்பதையும் நமக்கு அறிவித்திருக்கிறான்.     இல்லாவிட்டால்     யாம்               பிரான்மலையின்
பின்னால்தான் இருக்கிறோம் என்பதை ஊகித்து அறிந்திருக்க இயலுமா? இதனால் அவன் இராஜாதிராஜன் செல்லுமிடத்தையும் ஊகித்து அறிந்திருப்பான் என்றும் முடிவு செய்கிறோம்.

“நம்மிடம் எவ்வளவு வீரர்கள் இருக்கிறார்கள் என்று அவனால் ஊகித்து அறிய இயலவில்லை. அவனது திருமுகம் நமக்கு உணர்த்துவது, அவனுடைய படைபலம் குறைந்து விட்டது என்பதுதான். இனி போர் செய்து வென்றாலும், அவனது நோக்கம் நிறைவேறாது போகும் என்று உணர்ந்து விட்டான். அதனால்தான் இந்தத் திருமுகத்தை அனுப்பி உள்ளான்.”

“சக்கரவர்த்தி அவர்களே! வென்றாலும் அவன் நோக்கம் நிறைவேறாது என்ற தங்கள் கருத்து எதனால் என்று நாங்கள் அறிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்.” என்று கேட்கிறார் படைத்தலைவர்.

“அமைச்சரே! நீர் என்ன விளக்கம் தருவீர்?” என்று கேள்வியை அமைச்சருக்குத் தொடுக்கிறார் இராஜராஜர்.

இதைச் சற்றும் எதிர் பாராத அமைச்சர் சிறிது தடுமாறுகிறார். பிறகு, “சக்கரவர்த்தி அவர்களே! பாண்டியர்களின் முதலாவதான திட்டம், அதிகமான எண்ணிக்கையின் திறத்தால் தஞ்சையைக் கைப்பற்றுவதுதான். தஞ்சை விழுந்தால் தாங்கள் அவனது பிடியில் சிக்குவீர்கள் என்று நினைத்திருக்கலாம். காலையில் நடந்த தாக்குதலின் மூலம் தாங்கள் தஞ்சையில் இல்லை என்றும், இங்கு வந்திருக்கலாம் என்று ஊகித்திருக்கலாம். இப்பொழுது போர் நடந்தால் அது கடைசிவரை, வெற்றி தோல்வி முடிவாகும்வரை நடக்கும் என்பது அவருக்குத் தெளிவாகி இருக்கலாம். இதுவரை தாங்கள் எந்தப் போரிலும் வெற்றியைத் தழுவாமல் இருந்ததில்லை. எதிரிகள் வென்றாலும், தாங்கள் அவர்களது பிடியில் சிக்குவீர்கள் என்பது நிச்சயமில்லை. ஏனென்றால், இந்தப் போரில் பாண்டியன் வெற்றி பெற்றால்...” மேலே தொடரத் தயங்கி நிறுத்துகிறார்.

“இதில் தயங்க ஒன்றுமில்லை அமைச்சரே! உமது ஆராய்வைத் தொடர்ந்து சொல்லப் பணிக்கிறோம்.” ஆணை பிறக்கிறது இராஜராஜரிடமிருந்து.

“ம்... தங்களை வீழ்த்தாமல் பாண்டியர்கள் வெற்றிபெற இயலாது சக்கரவர்த்தி அவர்களே! அந்த வெற்றி நிலையாகாது. இளவரசர் இராஜேந்திரர் பாண்டியர் குலத்தையே வேரறுத்து விடுவார் என்பதையும் பாண்டிய மன்னர் அறியாதிருக்க நியாயமில்லை.” என்று முடிக்கிறார்.

“அது போகட்டும். பாண்டியன் எம்மைச் சிறைப் பிடிக்க எதற்கு விழைய வேண்டும்?”

“சக்கரவர்த்தி அவர்களே! என் வாயால் அதைச் சொல்லவும் வேண்டுமா?” அமைச்சரின் கண்கள் கலங்குகின்றன.

