Saturday 16 August 2014

தமிழ் இனி மெல்ல [35] பெருகும் குருதியில் உறுதிமொழி எடுக்கிறான்

தமிழ் இனி மெல்ல [34]சென்ற பதிவின் இறுதியில்
நிலவுமொழிக்கு குந்தவி அருகில் இருப்பது மன நிம்மதியைத் தருகிறது. எதைப் பற்றியும் மனதை அலையவிடாமல் தமிழ்ப் பேச்சு கற்றுக் கொடுப்பதிலேயே கவனத்தைச் செலுத்தலாமே! “இன்று இராஜராஜ நரேந்திரனிடமிருந்து தப்பி விட்டோம். விரைவிலேயே அவன் தேர்ச்சி பெற்றுவிட்டால் ஒருவழியாக அவனிடமிருந்து விடுதலை பெற்று விடலாம். மற்ற வேலைகளில் கவனத்தைச் செலுத்தலாம்.” என்று தனக்குள்ளே சொல்லிக் கொள்கிறாள்.
கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள் இராஜராஜ நரேந்திரனின் தமிழ் மொழியோசைத் திருத்துவதில் கவனத்தைச் செலுத்துகிறாள் நிலவுமொழி. தான் சொல்ல வந்ததைச் சொல்ல இயலாது போனதும், தாய் அருகில் அமர்ந்திருப்பதால் நிலவுமொழியின் அழகை ரசிக்கமுடியாததும், இராஜராஜ நரேந்திரனுக்கு எரிச்சலை மூட்டினாலும், அவனைப் பாடத்தில் கவனத்தைச் செலுத்த வைக்கிறது. எனவே, கல்வியில் அவனது ஏற்புத் தன்மையின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி கலந்த நிறைவு பெறுகிறாள் நிலவுமொழி. குந்தவிக்குத் தன் மகனின் ஆழ்ந்த கவனம் மகிழ்ச்சி கலந்த பெருமையை வரவழைக்கிறது. மூவரும் தத்தம் நிலையில் நிறைவாகச் செயல்படுகிறார்கள்.
“ல, ள, ழ” இந்த மூன்று எழுத்துக்களின் மொழி ஓசையைச் சரிப்படுத்தி முடிப்பதற்கும், தாதி ஒருத்தி, தஞ்சையிலிருந்து ஓலைதாங்கி ஒருவர் வந்திருப்பதை அறிவிப்பதற்கும் சரியாக இருக்கிறது.
“உள்ளே அழைத்து வா!” என்ற குந்தவியின் மனதில் பரபரப்பு மிகுகிறது. அவசரமாகத் தன் தமையன் கிளம்பிச் சென்றதிலிருந்து தகவல் ஏதும் வரவில்லை. என்ன ஆயிற்றோ, ஏது ஆயிற்றோ, அப்படி என்ன முக்கியமான பணியோ, என்று அவ்வப்போது அவளது மனம் அடித்துக்கொள்ளும். எனவே, தஞ்சையிலிருந்து ஓலைதாங்கி வந்திருப்பதாகச் சொன்னதும் என்ன செய்தி வந்திருக்கும் என்று ஆவலுடன் எதிர்நோக்குகிறாள்.
தாதியுடன் சிவாச்சாரி உள்ளே நுழைகிறான். அவனைப் பார்த்த நிலவு மொழியின் முகம் முழுநிலவாக மலர்கிறது. “வணக்கம் சிவாச்சாரியாரே!” என்று தரையில் படிந்து வணங்குகிறாள். இதுவரை சிவாச்சாரியைப் பார்த்திராத குந்தவி, “யாரிந்த சிவாச்சாரியார்? சோழ நாட்டுத் தலைமை அதிகாரியின் உடை அணிந்திருக்கும் இவரா ஓலைதாங்கி? இவரே நேரில் வந்திருப்பதால் என்ன செய்தி கொண்டு வந்திருப்பார்?” என்று திகைத்து நிற்கிறாள்.
* *                                                            *
தமிழ் இனி மெல்ல [35] தொடர்கிறது



