Tuesday 5 August 2014

தமிழ் இனி மெல்ல...[28] போரின் குறிக்கோள் இராஜராஜனைக் கொல்வது அல்ல

தமிழ் இனி மெல்ல...[27] சென்ற இதழ் இறுதியில் 
சீனப் போர் முறைகளைப் பற்றி விவரிக்கும்படி இராஜராஜர் கேட்டவுடன் அதை விளக்க ஆரம்பிக்கிறான் சிவாச்சாரி. அனைவரின் முகமும் மெல்ல மலர ஆரம்பிக்கிறது. இரண்டு நாழிகைகளில் போர் ஆலோசனை முடிகிறது. இராஜராஜர் தனியாகச் சிந்தனை செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டதால் தண்டநாயகரும், சிவாச்சாரியனும், அமைச்சருடன் வெளியே செல்கிறார்கள்.
“யாழிசைக்கும் பாணர்களை வரச் சொல்!”  என்று ஆணையிடுகிறார் இராஜராஜர்.
யாழிசையில் கண்களை மூடிக்கொண்டு தான் கடைசியாக முன்னிருந்து நடத்தப் போகும் போரைப் பற்றி சிந்திக்கிறார் அவர். வெற்றித் திருமகளைத் தழுவ இப்போர் எவ்வளவு கனகச்சிதமாக நடக்கவேண்டும். படைகள் தனித்து இயங்காமல் சதுரங்கப் பொம்மைகளைப் போல இயக்கப்பட வேண்டும், இதுவரை செய்திராத சித்து வேலைகளை எப்படி மின்னல் வேகத்தில் செயல்படுத்த வேண்டும் என்று கண்முன் உருவகப் படுத்துகிறார். சோழப் படைகளில் பாதிப் பேர் அழியும் வாய்ப்பு இருக்கிறது என்பதை நினைத்தால்தான் அவருக்கு வருத்தமாக இருக்கிறது. சதுரங்கத்தில் பலி கொடுத்து வெல்லும் ஆட்டம் போல (ஞ்ச்ட்ஞடிt) இறுதி வெற்றிக்காகப் பாண்டியர்களுக்குக் காவு கொடுக்க பலிகடாக்களாக தான் அனுப்பப் போகும் சோழவீரர்களை நினைத்தால் அவர் இதயம் கனக்கிறது. இந்தவிதமாக இப்போரை நடத்தப் போவது அவருக்குப் பிடிக்காவிட்டாலும், இக்கட்டான இந்நிலையில் சோழநாட்டைக் காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை.
சிவாச்சாரியனின் அறிவுக்கூர்மையை எண்ணி வியக்கிறார் இராஜராஜர். அவன் கலந்து கொள்ளப் போகும் முதல் போருக்கு முன்னாலேயே தண்டநாயகரின் மதிப்பைக்கூடத் தன் ஏவுகணைக் கருவியின் வடிவமைப்பால் கவர்ந்து விட்டானே என்பது அவருக்கு மகிழ்வை அளிக்கிறது. சகலகலா வல்லவனாக ஒருத்தனைத் தமக்கு அளித்துவிட்டுப் போன கருவூராருக்கு மனத்தளவில் நன்றி செலுத்துகிறார்.
“பெருவுடையாரே! எனக்குப் பிறகு இந்த சிவாச்சாரியார் நெடுங்காலம் இராஜேந்திரனுக்கு உதவியாக இருக்க அருள் செய்யுங்கள்” என்று வேண்டிக் கொள்கிறார்.
* * *
தமிழ் இனி மெல்ல...[28] தொடர்கிறது 

அரிசோனா மகாதேவன்                                                      அத்தியாயம் 7
                          மதுரை அரண்மனை
                     பரிதாபி, வைகாசி 10 - ஜூன் 2, 1012


ந்தேகத்தின் கோடுகள் அமரபுஜங்கனின் நெற்றியில் ஓடுகின்றன. இரண்டு ஆண்டுகளாகப் போட்ட திட்டம் நிறைவேறும் தருவாயில் இருக்கிறது என்பதை நினைத்தால் மிகவும் பெருமையாக இருந்தாலும் அது வெற்றியடையுமா அடையாதா என்ற ஒருவிதமான அமைதியற்ற நிலை அவன் மனத்தை அரித்துக் கொண்டே இருக்கிறது.

