Friday 22 August 2014

தமிழ் இனி மெல்ல :[37]சேரநாட்டுத் தமிழ் வேறு மொழியாக ஆகிவிடுமா?


தமிழ் இனி மெல்ல :[36]சென்ற இதழ் தொடர்ச்சி 
இராஜராஜர் சிவாச்சாரி பக்கம் திரும்பி, “உமக்கு யாம் சக்கரவர்த்தியா, அல்லது எமது மகளா? யாமா உம்மிடம் இருக்கும் இலச்சினைகளையும், உமது உயிரையும் கேட்டோம்? எமக்குத் திரை செலுத்தும் நாட்டின் ஒரு பெண்ணின் குற்றச்சாட்டுக்கு முன், பெண் பிள்ளையாகக் குரல் தழுதழுப்பது சோணாட்டு ஓலைநாயகத்தின் முறைமையா?” என்று வினவுகிறார்.
கண்களில் தாரையாக நீர்ப் பெருக்கெடுக்கிறது குந்தவிக்கு.
...சற்று முன்பு குந்தவைப் பிராட்டியார் சிவாச்சாரியிடம், “சிவாச்சாரியாரே! நீர் சரியான ஆள்தான். சோழ அரசிளங்குமரி அருள்மொழி நங்கையின் மனதைக் கவர்ந்து விட்டீரே! அவள் பெருவுடையாரிடம்,
“உன் அடியார் தாள் பணிவோம்
ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்”
என்று வாக்குறுதி தினமும் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும், தனது பாட்டனாருக்கு வலது கையாகவும், தமிழ்த் திருப்பணி ஆலோசகராகவும், இப்பொழுது திருமந்திர ஓலைநாயகமாகவும் இருக்கும் சிவனடியாரான சிவாச்சாரியரைத் தன் மனதில் மணாளராக வரித்து விட்டதாகவும், இனி யாரையும் அவள் கண்கள் நோக்கா, எவருக்கும் அவள் இதயத்தில் இடமில்லை, அவள் வாழ்க்கைத் துணைவராக வல்லார் யாருமிலர் என்று சொல்லிவிட்டாள். என்ன செய்து அவள் மனதைக் கவர்ந்தீர்?” என்று சற்றுமுன் கேட்டதைத் தான் வேறு விதத்தில் பொருள் செய்து கொண்டு விட்டோமே, தனது அவசரத்தால் தன்னை அதிர்ந்து பேசாத தனது தந்தையாரை, சக்கரவர்த்தியாகத் தன்னை ஆணையிடும் குரலில் பேச வைத்துவிட்டோமே என்று குன்றிப் போகிறாள்...[தொடரும்]
-----------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் இனி மெல்ல :[37] தொடர்கிறது

                         

அரிசோனா மகாதேவன் 

“அருள்மொழி! குந்தவி உன் எதிரில் தான் ஒரு நாட்டு அரசி என்பதை மறந்து இப்பொழுதும் சின்னஞ் சிறுமியாகி விடுகிறாள் என்று உனக்குத் தெரியாதா? மாறாகப் பேசினால் தந்தையாக அவளைத் திருத்தாமல் சக்கரவர்த்தியாக அவளை நடத்துவதா? மருமகப் பிள்ளையாக வரப் போபவர் முன்பு இப்படியா நாம் நடந்து கொள்வது? அவரை நாம் சம்மதிக்க வைப்பதற்குப் பதில் அச்சப்படுத்தி அனுப்பி விடுவோம் போல இருக்கிறதே! பிறகு நங்கைக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்?” என்று புன்னகையுடன் தன் தம்பியைக் கடிந்து கொண்ட குந்தவைப் பிராட்டியார், தன் தம்பி மகள் பக்கம் திரும்பி, “குந்தவி, நீ ஏனம்மா இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு விட்டாய்? நீ மிகவும் பொறுமைசாலி ஆயிற்றே! கண்களைத் துடைத்துக் கொள். ஒரு நற்செயல் பற்றிப் பேச ஆரம்பிப்பதற்கு முன் இப்படிக் கண்ணீர் சிந்தக் கூடாது!”  என்று இதமாகச் சொல்கிறாள்.

