Friday 1 August 2014

தமிழ் இனி மெல்ல....24 :மூச்சு இருக்கும்போதே திருக்கைலாயத்திற்கு


தமிழ்  இனி மெல்ல....23.. சென்ற பதிவின் நினைவூட்டல் 
பாண்டி நாடே சமணர்கள் பிடியில் சிக்கி, சைவம் தவியாய்த் தவித்தபோது ஆளுடைய பிள்ளையாரை மதுரைக்கு வரவழைத்து, சைவத்தைத் தழைக்கச் செய்த செல்வியான மங்கையர்க்கரசி சோழநாட்டு இளவரசி என்பதை என்ன அருமையாக வளவர்கோன் பாவை என்றதோடு மட்டுமல்லாமல் பாண்டிமாதேவி என்றும் அழைத்திருக்கிறாரே! சிவபெருமானையும், உமையவளையும் தவிர யாரையும் பாடாத தமிழ்ஞான முனிவர் மனிதப் பிறவிகளான மங்கையர்கரசியாரையும், அவரது அமைச்சர் குலச்சிறையையும் பற்றி ஒரு பதிகமே பாடியுள்ளார் என்றால் அவர்கள் மீது அவர் எந்த அளவுக்கு மதிப்பு வைத்திருக்க வேண்டும்! பாண்டிய நாட்டை சமணர்கள் வசமிருந்து ஒரு சோழநாட்டு இளவரசிதானே மீட்டாள்? அப்படியிருக்க தமிழை வளர்க்கச் சோழ இளவரசிகளால் இயலாது என்றா நினைக்க வேண்டும்?

“தவிர, பாண்டியர்கள் யார்? சங்கம் மூன்று அமைத்துத் தமிழை வளர்த்தவர்கள். களப்பிரர்கள் கையில் சிக்கித் தவித்த தமிழ்நாட்டில் பாதியை மீட்டுத் தந்தவர்கள் அல்லவா? அதுமட்டுமா? மதுரைப் பாண்டிய இளவரசியான அங்கயற்கண்ணியை சொக்கநாதரான சிவபெருமான் மணந்து பாண்டியநாட்டையே சீதனமாகப் பெறவில்லையா?

“இப்பொழுது இருக்கும் மன நிலையில் இந்தக் கட்டையின் கூச்சல் உங்கள் மனதில் பதிவது எளிதில்லைதான். இதை மேற்கொண்டு வளர்த்து உங்கள் கருத்தைத் தடிகொண்டு கனியவைக்க இந்தக் கட்டை விரும்பவில்லை. வேறு திட்டங்களுக்குச் செல்வோம்.

“தமிழ்ப் பள்ளிகள் ஊர்கள் தோறும் திறக்கவேண்டும். முதலில் சேரநாட்டிற்கும், பின்னர் சாளுக்கிய நாட்டிற்கும் தமிழ் ஆசிரியர்களை அனுப்பி குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுத்தர ஏற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ் அறிந்தால் மட்டுமே அரசில் பணி கிடைக்கும் என்று அறிவிக்கவேண்டும். இந்த சட்டத்தைச் சோழப் பேரரசின் தலைசிறந்த சட்டமாக்கவேண்டும். தவிர வைணவர்களிடமிருந்தும் நாம் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது. வைணவக் கோவில்களில் வடமொழியில் பூசைகள் நடந்தாலும், தமிழ்ப் பிரபந்தங்களைப் பட்டாச்சாரியர்களே ஓதுகிறார்கள். சாற்றுமுறை என்று அதை மதிக்கிறார்கள். ஆக தமிழ் கருவரையில் திருமாலுக்கு அர்ப்பணமாகிறது. அப்படியிருக்க, சிவன் கோவில்களில் நாம் தமிழை கருவரைக்கு வெளியில் அனுப்பிவிட்டோம். ஓதுவார்கள் கருவரைக்கு வெளியில் நின்று தமிழ் வேதமாம் தேவாரத்தை ஓத ஆரம்பித்திருக்கிறார்கள், அதுவும் நீ ஆணையிட்ட பின்னர். இது ஏன்? சிவாச்சாரியர்களே ஏன் தேவாரத்தை ஓதக் கூடாது? திருமால் ஏற்றுக்கொள்ளும் தமிழை தென்னாடு மற்றுமின்றி என்னாட்டவர்க்கும் இறைவனான முக்கண்ணன் ஏற்கமாட்டாரா? யோசித்துப் பாருங்கள்.”

சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு கருவூர்த்தேவர் மீண்டும் பேசத் துவங்குகிறார்.

