Friday 29 August 2014

மாறவேண்டும் என்று மனப்பூர்வமாக நினைத்தால் எதுவும் மாறும்

கவிதாயினி ஜி.ஜே.தமிழ்ச்செல்வி 
                     அன்றாடம் ஒரு பார்வை 

மாறவேண்டும் என்று மனப்பூர்வமாக நினைத்தால் எதுவும் மாறும்


இன்று தான் விநாயக சதுர்த்தி. ஆனால் நேற்றிலிருந்தே எங்கள் ஊரும் எங்கள் தெருவும் களைகட்டிவிட்டன அலுவலகம் முடித்து களைப்புடன் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தேன்.  எங்கள் தெரு முனை நுழையும் போதே, தெரு முழுவதும் சீரியல் பல்ப்புகள் எரிந்துக்கொண்டிருந்தன  எல்லாம் என்னை வரவேற்பதற்காக அமைக்கப்பட்டதைப் போன்ற பிரமை. 

என்னிடம் மாலைக்  கதைகள் பேச வேண்டும் என்ற பெண்மணி இருவரை நெருங்கி இன்னைக்கு நம்ம தெருல என்ன விசேஷம்? என்றேன்.

அதில் ஒருவர் "நாளைக்கு பிள்ளையார் வைக்கப் போறாங்க அதுதான் என்று எனக்கு பதில் அளித்துவிட்டு, கிஸ்டின் இல்லையா அதான் தெரியல!"ன்னு பக்கத்துல இருக்குகிறவர்களுக்கு  விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்த போதே நான் அவர்களை கடந்து விட்டேன்.

 அவர்கள் சொல்லித்தான் நான் கிறிஸ்டியன் என்ற ஞாபகமே எனக்கு வந்தது. எனக்குள் நான் ஹிந்து, முஸ்லிம், ஜெயின், புத்திஸ்ட், பார்சி என்று நான் படித்திருந்த மத நூல்களின் சாராம்சமும் மகான்களின் நூல்களும் எல்லாம் சேர்ந்து ஒரு நிறைவைத் தந்திருந்தன .

 நான் கவிதை எழுதுபவள். மானுடம் முழுவதற்கும் சொந்தமானவள். எவருடைய மதப்பற்றும் புண்ணாகக் கூடாது என்று கருதுபவள்.

ஆனால் விழாக்களைக் கொண்டாடுகிற காரணம் வைத்துக்கொண்டு பிறருடைய சகிப்புத்தன்மையை எல்லை மீறிச் சோதிக்கிற பண்பை என்னால் ஏற்க முடியவில்லை; பொறுத்துக்கொள்வது சிரமம்.

வெளியே பிள்ளையார் பாடல்கள் காதைப் பிளந்தன.  
பிள்ளையார் காதுகள்  யானைக் காதுகள். எதையும் தாங்கும். 
என் காதுகள் சிறியவை. 

ஒலிபெருக்கியின் ஓலத்தைச் சகிக்கமுடியவில்லை. காதுகளில் பஞ்சு வைத்து அடித்துக் கொண்டாலும் திருவிழாக்களின்  அடிப்படை கருத்துக்களை தொலைத்து விட்டு நமக்கு நாமே தீங்கு விளைவித்துக்கொள்வதாக தோன்றியது எனக்கு.

முன்பெல்லாம் சாணத்தில் பிள்ளையார் பிடித்து நடுவீட்டில் வைப்பதை தான் பார்த்திருக்கிறேன்.

மாறிவரும் நவநாகரீக உலகத்தில் விதவிதமான வடிவங்களில்  வண்ண வண்ண நிறங்களில் அழகாக சிரிக்கிறார் விநாயகர்.

கடவுள் நம்மைப் படைத்தார் என்ற கருத்து போய்  கடவுளை நாம் விதவிதமாகப் படைத்துக்கொண்டிருப்பதாக நினைத்து எனக்குள் நானே சிரித்துக்கொண்டேன்.

இந்தச்  சிலைகளின் முடிவை நான் எண்ணிப் பார்த்தேன். இவை யாவும் குளக்கரை,கிணற்றங்கரை,கடற்கரை என்று எந்தெந்த தெளிவான நீர்நிலை களிலோ கரைந்து சேறாகி   நம் நீர்நிலைகளையும் சுற்றுப்புறங்களையும் அசுத்தப்படுத்தும்

பக்தியின் பேரால் நடக்கும் இந்த கோலாகலங்கள் மாறவே மாறாதா?

மாறவேண்டும் என்று மனப்பூர்வமாக நினைத்தால் மாறும். மாறவேண்டும் 


No comments:

Post a Comment