Saturday 30 August 2014

‘கன்று நிற்கக் கயிறு மேயுதாம்’

ஜவாஹர் பிரேமலதா 
இணைப்பேராசிரியர், அரசினர் கலை, அறிவியல் கல்லூரி, சேலம்-7
                                                                 

‘கன்று நிற்க கயிறு மேயுதாம்’இப்படி ஒரு  விடுகதை
இதற்கு விடை  பூசணிக்கொடி என்பது. 
கயிறு விடுகதை போடுவோருக்கு மட்டுமின்றி தமிழ் இலக்கியம் தமிழர் வாழ்வில் பெற்றிருந்த முக்கியத்துவத்தை கூர்ந்து கவனித்துப் பதிவு செய்திருக்கிறது.சங்க இலக்கியத்தில் தமிழர்கள் பயன்படுத்திய கயிறுகளைப் பற்றி ஏராளமான குறிப்புகள்  காண்கிறோம் 

 பாசக்கயிறு:   தயிர் கடைவதற்கென்றே நிறுவப்பட்ட தூணில் ‘பாசம்’ என்றும் கயிறைச் சுற்றி, அதை மத்தினோடு இணைத்து மாறிமாறி இழுப்பர். இதனால் மத்து தேய்ந்துள்ளது என்ற கூறிய பார்வையைக் காட்டுகிறது  முல்லைக்கலி கூறுகிறது. 
மத்தோடு இணைக்கப்பட்ட கயிறை "மத்தம் பிணித்த கயிறு"(கலித். 110 : 10) என்கிறது முல்லைக்கலி. 
                                                    
" குழிசிப் பாசம் தின்ற தேய்கால் மத்தம்" (நற். 12: 2) தயிர்ப்பானையில் மத்து பாசக்கயிற்றால்  கடையப்படுவதையும், இதனால் மத்தின் கால் தேய்ந்துள்ளதையும் இப்பாடல் சுட்டுகிறது.   . கயிறு திரித்து விற்போரைச் சிலம்பு ‘பாசவர்’ என்கிறது (17)   

தாம்புக்கயிறு;       மாடு கட்டுவதற்காக முல்லைநில மக்கள் பயன்படுத்தும் கயிறு ‘தாம்பு’ எனப்பட்டுள்ளது. "தீம்பால் கறந்த கலம் மாற்றி ; கன்று எல்லாம் தாம்பின் பிணித்து"" (கலி. 111 : 1-2)என்ற பாடல் கன்று, மாடு முதலானவற்றை தாம்புக்கயிற்றால் தூணில் கட்டுவர் என்கிறது. மற்றொரு பாடல்,"""------ கன்றோடு செல்வேம்; எம்தாம்பின் ஒருதலை பற்றி" (கலி.116: 2)  மேய்ச்சலுக்காக கன்று, மாடு போன்றவை அழைத்துச் செல்லப்படும் பொழுது, அவை வழிமாறிப் போய் விடாமலிக்க அவற்றின் கழுத்தில் தாம்பு கயிற்றைக் கட்டி மறு பகுதியை கையில் பிடித்து இழுத்துச் சென்றிடுவர் ஆயர் என்கிறது. 

பெரிய வலைக்கயிறு :    பரதவர்கள் கடலில் பெரிய மீன்களைப் பிடிப்பதற்கேற்ற வகையில், முறுக்கிய நூலினால் செய்யப்பட்ட வலிமையான கயிற்றைக் கொண்டு வலை தயாரித்துள்ளனர். இத்தகைய  வலிமையான மெல்லிய கயிற்றை உருவாக்குவதற்கு ‘வடிக்கதிர்’ என்ற கருவியைப் பயன்படுத்தியுள்ளனர். "வடிக்கதிர் திரித்த வல் ஞாண் பெருவலை இடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார்" (நற். 74) ‘பண்’ என்பது பாய்மரக்கயிறு என அழைக்கப்பட்டுள்ளது.     

             
சிமிலிக்கயிறு:      பல மெல்லிய நூல்களைக் கொண்டு முறுக்கப்பட்ட கயிறு ‘புரிநூல்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. இப்புரிநூல் சிறிய பொருட்களைக் கட்டி எடுத்துச் செல்வதற்கு உறியாகப் பயன்பட்டுள்ளது.முனிவர்களால் ‘கரண்டை’ எனப்படும் சிறிய பானையை நீர் எடுத்துச் செல்லப் பயன்படுத்தியுள்ளனர். பலவடமுடையபுரிநூலால்ஆனஉறியானது‘சிமிலி’ என அழைக்கப்பட்டுள்ளது." கரண்டைப்பல்புரிச் சிமிலி நாற்ற நல்கி வர"" (மதுரைக்காஞ்சி. 483-484) கரகம் என்பதுகரண்டையாகும் (சிறிய பானை).   

