Sunday 3 August 2014

தமிழ் இனி மெல்ல[26] “புலிக்குட்டிக்கு வேட்டையாடக் கற்றுக் கொடுக்கவா வேண்டும்?"

தமிழ் இனி மெல்ல[25]சென்ற பதிவின் இறுதி 
“அவன் கப்பம் கேட்டு வரவில்லையா? நான் எங்கிருக்கிறேன் என்று தூண்டித் துருவிக் கேட்கவில்லையா? எனக்கு மிகவும் சந்தேகமாக இருக்கிறது.” என்கிறான் அமரபுஜங்கன்.

“அவன் அதைப் பற்றி ஒன்றுமே கேட்கவில்லை அரசே! அவன் எழுத்து விவகாரம் பற்றி மட்டுமே பேசினான். கோவில்களுக்குத் திருப்பணிகள் நன்றாக நடக்கின்றனவா, கடவுளர்களுக்கு அணிகலன்கள் வேண்டுமா, ஆறுகால பூசைகள் நன்றாக நடக்கின்றனவா, தேவாரம், திருவாசகம் கோவில்களில் ஓதப் படுகின்றனவா, தமிழ்ப் பள்ளிகள் எத்தனை இருக்கின்றன, அவை போதுமானவையா, தமிழாசிரியர்கள் தேவைப்படுகிறார்களா, அதற்கு இராஜராஜரிடம் என்ன விதமான உதவியை நாம் எதிர்பார்க்கிறோம் என்று தான் கேட்டான். நீங்கள் குற்றால நாதரைத் தரிசிக்கச் சென்றிருக்கிறீர்கள் என்றதும், தானும் குற்றால நாதரைத் தரிசிக்க இயலாது போய்விட்டதே என்றுதான் வருத்தப்பட்டான். தங்களுக்கு அவனது வணக்கங்களையும் தெரிவிக்கச் சொன்னான்.”

“அதெல்லாம் இருக்கட்டும். நீர் சோழநாட்டு எழுத்தை நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிடுவதுதானே! ஏன் வெறுமனே தலையை ஆட்டினீர்?” என்று எரிந்து விழுகிறான் அமரபுஜங்கன்.

“அரசே! நான் கூடியவரை இதமாகத்தான் சொல்லிப் பார்த்தேன். அவன் எதற்கும் மசிந்து கொடுக்கவில்லை. தங்களிடம் இராஜராஜரின் ஆணையைத் தெரிவிக்கும்படிதான் சொன்னான். எதற்கெடுத்தாலும் அவர் பெயரைத்தான் பயன்படுத்தினான். அவரை மீறித் தன்னால் எதுவும் செய்யமுடியாது என்றும் தெரிவித்துவிட்டுச் சென்றான். அவன் ஒரு புரியாத புதிராகத்தான் இருந்தான். ம்ம்...” என்றும் இழுக்கிறார் அமைச்சர்.

“என்ன அமைச்சரே! ஏன் இழுக்கிறீர்? அப்படி என்ன நடந்தது?” என்று கேட்கிறான் அமரபுஜங்கன்.

“ஒன்றுமில்லை அரசே! சிவபூசையிலும், தமிழிலும் மிகவும் ஆர்வம் காட்டிய அவன் அரண்மனையில் காட்சிக்கு வைத்திருந்த ஆயுதங்களை அருகில் சென்று பார்த்தான். சிலவற்றைக் கையில் எடுத்துக் கவனமாக ஆராய்ந்தான். பிறகு கோட்டைச் சுவர்களையும், மதில்களையும், அகழிகளையும் சுற்றிப் பார்த்தான். ஆனால் ஒன்றுமே சொல்லவில்லை. அவன் நடந்து கொண்டதைப் பார்த்தால்...”

“அவன் நடந்து கொண்டதைப் பார்த்தால் இராஜராஜனின் ஒற்றனோ என்று உமக்குத் தோன்றுகிறதா?” என்று கேட்கிறான் அமரபுஜங்கன்.

“ஒரு ஒற்றனுக்கு நமது தலைமைச் சிவாச்சாரியரின் ஆகம முறைகளில் குறை கண்டுபிடிக்கும் அளவுக்கு ஆற்றல் இருக்காது அரசே! அவன் வேதங்களையும் கோவில் சிவாச்சாரியாருடன் சேர்ந்து கணீரென்ற குரலில் ஓதினான். எனவே, அவன் ஒரு சிவாச்சாரி என்பதில் ஒருவிதமான ஐயமும் இல்லை. இருந்தாலும் ஆயுதங்களில் அவன் அவ்வளவு அக்கரை காட்டியது. கோட்டையைச் சுற்றிப் பார்த்தது - இந்தச் செயல்கள்தான் அவன் போர்முறைகளைக் கற்று அறிந்திருப்பானோ என்று ஐயத்தை எனக்குத் தோற்றுவித்தது. தவிர அவன் குதிரையில் லாவகமாக ஏறிச் சவாரி செய்ததுதான் என்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது.” என்று நிறுத்துகிறார் அமைச்சர்.

