Sunday 24 August 2014

தமிழ் இனி மெல்ல :38 மதுவை அருந்தி மதியை இழந்து விட்டீர்களே!

தமிழ் இனி மெல்ல :37 சென்ற இதழ் பதிவின் இறுதியில்
சிவாச்சாரியனின் இந்த ஆராய்வு ஒரு கணம் இராஜராஜரை செயலிழக்கச் செய்துவிடுகிறது. “சேரநாட்டுத் தமிழ் வேறு மொழியாக ஆகிவிடுமா? தமிழை பாரதம் முழுவதும் பரப்ப வேண்டும் என்று தான் நினைப்பது எங்கே? தமிழ் நாட்டின் ஒரு பகுதியிலேயே தமிழ் வேறு மொழியாக மாறும் நிலையில் உள்ளது என்று சிவாச்சாரி சொல்லுவது எங்கே?

“திருப்பணிக் குழலை அளவெண்ணா மகிழ்ச்சியுடன் பெற்று இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே தமிழைப் பரப்புவதை விடுத்து, தமிழைக் காப்பாற்றும் திட்டத்தில் இறங்கும் சூழ்நிலை வந்ததென்ன இறைவா!” என்று திகைக்கிறார் இராஜராஜர்.

“சிவாச்சாரியரே! இதென்ன திடுமென்று இப்படி ஒரு இடியை என் தலையில் இறக்குகிறீர்! என்னால் நம்பவே இயலவில்லையே!”  எதற்கும் தடுமாறாத அவரது குரலில் இலேசான தடுமாற்றம் தென்படுவதைக் காண்கிறான் சிவாச்சாரி.

“என்னை மன்னிக்க வேண்டும், சக்கரவர்த்தி அவர்களே! அதனால்தான் போர்ப் பணியிலிருந்து விடுவித்து, தமிழ் திருப்பணியில் என்னை ஈடுபடுத்துமாறு முதலிலேயே கேட்டுக் கொண்டேன். நமது கவனத்தை பாண்டிநாடு அதிகமாக ஈர்த்துவிட்டது. அதனால் நமது திட்டங்கள் தாமதப் படுத்தப்பட்டு விட்டன.”

“இறந்த காலத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளத்தான் வேண்டுமே தவிர, அதிலேயே புதைந்து போய்விடக் கூடாது. நமது கவனத்தைச் சேரநாட்டுப் பக்கம் உடனே திருப்புவீராக. அங்கு தமிழை மீட்கும் பணியில் உடனே ஈடுபடுவீராக. இனி நாட்டு நிர்வாகத்தில் நான் தலையிடப் போவதில்லை. அதை இராஜேந்திரனே பார்த்துக் கொள்வான். இனி என் இறுதி மூச்சுவரை தமிழ்த் திருப்பணிக்காகவே நான் செயல்படப் போகிறேன். எனக்குப் பிறகும் நீர் இராஜேந்திரனுக்கு தமிழ்ப்பணி ஆர்வத்தை வளர்த்து ஆலோசகராக இருந்து வருவீராக. திருப்பணி நன்கு நடக்க என்னென்ன மானியங்கள் வேண்டுமோ, அதையெல்லாம் நீர் என்னிடம் கேட்டுப் பெறத் தயக்கம் காட்டாதீராக.” அவர் குரலில் இருக்கும் ஆதங்கம் சிவாச்சாரியனுக்கு நன்றாகப் புரிகிறது.

தமிழ் இனி மெல்ல :38 [தொடர்கிறது]
அரிசோனா மகாதேவன் 

இராஜராஜருக்கு களைப்பு மிகுதியாவதை அவன் கண்கள் காண்கின்றன. பாண்டியனுடன் செய்த வாட்போர் அவரது உடல் நிலையை மிகவும் பாதித்திருப்பது கண்கூடாகவே தெரிகிறது.