“இதுவரை கருநாட்டார் மூலமாகத்தான் நமக்கு நிறைய இடையூறு வந்திருக்கிறது. காவிரியின் போக்கை அடைக்க முற்பட்டவர்கள் அவர்கள். அவர்கள் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாக நமக்கு எதிரிகளாக இருந்து வருகிறார்கள். அவர்களை இப்பொழுது சோழ நாட்டின் கீழ் கொண்டு வந்திருக்கிறீர்கள். அவர்களை தமிழை ஏற்றுக் கொள்ளும்படி செய்தால் கருநாடும் தமிழ்நாடாகும் அல்லவா? உன் பேரரசில் அமைதி பரவுமே!

“இதற்காக உடனே தமிழ் ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கில் பயிற்சி பெறவேண்டும். சாளுக்கிய நாட்டிற்கும், கருநாட்டிற்கும் நிறையப் பேர் அனுப்பப்பட வேண்டும். தமிழ் கற்றுக் கொள்ளுவோருக்கு மானியம், வரிவிலக்கு கொடுக்கப்பட வேண்டும். இதைக் கண்காணிக்க உங்களுக்கு நம்பகமான ஒற்றர்கள், அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். தமிழ்க்கல்வி கட்டாயம் என்று அறிவிக்கப்பட வேண்டும். சோழப் பேரரசின் அரசு மொழியாக தமிழ் ஆக்கப்பட வேண்டும். வடமொழியில் உங்களுக்குத் திருமுகம் வருவதை நிறுத்த வேண்டும்...”

தமிழ்  இனி மெல்ல....24 தொடர்கிறது 



அரிசோனா மகாதேவன் 
ஓலைச் சுவடிகளில் தாம் எழுதியிருந்த திட்டத்தை விவரித்துக் கொண்டே செல்கிறார் கருவூரார். இராஜராஜருக்கே அவரது திட்டங்களை முழுவதும் நிறைவேற்றச் சற்று மலைப்பாக இருக்கிறது. “ஐயா! சாளுக்கியர்களையும், கருநாட்டவரையும், அவர்கள் மொழியை விட்டுவிடச் சொல்லுவது எப்படி? இது உள்நாட்டுக் குழப்பத்தையும், கலவரத்தையும் விளைவிக்காதா? வாளெடுத்து எதிரிகளை வீழ்த்த வேண்டிய நமது வீரர்கள் உள்நாட்டுக் குழப்பத்தைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டால் மக்களுக்கு அரசு மீது வெறுப்பு வளராதா? அதை சற்று விளக்கமாகச் சொல்லுங்கள். மாற்றார் படைகளை வீழ்த்துவதில் எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. ஆயினும் மக்களை சர்வாதிகாரி போல அடக்கி வைப்பது பற்றித்தான்...” மேலே பேசாமல் நிறுத்துகிறார் இராஜராஜர்.

“அருள்மொழி, உன் மனத் தயக்கம் எனக்கு நன்றாகப் புரிகிறது. நான் நாற்பது ஆண்டுகள் கேட்டதை நினைவில் நிறுத்துவாயாக. வயதுக்கு வந்தவர்களை விட்டுவிடு. உன் மருமகன் விமலாதித்தன்

என்ன செய்கிறான் என்பதை நினைவுக்குக் கொண்டுவா. தமிழ்நாட்டின் தலைவன் நீ! உனது பேரனைத் தெலுங்கனாக அவன் மாற்றியிருப்பதைக் கவனித்தாயா? அவன் குந்தவியைத் தெலுங்கில் உரையாடும்படி வற்புறுத்தவில்லை. அப்படிச் செய்திருந்தால் சாளுக்கிய அரண்மனையில் பெருங்குழப்பம் விளைந்திருக்கும். அதற்குப் பதிலாக பால் மணம் மாறாத பாலகனுக்கு வடமொழிக் கல்வியும், தெலுங்குக் கல்வியும் கற்பிக்க ஏற்பாடு செய்தான். அதன் பலன் தாய் தமிழில் பேசினாலும், தனயன் வேற்று மொழியில் பேசுகிறான். ஆகவே விமலாதித்தனின் திட்டத்தை மேற்கொண்டு தமிழைப் பரப்புவதில் என்ன பிழை இருக்கிறது?

“தமிழ்க் கல்வியைச் சிறார்களுக்குத்தான் கற்பிக்க வேண்டும். பேரரசின் மொழி, இதை அனைத்துச் சிறுவரும் கற்றுக் கொள்ளவேண்டும், அப்படிக் கற்றுக் கொண்டால் சன்மானம் உண்டு என்று அறிவிப்பு செய்வாயாக. தானாகத் திருப்பணி கனிந்துவிடும். போர்வீரன் என்ற கண்ணோட்டத்தை விட்டு, தந்தையின் கண்ணோட்டத்துடன் இந்தத் திட்டத்தை அணுகுவாயாக. இன்னும் ஏதேனும் ஐயங்கள் இருந்தாலும் கேட்டு, தெளிவு பெறுவீராக.” என்று மிகவும் பொறுமையுடனும், கனிந்த குரலிலும் விளக்குகிறார் கருவூரார்.