நினைத்தபடி இராஜேந்தின் வேங்கை நாட்டிற்குச் சென்றுவிட்டான். இராஜராஜனிடம் தற்பொழுது பதினையாயிரம் வீரர்களே போருக்குத் தயாராக இருப்பதாக ஒற்றர்கள் செய்தி கொண்டு வந்திருக்கிறார்கள். தமிழ்த் திருப்பணி, தமிழ்த் திருப்பணி என்று எப்பொழுதும் அதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறானாம் இராஜராஜன்.

அது உண்மைதான் என்பது போல சோழநாட்டிலிருந்து அவர்களது எழுத்துக்களைக் கற்பிக்கும் நிலவரம் எப்படி இருக்கிறது என்று கேட்டு சிவாச்சாரி இரண்டு நாட்கள் முன்னர்தான் வந்து, சொக்கநாதரையும், மீனாட்சியையும் தரிசனம் செய்து விட்டுப் போனதும் நினைவுக்கு வருகிறது. அவன் தனது வருகையை ஐந்து நாள்கள் முன்னரே அறிவித்துவிட்டு வந்ததிலிருந்தும், நிறைய நேரம் கோவில்சிவாச்சாரியரிடம் பூஜை விதானங்களைப் பற்றி வாதிட்டதிலிருந்தும், தேவாரம், திருவாசகப் பள்ளிகள் நிறைய நடக்கவேண்டும், அவற்றை முறையாக ஓதவேண்டும் என்று பேசிக் கொண்டதிலிருந்தும், அவன் மணியடிக்கும் சிவாச்சாரிதான், அமைச்சர் முன்பு ஐயப்பட்டபடி போர் நெறி அறிந்தவன் அல்ல என்ற முடிவே தோன்றுகிறது.

அது மட்டுமல்லாமல் பழமுதிர்சோலைக்குச் சென்று முருகனை வழிபட வேண்டும் என்று அடுத்தநாளே கிளம்பிவிட்ட சிவாச்சாரியனுக்குத் துணையாக இருபது பாண்டியநாட்டு வீரர்களையும் அனுப்பிவைத்திருப்பதால் திருப்பரங்குன்ற மலைக்கு அடுத்த காட்டில் ஒளிந்திருக்கும் சேரநாட்டு வீரர்களை அவன் பார்த்திருக்க இயலாது என்று மனதைத் தேற்றிக் கொள்கிறான்.

ஒருபுறம் பார்த்தால் அசடு மாதிரி இருக்கிறான், இன்னொருபுறம் பார்த்தால் நம்ப முடியாத தந்திரக்காரன் மாதிரியும் இருக்கிறான், உண்மையில் இந்த சிவாச்சாரி எப்படிப்பட்டவன் என்று குழப்பமாக இருக்கிறது அமரபுஜங்கனுக்கு. அவனது அமைதியைக் கலைப்பது போல, “அரசே! போர் ஆலோசனைக்கு அனைவரும் அரண்மனை மண்டபத்தில் தங்களுக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்” என்று அறிவிக்கிறான் திருமாறன் --  அவனது மெய்காப்பாளன்.

தனது சந்தேகங்களை மூட்டைகட்டி வைத்து விட்டு எழுந்திருக்கிறான் அமரபுஜங்கன். “திருமாறா, சோழநாட்டுச் சிவாச்சாரி திரும்பிவிட்டானா?” என்ற கேள்வியுடன் மண்டபத்தை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறான்.

“அவனைப் பொன்னமராவதி வரை சென்று சோழநாட்டு எல்லையில் விட்டுவிட்டு வந்ததாக அவனுக்கு நாம் துணையாக அனுப்பிய வீரர்கள் செய்தி கொண்டுவந்தார்கள் அரசே! அவன் அங்கு போவதற்கு முன்னரே, நமது படைகளை பக்கத்துக் காட்டில் ஒளிந்து கொள்ளச் செய்தி அனுப்பி விட்டேன். அவனையும் அவன் முகத்தையும் கண்டால் எனக்குச் சிறிதும் பிடிக்கவே இல்லை!” என்று பதிலளிக்கிறான் திருமாறன்.