ஒரே வாரத்தில் படுக்கையில் இருந்து எழுந்து இராஜேந்திரனின் முடிசூட்டு விழாவை முன்னிருந்து நடத்தினார். தனது காயங்கள் மக்கள் கண்களுக்குத் தெரியக் கூடாது என்பதற்காக உடல் முழுவதையும் உத்தரீயங்களால் மறைத்துக் கொண்டதும், அரியணை மண்டபத்தில் தனது தள்ளாடல் தெரியாமலிருக்க தன் தோளில் கையூன்றி மெதுவாக நடந்து வந்ததும் அவன் முன் நிழலாடுகிறது. புயாகலி வீர நடை போடும் அவர் மெல்ல நடந்ததும், காயங்களின் வலியை வெளிக்காட்டாமல் இருக்க உதடுகளைக் கடித்துக் கொண்டதும், அதனால் கசிந்த இரத்தத்தை முகத்தைத் துடைப்பது மாதிரி துடைத்துக் கொண்டதும் அவன் முன் வந்து அவனை வாட்டுகின்றன.
இனி இராஜராஜர் உடல்நிலை முழுவதும் தேறுமா என்று அவனுக்கு அவ்வப்போது ஐயப்பாடு தோன்றி வருகிறது. “கூத்த பிரானே! சக்கரவர்த்தி அவர்கள் பல்லாண்டு நோயற்ற வாழ்வுடன் சிறந்து தமிழ்த் திருப்பணி செய்ய வேண்டும் ஐயா!” என்று மனதிற்குள் வேண்டிக் கொள்கிறான்.

“சிவாச்சாரியாரே! எனக்குக் கொஞ்சம் களைப்பாக இருக்கிறது. பெருவுடையாரைத் தரிசனம் செய்து கொண்டு அரண்மனைக்குத் திரும்பலாம் என்று இருக்கிறேன்.” என்கிறார் இராஜராஜர். அவர் என்ன விரும்புகிறார் என்பதைத் தெரிந்து கொண்டு, அவர் வந்த சிவிகையை அழைக்கிறான் சிவாச்சாரி.

இப்பொழுது அவரால் அதிகமாக நடக்க முடிவதில்லை. அவர் காலில் பட்ட காயம் ஆறி முழுவதும் குணமாகும்வரை அதிகம் நடக்க இயலாது, வடுப்பட்ட இடங்களில் அஞ்சனம் தடவி, உருவி விட வேண்டும், சிறிது சிறிதாகத்தான் அவர் தனது பழைய நிலையைத் திரும்பப் பெறுவார் என்று அரச மருத்துவர் சொல்லியிருக்கிறார். எனவேதான் அவர் எங்கு சென்றாலும் சிவிகையில் செல்ல ஏற்பாடு செய்திருக்கிறாள் குந்தவைப் பிராட்டியார். அது இராஜராஜருக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. இருப்பினும் தனது தமக்கையாரின் அன்புக் கட்டளைக்குக் கட்டுப் பட்டிருக்கிறார் அவர்
.
இராஜேந்திரனே அரசு அலுவல்களை கவனிக்கவேண்டும், தான் அதில் குறுக்கிடக் கூடாது என்று ஒதுங்கியே இருக்க முடிவு செய்திருப்பதால், கருவூராரின் குடில் அவருக்கு அடைக்கலமாக இருக்கிறது. திருக்கயிலைக்குச் செல்ல வேண்டும் என்று கிளம்பிச்சென்ற பிறகு கருவூராரிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை. சோழப் பேரரரைசத் தாண்டிச் சென்றுவிட்டார் என்று மட்டும் எட்டு திங்களுக்கு முன் கருவூரார் கிருஷ்ணா நதியைப் பரிசலில் கடந்து சென்றதைப் பார்த்த ஒருவர் மூலம் கடைசியாகத் தகவல் வந்தது.

“தேவரே! ஏன் திடுமென்று சென்றுவிட்டீர்கள்? தாயைப் பிரிந்த கன்றின் நிலையில்தானே நான் இருக்கிறேன்! தங்களின் அருள் வாக்கைக் கேட்க வேண்டும் போல இருக்கின்றதே! அது நிறைவேறுமா? கயிலைக்குச் சென்று திரும்பி வருவீர்களா? எனக்கும் திருக்கயிலைத் தரிசிக்க ஆவலாக உள்ளது. ஆயினும், நான் சோழப் பேரரசின் எல்லைக்குள் கட்டிப் போடப்பட்டிருக்கிறேனே!” என்று தனக்குள்ளேயே கருவூராரை நினைத்து வருந்துகிறார் இராஜராஜர்.