அவர் பேசப் பேச, மகுடியில் கட்டுண்ட நாகங்கள் போல அனைவரும் அவர் வசமாகிறார்கள். அனைவருக்கும் அவர் விளக்கும் தமிழ்த் திருப்பணித் திட்டத்தில் ஆர்வம் பிறக்கிறது.

“இன்னும் தலையாய நிபந்தனை ஒன்று இருக்கிறது. இத்திட்டம் செயல்படுகிறதா என்று கண்காணிக்கவும் உங்களுக்கு ஆலோசனை சொல்லவும் ஒருவர் தேவை. இப்பொழுது அந்தப் பணிக்கு யாரை நியமிப்பது என்று உங்களுக்கு கருத்துக்குத் தோன்றுகிறதா?” இராஜராஜரையும், இராஜேந்திரனையும் பொதுவாகக் கேட்கிறார் கருவூரார்.

சிறிது நேரம் யாருமே அங்கு ஒன்றும் பேசவில்லை.

“இது மிகவும் பொறுப்புள்ள பதவியாயிற்றே! அந்த ஆலோசகருக்கு எவ்வளவு தூரம் அதிகாரம் தரவேண்டும் ஐயா?” என்று கேட்கிறார் இராஜராஜர்.

“அது உங்களைப் பொறுத்தது, அருள்மொழி. அதை இனிமேல்தான் தங்கச் சுருளில் பதிவு செய்ய வேண்டும். அந்த ஆலோசகர் திருப்பணிக் குழலையும், தங்கச் சுருளையும் தன் உயிருக்கும் மேலாகக் காத்து வரவேண்டும். திருப்பணியின் நிறைவேறுதலை பதிவு செய்து, ஆண்டுதோறும் உங்கள் இலச்சினை அதில் பதிவு செய்ய வேண்டும். உங்களுக்கு விருப்பமில்லாது போனாலும் விடாது திருப்பணியை நினைவுபடுத்த வேண்டும். அவர் சொல்லும் சொற்களால் உங்களுக்கு எரிச்சல் வந்தாலும் அதையும் தாங்கிக் கொள்ள வேண்டும்.”

“தேவரே! கடைசி முடிவை யார் எடுப்பது?” இராஜேந்திரனிடமிருந்து கேள்வி பிறக்கிறது.
“அரசன்தான்!” என்று பளிச்சென்று பதில் சொல்கிறார் கருவூரார்.
“சிவாச்சாரியரை நியமித்தால் நல்லது என்று ஆலோசனை கூறுகிறேன்.” தயக்கமில்லாமல் பதில் சொல்கிறான் இராஜேந்திரன்.

---------------------------------------------------------------------------------------------------
ஒரு முக்கிய அறிவிப்பு: கடலூர் மாவட்ட எழுத்தாளப் பெருமக்களுக்கு 
                   வரும் ஆகஸ்ட் 1ந்தேதி முதல் 31ந்தேதி வரை 
                    கடலூர் மாவட்டச சிறப்பிதழ்  மாதமாக  நமது 
                   இணையவெளி கொண்டாடத் தீர்மானித்துள்ளது. 
                   இதில் கவிதை கட்டுரை, சிறுகதை, பயணக்
                   கட்டுரை, சிறப்புச் செய்திகள், நேர்முகங்கள், 
                    புகைப்படங்கள்  என எதைவேண்டுமானாலும் 
                     எழுத்தாளப்பெருமக்கள் எழுதியனுப்பலாம் . 
                  பிரசுமாகும் ஒவ்வொரு படைப்புக்கும் ரூ.100/-பரிசு 
நூலாக விரும்பினால் நூலாகவோ பணமாகவோ 
அனுப்பி வைக்கப்படும் புகைப்படமும் அனுப்பலாம். 
ஒரே ஒரு வேண்டுகோள் 
             அன்புகூர்ந்து பிற வலைத்தளங்களில் இருந்து பிரதி 
எடுத்து அனுப்பிவைத்து விடாதீர்கள். கண்டுபிடிக்கப்படும். 
அனுப்பியவர் வருந்த நேரிடும் 
                எந்த ஒரு படைப்பும் யுனிகோட்[ஒருங்குறி] வடிவில் 
               மட்டுமே இருக்க வேண்டும்  vaiyavan.mspm @ gmail.com 
              என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம் 
           மிகச் சிறந்தவை தொகுக்கப்பட்டு சென்னை தாரிணி 
           பதிப்பகத்தாரால் நூலாக்கப்படும் 
---------------------------------------------------------------------------------------------

