Wednesday 8 October 2014

தமிழ் இனி மெல்ல[3.8] தொடர்கிறது

தமிழ் இனி மெல்ல[3.7] சென்ற பதிவின் இறுதியில் 
தனது அரியணையில் இருந்து வேண்டாவெறுப்புடன் எழுந்து, அருகிலிருக்கும் முக்காலியில் தனது மணிமுடியையும், உடைவாளையும் கழட்டி வைக்கிறான் இராஜாதிராஜன்.

“சோழநாட்டின் மணிமுடியை அணிந்து கொண்டு என்னால் இலங்கை மன்னர் தரப்பில் வாதாட இயலாது! எனவே இவ்வழக்கு முடிந்து கோப்பரகேசரியார் தீர்ப்பளிக்கும்வரை நான் மணிமுடி இல்லாமல் இருக்க அனுமதி வழங்கக் கோருகிறேன்!” என்று கேட்டதும், இராஜேந்திரன் தலையசைத்துத் தன் அனுமதியை வழங்குகிறான்.

இராஜாதிராஜன் மெல்ல மகிந்தன் அருகில் சென்று இராஜேந்திரனை நோக்கி அறிவிக்கிறான்.

“அரசே! முதலாக இலங்கை மன்னர் சார்பில் நான் தங்களுக்கு விடுவிக்கும் கோரிக்கை இதுதான்! மகிந்தர் ஒரு அரசர். என்னதான் குற்றம் சாட்டப் பட்டிருந்தாலும் தீர்ப்பளிக்கும் வரை அவரை நாம் ஒரு அரசராகத்தான் நடத்த வேண்டும். அவர் அமர்ந்துகொள்ள ஒரு இருக்கையை அளிக்குமாறும், அவரைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை அவிழ்க்குமாறும் வேண்டிக் கொள்கிறேன். அவர் மீது குற்றம்தான் சாட்டப் பட்டிருக்கிறதே தவிர, அவர் குற்றவாளி என்று இதுவரை தீர்ப்பு அளிக்கப் பட்டிருக்கவில்லை!”

அதிர்ந்து போகிறான் மகிந்தன். எடுத்த எடுப்பிலேயே தான் செய்யப் போகும் வேலையைச் சரியாகச் செய்யப் போவதை அவனுக்கு உணர்த்தி விட்டானே அவன்! நம்பிக்கை துளிர்விடுகிறது அவனுக்கு.
“ஓலைநாயகத்திற்கு இதில் மறுப்பு ஏதாவது இருக்கிறதா?” என்று வினவுகிறான் இராஜேந்திரன்.

இல்லையெனத் தலையசைக்கிறான் சிவாச்சாரி. இராஜேந்திரன் கையசைக்கவே, ஒரு இருக்கை கொண்டு வரப்படுகிறது. மகிந்தன் அருகே இருந்த காவலன் ஒருவன் அவனைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை அவிழ்த்து எடுக்கிறான்.

இருக்கையில் கால் மேல் கால்போட்டு அமர்ந்து கொண்ட அவனை நோக்கி, “நீர் இலங்கை மன்னர்தான்! இருந்தாலும் கோப்பரகேசரியார் முன்னர் இப்படி அமர யாருக்கும் அனுமதி இல்லை! இருகால்களையும் தொங்கவிட்டு அமர்ந்து கொல்லும்!” என்று உத்தரவிடும் தொனியில் எச்சரிக்கிறான் இராஜாதிராஜன்.

அவன் சொல்வதைப் புரிந்து கொண்ட மகிந்தன் சரியாக அமர்ந்து கொள்கிறான். அவன் தனக்காக வாதாடுவானே தவிர, வேறு எந்த சலுகையையும் தரமாட்டான் என்றும் அறிந்து கொள்கிறான்.

சிவாச்சாரி தன் இருக்கையை விட்டுக் கீழிறங்கி வருகிறான்.

“கோப்பரகேசரி அவர்களே! தாங்கள் அறியாததை நான் அரசவையில் கூறவரவில்லை. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை மன்னர் அவர் விருப்பப்படி ரோகணத்தை ஆண்டு வந்திருக்கிறார். நாம் அவரைத் தொந்தரவு செய்யாமல் இருந்து வந்திருக்கிறோம். சோழநாட்டின் அமைதியைக் குலைப்பதற்கென்றே இலங்கை மன்னர் நமக்குத் திரை செலுத்தி வந்த பாண்டிய மன்னரை நமக்கு எதிராகச் செயல்படுத்தி வந்திருக்கிறார். மேலும்...” என்று மகிந்தன் மீது ஒன்றொன்றாகக் குற்றங்களை அடுக்கிக் கொண்டே செல்கிறான்.

“இலங்கை மன்னர் தரப்பில் பேசப் போகும் சோழ இளவரசரே இதை நன்றாக அறிவார். இலங்கை மன்னர் பாண்டிய மன்னரின் பரம்பரைச் சொத்தை அங்கு வைத்திருக்க உதவி செய்திருக்கிறார். அங்கு இருந்து வந்த ஐயாயிரம் பாண்டிய வீரர்களுக்கு உண்ண உணவும், இருக்க இடமும் அளித்து சோழர்களுக்கு எதிராகச் செயல்பட்டு வந்திருக்கிறார். இதனால் சோழவீரர்கள் பத்தாயிரம் பேர்களுக்கு மேல் உயிரிழக்க நேரிட்டது.” கிட்டத்தட்ட ஒரு நாழிகைக்கும் மேலாக மகிந்தன் மேல் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகிறான் சிவாச்சாரி.