“சக்கரவர்த்தி அவர்களே! சிவிகை வந்து விட்டது!”  என்று அவரது சிந்தனையைக் கலைக்கிறான் சிவாச்சாரி. அவனது தோளைப் பிடித்தவாறு நடக்கிறார் இராஜராஜர். அவரைப் பெருவுடையார் கோவிலில் சந்திக்கிறாள் குந்தவைப் பிராட்டியார். தமக்கையாரைக் கண்டதும் அவர் முகம் மலர்கிறது. பிராட்டியாரைத் தனது தாயாகவே கருதி வருகிறார் இராஜராஜர். பிராட்டியாருடன் அருள்மொழிநங்கையும் வந்திருப்பது அவருக்கு மிகவும் மகிழ்வை அளிக்கிறது. அவள் தேவாரம் பாடுவது அவருக்கு மிகவும் மன நிம்மதியை அளிக்கும். எனவே, அவளைத் தேவாரம் ஓதுமாறு பணிக்கிறார் அவர்.

“வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி”
என்று திருநாவுக்கரசர் பாடி அருளிய திருத்தாண்டவப் பாட்டை உள்ளம் உருகப் பாடுகிறாள் அருள்மொழிநங்கை. பாடி முடித்ததும் தலைநிமிர்ந்தவள் பின்னால் நிற்கும் சிவாச்சாரியைக் கண்டதும் நாணமுறுகிறாள். அவளது நாணத்தைக் கண்டு மெல்ல நகைத்துக் கொள்கின்றனர் குந்தவைப் பிராட்டியாரும் இராஜராஜரும்.

இராஜராஜர் சிவாச்சாரி பக்கம் திரும்பி, “சிவாச்சாரியாரே, நங்கை பாடிய தேவாரத்தின் பொருளை எங்களுக்கு விளக்கிச் சொல்வீராக!” என்று கேட்டதும் அதை அவர்கள் அனைவருக்கும் நன்றாக பொருள் விளக்கம் செய்கிறான் சிவாச்சாரி. அதை மழைத்துளியை விழுங்கும் சகோரப் பட்சியாக உள்வாங்குகிறாள் அருள்மொழிநங்கை. சிவாச்சாரியனின் தேவார அறிவு அவளை ஆட்கொள்கிறது. தான் தேர்ந்தெடுத்த மணாளர் வெறும் சிவனடியார் மட்டுமல்ல, தேவாரத்தின் பொருளும் தெரிந்த சிவனடியார் என்று மகிழ்வுறுகிறாள்.

“அருள்மொழி, நான் பழையாறைக்குச் சென்றுவிடலாம் என்று இருக்கிறேன்.” என்று இராஜராஜருக்குத் தெரிவிக்கிறாள் குந்தவைப் பிராட்டியார்.

“அக்கையாரே! நீங்கள் என்னைத் தனியாக விட்டுச் செல்லப் போகிறீர்களா?” என்று குழந்தையைப் போல வினவுகிறார் இராஜராஜர்.

“அருள்மொழி, நீயும் என்னுடன் பழையாறைக்கே வந்துவிடேன்! அரசப் பளுவைத்தான் இராஜேந்திரனிடம் ஒப்படைத்து விட்டாய், நீயும் அங்கு இருந்தால் எனக்கும் துணையாக இருக்கும்.” என்று அவரையும் அழைக்கிறாள் பிராட்டியார்.

“அதுவும் நல்லதாகத்தான் படுகிறது அக்கையாரே! நானும் உங்களுடன் பழையாறைக்குக் கிளம்புகிறேன். இராஜேந்திரன் தஞ்சையில் இருந்து அரச விவகாரத்தைக் கவனித்துக் கொள்வான்.” என்று இராஜராஜர் சொன்னதும், அவரை வியப்புடன் நோக்குகிறாள் பிராட்டியார்.

