Sunday 29 June 2014

நிலத்தடித்தொட்டி நீரால் விளையும் நன்மைகள்:


அயர்லாந்தில் ஒரு நிலத்தடி மழைநீர் சேமிக்கும் தொட்டி 

காளிமைந்தன் வீ.சே. கருப்பண்ணன் தொடர்கிறார்

     நிலத்தடித்தொட்டி நீரால் விளையும் நன்மைகள்: 
1. குடிக்க மிகச் சுவையான நீர்
 2.விறகோ  எரிவாயுவோ 40 சதம் குறைவு.
 3.சமைக்கும் நேரம் குறைவு. 
4. பெரிய வீடுகளின் கல்லூரிக் கட்டிடங்களின் கூரைகளில், ரயில்வே ஸ்டேஷன் பயணிகள் கூரைகளில் இருந்து சேமிக்கப்படும் மழைநீர் 

1.0 குடிப்பதற்கு 
2)சமைப்பதற்கு மட்டு மின்றி, அனைத்து ஹாஸ்டல் மாணவர்களுக்கும், பயணிகளுக்கும் 
(3)துணிதுவைக்க
(4)குளிக்க வேண்டிய நீர் கிடைக்கிறது.
(5)ரயில் பயணிகளுக்கு நல்ல குடிநீரும், கக்கூசுக்குக் கூட நல்ல நீர் கிடைக்கும் 
(6) யார் எங்கிருந்தாலும் உடல் சோப்பு 75 சதம் மிச்சமாகிறது.
(7) துணி சோப்பு குறைந்தது 60 சதம் குறைகிறது. 
(8) துணி பளிச்சென்று வெளுக்கிறது.
(9வீடுகளில் ஹாஸ்டல்களில் சேமித்த நீர் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு வரும். அண்டை யில் வாழும் எளியோருக்கும் கூட நீர் தொடர்ந்து சப்ளை செய்யலாம்!

சென்னை நடுநகரில் உள்ள லயோலா, திருச்சி புனித வளவனார் கல்லூரிகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். நாமக்கல்லில், இதர மாவட்டங்களில் கல்வி வணிகர்களால் நடத்தப்படும் நூற்றுக்கணக்கான பொறியில் கல்லூரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான் பள்ளிகளைக் கணக்கில் கொள்ளுங்கள்! ஏராளமான நனமைகள் அற்ப செலவில் விளையும். அவர்கள் அளவற்ற பணத்தைஅள்ளிக் குவிக்கிறார்கள். அவர்களை அரசு தயவு தாட்சண்யமின்றி நிலத்தடி நீரைத்தொடாதே, மழைநீர் முழுதையும் நிலத்தடித் தொட்டிகளில் கட்டாயம் சேமி என்று உத்தர விடலாம். அரசுக்கு மின்னுற்பத்திச் செலவு குறையும். கல்லுரி பள்ளி வணிகருக்கும் அள வற்ற லாபம்! 
ஒரு மாடல்  நிலத்தடி நீர்த் தொட்டி 
ஆனால் ஒரு முறை மட்டும் முதலீடு தேவை! 
இந்தக்கோடீஸ்வரஸ்களுக்குக் கடன் தர வங்கிகள் காத்துக் கொண்டு வரிசையில் நிற்கின்றனவே!

இந்தனை கெடுதல்களை அகற்றி இத்தனை நன்மைகளை அடையக் கூடிய திட்டத்தை-மைய மாநில அரசுகள் தீர ஆலோசித்து நிறைவேற்ற வேண்டும். அதற்காக தன்னார்வ இயக்கங்கள் மக்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் அணுக வேண்டும்!

          இல்லாத நீரை எப்படி சப்ளை செய்வது?


ஆண்டு முழுதும் மழை பொய்த்துப் போன நேரத்தில் யார் அரசாண்டாலும் ,மந்திரத்தில் மாங்காய் காய்க்க வைக்க முடியாது; நீர் தரமுடியாது! அரசை நக்கல் செய்வது தர்மமல்ல.
இல்லாத நீரை எப்படி சப்ளை செய்யமுடியும்? அதி காரிகளும் ஊடகத்தினரும்,தனியார் ஆற்றோரம் ஆழ் துளைக் கிணறுகளில் (ஆணிணூஞுதீஞுடூடூண்) இருந்து தண்ணீரை உறிஞ்சி விடுகிறார்கள் என கூக்குரலிடுகின்றனர். அதே தனியாரிடம் இருந்து தங்கள் வீட்டுக்கு மட்டும் நீரை வாங்கிக் கொட்டிக் கொள்கின்றனர்.
தனியார் ஈடுபடும் எதிலும் பொருள் தட்டுப்பாடு ஏற்படுங் காலங்களில் கொள்ளை லாபம் அடிப்பது உலகறிந்த ரகசியம். தனியார் தொழிலை இந்த அரசியல் வணிகர்களால் தடை செய்ய முடியுமா?
எந்தப்பத்திரிகையானாலும்,இன்ன தனியார் இந்தத் தப்பைச் செய்கிறார் என்று ஏன் பெயர் குறிப்பிட்டு-எழுதுவதில்லை? 
பல தொழில்களையும் செய்யும் பல கட்சிப் பிரமுகர்கள்தான் இதைச் செய்கின்றனர் என்பது தெரியும். 
அவர்களைப் பெயர் குறிப்பிட்டு எழுதி விட்டால், அப்புறம் விளம்பரம் கிடைக்காது. 
சில பத்திரிகைகளுக்கு செய்திகளாக வணிக விளம்பரத்தைப் போடப் பணம் கிடைக்காது.
சுத்தமான குடிநீர்ப்பஞ்சத்தை நிரந்தர மாகப் போக்க ஒரே 
வழி-அனைத்து நகரங்கள் - கிராமங்களில், தோட்டங்களில் உள்ள வீடுகளின்,கட்டிடங்களின்-கூரைகளின்மேல் விழும் மழைநீரை நிலத்தடித் தொட்டிகளில் சேமிப்பதே! அத்தோடு சமையல் எரிவாயு பயன்பாடும் 20 சதமாவது குறைந்து போகும்! நீரைச் சுத்திகரிக்கும் மின்சாரம் மிஞ்சம்! பூச்சிக்கொல்லி மருந்து, ஃப்ளூரைட் உப்பு, அவற்றால் விளையும் நோய் கள் என்ற பேச்சுக்கும் இடமில்லை!

                        நானே செய்த பரிசோதனை!

 2001-இல் இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மழை நீரை அறுவடை செய்யச் சொல்லி உத்தரவிட்ட போதே-நான் என் வீட்டில் யாரும் சொல்லித் தராமலே-வீட்டுக் கான்கிரீட் கூரை மேல் விழும் நீரை குழாய்களின் மூலம் கொண்டு வந்து-ஒரு நீர்கசியா நிலத்தடித் தொட்டியில் சேமித்தேன். 

அத்தொட்டி கட்டும் போது நீர் கசியாத ரசாயனப் பவுடர் கலந்து கட்டினேன். நீர் வெளியிலும் போக முடியாது. எத்தனை மழை கொட்டினாலும் வெளிநீரும் ஒரு சொட்டுக் கூட உள்ளே கசிந்து வர முடியாது. 

தொட்டியின் மேல் காங்கீரிட் தளத்தால் மூடி விட்டேன். ஒரு ஆளிறங்கு மூடியும் வைத்தேன். நீர் தொட்டிக்குள் செல்லும்முன்–மணல் சிறு ஜல்லிகள் அடுப்புக்கரி இவை நிரப்பிய இரு சிறு தொட்டி களின் மூலம் செலுத்தி வடிகட்டிச் சுத்தம் செய்து–நிலத்தடித் தொட்டியில் சேமித்தேன்.

மேலே சொல்லியபடி,அந்தத் தொட்டியில் மழை நீரை கடந்த 2001-இல் முதன் முதல் சேமித்தேன். முதலில் 10 மாதம் கழித்து ரத்தப் பரிசோதனை நிலையத்தில் என் தொட்டி நீரைக் கொடுத்து–ரத்தத்தில் கிருமிகள் உள்ளனவா என்று சோதிப்பது போல,கல்ச்சர் டெஸ்ட் செய்து பார்த்தேன். 

எந்தக் கிருமியும் வளரவில்லை. ஏனெனில் அந்த நீரில் வெளிக்காற்றோ, ஒளியோ படாமல் மூடப் பட்டு உள்ளது. சூரிய ஒளி இல்லாமல் உலகில் எந்த உயிரும் வாழமுடியாது. 

இது உயிரியல் விஞ்ஞானம் படித்த அனைவருக்கும் தெரியும். நான் தாவரவியல் படித்தவன் என்பதால் இது எனக்கு-பால பாடம் போல் தெளிவாகத் தெரியும். இம்மாதிரி காற்றும் ஒளியும் படாத தொட்டியில் இருக்கும் நீர் பூமியடியில் இருந்து போர் மூலம் எடுக்கப்படும் நீருக்குச் சமமே; என்றுமே கெடாது,என்பதறிக.

              இங்கிலாந்தில் கூரை நீர்,வீடு தவறாது சேமிப்பு 

. ஆண்டு முழுதும் மழை பெய்யும் இங்கிலாந்தில் ஒரு வீடு தவறாது கூரைகளில் மழை நீரைத் தொட்டிகளில் சேமிக்கிறார்கள் என்று-கோவையில் அவிநாசி சாலையில் குடியிருக்கும் என் நண்பர்-ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர் . மு.சுப்பண்ணன் எனக்குச் சொல்கிறார். 
                                                               

இவரது மகன் ஒரு மருத்துவர். அவர் லண்டனில் மருத்துவத் தொழில் புரிகிறார். பிரிட்ஷ் குடிமகனாக மாறி உள்ளார். அடிக்கடி மகனையும் மருமகளையும் பேரக் குழந்தைகளையும் பார்க்க லண்டன் செல்லும் நண்பர்-நேரடியாகக் கண்டுவிட்டு இதைச் சொல்கிறார். இத்தனைக்கு ஆண்டு முழுதும் மழை பெய்யும் நாடு இங்கிலாந்து!