தமிழ் இனி மெல்ல[3.8] தொடர்கிறது 
அரிசோனா மகாதேவன் 

அரசவையில் அனைவரும் மகிழ்வடைகின்றனர். உயிர்நஷ்டம், பணநஷ்டம் என்று கணக்குக் கொடுத்து, அனைவரும் விரும்பியதற்கும் மேலாகவே சிவாச்சாரி சோழநாட்டுத் தரப்பு வாதத்தைத் திறமையாக எடுத்துரைப்பது அனைவருக்கும் நிறைவாகவே இருக்கிறது.

“இப்படிப்பட்ட குற்றத்திற்காக, இலங்கை மன்னரின் படைத் தலைவர்களுக்கு அங்கேயே மரண தண்டனை விதித்து அது நிறைவேற்றப்பட்டதும் கோப்பரகேசரியார் அறிந்ததே! அரசர்தான் குடிமக்களின் செயலுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பது அரசநீதி என்பது ஆன்றோர் வாக்கு. இவரது அனுமதியில்லாமல், ஆணையில்லாமல் இவரது படைத் தலைவர்கள் நம்முடன் போருக்கு வரவில்லை. எனவே அவர்களுக்கு அளித்த தண்டனையான மரண தண்டனையையே இலங்கை மன்னருக்கு அளிக்க வேண்டும் என்றும், அவரது மனைவி மக்களை சோழநாட்டின் அடிமைகளாக்கி வாழ்நாள் முழுதும் குற்றேவல் செய்து வரவும் தீர்ப்பளிக்குமாறு சோழநாட்டின் சார்பில் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.” என்று தன் தரப்பு வாதத்தை முடித்துக் கொள்கிறான் சிவாச்சாரி.

இலங்கை மீது படையெடுத்துச் சென்ற இராஜேந்திரனுக்குத் தோள் கொடுத்து, சிங்களப் படைகளைச் சிதறடித்து, பாண்டியர் பொக்கிஷங்களைக் கைப்பற்றிய இராஜாதிராஜன், இலங்கை மன்னன் மகிந்தனுக்குச் சார்பாக எப்படி சிவாச்சாரியின் ஆணித்தரமான வாதங்களை எதிர்த்து வாதாடப் போகிறான் என்று திகைத்தவாறு, அந்த அரசவையே அவனை நோக்குகிறது.

“கோப்பரகேசரி அவர்களுக்கும், ஆன்றமர்ந்து அடங்கிய பெரியோர்களும், தங்கள் உயிரைவிடச் சோழநாட்டின் பெருமையையே பெரிதாக நினைக்கும் மாவீரர்கள் பல்லோரும் நிறைந்த இந்த அரசவைக்கும் என் தலைசாய்த்து வணங்கி விட்டு இலங்கை மன்னரின் சார்பில் வாதாட முற்படுகிறேன். அதனால் நான் சோழநாட்டுக்கு எதிராக வாதாடுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம் என்ற கோரிக்கையையும் இந்த அரசவைக்கு முன் வைக்கிறேன். நான் சொல்லப் போதெல்லாம் இலங்கை மன்னரின் பக்கம் இருக்கும் அவரது பார்வையை, அவர் தரப்பில் இருப்பதாக அவர் நினைக்கும் நியாயத்தைத்தான்!” என்ற பீடிகையுடன் தன் வாதத்தைத் துவங்குகிறான் இராஜாதிராஜன்.

அவன் சொல்வதை உடனுக்குடன் மகிந்தனுக்குச் சிங்களத்தில் மொழிபெயர்த்துச் சொல்கிறார் சோழ மொழிபெயர்ப்பாளர். இதைக் கேட்டதும் மகிந்தனின் முகம் சற்றுச் சுருங்குகிறது. பெயருக்குத்தான் இவன் தன் பக்கம் வாதாடப்போகிறான், முழுமனதுடன் அல்ல என்ற முடிவுக்கு வருகிறான்.

“எனக்கு வாட்போர்தான் தெரியும். பலநூல்களும், மறைகளும், அரசநீதியும் கற்றுத் தேர்ந்த ஓலைநாயகத்துடன் சொற்போர் புரியவும் நான் வல்லவன் அல்லேன். எனக்குத் தெரிந்த எளிய தமிழில் இலங்கை மன்னருக்கான வாதத்தை முன் வைக்கிறேன்.

“அனைவரும் சற்று சிந்தித்துப் பாருங்கள். சிங்களத் தீவினை அனுராதபுரத்தில் ஒரு குடையின் கீழ் ஆண்டு வந்த மகிந்தர் தனது சேரநாட்டு வேலைக்காரப் படைகளின் புரட்சியையும், எனது பாட்டனாரின் சீற்றத்துக்கும் ஈடு கொடுக்க முடியாது, பரம்பரைத் தலைநகரான அனுராதபுரத்தை விட்டு நீங்கி, பொலனருவையைப் புதுத் தலைநகராகக் கொண்டு பாதி இலங்கையை ஆண்டு வந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு எனது பாட்டனாரின் படைகள் முன்னேறி வரவே, பொலனருவையை விட்டு ஓடி, எஞ்சியிருக்கும் தென்னிலங்கையான ரோகணத்தில் குடியேறினார்.