* * *
                                                 அத்தியாயம் 5
                               கருவூரார் குடில், தஞ்சை
                             சாதாரண, ஆனி 29 - ஜூலை 14, 1010
ணீர் என்ற குரலில் இராஜேந்திரன் சொன்னது கருவூராரைத் தவிர அனைவருக்கும் வியப்பை அளிக்கிறது. முப்பது வயதே ஆன சிவாச்சாரியிடம் இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைக்க ஏன் இராஜேந்திரன் விரும்புகிறான் என்று அனைவரின் மனதிலும் பெரிதாகக் கேள்வி எழுகிறது. முதல்நாள்தான் இராஜேந்திரன் சிவாச்சாரியனையே பார்த்திருக்கிறான், ஒரு நாளிலேயே அவன்மீது இப்படிப்பட்ட நம்பிக்கை எப்படி வரமுடியும் என்பதுதான் அவர்களுக்கு வியப்பாக இருக்கிறது. அவர்களது கேள்விக்கு விடையளிக்கும்படி தொடர்ந்து இராஜேந்திரன் பேசுகிறான்:

“சிவாச்சாரி மாதிரி திறமையான ஒருவனையோ, அரச விசுவாசம் உள்ளவனையோ, இதுவரை நான் பார்த்ததில்லை. நேற்று அவன் என்னை வாட்போரில் தோற்கடித்திருக்க முடியும்!”

அவன் சொல்வதை நம்பமுடியாமல் குந்தவைப் பிராட்டி ஏதோ சொல்ல முற்பட்டதும் அவளைத் தடுத்த இராஜேந்திரன், “இருங்கள், அத்தையாரே! இருங்கள்! நேற்று அவன் எடுத்த வாளை என்னைத் தடுக்க மட்டுமே பயன்படுத்தினான். அப்படியிருந்தும் அவனது வாளை வீழ்த்த என்னால் இயலவில்லை. தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்கியே நான் எனது வாளைத் தூக்கி எறிந்ததேன். வாட்போர்த் திறமையில் நான்கில் ஒரு பங்கைக்கூட அவன் பயன்படுத்தவில்லை. சக்கரவர்த்திக்கும், ஆசான் தேவருக்கும் இது தெரியாமல் இருந்திருக்காது, அது மட்டுமல்ல, அவன் அரச நீதியைப் பற்றியும், போர்முறைகளைப் பற்றியும் நன்கு அறிந்திருக்கிறான். என்னை வென்ற அவனை நான் எனது நண்பனாக வரித்தேன். ஆகவேதான் இவ்வளவு திறமையுள்ள இவன் இத்திருப்பணிக்கு ஆலோசகனாக இருக்கவேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்தேன்.

தேவரும், சக்கரவர்த்தியாரும் அதற்கு மாறாகக் கருத்து கூற விரும்பினால் அதையும் செவிமடுக்க விரும்புகிறேன்.” என்று தான் சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்கிறான்.

இராஜராஜர், மற்றும் கருவூராரின் முகத்தில் எந்தவிதமான சலனமும் இல்லை. சிவாச்சாரி முள்ளின் மேல் அமர்ந்திருப்பதைப் போல உணர்கிறான். தன்மீது இராஜேந்திரன் வைத்துள்ள மதிப்பு அவன் கண்களைப் பனிக்கச் செய்கிறது. அது மற்றவர்களுக்குத் தெரியா வண்ணம் தலையைத் திருப்பிக் குனிந்து கொள்கிறான். அதுவும் இராஜராஜர், கருவூரார் கண்களிலிருந்து தப்பவில்லை. குந்தவைப் பிராட்டிக்கும், சோழமகாதேவிக்கும் ஏதோ கூத்தைப் பார்ப்பது போலத்தான் இருக்கிறது. இதன் முடிவைத் தாங்கள் இருவரும் பார்க்கத்தான் வேண்டும், அதில் கலந்து கொள்ளக்கூடாது என்பதுபோல அமைதியாக இருந்து விடுகிறார்கள்.

“அருள்மொழி! மதுராந்தகன் தனது முடிவைச் சொல்லிவிட்டான். உன் முடிவு என்னப்பா? வேறு யாரும் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறாயா?” என்று வினவுகிறார் கருவூரார்.
“ஐயா! சிவாச்சாரி இராஜேந்திரனின் நண்பர் ஆகிவிட்டார். அதற்கான காரணங்களையும் நாம் தெள்ளத் தெரிந்து கொண்டோம். இராஜேந்திரனே ஒருவரை வீரர் என்றும், தலை சிறந்தவர் என்றும் கூறினால் அவர் எப்படிப் பட்டவர் என்று நாம் ஆராயவே தேவையில்லை. ஒரே நாளில் இப்படிப்பட்ட மதிப்பைப் பெறுவது இயலவே இயலாது. எனவே, இராஜேந்திரனுடைய தேர்வை யாமும் ஆமோதிக்கிறோம்.”