“இது போர் அமைச்சரே! நீர் எமது போர் அமைச்சராவீர். இச்சமயத்தில் உணர்ச்சி வசப்படுதல் உமக்கு அழகா? நீர் ஒரு ஆண்மகன், அதுவும் சோழநாட்டு ஆண்மகன். பெண் பிள்ளை மாதிரிக் கண்ணீர் சிந்தாமல் எமது அமைச்சராகப் பதிலிருப்பீராக!” இராஜராஜரின் குரலில் சிறிய அதட்டல் தொனிக்கிறது.

“தங்களைச் சிறைப்பிடித்து, பணயக் கைதியாக்கி, தான் நினைப்பதைச் சாதிப்பதுதான் பாண்டிய மன்னரின் நோக்கம் என்பது எனது துணிவு. தாங்கள் அவரிடம் இருக்கும்வரை இளவரசர் இராஜேந்திரரிடம் தங்கள் உயிருக்கு அவரால் பேரம் பேச இயலும். எனவே, இப்பொழுது நம்முடன் படையுடன் போரிட்டு வெற்றி பெருவது பாண்டிய மன்னரின் நோக்கம் அல்ல. அதனால்தான் அவர் தங்களை வாட்போருக்கு அழைக்கிறார். எவரின் வாள் தாக்குதலில் கீழே விழுகிறதோ அவர் தோற்பவர் என்றும், தோற்பவர் வெல்பவரின் கைதி ஆகவேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்திருக்கிறார். ஆக, தங்களைச் சிறைப் பிடிப்பதோ, அல்லது தங்களிடம் சிறைப்படுவதோதான் அவரது நோக்கமாக இருக்கிறது.”

“எம்மிடம் சிறைப்படுவது பாண்டியனுக்கு எந்தவிதத்தில் நன்மை?”

“சக்கரவர்த்தி அவர்களே! பாண்டிய மன்னரின் பித்துப்பிடித்த சவாலுக்குத் தாங்கள் எடை கொடுப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது!” என்ற அமைச்சரை இடைமறித்து, “எமது வினாவுக்கு மட்டுமான பதிலை மட்டுமே இப்பொழுது யாம் விரும்புகிறோம். உமது இடைச் செருகல் எமக்கு இப்பொழுது தேவையில்லை” என்று நறுக்கு தெறித்தாற்போல் பேசுகிறார் இராஜராஜர்.

கன்னத்தில் அறைபட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது அமைச்சருக்கு. இராஜராஜரின் உள்நோக்கம் - தன் பதிலை அவர் தெரிந்துகொள்வதற்காக அல்ல - படைத்தலைவரான தண்டநாயகர் அறிந்து கொள்ளத்தான் என்பதை உணர்ந்து கொள்கிறார். முடிவு எடுப்பது இராஜராஜரின் கையில்தான் இருக்கிறது. அதை அவர் தெரிவிக்குமுன் தான் அவர் என்ன முடிவு எடுக்கக்கூடும் என்று ஊகிப்பது தவறு என்பதை தனக்கு உணர்த்துகிறார் என்று புரிந்து கொள்கிறார்.

“வாட்போரில் தோற்றுத் தங்களிடம் சிறைப் பட்டால், பின்பு தங்களிடம் கருணை மனுச் செய்து உயிர் பிழைக்கலாம். சோழப் பேரரசுக்குக் கட்டுப்பட்டு பாண்டி நாட்டைத் திரும்பப் பெறலாம். மேலும், சோழர்களின் கோபத்திலிருந்து மதுரை தப்பிப் பிழைக்கும். பல்லாயிரக் கணக்கான வீரர்களின் இறப்பைத் தடுத்துத் தான் சிறைசென்றால், பாண்டிய வீரர்கள் அவருக்கு மிகவும் கடமைப் பட்டவர்களாக ஆகிவிடுவார்கள். அவரது மைந்தன் தலைமையில் மீண்டும் சோழப் பேரரசுக்கு எதிராகப் போரிட ஒன்று சேர்வார்கள். நிகழ்கால நோக்கம் நடைபெறாமல் போனாலும் எதிர்காலத்தில் தன் மைந்தன் மூலம் தனது திட்டம் நிறைவேற வாய்ப்பிருக்கிறது என்று நினைக்கலாம்.” அமைதியாகிவிட்டார் அமைச்சர்.