“அவரது பரம்பரையோர் ஸ்ரீலங்கா என்று அழைத்து வந்த இலங்கையை, எனது பாட்டனார் கைப்பற்றி “மும்முடிச் சோழ மண்டலம்” என்று அழைத்தார். அனுராதபுரத்தை அழித்தார், பொலனருவைக்கு “ஜனநாதபுரம்” என்று பெயரிட்டார். அரசவையோரே, சிந்தியுங்கள்! நமது சோழ நாட்டை சிங்களவர்கள் கைப்பற்றி “சிங்கள மண்டலம்” என்று அழைத்தாலோ, தஞ்சைக்கு “உத்தரலங்காபுரி” என்று பெயரிட்டாலோ, நாம் சும்மா இருப்போமா!

“அதைதான் அவரும் செய்தார். எப்படியாவது இலங்கையை விடுவிக்கவேண்டும் என்று முயற்சி செய்தார். எனவே, சிங்கள அரசர்களுடன் நட்பு பூண்டிருந்த பாண்டியர்களின் உறவினை நாடினார். அவர்களின் பரம்பரைச் சொத்தைப் பாதுகாக்க ரோகணத்தில் இடம் கொடுத்தார். பாண்டியர்களின் படைவீரர்கள் ஐயாயிரம் பேர்களுக்கு உதவியாகத் தன் படைகளையும் தந்து உதவினார். இது இலங்கைக்காக அவர் செய்ததுதானே! தாய்நாட்டின் மீது பற்று உள்ள எந்த மன்னரும் இதைத்தானே செய்வார்!” 

சிறிது நேரம் தனது வாதத்தை நிறுத்தி அவையினரைக் கவனிக்கிறான் இராஜாதிராஜன். இதன் மொழி பெயர்ப்பைக் கேட்ட மகிந்தனின் முகம் மலருகிறது. தன்னால்கூட இவ்வளவு அழகாக வாதாட முடிந்திருக்காது என்று உணர்ந்து கொள்கிறான். அதே சமயம் இராஜேந்திரன் முகத்தில் எந்த விதமான மாற்றமும் தோன்றாமல் இருப்பதையும் கவனிக்கிறான்.
மீண்டும் தொடர்கிறான் இராஜாதிராஜன்.

“நாட்டுப் பற்று உள்ள ஒரு மன்னன் எதைச் செய்ய வேண்டுமோ, அதைதான் இலங்கை மன்னரும் செய்தார். பலம் வாய்ந்த சோழப் படையினை நேருக்கு நேர் எதிர்த்துப் போராட தனக்கு சக்தியில்லை, தன்னிடம் படைபலமும் இல்லை என்பதை நன்றாகவே அறிந்திருந்த அவர், வேறு வழியைக் கையாண்டார்.

“எங்கு அடித்தால் நமக்கு வலிக்குமோ, அங்கு அடிக்க முயற்சி மேற்கொண்டார். பாண்டியர்களின் துணையுடன் நமது வணிக நாவாய்களை வழி மறித்தார். அவர்கள் வணிகம் செய்து ஏற்றி வந்த செல்வத்தைக் கொள்ளையடித்தார். இலங்கையில், குறிப்பாக ரோகணத்தில் அமைதியாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களைத் துன்புறுத்துவதன் மூலம் நமக்கு இடைவிடாத தலைவலியை உண்டாக்கினார்.

“இப்படிச் செய்வது முறையான செயல் என்று நான் வாதாட முன்வரவில்லை. இப்படியும் மறைமுகப் போரிடலாம் என்று அறிந்து, அப்படிச் செய்தார். நாளை, என் எதிர்காலத்தில் இப்படி முறையற்ற போர்கள் நடத்துவதும் ஒரு வழிதான் என்பதற்கு முன்னோடியாக, நமக்கு இடைவிடாது தொந்தரவு கொடுத்து வந்தார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------

                                       இடையூறுக்கு மன்னிக்கவும் 

                    இதய ஒளி [idhayamae oli.Blogspot.in]ப்ளாகில்                   தமிழ் இலக்கியத்தின் அமுதக் கனிச்சாறான                       படைப்புகள் காண்க 
---------------------------------------------------------------------------------------------------------------------------------

“இதை தனது ஆதாயத்திற்காகச் செய்தாரா என்றால், அதுதான் இல்லை. நம்மிடமிருந்து கொள்ளையடித்த செல்வம் அவரது படைகளுக்கு ஊதியம் கொடுக்கக் கூடப் போதுமானதாக இல்லை. செல்வத்தில் பெரும் பகுதி பாண்டியர்களுக்குத்தான் சென்றது. இருந்தும் அவர் இத்தகைய தலைவலியை நமக்குக் கொடுத்து வந்ததற்குக் காரணம் - அப்படியாவது நாம் இலங்கையை விட்டு வெளியேற மாட்டோமா என்றுதான்.