ஒவ்வொரு சொல்லையும் நிறுத்தி அழுத்தமாகச் சொன்னதோடு மட்டுமல்லாமல் “நாம்” என்று அரசருக்கே உரித்தான பன்மையுடன் இராஜராஜர் பேசியது சோழநாட்டின் பேரரசரின் குரலாகத்தான் ஒலிக்கிறது. அது மட்டுமல்லாமல், அவர் இப்பொழுது பேசுவது எதையும் அரச கட்டளையாகத்தான் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதையும் அனைவரும் உணர்கிறார்கள்.

அனைவரின் முகத்தில் எழும் உணர்ச்சிகளையும் ஒரு வினாடியில் தெரிந்து கொள்கிறார் இராஜராஜர். இராஜேந்திரனின் முகத்தில் எழுந்த கனிவும், நன்றி உணர்ச்சியும் அவர் கண்களுக்குத் தப்பவில்லை.

“இந்தத் திருப்பணியைத் துவங்கப் போவது யாம். ஆகவே, அதுவரை இப்பணியில் நமக்கு ஆலோசகராக நம்முடன் பணி செய்யவேண்டிய பொறுப்பு சிவாச்சாரியருக்கு ஏற்படும் நிலை இருக்கிறது. நீங்கள் அவரை இராஜேந்திரனுக்கு அளித்திருக்கிறீர்கள். அப்படியிருக்க அவரை எமது பணிக்கு ஈர்த்துக்கொள்வது உங்களுடைய விருப்பத்தையும், இராஜேந்திரனுக்கு சிவாச்சாரியர் செய்யக்கூடிய பணியையும் தடுத்துவிமோ என்றுதான் யாம் தயங்குகிறோம்.” என்று தன் மனநிலையை விளக்குகிறார் இராஜராஜர்.

தன் தந்தை தன்னுடன் எப்படிப்பட்ட சதுரங்க விளையாட்டு விளையாடுகிறார் என்று உணர்கிறான் இராஜேந்திரன். தான் சொல்வதை ஏற்றுக்கொண்டாலும், சிவாச்சாரி அவர் சொல்வதைத்தான் ஏற்கவேண்டும். அது மட்டுமில்லாமல், இராஜராஜர் இருக்கும்வரை சிவாச்சாரியுடைய பணியைத் தான் பெறமுடியாது என்பதைச் சொல்லாமல் சொல்கிறார் என்றும் புரிந்துகொள்கிறான். அவர் பெரும்பாலும் அமைதியாக இருந்தாலும், அவரது சிந்தனைத் திறன் எவ்வளவு வலிமையுடன் விளங்குகிறது. எவ்வளவு வேகமாகச் செயல்படுகிறது என்பதையும் அறிந்து அவனுக்கு வியப்பாக இருக்கிறது. அவர் ஒரு சோழப்புலி என்பதை உணர்ந்து கொள்ளுகிறான்.

“மதுராந்தகா, சக்கரவர்த்தியின் தயக்கத்தைப் போக்க வேண்டியது உனது பொறுப்பப்பா!” “சக்கரவர்த்தி” என்று தன் தந்தையைக் குறிப்பிட்டு கருவூரார் அவனைக் கேட்டதும் இராஜேந்திரனுக்கு உள்ளுக்குள்ளாக இலேசாக வியர்க்கிறது. இதுவரை தனது தந்தையை அருள்மொழி என்றே சொல்பவர் இப்பொழுது சக்கரவர்த்தி என்றால் இது எவ்வளவு முக்கியமான விஷயம் என்று உணர்ந்து கொள்கிறான்.

இனி தான் சொல்வது எதுவும் மகன் தந்தையுடன் பேசுவது போலல்ல, சக்கரவர்த்தியின் கேள்விக்கு பதிலளிக்கும் குடிமகன் என்று தெரிகிறது. இதுவரை இந்த மாதிரி சூழ்நிலை அவனுக்கு வந்ததே இல்லை. உறுவிய வாளை உறையிடும் பழக்கம் இராஜேந்திரனுக்கு என்றுமே இருந்ததில்லை, இனிமேலும் இருக்கப் போவதில்லை. எனவே குரலில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல், அதே சமயம் பணிவுடன் பதிலிருக்கிறான்.

“திரிபுவனச் சக்கரவர்த்தி அவர்களே! தங்களின் திருப்பணிக்கு உகந்தவர் என்றுதான் சிவாச்சாரியின் பெயரை அறிவித்தேன். தாங்கள் அதற்குச் சம்மதித்தால் அவர் முழுக்க முழுக்க தங்கள் திருப்பணிக்குத்தான் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளுவார் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயமில்லை. அவரைத் தங்கள் அனுமதியின்றி நான் வேறு எந்தப் பணிக்கும் அணுகமாட்டேன். நண்பர் என்ற முறையில் தொடர்ந்து நான் அவருடன் பழகுவது சக்கரவர்த்தி அவர்களுக்கு சம்மதமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்.”