“சக்கரவர்த்தி அவர்களே, என் மனதில் இருக்கும் ஒரு ஐயத்தை எடுத்துரைக்கத் தாங்கள் அனுமதி கொடுக்க வேண்டுகிறேன்.” என்று தயங்கியவாறே கேட்கிறார் படைத்தலைவர். இராஜராஜர் தலையசைக்கவே, “தாங்கள் இந்த வாட்போருக்குச் சம்மதிக்கப் போகிறீர்களா? அது சரி வருமா?” என்று வினவுகிறார்.

மெல்ல நகைக்கிறார் இராஜராஜர். அந்த நகைப்பு பெரும் சிரிப்பாகப் பரிணமிக்கிறது. பலத்த ஓசையுடன் கடகடவென்று சிரிக்கும் அவரைப் பார்த்தால் சுற்றியிருப்பவர்களுக்கு அச்சமும் ஏற்படுகிறது.

“தண்ட நாயகரே ! அமைச்சரே! யாம் ஒரு வயதான கிழவன், உங்களைப் போரிட விட்டுவிட்டுத் தஞ்சை அரண்மனையில் போர்த்திக்கொண்டு முடங்கிக் கிடக்க வேண்டும் என்றுதானே நினைக்கிறீர்கள்? அப்படியிருந்தால் அதைத் தஞ்சையில் யாம் உங்களைப் பொருட்டாக மதித்து போர் ஆலோசனை நடத்தியபோது சொல்லியிருக்க வேண்டும். அதை விடுத்து, போரின் தலைவனைப் போரிட இயலாதவன் என்று நினைக்கும் உம்மையும், அமைச்சரையும் உடனே பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று தோன்றுகிறது. ஆயினும் இத்தனை நாள்கள் நீங்கள் சோழநாட்டிற்குச் செய்த சிறந்த பணிதான் அதைத் தடுத்து நிற்கிறது!”

இராஜராஜரின் சினங்கலந்த குரல் பெரிதாக எழுந்து அனைவரையும் திடுக்கிட வைக்கிறது. இவ்வளவு சினத்தை அவர் எதிரிகளிடம்தான் காட்டியிருக்கிறாரே தவிர, தனது அமைச்சரிடமும், படைத் தலைவரிடமும் காட்டியதில்லை.

“சக்கரவர்த்தி அவர்களே! அரசர்களில் அரிமாவான41 தங்களை அவமதிக்கும் சொற்களை நாங்கள் கனவிலும் நினைத்துப் பார்ப்போமா? தங்களின் கூர்மையான வாளை மகிழ்ச்சியாக என் மார்பில் தாங்கி என் உயிரைத் தங்களுக்காக கொடுக்க ஆயத்தமாக உள்ளேன். ஆனால் தங்களின் சொல்லின் கூர்மையை என்னால் தாங்க இயலவில்லை, பிரபோ! தங்களின் உயிரின் மேல் தங்களுக்கு பற்று இருக்காவிட்டாலும், உங்களுக்காக எங்கள் உயிரை மகிழ்வுடன் கொடுப்பதை பாக்கியமாகக் கருதுகிறோம். தங்கள் குருதியில் ஒரு துளி சிதறாமலிருக்க எங்கள் உடலில் இருக்கும் குருதி முழுவதும் கொடுக்கத் தயங்கமாட்டோம். இதுவரை உடலில் மகிழ்ந்து ஏற்கொண்ட புண்களிலிருந்து உயிர் தப்பி இருக்கிறேன். இன்று தங்களிடமிருந்து வந்த இந்த அவச் சொல் ஏற்படுத்திய மிகப் பெரிய புண், உயிர் வாழவேண்டும் என்ற எண்ணத்தையே எடுத்து விட்டது. இனி நான் இருந்தென்ன பயன்? வடக்கிருந்து என் அவச் சொல்லை நீக்கிக் கொள்கிறேன்!”  படைத் தலைவரின் குரல் கம்மி விட்டது. அமைச்சருக்குப் பேச்சே எழவில்லை.