“சோழநாட்டின் கண்ணோட்டதிலிருந்து பார்த்தால் இது முறையற்ற செயல்தான்.” ஒரு குவளையிலிருந்த நீரைச் சற்றுப் பருகிவிட்டு மேலும் தொடருகிறான் இராஜாதிராஜன்.

“சேரர்கள், கருநாட்டார், கங்கர்கள், வேங்கை நாட்டார் போல நமக்குத் திரை செலுத்தி நன்கு வாழ்ந்திருக்கலாம். நமது நட்பைப் பெற்று நிம்மதியாக ரோகணத்தை ஆண்டு கொண்டிருக்கலாம். அப்படி அவர் செய்யாதது நமக்குச் சினத்தை வரவழைத்தாலும், அது அவரது நாட்டுப் பற்றைத்தானே காட்டுகிறது! நாட்டின்மீது அளவற்ற பற்று வைக்கும் எப்படி வீரர்கள் நடந்து கொள்வார்கள் என்பதைக் கண்கூடாக, இலங்கையில் தங்கள் பரம்பரைப் பொக்கிஷத்தைக் காப்பாற்றப் போர் புரிந்த பாண்டிய வீரர்களிடம் கண்டேன். அவர்கள் எனக்கு எதிராகப் போராடியதால் அவர்களை அழித்தேன். ஆயினும் அவர்களது வீரத்திற்கு இன்னொரு வீரனாகத் தலை வணங்கியதால், அவர்களுக்கு வேதியர்கள் மூலம் முறைப்படி ஈமக்கடன்களையும் செய்வித்தேன்.

“இலங்கை மன்னர் ஒரு வீரரைப் போல நடந்து கொண்டு நம்மிடம் போரிட்டு நமது மதிப்பைப் பெறவில்லை. அப்படி இருந்தால் இப்படி ஒரு வழக்காடத் தேவையே இருந்திருக்காது. ஆயினும் அவர் செய்த செயலுக்குக் காரணம் நாட்டுப் பற்று என்பதால் - அவருக்கு எப்படிப்பட்ட தண்டன வழங்கினாலும் - இழிவான தண்டனையை வழங்கக் கூடாது என்று பகைவனுக்கும் அருளும் பரம்பரையில் வந்த கோப்பரகேசரியாரைக் கேட்டுக் கொள்கிறேன். எனக்குத் தெரிந்த அளவுக்கு நான் முழுத் திறமையுடன் வாதாடி இருக்கிறேன். இது போதாது என்றால், வேறு எந்தக் கருத்தையும் நான் விட்டுவிட்டேன் என்று மனதிற்குத் தோன்றினால், அதை இலங்கை மன்னர் எனக்குத் தெரிவித்தால், அதை கோப்பரகேசரியாருக்கும் இந்த அரசவைக்கும் முன்வைக்க ஆயத்தமாக உள்ளேன்.” என்று தனது வாதத்தை முடித்துக் கொண்டு இலங்கை மன்ன்ன் மகிந்தனை நோக்குகிறான் இராஜாதிராஜன்.
நன்றியுடன் கைகூப்புகிறான் மகிந்தன்.

அனைவரும் இராஜேந்திரனை நோக்குகிறார்கள். தனது இறுதி முடிவு அவன் கையில்தான் இருக்கிறது என்று அறிந்த மகிந்தன் அவனை ஏறிட்டு நோக்குகிறான். ஒரு சில கணங்கள் இராஜேந்திரனது பார்வையைச் சந்தித்த அவன், பிறகு தனது கண்களைத் தாழ்த்திக் கொள்கிறான்.

அரசவையில் இருக்கும் அமைதி அனைவருக்கும் தாங்கமுடியாத ஒன்றாக இருக்கிறது.

இராஜேந்திரன் சிறிது நேரத்திற்குப் பிறகு தனது செங்கோலை உயர்த்துகிறான். அனைவரும் அவனையே உற்று நோக்குகின்றனர்.

“இரு தரப்பு வாதத்தையும் கேட்டோம். பொதுவாக கடற் கொள்ளையருக்கும், நாட்டின் அமைதியைக் குலைப்பவருக்கும், குற்றமற்ற மக்களைத் துன்புறுத்துபவருக்கும், சோழநாட்டில் அளிக்கப்படும் தண்டனை மரணம்தான். அவரது குடும்பத்தினர் அடிமைகளாகிக் குற்றேவல் செய்வதுதான் மரபு. இதை ஓலைநாயகம் மிக அழகாக எடுத்துரைத்தார்.”

அரசவையையும், இலங்கை மன்னனையும் கவனிக்கிறான் இராஜேந்திரன். அவன் சொல்வதை ஆமோதிப்பது போலக் கைகளை உயர்த்தியும், தலைகளை ஆட்டியும், தங்கள் கருத்துகளை ஆரவாரத்துடன் தெரிவிக்கின்றனர் அரசவையினர். அவன் மீண்டும் கையை உயர்த்தவே, ஆரவாரம் அடங்குகிறது.