“உன்னுடைய பதில் எமக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது இராஜேந்திரா! அரசுப் பணி புரிபவர்களுக்கு நண்பர்கள் இருக்கக் கூடாது என்றோ, அரசுப் பணிக்கு இடையூறு ஏற்படாவண்ணம் எவருடனும் நட்புறவுடன் இருக்கக் கூடாது என்றோ என்றும் யாம் சொல்லமாட்டோம்!” என்று கனிவுடன் அவனுக்கு பதிலளித்த இராஜராஜர் கருவூரார் பக்கம் திரும்பினார்.

“தேவர் பெருமானே! எமக்கு இராஜேந்திரனின நிலைமை தெளிவாகிவிட்டது. இனித் தங்களின் விருப்பத்திற்கு மாறாக சிவாச்சாரியரின் பணியை நாம் எடுத்துக் கொள்வது தங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்குமா என்பதைத் தாங்கள்தான தெரிவிக்கவேண்டும்!”  என்று கருவூராரைப் பார்த்துக் கேட்கிறார் இராஜராஜர்.

அவர் கேள்வியின் உள்நோக்கைப் புரிந்து கொள்கிறார் கருவூரார். சிவாச்சாரி தனக்கு மட்டுமே ஆலோசனை சொல்லும் பணியாளனாக மட்டுமே இருப்பான், இராஜேந்திரனுடன் அவனுக்குத் தனி இழுப்பு இருக்காது, எனவே கருவூரார் எந்த நோக்கத்துடன் சிவாச்சாரியனை இராஜேந்திரன் பக்கம் அனுப்பினாரோ, அது நிறைவேறாது போகும் வாய்ப்பு இருக்கிறது என்பதையும் - வேண்டுமென்றால் சிவாச்சாரி தன்னிடம் வருவதைத் தடுத்து நிறுத்த இதுதான் கடைசி வாய்ப்பு என்றும் - இராஜராஜர் இக்கேள்வியின் மூலம் தனக்கு உணர்த்துகிறார் என்பதை நொடியில் புரிந்து கொள்கிறார்.

சித்து விளையாட்டில் சிறந்த கருவூரார் எப்படி நடக்கவேண்டும் என்று விரும்பினாரோ, அப்படித்தான் இதுவரை நடந்துவருகிறது என்பதை இராஜராஜர் எப்படி அறிவார்? இராஜராஜரின் தமிழ்த் திருப்பணியில் இராஜேந்திரனை ஈடுபடுத்த வேண்டுமானால் அவன் விரும்பும் ஒருவன்தான் அப்பணியில் தலையாய பங்கேற்க வேண்டும் என்பது கருவூராரின் விருப்பம். எனவேதான் இத்திருப்பணியின் நுணுக்கங்களை நன்குணர்ந்த சிவாச்சாரியனே ஆலோசகனாக வேண்டும் என்று அவர் விரும்பினார். அதற்காகவே, அவனை இராஜேந்திரனுக்குப் பணியாளனாக அளித்தார். இராஜேந்திரன் எப்படிச் செயல்படுவான் என்பதை நன்கு உணர்ந்த அவர், அவன் சிவாச்சாரியைத்தான் ஆலோசகனாக முன்மொழிவான் என்றும் அறிவார். அதற்கு இராஜராஜர் எப்படி பதிலளிப்பார் என்றும் அவர் ஊகிக்க முடிந்ததால் அனைத்தும் அவர் எதிர்பார்த்தபடியே நடந்தேறியது. பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல் ஆயிற்று.

“இறைவன் விருப்பம் சிவன் தமிழ்த் தொண்டு செய்யவேண்டும் என்று இருந்தால் இக் கட்டைக்கு அதுவும் சம்மதம்தான்!” என்று இராஜராஜருக்கு அறிவித்த கருவூரார் சிவாச்சாரியனை நோக்கி “சிவனே! யாருக்கும் கனவிலும் கிட்டாத சிறந்த வாய்ப்பு உனக்குக் கிட்டியுள்ளது. திரிபுவனச் சக்கரவர்த்திக்கே தமிழ்த் திருப்பணி ஆலோசகனாக, அதுவும் இந்த இளம் வயதிலேயே நியமிக்கப்படுவது என்றால் அது உன் முன்னோர்கள் செய்த தவப்பயனேயன்றி வேறு எதுவுமில்லை. ஆகவே என்றும் அவருக்கு நிலை பிறழாது பணி செய்வாயாக!” என்று கையை உயர்த்தி ஆசி நல்குகிறார்.

