Friday 24 October 2014

ஆர்.ச.வின் பார்வையில் கொங்குநாட்டுப் பெண்களின் மரபும் மாற்றங்களும் 2

ஆர்.சண்முகசுந்தரம்

                                      
ஒரு கொங்கு கிராமத்துப் பெண்ணின் உழைப்பையும், நிர்வாகத் திறனையும், தலைமைப் பொறுப்பையும், சீரான வாழ்க்கையைப் புரிந்து கொண்டு நடப்பதையும், பாங்காகப் படம் பிடித்துக் காட்டுகிறார் எழுத்து வித்தகர் மன்றோ!
                                    

தாமஸ் மன்றோ தன் வாழ்வில் சந்தித்த கொங்கு பெண்கள் பற்றிய சித்திரத்தை இவ்வாறு பதிவு செய்துள்ளார். கொங்கு பெண்களின் எளிமை, அறியாமை, அமைதி, பழமை கட்டுப்பாடு, சாதி உணர்வு, கடின உழைப்பு, கற்பில் திண்மை, தோற்றத்தில் மிடுக்கு, மனதில் அன்பு போன்ற குணங்களின் ஒட்டுமொத்த வடிவத்தை தாமஸ் மன்றோ “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல மிக அழகாக இந்த ஒரு பெண்ணின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். 

      கொங்குநாட்டுப் பெண்களின் மரபும் மாற்றங்களும் :2

டாக்டர் ஜவாஹர் பிரேமலதா 

ஆர்.ச.வும் தன் படைப்பில் சிறிதும் மாற்றமின்றி அச்சு அசலாகவே அவர்களை உலவ விட்டுள்ளார். தன்மானம், சுயமரியாதை, நெஞ்சுறுதி உடைய இப்பெண்கள் உழைப்பினாலேயே இத்தன்மைகளைப் பெற்றுள்ளனர். ஆர்.ச. புதினங்களில் வரும் இலட்சிய மாந்தர்கள் எவ்விடத்தும் தலைசாய்வதில்லை.. தனது உறவுகளுக்கும் அண்டை அயலாருக்கும் உதவிகளைச் செய்து எவ்வித எதிர்பார்ப்புமில்லாமல் உழைக்கும் உன்னத மனிதர்களாகத் திகழ்கிறார்கள். எனினும், வாழ்வின் சிக்கலில் சிக்கித் துன்பப் படுபவர்களாகவும் உள்ளனர்.

ஆர்.ச. கற்பனைப் பாத்திரங்கள் அல்ல. வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இப்படிப்பட்ட கொங்கு பெண்களை அச்சு அசலாகவே ஆர்.ச. தன் நாவல்களில் உலவ விட்டிருக்கிறார். இவருடைய படைப்புகளில் கொங்கு வட்டாரத்து உண்மைப் பாத்திரங்களையே காண முடிகிறது. ஆர்.ச. தன் புதினங்களில் கொங்கு சமூகத்தின் முழு வாழ்வையும் அதன் இருண்டதும் ஒளிமிக்கதுமான எல்லாப் பகுதிகளையும் இயல்பு நவிற்சியாகக் கலையழகுடன் தீட்டிக் காட்டியுள்ளார். சமூகத்தின் குறைபாடுகளையும் நிறைகளையும் எடுத்துக்கூறும் இயல்புடன் அவற்றைத் தாங்கியும் நகர்கின்றன. பெரும்பாலும் உழைக்கும் மக்களே இடம்பிடித்து ஓரிரு வசதி படைத்த பாத்திரங்களைத் தவிர; மற்ற அனைவருமே உடல் உழைப்பைக் கொண்டு பிழைப்பவர்களே. 


அன்றாட உழைப்பின் மூலமே அவர்கள் வாழ்விற்கான பொருளை ஈட்டுபவர்களாக உள்ளனர். அவர்களது வாழ்க்கையை நடத்தையைத் தீர்மானிக்கும் பெரும் சக்தியாகப் பொருளாதாரம் விளங்குகிறது. பொருளாதாரமே அனைத்து வாழ்க்கை நீதிகளையும் தீர்மானிக்கிறது. இப்பொருளாதாரமே மக்களின் வாழ்க்கையை தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளினால் மாறுபடும் மக்கள் வெகுசிலரே பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களே மிகுதி. ஆர்.ச. காட்டும் கொங்கு கிராமங்கள் எளிமை, அறியாமை, அமைதி, இயற்கை நெறி, பழமை கட்டுப்பாடு, சாதி உணர்வு, உழைத்தாக வேண்டிய பொருளாதாரச்சூழல் போன்றவற்றை உள்ளடக்கியவையாக உள்ளன.
பிறந்த வீட்டின் பெருமையைப் புகுந்த வீட்டில் கட்டிக் காக்க வேண்டிய பெரும்பங்கு பெண்ணைச் சார்ந்திருக்கிறது.

ஆர்.ச. புதினங்களில் வெளிப்படும் மற்றொரு கோணம் நகர வளர்ச்சியின் காரணமாக உறவுகளுக்குள் ஏற்படும் விரிசல்களைக் காட்டுவதாகும். நகரச் சூழல் என்பது மனதை மையமாக வைத்து வாழும் வாழ்க்கையைக் கொண்டது அல்ல. பணத்தை மையமாக வைத்து வாழும் வாழ்க்கையைக் கொண்டது. இதனால் மனம் சார்ந்த விஷயங்கள் புறக்கணிக்கப்படும் சூழலில் கிராமத்து மனிதர்களிடம் பிணக்குகள் ஏற்படுகிறது.