இராஜராஜரின் முகம் கதிரவனைக் கண்ட தாமரை மாதிரி மலர்கிறது. அன்புடன் படைத் தலைவரையும், அமைச்சரையும் ஒருசேரத் தழுவிக் கொள்கிறார். “தண்ட நாயகரே! அமைச்சரே, உங்களின் மன நிலையை யாம் நன்கு அறிவோம். துட்ட கமுனுவுக்கு எல்லாள மனுநீதிச் சோழன் பலியானது42 போல நான் அமரபுஜங்கனுக்குப் பலியாகிவிடுவேனோ என்று நீங்கள் கவலையுறுவதை யாம் நன்கு உணர்கிறோம். தலைவனுக்கு அழகு, தேவையில்லாத உயிர் சேதத்தைத் தவிர்த்தலே ஆகும். இதைத்தான் முன்னர் இராஜேந்திரன் விமலாதித்தனுடன் தனிப் போரிட்டுச்43 செய்திருக்கிறான். அவனது தந்தையான யாமும் அதைத்தான் செய்யப் போகிறோம்.

“ஆயிரக்கணக்கானவரை மறைந்திருந்து கொன்று கோழையாக மலையின்பின் பனைமரக்காட்டு நரியைப் போல மறைந்து கொள்கிறாயா, இதுதான் சோழச் சக்கரவர்த்தியின் பண்பா என்று பாண்டியன் கேட்டபிறகும் யாம் இந்தப் பிரான் மலையின் பின்னர் மறைந்து கொண்டால் பனங்காட்டு நரியாகத்தான் ஆகிவிடுவோம். உங்களுக்கு எம்மீது மதிப்பிருந்தால் இந்த நேர்முக வாட்போரில் பாண்டியனை வெல்வேன் என்ற நம்பிக்கையுடன் இருப்பீராக. உடனே செய்தி அனுப்பி இராஜாதிராஜனின் போர்த்திட்டத்தை நிறுத்தி வைப்பீராக.

“நாளை கதிரவன் உதிக்கும் பொழுது நமது சோழ வீரர் இருபதின்மரை பொன்னமராவதிக்கு நமது செய்தியைச் சொல்லி அனுப்புக. யாம் அமரபுஜங்கனை சந்திக்குமிடத்தை நமது திருமுக ஓலையில் தெரிவிப்போம். நம் தரப்பில் ஆயிரம் வீரர்களும், பாண்டியன் தரப்பில் ஆயிரம் வீரர்களும் அங்கு வந்து சேரட்டும். ஒன்று நான் அமரபுஜங்கனைச் சிறைப் பிடித்துக் கொண்டு வருவேன், அல்லது பெருவுடையாரின் திருவடியை அடைவேன். நான் சிறைப்பட மாட்டேன்! எனது வாள் எக்காரணத்தைக் கொண்டும் என் உயிர் இருக்கும் வரை கீழே விழாது! சோழமாதா எம்மை வெல்ல வைப்பாள்!”

இராஜராஜரின் முடிவு அனைவரையும் உறைய வைக்கிறது. அறுபத்தைந்து வயதான அவர் தன்னைவிட இருபத்தைந்து வயது குறைந்த அமரபுஜங்கனை எப்படி வாட்போரில் வெல்லப் போகிறாரோ என்று கவலையுறுகிறார்கள்.[வளரும்]
                                                * * *
---------------------------------------------------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு
41ராஜசேகரி என்னும் வடசொல்லின் தமிழாக்கம்
42அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த சோழர் வழி வந்த தமிழ் அரசன் எல்லாளன். தனது அறுபதாவது வயதுக்குமேல். இளைஞனான சிங்கள அரசன் துட்ட கமுனுவிடம் நேரடிப் போரிட்டு இறந்தான் என்று சரித்திரம் கூறுகிறது.
43இராஜேந்திரன், கிழக்குச் சாளுக்கிய இளவரசனான விமலாதித்தனை ஒற்றைக்கொற்றை வாட்போரில் வென்று வேங்கை நாட்டை சோழ ஆட்சிக்குக் கீழ் கொணர்ந்ததாக அவ்வை சண்முகம் நடத்தி வந்த “இராஜராஜ சோழன” நாடகம் விவரிக்கிறது. தன்னிடம் இருக்கும் படைகள் அழியுமே தவிர சோழர்களை வெல்ல இயலாது என்று உணர்ந்த விமலாதித்தன் இம்மாதிரிப் போருக்கு இராஜேந்திரனை அழைத்ததாகவும், அதை அவன் ஒப்புக்கொண்டதாகவும் நாடகம் சித்தரிக்கிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