 2001-இல் இருந்து இன்றுவரை எனக்குக் குடிநீர்த் தட்டுப்பாடு என்பது கிடையாது. காவிரி ஆறு–சாக்கடைத் தண்ணீர் போல் ஓடுவதால்-நகராட்சி வழங்கும் காவிரி நீரைக் குடிப்பதில்லை. துணிதுவைக்க குளிக்க பாத்திரங்கள் சுத் தம் செய்யப் பயன்படுத்துகிறோம்.

என் வீட்டின் கூரைப் பரப்பு 2500 சதுர அடி கொண்டது என்றாலும்-நன்றாக வடகிழக்கு மழை பெய்யும் போது இரண்டு அல்லது மூன்றுநாளில் சுமார் 30,000லிட்டர் கொள்ளளவுள்ள தொட்டி நிறைந்து விடுகிறது. மழைக்காலம் முடியுமுன்பு–செலவாகும் நீரைச் சரிசெய்து தொட்டியில் குறைந்து போகும் நீரையும் நிரப்பி விடுகிறேன். சென்ற ஆண்டுக்கு முன் சேமித்த நீர் இன்றும் பயன்படுகிறது. தினம் சமையலுக்கும் குடிக்கவும் 40 லிட்டர் எடுத்தாலும் கூட, 30000 லிட்டர் நீர் 750 நாட்களுக்கு வரும் நாமக்கல்லில்  வீட்டின் மேல் கொட்டிய “சிறுவாணி” நீர்!

 ஒருமுறை இந்த நீரை பாட்டிலில் கிருஷ்ணகிரிக்கு எடுத்துச் சென்றேன். அங்கே ஒரு பொறியாளர் அந்த நீரைக் குடித்துவிட்டு– “ஏங்க சார், இது என்ன சிறுவாணி நீரா?” என்று கேட்டார். “ஆமாம்! சிறுவாணி நீரை எங்கள் வீடுகளுக்கே கொண்டுவந்து இலவசமாகக் கொட்டுகிறார்கள். உமக்கு 
வேண்டுமானாலும்-கிருஷ்ணகிரிக்கே இலவசமாகக் கொட்டச் சொல்கிறேன்” என்றேன்.

“என்னசார், கிண்டல் பண்ணறீங்க! உள்ளதைச் சொல்லுங்க சார்!” என்றார். “உள்ளதைத்தான் சொன்னேன். மாரியாத் தாள் (மழைக்கடவுள்) உங்கள் வீட்டு மேல் கிருஷ்ணகிரியில் பிரதி வருஷமும் தூய காய்ச்சி வடித்த (மழை) நீரைக் கொட்டுவ தில்லையா?” என்றேன்.

அப்போதுதான் அவருக்கு விளங்கியது. என் பாட்டிலில் நான் கொண்டு வந்திருந்தது என் வீட்டுக் கான்ங்க்ரீட் கூரையில் இருந்து நான் அறுவடை செய்து சேமித்து வைத் துள்ள மழைநீர் என்பதைப் புரிந்து கொண்டார். அடுத்த வாரமே என் வீட்டுக்கு வந்து நான் சேமிக்கும் முறையைப் பார்த்து அப்படியே தன் வீட்டில் செய்தார். இன்று அவருக்கு குடிநீர், சமையல் நீர்பிரச்சினை, மழையே பெய்யாத ஆண்டிலும் இல்லை.

தஇமெ: கோட்கல் வான் நோக்கு நிலையம்

அரிசோனா மகாதேவன்  எழுதும்  

                                                      தமிழ் இனி மெல்ல...

                                                              தொடர்கிறது  

அரிசோனா மகாதேவன் 

                        முன் பதிவு நினைவூட்டல் 
வலி பொறுக்காமல் உருண்டு உருண்டு துடிக்கிறான் 
பரட்டையன். அவன் முழங்கைகள், தோள்கள் என்று
 மாறி மாறி முழங்கால்களால் தன் முழுவேகத்தையும் 
காட்டிக் குதிக்கிறான் அழகேசன். பரட்டையனின் 
மூட்டுகள் நொறுங்கும் சத்தம் கேட்கிறது. 
பரட்டையன் மல்லாந்து கிடக்கும் சாக்குமூட்டையாகத் 
துடிக்கிறான்.

அழகேசன் கண்களுக்கு அங்கு பரட்டையன் தென்படவில்லை, 
தன் இனத்தையே “எடுபிடி”யாக அடக்கி வைத்திருக்கும் 
உரிமைக்குடிமக்களின் பிரதிநிதியே தென்படுகிறான். அது 
அவனது வெறியை இன்னும் அதிகமாக்கியதால் 
வெறித்தனமான கோபத்துடன் பரட்டையனின் தொடைகளில்
 குதிக்கிறான். அவன் தொடை எலும்புகள் முறியும் சத்தம்
 கேட்கிறது. பரட்டையன் வீறிடுகிறான்.

“என்னைச் சித்திரவதை செய்யாதே! என் கழுத்தில் 
குதித்து என் கேவலமான வாழ்க்கையை முடித்துவிடு.. நண்பா!”  


ரட்டையனின் உரத்த கேவல் அழகேசனுக்கு அதிர்ச்சியைத் தருகிறது. அவனது வெறி தணிகிறது. அங்கு அடிபட்டு வீரிடும் பரட்டையன் - உரிமை இல்லாத, ஓட்டுரிமை இல்லாத தமிழ்ச் சமுதாயமாக அவன் கண்ணில் காட்சியளிக்கிறான். 

உரிமைக்குடிமக்களின் கொண்டாட்டத்திற்குத் துணை போகும் ஒரு கருவியாகவே தன்னை உணர்கிறான். தன் மீதே அவனுக்குக் கொஞ்சம் வெறுப்பு பிறக்கிறது.

“அழ்க், அழ்க், அழ்க்!” 

கூட்டம் கால்களால் தரையைத் தட்டிப் பேரொலி கிளப்புகிறது. பரட்டையன் தரையில் கிடப்பதும் அதை அழகேசன் பார்த்துக் கொண்டிருப்பதும்தான் கூட்டத்திற்குத் தெரிகிறது. நிறைய நேரம் சண்டை நடக்கும் என்று எதிர்பார்த்த கூட்டத்திற்கு மேடையில் என்ன 
நடக்கிறது என்று சரியாகத் தெரியவில்லை. 

அங்கே ரத்தம் வழியவில்லையே, பெரிதாக ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளவில்லையே, சண்டை ஆரம்பித்து ஓரிரு நிமிஷங்கள் கூட ஆகவில்லையே! மேடையில் என்னதான் நடக்கிறது? பொறுமையில்லாமல் ஊளையிடுகிறது கூட்டம்.

“நண்பா! என்னால் கைகளையோ, கால்களையோ அசைக்க முடியவில்லை. வலி உயிர்போகிறது. எத்தனை நாள் நான் ஆஸ்பத்திரியில் கிடந்து, சிகிச்சை பெற்று மீண்டும் போராட வரமுடியும்? இந்த நாய்ப் பிழைப்பு அலுத்து விட்டது நண்பா! என்னைக் கொன்று விடு நண்பா! உன்னைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்கலாம்னா அதுகூட முடியலையே!” கதறுகிறான் பரட்டையன். அவன் கண்களில் தாரைதாரையாகக் கண்ணீர் வழிகிறது.

மெல்லக்குனிந்து அவனருகில் மண்டியிடுகிறான் அழகேசன். தான் எவ்வளவு பெரிய ஊனத்தைப் பரட்டையனுக்கு விளைவித்திருக்கிறோம் என்று அவனுக்குப் புரிய ஆரம்பிக்கிறது. நுணுக்கமான அழிவுக் கருவியாக மாறி அவனை அழித்திருக்கிறோம். இனி பரட்டையன் எழுந்து நடமாட மாதக்கணக்காகும் என்று எண்ணும் போது அவன் நெஞ்சில் ஏதோ அடைக்கிறது. நண்பா, நண்பா என்று பரட்டையன் கதறுவது இதயத்தைப் பிழிகிறது.

சுரீரென்று அவன் உடம்பில் மின்சாரம் பாய்கிறது. 


நடுவர் அழகேசனை மின் கம்பியினால் தாக்குகிறார். அவன் கோபம் திடுமென்று அவர்மீது பாய்கிறது. அவனது தற்காப்பு அனிச்சைச் செயல் அவரைத் தாக்க விழைகிறது. அவன் தன்மீது பாயப் போவதை உணர்ந்த நடுவர் அவனை மீண்டும் மின்கம்பியினால் தாக்கிவிட்டு அவனுக்கும் தனக்கும் நடுவில் மின்கம்பியை நீட்டுகிறார். மேலே தொடர்ந்து தாக்கும்படி அழகேசனுக்குச் சைகை செய்கிறார். கூட்டமோ அரங்கம் அதிரும் அளவுக்கு ஊளையிடுகிறது.

“முட்டாளே, அவன் இன்னும் நினைவை இழக்கவில்லை, அவனைத் தொடர்ந்து தாக்கிச் சண்டையை முடி!” என்று அவர் இந்தியில் இரைவது அவனுக்குப் புரியாவிட்டாலும், அவர் தன்னை என்ன செய்யச் சொல்கிறார் என்று அழகேசனுக்கு நன்றாகத் தெரிகிறது. 
முடியாது என்று தலையாட்டுகிறான் அவன். 

நடுவர் அவனை மின் கம்பியால் அடித்து அடித்து சண்டையைத் தொடருமாறு பணிக்கிறார்.

 திடுமென்று அழகேசனுக்குள் ஒரு வெறி பொங்குகிறது. தங்களை அலைக்கழிக்கும் உரிமைக்குடி மக்கள் சமுதாயத்தின் மொத்த உருவாக அவன்முன் @தாற்றமளிக்கிறார் அவர். 

“இனிமேல் அவன் அடித்தால் அவன் இறந்துவிடுவானடா மடையா” என்று இரைந்தபடி மின்கம்பியைப் பற்றி அவர் கைகளிலிருந்து பிடுங்குகிறான்.

இந்தச் சண்டையைத் தடுக்க வந்த மற்ற காப்பாளிகளையும் தள்ளிவிட்டு, அவர் காதிலிருக்கும் மொழிமாற்றுக் கருவியைப் பறித்து, தன் காதில் அணிந்து கொண்டு அறிவிப்பாளரின் மேஜைக்கு விரைந்து அவரது மைக்கைப் பிடுங்கிக் கொண்டு உரக்கக் கத்துகிறான்.