அவனுக்கு சிவாச்சாரி மேல இனம் தெரியாத வெறுப்பு இருக்கிறது என்பது அமரபுஜங்கனுக்கு நன்றாகத் தெரிந்த ஒன்றுதான். துருவிக் கேட்டால், அந்த வெறுப்பு ஏற்படத் தெளிவான காரணத்தைச் சொல்லத் திருமாறனால் இயலவில்லை. அவனது கண்கள் ஒரு நிலையில் நிற்காமல் சுழன்று கொண்டே இருப்பதை மட்டுமே அவனால் காரணம் காட்டமுடிகிறது. மற்றபடி இது மனத்தடியில் தோன்றும் உணர்ச்சி என்று திருமாறன் சொல்லிவருகிறான். இராஜராஜனின் முத்திரை மோதிரம் உள்ள ஒருவன் மிகவும் மரியாதையாக அனைவரிடமும் நடந்து கொள்வது நம்ப இயலாத ஒன்றாக இருக்கிறது. அதனாலேயே அவன்மீது தனக்குச் சந்தேகம் பிறக்கிறது என்பது திருமாறனின் வாதம்.

எப்பொழுதும் திருமாறனின் உள்ளுணர்வுக்கு அமரபுஜங்கன் மதிப்புக் கொடுப்பது வழக்கம். எனவே, சிவாச்சாரியனையும் கவனிக்குமாறு சோழநாட்டில் இருக்கும் பாண்டிய ஒற்றர்களுக்குச் செய்தி அனுப்புமாறு அமைச்சருக்கு சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து கொள்கிறான்.

மண்டபம் நிறைந்திருக்கிறது. அமைச்சர்கள், படைத் தலைவர்கள், ஒற்றர்கள், என்று கிட்டத்தட்ட அறுபது பேர் மண்டபத்தில் இருக்கிறார்கள். இதுதவிர வயநாட்டுச்36 சேரமன்னன் கோவர்த்தன மார்த்தாண்டன் அவனது குழுவினருடன் அமர்ந்திருக்கிறான். அவனுக்கு எதிரில் இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தனின் படைத்தளபதி தன் மொழி மாற்றக்காரர்கள், படைத் தலைவர்களுடன் வீற்றிருக்கிறான்.

கட்டியங்காரன் அமரபுஜங்கனின் வருகையை அறிவித்தவுடன் மண்டபத்தில் நடந்துகொண்டிருந்த பேச்சு ஓய்கிறது. அனைவரும் எழுந்திருந்து நிற்கின்றனர். அவர்களைக் கையமர்த்தியவாறு அமரபுஜங்கன் தன் இருக்கையில் அமர்கிறான். அவன் பின்னால் சென்று திருமாறன் விறைப்பாக நின்று கொள்கிறான். அவன் கண்கள் மண்டபத்தைச் சுற்றிலும் நோட்டம் விட ஆரம்பிக்கிறது. அனைவரும் பாண்டிய மன்னன் என்ன சொல்லப் போகிறான் என்பதை எதிர்பார்த்தவாறு இருக்கின்றனர்.

படைகளை ஒளித்து மறைத்துக் கொண்டுவர அவர்கள் பட்ட பாடு அவர்களுக்குத்தானே தெரியும்! கொண்டுவருவது மற்றுமல்ல, சோழர் கண்களில் படாமல் மறைத்து வைக்கவும் மிகவும் தொல்லைப் படவேண்டியிருந்தது. மதுரை, பொன்னமராவதி, திருப்புத்தூர் போன்ற இடங்களில் மறைந்து இருந்தார்கள்.

அமரபுஜங்கன் தொண்டையைக் கனைத்துக் கொள்கிறான். மண்டபத்தில் உடனே அமைதி நிலவுகிறது.