“ஆயினும் இளவரசன் இராஜாதிராஜன் சொன்ன வாதத்திலும் பொருள் இருக்கிறது. நாட்டுப் பற்றினால் உந்தப்பட்டே, இலங்கை மன்னர் இத்தகைய கொடிய செயல்களைச் செய்திருக்கிறார் என்றே நம்புவோம். இத்தகைய செயல்களைச் செய்பவர்களை ஐந்தாம்படைகள் என்றுதான் நாம் அழைப்போம். ஐந்தாம்படைகளுக்குச் சோழநாட்டில் மட்டுமல்ல, எந்த நாட்டிலும் மரணதண்டனைதான் விதிப்பார்கள்.”

இராஜேந்திரன் இப்படிச் சொன்னதும் சப்தநாடிகளும் அடங்கி விடுகிறது மகிந்தனுக்கு. மரண தண்டனை என்றுதான் உறுதியாகிவிட்டது. இருப்பினும், ஐந்தாம் படை என்ற பழியுடனா சாகப் போகிறோம் என்று வருந்துகிறான்.

“இருப்பினும், பகைவனுக்கும் கருணை காட்டுவது நமது வழக்கம்தான். நம்முடன் போரிட்ட மன்னர்களுக்கே நாம் கருணை காட்டி விடுவித்து, நமக்குத் திரை செலுத்தி வாழுமாறு அவர்களுடைய நாட்டினையும் திரும்ப அளித்திருக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு உன்னதமான கருணையை - நாட்டிற்காக நம்மிடம் போரிட்டுத் தோற்றுப் பிடிபட்டிருந்தால் - அப்படிப்பட்ட கருணையைக் காட்டியிருக்க இயலும். அதுவும் இல்லை.

“இவரை இப்படியே விட்டுவிட்டால் நாளை சோழர்களை எல்லோரும் கிள்ளுக்கீரையாக நினைத்து ஐந்தாம்படையாகச் செயல்பட ஆரம்பித்துவிடுவார்கள். எனவே இவர் மாதிரிச் செயல் புரிந்தால் சோழர்களிடமிருந்து தப்ப முடியாது. அதே சமயம் நாட்டுப் பற்று கொண்டு தவறாக செயல் செய்தார் என்பதால் சிறிது கருணையும் காட்டினோம் என்று எதிர்காலம் அறிந்து கொள்ள வேண்டும். எனவே இவருக்கும், இவரது குடும்பத்திற்கும் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கிறோம்!”

தனது செங்கோலை உயர்த்தித் தன் முடிவைத் தெரிவிக்கிறான் இராஜேந்திரன்.

அரசவையே கைதட்டி ஆரவாரம் செய்கிறது. “சரியான தண்டனை! சரியான தண்டனை!!” என்ற முழக்கம் அரசவையையே பிளக்கிறது. கையை உயர்த்துகிறான் இராஜேந்திரன். அரசவை உடனே அமைதியாகிறது.

“ஆயினும் இளவரசன் இராஜாதிராஜன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இலங்கை மன்னருக்கும் அவரது குடும்பத்திற்கும் நாம் மேலும் கருணை காட்டப் போகிறோம். வாழ்நாள் முழுவதும் சிறையில் இருந்தாலும், மற்ற சாதாரணக் கைதிகளைப் போல நடத்தாமல், அவருக்குச் சிறந்த முறையில் வசதிகள் செய்து கொடுக்கவேண்டும் என்றும் தீர்ப்பளிக்கிறோம். சோழநாட்டின் விருந்தாளியாக, பாதுகாப்புக் கைதியாகவே அவரும், அவரது குடும்பமும் நடத்தப்படும். சிறையில் யாரேனும் அவரை முறைதவறி நடத்தினால் எமது சீற்றத்திற்கு ஆளாக நேரிடும். ஆயினும், அவருக்கோ, அவரது குடும்பத்திற்கோ வெளி உலகத் தொடர்பு ஏதும் இருக்கமுடியாதபடி பாதுகாப்புச் சிறையில் அடைக்கப் படுவாராக! இது சோழநாட்டின் எதிரிகளுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்.”
இராஜேந்திரன் எழுகிறான். அரசவை எழுந்து நிற்கிறது. உடனே சிவாச்சாரி தனது பக்கத்தில் இருந்த ஒரு அதிகாரியை அழைத்து காதில் ஏதோ சொல்கிறான். உடனே அவன் இலங்கை மன்னனின் அருகில் இருக்கும் காவலாளிகளிடம் ஏதோ தெரிவிக்கிறான். காவலாளிகள் இலங்கை மன்னன் மகிந்தனை மரியாதையாக அழைத்துச் செல்கிறார்கள். தான் வெளி உலகைப் பார்ப்பது இதுவே கடைசித் தடவை என்று உணர்ந்த மகிந்தன் சோழ அரசவையை நன்கு சுற்றிப் பார்த்துக் கொண்டு செல்கிறான். அங்கு நின்ற இராஜாதிராஜனைப் பார்த்து நன்றியுடன் கைகூப்புகிறான். “என் உயிரைக் காப்பாற்றியதற்கு நன்றி!”