“நீர் இப்பொழுது என்னை மிகவும் குழப்புகிறீர். ஒரு சிவாச்சாரியனுக்கு ஆயுதங்களைப் பற்றியும், குதிரையேற்றமும் எப்படித் தெரியும்? வாளைக் கண்டாலே நடுங்குபவர்கள் ஆயிற்றே அந்தணர்கள்! அதுபோகட்டும், அவனுக்கு வயது எத்தனை இருக்கும்?” ஆவலுடன் அமைச்சரை வினாவுகிறான் அமரபுஜங்கன்.

“முப்பது முப்பத்தொன்று இரு... நினைவுக்கு வந்துவிட்டது. நமது சிவாச்சாரியார் அவன் பெயரில் சொக்கநாதருக்கு அருச்சனை செய்யக் கேட்டபோது, அவன் தனக்கு முப்பத்தோரு வயதென்றும், தனக்கு ஒரு மனைவி இருக்கிறாள் என்றும் சொன்னான். குழந்தைகள் இருப்பதாகச் சொல்லவில்லை.” என்று பதில் சொல்கிறார் அமைச்சர்.

“எந்த ஊர்க்காரன் என்று சொன்னானா?”

“தில்லைக்கருகில் ஏதோ ஒரு ஊர் என்று சொன்னான். ஆனால் தான் தில்லை மூவாயிரவரில் ஒருத்தன் இல்லை என்றும் சொன்னான். அவன் சிகை முடிந்திருந்தது சிவாச்சாரி மாதிரித்தான் இருந்தது. தில்லை அந்தணர் மாதிரி இல்லை. தலைப்பாகை எதுவும் அணியவில்லை. சுருக்கமாகச் சொன்னால் மிகவும் எளிமையாகத்தான் உடை அணிந்திருந்தான்.”

“அவனை இவ்வளவு கவனித்திருக்கிறீரே! நாம் சோழ எழுத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன நடக்கும் என்று சொன்னானா, ஏதாவது அச்சுறுத்தினானா?”

“இல்லை அரசே! அது பற்றி அவன் எதுவும் சொல்லவில்லை. இராஜராஜர் ஆணையைத் தங்களிடம் தெரிவிக்குமாறுதான் சொன்னான். அவன் சொன்ன ஒரு மாதக் கெடு இன்னும் நான்கு நாள்களில் முடிகிறது.” என்கிறார் அமைச்சர்.

“கெடுவா?”

“அவன்தான் மாதாமாதம் தகவல் அனுப்ப வேண்டும் என்று சொன்னானே! அதைத்தான் கெடு என்று சொன்னேன்.” என்கிறார் அமைச்சர்.

“அமைச்சரே! நீர் ஒன்றும் தகவல் அனுப்பவேண்டாம். அவன் எங்கெல்லாம் ஆசிரியர்களை அனுப்பியிருக்கிறானே, அந்தச் சோழ ஆசிரியர்களை அடித்து விரட்டுங்கள். சங்க இலக்கியங்களை எழுதிய நமது எழுத்துக்களை மாற்ற நமது  இறைவனே அனுமதிக்க மாட்டார்.” என்று முழங்குகிறான் அமரபுஜங்கன்.

‘அரசே! நாம் இன்னும் படை திரட்டி முடியவில்லை. அதற்குள்ளே தேவையில்லாமல் சோழர் கவனத்தை நம் பக்கம் திருப்ப வேண்டுமா?” என்று நாட்டு நிலைமையை மன்னனுக்கு எடுத்துரைக்கிறார் அமைச்சர்.

“ம்...,” என்று சிறிது நேரம் யோசித்த அமரபுஜங்கன், “இராஜேந்திரன் எங்கு இருக்கிறான் என்று நமது ஒற்றர்கள் சேதி கொண்டு வந்திருக்கிறார்களா?” என்று வினாவுகிறான். அவனது விரல்கள் அரியாசனத்தின் கைகளில் இலேசாகத் தாளமிடுகின்றன.

“தஞ்சையில் பெரிய படையைத் திரட்டிக் கொண்டு வேங்கை நாட்டுக்கு பத்து நாள்கள் முன்னதாகத்தான் புறப்பட்டுச் சென்றிருக்கிறான் அரசே! அவனது மைத்துனன் விமலாதித்தனின் அண்ணன் சக்திவர்மன் வேங்கை நாட்டில் இறந்து விட்டானாம். சக்திவர்மனுக்கு ஆண் வாரிசு இல்லாததால் விமலாதித்தனுக்கே அரசுப் பட்டம் சூட்டவேண்டும், மேலைச் சாளுக்கியர்கள் மூலம் அரசுரிமைப் போட்டி வரக்கூடாது என்று இராஜராஜர் அனுப்பி வைத்திருக்கிறாராம். அவன் விமலாதித்தனுக்குப் பட்டம் கட்டிவிட்டு, சோழர் ஆதரவு அவனுக்கு இருக்கிறது என்று காட்டிவிட்டுத் திரும்ப இன்னும் மூன்று நான்கு மாதங்கள் ஆகும் அரசே!”  என்று ஏளனமாகப் பேசிக் கொண்டு போகிறார் அமைச்சர்.