“உண்மையாகவா அருள்மொழி?”
“ஆமாம் அக்கையாரே! எனக்கும் ஓய்வு தேவைப்படுகிறது. நங்கை, நீயும் சிறிது காலம் உன் பாட்டனுடன் பழையாறைக்கு வருகிறாயா? எனது திருமந்திர ஓலைநாயகமான சிவாச்சாரியாரையும் சேர்த்துத்தான் அழைக்கிறேன்.” என்று குறும்பாகக் கேட்கிறார் இராஜராஜர்.

                                                    * * *
                                          அத்தியாயம் 14
                           தஞ்சை அரண்மனை
                          பரிதாபி, மார்கழி 25 - ஜனவரி 9, 1013

மரியாதையாக எழுந்து நிற்கிறாள் நிலவுமொழி. இராஜராஜ நரேந்திரன் பத்தடி தூரம் வருவதற்குள்ளேயே அவனிடமிருந்து வரும் மதுவின் நெடி நிலவுமொழியின் மூக்கைத் துளைக்கிறது. அவன் அளவுக்கும் அதிகமாக மது அருந்திவிட்டு வந்திருப்பது அவளுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. குந்தவி பெருவுடையார் கோவிலுக்குச் செல்லும் சமயம் தானும் கூட வருகிறேன் என்று எப்படிச் சொல்வது என்று தயங்கி அரண்மனையிலே தங்கிவிட்டது தவறோ என்று அவளுக்குத் தோன்றுகிறது. இந்த நேரத்தில், தான் தனியாக இருக்கும் பொழுது மதுமயக்கத்தில் வந்திருக்கிறானே என்பதை எண்ணும் பொழுது அவளுக்கு ஒருவித பயமும் உண்டாகிறது. இருப்பினும் தனது அச்சத்தை அடக்கிக் கொண்டு அவனுக்கு வணக்கம் செலுத்துகிறாள்.

அவளைப் பார்த்து பொருட்செறிவுடன் சிரிக்கிறான் நரேந்திரன். “நிலவு, ஏன் எந்திரிச்சே? உக்காந்துக்கோ! எப்படி இருக்கே?” என்று தமிழில் குழறுகிறான். தமிழ் நாட்டிற்கு வந்து மூன்று மாதங்கள் இருந்து தமிழ் கற்றுக் கொண்டதில் அவனுக்கு தமிழ் நன்றாகப் பேச வந்து விட்டது. அதற்காக மிகவும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாள் நிலவுமொழி. அவன் நன்றாகத் தமிழ் பேச ஆரம்பித்து விட்டால் தான் இனிமேல் அவன் முன்பு இருக்க வேண்டியதில்லை, அவனது ஊடுருவும் பார்வையைத் தாங்க வேண்டியதில்லை என்ற வேகத்துடன் அவனுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்து, அதில் வெற்றியும் கண்டிருக்கிறாள்.

“தங்கள் தயவில் நான் நன்றாகவே இருக்கிறேன் இளவரசே!” என்று தரையைப் பார்த்துக் கொண்டு மெல்லிய குரலில் பதிலளிக்கிறாள் நிலவுமொழி.

“நிலா, ஒங்கிட்டே நான் இன்னிக்கு தனியா பேசியே ஆகணும். அதுக்கு தைரியம் வரணும்னுதான் நிறையக் குடிச்சேன்!” என்று கொச்சையான தமிழில் அறிவித்துவிட்டு, கடகடவென்று சிரிக்கிறான் நரேந்திரன்.

நிலவுமொழிக்கு பகீர் என்கிறது. வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பது போலவும், புழுக்கள் ஊர்ந்து செல்வது போலவும் ஒரு உணர்ச்சி ஏற்படுகிறது. என்ன சொல்லப் போகிறான் இவன்? ஏதாவது ஏடாகூடாமாகச் சொல்லாமல் இருக்க வேண்டுமே என்று கடவுளை வேண்டிக் கொள்கிறாள்.

“நிலா, நீ ரொம்ப அதிர்ஷ்டவதி. அது ஏன் சொல்லு, பார்ப்போம்!”  என்று மீண்டும் கடகடவென்று சிரிக்கிறான் நரேந்திரன்.

“இளவரசே! தங்களுக்கு தமிழ் கற்பிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது அல்லவா! அதுதான் எனது மாபெரும் அதிர்ஷ்டம்!” என்று பேச்சைத் திசை திருப்ப முயல்கிறாள் அவள். தன்னை இதோடு விட்டுவிட மாட்டானா என்று அவள் மனதுக்குள்ளாகவே துடிக்கிறாள்.

