Thursday 9 October 2014

மெய்யாய் இருந்தது நாட்செல... நாட்செல...

             1.மெய்யாய் இருந்தது நாட்செல... நாட்செல...

கர்னல் கணேசன் 
                                        
1971-ம் ஆண்டு இந்தியத் திருநாட்டின் எல்லைப் புறத்தை மாற்றியமைத்து “பங்களாதேஷ்” என்ற புதிய நாட்டை உலகுக்கு அறிமுகப்படுத்தியது. 1970-ம் ஆண்டு மே மாதம் மூன்றாண்டு கால பி.டெக் பட்டப் படிப்பிற்காக இராணுவப் பொறியியற் கல்லூரி வந்திருந்த காப்டன் கணேசன் போர்க்கால சூழ்நிலையை முன்னிட்டு படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு எல்லைப்புறம் சென்றுவிட்டார். இராணுவத்தினர்களுக்கு “போர் அனுபவம்” என்பது அடிதடி  இல்லை. எல்லைப்புறத்தில் இந்திய - பாகிஸ்தானிய துருப்புகள் எதிர் எதிர் நிற்கும் லைன் ஆப் ஆக்”வல் கண்ட்@ரால்  போன்ற இடங்களில் எதிரிகளுடன் சிறு சலசலப்பு ஏற்படுவதும் அதில் எப்பொழுதாவது ஓரிருவர் கொல்லப்படுவதும் நடந்தாலும் அதைப் போர்க்கால சூழ்நிலையுடன் ஒப்பிட முடியாது. 

அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் வீரத்துடனும் நாட்டுப்பற்றுடனும் செயலாற்றுபவர்களுக்கு வீரப்பதக்கங்கள் வழங்கப்படுவதில்லை. போரில்லாத சூழ்நிலைகளில் வழங்கப்படும் வீரப் பதக்கங்களான அசோக் சக்ரா, கீர்த்தி சக்ரா மற்றும் சூர்ய சக்ரா போன்ற எதிரியோடு  நேரடியாக @மாதாதவர்களுக்கான விருதுகளாகும். ஆகையினால், போர்க்கால சூழ்நிலையில் பணியாற்றவும் போரில் பங்கு கொள்ளவும் இராணுவத்தினர் பேரதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். போர் நடந்து கொண்டிருக்கும் நாட்களில் கூட எத்தனையோ இராணுவத்தினர் நாட்டின் பல இடங்களில் நிர்வாகப் பணிகளில் இருப்பார்கள். அவர்கள் எல்லாரும் போர்க்களத்தில் பணியாற்றும் வாய்ப்பை இழந்தவர்களாவார்கள்.

அதுபோன்ற இழப்புகள்  கணேசனுக்கு ஏற்படவில்லை. அவர் @நரடியாகப் போரில் கலந்து கொண்டு பணியாற்றியவர். அந்த அனுபவம் பற்றி மிகவும் மகிழ்ந்தவர். நாட்டைக் காக்கும்பே று தமக்கு வாய்த்தது குறித்து பிறவிப் பயன் என்று கருதியவர். 16-12-1971 அன்று சுமார் 93,000 பாகிஸ்தானிய இராணுவத்தினர் டாக்கா குதிரைப் பந்தய மைதானத்தில் இந்திய இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள். இந்தியாவின் வடமேற்கு எல்லைப் புறங்களில் பாகிஸ்தானுடனான போர் மிகவும் உக்கிரமாக நடந்திருந்தது. கிழக்கு பாகிஸ்தானை இழந்துவிடுவோம் என்று நிச்சயமா எதிர்பார்த்திருந்த அவர்கள் அதற்கு ஈடாக இந்திய வடமேற்கு எல்லையில் ராஜஸ்தானிலிருந்து ஜம்மு காஷ்மீர் வரையிலான எல்லையில் எங்காவது அதிக இடத்தைக் கைப்பற்ற முடியுமா என்ற வெறியுடன் போரிட்டிருந்தனர்.