“என் எதிராளி கைகள், தோள் மூட்டுகள் உடைந்து, விலா எலும்புகள் பொடியாகி, இரண்டு தொடைகளும் உடைந்து - அசைய முடியாத நொண்டியாகக் கீழே கிடக்கிறான். தன் கழுத்தில் மிதித்து ஒரேயடியாகத் தன்னைக் கொன்றுவிடுமாறு, தன் வாழ்க்கையை முடித்து விடுமாறு, என்னைக் கெஞ்சுகிறான். இப்படி என்னை எதிர்க்க முடியாமல் மரண பயம் இல்லாமல் வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்பும் இவனை எப்படி மீண்டும் அடித்து நினைவிழக்கச் செய்ய என்னால் முடியும்?

“யாராவது ஒருவர் நினைவு இழந்துதான் இந்த சண்டை முடிய வேண்டும் என்றால் - காப்பாளியை மின் கம்பியினால் என்னைத் தாக்கி நினைவு இழக்கச் சொல்லுங்கள். சண்டை முடிந்து நீங்கள் சந்தோஷமாக வீட்டிற்குத் திரும்பச் செல்லலாம்!” 
தன் கையில் இருந்த மைக்கையும், காதில் இருந்த மொழிமாற்றி கருவியையும் தூக்கி எறிகிறான்.

பரட்டையன் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்து கொள்கிறான்.

இராஜராஜ சோழரின் அண்ணனாகிய ஆதித்த கரிகாலனின் சோழன் கையால் மடிந்த வீரபாண்டியன் முதல், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், மற்றும் பாண்டியரின் வஞ்சம் தீர்க்க சோழத் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தைத் தரைமட்டமாக்கி சோழர் பரம்பரையையே நிர்மூலமாக்கிய சடையவர்மன் சுந்தர பாண்டியன், கடைசியில் திருவரங்கக் கோவிலைக் காப்பாற்ற மாலிக் காஃபூரிடம் போரிட்ட சுந்தரபாண்டியன், அவன் தம்பி வீரபாண்டியன் - இவர்களுக்கெல்லாம் மெய்க்காப்பாளர்களாகவும் படைத் தலைவர்களாகவும் நெருங்கியிருந்து - உயிரைக் கொடுத்தாவது மன்னரைக் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் பணியாற்றிய வீரர்களின் வழித் தோன்றலான் அழகேசன்.
அரங்கத்தில் ஒரு மரண அமைதி நிலவுகிறது. பிறகு மெதுவாக ஆரம்பித்த கைதட்டல் அரங்கத்தையே பிளக்கிறது. நடுவர் சண்டை வெற்றி தோல்வியின்று முடிந்ததாக அறிவிக்கிறார்.

                                                        *     * *

                                   கோட்கல் வான் நோக்கு நிலையம்                                 பிரஜோற்பத்தி, ஆனி 30 - ஜூலை 14, 2411

ஹஜாவுக்கு அந்த ஏ.சி. அறையிலும் வியர்த்துக் கொட்டுகிறது. மீண்டும் மீண்டும் தன் முன்னால் தோன்றிய புள்ளி விவரங்களைப் பார்க்கிறாள். இதுவரை சரித்திரத்திலேயே காணமுடியாத சூரியக் கதிர்வீசல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதுவும் சில நாட்களிலேயே அப்படி ஏற்படலாம் என்று அவனது புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. அது மட்டுமல்லாமல், சில நாட்கள் முன்னால் தெரிந்த கோடுகள் இப்பொழுது நேர்கோடுகளாக இல்லாமல் பல விதமாக வளைந்தும், வட்டமாகவும் காணப்படுகின்றன. அவை வேகமாகச் சுற்றி கொண்டு வருகின்றன. அவைகளிலிருந்து ஒருவிதமான ஒளி பெருக்கிடுகிறது. ஸஹஜாவின் தலை சுற்றுகிறது.

அவளும், ஜாத்விக்கும் அனுப்பிய இ-மெயிலுக்கு இன்னும் பதில் வந்து சேரவில்லை. 
ஸாத்விக் பேசியதைக் கேட்டது மிகவும் தப்போ என்று மனது அரித்துப் பிடுங்குகிறது. சோதனையாக இன்று ஸாத்விக் வேலைக்கும் வரவில்லை. நிலைமை தன் கையை மீறிப்போய்விட்டது. இனிமேலும் பொறுத்துக் கொண்டு இருப்பதற்கு நல்லதற்கல்ல என்று அவனுக்குப் படுகிறது.

உடனே தனக்கு மேலே உள்ள நிபுணர்களைக் கலந்து ஆலோசிப்பது என்று முடிவு எடுக்கிறாள். அடுத்தகணம் அவள் காரைகட்டில் உள்ள நிபுணர் சோம்காந்த்தைக் கூப்பிடுகிறாள். மிகமுக்கியம் என்று அவள் அழைத்ததால் உடனே சோம்காந்த்துடன் தொடர்பு கிடைக்கிறது. “ஸஹஜ், என்ன விஷயம்? திடுமென்று ஏன் என்னைக் கூப்பிட்டாய்? இன்னும் ஐந்து நிமிஷத்தில் என் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குப் போக வேண்டும். சீக்கிரம் சொல்லு.” என்று துரிதப் படுத்துகிறார்.

“சோம்த் ஸார், ஐ ஆம் வெரி ஜாரி. ஒரு நிமிஷம்தான் வேணும். இந்த முக்கியமான நிகழ்ச்சி என்னை மிகவும் குழப்புகிறது. சூரியக் கதிர்வீச்சு மிகவும் பலமாக இருக்கப் போகிறது என்று தகவல் கிடைத்திருக்கிறது. அதற்கும் மேலே இந்தக் கோடுகளைப் பாருங்கள். நாலு நாள்கள் முன்னால் இந்தக் கோடுகள் சின்னதாக இருந்தன. இப்ப சுற்றிச் சுற்றி வருகின்றன. தவிரவும் பலவிதமான நிறங்களும் தென்படுகின்றன.” மடமடவென்று விஷயங்களை சோம்காந்த்துக்குத் தெரிவிக்கிறாள் ஸஹஜா.

ஹைஜா காட்டிய படங்களையும் புள்ளி விவரங்களையும் பார்த்துவிட்டு,  “ஓ ஈஸ்வரா!” என்று முனகுகிறார் சோம்காந்த். அவரது முனகல் ஹைஜாவின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. அவள் மனம் ஆயிரம் தடவை ஹாத்விக்கைத் திட்டுகிறது.

சோம்காந்த் “ஓ ஈஸ்வரா!” என்றால் அனைவரும் நடுங்குவார்கள். அது எதிராளிக்கு நல்லதற்கே அல்ல. அவள் பயந்தமாதிரியே பூகம்பமாக வெடிக்கிறார் சோம்காந்த்.

“ஏன் நாலு நாள் ஆறப் போட்டாய்? உனக்கு எதிலாவது சந்தேகமிருந்தாலோ,  அல்லது முக்கியமான விஷயம் என்றாலோ,  எனக்கு உடனே தகவல் சொல்ல வேண்டுமா, இல்லையா? மேலிடத்திற்கு பதில் சொல்லப் போறது நீயா, நானா? சுந்தரேச சாஸ்திரி உன் முதுகுத் தோலையா உரிக்கப் போகிறார்? இப்படிப் பட்ட உதவாக்கரைகளை என் தலையில் ஏன் கட்டுகிறார்களோ தெரியவில்லை!” காரைகட்டில் வெடிக்கும் எரிமலை, கொட்கல்லில் இருக்கும் ஸஹஜாவை உருக்குகிறது.

சுந்தரேச சாஸ்திரி காரைகட் ஆராய்ச்சி மையத்தின் தலைவர். அவரிடம் இந்த விஷயம் போகப் போகிறது என்றால்..

“அட கடவுளே! நான் தொலைந்தேன்! என்னை உயிரோடு கடித்துத் தின்று, எலும்புகளை உமிழ்ந்து விடுவார்கள்” என்று மனதிற்குள் நடுங்குகிறாள் ஸஹஜா.

“வெரி வெரி ஸாரி ஸார். நான் உடனே உங்களிடம் விஷயத்தைச் சொல்லணும்னுதான் சொன்னேன். ஆனால் ஸாத்விக்தான் உங்களுக்குத் தகவல் அனுப்பவிடாமல் நேராக மேலிடத்திற்கு அனுப்பச் சொன்னாள்..” என்று ஆரம்பித்தவளை உடனே இடைமறிக்கிறார் சோம்காந்த்.

“உடனே எமர்ஜென்ஸி ஹெலிகாப்டரில் இங்கே வா. வர்றதுக்கு முன்னாலே எல்லாப் புள்ளி விபரங்களையும் என் கம்ப்யூட்டருக்கு அனுப்பிட்டு, நீயும் கையில் அதோட காப்பியைக் கொண்டு வா. இன்னும் ஒரு மணி நேரத்திலே நீ காரைகட்டில் இருக்கணும். நான் எமர்ஜன்ஸி ஹெலிகாப்டருக்கு அனுமதி உடனே அனுப்புகிறேன். இணைப்பை ராம்ஸுக்கு (கீஅMண்) மாத்து! அந்த திருட்டுப் பயல் ஸாத்விக்கின் குடலை நானே கட்டாயம் உருவி மாலையாகப் போட்டுக் கொள்கிறேன்” என்று பொறிந்து தள்ளுகிறார்
.
அப்படியே செய்துவிட்டு ஒரு நிமிஷம் இடிந்து போய் உட்கார்ந்த ஸஹஜா பரபரப்புடன் ஆவணங்களை சோம்காந்துக்கு அனுப்புகிறாள். அதே சமயம் தன் விரலில் அணிந்திருக்கும் மோதிரத்தைக் கழற்றி கம்ப்யூட்டரின் தட்டில் இருக்கும் ஒரு குச்சியின் மேல் அதைச் சொருகுகிறாள். அந்த மோதிரத்திற்கு நகல் மாற்றப்படுகிறது. பதட்டத்துடன் மோதிரத்தைத் தன் கையில் அணிந்து கொண்டு ஹெலிபாடிற்குப் புறப்படுகிறாள். வெளியில் வீசும் சில்லென்ற காற்றுகூட அவளது வியர்வையைக் குறைக்கவில்லை. சோம்காந்த் இவ்வளவு தூரம் கொதிப்புடன் பேசி அவள் கேட்டதே இல்லை. அப்படியானால் தான் கண்டது என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? யோசிக்க யோசிக்க அவள் மூளைதான் குழம்புகிறது.