“நிறுத்தும் அமைச்சரே! இந்த நல்ல செய்தியை முதலில் சொல்லாமல் ஏதோ சிவாச்சாரி வந்தான், சோழ எழுத்துக்களை நம்மீது புகுத்தக் கெடு வைத்து விட்டான் என்று கதை அளக்க ஆரம்பித்து விட்டீரே! நான் இலங்கைக்குச் சென்று வந்ததின் நோக்கம் உமக்குப் புரியாதா? சோழர் கண்ணில் எப்படி மண்ணைத் தூவி விட்டுச் சென்று வந்திருக்கிறேன்! எதற்காக? இராஜேந்திரன் எப்படியும் வேங்கை நாட்டுக்கு தங்கையின் கணவனுக்கு முடிசூட்டச் செல்வான் என்பதற்காகத்தானே! கீழைச் சாளுக்கியர்கள் சோழர்களின் உதவியில்தானே அரசாண்டு கொண்டிருக்கிறார்கள்! சோழ ஆதரவு என்ற தூணை எடுத்து விட்டால் அவர்களது அரசு மேலைச் சாளுக்கியர்களின் தாக்குதலில் சரிந்து விழுந்துவிடாதா! இப்படி ஒரு நல்ல சேதியை எதிர்பார்த்துத்தானே நான் பாண்டி நாட்டிற்கு ஆதரவு திரட்டி வந்திருக்கிறேன்! நமது ஒற்றர்கள் திறமையாக வேலை பார்த்து வருகிறார்களே, அந்தமட்டில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. யார் அந்த ஒற்றன்? அவனுக்கு நல்ல பரிசளிக்க வேண்டும்!”  என்று உற்சாகமாகப் பேசினான் அமரபுஜங்கன்.

“அது அவனல்ல அரசே, அவள்!”  என்று பதில் சொன்னார் அமைச்சர்.

“அவளா?” வியப்புடன் வினவினான் அமரபுஜங்கன்.

“ஆம் அரசே! ஆதித்த கரிகாலனை ஒழித்துக் கட்ட உங்கள் பாட்டனார் வீரபாண்ய மகாராஜாவின் மெய்காப்பாளன் வெற்றிமாறனுக்கு உதவிய இரவிதாச பிரம்மராயர் குடும்பத்தையே சொத்தைப் பிடுங்கிக்கொண்டு இராஜராஜர் விரட்டினார் அல்லவா, அப்பொழுது நமக்கு பயன் படட்டும் என்று அவர்களுக்கு ஆதரவு அளித்து வந்தார் தங்கள் பாட்டனாரின் அமைச்சரான எனது தகப்பனார். அவர்கள் நலம் பேணுமாறு வெற்றிமாறனின் புதல்வர்கள் பணிக்கப்பட்டார்கள். ரவிதாசனின் பிள்ளை வயிற்றுப் பேத்தி கமலம்மை தன் பாட்டனாரை ஓட்டாண்டி ஆக்கிய சோழ நாட்டிற்கு எதிராக எந்த உதவியையும் செய்கிறேன் என்று நம்மை நச்சரித்து வந்தாள். அரண்மனைப் பணிப் பெண்களுடன் நட்புகொண்டு, நடந்து வருவதை அவ்வப்பொழுது நமக்குத் தெரிவிக்கும்படி அவளைத் தஞ்சைக்கு அனுப்பி வைத்தேன். அவளிடமிருந்து நம்பகமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.”

“அவள் தனது தடங்களை மூடி மறைத்துக் கொண்டிருக்கிறாள் அல்லவா?”

“அவள் அனுப்பும் செய்திகள் மூன்று கைமாறி நமக்கு வருகிறது அரசே! ஆகவே, நமக்குச் செய்தி கொண்டு கொடுப்பவனுக்கு செய்தியின் மூலம் எது என்று தெரியாது.” என்று பெருமையாகப் பதிலளிக்கிறார் அமைச்சர்.
தமிழ் இனி மெல்ல[26] தொடர்கிறது 



அரிசோனா மகாதேவன் 
                                                    அத்தியாயம் 6
                                    வேங்கை நாடு
               விரோதிகிருது, கார்த்திகை 22 - டிசம்பர் 7, 1011
  ங், ங், ங் என்று ஒலித்தவாறு இராஜேந்திரனுடைய யானையின் இருபுறமும் மணிகள் ஆடி அசைகின்றன. வேங்கை நாட்டின் தலைநகரை அடைய இன்னும் பத்து காதங்களே இருக்கின்றன. கிட்டத்தட்ட தொள்ளாயிரம் காதங்கள்31 பயணித்து வந்த களைப்பு இராஜேந்திரனின் முகத்தில் சிறிதும் தென்படவில்லை. மாறாக தங்கை குந்தவியையும், மருமகன் இராஜராஜ நரேந்திரனையும் விரைவிலேயே சந்திக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும்தான் அவன் முகத்தில் தென்படுகிறது.