வெறி மட்டுமே வெற்றியைத் தருவதில்லை. விவேகமும் திட்டங்களை நிறைவேற்றக்கூடிய அதிக எண்ணிக்கையிலானப் படைப் பிரிவுகளும் தேவைப்பட்டன. பாகிஸ்தானிய இராணுவம் இந்திய இராணுவத்துடன் ஈடு கொடுக்க முடியாது என்பது உலகறிந்த ரகசியம். அப்படி இருந்தும் கிழக்கு பாகிஸ்தானிய போர் முடிந்த உடனேயே பல இந்திய படைப்பிரிவுகள் உடனடியாக கிழக்கிலிருந்து மேற்கே செல்ல உத்தரவிடப்பட்டன.

கேப்டன் கணேசன் தனது படைப் பிரிவுடன் திரிபுரா எல்லை வந்து  இந்தியாவின் கடைக்கோடி ரயில் நிலையங்களில் ஒன்றான  “தர்மாநகர்” என்ற ரயில் நிலையம் அருகே முகாமிட்டிருந்தார்.  அங்கிருந்து புறப்படும் மிலிடெரி ஸ்பெஷல் வண்டிக்கு அவர் தான்   அவர்தான் கமாண்டிங் ஆபீசர். 25-.01.-1972 அன்று ரயில் புறப்பட்டது. 



தனக்கு ஒதுக்கப்பட்ட முதல் வகுப்பை ஒதுக்கிவிட்டு  பகல் நேரங்களில் இராணுவ வண்டிகள் ஏற்றப்பட்ட திறந்தவெளி ரயில்வே வேகனில்  இராணுவ வண்டியின் மேல் உட்கார்ந்து கொண்டு வெளி உலகை வேடிக்கை பார்த்தபடி கணேசன் பயணித்தார். இரண்டு நாள் பயணமாக ரயில் ஓடிக் கொண்டிருந்தது. 26 ஜனவரி இந்திய குடியரசு நாள் கொண்டாட்டங்கள் நேர்முக வர்ணனையாக ரேடியோவில் வந்து கொண்டிருந்தது. அதைக் கேட்டபடியே தனது வாழ்க்கைப் பெரு வெளியில் கடந்த சில நாட்களாக நடந்தவைகளை எண்ணிப் பார்த்தார் கணேசன்.
                              அன்னையின் மறைவும் தனிமை உணர்வும்

25-02-1970 நாள் அவரது அன்னை மறைந்தார். அந்த மறைவு ஒரு பெரிய குடும்பத்தில் அவரைத் தனிமைப் படுத்தி விட்டது என்றால் மிகை இல்லை. தங்கையும் திருமணமாகி சென்றுவிட்ட நிலையில் வீட்டில் அவரது அப்பாவும் இரு தம்பிகள் மட்டுமே இருந்தனர். வீட்டில் விளக்கேற்றி வைக்க ஒரு பெண் அவசியம், அவசரம் என்பதால் உடனடியாக 25 வயதே ஆன அவரது தம்பிக்கு திருமணம் செய்விக்கப்பட்டது. ஆனால், அந்த திருமணத்தால் குடும்பத்தில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. திருமணமான இரு அண்ணன்கள், ஒரு அக்காள், ஒரு தங்கை மற்றும் சமீபத்தில் திருமணமான தம்பி என்று உறவுகள் தனித்தனியாகப் பிரிந்து விட்டனர். 

வாழ்க்கை என்ற பெரும் பயணத்தில் ஒரு சாலை ஓரப்பூங்காவாக இருந்த அவர் வீட்டில் முன்னறிவிப்பின்றி அவர் நுழைய முடியாது என்ற உண்மை அவரை மேலும் தனிமைப்படுத்தியது. தம்பியின் திருமணம் 1970-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. வீட்டில் உணவுப் பிரச்னை ஓரளவு தீர்ந்தது. கடைசி தம்பி கல்லூரி விடுதியிலிருந்ததால் தம்பி, தம்பி மனைவி மற்றும் தந்தை மட்டுமே சொந்த ஊரில் இருந்தார்கள்.