                                                            * * *

                                          தஞ்ஜுவுக்கும் மத்ராவுக்கும் நடுவே
                                    பிரஜோற்பத்தி,  ஆனி 30 - ஜூலை 14,   2411

காமாட்சி என்னதான் கவனமாகப் பார்த்துக் கொண்டாலும், ஷிஃபாலிக்கு அவளை நம்பி மூன்று மாதங்கள் நிமிஷாவைத் தனியாக விட்டுச் செல்ல மனம் துணியவில்லை. அவனுக்கும் காமாட்சிக்கும் வேறு ஒரு காவல் துணை வைத்தால் நன்றாக இருக்கும் என்ற நினைப்பு தோன்றுகிறது. எனவே உடனுக்குடனாக இவ்வகைத் துணையாட்களை ஏற்பாடு செய்யும் கம்பெனியுடன் தொடர்பு கொள்கிறாள். மிகவும் நம்பகமான,  மூன்று அல்லது நான்கு மாதங்கள் தன் வீட்டில் இருந்து கவனித்துக் கொள்ளக்கூடிய ஆள் வேண்டும் என்று கேட்கிறாள். தவிர அந்த ஆள் கொஞ்சம் பலசாலியாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறாள். அவனுக்கு உடனேயே பதில் வருகிறது. மத்ராவில் அந்த மாதிரி ஒரு ஆள் இருக்கிறான் என்று.

எப்படியும் தன்னுடைய திட்டத்திற்கு தேர்ந்தெடுக்க வேண்டிய உதவியாளர்கள் மத்ராவில்தான் இருக்கிறார்கள். எனவே, முடிவெடுப்பதற்குள் அவர்களையும் நேரில் சந்தித்தது மாதிரி இருக்கும், அப்படியே,  இந்த ஆளை நேர்முகத் தேர்வும் செய்து விடலாம் என்று தீர்மானிக்கிறாள். உடனே உதவியாளரைக் கூப்பிட்டு மத்ராவுக்குச் செல்லும் விரைவு வண்டியில் டிக்கெட் வாங்கச் சொல்கிறாள். ஆறு மணி நேரத்திற்குள் எல்லா விஷயங்களையும் முடித்துக் கொண்டு திரும்பி வந்து விடலாமே!

இருநூறு கி.மீ வேகத்தில் விரைந்து கொண்டிருக்கும் விரைவு வண்டியில் அமர்ந்தபடி அவள் மனம் தஞ்சைப் பெரிய கோவிலில் நிகழ்ந்த எதிர்பாராத நிகழ்ச்சியை அசை போடுகிறது...

...அந்த எடுபிடி இந்தியில் பேசியதும் அதிர்ந்துதான் போனாள். இந்தி பேசத் தெரிந்தவன் எப்படி எடுபிடியாக இருக்கமுடியும் என்றும் தோன்றியது. எனவே அவனிடம் தொடர்ந்து பேசினாள். ஈஸ்வரனும் தன் கதையைத் தட்டுத் தடுமாறியவாறு,  தனக்குத் தெரிந்த இந்தியில் அவளிடம் சொல்ல ஆரம்பித்தான். 

அவன் பேச ஆரம்பித்த சில நிமிஷங்களுக்குள்ளேயே அவனை விரட்டியபடி ஒரு “காப்பாளி” வந்தாள். ஆனால் ஷிஃபாலியைக் கண்டவுடன் கொஞ்சம் தயங்கினாள்.

“நான் இவனுடன் சிறிது நேரம் பேசி ஆக வேண்டும். இதை நீ தடுத்தால் உன் மீது எடுபிடிச் சட்டத்தை மீறியதாகப் புகார் கொடுப்பேன்” என்று மிரட்டியவுடன் காப்பாளி பயந்து போனாள்.

 ஷிஃபாலியின் கம்பீரமான தோற்றம் அவளைக் கொஞ்சம் மிரளச் செய்தது. ஒரு வேளை புதிதாக நியமிக்கப் பட்ட மேலதிகாரியோ என்று பயப்பட்டாள்.

“சரி, சரி, சீக்கிரம் பேசிவிட்டு இவனை விட்டு விடுங்கள். இவனுக்குத் தலைக்குமேல் வேலை காத்துக் கிடக்கிறது.” என்று öŒõல்லிவிட்டு ஆடிஆடி அங்கிருந்து நகர்ந்து சென்றாள். பத்து நிமிஷங்களில் தன் கதையையும், கல்வெட்டுகள் மீது சாந்து பூசப்படுவதை எதிர்த்துக் குரல் கொடுத்ததால் தன் சலுகைகள் எல்லாவற்றையும் இழந்து, கடைநிலைக்கும் கடைநிலைக்குத் தள்ளப் பட்டதையும் விவரித்தான் ஈஸ்வரன்.

எடுபிடி ஒருவன் தானாக இந்தி கற்றுகொள்வது என்பது இதுவரை சரித்திரத்திலேயே நடக்காத விஷயம். அப்படி இருக்கும் போது, அவனை எடுபிடித் தட்டிலிருந்து உயர்த்தாமல் இப்படிப் பதவி இறக்கம் செய்து விட்டிருப்பது அவளுக்குப் பொறுக்கவில்லை. இப்படி எடுபிடிகளெல்லாம் இந்தி கற்றுக்கொண்டு முன்னேறிவிட்டால் எடுபிடி வேலைகளை யார் செய்வது என்றும் அதே சமயம் அவளுக்குத் தோன்றியது. ஆனாலும் ஈஸ்வரனின் அறிவு ததும்பும் முகம், நிமிஷாவுடன் தான் மகிழ்ச்சியாக நடந்துகொள்ளவேண்டும் என்று சொன்னபோது அவன் முகத்திலிருந்த கனிவு, தன் சீனப் பயணம் இனிது நடக்க அவன் வாழ்த்திய வாழ்த்து அவள் மனதில் அவன்பால் பாசத்தைப் பொங்க வைத்தது. அவனுக்கு உதவி செய்வதாக வாக்களித்து, விவரங்களை வாங்கிக் கொண்டாள்.

தஞ்ஜு கோவில் முனைவருடன் அடுத்த நாள் தொடர்பு கொண்டு தன் செலவில் தஞ்ஜுவிலேயே பெரிய ஹோட்டலில் மதிய உணவு கொள்ள அழைத்தாள். அவள் குரலில் இருந்த குழைவு அவரைச் சம்மதிக்க வைத்தது. அவர் போதும் போதும் என்று சொல்லும்வரை அவரை உணவு உண்ண வைத்தாள்.

தான் எங்கு வேலை பார்க்கிறோம் என்றும், தனக்கு உள்ள செல்வாக்கு பற்றியும் அவ்வப்போது அவருக்குத் தெரிவித்தாள். அவர் நல்ல மனநிலைக்கு வந்தவுடன் மெதுவாக ஈஸ்வரனைப் பற்றி பேச்சுக் கொடுத்தாள். உடனே அவர் முகம் மாறியது.

அவர் முகத்தில் பயம் கலந்த கோபம் தோன்றியது. வக்கில்லாத எடுபிடிக்கு வக்காலத்து வாங்குவதற்கு இப்படி ஒருத்தியா, அதுவும் நல்ல பசையுள்ள, செல்வாக்குள்ள ஒருத்தியா? எடுபிடிகளுக்கு எங்கு போய்ப் புகார் கொடுக்கவேண்டும் என்று தெரியாது. ஆகவேஎடுபிடிகள் விஷயத்தில் உரிமைக்குடிமக்களுக்கு “கொலை செய்துகூட தப்பித்துக்கொள்ளும்” வாய்ப்பு இருந்தது. ஆனால் செல்வாக்குள்ள இவள் தன்னைப்பற்றி புகார் கொடுத்தால், விசாரணை அல்லவா வைத்துவிடுவார்கள்!

என்னதான் எடுபிடிச் சட்டம் மேல்தட்ட மக்களுக்குச் சலுகையை வாரி வழங்கினாலும், எடுபிடிகளின் உரிமைகளைப் பறித்தாலும், அவர்களுடைய அடிப்படை உரிமையை யாரும் பறிக்கமுடியாமல் தடுத்துக் கொண்டுதான் இருந்தது. 

அதுவும் தானாகவே இந்தி கற்றுகொண்ட எடுபிடி என்றால் அவனுக்கு மேலும் பல சலுகைகள் தானாகவே கிடைத்துவிடும். என்னடா கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதை மாதிரி இருக்கிறதே என்று பயப்பட்டார் அவர். தன்னைச் சுதாரித்துக் கொண்டு பிகு செய்து கொள்வது போல நடிக்கத் துவங்கினார்.

“மேடம், தேவபாஷையான சமஸ்கிருதத்தைப் பழித்தான் அவன். அவனுக்கு வக்காலத்து வாங்குகிறீர்களே! உங்களை மாதிரி நாலு பேர் இப்படிச் செய்தால் நமது கலாசாரத்தை இந்த எடுபிடிகள் அழித்து விடுவார்கள். பிறகு இவர்களின் பாஷையைக் கற்று கொள்ளும்படி ஆகிவிடும்!” என்று தன் செய்கை நியாயமானதே என்று கட்சி கட்டினார்.

ஷிபாலி முத்துப் பல் தெரியச் சிரித்தாள். அதில் சொக்கினார் முனைவர்.