“சக்ரவர்த்திகள் உம்மைக் கழுவில் ஏற்றும்படி தீர்ப்பளிக்க வேண்டும் என்றுதான் நான் முதலில் விரும்பினேன். இப்பொழுது சக்ரவர்த்திகள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன்!” என்று முரட்டுத்தொனியில் கூறிவிட்டு, அங்கிருந்து அகலுகிறான் இராஜாதிராஜன்.

இராஜேந்திரனிடம் ஒரு தூதுவன் ஏதோ சொல்வதையும், உடனே தன் தந்தையின் முகம் திடுமென்று இருளடைந்து கலங்குவதைக் கண்டவுடன், பரபரப்புடன் அவனருகில் சென்று, “என்ன தந்தையே, என்ன கலக்கம்?” என்று வினவுகிறான்.

“இராஜாதிராஜா! வேங்கை மன்னர் விமலாதித்தர் இறந்துவிட்டாராம்! உன் அத்தை குந்தவி உடன்கட்டை ஏறிவிட்டாளாம்! இப்பொழுதுதான் செய்தி வந்தது.” என்று தழுதழுத்த குரலில் கூறுகிறான். திகைத்து நிற்கிறான் இராஜாதிராஜன்.
                                                              * * *

                             அத்தியாயம் 7
                        தென்பாண்டி நாடு
             காளயுக்தி, வைகாசி 16 - ஜூன் 2, 1018

கொற்கையிலிருந்து நெல்லைக்குச் செல்லும் வழியில் விரைந்து கொண்டிருக்கின்றன அக்குதிரைகள். ஒரு வணிகனைப் போல உடையணிந்திருக்கிறான், மாறுவேடத்தில் இருக்கும் விக்கிரம பாண்டியன். வேலையாள் போல உடையணிந்து அவனுக்கு அடுத்த குதிரையில் காளையப்பன் சவாரி செய்து கொண்டிருக்கிறான். அவர்களைச் சுற்றி பன்னிரண்டு குதிரைகளில் வணிகர்கள் போல வேடமணிந்து பாண்டிய வீரர்கள் சவாரி செய்து கொண்டிருக்கின்றனர்.

 “நமக்கு உதவி செய்த மகிந்தரை ஆயுள்தண்டனை அளித்து வெளியுலகத் தொடர்பே இல்லாது சிறையில் பூட்டிவிட்டான், இராஜேந்திரன்!” என்று பல்லைக் கடித்தவாறே முணுமுணுக்கிறான் விக்கிரமன்.

“தன் மகன் இராஜாதிராஜனையே மகிந்தன் சார்பில் வாதாடச் செய்து, ஒரு நாடகமும் ஆடியிருக்கிறார்கள், அரசே!” என்று அவனது எண்ணத்தைப் பிரதிபலிக்கிறான் காளையப்பன்.

“இதைவிடக் கொடுமை எனது மூதாதையரின் அரியணையிலேயே இராஜாதிராஜனை சோழ இளவலாக முடி சூட்டியிருக்கிறான், அந்த இராஜேந்திரன். இதை எண்ணினால் என் நெஞ்சே வெடித்துவிடும் போல இருக்கிறது, காளையப்பா!” என்று உறுமுகிறான் விக்கிரமன்.

“அதோடு மட்டுமல்ல, அரசே! ரோகணத்தில் மட்டுமல்லாது இலங்கையில் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் மகிந்தரின் மகன் கசாபனைத் தேடி சோழவீரர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்களாம்! இலங்கை மன்னர்களையே வேரறுக்க வேண்டும் என்று இராஜேந்திரன் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறானாம். சிங்களத் தீவைத் தமிழ் பேசும் தென் சோழ மண்டலமாக்க வேண்டும் என்றும் தீர்மானித்து விட்டார்களாம்!” என்று தெரிவிக்கிறான் இன்னொருவன்.

“அது நடக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை!” என்று உறுதியான குரலில் பதிலளித்தவாறே குதிரையைச் செலுத்துகிறான் விக்கிரமன்.
“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள், அரசே?” என்று வினவுகிறான் காளையப்பன்.

“மொழி, சமயம் இரண்டும் ஒன்றான நாமும், சோழருமே ஒருவரை ஒருவர் அழிக்க அலைந்து கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க மொழியும், சமயமும் வெவ்வேறான சிங்களவர் எப்படிச் சோழர்களை ஏற்றுக் கொண்டு தங்கள் நாட்டைச் சோழமண்டலமாக ஒப்புக் கொள்வார்கள்? தமிழை எப்படித் தங்கள் மொழியாக ஏற்றுக் கொள்வார்கள்? நமது குருதியில் சோழர்களுக்கு எதிராக எப்படி ஒரு வெறி ஓடிக் கொண்டிருக்கிறதோ, அப்படி ஒரு வெறி சோழர்களுக்கு எதிராக அவர்களின் குருதியிலும் ஓடிக் கொண்டிருக்கிறது! நாமாவது சோழ ஆதிக்கத்தை மட்டும்தான் வெறுக்கிறோம். தமிழை நமது உயிராகப் போற்றுகிறோம். ஆனால் சிங்களவர்கள் சோழர்கள் அவர்களுக்கு செய்யும் நன்மைகளைக்கூட வெறுக்கிறார்கள். எனவே, சோழர்கள் தமிழை இலங்கைக்குக் கொண்டு சென்றால் - தமிழையும், சோழர்களையும் ஒன்றாக்கி - தமிழ் தங்களை அடக்கி ஆளவந்த சோழர்களின் குரல் என்றும் - தங்களின் அடையாளத்தையே அழித்துத் துடைத்துவிடவே தமிழைத் தங்கள்மீது திணிக்கிறார்கள் என்று தமிழையே வெறுக்க ஆரம்பிப்பார்கள். அதனால்தான் தமிழை இலங்கையில் பரப்ப இயலாது என்று நான் கருதுகிறேன், காளையப்பா!” என்று அவனுக்குப் பதிலளிக்கிறான் விக்கிரமன்.