தழுதழுத்த குரலில், “ஐயனே! இதுவும் அம்பலவாணனின் அருளே அன்றி வேறொன்றுமில்லை. ஒரே நாளில் நான் கோவில் சிவாச்சாரியப் பணியிலிருந்து திரிபுவனச் சக்கரவர்த்திகளின் தமிழ்த் திருப்பணிக்கு இளவரசரால் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதையும், அதைச் சக்கரவர்த்திகள் ஏற்றுக்கொண்டிருப்பதையும் வேறு எப்படிச் சொல்வது? மேலும் என்னுடன் நட்புறவு தொடர விழைந்து திரிபுவனச் சக்கரவர்த்திகளிடமே அதற்கு அனுமதி பெற்ற இளவரசரின் கருணைக்கப் பாத்திரமானதை எண்ணினால் என் மெய் சிலிர்க்கிறது. இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் கடமைப் பட்டிருக்கிறேன். என் பணியில் எவ்விதக் குறை இருப்பினும் அதைப் பொறுத்து, என்னை நல்வழிக்கு நடத்திச் செல்லுமாறு திரிபுவனச் சக்கரவர்த்திகளிடம் மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். என் இறைவா...” என்ற சிவாச்சாரியனால் அதற்கு மேல் தொடர்ந்து பேச இயலவில்லை. அவனது இரு கண்களிலிருந்தும் கண்ணீர் முத்துக்கள் அரும்பி நிற்கின்றன.

“சிவாச்சாரியாரே! உமது உணர்ச்சிப் பெருக்கு எம் உள்ளத்தைத் தொடுகிறது. தேவர் பெருமானின் நிழலில் வளர்ந்த நீர் உமது கடமையைச் சரியாக நிறைவேற்றுவீர் என்பதும் அவர் உம்மைத் திருப்பணி திட்டத்தை வரையத் துணை கொண்டதிலிருந்தும், உம்மை இராஜேந்திரன்பால் அனுப்பியதிலிருந்தும் அறிகிறோம். நீர் எமக்கு மட்டுமின்றி, இராஜேந்திரனுக்கும் நூறு ஆண்டுகள் தமிழுக்கு மட்டுமல்லாது சோழநாட்டுக்கும் பணி செய்து வரவேண்டும் என்பதுதான் எமது விருப்பம். பெருவுடையாரின் கருணை என்றும் உம்பால் இருக்கவேண்டிப் பிரார்த்திக்கிறோம். இதைப் பெற்றுக் கொள்ளும்.” என்று தனது முத்திரை மோதிரத்தை சிவாச்சாரியரிடம் அளிக்கிறார் இராஜராஜர்.

எழுந்து அவர்முன் மண்டியிட்டு, இடது கைமேல் வலதுகையை வைத்து அவரிடமிருந்து முத்திரை மோதிரத்தைப் பெற்றுக் கொள்கிறான் சிவாச்சாரி. இனி அவன் சோழப் பேரரசின் எந்த இடத்திற்கும் தங்கு தடையின்றிச் செல்லமுடியும், அவனை இராஜராஜரின் உத்தரவின்றி யாரும் தடுத்து நிறுத்தவும் கூடாது. வெகு சிலரிடமே உள்ள இராஜராஜரின் முத்திரை மோதிரத்தை அவர் கையாலேயே பெறுவது எவ்வளவு பெருமை!

“சிவாச்சாரியாரே! நாளை மதியம் நமது அரண்மனையில் உம்மை இராஜேந்திரனுடன் சந்தித்து மேற்கொண்டு நடக்கவேண்டியதைப்
பற்றிக் கலந்து ஆலோசிப்போம். தேவர் பெருமானே! இத் திருப்பணிக்குழவின் காவலர் யாரென்று அறிந்து கொள்ள யாம் விருப்பமாக உள்ளோம்.” என்று இன்னும் அரசகட்டளைத் தொனியிலேயே பன்மையில் பேசுகிறார் இராஜராஜர்.

“சக்கரவர்த்திகளிடம் திருப்பணிக்குழலைக் கொடுத்ததோடு இந்தக் கட்டையின் கடமை முடிந்துவிட்டது. அதை எப்படிப் பராமரிப்பது என்பதை ஆலேசகரிடமே கேட்டுக் கொள்ளவேண்டும்!” என்று சிரித்தபடி கருவூரார் சொன்னதும் சிவாச்சாரியனுக்குத் தூக்கி வாரிப் போடுகிறது. அடுத்த கணமே இராஜராஜரின் பார்வை அவன்மேல் நிலைக்கிறது. அவரது விழிகள் அவனை என்ன பதில் என்று வினாவுகின்றன. சக்கரவர்த்திக்கு ஆலோசகர் என்று ஆனவுடன் அவர் அவனைக் கேட்கும் முதல் கேள்வி இது.