“சிவாச்சாரியாரே! இப்பொழுது உமக்கு நிலைமை தெரிந்தாகி விட்டதல்லவா? எமது அருமைப் பேத்தி அருள்மொழிநங்கை உம்மை விரும்புகிறாள். உம்முடைய பதில் எமக்குத் தேவை. நீர் யாருக்கும் அச்சப்படாது உமது பதிலைச் சொல்லும். உம்மீது எங்கள் யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை. திரிபுவன மகாதேவியின் அபிப்ராயத்தைத் தெரிந்து கொள்ள மதுராந்தகன் உம் மூலமாகவே அவனுக்குத் திருமுகமும் கொடுத்தனுப்பியிருந்தான். சம்மதம் என்று பதில் ஓலையும் கிடைத்துவிட்டது. எங்கள் அனைவருக்கும் சம்மதம்தான். உம் விருப்பம்தான் எங்களுக்குத் தெரியவேண்டும்.” என்று கனிந்த குரலில் கேட்கிறாள் குந்தவைப் பிராட்டியார்.

அவளை நிமிர்ந்து நோக்குகிறான் சிவாச்சாரி. அறுபத்தெட்டு வயதானாலும் நிமிர்ந்த தோற்றம், பனித்த முடியை எடுத்துக் கொண்டையாகக் கட்டிய விதம், நெற்றி நிறையத் திருநீற்றுப் பட்டைகள் மூன்று, துணைவரை இழந்ததால் கட்டிய வெள்ளை நிற ஆடை, மிகவும் குறைவான பொன்னாபரணங்கள் - காதில் தொங்கும் குழைகள், கருணை நிறைந்த விழிகள் - இவற்றைக் கண்டதும் அமைதி கொள்கிறான். இராஜராஜர், மற்றும் குந்தவைப் பிராட்டியாரின் பேச்சு அவனுக்கு நிம்மதியையும், இயல்பான மனநிலைமையையும் வரவழைக்கின்றன. மூச்சை நன்றாக இழுத்துவிட்டுக் கொண்டு அனைவரையும் நோக்கிப் பேச ஆரம்பிக்கிறான்.

“எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அரசிளங்குமரிக்கு இந்த ஏழை அந்தணனை மணமுடிக்க விருப்பம் வரலாமா? தங்கள் தகுதிக்கேற்ற ஒரு வீரரான அரசகுமாரருக்கல்லவா அவரைப் பட்டத்து இளவரசியாக மணவினை செய்ய வேண்டும்? நான் ஊழியனல்லவா?

“தவிரவும், நான் அவரைவிட பதிமூன்று வயது மூத்தவன். மேலும் திருமணமாகி ஒரு குழந்தைக்கும் தந்தை ஆகியவன். சோழநாட்டின் அரசிளங்குமரி ஒரு அந்தணனின் இரண்டாம் தாரமாவது முறையா? இது தகுமா? தாங்கள் அவருக்கு அறிவுரை சொல்லி அவரது மனத்தை மாற்றியிருக்க வேண்டாமா? என்ன இப்படி ஒரு இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையில் நிறுத்தி என் விருப்பத்தைக் கேட்கலாமா? தங்களின் ஆணையை நிறைவேற்றவே பிறந்தவன் நான். எனது விருப்பத்தைக் கேட்கும் நிலையிலா நான் இருக்கவேண்டும்? இதற்கு நான் என்ன பதில் சொல்ல இயலும்? புலிகளுடன், பூனை சமமாக அமரலாமா? என் இறைவா! இப்படிப் பட்ட நிலைக்கு என்னை தள்ளுவதும் உமது திருவிளையாட்டா? சக்கரவர்த்தி அவர்களே, கோப்பரகேசரி அவர்களே, பிராட்டியாரே! என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறேன் நான்.” என்று உருக்கமான குரலில் பதில் சொல்கிறான் சிவாச்சாரி.

“ஓலைநாயகரே! உமது விருப்பத்தைத் தெளிவாகச் சொல்ல மறுக்கிறீர். எனவே, உமக்கு ஆணையிடுகிறோம். எமது பேத்தியை நீர் வரும் தை மாதம் முதலில் வரும் நல்ல நாளில் மணமுடிப்பீராக!” இராஜராஜர் கனிந்த, ஆனால் கண்டிப்பான குரலில் கூறி, தன் மகள் குந்தவியையும், இராஜேந்திரனையும் பொருட் செறிவுடன் நோக்குகிறார்.