“அப்படியா அரசே? தாங்கள் இவ்வளவு சிந்திப்பது மாதிரி ஆழ்ந்து சிந்திக்காமலா இருப்பார்கள் சோழர்கள்?” என்று வினவுகிறான் காளையப்பன்.

“அதனால்தான் இலங்கை அரசரான மகிந்தரையும் அவர் குடும்பத்தினரையும் சோழ நாட்டிற்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, இலங்கை அரச வாரிசான கசாபனையும் பிடித்து அழிக்கவும் அலைகிறார்கள். கசாபன் இல்லாவிட்டால் சிங்களவர் யார் பின்னாலும் ஒன்று சேர இயலாதல்லவா! தலையில்லாத உடல் என்ன செய்யும்! அதனால் சிந்தித்துச் செயல்பட இயலுமா? இப்பொழுது இலங்கையின் தலை கசாபன்தான்!”

சிறிது நேரம் அமைதியாக குதிரையைச் செலுத்துகிறான் விக்கிரமன். அவனது முகத்தில் கவலைக் கோடுகள் பரவுவதைக் கவனிக்கிறான் காளையப்பன். தனது அரசனின் சிந்தனை எதைப் பற்றியதாக இருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறான். அவனைப் பற்றி நன்கு அறிந்ததால் சோழர்கள் இலங்கையில் தமிழைப் பரப்ப எண்ணுவதைப் பற்றித்தான் இப்பொழுது தீவிரமாகச் சிந்திக்கிறான் என்றும் அறிந்து கொள்கிறான். எனவே உரையாடலைத் தானாகவே மீண்டும் தொடங்கட்டும் என்று அமைதியாக இருந்து விடுகிறான்.

“காளையப்பா!” என்றபடி மீண்டும் துவங்குகிறான் விக்கிரமன். “சோழர்கள் தமிழைப் பரப்ப ஆரம்பித்தால் சிங்களவர்கள் சோழர்களை மட்டுமல்ல, தமிழையே வெறுக்கத் துவங்கி விடுவார்கள். அவர்கள் தமிழின் மீது கொள்ளும் வெறுப்பு தமிழர்கள் அனைவரின் மீதும் தாவும், பாண்டியர்களாகிய நாமும் தமிழர்கள்தானே! இப்பொழுது சோழர்களை மட்டும் வெறுக்கும் சிங்களவர்கள் நாளை நம்மையும் வெறுப்பார்கள்! சோழர்களை எதிர்க்கச் சிங்களவர்களின் துணையை நாடும் நாம் அவர்களின் வெறுப்புக்கு உள்ளானால் என்ன ஆகும்?

“இப்பொழுது இரண்டு காரணங்களுக்காக நாம் சோழர்களின் தமிழ் பரப்புத் திட்டத்தை எதிர்க்க வேண்டி இருக்கிறது. ஒன்று, நமது தாய் மொழியான தமிழ் சிங்களவர்களின் வெறுப்பை ஈட்டிக்கொள்ள நாம் அனுமதிக்கக் கூடாது. இரண்டாவது, தமிழைத் தாய் மொழியாகக்கொண்ட பாண்டியரான நம்மை - சிங்களவர்களுக்கு நண்பர்களாக இருந்து வரும் நம்மை - நமது ஆதரவாளர்களை, நமது நண்பர்களை, நமக்குத் தோள் கொடுத்தவர்களை, நமக்குத் தோள் கொடுக்கப் போகிறவர்களை - நம்மை வெறுக்கும் எதிரிகளாகிவிட வாய்ப்புக் கொடுக்கக் கூடாது.

“எனவே, சோழர்களின் தமிழ் பரப்பும் திட்டத்தை எப்படியாவது நாம் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்காக எப்படியாவது சோழர்களுக்குத் தலைவலி கொடுத்து அவர்களின் திட்டத்தைத் திசை திருப்ப வேண்டும்!” என்று முடிக்கிறான் விக்கிரமன்.

“அதை எப்படிச் செய்ய இயலும், அரசே! இலங்கையில் இருந்த நமது படை வீரர்களில் எனது சிற்றப்பன் முருகேசன் உள்பட ஒருவர் கூட மிஞ்சவில்லை. அவர்களுக்குத் துணையாக இருந்த சிங்களவர்களும், அவர்களது படைவீரர்களும் அழிக்கப்பட்டார்கள். சிங்களத்தில் மன்னர் என்று சொல்லிக் கொள்ள யாருமே இல்லை. பாண்டி நாட்டிலும் சோழப் படைகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. மதுரைப் பக்கம் நாம் செல்வதைத் தற்பொழுது நினைத்துப் பார்க்கக்கூட முடியாது போலிருக்கிறது.