“உன்னை எனக்கு தமிளு கத்துக் கொடுக்க எங்க அம்மா ஏற்பாடு செய்தது என்னோட அதிர்ஷ்டம், நிலா! நான் கேக்கறது என்னன்னா - நான் நீ ஏன் அதிர்ஷ்டவதின்னு? பாரு. எனக்கு தமிளு பேசறது எவ்ளோ சிரமமா இருக்கு? நான் கேட்டது உனக்கு தெரியும். பதில் சொல்லு!” குதிக்கிறான் நரேந்திரன்.

“சிவ, சிவ! இப்படிக் கேட்டால் நான் என்ன சொல்வது இளவரசே! நீங்களே சொல்லுங்களேன்!”  சீக்கிரம் சொல்ல வந்ததைச் சொல்லி விட்டுத் தன்னை விடமாட்டானா என்று தவித்த வண்ணம் அவனுக்குப் பதில் சொல்கிறாள் நிலவுமொழி.

“சரி, நேனே செய்தானு... லேது, லேது, நானே சொல்றேனு. நாக்கு உன்மேலே ரொம்ப இஷ்டமு, நிலா. நான் உன்மேலே ரொம்ப ரொம்ப ப்ரியம் வச்சுட்டேனு. நானு உம்மேலே பிரேமமா ஆயிட்டேன். என் ப்ரேமம் கிடைச்சதுனாலே நீ ரொம்ப அதிர்ஷ்டவதி, இல்லையா லேதா?” மிகவும் பெருமையுடன் அவள்மீது தன் மனதில் ஏற்பட்ட வேட்கையை ஒருவிதமாகப் போட்டு உடைக்கிறான் நரேந்திரன்.

அதிர்ந்து போகிறாள் நிலவுமொழி! அவள் இத்தனை நாள் சந்தேகப்பட்டது மெய்யென்று இன்று நிரூபித்துவிட்டானே இவன்! கடவுளே! இவனுக்கு எப்படி அறிவுரை சொல்லிப் புரிய வைப்பது? சாதாரணமாகவே மையல் வெறி தலைக்கேறி உள்ளவன், போதாதென்று மது அருந்திவிட்டு வேறு வந்திருக்கிறானே? தான் சொல்வது எதுவும் இவன் காதில் விழுமா? எப்படியிருந்தாலும் முள்ளில் விழுந்த ஆடையாகிவிட்டது தன் நிலை, மெல்ல மெல்ல விடுவித்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று தீர்மானிக்கிறாள்.

மெதுவாகத் தொடங்குகிறாள் அவள். “இளவரசே, தாங்கள் எங்கே, நான் எங்கே? வேங்கை நாட்டின் வருங்கால மன்னர் தாங்கள். ஏழைத் தமிழ் ஓதுவாரின் மகள் நான். இந்த சோழப் பேரரசுக்கே மருமகப் பிள்ளையாக வரப் போகிறவர் நீங்கள். கோப்பரகேசரியாரின் மகளான அம்மங்கையை உங்களுக்கு மணமுடிக்கப் போவதாகத் தங்கள் தாயார் - குந்தவி மகாராணியார் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நீங்கள் இப்படிப் பேசுவது யார் காதிலாவது விழுந்தால் என்னை சிரச்சேதமே செய்து விடுவார்கள்! இனிமேலும் இப்படிப் பேசாதீர்கள்!” என்று இறைஞ்சுகிறாள் நிலவுமொழி.

“நீ பயப்படாதே, நிலா. ராஜாக்கள் ஒரு பொண்ணுக்கு மேலேயே கல்யாணம் செய்துப்பாங்க. என் மாமாகாரு, தாத்தாகாரு இவங்களுக்கு மூணு, மூணு ராணிங்கோ இருக்காங்க.” என்று பெரிய உண்மையை விண்டு வைப்பதுபோல உரத்த குரலில் அவளுக்குச் சமாதானம் சொல்கிறான் நரேந்திரன்.