“நண்பரே! சிவாச்சாரியாரே! நீர் எனது மருமகனாக வருவதில் எனக்கும் அளவுகடந்த மகிழ்ச்சியே! எமது பட்டத்து ராணிக்கும், நங்கையின் தாய் பஞ்சவன்மாதேவிக்கும் இதில் விருப்பமே!” என்று புன்னகைக்கிறான் இராஜேந்திரன்.

“சிவாச்சாரியாரே! எனது அவசரப் புத்தியாலும் உம்மைப் பற்றிச் சரிவர அறியாமலும் அளவுக்குமீறி, தரக்குறைவாகப் பேசியதற்கு வருந்துகிறேன். இவற்றை நீர் மனதிற் கொள்ளாமலிருப்பீராக. எனது மருமகளை நீர் மணமுடிக்க எனக்கும் சம்மதம்தான்.” குந்தவியின் குரலில் கொஞ்சம் கரகரப்பு இருந்தாலும், அவள் மனப் பூர்வமாகவே அதைச் சொல்கிறாள் என்று சிவாச்சாரியனால் புரிந்து கொள்ள முடிகிறது.

சில கணங்கள் அமைதியாக இருக்கிறான் சிவாச்சாரி.

“சக்கரவர்த்தி அவர்களே! தங்கள் ஆணையை மறுக்க இம்மாநிலத்தில் யாருக்கும் துணிவில்லை. தங்கள் சித்தம் எனது பாக்கியம். மணவினை பற்றி எனது சில கருத்துகளைத் தாங்கள் பரிசீலனைக்கு வைக்கத் தங்கள் அனுமதியைக் கோருகிறேன்.” என்று இராஜராஜரைக் கேட்கிறான்.

“ம்!”  என்று தலையாட்டுகிறார் இராஜராஜர்.

“என்னை மணந்த பின்னர் அரசிளங்குமரி தன்னுடைய இளவரசிக்கான உரிமையைத் துறந்துவிட வேண்டும். மேலும் சைவ உணவையே உண்ண வேண்டும். மற்றும், சூரிய வம்சத்தில் வந்த சோழர்களுக்கு இந்த அந்தணனின் வழித்தோன்றல்கள் என்றும் ஊழியர்களாக இருக்கவேண்டுமே தவிர, அரசோச்சும் உரிமை ஒருபோதும் நல்கப் படக்கூடாது. இதுதான் இந்த ஊழியனின் விருப்பம்.”

சிவாச்சாரியனின் இந்தச் சொல்லைக் கேட்டதும் அனைவரும் சிலையாகி விடுகின்றனர். தன்னை மணப்பதென்றால் அருள்மொழி நங்கை சாதாரணக் குடிமகள் ஆகவேண்டும் என்ற நிபந்தனையை எவ்வளவு துணிச்சலாக சக்கரவர்த்திமுன் வைக்கிறான்?!

“ஓலைநாயகரே! உமது விருப்பத்திற்கான காரணத்தை அறிய யாம் விரும்புகிறோம்.” இராஜராஜரிடமிருந்து கேள்வி பிறக்கிறது.

“சக்கரவர்த்தி அவர்களே! அரச பரம்பரையில் வந்தவரே அரசராகத் தகுந்தவர் என்பது எனக்கு என் குருதேவர் கருவூரார் போதித்த பாடமாகும். அந்தணர்களுக்கு அரசாளும் மன வலிமை கிடையாது என்பதும், அரச குலத்தோருக்கு நிகராக தன்னையும், தனக்கு உரிமையான அனைத்தையும் நாட்டிற்காகத் துறக்கும் தியாக மனப்பாங்கும் குறைவு என்பதே அவர் அறிவித்த நல்மொழியாகும். இதை நிரூபிக்க பலப்பல எடுத்துக் காட்டுகளையும் அவர் எனக்குச் சொல்லி வைத்திருக்கிறார். அரசரின் நம்பிக்கைக்கு எவ்வளவுதான் பாத்திரமானாலும் - ஒரு குறுநில மன்னனாகும் ஆசையைக்கூட மனதில் தோன்ற விடக்கூடாது என்று என் நெஞ்சில் தனது சொற்களைப் பசுமரத்து ஆணியாக அறைந்துதான் அழைத்து வந்தார். அதை நான் நிறைவேற்ற வேண்டும் என்றால் - சோழப் பேரரசின் ஊழியனான எனது மனைவி எப்படி இளவரசிக்கான உரிமையைக் கோரலாம்? எங்கள் வழித்தோன்றல்கள் எப்படி அரச உரிமைக்குப் பாத்திரமாகலாம்?