                                             அத்தியாயம் 10
                         ஏகாம்பர நாதர் கோவில், காஞ்சி
                           பரிதாபி, ஆனி 19 - ஜூலை 4, 1012
“ண், ண், ண்!” என்று காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் மணி முழங்குகிறது. கண்களை மூடி இறைவனை இறைஞ்சுகிறான் இராஜேந்திரன். “இறைவா, ஏகாம்பரநாதா, கடந்த மூன்று நாள்களாகப் பெய்த அடை மழையில் எங்கும் செல்ல இயலாத நிலையில் இங்கேயே அடைபட்டுக் கிடக்கிறேனே! ஓலைதாங்கி மூலம் செய்தி எதுவும் வராத நிலையில் இந்நேரம் தஞ்சை எப்படி இருக்கிறது. அங்கு என்ன நடக்கிறது, போர் செய்யச் சென்ற என் தந்தை நலமாக இருக்கிறாரா என்று கூட அறிந்துகொள்ள இயலாத நிலைமை ஏற்பட்டிருக்கிறதே! எனக்கு மன நிம்மதி வேண்டும் இறைவா! உனக்கு கற்றளி கட்டுவித்துத் திருப்பணி செய்த எனது தந்தை இறுதிவரை தோல்வியைத் தழுவக் கூடாது ஐயனே! அவரை நீ காப்பாற்றி விடு. என் தந்தை தஞ்சைப் பெருவுடையார் கோவிலைக் கட்டியதைப் போல நானும் உனக்கு ஒரு பெரிய கற்றளிக் கோவில் கட்டுகிறேன்!” என்று மனமுருகி வேண்டிக் கொள்கிறான்.

அருகில் யாரோ வரும் ஒலி கேட்கவே, கண்களைத் திறக்கிறான் இராஜேந்திரன். அர்ச்சகர் தீபத்துடனும், திருநீற்றுத் தட்டுடனும் வந்து நிற்கிறார். பயபக்தியுடன் தீபத்தைத் தொட்டு, கண்களில் ஒற்றிக் கொணடு திருநீற்றை நெற்றியில் நன்றாக இட்டுக் கொள்கிறான்.

“அரசே! தங்களுடைய எண்ணம் அனைத்தும் நிறைவேறி, நாட்டுக்குப் பலகாலம் நீங்கள் நன்மை செய்து, மக்கள் சுபிட்சமாக வாழ ஏகாம்பரநாதர் அருள் பாலிப்பார்!”  என்று குழைந்து வாழ்த்துகிறார் அர்ச்சகர். அவரைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு சன்னதியிலிருந்து வெளிவருகிறான் இராஜேந்திரன்.

அவனுடன் சேர்ந்து கொள்கிறார் ஈராயிரவன் பல்லவராயர்.44 இராஜேந்திரன் வாயிலிருந்து வார்த்தைகள் வரட்டும் என்று காத்திருக்கிறார். அவரைப் பார்த்த இராஜேந்திரனின் விழிகள் “இனி என்ன செய்யப் போகிறோம்?” என்பது போல விரிகின்றன.

“அரசே! இப்பொழுது அடைமழை நின்று தூரல் ஆனதோடு மட்டுமன்றி, கிழக்கும் வெளுக்க ஆரம்பித்திருக்கிறது. எனவே, இன்றுடன் மழை நின்று விடும் என்றே நினைக்கிறேன். நாளை மதியம் நாம் புறப்பட ஆயத்தம் செய்யலாம். நாளை இரவு பாலாற்றங்கரையை அடைந்து இரவு வடகரையில் கழிப்போம். மறுநாள் காலை வெள்ளமும் வடிந்து இருக்கும். நாமும் ஆற்றைக் கடந்து விடலாம். நாம் தஞ்சைக்கு அனுப்பி இருக்கும் ஒற்றனும் இதற்குள் திரும்பி வர சாத்தியக்கூறும் இருக்கிறது. நமது படை வீரர்கள் தஞ்சைக்குச் செல்லத் துடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.” உற்சாகத்துடன் பதில் சொல்கிறார் பல்லவராயர்.