“ஸார், உங்கள் பக்கம் உள்ள நியாயம் எனக்கு நன்றாகத் தெரிகிறது. நீங்கள் சொல்வதை நான் நூற்றுக்குநூறு ஒப்புக் கொள்கிறேன். அவன் தேவபாஷையைப் பழித்தது மிகவும் தவறுதான். அதற்காக அவனை மன்னிப்புக் கேட்கச் சொல்கிறேன். அவன் தனது கட்சியைப் பற்றி பேசவேண்டியது தானே தவிர ஸம்ஸ்கிருதத்தைப் பழித்திருக்கக்கூடாது. இருந்தாலும், கடைசி முடிவு உங்களிடம்தானே இருக்கிறது? அவனைக் கடுமையாகத் திட்டிவிட்டு,  உங்களது முடிவை நீங்கள் நிறைவேற்றிவிட வேண்டியதுதானே! அதற்காக முயற்சி எடுத்துக் கொண்டு நம் பாஷையைத் தானாகத் தெரிந்து கொண்டவனுக்குச் சிறிது கருணை நீங்கள் காட்டியிருக்கலாமே!” அவருக்குப் பரிந்து பேசுவது போல ஆரம்பித்து, தன் பக்கத்து வாதத்தை நிலை நிறுத்தினாள்.

அதனால் முனைவர் சிறிது கீழே இறங்கி வந்தார்.

“மேடம், உங்களை மாதிரி காருண்யவாதிகள் இருப்பதால்தான் நாட்டில் சுபிட்சம் நிலவுகிறது. இவ்வளவுதூரம் நீங்கள் எடுத்துச் சொல்வதால் உங்கள் கோரிக்கையை நான் பரிசீலிப்பது பற்றி யோசனை செய்கிறேன்.” என்று நழுவ முயன்றார்.

ஷிஃபாலிக்கா அவரது போக்கு புரியாது? இப்படிப் பட்ட எத்தனை ஆட்களை தன் வேலையில் சந்தித்திருக்கிறாள்? சிரித்துக்கொண்டே மறுத்துத் தலையாட்டினாள். “நை,  நை ஸாப். நான் இன்னும் ஒரு வாரத்தில் சீனா போக வேண்டும். ஆகவே திரும்பத் திரும்ப உங்களது விலைமதிப்பில்லாத நேரத்தை இந்த எடுபிடிக்காக வீணாக்க நான் விரும்பவில்லை. அது உங்களுக்குத் தேவை இல்லாத தலைவலி. அவன் பொறுமை இழந்து உங்கள் மேலிடத்திற்குப் புகார் செய்தால்...”

தன் குடுமி இந்தப் பெண்ணிடம் சரியாகச் சிக்கிவிட்டதை உணர்ந்து கொண்டார் முனைவர்,  “சரியான “வில்லி”தான் இவள்! அவள் சொல்வதைக் கேட்காவிட்டால்,  என்னைப் பற்றி புகார் செய்யப் போவதை எவ்வளவு நாசூக்காகச் சொல்கிறாள்! கேவலம், ஒரு எடுபிடிக்காக அப்பழுக்கில்லாத என் ஆவணத்தில் களங்கம் ஏற்படுத்திக் கொள்வதா?” 

இருந்தாலும் அவள் இன்னும் கொஞ்சம் கெஞ்ச வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது.

“மேடம் எந்த எடுபிடிக்கும் அந்த தைரியம் வராது. இவன் மேல் நான் “காப்பாளி”டம் எத்தனை விதமான புகார் செய்யலாம்? உடனே அவனை உள்ளே போட்டு விடுவார்கள். பின்னால் அவன் எப்படி என்மேல் புகார் செய்ய முடியும்?” என்று ஆழம் பார்த்தார்.

மயிலே, மயிலே இறகு போடு என்றால் வேலை நடக்காது, கொஞ்சம் விரட்டினால்தான் நடக்கும் என்று புரிந்துகொண்ட ஷிஃபாலி. “ஓகே சார், உங்கள் நேரத்தை இனிமேலும் நான் வீணடிக்க விரும்பவில்லை,” என்று எழுந்தாள். 

தான் ஜெயித்துவிட்டோம் என்று கொஞ்சம் இறுமாந்த முனைவருக்கு உடனே அடி விழுந்தது.

“நான் இப்பொழுதே மனிதாபிமான அதிகாரி அலுவலகத்திற்குச் சென்று புகார் கொடுத்து விட்டுப் போகிறேன். இதுவரை நாம் பேசியதும் பதிவாகி இருக்கிறது. நீங்கள் வீண்பழி சுமத்தி ஒருவனின் வாழ்வை வீணாக்கவும் தயாராக இருக்கிறீர்கள் என்று புகார் செய்து விட்டும் போகிறேன். அதற்குப் பிறகு உங்கள் பாடு, அவன் பாடு!
முனைவர் வெலவெலத்துப் போய்விட்டார். 

“இந்தப் பெண்ணிடம் விறைத்துக் கொள்ள முடியாது போலிருக்கிறதே! ஓய்வு பெறுவதற்கு இன்னும் பத்து மாதங்கள்தான் இருக்கின்றன. அதற்குள் புகார், விசாரணை என்று படி ஏறி இறங்க வேண்டுமா? அதுவும் ஒரு எடுபிடிச் சனியனிடம் தகராறு செய்து கொண்டு? எப்படி அந்த எடுபிடி இந்தப் பெண்ணைப் பிடித்தான்” என்று மனதிற்குள் பொறுமினார்.

“எதற்கு மேடம் இந்த அளவுக்குக் கோபப்படுகிறீர்கள்? போயும் போயும் ஒரு எடுபிடிக்காக நாம் இந்த நல்ல நேரத்தில் தகராறு செய்து கொள்ள வேண்டுமா? உங்களுக்காக அந்த நாயை நான் மன்னித்து விட்டுவிடுகிறேன். ஆனால் நீங்கள் சொல்லியபடி அந்த நாய் என்னிடம் மனந்திருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொண்டால் தான் நான் இரக்கம் காட்டமுடியும்.” என்று குழைந்தார்.

அந்த ஆளைப் பார்க்கவே ஷிஃபாலிக்கு ஒருபக்கம் அருவறுப்பாகவும்,  இன்னொரு பக்கம் எரிச்சலாகவும், மற்றொரு பக்கம் பரிதாபமாகவும் இருந்தது. அவள் என்றுமே எடுபிடிகளுக்கு பரிந்து பேசியதில்லை. அவர்கள் தங்களுக்கு பணிபுரிவதற்கு என்றே பிறப்பெடுத்தவர்கள் என்று நம்பி வந்தவள்தான். ஆனாலும் இந்தி தெரிந்திருந்ததால் ஈஸ்வரனுக்கு ஒரு விதிவிலக்கு கொடுத்தாள்.

“சரி சார். நீங்களே இவ்வளவு தூரம் சொல்லும்போது நான் ஏன் உங்களைப் பற்றி புகார் செய்யப் போகிறேன்? நீங்கள் உங்கள் அலுவலகத்திற்கு தகவல் சொல்லுங்கள். நான் அந்த எடுபிடிப் பையனை உங்களிடம் மன்னிப்பு கேட்க அனுப்பி வைக்கிறேன். இன்னும் ஒரு விஷயம். இவள்தான் சீனா போய்விடுவாளே என்று அந்த எடுபிடியைப் பின்னால் அதட்டி உருட்ட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” 

மீண்டும் ஒரு கொக்கியைப் போட்டு அவர் குடுமியைத் தன்கையில் வைத்துக் கொண்டிருப்பதாக மறைமுறைமாக அவரிடம் எச்சரித்ததபடி,  அவர் சொல்வதற்குச் சம்மதம் தெரிவித்தாள்.

அவர் தன் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு ஈஸ்வரனின் பதவி நீக்கத்தை ரத்து செய்தவுடன் ஷிஃபாலி எழுந்து வந்து அவருடன் கைகுலுக்கினாள்..

...“மத்ரா வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் இறங்குவதற்குத் தயார் செய்து கொள்ளுங்கள்!” என்று ஒரு இனிய பெண்குரல் ஷிஃபாலியை நிகழ்காலத்திற்குக் கொணர்கிறது.

Thursday 26 June 2014

நியூஜெர்சியில் (எனது) காரோட்டம்!

அரிசோனா மகாதேவன் 

நியூஜெர்சியில் (எனது) காரோட்டம்! 

அரிசோனாவில் கண்ணை மூடிக்கொண்டு கார் ஓட்டப் பழகிக்கொண்ட எனக்கு – அதாவது, கிழக்கு-மேற்காகவோ, அல்லது தெற்கு-வடக்காகவோ நூல் பிடித்தால் போல் செல்லும் பல தடங்கள் கொண்ட நேர் பாதைகளிலும், பிரீவேக்களிலுமே கார் ஓட்டிப் பழகிக்கொண்ட எனக்கு – என் மகன் வேலை பார்க்கும் நியூ ஜெர்சிக்குச் சென்றதும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு காரோட்டி, திண்டாடித் தெருப் பொறுக்கிய என் நகைச்சுவை அனுபவங்களை உங்களுடன் பகிர்த்து கொள்கிறேன். நியூஜெர்சி வாசகர்கள் என்னை மன்னிப்பார்களாக! அல்லது, “வேணும் கட்டைக்கு வேணும்” என்று சிரிப்பார்களாக!


ஒரு வழியாக, வாடகைக் காரைப் பெற்றுக் கொண்டு, நியூவெர்க் விமான நிலையத்தை விட்டு வெளிவந்தால் மாறி மாறி குழப்புகிறமாதிரி வழிகாட்டிகள்! தவறிப்போய் வேறு ஒரு வழியை எடுத்து விட்டால், உடனே, அடுத்த வெளிவழியில் (exit) வந்து, திரும்பிச் சென்று, சரியான சாலையில் பொய் விட முடியாது. ஐந்தாறு மைல் சென்றால்தான், நாம் வர வேண்டிய சாலைக்கு வரமுடியும்! இல்லாவிட்டால், நியூயார்க் சென்று சுற்றிப்பார்த்து விட்டு மெதுவாக வீடு வந்து சேரலாம்!
                                                                  

உதாரணமாக, என் மகன் இருந்த ஹில்ஸ்பரோவிலிருந்து நியூவெர்க் விமான நிலையம் செல்லவேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள், நியூயார்க் போகும்வழியில்தானே நியூவெர்க் விமான நிலையம் இருக்கிறது என்று நியூயார்க் போகும் சாலையை எடுக்க முடியாது. எடுத்தால் அது எங்கோ சுற்றி நியூயார்க்குக்குக் கொண்டு விட்டுவிடும்! நியூவெர்க் விமான நிலையம் செல்லவே முடியாது!