அவனது யானைக்கு முன் குதிரை வீரர்கள் மெதுவாக அணிவகுத்துச் செல்கிறார்கள். அவர்களுக்கு முன்னே தாரை, தப்பட்டை இவற்றை முழங்கியவாறு காலாட்படையினர் பெருமிதத்துடன் நடக்கின்றனர். தங்குவதற்கு கூடாரம் அமைத்து மற்ற வசதிகள் செய்து கொடுப்பதற்காக இவர்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே, நூற்றுக் கணக்கில் மாட்டு வண்டிகளும், அவைகளுக்குப் பாதுகாப்பாகவும் துணையாகவும் ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்களும் வேங்கை நாட்டுத் தலைநகருக்கு வெளியில் முகாமிட்டு இருக்கின்றனர். அவர்கள் தற்பொழுது வேங்கை நாட்டுக்குப் பாதுகாப்பாக இருக்கும் சோழ நாட்டு வீரர்களுக்கு நிவாரணமாகச் சென்றிருக்கின்றனர். எனவே, இவர்களைக் கண்டதும், வீடு திரும்பலாம் என்ற மகிழ்வுடன் அங்கிருக்கும் வீரர்கள் புதிதாக வந்திருப்பவர்களுடன் உல்லாசமாகப் பொழுதைக் கழித்துத் தங்கள் வேங்கை நாட்டு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

இராஜேந்திரனின் யானைக்குப் பின்னால் முப்பது யானைகள் வந்து கொண்டிருக்கின்றன. மற்றும் குதிரைப்படைகள் ஆயிரம் பேரும், காலாட்கள் நாலாயிரமும் தொடர்ந்து வருகின்றனர். இது போக வில்லாளர்கள், சமைத்துப்போட தவசுப்பிள்ளைகள், அவர்களது உதவியாளர்கள், மளிகை சாமான்களை ஏற்றிக்கொண்டு மாட்டு வண்டிகள், அடித்துச் சாப்பிட நூற்றுக் கணக்கான ஆடுகள், கூடைகள் நிறையக் கோழிகள், பால்கொடுக்கும் பசுக்கள், உற்சாகமாகப் பொழுது கழியும்படி உற்சாகப் படுத்த ஆடற்கலையில் வல்லவர்கள், கூத்தர்கள், கோமாளிகள், விரலியர்கள் என நூற்றுக் கணக்கானவர் - ஒரு சிறிய பட்டணமே வேங்கை நாட்டுக்கு அணி திரண்டு செல்கிறது.

இருபதாவது யானைமீது மிகவும் அழகான, நன்கு அலங்கரிக்கப்பட்ட அம்பாரி ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. அது மெல்லிய திரைகளால் மூடப்பட்டிருக்கிறது. அதனுள்ளே மூன்று பெண்கள் அமர்ந்துள்ளனர். இராஜேந்திரனின் மூத்தமனைவி திரிபுவனமாதேவி தனியாக ஒரு இருக்கையில் அமர்ந்திருக்கிறாள். அவளுக்கு எதிரான இருக்கையில் அவளது மகள் அம்மங்கை மிகவும் அழகான ஒரு பெண்ணின் தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறாள். கருப்பாக இருந்தாலும், அப்பெண்ணின் முகம் நிலவுபோல வட்டமாகவும், குறுகுறுவென்று மிகவும் களையாகவும் இருக்கிறது. வெள்ளை வெளேறென்ற பற்கள் அவள் சிரிக்கும்பொழுது ஒளிருகின்றன. கொஞ்சம் தடித்த உதடுகள் அவளுக்கு அழகாகவே உள்ளது. கருகருவென்று சுருள் சுருளாக வளர்ந்த கூந்தலைத் தூக்கி இடதுபக்கம் கொண்டையாக முடிந்திருக்கிறாள். மார்புக் கச்சையும், வழக்கமான கீழாடையும் அணிந்திருக்கிறாளே தவிர, அதிக அணிகலன்கள் இல்லையாதலால், பதினைந்து வயதான அவள் ஒரு பணிப்பெண் என்று தோன்றுகிறது.
ஒரு நாழிகை32 முன்னர்தான், “நிலவுமொழி, எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. உன் மீது கொஞ்சம் சாய்ந்து கொள்கிறேன்,” என்று உடலைக் குறுக்கிக்கொண்டு அவள் தோளில் தலையை வைத்துச் சாய்ந்துகொண்டாள் அம்மங்கை. அவர்கள் தஞ்சையிலிருந்து கிளம்பி கிட்டத்தட்ட இரண்டு திங்கள்கள்33 ஆகின்றன. காஞ்சியில் நான்கு நாள்களும், நடுவில் கிருஷ்ணா நதியைக் கடப்பதற்கு முன் ஓரிரு நாள் ஓய்வெடுத்துக் கொண்டது தவிர மற்ற நாள்களெல்லாம் பயணம்தான். கிருஷ்ணவின் அகலத்தைக் கண்ட அம்மங்கை வியந்து போனாள். அவளுக்குத் தெரிந்தவரை காவிரிதான் பெரிய ஆறு. அதைவிட மிகவும் அகலமான கிருஷ்ணாவில் கரைபுரண்டு சென்ற நீரின் அளவு அதைப் படகில் கடக்கும்போது அச்சத்தை வரவழைத்தது.

இரவு ஏதாவது சத்திரம், அதுவும் கிடைக்காவிட்டால், கூடாரத்தில் கட்டிலில்தான் படுக்கை. தந்தை இராஜேந்திரன் இருபதே நாள்களில் குதிரையில் வேங்கை நாட்டை அடைந்து விடுவார் என்று அறிந்தபோது அம்மங்கையால் அதை நம்பவே முடியவில்லை. யானைமேல் சுகமாக சவாரி செய்வதே தனக்கு அசதியாக இருக்கும் பொழுது, இருபது நாள்கள் தொடர்ந்து எப்படித்தான் குதிரையில் சவாரி செய்ய இயலுமோ என்று வியந்தாள்.