“நான் சிவாச்சாரி, சைவ உணவு தவிர எதையும் உண்ணாதவன், மது அருந்தாதவன். எனவே, அரசிளங்குமரி முன்பு எப்படி இருந்தாலும், எனது மனையாட்டியானால் அதற்கேற்ப ஒழுக வேண்டும்!”  தெளிவாகப் பதில் வருகிறது.

“மெச்சினோம், உமது அரசப் பற்றை! நங்கை! இங்கே வா!”  என்று உரத்த குரலில் அழைக்கிறார் இராஜராஜர்.

திரைச்சீலையை விலக்கிக் கொண்டு இராஜராஜர் அருகில் வந்து நிற்கிறாள் அருள்மொழி நங்கை. அவளை அன்புடன் தன் அருகில் இருத்தி வைத்துக் கொள்கிறார் இராஜராஜர். அவள் இத்தனையையும் கேட்டுக்கொண்டுதான் இருந்தாளா என்று திகைக்கிறான் சிவாச்சாரி.

“நங்கை! நீ எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டுதானே இருந்தாய்! உன் முடிவு என்ன? இளவரசி உரிமையை இவருக்காக விட்டுக் கொடுக்க உனக்குச் சம்மதமா? உனது மக்கள் அரச உரிமையை இழக்கவும் நீ சம்மதிக்கிறாயா? யோசித்துப் பதில் சொல் குழந்தாய்!”  என்று மிகவும் கனிந்த குரலில் கேட்கிறார் இராஜராஜர்.

“பாட்டனாரே, எனக்கு என்றுதான் அரசாங்கத்தில் விருப்பம் இருந்தது?
“உன் அடியார் தாள் பணிவோம்
ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
இன்னவகையே எமக்கு எங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம்
“என்றுதானே தினமும் நான் பெருவுடையாரைப் பூசித்து வந்திருக்கிறேன். நான் சிவபிரான் மீது பற்று வைத்ததிலிருந்து அசைவ உணவையும், மதுவையும் தொட்டதில்லையே? அப்படி இருக்க, இனிமேலா அவற்றில் நாட்டம் செலுத்தப் போகிறேன்? மற்ற விஷயங்களில் அவர் விருப்பம்தான் என் விருப்பம். சிவத் தொண்டரான அவர் சொற்படி நடப்பதே சிறந்த சிவபூசையாகும்!” என்று அருள்மொழி நங்கையிடமிருந்து அடக்கமாகப் பதில் வருகிறது49.
                                                       * * *
கருவூரார் குடில் - பெருவுடையார் கோவில் நந்தவனம்
     பரிதாபி, ஐப்பசி 18 - நவம்பர் 3, 1012

“சக்ரவர்த்தி அவர்களே! நான் நெடுங்காலம் தமிழ்த் திருப்பணியில் கவனம் செலுத்தாமல் அரசு அலுவல்களிலும், போர் உரையாடல்கள், ஆலோசனைகள் இவற்றில் கழிக்க நேர்ந்து விட்டது. இதுவரை நமது திருப்பணி முயற்சியில் ஏற்பட்ட வெற்றி, பாண்டி நாட்டில் வட்டெழுத்துக்குப் பதில் நமது கிரந்த எழுத்துகளைப் பரப்பியது மட்டுமே! வடவேங்கடத்திற்கும் வடக்கே வடபெண்ணையின் தென் கரை வரை தமிழைப் பரப்பியிருக்கிறோம். கருநாட்டுப் பக்கம் எதுவுமே செய்யவில்லை.