“எனதருமை பாண்டிநாட்டுக் குடிமக்களே! நமக்குத் தோள் கொடுப்பதற்கென்றே படையுடன் வந்திருக்கும் சேரநாட்டு அரசரே, சிங்களப் படைத் தலைவரே! உங்கள் அனைவரையும் இந்த முக்கியமான ஆலோசனைக்கு வரவேற்கிறேன். முதலில் உங்களுடன் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இராஜராஜனிடம் தஞ்சைக் கோட்டையின் காவலர்களையும் சேர்த்து இருபதாயிரம் படைவீரர்களே இருக்கிறார்களாம். இராஜேந்திரன் ஐம்பதாயிரம் படைவீரர்களுடன் வேங்கைநாடு சென்றிருக்கிறான். அங்கு கீழைச் சாளுக்கியனுக்குப் பாதுகாப்பாகநிறுத்திவைக்கப்பட்டிருக்கும் வீரர்கள் இன்னும் புறப்படக்கூட இல்லையாம். தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்று இறுமாப்பில் இராஜராஜன் பாதுகாப்பே இல்லாமல் இருக்கிறான். இப்பொழுது நம்மிடம் அவனிடம் இருப்பதைப் போல இரண்டு மடங்கு படைவீரர்கள் இருக்கிறார்கள்.


இது போன்ற நல்லவாய்ப்பு நமக்குக் கிடைக்கவே கிடைக்காது. இச் சமயத்தில் இராஜராஜனைத் தாக்கி மரணஅடி கொடுத்தால் தஞ்சை விழுந்து விடும். இதற்காக நாம் இரண்டு ஆண்டுகள் மறைவாக முயற்சி செய்திருக்கிறோம். இந்தப் போர்தான் நமக்கு வாழ்வா, சாவா என்று முடிவு செய்யப்போகிறது. எனவே, உங்கள் கருத்துக்களையும் அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.” என்று கலந்துரையாடலைத் துவங்கி வைக்கிறான்.
முதலில் கையை உயர்த்துகிறான் மார்த்தாண்டன். அனைவரும் அவன்பக்கம் திரும்புகிறார்கள்.

“சோழர்களுடன் எங்களுக்கும் தீராத பகை இருக்கிறது, அமரபுஜங்கரே! குடமலைநாட்டு அரசரும், என்னை வயநாட்டின் அரசனாக நியமித்த பாஸ்கர ரவிவர்மரும்37 உங்களுக்குத் தன் ஆதரவை நல்கச் சொன்னார். அவரும் களரிச் சண்டை அறிந்த ஆயிரம் வீரர்களை சுருள்வாட்களுடன்38 அனுப்பி வைத்திருக்கிறார். அவர்கள் மட்டுமே சோழப் படைகள் பதினையாயிரம் பேர்களையும் அழித்து விடுவார்கள். இராஜராஜனைக் கொன்று தஞ்சையை நமது வெற்றி வேள்விக்கு இரையாக்குவோம்.” சினம் ததும்புகிறது அவன் குரலில்.

அடுத்ததாக சிங்களப் படைத் தலைவன் பேசப் பேச மொழிபெயர்ப்பாளர் தமிழில் கூறி வருகிறார். “பாண்டிய நாட்டுடன் பல நூறு ஆண்டுகளாக மணவினை கொண்டவர்கள் நாங்கள். இதுவரை நாங்கள் உங்களுக்கு எல்லாவிதத்திலும் தோள் கொடுத்து வந்திருக்கிறோம். எங்கள் நாடு பாதிக்குமேல் சோழர் காலடியில் மிதிபட்டு அல்லல் பட்டுக் கொண்டுவருகிறது. இராஜராஜன் தோற்று அழிந்தால் அங்குள்ள படைகள் சின்னாபின்னமாகச் சிதறி ஓடிவிடும். எங்கள் சிங்கள நாடு மன்னர் மகிந்தருக்கே மீண்டும் சொந்தமாகிவிடும். வெற்றியுடன் திரும்புவேன், இல்லை பாண்டியரின் இப்போரில் உயிர் துறப்பேன் என்று மகிந்தருக்கு வாக்குறுதி கொடுத்து வந்திருக்கிறேன்.” சிங்கம் மாதிரி உறுமுகிறான் அவன்.
ஒருவர் பின் ஒருவராக தங்கள் சம்மதத்தைத் தெரிவித்து உற்சாகமாகப் பேசுகிறார்கள் மற்ற படைத் தலைவர்கள். அனைவரும் இராஜராஜனைப் போரில் கொன்றுவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள்.

பாண்டியனின் முதலமைச்சர் அமைதியாக இருக்கிறார். அவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் என்று அமரபுஜங்கனுக்குத் தோன்றுகிறது. அவர் வாயைத் திறக்காமல் இருப்பதைப் பார்த்தால், மற்றவர்களுக்குப் பிடிக்காத ஒன்றை அவர் சொல்ல விரும்புவது போலத் தோன்றுகிறது.