மோரிஸ்டவுன் என்று மேற்கே செல்லும் வழியை முதலில் எடுத்து, இரண்டு மைல் தூரம் சென்று, அங்கிருந்து நியூயார்க் செல்லும் இன்னொரு வழியை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால், நியூவெர்க் போகாமல் மோரிஸ்டவுனுக்கே சென்று விடுவோம்!


என்ன, தலை சுற்றுகிறதா? படிக்கும் உங்களுக்கே இப்படி இருந்தால், விடிகாலையில், அருணோதயம் கூட வராத இருட்டில், நியூவெர்க் விமான நிலையம் செல்லப் புறப்பட்ட எனக்கு எப்படி இருந்திருக்கும்?

நீங்கள் ஊகித்தது சரிதான்! தப்பான வழியை எடுத்துத் தொலைத்துவிட்டேன்! கார் போகிறது, போகிறது, போய்க்கொண்டே இருக்கிறது! வெளிவழியைக் காணவே முடியவில்லை. கிட்டத்தட்ட ஐந்து மைல் சென்று வெளியேறினால், திரும்பிச்செல்ல உள்வழி (on ramp) இல்லை!
                                                                             

தட்டுத்தடுமாறி, ஒரு பெட்ரோல் பங்க், சாரி, காஸ் ஸ்டேஷனுக்குச் சென்று, வழி விசாரித்துக்கொண்டு திரும்ப சரியான சாலைக்குச் செல்வதற்குள் விழி பிதுங்கிவிட்டது! பீனிக்ஸ் செல்லும் விமானம் தாமதமாகக் கிளம்பியதால் பிழைத்தேன், அதைப் பிடிக்க முடிந்தது!

சும்மா சொல்லக்கூடாது, புத்தம் புதிய பிரீவேக்கள், பளபளக்கும் சாலை விளக்குகள், என்று. பீனிக்சில் என்னைக் கெடுத்துத்தான் வைத்திருந்தார்கள்! அதுவும் டெம்ப்பியில் (Tempe)போக்குவரத்து விளக்குகள் (stop lights), தெருப் பெயருடன் இருக்கும் அழகே தனி! நீங்களே விரும்பினாலும் தொலைந்து போக முடியாது. என் மகன் இருந்த ஹில்ஸ்பரோவில் போக்குவரத்து விளக்குகள் கம்பியில் தொங்கி ஊசலாடிக்கொண்டு இருந்தன! அவை காற்றில் ஆடும் வேகத்தைப் பார்த்தால், பிய்ந்து விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று பயமாகவே இருக்கும்!
                                                                

பீனிக்சில் சாதாரண ரோடுகள் கூட போக இரண்டு, வர இரண்டு என்று நால்வழிப் பாதைகளாகவே இருக்கின்றன. ஆனால், மத்திய நியூஜெர்சியில் பெரிய சாலைகள்கூட போக ஒன்று, வர ஒன்று என்று இருவழிப் பாதைகளாகவே இருக்கின்றன.  ஆனால், ஹில்ஸ்பரோவில் 206 என்ற சாலையில் நெரிசல் நேரத்தில் மாட்டிக்கொண்டால் தொலைந்தோம்! பீனிக்சின் 10, 17, 202, 101 போன்ற பிரீவேக்களின் நெரிசல்கள்கூட  ஒரு நேரிசல்களாகவே தோன்றாது!  என்னை மாதிரி ஒருவர் வழி தெரியாமல் நத்தை போல ஊர்ந்துகொண்டிருப்பார், அவரை முந்திச் செல்ல முடியாமல் ஒரு மாப்பிள்ளை ஊர்வலமே சென்று கொண்டிருக்கும்!

பொதுவாக, இடது பக்கம் திரும்ப வேண்டும் என்றால் இடதுபுறத் தடத்தில்தானே (lane) இருக்கவேண்டும்?  அப்படி நினைத்தால் ஏமாந்துதான் போவீர்கள்! பெரும்பாலான வழிகள் ஜாடிக்காது (jug handle)  இடது திருப்பம் உள்ளவை.  அதாவது, இடது பக்கம் திரும்பவேண்டும் என்றால், வலது பக்கத் தடத்திற்கு வரவேண்டும். நாம் திரும்பவேண்டிய சாலை வருவதற்குச் சற்றுதூரம் முன்னதாக “இடது பக்கத்திருக்குத் திரும்ப” என்று வலது பக்கத்தில் ஒரு அறிவிப்புப் பலகை இருக்கும். அதைப் பார்த்துப் படித்துத் தெரிந்துகொண்டு, வலது பக்கம் திரும்பி, குறுக்குத் தெருவுக்குச் சென்று காத்திருக்க வேண்டும்.  இது விபத்துக்களைத் தடுக்கிறதாம்!
                                                           

சரிதான், இனிமேல் இடது பக்கம் திரும்ப வேண்டுமானால் வலது பக்கம் இருந்து விடலாம் என்று நினைத்தோமானால் வந்தது ஆபத்து! என்னை மாதிரி ஆட்களை — நியூஜெர்சி சாலைகளைப் பழிக்கும் ஆட்களைப் பழி வாங்கவேண்டும் என்றே சில தெருக்களுக்கு சாதரணமான இடது திருப்பம் வைத்திருப்பார்கள்!  இதை எப்படி முன்னுக்கு முன்னதாவே தெரிந்து கொள்வது?  பத்துப் பதினைந்து தடவை திண்டாடினால். தன்னாலேயே தெரிந்துவிடும்!

யாராவது நண்பர்கள் என்னைத் தங்கள் வீட்டிற்கு அழைத்து, அவர்களிடம் நான் வழி கேட்டால், சொல்லத் தடுமாறுவார்கள். நீங்களே வரை படத்தில் பார்த்துக்கொண்டு வந்துவிடுங்களேன் என்று சொல்லிப் போனை வைத்துவிடுவார்கள்!

சரி, பரவாயில்லை, நாமே, கூகுளில் பார்த்துக்கொண்டு கிளம்புவோம் என்று இரவில் மட்டும் கிளம்பவே கூடாது! வழி தேடிக் கண்டுபிடிக்கவே முடியாது! சூழல் உணர்வு (eco-sense)  சற்றுகூட இல்லாமல், பீனிக்சில் இரவைக்கூடப் பகலாக்கும் வண்ணம் மின்விளக்குகள் சாலையில் கண்ணைப் பறிக்கும்,! ஆனால், சூழல் உணர்வு அதிகம் உள்ள நியூஜெர்சியில் அந்தக் கண் கூச்சே இல்லை! இருட்டு என்னைப் பயமுறுத்தியது.  புறநகர் (suburban) சாலைகளில் விளக்கே இல்லை. வீடுகளும் உள்ளடங்கி இருந்ததால், நான் தேடிச் சென்ற வீட்டிக்கு முன்னாலே இருந்தால்கூட என்னால் அதை அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை!

ஜி.பி.எஸ் இருந்தால் ஒருவேளை பிழைத்தாலும் பிழைக்கலாம்.  சில சமயம் ஜி.பி.எஸ்ஸால்கூட நம்மைக் காப்பாற்றமுடியாது! சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.

ஒரே ஒரு கார்தான் இருந்ததால், என் மகனின் காரை நாங்கள் வைத்துக் கொண்டிருந்தோம்! படேல் காஷ் அண்ட் காரியில் காய்கறிகள் வாங்கிக்கொண்டிருந்தபோது எங்கள் மகன் எங்களைக் கூப்பிட்டு, அவனது அலுவலகத்திலிருந்து அழைத்துப்போகச் சொன்னான்.



முன்னதாகவே ஒரு ஜி.பி.எஸ் வாங்கி வைத்துக்கொண்டு இருந்ததால், அதில் என் மகனின் அலுவலக முகவரியை ஏற்றினேன். நாங்கள் இருந்த இடத்திற்கு வடமேற்கில் அவனது அலுவலகம் இருந்த போதிலும், ஜிபிஎஸ் என்னைத் தெற்கே போகுமாறு பணித்தது. அதை நம்பாமல், நான் வடக்குப் பக்கம் செல்ல ஆரம்பித்தது வினையாகப் போய்விட்டது.

திடுமென்று ஜிபிஎஸ் என் மகனின் அலுவலகத்திற்கு நேர் எதிர்த் திசையில் கிழக்குப்பக்கம் செல்லுமாறு வழிகாட்டியது,. ஜிபிஎஸ்சை மனதிற்குள், மனதிற்குள் என்ன மனதிற்குள், வாய்விட்டுத் திட்டிக்கொண்டே நான் செண்டுகொண்டிருந்த வழியில் தொடர்ந்தேன், கிழக்குப் பக்கம் செல்லும் சாலை வரும் என்ற நப்பாசையில்.

நான் என்னதான் அதை உதாசீனப் படுத்தினாலும், அது நான் செல்லும் வழி தப்பு என்றே மனசு சொல்லிக்கொண்டு வந்தது. பனிக்காலமாதலால் இருட்டவேறு ஆரம்பித்துவிட்டது.

கடைசியில் இரண்டு மைல் சென்றதும் இடது பக்கம் திரும்புமாறு என்னைப் பணித்தது அந்த வழிகாட்டி. என்னால் நம்பவே முடியவில்லை! ஏனென்றால் அது காட்டிய திசை கிழக்கு1 என் மகனின் அலுவலகம் இருக்கும் திசை!
ஆனால், அடுத்த கணமே, எனது வியப்பு ஏமாற்றமாக மாறியது!

ஏனென்றால், இடது புறம் திரும்பும் இடம் வந்ததும் அதை அடைத்து ஒரு சுவர் தொடர்ந்து கட்டப் பட்டிருந்தது! வேறு வழியில்லாமல், ஒரு கடையில் காரை நிறுத்தி, வழி கேட்டுக்கொண்டு, என் மகனின் அலுவலகத்திற்கு ஒருவழியாக வந்து சேர்ந்தேன்.

என் மனவருத்தத்தை என் மகனிடம் கொட்டினால், அவன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான். நியூஜெர்சி மாநிலம் ஒரு மாதத்திற்கு முன்னர்தான் அந்த ரோடை அடைத்து விட்டதாம்! அது வழிகாட்டியின் சாப்ட்வேரில் புதுமைப்படுத்தப் படவில்லை.