“இளவரசே!” என்னும் நிலவுமொழிக்கு நாக்கு உலர்ந்து போகிறது. எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டு, நாவால் உதட்டைத் துடைத்துக் கொள்கிறாள். அவளுடைய ஈரமான உதட்டின் அழகில் சொக்கிப் போகிறான் நரேந்திரன்.

“இளவரசே! அரசர்கள் ஒரு மனைவிக்கு மேல் மணம் செய்வது வழக்கம்தான். ஆனால் அவர்கள் தங்கள் தகுதிக்கு ஏற்றவர்களைத்தான் மணம் செய்து கொள்கிறார்கள். அரியணையில் உடன் அமரும் தகுதி உள்ளவர்களைத்தான் அரச பரம்பரையினர் மணக்க வேண்டும் என்பது தங்களுக்குத் தெரியாத ஒன்றா?” அவள் குரலில் பதட்டம் தென்படுகிறது.

“நிலா! உனக்கு ஒண்ணுமே புரிய லேது. நீ தப்பா அர்த்தம் செஞ்சுக்கிறே! நான் உன்னை ஏதுக்கு கல்யாணம் செய்துக்கணும்? நான் உன்மேலே ப்ரேமையா இருக்கேன். அதுனால நீ என் பிரியநாயகியா ஆகிடு. என் அப்பாவுக்கு நிறைய ப்ரியநாயகிங்கோ இருக்காங்க. அவங்க யாரையும் அவர் கல்யாணம் செஞ்சுக்கலே. அவங்களுக்கு நிறைய சொத்து, வீடு கொடுத்து இருக்காரு. நானும் அதே மாதிரி செய்வேனு. நானு அம்மங்காவை கல்யாணம் செய்து ராணி ஆக்கிப்பேன். உன்னை என்பிரியநாயகியாக வச்சுப்பேன்! அர்த்தம் ஆச்சா?” அவளிடம் நெருங்கி அவள் தோள்களில் கைகளைப் போடுகிறான் நரேந்திரன்.

சட்டென்று நரேந்திரனுடைய பிடியிலிருந்து விடுவித்துக் கொண்ட நிலவுமொழி அவனுடைய வார்த்தைகளைக் கேட்டுப் புழுவாய்த் துடிக்கிறாள். தன்னை அவனது காமக்கிழத்தியாக இருக்கும்படி அல்லவா சொல்கிறான்! வேறுவிதமாகப் பொருள் செய்து கொண்டு, ஒரு கணம் தன்னைக் காதலிக்கிறான் என்று நினைத்தது எவ்வளவு தவறு! இவனது ஆசை தனது உடல்மீதுதான் என்று அறிந்து மனதில் காயப்பட்டுக் கன்னிப் போகிறாள். அவன்மீது இருந்த மரியாதை, பயம் நீங்கி அருவறுப்பும், கட்டுக்கடங்காத கோபமும் பெருகுகிறது.

தான் ஒரு ஏழைத் தமிழ் ஆசிரியரின் பெண்ணாக இருக்கலாம், ஆனால் தனக்கும் மானம், கற்பு உணர்ச்சி இருக்காதா? தன்னை வளர்ப்புப் பெண்ணாக ஏற்று, கற்பனை செய்து கூட பார்க்க இயலாத மதிப்பைக் கொடுத்திருக்கிறாரே கோப்பரகேசரி இராஜேந்திர சோழர்! அவரது மகனுக்கு இவன் துரோகம் செய்ய நினைப்பதோடு மட்டுமல்லாமல், தன்னையுமல்லவா துரோகம் செய்யத் தூண்டுகிறான்! அவரது மகளை மணக்கப் போகும் இவன் இப்படிப்பட்ட மோசமான காமாந்தகாரனா?

சிவாச்சாரி அவளுக்குச் சில மாதங்கள் முன்பு இப்படிப்பட்ட நிலைமையைச் சமாளிக்கச் சொல்லிக் கொடுத்த வழி நினைவுக்கு வருகிறது. உடனே மனதில் குடி கொண்டிருக்கும் அச்சம், தயக்கம் போன்ற உணர்ச்சிகள் அறவே அகன்று போகின்றன.

“இளவரசே! கொஞ்சம் நிறுத்திக் கொள்ளுங்கள்!” சாட்டையைப் போலச் சுள்ளென்று விழுகிறது அவளது குரலின் தொனி.