 காப்புக் கயிறு:  இறை வழிபாட்டிற்காகச் செல்பவர்கள் எடுத்துச் செல்லும் பூசைக்குரிய பொருட்களில் நூலும் இருந்தது.         """"கயிறும், மயிலும், குடாரியும்"" (பரி. 8 : 97-100)என பரிபாடல் வழிபடு பொருள்களில ஒன்றாக நூலும் இருந்துள்ளது எனக் கூறுகிறது.              """"கைந்நூல் யாவாம்"" (குறுந். 218. 2)    

 அணிக்கயிறு :    தேரில் குதிரை மற்றும் யானைகளைக் கட்டுவதற்காகப்  பயன்படுத்திய கயிறு ‘அணிக்கயிறு’ எனப்பட்டது. "யானை கயிற்று"(அகம். 128) "புரவி இழை அணி நெடுந்தேர்"(அகம். 254 : 12)   இதைத் தற்காலத்தில் கடிவாளக் கயிறு என அழைக்கிறார்கள். ."செல்க பாக! எல்லின்று பொழுதேவல்லோன் அடங்கு கயிறு அமைப்ப" (அகம். 224 : 2)குதிரையை அடக்கக் கூடிய வகையில் அதற்குக் கட்டப்படும் கடிவாளக் கயிற்றை ‘மத்திகை’ என்று பரிபாடல் கூறுகிறது  

 பூண்மணிக் கயிறு:  ஆயர் தொழுவத்தில் வளர்க்கும் மாடுகளுக்குக் கழுத்தில் நூலினால் கோக்கப்பட்ட மணிகளை அணிவித்துள்ளனர். இதை ‘பூண்மணிக்கயிறு’ என அழைத்துள்ளனர்.               """"புல்ஆர் கல்ஆன் பூண்மணி கொல்லோ?""(குறுந். 275: 4) கழுத்தில் பூட்டப்பட்ட மணி ‘பூண்மணி’ என்றும் அதை கட்ட உதவும் கயிறு ‘பூண்மணிக்கயிறு’எனவும் அழைக்கப்பட்டுள்ளது. ஒளிவீசக் கூடிய மணிகளைக் கொண்டு நூலினால் கோக்கப்பட்ட மாலைகளைக் கழுத்தில் தலைவன் அணிந்திருந்தான் என """"கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்"" (புறம். 88 : 4) எனத்  தலைவன் அணிந்த மாலையும் ‘நுண்பூண்’ என குறிக்கப்பட்டுள்ளது.   

ஊஞ்சல் கயிறு:                   ஊஞ்சல் பலகையானது, முறுக்குண்ட உறுதியான கயிற்றினால், மரக் கிளைகளில் கட்டப்பட்டுள்ளது. இக்கயிறு ‘புரிக்கயிறு’ எனப்பட்டுள்ளது. புரி என்பது ‘முறுக்கப்பட்ட கயிறு‘ ஆகும். பல புரிகளைக் கொண்டு முறுக்கப்பட்டப் பெரிய கயிறு ஊஞ்சல் கயிறாகப் பயன்பட்டுள்ளது. பல புரிகளைக் கொண்டு முறுக்கப்பட்டப் பெரிய கயிற்றை ‘முரற்சி’ என்ற சொல்லாலும்  குறித்துள்ளனர்..""""வடுக் கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக் கை புனை சிறுநெறி வாங்கி"" (நற். 270: 10) என்ற தொடர் கையால் முறுக்கப்பட்ட பலபுரிகளுடைய கயிறு பற்றிக் கூறுகிறது.   

பூங்கயிறு :   ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரே பொம்மை யானை, குதிரை, தேர் முதலானவற்றை இழுத்து விளையாடுவர். அவர்களின் மெல்லிய கைகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்படுவதே ‘பூங்கயிறு’ ஆகும். """"கவழம் அறியா நின் கைபுனை வேழம் புரிபுனை பூங்கயிற்றின் பைய வாங்கி"" (கலி. 80 : 7-8)சிறுவர், கவளச் சோற்றை அறியாத கையால்  செய்யப்பட்ட  மரயானையை முறுக்கப்பட்ட மெல்லிய பூங்கயிற்றினால் கட்டி அதை இழுத்து விளையாடி மகிழ்ந்தனர் எனக் கலித்தொகை கூறுகிறது. 

