Sunday 5 February 2017


மணல்வெளி மான்கள்
-----------------------------------
                                                                  முன்னுரை
ஆசை தான் கானல் நீர் ஓடுகின்ற  மணல் வெளி.மணல் வெளியில் மான்கள் வசிப்பதில்லை. அதன் வெயில் காலத்து வெப்பமும், குளிர்காலத்துக்குளிரும்  அவற்றினால்
 தாங்க முடியாதவை .ஆனால் குரூர சக்திகள் துரத்தி வரும்போது அவை மணல் வெளிகளைக் கடக்க முயலும். சில சமயம் தாண்டிச் சென்றுவிடும் ; சில சமயம் மடியும்.
 இன்றைய மணல்வெளி மான்கள் மனிதகுலமேதான். துரத்துவது வன்முறை. தடுப்பதற்கு அல்லது தவிர்ப்பதற்கு மனிதர்களைத் தவிர வேறு எவருமில்லை.
எதிர்த்துத்தாக்கு!
தீயைத் தீயால் அணை!
முள்ளை முள்ளால் எடு!
இதுதான் காட்டுமிராண்டி வாழ்வின் ஆதி அம்சம். மனிதனின் அந்த விலங்குத் தன்மையை மாற்ற,மாற்றி மாற்றி எழுந்த மகான்களின் குரல்கள் மறு பரிசீலனை செய்தன; பக்குவப்படுத்தின. ஆனால் அது முற்றுப்பெறவில்லை எனினும் அது இடையறாத போராட்டம் ஆயிற்று. நன்மைக்கும் தீமைக்குமான நிரந்தர யுத்தமாகியது.
இதை நீக்க மெய்யறிவு உதவியதைப் போல் அறிவியல் உதவவில்லை. அறிவியல் இதயத்தை, உணர்வுகளை, மனிதனிடம் உள்ள மனிதத்துவத்தை மேன்மைப் படுத்துவதற்கு மாறாக ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளவே அதிநவீன ஆயுதங்களையே உற்பத்தி செய்து வருகின்றது.
அதன் விளைவுகளை அமெரிக்காவில் ‘பெண்டகன்’ சந்தித்தது.  சமீபத்தில் சிரியா .இன்னும் எத்தனையோ!அறிவுத் தீவினைக்கு  மாற்று மருந்து உணர்வின் மேன்மை தான் , கலைகள் அதற்கே முயலுகின்றன.
கலைகளின் தலைமைப்பீடம் அன்றும் இன்றும் என்றும் , இலக்கியமாகவே இருந்து வருகிறது. இலக்கிய ஆசிரியனுக்கு ஒரு பொறுப்பு உண்டு உலகெங்கும் நிகழும் வன்முறைகளைக் கண்டு மனங் கசிந்து வெற்றுக் கண்ணீர் விடாமல் மேலான பாத்திரங்களைச் சிருஷ்டித்துக் காட்ட வேண்டிய பொறுப்பு .இந்த நாவல் அதையே உத்தேசமாகக் கொண்டது. இதன் கதாநாயகனும் கதாநாயகியும் வாழ்ந்து காட்டி, வன்முறைக்கு இரையாகாமல் நிமிர்ந்து நிற்பது எப்படி என்று நிரூபிக்க முனைந்துள்ளார்கள்.நாவலைப் பொழுது போக்குச் சாதனமாகக் கருதாமல் ஆத்மீக வழிபாடாகக் கொண்டு படைத்த முயற்சி இது. படித்துப்பாருங்கள்.
சென்னை – 20 மிக்க அன்புடன்
        வையவன்
1987-88ல்கல்கியில் தொடர்கதையாக வெளிவந்த இந்த நாவல் இன்னும் பலரால் மறக்க முடியாததாக, மீண்டும் படிக்க விரும்புவதாக இருந்து வருவது எழுதிய எனக்கே வியப்பாக
உள்ளது.கலைஞன் மக்களின் சேவகன். அவர்களின் ஆணையின் கீழ் இயங்க வேண்டியவன்.அவர்களில் பலர்  இது மீண்டும் ஒரு தொடராக வரவேண்டுமெனக் கோரியதால்
நாளை முதல் பேஸ்புக்கில்  இது மீண்டும் தொடராக வரும். இதன் பதிவை இங்கும் காணலாம்.
 


No comments:

Post a Comment