“இது இப்படி இருக்க, சேரர்கள் நம்பூதிரி அந்தணர்களின் சொற்களுக்கு மதிப்புக் கொடுத்து “மணிப் பிரவாள” நடையில் வடமொழியைக் கலந்து தமிழைப் பேச முயன்று வருகிறார்கள். அங்கு நாம் இன்னும் கொஞ்சம் அதிகமாகத் தமிழ் ஆசிரியர்களை அனுப்பி வைக்க வேண்டும் நம்பூதிரி அந்தணத் தலைவர்களுடன் தாங்கள் பேச்சு வார்த்தை நடத்தி, தமிழில் அவர்களின் அளவிலா வடமொழிக் கலப்பைக் குறைக்குமாறு ஆணையிட வேண்டும். தமிழ்க் கலைகளை வளர்க்க நாம் ஆவன செய்ய வேண்டும்.” என்று பேசிக்கொண்டே செல்கிறான் சிவாச்சாரி.

அவன் கூறியதைக் கண்களை மூடிக்கொண்டு செவிமடுக்கிறார் இராஜராஜர். எந்த ஒரு விஷயத்திலும் ஆழ்ந்த கவனம் செலுத்தும்போது கண்களை மூடிக் கொள்வது அவரது வழக்கம் என்பதைச் சிவாச்சாரி தெரிந்து கொண்டிருந்ததால் தான் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அவரது கவனத்திலிருந்து மீளவில்லை என்பதில் அவன் ஐயமே அடையவில்லை.
“மேலும், நமது கோவில்களை தமிழ்க் கலைகளை வளர்க்கும் கூடமாக ஆக்கவேண்டும் சக்கரவர்த்தி அவர்களே! இப்பொழுது ஆடல்கள், பாடல்கள் இவற்றைச் செய்து வருபவர்களை ஒருவிதமான காட்சிப் பொருள்களாக, தங்கள் கீழ் மட்ட உணர்வுகளை நிறைவேற்றிக் கொள்ள உதவும் கருவிகளாகவே பயன்படுத்தி வருகிறார்கள் என்பது தாங்கள் அறியாத ஒன்று அல்ல. அதை உணர்வை அறவே நீக்கி, அக்கலைகளை உயர்வாகப் போற்றி ஏத்த ஒரு வழியைத் தாங்கள் காட்ட வேண்டுகிறேன்.” இராஜராஜரின் மறுமொழியை எதிர்நோக்கித் தன் பேச்சை நிறுத்திக் கொள்கிறான் சிவாச்சாரி.


இராஜராஜரின் விரல்கள் மெல்ல மடங்கி மடங்கி விரிகின்றன. அதைக் கவனித்த சிவாச்சாரி, அவர் தான் சொன்ன விஷயங்களைப் பற்றித் தன் மனதில் ஆராய்கிறார் என்பதைப் புரிந்து கொள்கிறான். அவரின் சிந்தனைத் தொடரைத் தடம் புரளச் செய்யாது அவராகப் பதில் சொல்லும் வரை தான் அமைதியாக இருப்பதே சிறந்தது என்று அவரை உற்று நோக்குகிறான். ஐந்து நிமிடங்கள் கழித்து கண்களைத் திறக்கிறார் இராஜராஜர்.

“இறைவனடிமை!” அவர் உதடுகள் பிரிந்து வார்த்தை வெளிவருகிறது.

“ஆம்! தமிழ்க் கலையை இறையனார் கோவிலில் வளர்க்கும் பாவைகளை இறைவனடிமை50 என்று அமைப்பதே சாலச் சிறந்ததாகும்.” என்று விளக்கம் கொடுக்கிறார் இராஜராஜர்.

“குடும்பப் பெண்கள் யாரும் மற்றவர் முன்பு ஆடவோ, பாடவோ மாட்டார்கள். தங்களது உடல்மீது மற்ற ஆடவர்களின் பார்வை படுவதையும் விரும்பமாட்டார்கள். ஆகவே முத்தமிழ்க் கலைகளையும் முறைமையாகக் கற்று, அக்கலைகளைப் போற்றி வளர்க்க பெண்கள் தானாக முன்வர வேண்டும். அதை மக்கள் யாவரும் கண்டு மகிழ்ச்சி அடைய வேண்டும். அக்கலையை இறையனார் முன்பு போற்றி வளர்க்கும் அப்பெண்கள் காலம் முழுதும் கன்னியராக இருந்து வருதல் வேண்டும்.