“நான் ஏழைப் பெண்தான். ஆனால் எனக்கும் தன்மானம் இருக்கிறது! நான் உங்களுக்கு கல்வி கற்றுத் தரும் ஆசிரியை. தாய், தந்தைக்குப் பிறகு வரும் ஆசானின் இடத்தில் நான் இருக்கிறேன். அவர்களை எப்படி நீங்கள் மதிப்பீர்களோ, அப்படி மதிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறேன் நான். எனக்கு ஆசிரியை என்ற மதிப்பைத் தாங்கள் அளிக்காவிட்டாலும் போகிறது. ஆனால் ஆசைநாயகியாக வைத்துப் பார்க்க விரும்புகிறீர்களே, இது வேங்கை நாட்டு இளவரசராகிய தங்களுக்குத் தகுமா? இதுவா தாங்கள் கற்ற கல்வி? தாயின் இடத்தில் இருக்கும் என்னைத் தாரமாக - அது கூட இல்லை, காமத்தைத் தணிக்கக் கூடிய கணிகைப் பெண்ணாக நிறுத்தி வைக்கும் ஆசை தங்களுக்கு எப்படி வருகிறது?

“மதுவை அருந்தி மதியை இழந்து விட்டீர்களே! இதைத் தங்கள் தாயார் கேட்டால் எப்படி மனம் வருந்துவார்கள்? தாங்கள் மது மயக்கத்தில் பேசியதைத் தங்கள் அம்மான் கோப்பரகேசரி கேட்டால்... அருள் கூர்ந்து இந்த இடத்திலிருந்து சென்று விடுங்கள். இனிமேல் தங்களுக்கு கல்வி கற்றுத் தருவது என்னால் இயலாத ஒன்று! திருமந்திர ஓலைநாயகரான சிவாச்சாரியாருக்கு இந்த முடிவை நான் தெரிவித்து விடுகிறேன்!”  தனது சினத்தினால் சிவந்த கண்களின் பார்வையைச் சிறிதும் குறைக்காது, வாசனை நோக்கி விரல்களைச் சுட்டிக் காட்டுகிறாள் நிலவுமொழி.

அவளது ஒவ்வொரு சொற்களும் சவுக்கடிகளாக நரேந்திரன்மீது விழுகின்றன. தன்னையும் அறியாமல் இரண்டு அடிகள் பின்னே எடுத்து வைக்கிறான் அவன்.

அவனது முக அதிர்வுகளைக் கவனித்த நிலவுமொழி சிறிது நிம்மதியடைகிறாள். சிவாச்சாரி தனக்குச் சொல்லிக் கொடுத்தது வழி சரியான ஒன்றுதான் என்று அவள் மனதில் அமைதியும் தோன்ற ஆரம்பிக்கிறது. அவனுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க ஆரம்பித்ததிலிருந்து முதன் முறையாக அவள் மனதில் ஒருவிதமான அமைதி அவள் மனதில் தோன்றத் துவங்குகிறது.

“சரியாகச் சொன்னாய், நிலவுமொழி! மிகவும் சரியாகச் சொன்னாய்! என்னை மிகவும் பெருமைப் படுத்திவிட்டாய்!” என்றபடி அங்கு வருகிறாள் குந்தவி. இருவரும் திடுக்கிட்டுப் போகிறார்கள்.

“இராஜராஜ நரேந்திரா! மாபெரும் சோழப் பேரரசின் சக்கரவர்த்தியான என் தந்தையின் பெயரை முதலில் வைத்துக் கொண்டு இத்தகைய இழிவான பேச்சுக்களைப் பேச எப்படி உனக்கு மனம் வந்தது? நிலாவிடம் ‘உன்னை மணமுடிக்க விரும்புகிறேன்! என்று நீ சொல்லியிருந்தால்கூட நான் மனம் வருந்தியிருக்க மாட்டேன். ஆனால் அவளைக் காமக்கிழத்தியாக இரு என்று கேட்டதைக் கேட்டு வெதும்பிப் போனேனடா! எனது ஒரே மகனான நீ இப்படியா நடப்பாய்! நிலாவைத் தவிர வேறு யாராக இருந்தாலும் உன்னைத் தன் வலையில் வீழ்த்தியிருப்பார்கள்.