வழிகாட்டி முதலில் சொல்லியபடி கேட்டிருந்தால் ஒருவேளை சீக்கிரமாக வந்து செர்ந்திருப்பேனோ இல்லை, சுற்றிக்கொண்டிருந்திருப்பேனோ தெரியாது.

எது எப்படி இருந்தாலும் சரி, புதிதாகச் செல்பவர்களுக்கு நியூஜெர்சியில் சரியான இடத்திற்கு, சரியான வழியில், சரியான நேரத்திற்குப் போய்ச்சேர, அங்கு கார் ஓட்ட நிறையப் பொறுமை இருக்கவேண்டும், கார் டாங்க் முழுக்கப் பெட்ரோல் இருக்கவேண்டும், அதிர்ஷ்டமும் அதிகமாகவே இருக்கவேண்டும்! அது முடியாவிட்டால், அந்த ஊர்க்காரர்களைக் கார் ஓட்டச் சொல்லி விட்டு, நிம்மதியாகக் கண்ணை மூடிக்கொண்டு ஒரு தூக்கம் போட்டு எழுந்திருக்கவேண்டும்.

ஒருவேளை அவர்களாலும் குறித்த நேரத்திற்குப் போய்ச்சேர முடியாவிட்டால் நம் மீது பழி விழாது அல்லவா!
அதனால்தான் நிறையப்பேர் நியூஜெர்சியிலிருந்து அரிசோனா வந்து கொண்டிருக்கிறார்கள், என் மகன் உள்பட!

யாரவது நியூஜெர்சிக்காரர்கள் அரிசோனா வந்தால் எனக்கு ஈமெயில் போடுங்கள்! நிம்மதியாக எங்காவது டீ, அல்லது காப்பி குடித்துக்கொண்டு நமது காரோட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வோம்!
[Please see this link:       http://vaiyavanmozhipeyarppugal.blogspot.in/2014/06/blog-post.html]

காளிமைந்தன் கூறுகிறார்:



 மழை நீர் எங்கே  போகிறது?
மழைநீர் கூரைமேலிருந்து பூமியில் விழுந்த உடனே நாம் பயிர்ப் பாதுகாப்பு என்ற பெயரில் பூமியை விஷக்குப்பை மேடையாகி வைத்திருக்கிற  பூச்சிக் கொல்லி மருந்து விஷத்தோடு கலக்கிறது.

.ஃப்ளூரைட் போன்ற உப்புக்களும் இதர உப்புக்களும் கலந்து கடின நீராகிவிடுகிறது. குடிக்க ருசியில்லை

 மழைநீரில் கரைந்த ஃப்ளூரைட் உப்பால்,பல் நிரந்தரமாகக் கறை படிந்திருக்கும்.
                                                            
                   கால் கை எலும்புகள் வளைந்து போகலாம்.
                                                                             
                                                         
மூட்டுக்களில் வலி ஏற்பட்டு படு துன்பத்துக்கு ஆளாகலாம்.
மழை நின்ற மறுநிமிடம் முதல்-பூமிக்குள் சென்ற மழைநீர்,தொடர்ந்து ஆவியாகிக் காற்றில் கலந்து போய்க்கொண்டே இருப்பதால்-ஏராளமான நிலத்துக்குள் சென்ற மழை நீரை இழக்கிறோம்!
இந்த விஷம் மற்றும் உப்புக் கலந்த நீரைக் கிணற்றில் இருந்து அல்லது ஆழ்குழாய் மூலம் எடுத்துக் குடித்தால் புற்று நோய் உள்ளிட்ட பல வித தோய்கள் வருகின்றன.
அமெரிக்க விஞ்ஞானிகள் .ஃப்ளூரைட் அதிகம் கலந்த நீரினால் மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு சிறுவர்களின் புத்தி கூர்மை குன்றுவதாகக் கண்டுபிடித்துள்ளனர்


 இந்த உப்புக்கலந்த நீரில் சோறாக்குவதால் விறகோ-எரிவாயுவோ குறைந்தது 20 சதம் அதிகமாகிறது.சமையலுக்கு நிறைய நேரம் வீணாகிறது.
குடிக்க இந்த நீர் சுவையாக இல்லை. எனவேதான் சின்தெட்டிக் கேன்களில் நீரை வாங்கிக் குடிக்கும் அல்லது வீட்டி லேயே ஆர்ஓ (R.O Reverse Osmosis) செய்து உப்பகற்றிக் குடிக்கும் பழக்கம் ஏற்படுகிறது.


 நாமக்கல் போன்ற நகரங்கள், சேந்தமங்கலம் போன்ற பேரூர்கள் மற்றும் மரூர்ப்பட்டி போன்ற சிற்றூர்களில் கூட வசதி படைத்தவர்கள் அங்கங்கே தங்களுக்குக் குடிக்க உப்புக் கலவாத குடிநீர் கிடைக்கவில்லை என்பதால்-உப்பு நீக்கிய நீரை-மினரல் வாட்டர் என்ற பெயரால்-நைலான் கேன்களில் தமிழக மெங்கும்/நாடெங்கும் வாங்கிக் குடிக்கின்றனர்.

ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து அக்வா கார்டு, அக்வாஃபினா போன்ற மிஷின்களை வாங்கி-அரசு தரும் மான்ய விலை மின்சாரத் துஷ்பிரயோகம் பண்ணி ,ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் செய்து குடிக்கின்றனர். கேன்களில் நீர் விற்கும் நீர்வணிகர்கள் “சுத்திகரிப்பது” வீண் கண்துடைப்பு!

 ஆனால் வணிகர்கள் அப்படி நிலத்தடி நீரை அல்லது ஆற்றோர கிணற்று நீரை உறிஞ்சி அவர்கள் சுத்திகரித்து கேன்களில் விற்பதாகச் சொல்லிக் கொண்டாலும்,அண் மையில் பல கம்பெனிகளின்ஆர்வோ நீர் கேன்ககளில் அசுத்த நோய்க் கிருமிகள் மட்டுமின்றி, வண்டுகள் புழுக்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு,சென்னையைச் சுற்றி உள்ள பல கம்பெனிகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன!

10 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு மினரல் வாட்டர் பாட்டிலில் ஒரு வளர்ந்த வண்டே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு நாமக்கல்லில் கண்டு பிடிக்கப் பட்டு,எனது சகோதர நுகர்வோர் சங்கத் தலைவர் ஒருவரால் வழக்கிடப் பட்டது.
                                                         

 நீர் வணிகர்கள் சங்கம் அமைத்துப் போராடுகிறார்கள். மக்கள் குடிக்க நீர் இன்றி சென்னை, மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட புறநகர் மாவட் டங்களில் அப்படி சப்ளை செய்யும் சில கம்பெனிகள்,தரும் நீர் சுத்தமாக இல்லாமல்-நோய்க்கிருமிகள் உள்ள சங்கதி தெரிந்தபின் ஒரே போராட்டமாக உள்ளது.

காவிரி, பாலாறு, தென்பெண்ணை , ஐயாறு, வைகை, தாமிரபரணி, செய்யாறு அனைத்தும் வறண்டு கிடக்கின்றன. அரசாங்கம் நல்ல குடி நீரை சப்ளை செய்யத் தவறி விட்டதாக கண்டித்து அறிக்கைகள் வெளிவருகின்றன. அவரவர் ஓட்டுப் பிடிக்க இதைச் சொல்கின்றனர்.

 கடவுளே நாட்டை ஆண்டாலும், மழை பொய்த்தால்–நீரை எப்படி மந்திரத்தில் உற்பத்தி பண்ணித் தருவாரா? 

இந்தப்பிரச்சினையைச் சமாளிக்கத்தான் நிலத்தடித் தொட்டிகளில் மழைநீர் சேமித்து வைக்கப்படவேண்டும். இரண்டாண்டு மழை இல்லை என்றாலும் சமாளித்து விடலாம்.

 பெருமுதலாளிகளுக்குத்தான் தங்கள் தொழிற்சாலை களுக்குத் தண்ணீர் உறிஞ்சுவது கடினமாகப் போகும். அவர்கள் ராட்சதப் போர் போட்டு உறிந்துவிடுவதால் விவசாயம் தான் நாசமாகிறது! விவசாயிகள்இதைக் கண்டு கொண்டு நிலத்தில் போர் போட்டு இருக்கிற நீரை உறிஞ்சிவிட  அனுமதிக்காமல் போராட வேண்டும்!

 தத்தம் கூரைமேல் விழும் மழை நீரை,நீர் கசியா நிலத்தடித்தொட்டிகளில் சேமித்து வெளிச்சம் காற்றுப்படாமல் மூடிவிட்டால், இந்த நீர் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெடுவதில்லை. பூச்சி புழு தோன்றுவதில்லை. ஆவியாகிப்போய் குறைவதில்லை. நிலத்தடி நீரின் அனைத்துத் தீமைகளும் பறந்து போகின்றன.

நிலத்தடித் தொட்டிநீரால் விளையும் நன்மைகள் பற்றி காளிமைந்தன் கூறுகிறார்:[அடுத்த பதிவில்]

சினிமா சமூக மாற்றங்களை சாதிக்குமா?

           

       நம்புகிறார்கள் இந்த நண்பர்கள்.
அத்தகைய சினிமா விரும்பிகள் எல்லா மொழி களிலும் எல்லாக் காலத்திலும் இருந்தார்கள்!இப்போதும் இருக்கிறார்கள். தலைகாட்டி விட்டு ஓடிப்போய் விடுகிறார்கள்! சினிமா பிரம்ம ராட்சஸ் ! கொம்பாதி கொம்பர்களை எல்லாம் விழுங்கி ஏப்பம் விட்டு விட்டு "எவண்டா வருவான்?" என்று எதிர்பார்க்கிற அனகோண்டா! நண்பர்கள் துணிந்து வருகிறார்கள் ! தெரியாமலா வருவார்கள்? ஓகே !

முடிந்தால் கை .கொடுப்போம் . இல்லையேல் வாழ்த்துவோம் 
இவர்களது அறிக்கையை வாசித்துப் பாருங்கள்!