“எனவே கலைகளை அனைவரும் கண்டு களிக்கும் அளவுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் அந்தப் பெண் தெய்வங்கள் தாயாக வணங்கப்படுதல் வேண்டும். அப்படி அவர்கள் வணக்கத்துக்கு உரியவர்கள் ஆகவேண்டும் என்றால் அவர்களின் நிலை உயர்த்தப்படுதல் அவசியம். அதற்காக கலைகளைக் கற்றுணர்ந்த அவர்கள் ஒரு சிறப்பான சடங்கின் வாயிலாக இறைவனாருக்கு மனைவியராக, அடியார்களாக, ஊர்முன் அறிவிக்கப் படுவார்கள்.

“இறைவனாருக்கு மனைவியர் மக்கள் அனைவருக்கும் தாய்மார்கள் ஆவார்கள் அல்லவா? அப்பொழுது அவர்களின் மீது படும் அனைவரின் பார்வையும் குழந்தைகளை மகிழ்விக்கப் பாடும், ஆடும் தாயைக் காண்பது போல ஆகிவிடும். அதில் விகல்பம் இருக்காது, வணக்கம் இருக்கும். மதிப்பு இருக்கும், மயக்கம் இருக்காது.

“அவர்களுக்கு அரசில் இருந்து மானியம் வழங்குவோம். அவர்கள் அனைவரையும் உயர்குடிப் பெண்களுக்கு இணையாக மதிக்க வேண்டும் என்று அறிவிப்போம். அவர்களுக்கு கலைகளைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் கோவில் சொத்து மூலம் வருமானம் கிடைத்து வரச் செய்வோம். இந்த எண்ணத்தைச் செயல்படுத்தி மெருகூட்ட இன்னும் என்ன செய்யலாம் என்று சொல்லும்,” என்று தன் எண்ணத்தை வெளியிடுகிறார் இராஜராஜர்.

அவரது உன்னதமான தொலைப்பார்வையை எண்ணி வியக்கிறான் சிவாச்சாரி. “ஆணையிடுங்கள், சக்கரவர்த்தி அவர்களே! தமிழ்நாட்டுக் கோவில்கள் அனைத்திலும் இறைவனடிமைகள் தமிழ்க் கலைகளை வளர்க்கத் திட்டம் தீட்டி நிறைவேற்றுகிறேன்!” என்று ஆர்வத்துடன் பதிலளிக்கிறான் சிவாச்சாரி. கலைகளை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், அதற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்பவர்களின் சமூகத் தரத்தையும் உயர்த்தி, வணங்கச் செய்பவர்களாக்கவும் வேண்டும் என்று அறிவிப்பதன் மூலம், கலைஞர்களையே புனிதப் படுத்திவிடலாமே!

“சேர நாட்டைப் பற்றி யோசிப்போம். எனக்கு நம்பூதிரி அந்தணர்களைப் பற்றிச் சிறிது விளக்கிச் சொல்வீராக!” என்று கேட்கிறார் இராஜராஜர்.

.
“அவர்களைப் பற்றி வழங்கும் கூற்று ஒன்று இருக்கிறது. பரசுராம முனிவர் சேரநாட்டை கடலிலிருந்து தனது கோடாரியால் தோண்டி எடுத்ததாகவும், அந்நாட்டை நம்பூதிரி அந்தணர்களுக்கு அவர் வழங்கியதாகவும் அக்கூற்று சொல்கிறது. நாடாள்வதில் விருப்பமில்லாததால், நம்பூதிரிகள் ஆளும் பொறுப்பை சேரமான்களுக்கு வழங்கிவிட்டு, இறை வழிபாட்டில் காலத்தைக் கழித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.” விளக்கம் கூற முற்படுகிறான் சிவாச்சாரி.

“சோழ நாட்டு வேதியர்களுக்கும், அவர்களுக்கும் இந்தக் கூற்றைத் தவிர என்ன மாறுபாடு?”