இந்தப் பயணத்திலேயே, நடுநடுவில் தனது தந்தை யானையை விட்டு இறங்கி குதிரையில் முன்னே சென்றுவிட்டு, இரண்டு மூன்று நாள்கள் கழித்து தங்களுடன் மீண்டும் சேர்ந்து கொள்வதையும் கவனித்திருக்கிறாள். எத்தனையோ அரசு அலுவல்கள் இருக்கக் கூடும். அதற்காகச் செல்லவேண்டிய தேவை இருந்திருக்கும் என்று நினைத்துக்கொள்வாள். அவர் சென்ற பொழுதெல்லாம் தங்களுக்கு பலத்த துணைகள் இருப்பதையும் கவனித்திருக்கிறாள்.

யானை ஒரு குலுக்கலுடன் நிற்கிறது. திடுக்கிட்டு எழுந்து கொள்கிறாள் அம்மங்கை. “என்ன ஆயிற்று?” என்று கேட்டவுடன், திரையைத் திறந்து விசாரிக்கிறாள் நிலவுமொழி.

“இன்றைய பயணம் முடிந்து விட்டது. நாளைதான் நகருக்குள் நுழையவேண்டும்.” என்று பதில் கிடைக்கிறது. ஒரு குலுக்கலுடன் யானை அமர்ந்து கொள்கிறது.

தனது பிரியமான கருப்புக் குதிரையின்மீது சவாரி செய்துகொண்டு வருகிறான் இராஜேந்திரன். அவனுடன் பத்துப் பதினைந்து குதிரைவீரர்களும் வருகிறார்கள்.

யானையின் அருகில் நின்று இரு கைகளையும் நீட்டுகிறான். அம்மங்கை அப்படியே அவனது கரங்களில் தாவிக் குதிக்கிறாள். அவளைத் தாங்கிப் பிடித்த இராஜேந்திரன், அவளைக் கீழே இறக்கிவிட்டு, அதன் பின்னர் திரிபுவனமாதேவியை கைவாகு கொடுத்து இறக்கி விடுகிறான். மாவுத்தன் நிலவுமொழியை இறக்கி விடுகிறான்.

“இன்று நகரத்திற்குச் செல்லப் போவதில்லையாமே?” என்று வினவுகிறாள் திரிபுவனமாதேவி.

“ஆமாம். இன்று நேரம் சரியில்லையாம். அதனால், அருகிலிருக்கும் ஓடைக்கரையில் கூடாரமடித்துத் தங்க ஏற்பாடு செய்திருக்கிறது. காலை எழுந்து நீராடிவிட்டு நகரத்திற்குச் செல்லலாம்.” என்று அறிவிக்கிறான் இராஜேந்திரன்.

“அதுதான் சரி தந்தையே. காலையில் நீராடிவிட்டுச் சென்றால் உற்சாகமாகவும், தெம்பாகவும் இருக்கும். இன்று முழுவதும் யானைப் பயணம் குலுக்கிக் குலுக்கி எடுத்துவிட்டதால் இன்னும் உடம்பு பயணிப்பதுபோல ஆடிக்கொண்டே இருக்கிறது.”  என்று உடலை நெளித்தவாறு பதிலளிக்கிறாள் அம்மங்கை.

“அம்மங்கை, இது என்ன கெட்ட பழக்கம்!  அனைவரின் முன்னர் உடலை நெளிப்பாயா? அரசகுமாரி மாதிரி நடந்து கொள்!”  என்று மெல்லிய குரலில் மகளைக் கண்டிக்கிறாள் திரிபுவனமாதேவி.

“ஒன்பது வயதுதானே ஆகிறது ராணி இவளுக்கு! அதற்குள்ளேயே ஏன் இப்படிக் கண்டிக்கிறாய்?” என்று சலுகையுடன் மகள் பக்கம் பேசுகிறான் இராஜேந்திரன்.

“இது அந்தப்புரம் அல்ல அரசே! அதுவும் வெளிநாடு! இந்நாட்டு மக்களைப் பொறுத்தவரை இவள் ஒன்பது வயதே ஆன சின்னப் பெண் அல்ல, சோழநாட்டு இளவரசி! அந்தப் பொறுப்பு உணர்வு அவள் இரத்தத்தில் எப்பொழுதும் ஓடவேண்டும் என்றுதான் உணர்த்துகிறேன். யானை மீதிலிருந்து குரங்குமாதிரி தாவிக் குதிப்பதும், மற்றவர்கள் முன்னர் உடலை நெளிப்பதும் அரசகுமாரிக்கு அழகே அல்ல. நாளை உங்கள் மைத்துனரின் பட்டாபிஷேகத்தின் போது இப்படி நடந்துகொண்டாள் உங்கள் தங்கையார் நான்தான் இவளைச் சரியாக வளர்க்கவில்லை என்று குறைப்பட்டுக் கொள்வார்கள்!” என்று அவன் காதில் மட்டுமே விழும் அளவுக்கு மெதுவான குரலில் பதிலளிக்கிறாள் திரிபுவனமாதேவி.