பணம் வாப்பீஸ் இல்லை!லாபம்  கியாரண்டி ? நோ! நோ!அப்ப?
ஒரு டிவிடி ப்ரீ! தட்ஸ் ஆல் .படா தில் தோழர்களே ! விஷ் யூ ஆல் தி பெஸ்ட் !

நூல் அறிமுகம் :பூஞ்சிட்டுக் கவிதைகள்

பூஞ்சிட்டுக் கவிதைகள் 

ப்ரீகேஜி குழந்தைகளுக்கும் புதிதைத் தமிழ் கற்போருக்கும் ஏற்றது .

பக்கத்திற்குப் பக்கம் படங்கள் . பாடுவதற்கு ஏற்ற சொல் அமைப்பு. ஆங்கில உலகம் போற்றும் ரைம்ஸ் களுக்கு இணையான சொற்சுவை பொருட்சுவை. 

விற்பனை உரிமை: தாரிணி பதிப்பகம், சென்னை-20, மொபைல் : 9940120341,போன்: 044-24400135

அஜந்தா அதிசயங்களுக்கெல்லாம் அதிசயம்





                          அஜந்தா குகை ஓவியங்கள்

  இந்தியாவின் பாரம்பரிய ஓவியங்களும், கல் சிற்பங்களுக்கும், சிலைகளும் எடுத்துக்காட்டாக இன்றளவிலும் நின்று கொண்டிருப்பது அஜந்தா ஓவியங் களாகும்.7ஆம் நூற்றாண்டில் புத்த மத போதனைகளைத் தழுவி 28 குகை களைக் குடைந்து வரையப்பட்டுள்ள அஜ‌ந்தா குகை ஓவியங்கள் நமது நாட்டின் பெருமைமிக்க பாரம்பரிய சின்னமாகும். 



  பல நூற்றாண்டுகளாக இந்த அஜந்தா குகை ஓவியங்கள் மனிதர்களின் பார்வையில் படாமல் இருந்தன. 1819ஆம் ஆண்டில் அப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களின் வாயிலாகத்தான் இந்த புதையல் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதுதான் பிரிட்டிஷ் படையினர் நமது நாட்டிற்குள் நுழைந்திருந்தனர்.தற்போது உலகறிந்த இடமாக இருக்கும் அஜந்தாவை யுனெஸ்கோ அமைப்பும் உலக புராதான சின்னமாக அறிவித்துள்ளது.



  அஜந்தா ஓவியம் என்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் பர்தாபூர் எனும் ஊரில் உள்ள குகைகளில் இயற்கை முறையில் வரையப்பட்ட ஓவியங்கள்ஆகும். இங்கு தனித்து இருக்கும் கணவாய் ஒன்றில் செங்குத்தாக மிகப்பெரிய பாறை ஒன்றில் இருபத்தொன்பது குகைகள் குடையப்பட்டுள்ளன.இதில் ஐந்து குகைகளில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.இவை கிமு 200 முதல் கிபி 650 வரையான பல்வேறுபட்ட காலப்பகுதியில் வரைந்தவை. பௌத்த மதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தி இந்த ஓவியங்கள் வரையப்பட்டன. இக்குகைகளில் ஓவியங்கள் தரையைத் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. 




  பாறைகளில் மட்டுமல்லாமல், கூரைகளிலும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அஜந்தாகுகை ஓவியங்கள் குகையின் கற்சுவர்மேல் களிமண்ணும் சாணியும் கலந்த கலவை பூசப்பட்டு அதன் மேல் சுண்ணாம்புச்சாந்து பூசப்பட்டு இறுக்கப்பட்ட பரப்பில் பலவண்ணக் கூழாங்கற்களை அரைத்து உருவாக்கப்பட்ட நிறங்களைக்கொண்டு வரையப்பட்டவை. சுண்ணாம்புச்சாந்து இறுகுவதற்குள் வரையப்பட்டுவிடுவதனால் கூழாங்கல்சாந்து உறுதியாகவே ஒட்டிக்கொள்கிறது. இவை தாவர வண்ணங்கள் அல்ல. இயற்கை வண்னங்கள். ஆகவேதான் இரண்டாயிரம் வருடங்களாகியும் வண்ணம் மங்காமலிருக்கின்றன.


  மு‌ம்பை‌யி‌ன் வட‌கிழ‌க்கு‌ப் ப‌க்க‌த்‌தி‌ல் ஹெளர‌ங்காபா‌த்‌தி‌ற்கு அருகே அமை‌ந்து‌ள்ள அஜந்தா மலைப் பகுதியை ஒட்டி ஓடும் வகோரா ஆற்றை குதிரை லாயம் போன்று ஒரு பெரிய கல் தாங்கியிருப்பது அங்கு காணக்கூடிய அதிசயங்களுக்கெல்லாம் மற்றொரு அதிசயமாகும்.


  கி.பி இரண்டாம் நூற்றாண்டில் நாகர் வகுப்பைச் சேர்ந்த கலைஞர்கள் அஜந்தா ஓவியங்கள் பலவற்றை வரைந்தனர். அதன் பின்னர் பல நூற்றாண்டுகள் சிறந்த ஓவியக் கலைஞர்கள் ன்றவில்லை. கி.பி. 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டில் 'புத்தபக்சன்' என்னும் மன்னன் காலத்தில் 'பிம்பி
சாரன்' என்னும் கலைஞன் இக்கலைக்குப் புத்துயிரளித்தான்' என்று தாராநாத் என்னும் அறிஞர் கூறுகிறார்.

  அஜந்தா குகை ஓவியங்கள் பெரும்பாலும் புத்தர் தொடர்பான கதைகளையே கூறுகின்றன. இக்கதைகள் யாவும் புத்த ஜாதகக்கதைகளிலிருந்து எடுக்கப்பட்டவை. அஜந்தா ஓவியங்களில் அகம் தொடர்பான ஓவியங்கள் பல உள்ளன. அவை புத்தர் துறவறம் பூணுவதற்கு முன்னைய வாழ்க்கை நிலையைக் குறிப்பனவாகும் 


  அஜந்தா மனித உருவங்கள் அனைத்தும் உயிரோவியங்களாகவே காணப்படுகின்றன. பெண்களின் உருவங்களே ஓவியன்க்களின் அழகுக்கு அழகு சேர்க்க்கின்றன. பெண் ஓவியங்களே அஜந்தா கலையின் சிறப்பியல்பாகும். பெண்ணின் பல்வேறு மனநிலைகளையும் எண்ணற்ற அழகிய தோற்றங்களையும் ஓவியங்களாகத் தீட்டியுள்ளனர். ஓவியங்களில் பெண்களின் நீள்விழிகள், நுண்ணிடை, மெல்விரல்கள், மகளிரின் கூந்தல் ஒப்பனைகள் முதலியன இந்திய ஓவியக் கலையின் சிறாப்பிற்கு எடுத்துக் காட்டாகும். எனவே அஜந்தா ஓவியங்கள் இந்திய ஓவியங்களின் அடிநிலையாக அமைந்துள்ளன எனக் கலைக்களஞ்சியம் எடுத்துரைக்கிறது 


  அஜந்தா போக வேண்டும் என்று முடிவு செய்து விட்டவர்கள் மறக்காமல் கொண்டு போக வேண்டிய ஒரு பொருள் டார்ச் லைட்.  இந்த டார்ச் லைட், இருண்ட குகைக்குள் இருக்கும் அழகிய சித்திரங்களையும், சிற்பங்களையும் துள்ளியமாகக் காண உதவும்.மேலும், நாம் தனியாக செல்வதைவிட சுற்றுலா வழிகாட்டி ஒருவரை உடன் அழைத்துச் செல்வது..

.
  அஜந்தா குகைகளின் நூறு அடிக்கும் கீழே ஒரு நதி ஓடுகிறது. இத்தகைய இயற்கைச் சூழலால் ஏற்பட்ட காடுகள் இக்குகைகளை மறைத்து விட்டன. கி.பி. 1819 இல் தான் முதன் முதலாக இக்குகைகளும் ஓவியங்களும் ஐரோப்பியர்களால் கண்டறியப்பட்டன. அதன் பிறகு முதன்முதலாக மும்பை ஓவியக்கலாசலை மாணவர்கள் இவ்வோவியங்களை நகலெடுத்தனர். பின்னர் 1912 இல் கர்னல் கோலுபெவ் என்பவர் செம்மையான முறையில் புகைப்படம் எடுத்தார். 


  லேடி ஹெர்ரிங் குஹாமும் என்பவரும் நகல் எடுத்தார். ஐரோப்பியர்கள் முயற்சியால் அஜந்தா குகை ஓவியங்கள் வெளியுலகுக்குத் தெரிய வ்ந்தது. இதற்கு முன்பு வரை இத்தாலிய ஓவியக் கலையே தொன்மை வாய்ந்தது என ஐரோப்பியர்கள் போற்றி வந்தனர். அஜந்தா குகை ஓவியங்களின் மேன்மையைக் கண்ட பின்னர் இத்தாலிய ஓவியக் கலை தோன்றுவதற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்திய ஓவியக் கலை முழு வளர்ச்சி பெற்றிருந்தது உலகுக்கு வெளியாயிற்று .

  அஜந்தாவில் ஐந்து குகைகளில் ஓவியங்கள் இருக்கின்றன . பெரும்பாலான ஓவியங்கள் இன்று சிதைந்த நிலையிலேயே உள்ளன. 1910இல் அஜந்தாவுக்கு வந்த வங்கபாணி ஓவியர்களான தேவேந்திரநாத் தாகூர் போன்றவர்கள் அதை ஓரளவு நன்றாகவே பிரதி எடுத்திருக்கிறார்கள். சுதந்திர இந்தியாவின் ஐம்பதாண்டுக்காலத்தில் ஓவியங்களின் பெரும்பகுதி அழிந்துவிட்டிருக்கிறது. பல புகழ்பெற்ற ஓவியங்களில் சில வண்ணத்தீற்றல்களை மட்டுமே காணமுடிகிறது. சில குகைகளில் ஓவியங்களின் சிதிலங்கள் மட்டுமே உள்ளன. ஆனாலும் புகழ்பெற்ற கரியநிற அழகி, போதிசத்வ வஜ்ரபாணி, போதிசத்வ பத்மபாணி போன்ற ஒவியங்கள் புகழ் பெற்றவை