“சோழ, மற்றும் பாண்டிய நாட்டு வேதியர் மந்திரம், ஆகமம் மூலம் இறை வழிபாடுகளை நடத்துகிறார்கள். நம்பூதிரிகள் தந்திர முறைப்படி வழிபாடு நடத்துகிறார்கள். ஆயினும் அவர்களது மாந்திரீக முறைபாடுகளுக்குச் சேரநாட்டார் ஒருவித பயங்கலந்த மதிப்புக் கொடுக்கிறார்கள். அதனால் தங்களை மிகவும் உயர்வாகவே எண்ணுகிறார்கள் நம்பூதிரி அந்தணர்கள்.

“அவர்களுக்குள் கட்டுப்பாடு மிகவும் அதிகம். வடமொழியில் மிகுந்த பற்று உள்ளவர்கள். அதனால், மலைநாட்டுத் தமிழையே வடமொழியாக்கி வருகிறார்கள்.” நிறுத்துகிறான் சிவாச்சாரி.

“விளக்கிச் சொல்லும்!”  என்று கேட்கிறார் இராஜராஜர்.

“இங்கு வடமொழிப் பெயர்ச் சொற்களை நாம் தமிழில் கலந்து பேசுகிறோம். உதாரணமாகத் தண்ணீர் “சலம்” என்றும், ஒளி “சோதி” என்றும், ஒலி “சத்தம்” என்றும் புனித வாவிகள் “தீர்த்தம்” என்றும் வழங்கப்படுகின்றன. தொல்காப்பியரும் தமது இலக்கண நூலில் வடமொழிச் சொற்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் விதித்திருக்கிறார். நாம் வடமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்கிறோமே தவிர, தமிழைப் பேசும் விதத்தில் மாற்றம் செய்வதில்லை. ஆனால் நம்பூதிரி அந்தணர்கள் வடமொழிச் சொற்களையே வினைச் சொற்களாகப் பயன்படுத்துகிறார்கள். தேடுவது என்பதை “அன்வேஷிப்பது” என்கிறார்கள், பிறப்பதை “ஜனிப்பது” என்கிறார்கள்.”

“அதற்கும் இங்கு நாம் செய்வதற்கும் என்ன மாறுபாடு?” கேள்வி பிறக்கிறது இராஜராஜரிடமிருந்து.

“சக்கரவர்த்தி அவர்களே! பெயர்ச் சொற்கள் உடை என்றால் வினைச் சொற்கள் உயிர் எனலாம். என்னதான் பெயர்ச் சொற்களாக வேற்று மொழிச் சொல்கள் கையாளப் பட்டாலும் மொழி அழியாது. தமிழ்ச் சொல்லான “மீன்” வடமொழியில் கையாளப் படுகிறது. ஆனால் வினைச் சொற்கள் மாற்றப் பட்டுவிட்டால் ஒரு மொழி தனது உருவத்தை இழந்து விடுகிறது. மொழி வேறாக மாறிவிடுகிறது. அதனால்தான் நமது குருதேவர்கூட இதைப் பற்றித் தங்களிடம் திருப்பணித் துவக்கத்தின் போது தெரிவித்தார். அதனால் நாம் சேரநாட்டின் மீது உரிய கவனம் செலுத்தாவிட்டால், அங்கு பேசும் மலைத்தமிழ் வேறு ஒரு மொழியாக ஆகிவிட வாய்ப்பு இருக்கிறது.”

சிவாச்சாரியனின் இந்த ஆராய்வு ஒரு கணம் இராஜராஜரை செயலிழக்கச் செய்துவிடுகிறது. “சேரநாட்டுத் தமிழ் வேறு மொழியாக ஆகிவிடுமா? தமிழை பாரதம் முழுவதும் பரப்ப வேண்டும் என்று தான் நினைப்பது எங்கே? தமிழ் நாட்டின் ஒரு பகுதியிலேயே தமிழ் வேறு மொழியாக மாறும் நிலையில் உள்ளது என்று சிவாச்சாரி சொல்லுவது எங்கே?

“திருப்பணிக் குழலை அளவெண்ணா மகிழ்ச்சியுடன் பெற்று இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே தமிழைப் பரப்புவதை விடுத்து, தமிழைக் காப்பாற்றும் திட்டத்தில் இறங்கும் சூழ்நிலை வந்ததென்ன இறைவா!” என்று திகைக்கிறார் இராஜராஜர்.