“புரிகிறது தேவி, புரிகிறது.” என்ற இராஜேந்திரன், “இன்று இரவுச் சாப்பாட்டின் போது விரலியர் பாட்டும், கூத்தும் நிகழ்த்தப் போகிறார்கள். நாம் அதைக் கண்டு சிறப்பிக்க வேண்டும் என்று தண்டநாயகர்களும், மற்றவர்களும் விரும்புகிறார்கள். ஆகவே, இளைப்பாறியவுடன் நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்திற்குப் புறப்பட்டுச் செல்வோம்!” என்று அறிவிக்கிறான். பிறகு நிலவுமொழியைச் சுட்டிக்காட்டி, “யாரிந்தப் பெண், புதிதாக இருக்கிறாள்?” என்று வினவுகிறான்.

“இவள் பெயர் நிலவுமொழி. தங்கள் தங்கையாருக்குத் துணையாகவும், வேங்கைநாட்டு அரண்மனைப் பணிப்பெண்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கவும் தங்கள் தந்தையார் உங்கள் நண்பரான சிவாச்சாரியரின் ஆலோசனைப்படி அனுப்பி வைத்திருக்கிறார்.” திரிபுவனமாதேவியிடமிருந்து பதில் வருகிறது
.
 “பொருத்தமான பெயர். முகத்தைப் பொறுத்தவரை!” என்று சிரித்த இராஜேந்திரன், “இப்பெண்ணுக்கு அதிக வயதாகவில்லை. இவளா தமிழ் சொல்லிக் கொடுக்கப் போகிறாள்?” என்று நினைத்துக்கொண்டே நிலவுமொழியின் பக்கம் திரும்புகிறான்.

“கோப்பரகேசரி அரசருக்கு இந்த அடிமையின் வணக்கங்கள்!” என்று அவன் முன் மண்டியிட்டு வணங்குகிறாள் நிலவுமொழி. பெயருக்கேற்றபடி அவளது குரலும் மிகவும் தன்மையாக இருக்கிறது.

அவளைச் சில கணங்கள் அளவிடுகிறான் இராஜேந்திரன். “எழுந்துகொள் பெண்ணே! எமது நண்பர் சிவாச்சாரியார் உன்னை அனுப்பியதாகக் கேள்விப்பட்டோம். அது பற்றி முழு விவரமும் தெரிந்து கொள்ள யாம் விரும்புகிறோம்!” என்று கனிவுடன் கேட்கிறான். பணியாளர்களிடம் பேசும் போதோ, அல்லது உத்திரவிடும்போதோ இராஜராஜர் மாதிரி அவனும் பன்மையில் பேசுவது வழக்கம்.

“அரசே! காஞ்சிக்குக் கிழக்கே கடலருகில் உள்ள திருமயிலைக் கபாலீஸ்வரர் கோயில் ஓதுவாராகவும், தமிழாசிரியராகவும் பணியாற்றி வரும் பொன்னம்பல ஓதுவார் அவர்களின் மகள் நான். என் தந்தையார் எனக்குத் தமிழ் இலக்கணம் நன்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். இது தவிர, தேவாரத் திருப்பதிகங்களும் பயிற்பித்திருக்கிறார். என் தந்தைக்கு உதவியாக அங்கு சிறார்களுக்குத் தமிழ்க் கல்வி அளித்து வருகிறேன்.

“நான்கு திங்கள்கள் முன்னர் திரிபுவனச் சக்கரவர்த்திகளின் தமிழ்த் திருப்பணி ஆலோசகரான சிவாச்சாரியார் காஞ்சி வந்தவர், கபாலீஸ்வரரைத் தரிசிக்க திருமயிலைக்கும் வந்தார். என் தந்தையார் அவரது நண்பராதலால் அப்பொழுது எங்கள் வீட்டிற்கும் வருகை தந்தார். அச்சமயம் நான் சிறார்களுக்கு தமிழ்ப் பாடம் கற்பித்துக் கொண்டிருந்தேன். அதையே உற்றுக் கவனித்த அவர், என் தந்தையாரிடம் வேங்கை நாட்டு அரசியாரான தங்கள் தங்கையாருக்குப் பேச்சுத் துணையாகவும், அங்கு இருக்கும் அரண்மனைப் பணிப்பெண்களுக்கு தமிழ் கற்றுத்தரவும் என்னை அனுப்புமாறு பணிப்பித்தார். மேலும் அரச இலச்சினை மோதிரத்தைக் காண்பித்து அவர் சொன்னதை சோழச் சக்கரவர்த்தி அவர்களின் கட்டளையாகவும் ஏற்றுக்கொள்ளுமாறு இயம்பினார். என்னைப் பற்றிய கவலை என் தந்தைக்கு இனிமேலும் இருக்காது என்றும், என்னைப் பற்றிய விவரங்கள் ஒவ்வொரு திங்களும் அவருக்கு அனுப்பப்படும் என்றும் உறுதி அளிக்கவே, அன்று மாலையே என் தந்தையாரின் மனமார்ந்த அனுமதியுடன் நான் சிவாச்சாரியாருடன் பத்து நாள்களில் தஞ்சையை அடைந்தேன்.