“ஆனால் அவள் எவ்வளவு விவேகமாகப் பேசினாள் பார்த்தாயா? போய்விடு! உடனே இங்கிருந்து போய்விடு! நீ தமிழில் பேச வேண்டும் என்று நான் துடியாகத் துடித்தேன். ஆனால் நீ தமிழில் பேசிய இவ்வார்த்தைகளைக் கேட்டு, நீ ஏன் தமிழ் கற்றுக் கொண்டாய் என்று வேதனைப் படுகிறேன். துடிக்கிறேன். ஆசிரியையைக் காமக்கிழத்தியாக இருக்கிறாயா என்று கேட்பதற்கா புனிதமான தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டாய்! நீ பேசிய தமிழ் இனி போதும்! போய் விடு, போய்விடு. என்னை நிம்மதியாக இருக்கவிட்டுப் போய்விடு!” என்று நரேந்திரனைப் பார்த்து இறைகிறாள் குந்தவி.

என்றுமே  முன்கோபியான அவள் தன் மகன் இப்படி நடந்து கொள்வதைப் பார்த்துச் சும்மாவா இருப்பாள்?

நரேந்திரனின் முகம் வாடிப் போய் விடுகிறது. அத்துடன் மதுவின் மயக்கமும் இறங்கிப் போய் விடுகிறது. உடல் முழுவதும் இனம் காணாத கோபத்தினால் எரிச்சல் ஏற்படுகிறது. இருவரையும் முறைத்துப் பார்க்கிறான். பதிலே பேசாமல் திரும்பி நடக்கிறான்.

பெரிதாக விம்மல் வெடிக்கிறது நிலவுமொழியிடமிருந்து. குலுங்கி குலுங்கி அழுகிறாள் அவள். “என்னை மன்னித்து விடுங்கள் மகாராணி! நான் இளவரசரை மிகவும் அவமானப் படுத்தி விட்டேன்! அவர் இம்மாதிரி எண்ணத்துடன் என்னை நோக்குகிறார் என்பதை முன்னரே தங்களிடம் தெரிவித்து, தமிழ் கற்றுக் கொடுக்கும் பணியிலிருந்து நின்று விட்டிருக்க வேண்டும். அதை விடுத்து இளவரசர் தமிழ் பேசினால் தாங்கள் மிகவும் மகிழ்வீர்களே என்று அமைதியாக இருந்தது என் தவறுதான்!”  என்று விம்முகிறாள் அவள்.

குந்தவியின் கண்கள் கண்ணீரைச் சொரிகின்றன. “அழாதே நிலா, அழாதே! உன் கடமையைத்தான் நீ செய்ய நினைத்தாய்! ஆனால் இவன் இப்படி நடந்து கொள்வான் என்று உனக்குத் தெரியுமா? இனிமேல் நீ அவனுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டாம்! மற்றவர்களிடம் அவன் தமிழ் க்ற்றுக் கொண்டாகிவிட்டது என்று சொல்லி விடலாம்.” அவளது குரல் நிலவுமொழியைச் சமாதானப் படுத்துகிறது.

அவர்கள் இருவரும் பேசுவது நடந்து செல்லும் நரேந்திரனின் காதில் விழுகிறது. அவன் தன் நடையை வேகப் படுத்துகிறான். அவனது நெஞ்சம் குமுறுகிறது. “போயும் போயும் எங்கோ அடித்தளத்தில் ஒரு ஓதுவாரின் மகளாய்ப் பிறந்தவள் என்னை அவமானப் படுத்தி விட்டாளே! இவளை என்ன நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றா நினைக்கிறாள்! என்னைப் போன்ற ஒரு இளவரசன் தன்னை ஆசைநாயகியாக வைத்துக் கொள்வேன் என்று சொன்னது எவ்வளவு அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாமா? என் பார்வைக்காக வேங்கை நாட்டில் எத்தனை பெண்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்? என் காலடியில் விழுந்து கிடக்க போட்டி போட்டுக் கொண்டல்லவா வருவார்கள்![வளரும்]

No comments:

Post a Comment