“கூத்தபிரானே! என் நாவில் நீ அமர்ந்து சரியான பதிலை அவருக்குச் சொல்ல வைப்பாய், ஐயனே!” என்று தில்லை நடராஜரை மனதில் வேண்டிக் கொண்டு, “திரிபுவனச் சக்கரவர்த்திகளே! திருப்பணிக் குழல் உங்கள் சொத்து. அதைப் பராமரிக்கத் தாங்கள் யாரை வேண்டுமானால் நியமிக்கலாம். தவிர, இது வாழும் திருப்பணி என்பதால் தங்கள் சொத்தான இது வழிவழியாக சோழச் சக்கரவர்த்திகளுக்குச் செல்லப் போகிறது. இருப்பினும் ஆண்டுதோறும் அதில் திருப்பணி நடப்புகளைப் பதிந்து அரச முத்திரையைப் பெற்று வரவேண்டும் என்று தேவர் பெருமான் பணித்திருப்பதைத் தாங்கள் ஏற்று இருப்பதால், ஆலோசகனுக்கு இக்குழலை அணுகவேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. ஆகவே திருப்பணி ஆலோசகர்களே இக்குழலுக்குக் காலம் காலமாகக் காவலர்களாக இருந்து வரவேண்டும் என்று என் சிற்றறிவுக்குப் புலப்படுகிறது. அதை உயிருக்கும் மேலாகக் காப்பதும் ஆலோசகனின் கடமையாகும். அதைக் காத்து வைத்திருக்கும் இடம் சக்கரவர்த்திகளுக்கும், அவரது வழித்தோன்றலான இளவரசருக்கும் தெரியவேண்டும், தாங்கள் கேட்கும்பொழுது இந்தத் திருப்பணிக் குழல் தங்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தாங்கள் மற்ற யாரையாவது தேர்ந்தெடுத்தால் அவர்களுக்கு குழல் காக்கும் இடம் தெரியப்படுத்தப்படலாம். தங்கள் ஆணைக்குக் காத்திருக்கிறேன். சக்கரவர்த்திகளே!” என்று முடித்தான்.

ஒரு புன்சிரிப்பைப் பதிலாகக் கொடுத்த இராஜராஜர், “சிவாச்சாரியாரே! எமது முதற் கேள்விக்கு யாம் நினைத்த பதிலைச் சொல்லி இருக்கிறீர். இது தற்செயலாக நிகழ்ந்ததே என்று நம்புகிறோம். ஆயினும் எப்பொழுதும் அம்மாதிரிச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. உமது மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதைச் சொல்லும். முடிவு சரியென்றால் யாம் சம்மதிப்போம். ஐயமிருந்தால் யாமே கேட்டுத் தெரிந்து கொண்டு மாற்று முடிவு எடுப்பதாக இருப்பினும் அதையும் உம்மிடம் சொல்லுவோம்.” என்றதும் சிவாச்சாரியனுக்குச் சரியானபடி மூச்சு வர ஆரம்பித்தது.

“நீர் ஏன் இப்படி மனநடுக்கப் படுகிறீர்? இராஜேந்திரனுடன் வாட்போர் புரியும்போது இல்லாத நடுக்கம் இப்போது ஏன் உம்மிடம் தென்படுகிறது? நேற்று எப்படி இருந்தீரோ அப்படியே இருந்து வாரும். நாளை இரண்டாம் சாமத்தில் எம்மை அரண்மனையில் வந்து பாரும்.” என்று கடகடவென்று சிரிக்கிறார் இராஜராஜர்.

தனது மனநிலையை அவர் எப்படிப் புரிந்துகொண்டு உடனே அதற்கான விளக்கத்தையும் கொடுக்கிறார் என்று வியக்கிறான் சிவாச்சாரி.

“ஐயா! நான் விடைபெற்றுக் கொள்கிறேன்.” என்று கருவூராரை நோக்கிக் கைகூப்பினார் இராஜராஜர்.


அவர் சக்கரவரத்திப் பீடத்திலிருந்து இறங்கி விட்டதை அறிந்த கருவூரார், “அருள்மொழி! மிக்க மகிழ்கிறதப்பா இக்கட்டை! நீ எனக்கு விடைகொடுக்க வேண்டும். இக்கட்டை மூச்சு இருக்கும்போதே திருக்கைலாயத்திற்குச் செல்லவேண்டும் என்ற அளவை நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிறது. உன் திருப்பணி செழிக்க உமையொரு பாகனை ஏத்துகிறதப்பா இக்கட்டை.” என்று தெரிவிக்கிறார்.[வளரும்]

No comments:

Post a Comment