பணம் என்னும் நச்சுவேர் குடும்ப உறவுகளை ஆட்டிப்படைக்கும் சூழலை ஆர்.ச. பல புதினங்களில் பதிவு செய்துள்ளார். விவசாயத்தை நம்பியவர்கள் பணம் தேடி நகரத்திற்குச் செல்லும்போது, கிராம உறவுகள் புறக்கணிக்கப்படுகிறது. கிராமங்களுக்கு மீண்டும் மீளும் இவ்வுறவுகள் தம் சக உறவுகளிடம் போலி வேடம் அணிந்து உலவுகின்றன. கிராம வாழ்க்கை உண்மையும் தூய்மையும் உழைப்பும் நிறைந்த வாழ்க்கை. 

இதன் காரணமாக நகரத்துச் சூழலும், நகர மாந்தர்களின் சுயநலப் போக்கும் கண்டு கிராமத்து மக்கள் மிரளுகின்றன நிலை ஏற்படுகிறது. அவர்களிடமிருந்து விலகி வாழவே விரும்புகின்றனர். எனினும், இளைய தலைமுறையினரை நகரத்து பகட்டு ஈர்க்கிறது.இதை ஆர்.சவின் நாவல்கள் பதிவு செய்வதோடு நக ரத்து நாகரிகத்தை சற்று அந்நியமாகவே நோக்குகிறது. கேலி செய்கிறது.


 ‘தனிவழி‘ நாவலில் வரும் நாச்சியப்பன் வேறு யாருமல்ல ஆர்.ச.வேதான். ஆலை மில்லின் சங்கு ஒலி சாவு ஒலியாகத் தோன்றுகிறது. அதே சமயம் கல்வி வளர்ச்சி பெண்களை இரண்டு விதமாக் பாதித்துள்ளதைப் பதிவு செய்துள்ளார். ஒன்று சுயமாகச் சிந்தித்து தனக்கு சரியென்று பட்டதைத் துணிவோடு  செயல்படுத்தும் பெண்கள். இவ்வகைப் பெண்கள் தங்கள் குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் முரண்பாடுகளை தங்களின் நுண்ணறிவினால் களைய முயற்சி மேற்கொள்கின்றனர். 

சமூகத்திற்கு நன்மை விளையும் என்று மனதில் பட்டு விட்டால், தான் கற்ற கல்வியைப் பயன்படுத்தப்படும் சூழல் வரும் போது, துணிச்சலாகக் களம் இறங்குகின்றனர். கல்வியில்லாததினால் தன்னைவிட 50 வயது மூத்த கிழவரை மணக்க, (பொருந்தாமணத்திற்கு) பெண்கள் தள்ளப்படுவதையும், கல்வி கற்ற பெண்கள் தனக்குப் பிடிக்காத இளவயது மணமகனையும் கூட மறுத்து திருமணத்தை நிறுத்தி விடுவதையும் பதிவு செய்துள்ளார்.  கல்வியின் பயன் நன்மையே என்ற கருத்து இவ்வகைப் பெண்களின் மூலம் பதிவு செய்யப்படுகிறது.

அதே சமயம் கல்வி பெற்றதினால், தனக்கு கொடுக்கப்பட்ட உரிமையைத் தவறாகப் பயன்படுத்தும் பெண்களும் உள்ளனர். இவர்கள் தம் குடும்பத்திற்கு பெருத்த அவமானத்தைத் தேடித் தருகின்றனர். நகரத்து நாகரிகம் இவர்களது உண்மை இயல்பினைச் சிதைத்து இரண்டுங்கெட்டான்களாக இவர்களை மாற்றியிருக்கிற அவலத்தையும் ஆர்.ச. பதிவு செய்துள்ளார். விரும்பியபடி வாழ்வது, பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் முடிவெடுப்பது, தான் தோன்றித்தனமாகச் செயல்படுவது, அலட்சிய உணர்வு, பெரும்போக்கு போன்ற குணங்கள் சில கல்வி பெற்ற பெண்களிடம் பதிந்து, மண்ணின் குணம் மாறிவருவதைப் பதிவு செய்துள்ளார். 

குடும்பச்  சூழலும் ஒரு காரணம் என்ற கருத்து அடித்தளமாக இருக்கிறது. எனினும், குடும்ப உறுப்பினர்களின் கவனிப்பாலும், கண்டிப்பினாலும் இப்பெண்கள் நேர்வழிக்குத் திருப்பப்பட்டு, மண்ணிற்குரிய பண்பைப் பெறுகிற நிலையும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஆர்.ச. கொங்கு மண்ணின் குணத்தை இப்பெண்களின் வழி அழகிய சித்திரங்களாக வரைந்து காட்டியுள்ளார்.

இந்த நூலில் கொங்கு பெண்களின் பாத்திரப் படைப்பு குறித்த பகுதி நீண்டது. ஏனெனில் ஆர்.ச. வின் நூல்களில் நாகம்மாள்,பூவும் பிஞ்சும் நாவல்கள் தான் தற்போது கிடைக்கிறது. மற்ற நாவல்கள் கிடைப்பதில்லை. அதாவது, மறு பதிப்பாக வெளிவரவில்லை. எனவே நாவல்களைப் பற்றிய அறிமுகமாகவும், கொங்கு பெண்களைப் பற்றிய முழுமையான அகப், புற சித்திரங்களை வாசகர்கள் அறியும் பொருட்டும் இப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குடும்ப,சமூக உறவு நிலைகளில் பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் பெண்ணிய நோக்கில் எடுத்துரைக்கபட்டுள்ளது.





No comments:

Post a Comment