“அது புரிகிறது பல்லவராயரே! தந்தையை நினைத்தால்தான் எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. சேரனுடனும், சிங்களவனுடன் சேர்ந்து பாண்டியன் அமரபுஜங்கன் படை திரட்டித் தஞ்சையைத் தாக்க வந்திருக்கிறான் போலும். தந்தையிடமிருந்து எனக்குத் திருமுகம் வந்து பதினாறு நாள்கள் ஆகிவிட்டன. விடுப்புப் படைகள் வேங்கை நாட்டிலிருந்து ஆறு நாள்கள் முன்னரே காஞ்சி வந்து சேர்ந்திருக்கிறார்கள். அதிலும் மூன்று நாள்கள் மழையில் கழிந்து விட்டன. எனவே, விடுப்புப் படைகளும் முன்னதாகத் தஞ்சை சென்றிருக்க இயலாது போய்விட்டன...” மேலே பேச நா எழவில்லை இராஜேந்திரனுக்கு. தன் கண்களின் நீர்க்கசிவு பல்லவராயருக்குத் தெரியாமலிருக்கும்படி மெல்லத் திரும்பிக்கொள்கிறான்.

“அரசே! தண்டநாயகர் பழுவேட்டரையர் தஞ்சைக் காவலாராக உள்ளார். களம் பல கண்ட அவர் சக்கரவர்த்திகளின்மேல் காற்றுகூட பலமாக அடிக்கவிட மாட்டார். அவர் இருப்பது நூறு யானைகளின் பலமாகும். தவிர, புதிதாக சக்கரவர்த்தி அவர்களிடம் தமிழ்த் திருப்பணி ஆலோசகராகச் சேர்ந்திருக்கும் சிவாச்சாரியாரும் பலவிதமான புதிய போர் நடத்தும் வழிமுறைகளைக் கற்று அறிந்தவர் என்று நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். அவரைப்பற்றி இதுவரை பழுவேட்டரையர் மிகவும் உயர்வாகவே எனக்குச் சொல்லி வந்திருக்கிறார். இது தவிர,

சிவாச்சாரியார் பாண்டிய நாடு முழுவதும் சுற்றி வந்துகொண்டிருப்பதாகவும் அறிகிறேன். அவர் அப்படிச் சுற்றி வருவதற்கு தமிழ்த் திருப்பணி மற்றும் காரணமில்லை என்றும், பாண்டியர்களின் பலவீனத்தைத் தெரிந்து கொள்வதற்காகவே சென்றிருக்கவேண்டும் என்று சக்கரவர்த்தி அவர்களின் போர் ஆலோசனைக் குழு எனக்குத் தெரிவித்திருக்கிறது. எனவே அவர் எல்லாவிதத்திலும் உதவியாக இருப்பார்.

“மேலும் தங்களின் மைந்தர் இராஜாதிராஜரும் போருக்குச் செல்லத் துடித்துக் கொண்டிருக்கிறார். யானை ஏற்றத்தில் மிகவும் வல்லவராக ஆகிவிட்டார் என்று நான் நேரிலேயே பார்த்து அறிந்து கொண்டேன்.
“இது எல்லாவற்றையும் விட, சக்கரவர்த்திகளின் போர்த்திறன் இப் புவியே அறிந்த ஒன்று. அரிமாக்கனும் அஞ்சும் அரசர் அவர். தங்கள் சிறிய பாட்டனார் உத்தம சோழருக்குப் பிறகு சோழ நாட்டின் அரியணையில் அமர்ந்த அவர், தனது திறத்தினால் புலிக்கொடியைத் தமிழகம் மட்டுமல்லாது தென் பாரதம் முழுவதும் பறக்கச் செய்திருக்கிறார். எனவே, அவரைப் பற்றிக் கவலைப் படுவதை விட்டுவிட்டு, பாண்டியனின் மதியீனத்தைத்தான் நாம் நினைத்துப் பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.” என்று உண்மைகளை எடுத்துரைத்து ஆறுதல் சொல்ல முயல்கிறார்.
பல்லவராயரின் பேச்சுக்குத் தலை ஆட்டினாலும், இராஜேந்திரனின் மனம் சிந்தனையில் ஆழ்கிறது. தந்தையின் போக்கு அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. தன்னை நோக்கி வரும் எந்தப் போரையும் அவர் தவிர்க்க மாட்டார். ஆகவே, அவருக்கு முதுமை வந்தவுடன் தானே எல்லாப் போர்களுக்கும் சென்று வந்திருக்கிறான்.