“என்னை இரண்டு திங்கள்கள் அரண்மனை அந்தப்புர அலுவல்களைக் கற்று அறிந்து கொள்ளுமாறு பணிப்பித்தார். சிவாச்சாரியார் திரிபுவனச் சக்கரவர்த்திகளுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்து, வேங்கை நாட்டில் நான் செய்யப் போகும் பணியையும் சக்கரவர்த்திகளுக்கு எடுத்து இயம்பவே, அவரும் அரை நாழிகை உரையாடிய பின்னர் என்னைக் கனிவுடன் தன் பேத்தி என்றும் இயம்பி இந்த ஏழைப்பெண்ணின் வாழ்வை சீர்மல்குமாய்ச் செய்துவிட்டார்கள். அது மட்டுமல்லாமல் மூன்று தடவைகளுக்கு மேல் என்னை அழைத்து நான் வேங்கை நாட்டில் செய்யப் போகும் தமிழ்ப்பணி பற்றி நிறைய அறிவுரைகளும் வழங்கினார்கள். நான்கு திங்கள்களுக்குமுன் காஞ்சியைக்கூடச் சென்று பார்த்திராத இந்த ஏழைப் பெண்ணுக்கு இப்படிப்பட்ட நல்வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணிக்கூட பார்க்க இயலவில்லை அரசே! மற்ற மன்னர்களுக்கு முன் சிங்கமாக விளங்கும் தங்களுடன் இப்பொழுது நான் பேசுவதுகூட கனவா நனவா என்று எனக்கு இன்னும் விளக்கமாகவில்லை!”  நிலவுமொழியின் கண்களில் பெருகிய கண்ணீர் அவளது கண் மையைக் கரைத்து கன்னங்களில் கருங்கோடுகளிட்டது.

“குழந்தாய்! ஒரே நாளில் நீ உன் வீட்டைப் பிரிந்து தமிழ்ப் பணிக்காக வந்தது குறித்து யாம் மிகவும் மகிழ்கின்றோம். பேத்தி என்று சக்கரவர்த்தி அவர்களால் அழைக்கப்பட்ட நீ மிகவும் கொடுத்து வைத்திருக்கிறாய். அதனால் நீ எமது சோழக் குடும்பத்தில் ஒருத்தி ஆகிவிட்டாய். எமது தந்தைக்கு பேத்தி என்றால் எமக்கும் மகாராணிக்கும் நீ மகளாகிறாய்! அம்மங்கை உன் தங்கை! நீ இனிமேல் பணிப்பெண் உடையணிவதில் எமக்கு விருப்பமில்லை! தேவி, எம் விருப்பத்தை நீ நிறைவேற்ற வேண்டும்.” என்ற இராஜேந்திரன் கண்ஜாடை காட்டவே, திரிபுவனமாதேவி தன் கழுத்தில் இருந்த இரத்தினங்கள் பதித்த பொன்மாலை ஒன்றைக் கழட்டி நிலவுமொழியின் கழுத்தில் அணிவிக்கிறாள். உடனே நிலவுமொழிக்கு உடல் சிலிர்க்கிறது.

சோழநாட்டில் அனைவரும் இராஜேந்திரனின் முன்நின்று பேசவும் அஞ்சுவர். அதைப் பற்றிக் கேள்விப்பட்டதால் அவள் மனதில் இராஜேந்திரனைப் பற்றி ஒரு அச்சங்கலந்த மரியாதையே இருந்து வந்தது. அவன் முதலில் தன்னுடன் பேசிய தோரணையில் அது அதிகமாகியது. ஆனால் தன் பதிலைக் கேட்டு அவன் காட்டிய பரிவு அச்சத்தை நீக்கி நன்றியில் திக்குமுக்காடச் செய்கிறது.

அருகில் நின்ற கணக்கரை விளித்த இராஜேந்திரன், “ஆமாத்தியரே, இப்பெண்ணின் தந்தையார் பொன்னம்பல ஓதுவார் காஞ்சிக்கடுத்த திருமயிலைக் கோவிலில் ஓதுவாராகப் பணிபுரிகிறாராம். அவருக்கு நமது அன்பளிப்பாக நூறு காணி34 நன்செய் நிலம் அளிக்க யாம் விரும்புவதாக நமது நண்பர் சிவாச்சாரியாருக்கு ஓலை அனுப்பும். இரவு நான் உணவு கொள்வதற்கு முன் ஓலை எழுதப்பட்டு எமது இலச்சினை அதில் இடப்பட்டுவிட வேண்டும். தஞ்சை திரும்பும் முதல் குதிரைவீரன் மூலம் இச்செய்தி சிவாச்சாரியாருக்குச் செல்ல வேண்டும்.” என்று ஆணையிடுகிறான்.
இதைக்கேட்ட நிலவுமொழியின் தலை சுழல்கிறது. நூறு காணி நன்செய் நிலமா? அப்படி ஒரு அன்பளிப்புப் பெற நாம் என்ன செய்துவிட்டோம்! இதுதவிர விலை மதிக்கமுடியாத பொன்மாலையை மகாராணியார் கடிட்டி நம் கழுத்தில் போட்டிருக்கிறாரே! மேலும் கோப்பரகேசரியான இராஜேந்திரரே தன்னைத் தன் மகள் என்று இத்தனைபேர் முன்னர் சொல்லிவிட்டாரே! நிலவுமொழி நிலவுக்கே மிதந்து சென்று கொண்டிருக்கிறாள்.
அவள் தலையை அன்புடன் வருடிக்கொடுத்த இராஜேந்திரன், “ஆமாத்தியரே, இப்பெண்ணுக்கு நல்ல ஆடைகள் உடனே வேண்டும் அதையும் நிறைவேற்றுவீராக!” என்று அடுத்த ஆணையைப் பிறப்பிக்கிறான்.
“பெண்ணே நிலவுமொழி, எமது நண்பரான சிவாச்சாரியார் எப்படி இருக்கிறார்? எமக்கு ஏதாவது சேதி சொல்லி அனுப்பியிருப்பாரே!” என்று வினவுகிறான்.
தடுமாறுகிறாள் நிலவுமொழி. சிவாச்சாரியார் என்ன சேதி சொல்லி அனுப்பியிருப்பார் என்று குழம்புகிறாள். சிறிது நேர யோசனைக்குப் பிறகு அவள் முகம் மலர்கிறது.