“அரச விசுவாசம் மிகுந்த பாண்டிய மக்கள் நிறைய இருப்பதால்தான் தென் பாண்டி நாட்டிலாவது நாம் நடமாட முடிகிறது. பாண்டியப் படைகள் அனைத்தும் சரணடைய வேண்டும் என்று பட்டி தொட்டிகளிலெல்லாம் பறை அறைந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நம்மால் என்ன செய்ய இயலும், அரசே?”  என்று ஆற்றாமையுடன் கேட்கிறான் காளையப்பன்.

“சேரநாட்டிற்குச் செல்ல வேண்டும், காளையப்பா!” என்று தன் திட்டத்தை விவரிக்கத் தொடங்குகிறான் விக்ரமன். அதைக் கேட்கக் கேட்க காளையப்பனின் பெரிய விழிகள் இன்னும் பெரிதாக விரிகின்றன. விக்கிரமன் கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் தன் திட்டத்தை அவனுக்கு விவரிக்கிறான்.

“நான் சொல்வது புரிகிறதா காளையப்பா?” என்று கேட்டதும் பெரிதாகச் சிரித்துக் கொண்டு தலையாட்டுகிறான் காளையப்பன். “அரசே! உங்கள் திட்டம் நன்றாகத்தான் இருக்கிறது. சேர மன்னர் பாஸ்கர ரவிவர்மர் தங்கள் திட்டத்திற்கு ஒத்து வருவார் என்றே நானும் நம்புகிறேன்.” என்று புன்னகையுடன் பதிலளிக்கிறான்.

“குந்தித் தின்றால் குதிரும் கரையும் என்ற பழமொழியை நீ கேள்விப் பட்டிருக்கிறாய் அல்லவா? சிறிது சிறிதாக சோழருக்கு எதிராக நாம் செயல்பட்டுக் கொண்டே வந்தால் அவர்களது வலிமை குறைந்து கொண்டே வரும். இலங்கைப் போரை எடுத்துக் கொள். நமக்கு ஐயாயிரம் வீரர்கள்தான் இழப்பு. ஆனால் பேரிழப்பு சோழர்களுக்குத்தானே! ரோகணத்தில் இராஜாதிராஜன் பதிமூவாயிரம் வீரர்களையும், இராஜேந்திரன் இருபத்தையாயிரம் வீரர்களையும் இழந்தான் அல்லவா? சிங்கள வீரர்கள் கிட்டத்தட்ட நாற்பத்தையாயிரம் பேருக்கு மேல் இறந்தாலும், கூட்டிக் கழித்துப் பார்த்தால் நமக்கு ஐயாயிரமும், சோழர்களுக்கு முப்பத்தெட்டாயிரமும் இழப்பல்லவா? எனது தந்தை இராஜராஜனிடம் இழந்ததற்கு மேலாகவே நாம் சோழவீரர்களை அழித்து விட்டோமே! இது தவிர எத்தனை பொருட்சேதம் அவர்களுக்கு ஏற்பட்டது?

“இனி நேருக்கு நேராக இராஜேந்திரனிடம் தேவையில்லாமல் போரிட்டு, நான் பாண்டிய வீரர்களை இழக்க மாட்டேன். மெல்ல மெல்ல நமது எண்ணிக்கை அதிகரிக்கட்டும். அவனுக்கு எல்லாவிதத்திலும் தொல்லை கொடுத்து, நமது வலிமையை அதிகரித்துக் கொண்டே வருவோம்.” என்று கூறியபடி குதிரையை ஒரு மண்டபத்திற்கருகில் நிறுத்துகிறான் விக்கிரமன். மற்றவர்களும் தங்கள் குதிரைகளை நிறுத்துகிறார்கள்.
மண்டபத்தின் அருகிலிருக்கும் குடிசையிலிருந்து ஒரு கிழவன் வெளியே வருகிறான்.

“நாங்கள் வணிகர்கள். இரவு நாங்கள் இந்த மண்டபத்தில் தங்கி, காலையில் நெல்லைக்குச் செல்லப் போகிறோம். எங்களுக்கு உணவு ஏதாவது கிடைக்குமா? நாங்கள் பணம் கொடுத்து விடுகிறோம்.” என்றபடி கைநிறையக் காசுகளை கிழவனிடம் நீட்டுகிறான் காளையப்பன்.
அவனையும், மற்ற வீரர்களையும் மேலும் கீழும் பார்த்த கிழவனின் முகம் மலர்கிறது. தனது மிச்சமிருக்கும் பற்கள் தெரியச் சிரிக்கிறான்.

“எங்க பாண்டிய மகராசாவை எனக்குத் தெரியாதா என்ன! வராத விருந்தாளியாக மன்னர் பிரானே என் குடிசைக்கு எழுந்தருளி இருக்கிறார். அவர் பசியாற நாங்கள் பணமா வாங்கிக் கொள்வோம்!” என்றபடி விக்கிரமனை நோக்கிக் கையெடுத்துக் கும்பிடுகிறான். “கும்பிடறேன் மகராசா!”[வளரும்]

No comments:

Post a Comment