பாண்டியர்கள் வீரபாண்டியனின் மோசமான சாவுக்குப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிவான். இருந்த போதிலும், சோழப் பேரரசுக்குத் தமிழகமே தலை வணங்கிக் கொண்டுதான் இருக்கிறது. கருநாடு, வேங்கை நாட்டோடு வடசேரன் பாஸ்கர ரவிவர்மனும் கப்பத்தை ஒழுங்காக அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறான். இலங்கையில் பாதிக்குமேல் சோழர்களின் நேரடி ஆட்சிக்குக் கீழ்தான் இருக்கிறது. இலங்கை மன்னன் மகிந்தனும் அரசாளத் தகுதியற்ற ஒருவன் என்பதோடு மட்டுமின்றி, தென்னிங்கைக்கும் தள்ளப் பட்டிருக்கிறான். இருப்பினும் எப்பொழுதும் சோழர்களின் கடல் வணிகத்திற்குத் தொல்லை தர முனைந்துகொண்டுதான் இருக்கிறான்.

தென்சேரனும், வயநாட்டுத் தலைவனுமான கோவர்த்தன மார்த்தாண்டன் தொல்லை தர வாய்ப்பிருக்கிறது. ஆக, சிங்களவன், மற்றும் தென் சேரன் உதவியுடன் பாண்டியன் படை திரட்டியிருக்கிறான். தஞ்சைக் கோட்டையைக் காக்கவென்று மிகச் சிறந்த படை இருக்கிறது. ஆயினும் பாண்டியன் போருக்கழைத்தால் தந்தை செல்லாமல் இருக்கமாட்டார். குறைந்த படை வீரர்களுடன் தந்தை எப்படி... ?

“அரசே! சிந்தனையைக் கலைப்பதற்கு மன்னியுங்கள். மதிய உணவு கோவில் விடுதியில் ஏற்பாடாகி உள்ளது. அங்கு செல்லலாமா?” என்று வினவுகிறார் பல்லவராயர். போரென்று வந்தால் நாள் கணக்கில் உணவின்றி இருக்கும் அவர், சாதாரண நாள்களில் ஒரு வேளைகூட தாமதித்து உணவு உண்ணமாட்டார். அப்படி ஒரு பழக்கம் அவருக்கு. நான்கு பேர் உணவை அவரே உண்டுவிடுவார். முன் பிறப்பில் தான் ஒட்டகமாகப் பிறந்திருக்கக் கூடும் என்று தன்னைத்தானே நகையாடிக்கொள்ளவும் செய்வார். எனவே, அவர் உணவுண்ணத் தன்னை அழைப்பதில் இராஜேந்திரனுக்கு வியப்பொன்றும் இல்லைதான். தான் இருக்கும்போது தனியாக உண்ணமாட்டார், தவிர இப்பொழுது அவருக்கு பசி வந்து விட்டது என்று அறிந்து கொண்ட இராஜேந்திரன், சரியென்று தலை அசைக்கிறான்.

இருவரும் கோவில் விடுதியை நோக்கி நடக்கிறார்கள்.
* * *
-----------------------------------------------------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு
44ஈராயிரவன் பல்லவராயர் முதலில் இராஜராஜ சோழனுக்கும், பின்னர் இராஜேந்திரனுக்கும் படைத்தலைவராக இருந்தவர்.

No comments:

Post a Comment