“அமைச்சரே, நீர் ஏன் அமைதியாக இருக்கிறீர்? பாண்டிய நாட்டின் முதலமைச்சரான தாங்கள் உங்கள் மனதிற்குப் படுவதை ஒளிவு மறைவில்லாமல் சொல்ல வேண்டும்!” என்று அவரைத் தூண்டுகிறான் அமரபுஜங்கன்.

தயக்கத்துடன் ஆரம்பிக்கிறார் முதலமைச்சர். “மன்னரே, பாண்டிநாட்டிற்கு உதவ வந்திருக்கும் பெருமக்களே! நான் சொல்லப் போவதை சினங்கொள்ளாமல் காது கொடுத்துக் கேட்டுவிட்டு, அதில் இருக்கும் உண்மைகளை ஆராயுமாறு கேட்டுக் கொள்கிறேன். இராஜராஜன் போரில் அழிந்து போகவேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன். தஞ்சையை எரிக்கடவுளுக்கு அர்ப்பணமாக்கவேண்டும் என்பது என் காதிலும் இனிமையான இசையாகத்தான் ஒலிக்கிறது.

“போரின் நோக்கம் நமது குறிக்கோளை அடைவதற்காக இருக்கவேண்டும். நமது தலையாய குறிக்கோள் பாண்டியநாட்டைச் சோழர்களின் பிடியிலிருந்து விடுவிப்பதே! பாண்டிநாடு தனித்து இயங்கினால் இலங்கைக்கும், சேரநாட்டிற்கும் உறுதுணையாக இருக்கும். கொற்கை, தொண்டித் துறைமுகங்கள் பாண்டிய நாட்டின் கடல் வாணிபத்தைப் பெருக்கும். கொல்லம், முசிரித் துறைமுகங்கள் சேரநாட்டின் வாணிபத்தைச் செழிப்பாக்கும். வலிமையான பாண்டிநாடு இலங்கைக்கும், சேரநாட்டுக்கும் இன்றியமையாத தேவையாகும்.

“சிந்தித்துப் பாருங்கள்! இன்று நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு மிகவும் பொன்னான ஒன்று. இதை நன்கு பயன்படுத்தினால்தான் நாம் நமது குறிக்கோளை அடைய முடியும். அனைவரின் விருப்பப்படி இராஜராஜனைக் கொன்று, தஞ்சையைத் தீக்கிரையாக்கினால் என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்? சோழநாடு பணிந்து விடுமா?” சிறிது
நேரம் மண்டபத்தில் இருக்கும் அனைவரையும் நோக்குகிறார்.
“இராஜராஜன்தான் சோழநாடு! அவன் ஒழிந்தால் சோழநாடு ஏது?” என்று கேள்வி தொடுத்த சேர மன்னன் மார்த்தாண்டன், “இராஜராஜனைக் கொல்லக்கூடாது, தஞ்சையைத் தகர்க்கக்கூடாது என்பதுதான் தங்கள் விருப்பமா? ஏன், மேளதாளம், பூரண கும்பத்துடன் இராஜராஜனை மதுரைக்கு வரவேற்கலாமா?” என்று எகத்தாளமும் செய்கிறான்.

மொழிபெயர்ப்பைக் கேட்டு சிங்களப் படைத்தலைவன் குழம்புவது நன்றாகவே தெரிகிறது.

“முதலமைச்சரை முழுவதும் பேசவிடுங்கள்! மூன்று ஆண்டுகளாக இப்போர் நடக்க வேண்டும் என்று இடையறாது உழைப்பவர் அவர். அப்படியிருக்க, அவர் இராஜராஜனுக்கு அச்சப்படுகிறார் என்று கூறுவது தவறான முடிவாகும். அவர் சொல்வதை மறுத்துப் பேச சேரமானுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஆனால் அவரை அவமதிப்பது என்னையே அவமதிப்பது போன்றது என்பதைச் சேரமானின் கவனத்திற்குக் கொணர விரும்புகிறேன். மாறுபட்ட கருத்துக்களை அறிந்து கொள்வோம். பின்னர் அதைப் பற்றி விவாதிப்போம்.” என்று சேரனை மறைமுகமாக அடக்குகிறான் அமரபுஜங்கன்.