குடும்பத்தில் எல்லாரும் தனித்தனியாகப் பிரிந்து தங்களுக்கென ஒரு வழி கண்டு கொண்டதால் இராணுவ வாழ்க்கையை ஏற்றுக் கொண்ட அவரது பாதை தனி வழியானது. பொறியியற் கல்லூரியில் படிப்பில் அதிக ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தார். இராணுவம் சார்ந்த நிகழ்ச்சிகள், புத்தகங்கள் படிப்பது, விளையாடுவது என்று நாட்கள் சென்றன. "The Sand Pebbles' என்ற ஒரு கடற்படைப்பின்னணியுள்ள திரைப்படம் பார்த்தார். இராணுவத்தின் முப்படைகளும் (தரைப்படை, வான்படை, கடற்படை) அவைகளில் பணியாற்றுபவர்களுக்கு அற்புதமான அனுபவங்களை வாரி வழங்குகின்றன. ஆனால், அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் உடற்திண்மையும் அதில் பணியாற்றுபவர்களுக்கு வேண்டும்.

கடற்படையில் பணியாற்றுவது ஒரு புதிய அனுபவம்தான். தரையைப் போல கடலில் ஓடி விளையாட முடியாது. ஆனால், கப்பல் ஒரு தனி உலகம். அதில் பணியாற்றுபவர்கள். ஒருமுறை கடலுக்குள் சென்றால் பின்பு தரையைத் தொடக் குறைந்தது ஆறுமாத காலமாகலாம். அதனால், கடற்படையில் பணியாற்றுபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கடலை நேசிக்க ஆரம்பிக்கிறார்கள். உப்புக்காற்று முகத்திலடிக்கும் போது ஒரு புத்துணர்ச்சி அவர்களுக்கு ஏற்படுகிறது என்றால் மிகையில்லை. இப்படித் தனிமைப்படுத்தப்பட்ட கடற்படையினரிலும் சிலர் காதல் வசப்படுகிறார்கள். ஆண்களின் தனி உலகமான இராணுவத்தில் அவர்கள் காதல் வசப்படுவதை விட அவர்களை சந்திக்கும் பெண்கள்தான் சுற்றிச் சுற்றி வந்து அவர்களை காதல் வலைக்குள் வீழ்த்துகிறார்கள். 

எப்பொழுதாவது தரையைத் தொடும் கப்பல் தனது பணியாளர்களுக்கு நல்ல சுதந்திரம் வழங்குகிறது. அதிகாரிகளும் படைவீரர்களும் தங்களுக்கு பிடித்தமானப் பொழுது போக்குகளில் ஓய்வு  காலத்தைச் செலவிட்டு விட்டு மீண்டும் கப்பலுக்குத் திரும்புகிறார்கள். உறவினர்களையும் நண்பர்களையும் சந்திக்கவும், திருவிழா, பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் கண்டுகளிக்கும் படைவீரர்களைக் காணும் பெண்களில் சிலர் அவர்களை விரும்புவதும், இயற்கையே! 

இராணுவ வாழ்வில் காதல், திருமணம், குடும்பம் போன்றவை படை வீரர்களுக்குக் கிடைக்கும் போனஸ் போலத்தான். ஏனெனில் பணிக்காலத்தில் இராணுவத்தினர் இந்த நாட்டின் பாதுகாவலர்கள். அதுதான் அவர்களது முதற்கடமை. உலகப் போர்களின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் பெரும்பாலான இராணுவத்தினர்கள் பணிக்காலத்தில் திருமணம் புரிந்து கொள்வதில்லை என்பதைக் காணலாம். நாட்டின் பாதுகாப்பு என்ற முதற்கடமையுடன் அதிகாரிகளுக்கு அவர்களுக்குக் கீழ் பணியாற்றும் படைப் பிரிவினரின் பயிற்சி, பாதுகாப்பு, நல்வாழ்க்கை போன்ற கூடுதல் பொறுப்பும் இருப்பதால் அவர்கள் தங்களுக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வது இரண்டாம் தாரமாகக் கருதப்படுகிறது.