“அரசர் பெருமானே! சிவாச்சாரியார் தமிழ்த் திருப்பணிக்காக நாடு முழுவதும் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார் நான் புறப்படும் சமயம் “வேங்கை நாட்டில் நமது புலி இருக்கிறதா என்று பார்!” என்று சொன்னார். அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று என் மதிக்கு எட்டவில்லை. ஒருவேளை இது அவர் தங்களுக்கு அனுப்பிய குறியீட்டுச் சேதியா என்றும் எனக்குத் தெரியவில்லை.” என்று தயங்கியவாறே சொல்கிறாள்
.
“இது எனக்கு அனுப்பிய சேதிதான். நன்று பெண்ணே நன்று! என்னம்மா மங்கை ஒன்றுமே பேசாமல் நின்றுவிட்டாய்?” என்று மகளின் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளுகிறாள்.

“தந்தையாரே! இரண்டு திங்கள் என்னுடன் பணிப்பெண்ணாகப் பயணித்த நிலவுமொழி சிவாச்சாரியார் தேர்ந்தெடுத்து அனுப்பியவளா? இவள் மூலம் சிவாச்சாரியார் தங்களுக்கு சங்கேதமாகச் சேதி வேறு அனுப்பியிருக்கிறாரா? அன்னையார் சொல்லும் வரை இவள் எனது பணிப்பெண்ணாக, எனக்குத் துணையாக வந்திருக்கிறாள் என்றுதான் எண்ணி வந்திருக்கிறேன்.

இவளோ, அன்னையாரோ, இதுபற்றி என்னிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. இன்னும் வேறு என்னவெல்லாம் நடக்கிறது? எனக்குத் தலை சுற்றுகிறது. அரசு இயங்குவது பற்றி தாங்கள் எனக்கு நிறையக் கற்றுக்கொடுக்கவேண்டும்!” என்று செல்லமாகக் கோபிக்கிறாள்.

“புலிக்குட்டிக்கு வேட்டையாடக் கற்றுக் கொடுக்கவா வேண்டும்? உன் அன்னையைக் கவனித்தாலே அந்தக் கலை உனக்குத் தானாகவே வந்துவிடும்.” என்று கடகடவென்று சிரிக்கிறான் இராஜேந்திரன்.

அங்கு எட்டு ஆட்கள் தூக்கி வந்த சிவிகையில் மூன்று பெண்களும் ஏறிக் கொள்கிறார்கள். சிவிகை அவர்கள் இரவு தங்கவிருக்கும் ஓடைக் கரையை நோக்கிச் செல்கிறது. உள்ளே அமர்ந்திருந்த அம்மங்கை நிலவுமொழியை நோக்குகிறாள். தனது தாயின் பொன்மணிமாலை அவளுக்கு அழகு சேர்ப்பதை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாள். நிலவுமொழியின் கருநிறத்திற்கு அந்தப் பொன்மாலைதான் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது?! அந்த மாலை அவளுக்கு ஒரு அரசகளையையே கொண்டுவருவதை அம்மங்கையால் உணர முடிந்தது. தந்தை சொல்லியபடி அவள் நல்ல ஆடைகளையும் அணிந்து கொண்டால் அவளையும் ஒரு அரசகுமாரி என்று நினைத்தாலும் நினைத்து விடுவார்கள் என்பதை நினைத்தவுடன் தன்னையும் அறியாமல் “க்ளுக்” என்று சிரித்து விடுகிறாள்.
“என்ன சிரிப்பு மங்கை?” என்று தாய் வினவியதற்கு, “ஒன்றுமில்லை” என்று தலையசைக்கிறாள்.
------------------------------------------------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு
31ஒரு காதம் என்பது கிட்டத்தட்ட 1.17 கிலோமீட்டர் தொலைவு ஆகும்.
32ஒரு நாழிகை என்பது இருபத்திநான்கு நிமிடங்களைக் குறிக்கும் கால அளவு.
33பண்டைத் தமிழ்நாட்டில் மாதங்களைத் திங்கள் என்று சொல்வது வழக்கு.
34காணி என்பது 1.32 ஏக்கர் நிலப்பரப்பாகும்.

No comments:

Post a Comment