 கோர்க்கும் நூல்:     முத்துமாலை, பொன்மாலை, பூமாலை போன்றவற்றைக் கோர்ப்பதற்கு நூலினாலாகிய சரடு பயன்பட்டுள்ளது. இச்சரடை ‘அடர்ந்த நூல்’ என அழைத்துள்ளனர்.  "நெகிழ் நூல் முத்தின்" (அகம். 289 : 11) என்றொருதொடர் அகநானூற்றில் வருகிறது. இப்பாடலில் நூலறுந்து விழும் முத்துகள் உவமையாக்க் கூறப்பட்டுள்ளன. எதற்கு?நூலறுந்து விழும் முத்துக்கள் போலத் தலைவியின் கண்ணிலிருந்து கண்ணீர் பெருகி வந்ததாம். 
 மற்றொரு பாடலில் மூன்று வடத்தினால் செய்யப்பட்ட முத்துமாலை பற்றிக் கலித்தொகை கூறுகிறது.  "கயம் தலை மின்னும் கதிர்விடு முக்காழ்" (கலி. 80 : 2) என்பது ஒளி வீசுகின்ற மூன்று சரத்தினால் செய்யப்பட்ட முத்துமாலை என்பது இதன் பொருள்.அக்காலத்தில் இவ்வாறு நூலைக் கொண்டு பல  வகைகளில் முத்துமாலைகளை உருவாக்கியிருக்கின்றனர்.   

கிணற்றுக்கயிறு           கிணறுகளிலிருந்து நீர் இறைப்பதற்கு ஏற்றவகையில் கயிற்றினைப் பாத்திரத்தோடுக் கட்டி பயன்படுத்தியுள்ளனர். இதுவும் முறுக்குண்ட புரிநூலினால் ஆன கயிறு ஆகும்."சிரறு சில ஊறிய நீர் வாய்ப்பத்தல்கயிறு குறு முகவை" (ப.ப. 22 : 13-14)   

கூத்துக்கயிறு:   கயிறு கட்டி இரு மூங்கில் கழிகளுக்கு இடையே கட்டப்பட்ட அக்கயிற்றில் ஆடுமகள் நடந்து காட்டும் கூத்தே ஆரியர் கூத்து ஆகும். பொதுமக்கள் கூடுமிடங்களில் இக்கூத்தினை நிகழ்த்தி ஆடுமகள் பிழைப்பு நடத்தியதைக் குறுந்தொகை பதிவு செய்துள்ளது."ஆரியர் கயிறாடு பறையின்"" (குறுந். 7 : 4)என்ற பாடல் கயிற்றால் ஆடுமகள் நடக்கும் பொழுது பறைக் கருவியில் இசையெழுப்பி வேடிக்கைக் காட்டுவர் எனக் கூறுகிறது."------ ஆடுமகள் கயிறு ஊர் பாணியின்"" (குறி. பா : 193-194).   

வில்ஞாண்     வில்லின் இருபுறமும் கட்டுவதற்குரிய கயிறு ‘வில்ஞாண்’ எனப்பட்டது.""""கைபுனை வல்வில் ஞாண் உளர் நீயே"" (கலி. 7 : 6)மெல்லிய வலிமையான ஞாணாகிய கயிற்றைக் கொண்டு தலைவன், தன் கையினால் வில்லின் இருபுறமும் இறுகக் கட்டினான் என இப்பாடல் கூறுகிறது..

இடைஞாண் :இடையில் கட்டுவதற்கான மெல்லிய உறுதியான கயிற்றை இடைஞாண் என்றழைத்துள்ளனர்.  சிறுவர் இடையிலும் காலிலும் ஒலி எழுப்பும் கிண்கிணியை ஞாண் கொண்டு அணிந்திருந்தனர் என "கிண்கிணி ஆர்ப்போவாஅடி"" (குறுந். 148)என்ற அடிகள் மூலம் அறியலாம். 
                . 
நுண்கயிறு:     கட்டடக்கலை தொழில்நுட்பத்திலும் கயிறு பயன்படுத்தப் பட்டுள்ளது. பழங் காலத்தில் அரசியின் அரண்மனையைக் கட்டும் கட்டடக் கலை நுணுக்கம் அறிந்த தச்சர்கள், மிக நுட்பமாக நூல் பிடித்துப் பார்த்து அளவினைக் குறித்துக்கொண்டு பின்  கட்டிடம் கட்டியுள்ளனர்.    "நூல்அறி புலவர் நுண்ணிதின் கயிறுஇட்டு..  .பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்பமனை வகுத்து"(நெல்நடு : 76-78)என  நெடுநல் வாடை குறிப்பிடுகிறது.  தமிழர்கள் பலவகையானக் கயிறுகளைக் கண்டுபிடித்து அதை பலவித பயன்களுக்குப் பயன்படுத்தியுள்ளனர்.இது போன்ற கயிறுகளை உருவாக்கும் தொழில் நுட்பத்தை அறிந்திருந்ததோடு. அவற்றை உருவாக்குவதற்குரிய கருவிகளையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். 


No comments:

Post a Comment