போர்முடிந்து மிலிடெரி ஸ்பெஷல் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த காப்டன் கணேசன் மனதில் இதுபோன்ற தொடர்சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. படைவீரர்களைக் காதலிக்கும் பெண்கள் உடற் கவர்ச்சியில் வீழ்வதில்லை. திண்மையான உடற்கட்டுடன் உள்ள அவன் எப்படி எல்லாவற்றையும் தனது நாட்டிற்காக இழக்க முன்வந்துள்ளான் என்று ஆச்சரியப்படுகிறார்கள். அப்படிப்பட்டவனின் காதல் தன்வசம் திரும்பினால் படைப் பிரிவிலும் போர்க்களத்திலும் காட்டக்கூடிய ஈடுபாட்டைவிட தன்னை அதிகம் நேசிப்பான் என்று எதிர்பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு பெண்ணின் மனநிலை பற்றிய சினிமா தான் "The Sand Pebbles''. சில ஆண்டுகள் மணவாழ்க்கைக்குப் பின் போரில் அவன் இறந்துவிட அவனது கனவுகளை நனவாக்கும் திட்டத்துடன் அவள் தனது நாடு திரும்புவதுடன் படம் முடிகிறது. தனது வாழ்க்கையும் அதுபோல் அமையுமா என்று கணேசனின் கற்பனை ஓட மிலிடெரி ஸ்பெஷல்  வண்டி ஓடிக் கொண்டிருந்தது.

காமத்தின் அடிப்படை இன்றி, உடற்கவர்ச்சியில் உருவாகாமல் நாட்டுப்பற்று, நல்ல குணநலன் போன்றவைகளின் அடிப்படையில் உருவாகும் எண்ணங்கள் காதலாகப் பரிமளிக்கும் போது அங்கு சில அற்புதங்கள் நிகழ்கின்றன என்பது உண்மைதான். உதாரணமாக ஸ்விட்சர்லாந்தில் பிறந்த ஈவா யோன் லிண்டா என்ற பெண் இந்திய நாட்டின் ஆன்மீக அறிவியலில் மிகவும் ஆழ்ந்த பற்றுதல் கொள்கிறாள். ஆகையினால் இந்தியர்களைக் காண நேர்கையில் அவர்களிடம் ஒரு ஈர்ப்பை உணர்கிறாள். 

இந்த இளம் வயதுப் பெண் 1928-ம் ஆண்டு லண்டனில் படித்துக் கொண்டிருந்த பொழுது புகழ்பெற்ற பிரிட்டிஷ் மிலிடெரி அகாடெமி ஆகிய Sandhurstல் பயிற்சி பெற்று வந்த ஒரு இளம் இந்திய இராணுவப் பயிற்சி மாணவரை சந்திக்கிறாள். அவர்களிடையே நேசம் வளர்கிறது. இளைஞன் இராணுவப் பயிற்சி முடிந்து இந்திய தரைப்படையில் அதிகாரியாகிறான். அவன் இந்தியா வந்து இராணுவ அதிகாரியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஓரிரு ஆண்டுகளுக்குள் மகாராஷ்டிர மாநிலத்தவரான அவனது குடும்பத்தினர் ஒப்புதலுடன் அந்தப் பெண்ணை மணக்கிறான். இந்து மதத்தில் ஈடுபாடு கொண்ட அவள் தனது பெயரை “சாவித்திரி” என்று மாற்றிக் கொள்கிறாள்.

பின்னாளில் அந்த பெண் தனக்கு மட்டுமல்லாமல் தனது கணவருக்கும் அவர் சார்ந்துள்ள இந்திய இராணுவத்திற்கும் இந்த திருநாட்டிற்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் ஹிந்தி,சமஸ்கிருதம் ஆகிய இருமொழிகளிலும் பட்டம் பெற்றும் சங்கீதம் நாட்டியம் ஆகியவற்றில் புகழ்பெற்றும் விளங்குகிறார். நாடு சுதந்திரம் பெற்ற பொழுது இந்திய இராணுவத்தின் மிகப்பெரும் வீர விருதான “பரம்வீர் சக்ரா” என்ற விருதை வடிவமைக்கும் பொறுப்பு அந்த பெண்ணிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் வடிவமைத்த இந்திரனின் “வஜ்ராயுதம்” தான் அந்த விருதின் இருபுறமும் பதிக்கப் பெற்றுள்ளது. இந்திய குடியரசு தின விழாவிற்கான நேர்முக வர்ணனை ரேடியோவில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்க Military Special ரயில் வண்டி ஓடிக் கொண்டிருக்க அதில் அமர்ந்திருந்த காப்டன் கணேசனின் எண்ண ஓட்டங்கள் இப்படி இருந்தன .[வளரும்]

No comments:

Post a Comment