அரிசோனா மகாதேவன் 

                                  அத்தியாயம் 12
                  தஞ்சை கோட்டைச் சிறை
              பரிதாபி, ஆவணி 30 - செப்டம்பர் 15, 1012

நன்றாகக் கண்களைத் திறந்து பார்க்கிறான் அமரபுஜங்கன். சிறையின் கற்சுவர்கள் அவனைத் திரும்ப நோக்குகின்றன. உடலில் பட்ட காயங்கள் முக்கால் வாசிக்கு மேல் ஆறியிருக்கின்றன. திருமாறன்தான் அருகில் இருந்து தன்னைக் கவனித்துக் கொள்கிறான் என்பதைத் தவிர அவனுக்கு வேறு எந்த ஆறுதலும் இல்லை.

இராஜராஜர் தேர்ந்தெடுத்த வாளில் போர் செய்து பழக்கம் இல்லாததால் அது தனக்கு ஒரு சுமையாக அமைந்ததோடு மட்டுமின்றி தன்னைத் தோற்கடிக்கவும் காரணமாக அமைந்துவிட்டதை நினைத்துப் பார்த்து நினைத்துப் பார்த்துக் குமுறுகிறான்.

அவ்வப்பொழுது அரசு மருத்துவரே தன்னை வந்து பார்த்து கவனித்துக் கொள்வது அவனுக்கு ஒரு புதிராகவும் இருக்கிறது. சிறையில் கைதியாக இருக்கும் தன்னை இராஜராஜர் இவ்வளவு மரியாதையுடன் நடத்துவது அவனுக்கு ஒரு வகையில் மகிழ்ச்சி அளித்தாலும், இன்னொரு வகையில் சிறைப் பிடிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு சேதியும் இல்லாமல் தனித்து விடப்பட்டிருப்பது - திருமாறன் மட்டுமே துணையாக இருக்கும்படி விடப்பட்டிருப்பது - பாதாளச் சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் கீழ்த்தரமான கைதி போல உணர வைக்கிறது. மெல்லப் புரண்டு படுக்கிறான்.

“என்ன வேண்டும் அரசே?” என்று குரல் வருகிறது திருமாறனிடமிருந்து.

“ஒன்றுமில்லை திருமாறா, வெறுமேதான் புரண்டு படுத்தேன்.” என்று பதிலளிக்கிறான். திருமாறனை நினைத்தால்தான் அவனுக்குத் தொண்டையை அடைக்கிறது. தான் சிறை பிடிக்கப்பட்டதும், மீன் கொடியையும், சமாதானக் கொடியையும் பிடித்துக் கொண்டு, சோழர் பக்கம் வந்து, தன்னையும் பாண்டிய மன்னருடன் சிறைக் கைதி ஆக்கும்படி இராஜராஜரிடம் அவன் முறையிட்டது அவன் நினைவுக்கு வருகிறது.

இராஜராஜர் ஏன் என்று வினவியதற்குத் தான் பாண்டிய மன்னரின் மெய்க்காப்பாளன், காயம்பட்டு விழுந்திருக்கும் அவருடன் தான் இருந்தாக வேண்டும்,  அப்படி இருக்க விடாவிட்டால், தனது தலையைக் கொய்த பின்னரே அங்கிருந்து அவர்கள் செல்ல இயலும் என்று திருமாறன் துணிச்சலாக அறிவித்ததும், அவனது அரசப் பற்றை மெச்சி, அவனது வேண்டுகோளுக்கு இராஜராஜர் சம்மதித்ததும் அமரபுஜங்கன் மனதில் பசுமையாகப் பதிந்திருக்கிறது.