சேரனுக்கு அது பிடிக்காவிட்டாலும், பாண்டியன் சொல்வதில் உள்ள உண்மையை உணர்ந்து அமைதி கொள்கிறான்.

முதலமைச்சர் மீண்டும் தொடர்கிறார். “சேரமான் அவர்களின் மனம் தெள்ளத் தெளிவாக எனக்குப் புரிகிறது. இராஜராஜன் மீது உங்களுக்கு எவ்வளவு பகைமை இருக்கிறதோ, அதற்குக் குறையாத பகைமை என் உள்ளத்திலும் இருக்கிறது. ஆகவே அதைப்பற்றி யாரும் எள்ளளவும் சந்தேகப்பட வேண்டியதில்லை.

“இராஜராஜனின் அண்மைக் காலத்திய வெற்றிக்கெல்லாம் அவன் மட்டும் காரணமல்ல. இளவரசன் இராஜேந்திரனே ஆகும்! அவன் இல்லாத சமயம் அவன் தந்தையைக் கொன்று, தஞ்சையை அழித்தால் அவன் திரும்பி வரும்வரை நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால், இராஜேந்திரனுடன் திரும்பும் சோழப் படைகள் அனைத்தும் மதுரையை நோக்கிப் பாய்ந்து வரும். அவர்களின் குறிக்கோள் நம்முடன் சேர்த்து மதுரையைத் தீக்கு இரையாக்குவதாகத்தான் இருக்கும். இராஜேந்திரன் போரில் யாருக்கும் கருணை காட்டமாட்டான் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. அப்படி இருக்க, அவன் தந்தையைப் போரில் கொன்றோம் என்றால் இராஜேந்திரன் பழி வாங்கப் புறப்பட எத்தனை நாள்களாகும்? சிந்தித்துப் பாருங்கள்!”

அவரை இடைமறித்துப் பேச ஆரம்பிக்கிறான் சிங்களப் படைத்தலைவன், “அமைச்சரே! உங்கள் பேச்சு என்னை மிகவும் குழப்புகிறது. இராஜேந்திரனுக்குப் பயந்தால் நாம் எதற்காகத்தான் படை திரட்டவேண்டும்? அல்லது போர் செய்யத்தான் வேண்டும்? இப்போரின் குறிக்கோள்தான் என்ன?”

“தங்கள் கேள்வி மிகவும் நியாயமானதே! அதற்கு விளக்கம் சொல்லத்தான் நான் முயன்று கொண்டிருக்கிறேன். சிறிய மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிக்கவேண்டும் என்ற பழமொழி அனைவருக்கும் தெரிந்திருக்கும். எனினும் இந்தப் போரின் குறிக்கோள் இராஜராஜனைக் கொல்வது அல்ல, அவனைச் சிறைப்பிடிப்பதே ஆகும்! மீண்டும் சொல்கிறேன், இப் போரின் குறிக்கோள் இராஜராஜனைச் சிறைப்பிடிப்பதுதான்!”

“அப்பொழுது மட்டும் இராஜேந்திரன் போருக்கு வரமாட்டானா? இராஜராஜன் போரில் இறந்தால் வீர சொர்க்கம் அடைந்தார் என்றாவது மனதைத் தேற்றிக் கொள்வான். சிறைப்பட்டால் அந்தக் களங்கத்தைத் துடைக்கப் பொங்கி எழமாட்டானா? இன்னும் வெறியுடனல்லவா மதுரையைத் தாக்குவான்!” இக்கேள்வியை அமரபுஜங்கனே எழுப்புகிறான்.

“இங்குதான் அரசே நம்முடைய திட்டம் சிறந்து விளங்கப் போகிறது!” என்ற முதலமைச்சர், “இராஜேந்திரன் சினங்கொண்டு எழத்தான் செய்வான். ஆனால் அந்தச் சினம் கையாலாகதவனின் சினமாகத்தான் இருக்கும். இராஜராஜன் நம்மிடம் பிணைக் கைதியாக இருக்கும் பொழுது அவனது சினம் என்ன செய்யும்? நம்முடன் பேச்சு வார்த்தை நடத்தித்தானே ஆகவேண்டும்?