“சிவாச்சாரியரே! இதென்ன திடுமென்று இப்படி ஒரு இடியை என் தலையில் இறக்குகிறீர்! என்னால் நம்பவே இயலவில்லையே!”  எதற்கும் தடுமாறாத அவரது குரலில் இலேசான தடுமாற்றம் தென்படுவதைக் காண்கிறான் சிவாச்சாரி.

“என்னை மன்னிக்க வேண்டும், சக்கரவர்த்தி அவர்களே! அதனால்தான் போர்ப் பணியிலிருந்து விடுவித்து, தமிழ் திருப்பணியில் என்னை ஈடுபடுத்துமாறு முதலிலேயே கேட்டுக் கொண்டேன். நமது கவனத்தை பாண்டிநாடு அதிகமாக ஈர்த்துவிட்டது. அதனால் நமது திட்டங்கள் தாமதப் படுத்தப்பட்டு விட்டன.”

“இறந்த காலத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளத்தான் வேண்டுமே தவிர, அதிலேயே புதைந்து போய்விடக் கூடாது. நமது கவனத்தைச் சேரநாட்டுப் பக்கம் உடனே திருப்புவீராக. அங்கு தமிழை மீட்கும் பணியில் உடனே ஈடுபடுவீராக. இனி நாட்டு நிர்வாகத்தில் நான் தலையிடப் போவதில்லை. அதை இராஜேந்திரனே பார்த்துக் கொள்வான். இனி என் இறுதி மூச்சுவரை தமிழ்த் திருப்பணிக்காகவே நான் செயல்படப் போகிறேன். எனக்குப் பிறகும் நீர் இராஜேந்திரனுக்கு தமிழ்ப்பணி ஆர்வத்தை வளர்த்து ஆலோசகராக இருந்து வருவீராக. திருப்பணி நன்கு நடக்க என்னென்ன மானியங்கள் வேண்டுமோ, அதையெல்லாம் நீர் என்னிடம் கேட்டுப் பெறத் தயக்கம் காட்டாதீராக.” அவர் குரலில் இருக்கும் ஆதங்கம் சிவாச்சாரியனுக்கு நன்றாகப் புரிகிறது.[வளரும்]
------------------------------------------------------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு 
49அருள்மொழிநங்கை யாரைத் திருமணம் செய்து கொண்டாள் என்பது சரியாகத் தெரியவில்லை. அவளது வழித்தோன்றல்களும் அரச உரிமை கோரியதாகத் தெரியவில்லை. கதாசிரியர்கள் தங்கள் கற்பனைக்குத் தகுந்தவாறு அவள் திருமணத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். இராஜேந்திரனின் தளபதியும், ஓலைநாயகமும் ஆகிய இராஜேந்திர சோழ பிரம்மராயரின் மகன் பெயர் மறையன் அருள்மொழி என்று இருப்பதால், சிவாச்சாரியனுக்கும், அருள்மொழிநங்கைக்கும் திருமணம் நடக்கிறது என்று கற்பனை செய்யப் படுகிறது.

50கோவில்களில் ஆடல் பாடல் கலைகளை வளர்த்தவர்கள் தங்களை இறைவனுக்கு அடிமையாக அர்ப்பணித்துக் கொண்டதால் அவர்களுக்கு இறைவனடிமை என்ற பெயர் கொடுக்கப்பட்டது. பின்னர் அது தேவதாசி என்று வடமொழிக்கு மொழிமாற்றம் செய்யப் பட்டது. ஆரம்பத்தில் அவர்கள் கன்னியராகவே காலம் கழித்தார்கள். காலம் செல்லச் செல்ல, அந்த உன்னதமான நிலையிலிருந்து அவர்கள் வீழ்ந்து, இறைவனடிமையிலிருந்து, தேவதாசிகளாக மாற்றி அழைக்கப்பட்டு, பின்னர் தாசிகளாக, ஏன் வேசிகளாகும் நிலைமைக்கும் தள்ளப் பட்டார்கள். இந்திய விடுதலைக்குப் பின்னர் தேவதாசிகள் முறை தடை செய்யப்பட்டது

No comments:

Post a Comment