தனது நிலைமையைக் கருத்தில் வைத்து நல்ல படுக்கை அளித்திருப்பதையும், உடல்நிலை தேறும் வகையில் உணவு அளிக்கப் படுவதையும் நினைத்துப் பார்க்கிறான். வலது கையில் இராஜராஜர் தாக்கியதில் ஏற்பட்ட காயத்தால் அதன் உபயோகம் மிகக் குறைந்த நிலையில் திருமாறன்தான் தனது வலது கையாக இருந்து வருகிறான் என்பது அவனை நெகிழ வைக்கிறது. இப்படி அரசப் பற்று உள்ள ஊழியனுக்குத் தகுந்த வெகுமதி அளிக்கக்கூட இயலாத நிலையில் தான் இருப்பதைப் பாரக்கும்போது தன் மீதே அவனுக்கு வெறுப்பாக இருக்கிறது. சேரமான், சிங்களப் படைத்தலைவன், மற்றும் போரே செய்யாமல் அநியாயமாகத் தங்கள் உயிரை இழந்த ஆறாயிரம் வீரர்களுடன் தானும் வீர சொர்க்கமடைந்து, இழி நிலையை அடையாது இருந்திருக்கலாமே என்று எண்ணிப் பார்க்கிறான்.

வாட்போரில் இராஜராஜரைக் கொல்லும் வாய்ப்புகள் இரண்டு கிடைத்தும், அதைப் பயன்படுத்தாமல் அவரைத் தோற்கடிக்க வேண்டும், அவரைச் சிறைப்பிடிக்க வேண்டும் என்று விட்டதே அவனை அதிகமான விழுப்புண்கள் பெறச் செய்து, கடைசியில் தோல்வியும் அடையச் செய்து விட்டதே என்பதை எண்ணும் பொழுது மனம் குமுறுகிறது. இராஜராஜரைத் தான் கொன்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறான்.

அன்று அதோடு போர் நின்றிருக்கும். சோழச் சக்கரவர்த்தி இராஜராஜரை எமனுக்கு அனுப்பிய பாண்டியன் என்ற பட்டப் பெயர் கிடைத்திருக்கும். தன்னைத் தேடிப்பிடித்து அழித்த பின்னால் இராஜேந்திரனால் மதுரை சூறாடப்பட்டிருக்கும் - இருந்த போதிலும் பாண்டி நாட்டை அடிமை கொண்ட இராஜராஜரை - வீரபாண்டியரின் தலையைக் கொய்து சிறுமைப் படுத்திய சோழனின் தம்பியைக் கொன்ற புகழாவது கிடைத்திருக்கும். அதை ஏன் செய்யாமல் விட்டு விட்டோம், மீன் கும்பலுக்கு ஆசைப்பட்டு, கையில் கிடைத்த ஒரு பெரிய மீனை விட்டுவிட்டோமே என்று வருந்துகிறான். கடைசியில் வரலாறு இராஜராஜரிடம் போரிட்டு அமரபுஜங்கன் சிறைப் பிடிக்கப்பட்டான் என்றுதானே கூறும் - அவரைக் கொல்லக் கிடைத்த இரண்டு வாய்ப்புகளை, பாண்டிநாட்டைச் சோழர்கள் பிடியிலிருந்து விடுவிக்கும் உன்னதமான முயற்சிக்காக விட்டுக் கொடுத்து ஏமாந்தான் என்றா கூறும்?

அவனையும் அறியாமல் அவனிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளியேறுகிறது - இரு கண்களில் இருந்தும் கண்ணீர் கோர்த்து வழிகிறது.

“அரசே, என்ன ஆயிற்று? ஏனிந்தக் கண்ணீர்?” பதட்டத்துடன் வினவுகிறான் திருமாறன்.

“திருமாறா! இப்படி ஒரு நிலைமை எனக்கு ஏற்பட்டிருக்கிறதே! இளவரசன் விக்கிரமன் என்ன செய்வான்? நான் உத்திரவிட்டபடி உன் தம்பி வெற்றிவீரன் அவனைப் பத்திரமாக இலங்கைக்குக் கூட்டிச் செல்வானா? இல்லை, விக்ரமன் மதுரையில் இருந்து என்னைச் சிறை மீட்கப் படையுடன் வருவானா? அப்படிச் செய்தால் இராஜேந்திரன் அவனை அழித்துவிட மாட்டானா? இராஜராஜன் மாதிரி கருணையா காட்டுவான்? இப்படிப் பலவிதமான எண்ணங்கள் என்னைச் சுற்றி சுற்றி வந்து வாட்டுகின்றன திருமாறா! சேரமானும், சிங்களவனும் வீரசொர்க்கம் அடைந்து விட்டனர். இனி இலங்கை மன்னன் மகிந்தன் எப்படி நமக்கு உதவுவார்? பாண்டிய நாடு எத்தனை காலம்தான் சோழர்களுக்கு அடிமையாக இருக்கும்?” ஆற்றாமையில் புலம்பலாக வெளிவருகிறது அமரபுஜங்கனின் பேச்சு.

“நிலைமை மாறும் அரசே! பாண்டிய வீரர்கள் கண்டிப்பாகச் சோழர்களைத் தோற்கடிப்பார்கள். உறையூரையும், தஞ்சையையும் நெருப்பிற்கு இரையாக்குவார்கள்.” என்று கோபத்துடன் சூளுரைக்கிறான். அது நிறைவேற இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாகும் என்பது அவனுக்கோ, அமரபுஜங்கனுக்கோ தெரிய நியாயமில்லைதான்!”

“அந்தப் பெருமை தரும் நாளைப் பார்க்க நான் இருக்க மாட்...” திடுமென்று இருமல்கள் பீறிட்டுக்கொண்டு கிளம்புகின்றன அமரபுஜங்கனிடமிருந்து. உடனே அவனைத் தாங்கிப் பிடிக்கிறான் திருமாறன். இருப்பினும் நிலை கொள்ளாமல் இருமுகிறான் அமரபுஜங்கன். அடங்காத இருமல்கள் அவனது உடலைத் தூக்கித் தூக்கிப் போடுகின்றன். அவனது வாயிலிருந்து இரத்தம் கலந்த கோழை வழிகிறது. அதை வழித்து எறிகிறான் திருமாறன். அவன் முகம் கவலையில் வாடுகிறது. “யாரது? அரசருக்கு மருத்துவ உதவி தேவை! உடனே வாருங்கள்!” என்று கத்துகிறான்.

மீண்டும் மீண்டும் இருமுகிறான் அமரபுஜங்கன். கோழைக்குப் பதிலாக இரத்தமாகவே வாந்தி எடுக்கிறான். தூக்கிப்போடுவது வலிப்பாக மாறுகிறது. கைகளும், கால்களும் வெட்டிவெட்டி இழுக்கின்றன. அவனது உடலில் இருக்கும் ஆறாத காயங்கள் சிலவற்றிலிருந்து இரத்தம் கசிய ஆரம்பிக்கிறது.
திருமாறன் திரும்பத் திரும்ப உரத்த குரலில் கத்தி உதவிக்கு அழைக்கிறான். யாரோ தடதடவென்று படிகளில் இறங்கி வரும் ஒலி கேட்கிறது.

காவலர்கள் இரண்டு பேர் மருத்துவர் ஒருவருடன் வருகிறார்கள். காவலரில் ஒருவன் பூட்டைத் திறந்து கதவைத் திறக்கிறான். பாண்டிய மன்னனின் துடிப்பைப் பார்த்த மருத்துவர் அவசரமாக வந்து அவனது கையைப் பிடித்து நாடியைப் பார்க்கிறார்.

அமரபுஜங்களின் உடல் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அடங்குகிறது. திறந்த கண்களில் விழிகள் அசையாமல் நின்று விடுகின்றன. மருத்துவர் மெல்ல அவன் கையைக் கீழே வைக்கிறார்.
* * *
                       கோதாவரி ஆற்றங்கரை, வேங்கை நாடு
                     பரிதாபி, புரட்டாசி 3 - செப்டம்பர் 18, 1012
திரிபுவன மகாதேவியாருடன் சிவாச்சாரி கோதாவரி நதிக்கரைக் கூடாரத்தில் பேசிக் கொண்டிருக்கிறாள். அவன் பேசுவதை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாலும் அவள் அதை ரசிக்கவில்லை என்பது அவளது முகமே காட்டுகிறது.

“சிவாச்சாரியாரே! நீர் என்ன சொன்னாலும் சரி, நானில்லாமல் மன்னருக்குப் பட்டாபிஷேகமா? இது என்ன கூத்து? நான்தானே பட்டத்து ராணி! நானில்லாமல் இவரும் எப்படி மகிழ்வாக மகுடத்தைச் சூடிக் கொள்ளச் சம்மதித்தார்? நீங்கள் எல்லோரும் சக்கரவர்த்திகள் சொன்னார் என்று எதிர்க் கேள்வி கேட்க அஞ்சுகிறீர்கள், அது சரி, ஆனால் மன்னராவது எடுத்துச் சொல்லவில்லையா? தந்தையாருடன் பேச அஞ்சுபவர் அல்லரே அவர்!” என்று பொறிந்து தள்ளியவள், மன்னர் என்று இராஜேந்திரனைக் குறிப்பிட்டுப் பேசியவள், மேலும் தொடர்கிறாள், “எத்தனை காலம் மன்னர் காத்துக் கொண்டிருந்தார்! . தான் ஓய்வெடுத்துக் கொண்டு தமிழ்த்  திருப்பணியில் முழுக் கவனத்தையும் செலுத்தப் போவதாகவும், அதற்காக நான் அவர்களுடன் பணியாற்றவேண்டும் என்றும் ஆணையிட்டு விட்டார்கள். சக்கரவர்த்தி அவர்களின் உடல்நிலை பற்றி வதந்தி எதுவும் பரவக் கூடாது என்றுதான் நான் வேங்கை நாட்டு மன்னரிடமோ, மற்றும் குந்தவி ராணியாரிடமோ எதுவும் கூறவில்லை. தங்களுக்கு நிலைமை தெரிந்தாக வேண்டும் என்றே இவ்வளவு தூரம் வந்த பிறகு தனியாக உங்களுக்கு எல்லா விவரத்தையும் தெரிவிக்கிறேன். எனவே, தாங்களும் தஞ்சை வந்து சேரும்வரை சக்கரவர்த்தி அவர்களின் உடல்நிலை பற்றிய சேதியை இரகசியமாக வைத்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன்.” தணிந்த குரலில் வேண்டிக் கொள்கிறான் சிவாச்சாரி.

“அப்படியே செய்கிறேன் சிவாச்சாரியாரே!” என்று உறுதி அளிக்கிறாள் திரிபுவன மகாதேவி.

“அம்மா, நிலவுமொழியைப் பாரம்மா, நான் விளையாடக் கூப்பிட்டால் வரமாட்டேன் என்கிறாள்.” என்று செல்லமாகக் குறை கூறிக்கொண்டே கூடாரத்திற்குள் நுழைகிறாள் அம்மங்கை.

                           நெல்லை அரண்மனை, தென்பாண்டி நாடு
                  பரிதாபி, புரட்டாசி 20 - அக்டோபர் 5, 1012

விக்கிரம பாண்டியனின் முகத்தில் தோன்றிய உணர்ச்சிகளை வெற்றிவீரனால் புரிந்துகொள்ள இயலவில்லை. தந்தை அமரபுஜங்கன் தஞ்சைச் சிறையில் இறந்து விட்டார் என்ற செய்தியைக் கொணர்ந்த தூதுவனை ஒன்றுமே பேசாமல் திருப்பி அனுப்பிவிட்டு கன்னத்தில் கைகளை ஊன்றியவாறு அமர்ந்திருக்கிறான் விக்கிரமன். அவனது நிலைமை இனம் புரியாத கலக்கத்தை உண்டாக்குகிறது வெற்றிவீரனுக்கு
.
தஞ்சைச் சிறையில் அமரபுஜங்கன் இருபது நாள்களுக்கு முன்னர் இறந்துவிட்டார் என்ற இராஜராஜரின் அனுதாபச் செய்தியை சோழத் தூதுவன் மதுரைக்குக் கொணர்ந்தான். அமரபுஜங்கன் இறந்தவுடனேயே அருகில் இருந்த சிறைக் காவலனின் உடைவாளைச் சட்டென்று உருவி தங்கள் குலவழக்கப்படி வீரமாறன் தனது கழுத்தைத் தானே அறுத்துக் கொண்டு உயிர் நீத்தான் என்றும் அச்செய்தி தெரிவித்திருந்தது.

நெல்லை (திருநெல்வேலி) மாளிகையில் இருக்கும் விக்கிரமனுக்கு இச் செய்தி பற்றி பாண்டிய அமைச்சர் அனுப்பிய ஓலைதான் சற்றுமுன் வந்து சேர்ந்தது. அந்த ஓலையில் இருக்கும் செய்தியை அறிந்த விக்கிரமன்தான் இப்படிப் பித்துப் பிடித்தவன் போல அமர்ந்திருக்கிறான்.

தமையனை இழந்த வருத்தம் வெற்றிவீரனுக்கு இருந்தாலும், போரில் மன்னர் உயிர் துறந்தால் தானும் உயிரைத் துறக்கவேண்டும் என்னும் குலவழக்கத்தைச் சிறையில்கூட நிலைநாட்டியது அவனுக்கு ஒருபுறம் பெருமையாகத்தான் இருக்கிறது. தனது பாட்டனார் வெற்றிமாறர் தனது மன்னருக்காகப் பழிவாங்கிவிட்டுத்தானே தனது உயிரை மாய்த்துக் கொண்டார்!

இனி விக்கிரமனின் உயிருக்காக உயிரைக் கொடுக்கும் கடமை தனக்கு வந்து சேர்ந்திருக்கிறது என்பதையும் அறிந்து கொள்கிறான். விக்கிரமனுக்கு ஏதாவது ஆறுதல் சொல்லவேண்டும் போலத்தான் இருக்கிறது. அவனைத் தூக்கி வளர்த்தவனாயிற்றே வெற்றிவீரன்! இனி விக்கிரமனை மறைவாக வைத்துப் பாதுகாக்கும் பொறுப்பு அவனுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அதைப் பற்றி அமரபுஜங்கனின் ஆணையை வீரமாறன் அவனுக்குத் தெளிவாகவே சொல்லிவிட்டுத்தான் சென்றிருந்தான்...

...“வெற்றிவீரா! போரில் நாம் வெற்றி பெறுவது உறுதிதான். தற்பொழுது அரசர் இல்லாதபோது மதுரை அவ்வளவு பாதுகாப்பான இடம் அல்ல. சோழ ஒற்றர்கள் நடமாட்டம் அதிகமாகிவிட்டது. ஆகவே அவரை நெல்லைக்கு அழைத்துச் சென்றுவிடு. என்றுமே தென்பாண்டிச் சீமையில் உள்ளவர்களுக்கு அரசப் பற்று மிக அதிகம். எங்களது வெற்றிச் செய்தி வந்ததும் இளவரசரை அழைத்துக் கொண்டு மதுரை வந்து சேர். இருப்பினும், மாறாக ஏதாவது நடந்தால் இளவரசரை சோழர்களிடமிருந்து மறைத்து வைத்துக் காப்பாற்றுவது உன் பொறுப்பு.” என்று தெள்ளத் தெளிவாகச் சொன்னதோடு மட்டுமல்லாமல், வீரமாறன் தன்னிடம் அமரபுஜங்கன் மீன் இலச்சினை பதித்துக் கொடுத்த திருமுகத்தையும் கொடுத்து, “மாறான செய்தி வந்தால் மட்டுமே இத் திருமுகத்தை இளவரசரிடம் நீ கொடுக்க வேண்டும். வெற்றிச் செய்தி வந்தால் இதைத் திரும்ப என் மூலம் அரசருக்கு சேர்ப்பித்துவிட வேண்டும் என்பது மன்னரின் ஆணை. காளையப்பனை இளவரசரின் வலது கரமாக இருக்கச் சொல்.” என்றும் சொல்லியிருந்தான்...
...விக்கிரமனின் நெடுநேர அமைதி அவனுக்கு யுகக் கணக்காகக் காத்திருப்பது போலத் தோன்றுகிறது. கடைசியாக அமைதியைக் கலைக்கிறான் விக்கிரமன்.

“எழுந்திரும் வெற்றிவீரரே, நாம் மதுரைக்குச் செல்வோம். படையைத் திரட்டி தந்தையாரின் அவப் பெயரை நீக்கத் தஞ்சையைத் தவிடு பொடியாக்குவோம். என் உயிரைக் கொடுத்தாவது இதைச் சாதிப்போம்!”  விக்ரமனின் குரலில் வீரம் இருந்தது. கண்களில் இலேசாகப் பனித்த கண்ணீரும் வீரத்தின் அனலில் வற்றியது வெற்றிவீரனுக்கு நன்றாகத் தெரிந்தது.

“அரசே!” வழக்கமாக அழைக்கும் இளவரசே என்ற அடைமொழியை விட்டுவிட்டு, முதன்முதலாக அரசே என்று விக்கிரமனை விளிக்கிறான். “அரசே! தான் வீரசொர்க்கம் அடைந்தால் தங்களிடம் கொடுக்கச் சொல்லி மன்னர் இத் திருமுகத்தை என் அண்ணன் மூலம் அனுப்பியிருந்தார். இதோ அத்திருமுகம்.” என்று தனது இடுப்பில் கட்டிவைத்திருந்த திருமுகத்தை விக்கிரமனிடம் கொடுக்கிறான் வெற்றிவீரன்.

கண்கள் பெரிதாக விரிகின்றன விக்கிரமனுக்கு. தன் தந்தையார் தனக்குக் கடைசியாக அனுப்பிய செய்தியா? அப்படியானால் தான் தோல்வியுறுவோம் என்று எதிர்பார்த்தாரா, அல்லது வீரசுவர்க்கம் அடைந்தாலும் அடைவோம் என்று நினைத்தாரா? வெற்றி நிச்சயம் என்று அனைவரிடமும் வீரமுழக்கம் செய்தவர் மரண சாசனத்தை ஏன் எழுதிக் கொடுத்திருக்கிறார்? அவசரம் அவசரமாக மீன் இலச்சினை உடைத்து, திருமுகத்தைப் பிரித்து வாய்விட்டுப் படிக்கிறான் விக்கிரமன்.

“நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! என் அருமை மைந்தா, நீ இத்திருமுகத்தை நீ படிக்க நேரிட்டால் நான் இவ்வுலகை விட்டு சொக்கநாதனின் திருவடிகளைச் சேர்ந்து விட்டேன் என்று அறிவாயாக. “தென்னாடுடைய இறைவனான நீ ஆண்ட மதுரை மாற்றானுக்குத் திரை செலுத்த வேண்டிய சூழ்நிலையால் ஏற்பட்ட அவச்சொல்லை எத்தனை நாள்கள்தான் தாங்குவேனய்யா, உன்னிடம் சேர்த்துக்கொள்! என்று அவனுடைய திருவடியைச் சரணடைந்து விட்டேன் என்பதுதான் உண்மையாகும். என் இறைவன் திருவிளையாடல் பல புரிந்த மதுரையைத் திரை செலுத்தும் அடிமையாக இருக்கும் நான், நமது முன்னோர்களின் அரியணையில், அவர்கள் அணிந்த மகுடத்தை அணிந்து, அவர்களது வீரவாளையும், செங்கோலையும் ஏந்தி எப்படி ஆட்சி செய்வது என்று நொந்துதான், அவற்றையெல்லாம் இலங்கையில் பாதுகாப்பாக வைத்துவிட்டேன் என்பது உனக்கே தெரியும்.

“அந்நிலையை மாற்றவேண்டும், மதுரையின் பெருமையை நிலைநாட்டவேண்டும் என்ற அவாவில்தான் நான் அலைந்து திரிந்து படை திரட்டி இராஜராஜனைச் சிறைப் பிடிக்கச் செல்கிறேன். அந்த உன்னதமான முயற்சி நிறைவேறக் கூடாது என்று சொக்கநாதன் முடிவு எடுத்துவிட்டால்தான் இத்திருமுகம் உன் கைக்குக் கிடைக்கும்.

“அப்படி இது உன் கையில் கிடைத்தால் உன் தந்தை உன்னிடம் கேட்டுக் கொள்வது இதுதான். அவசரப் பட்டு நீ உடனே தஞ்சைக்குப் படையெடுத்து வராதே! உன் உயிரைக் காப்பாற்றிக் கொள். மதுரைக்கு வராதே! உன் தந்தை இப்படிச் சொல்கிறானே என்று நினைக்காதே!

“நமது முன்னோர்கள் நமக்கு அளித்த அரியணையில் அமரவோ, வீரவாளையும்,  செங்கோலையும்  தாங்கவோ       உரிமையுள்ளவன் - மதுரையை யாருக்கும் அடிபணியாமல் ஆட்சி செய்பவன் மட்டும்தான். ஆகவே, எனது இந்தக் கடைசி விருப்பத்தை நமது சந்ததிகளுக்குச் சொல்லி வருவாயாக. எந்த ஒரு பாண்டிய மன்னனுக்கும் தனது முன்னோரின் அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்யவேண்டும் என்ற அவா இருக்கத்தான் இருக்கும். அதை நிறைவேற்ற வேண்டும் என்றால், மதுரையை மீட்கவேண்டும். அப்படி மதுரையை மீட்பவன்தான் தன்னை உண்மையாகவே பாண்டிய மன்னன் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை அடைகிறான். அப்படிப்பட்ட பெருமையைப் பெறும்வரை நமது வழித்தோன்றல்கள் ஒவ்வொருவரும் முயன்று கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் எனது கடைசி அவா.

“இந்த அவாவை நிறைவேற்றவேண்டும் என்றால் கவனமாகச் செயல்பட வேண்டும். சரியான நேரம் வரும்வரை அமைதியாக இருந்து மதுரையை மீட்கவேண்டும். இப்பொழுது நீ இருக்கவேண்டிய இடம் மதுரை அல்ல. நெல்லைதான். பொறுமையாகச் செயல்படு. பாண்டியரை அடக்கிவிட்டோம் என்று சோழர்கள் ஒரு நாள் கூட அமைதியாகத் தூங்கக் கூடாது. கடலில் இறங்கிய சோழப் புலியை என்று பாண்டிய மீன் விழுங்கி ஏப்பம் விடுமோ என்று பயந்து கொண்டேதான் இருக்கவேண்டும். இந்த உணர்ச்சிப் பெருக்கை, வேட்கையை, மதுரையை மீட்கவேண்டும் என்ற வெறிச் சுடரை, அணையாமல் நமது வழித் தோன்றல்களின் ஒவ்வொரு மூச்சிலும் கலக்கச் செய்வாயாக. இதுதான் நீ பாண்டியனாக எனக்குச் செய்ய வேண்டிய இறுதிச் சடங்கு.

“மதுரையை மீட்கும்வரை நமது வழித் தோன்றல்கள் ஒவ்வொருவருக்கும் இத் திருமுகத்தைக் காட்டி வளர்க்க வேண்டும்.

“தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!”
திருமுகத்தைப் படித்து முடித்த விக்கிரமனின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாகப் பெருகுகிறது.

“தந்தையே! உறையூரும், தஞ்சையும் நெருப்பில் கருகும்வரை இனி சோழர்களுக்கு நிம்மதி இருக்காது! உங்கள் இலட்சியம் நிறைவேறும். மதுரை மீட்கப்படும்! இது உங்கள் மீது ஆணை! மதுரையை ஆளும் சொக்கநாதன் மீது ஆணை!!! உலகநாயகியான மீனாட்சி மீது ஆணை!!!” என்று உரக்கக் கத்திய விக்கிரமன், தனது உடைவாளை எடுத்து, வலது உள்ளங்கையைக் கீறி, பெருகும் குருதியில் உறுதிமொழி எடுக்கிறான்.[வளரும்]

No comments:

Post a Comment