“அவன் ஒழுங்காகப் பேச்சுவார்த்தை நடத்த வராவிட்டால், உங்கள் பாட்டனார் வீரபாண்டியருக்கு நேர்ந்த கதிதான் அவன் தகப்பனுக்கு நேரும் என்று அறிவிப்போம். அது மட்டுமல்லாது, இராஜராஜனைச் சங்கிலியில் பிணைத்து மதுரைக் கோட்டை மதிலில் பலரும் பார்த்து நகையாடுமாறு நிறுத்தி வைப்போம், தலையை மொட்டையடித்து, கரும்புள்ளி, செம்புள்ளி குத்திக் கழுதைமேல் ஏற்றி மதுரை நகரை வலம் வரச் செய்வோம் என்று பறை சாற்றுவோம். பாண்டியநாடு, சேரநாடு, இலங்கை இவற்றிலிருந்து அவன் தனது படைகளைத் திரும்பப் பெறவேண்டும், அவனது மகளான அருள்மொழி நங்கையை உங்கள் மகனுக்குத் திருமணம் செய்து கொடுக்கவேண்டும், நமது தமிழ் எழுத்துக்களை மாற்றும் திட்டத்தை அடியோடு கைவிடவேண்டும், என்று நிபந்தனைகள் விதிப்போம். இவற்றுக்குக் கட்டுப்பட்டு அவன் வணங்கும் சிவபெருமான் மீது ஆணையிடச் செய்வோம். இராஜராஜன் அவமானத்திலிருந்து மீட்கப் படவேண்டுமென்று இவை எல்லாவற்றிற்கும் இராஜேந்திரன் ஒப்புக்கொள்வான் அரசே!”  என்று தனது கருத்தை விவரிக்கிறார்.

மகுடியால் கட்டுண்ட நாகம் மாதிரி மண்டபமே அவரது பேச்சில் இருந்த ராஜதந்திரத்திற்கு மயங்குகிறது.

“அருமையான ஆலோசனை, அருமையான ஆலோசனை!” என்று அனைவரும் தங்கள் பாராட்டை வெளிக்காட்டுகின்றனர். அனைவருக்கும் தலைசாய்த்து தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறார் பாண்டிய முதலமைச்சர்.

“அமைச்சரின் கருத்தை எமக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. அப்படியே செய்யலாம் என்று முடிவு எடுக்கிறோம். எனவே, இராஜராஜனைச் சிறைப்பிடிப்போம். நமது படைகளுக்கும் அவனைக் கொல்லாமல் உயிருடன் பிடிக்கவேண்டும் என்ற ஆணையை இடுவோம். இது அனைவருக்கும் சம்மதம்தானே?” என்று கேட்கிறான் அமரபுஜங்கன்.

“சம்மதம்! சம்மதம்!! சம்மதம்!!!” என்ற கோஷம் மண்டபத்தை அதிரச் செய்கிறது.

இதற்கிடையில் பாண்டிய ஒற்றன் ஒருவன் திருமாறனை அணுகி ஏதோ அவன் காதில் சொல்கிறான். உடனே திருமாறனின் முகம் மாறுகிறது. குனிந்து அமரபுஜங்கனின் காதுகளில் ஒற்றன் கூறிய செய்தியை உரைக்கிறான். அமரபுஜங்கனின் முகம் மாறுகிறது.

“அமைதி, அமைதி, அமைதி!” என்று கையை உயர்த்துகிறான். அவனது முகமாறுதலைக் கண்ட அனைவரும் மகிழ்ச்சிக் கூச்சலை நிறுத்துகின்றனர்.
“இராஜராஜனின் படைகள் தொண்டித் துறைமுகத்தில் நாவாய்களில் வந்து இறங்கி இருக்கிறார்களாம். கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர்கள் இருக்குமாம். நமது ஒற்று மூலம் செய்தி வந்திருக்கிறது.” என்று கோபத்துடன் கூச்சலிடுகிறான் அமரபுஜங்கன்.

“யார் தலைமையில் அப்படை வந்திருக்கிறது?” என்று கேட்கிறான் சேரன் மார்த்தாண்டன்.

“தெரியவில்லை. அவர்கள் தொண்டியில் இறங்கியவுடனேயே, துறைமுகத்துக்குப் போக்குவரத்தை நிறுத்தி விட்டார்களாம். நமது ஒற்றன் யார் கண்ணிலும் படாமல் மறைந்து மதுரைக்கு வந்திருக்கிறான். சோழப்படை தொண்டியில்தான் தண்டூன்றி இருக்கிறதாம்.”

“அவர்கள் மேற்கொண்டு என்ன செய்யப் போகிறார்கள்? நமது படைக்குவிப்பைப் பற்றி அவர்களுக்குத் தெரியுமா? மொத்தம் பதினையாயிரம் பேர்களே இராஜராஜனிடம் இருக்கும் பொழுது பத்தாயிரம் பேரை எதற்காகத் தொண்டிக்கு அனுப்பியிருக்கிறான்?” என்ற கேள்வி பிறக்கிறது.

சிறிது நேரம் யோசித்த முதலமைச்சர் கடகடவென்று சிரிக்கிறார்.அதைக் கேட்ட அனைவரின் முகத்திலும் ஈயாடவில்லை.

“இராஜராஜனுக்கு தன்னம்பிக்கை, அதுவும் அசட்டுத் தன்னம்பிக்கை அதிகமாகிவிட்டது, அரசே!”

முதலமைச்சர் தொடருகிறார். “தனது கடற்படைகள் எதையோ தொண்டிக்குக் கொண்டுவரப் போவதை எதிர்பார்த்து அவன் இப்படைகளை அனுப்பியிருக்கிறான். அவனிடம் குதிரைகள் குறைந்திருக்கின்றனவோ என்னவோ, அதனால் அராபியர்களின் கப்பல்களில் குதிரைகள் வருகின்றனவோ என்னவோ?” அவர் குரலில் விஷமம் தொனிக்கிறது.

“அமைச்சரே! உமக்கு ஏதாவது தெரியுமா?” என்று வினவுகிறான் அமரபுஜங்கன்.

“அரசே! நான்தான் பாண்டியர்களுக்காக பத்தாயிரம் குதிரைகள் அராபியக் கப்பல்கள் மூலம் தொண்டிக்கு வந்துகொண்டிருப்பதாகச் சோழர்களுக்குத் தவறான செய்தியை அனுப்பினேன். அதை உண்மையென நினைத்து அக்குதிரைகளைக் கைப்பற்றவே இராஜராஜன் தனது வீரர்களை அனுப்பியிருக்கிறான் போலும்!” என்று தனது திட்டம் பயனளித்திருப்பதைத் தெரிவிக்கிறார் முதலமைச்சர்.

“அமைச்சரே! நீர் ராஜதந்திரத்தில் சாணக்கியனையும் மிஞ்சிவிட்டீர்!” என்று பாராட்டிய அமரபுஜங்கன், “இனி நமக்குத் தடையென்ன இருக்கிறது? தஞ்சையை நோக்கிப் படைகளை நடத்துவோம். அதிரடித் தாக்குதல் நடத்தினால்தான் தஞ்சை விழும்!”  என்று வீராவேசமாக முழங்குகிறான்.
“அப்படியே! அப்படியே!!” என்று அனைவரும் ஆர்ப்பரிக்கிறார்கள்.[வளரும்]
-----------------------------------------------------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு 
36கொல்லம் துறைமுகத்தைத் தலைநகராகக் கொண்ட தென் சேரநாட்டை, வயநாடு (கொல்ல தேசம்) என்று குறிப்பிடுவார்கள்.
37ஏதோதயபுரத்திலிருந்து (கொடுங்கல்லூர்) குடமலை நாட்டை (வட சேரநாடு) ஆட்சி செய்த முதலாம் பாஸ்கர ரவிவர்மன், வயநாட்டின் அரசனாக கோவர்த்தன மார்த்தாண்டனை நியமித்தான்.
38சுருள் வாள் சாதாரண வாள் போல இல்லாமல் சுருண்டு இருக்கும். அதை வேகமாகச் சுற்றினால் கிட்டத்தட்ட பத்து அடி தூரம் வரை இருப்பவர்களைத் தாக்க உதவும். இது எதிரிகளுக்கு நிறையச் சேதத்தை ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment