Sunday 29 June 2014

தஇமெ: கோட்கல் வான் நோக்கு நிலையம்

அரிசோனா மகாதேவன்  எழுதும்  

                                                      தமிழ் இனி மெல்ல...

                                                              தொடர்கிறது  

அரிசோனா மகாதேவன் 

                        முன் பதிவு நினைவூட்டல் 
வலி பொறுக்காமல் உருண்டு உருண்டு துடிக்கிறான் 
பரட்டையன். அவன் முழங்கைகள், தோள்கள் என்று
 மாறி மாறி முழங்கால்களால் தன் முழுவேகத்தையும் 
காட்டிக் குதிக்கிறான் அழகேசன். பரட்டையனின் 
மூட்டுகள் நொறுங்கும் சத்தம் கேட்கிறது. 
பரட்டையன் மல்லாந்து கிடக்கும் சாக்குமூட்டையாகத் 
துடிக்கிறான்.

அழகேசன் கண்களுக்கு அங்கு பரட்டையன் தென்படவில்லை, 
தன் இனத்தையே “எடுபிடி”யாக அடக்கி வைத்திருக்கும் 
உரிமைக்குடிமக்களின் பிரதிநிதியே தென்படுகிறான். அது 
அவனது வெறியை இன்னும் அதிகமாக்கியதால் 
வெறித்தனமான கோபத்துடன் பரட்டையனின் தொடைகளில்
 குதிக்கிறான். அவன் தொடை எலும்புகள் முறியும் சத்தம்
 கேட்கிறது. பரட்டையன் வீறிடுகிறான்.

“என்னைச் சித்திரவதை செய்யாதே! என் கழுத்தில் 
குதித்து என் கேவலமான வாழ்க்கையை முடித்துவிடு.. நண்பா!”  


ரட்டையனின் உரத்த கேவல் அழகேசனுக்கு அதிர்ச்சியைத் தருகிறது. அவனது வெறி தணிகிறது. அங்கு அடிபட்டு வீரிடும் பரட்டையன் - உரிமை இல்லாத, ஓட்டுரிமை இல்லாத தமிழ்ச் சமுதாயமாக அவன் கண்ணில் காட்சியளிக்கிறான். 

உரிமைக்குடிமக்களின் கொண்டாட்டத்திற்குத் துணை போகும் ஒரு கருவியாகவே தன்னை உணர்கிறான். தன் மீதே அவனுக்குக் கொஞ்சம் வெறுப்பு பிறக்கிறது.

“அழ்க், அழ்க், அழ்க்!” 

கூட்டம் கால்களால் தரையைத் தட்டிப் பேரொலி கிளப்புகிறது. பரட்டையன் தரையில் கிடப்பதும் அதை அழகேசன் பார்த்துக் கொண்டிருப்பதும்தான் கூட்டத்திற்குத் தெரிகிறது. நிறைய நேரம் சண்டை நடக்கும் என்று எதிர்பார்த்த கூட்டத்திற்கு மேடையில் என்ன 
நடக்கிறது என்று சரியாகத் தெரியவில்லை. 

அங்கே ரத்தம் வழியவில்லையே, பெரிதாக ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளவில்லையே, சண்டை ஆரம்பித்து ஓரிரு நிமிஷங்கள் கூட ஆகவில்லையே! மேடையில் என்னதான் நடக்கிறது? பொறுமையில்லாமல் ஊளையிடுகிறது கூட்டம்.

“நண்பா! என்னால் கைகளையோ, கால்களையோ அசைக்க முடியவில்லை. வலி உயிர்போகிறது. எத்தனை நாள் நான் ஆஸ்பத்திரியில் கிடந்து, சிகிச்சை பெற்று மீண்டும் போராட வரமுடியும்? இந்த நாய்ப் பிழைப்பு அலுத்து விட்டது நண்பா! என்னைக் கொன்று விடு நண்பா! உன்னைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்கலாம்னா அதுகூட முடியலையே!” கதறுகிறான் பரட்டையன். அவன் கண்களில் தாரைதாரையாகக் கண்ணீர் வழிகிறது.

மெல்லக்குனிந்து அவனருகில் மண்டியிடுகிறான் அழகேசன். தான் எவ்வளவு பெரிய ஊனத்தைப் பரட்டையனுக்கு விளைவித்திருக்கிறோம் என்று அவனுக்குப் புரிய ஆரம்பிக்கிறது. நுணுக்கமான அழிவுக் கருவியாக மாறி அவனை அழித்திருக்கிறோம். இனி பரட்டையன் எழுந்து நடமாட மாதக்கணக்காகும் என்று எண்ணும் போது அவன் நெஞ்சில் ஏதோ அடைக்கிறது. நண்பா, நண்பா என்று பரட்டையன் கதறுவது இதயத்தைப் பிழிகிறது.

சுரீரென்று அவன் உடம்பில் மின்சாரம் பாய்கிறது. 


நடுவர் அழகேசனை மின் கம்பியினால் தாக்குகிறார். அவன் கோபம் திடுமென்று அவர்மீது பாய்கிறது. அவனது தற்காப்பு அனிச்சைச் செயல் அவரைத் தாக்க விழைகிறது. அவன் தன்மீது பாயப் போவதை உணர்ந்த நடுவர் அவனை மீண்டும் மின்கம்பியினால் தாக்கிவிட்டு அவனுக்கும் தனக்கும் நடுவில் மின்கம்பியை நீட்டுகிறார். மேலே தொடர்ந்து தாக்கும்படி அழகேசனுக்குச் சைகை செய்கிறார். கூட்டமோ அரங்கம் அதிரும் அளவுக்கு ஊளையிடுகிறது.

“முட்டாளே, அவன் இன்னும் நினைவை இழக்கவில்லை, அவனைத் தொடர்ந்து தாக்கிச் சண்டையை முடி!” என்று அவர் இந்தியில் இரைவது அவனுக்குப் புரியாவிட்டாலும், அவர் தன்னை என்ன செய்யச் சொல்கிறார் என்று அழகேசனுக்கு நன்றாகத் தெரிகிறது. 
முடியாது என்று தலையாட்டுகிறான் அவன். 

நடுவர் அவனை மின் கம்பியால் அடித்து அடித்து சண்டையைத் தொடருமாறு பணிக்கிறார்.

 திடுமென்று அழகேசனுக்குள் ஒரு வெறி பொங்குகிறது. தங்களை அலைக்கழிக்கும் உரிமைக்குடி மக்கள் சமுதாயத்தின் மொத்த உருவாக அவன்முன் @தாற்றமளிக்கிறார் அவர். 

“இனிமேல் அவன் அடித்தால் அவன் இறந்துவிடுவானடா மடையா” என்று இரைந்தபடி மின்கம்பியைப் பற்றி அவர் கைகளிலிருந்து பிடுங்குகிறான்.

இந்தச் சண்டையைத் தடுக்க வந்த மற்ற காப்பாளிகளையும் தள்ளிவிட்டு, அவர் காதிலிருக்கும் மொழிமாற்றுக் கருவியைப் பறித்து, தன் காதில் அணிந்து கொண்டு அறிவிப்பாளரின் மேஜைக்கு விரைந்து அவரது மைக்கைப் பிடுங்கிக் கொண்டு உரக்கக் கத்துகிறான்.

“என் எதிராளி கைகள், தோள் மூட்டுகள் உடைந்து, விலா எலும்புகள் பொடியாகி, இரண்டு தொடைகளும் உடைந்து - அசைய முடியாத நொண்டியாகக் கீழே கிடக்கிறான். தன் கழுத்தில் மிதித்து ஒரேயடியாகத் தன்னைக் கொன்றுவிடுமாறு, தன் வாழ்க்கையை முடித்து விடுமாறு, என்னைக் கெஞ்சுகிறான். இப்படி என்னை எதிர்க்க முடியாமல் மரண பயம் இல்லாமல் வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்பும் இவனை எப்படி மீண்டும் அடித்து நினைவிழக்கச் செய்ய என்னால் முடியும்?

“யாராவது ஒருவர் நினைவு இழந்துதான் இந்த சண்டை முடிய வேண்டும் என்றால் - காப்பாளியை மின் கம்பியினால் என்னைத் தாக்கி நினைவு இழக்கச் சொல்லுங்கள். சண்டை முடிந்து நீங்கள் சந்தோஷமாக வீட்டிற்குத் திரும்பச் செல்லலாம்!” 
தன் கையில் இருந்த மைக்கையும், காதில் இருந்த மொழிமாற்றி கருவியையும் தூக்கி எறிகிறான்.

பரட்டையன் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்து கொள்கிறான்.

இராஜராஜ சோழரின் அண்ணனாகிய ஆதித்த கரிகாலனின் சோழன் கையால் மடிந்த வீரபாண்டியன் முதல், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், மற்றும் பாண்டியரின் வஞ்சம் தீர்க்க சோழத் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தைத் தரைமட்டமாக்கி சோழர் பரம்பரையையே நிர்மூலமாக்கிய சடையவர்மன் சுந்தர பாண்டியன், கடைசியில் திருவரங்கக் கோவிலைக் காப்பாற்ற மாலிக் காஃபூரிடம் போரிட்ட சுந்தரபாண்டியன், அவன் தம்பி வீரபாண்டியன் - இவர்களுக்கெல்லாம் மெய்க்காப்பாளர்களாகவும் படைத் தலைவர்களாகவும் நெருங்கியிருந்து - உயிரைக் கொடுத்தாவது மன்னரைக் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் பணியாற்றிய வீரர்களின் வழித் தோன்றலான் அழகேசன்.
அரங்கத்தில் ஒரு மரண அமைதி நிலவுகிறது. பிறகு மெதுவாக ஆரம்பித்த கைதட்டல் அரங்கத்தையே பிளக்கிறது. நடுவர் சண்டை வெற்றி தோல்வியின்று முடிந்ததாக அறிவிக்கிறார்.

                                                        *     * *

                                   கோட்கல் வான் நோக்கு நிலையம்                                 பிரஜோற்பத்தி, ஆனி 30 - ஜூலை 14, 2411

ஹஜாவுக்கு அந்த ஏ.சி. அறையிலும் வியர்த்துக் கொட்டுகிறது. மீண்டும் மீண்டும் தன் முன்னால் தோன்றிய புள்ளி விவரங்களைப் பார்க்கிறாள். இதுவரை சரித்திரத்திலேயே காணமுடியாத சூரியக் கதிர்வீசல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதுவும் சில நாட்களிலேயே அப்படி ஏற்படலாம் என்று அவனது புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. அது மட்டுமல்லாமல், சில நாட்கள் முன்னால் தெரிந்த கோடுகள் இப்பொழுது நேர்கோடுகளாக இல்லாமல் பல விதமாக வளைந்தும், வட்டமாகவும் காணப்படுகின்றன. அவை வேகமாகச் சுற்றி கொண்டு வருகின்றன. அவைகளிலிருந்து ஒருவிதமான ஒளி பெருக்கிடுகிறது. ஸஹஜாவின் தலை சுற்றுகிறது.

அவளும், ஜாத்விக்கும் அனுப்பிய இ-மெயிலுக்கு இன்னும் பதில் வந்து சேரவில்லை. 
ஸாத்விக் பேசியதைக் கேட்டது மிகவும் தப்போ என்று மனது அரித்துப் பிடுங்குகிறது. சோதனையாக இன்று ஸாத்விக் வேலைக்கும் வரவில்லை. நிலைமை தன் கையை மீறிப்போய்விட்டது. இனிமேலும் பொறுத்துக் கொண்டு இருப்பதற்கு நல்லதற்கல்ல என்று அவனுக்குப் படுகிறது.

உடனே தனக்கு மேலே உள்ள நிபுணர்களைக் கலந்து ஆலோசிப்பது என்று முடிவு எடுக்கிறாள். அடுத்தகணம் அவள் காரைகட்டில் உள்ள நிபுணர் சோம்காந்த்தைக் கூப்பிடுகிறாள். மிகமுக்கியம் என்று அவள் அழைத்ததால் உடனே சோம்காந்த்துடன் தொடர்பு கிடைக்கிறது. “ஸஹஜ், என்ன விஷயம்? திடுமென்று ஏன் என்னைக் கூப்பிட்டாய்? இன்னும் ஐந்து நிமிஷத்தில் என் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குப் போக வேண்டும். சீக்கிரம் சொல்லு.” என்று துரிதப் படுத்துகிறார்.

“சோம்த் ஸார், ஐ ஆம் வெரி ஜாரி. ஒரு நிமிஷம்தான் வேணும். இந்த முக்கியமான நிகழ்ச்சி என்னை மிகவும் குழப்புகிறது. சூரியக் கதிர்வீச்சு மிகவும் பலமாக இருக்கப் போகிறது என்று தகவல் கிடைத்திருக்கிறது. அதற்கும் மேலே இந்தக் கோடுகளைப் பாருங்கள். நாலு நாள்கள் முன்னால் இந்தக் கோடுகள் சின்னதாக இருந்தன. இப்ப சுற்றிச் சுற்றி வருகின்றன. தவிரவும் பலவிதமான நிறங்களும் தென்படுகின்றன.” மடமடவென்று விஷயங்களை சோம்காந்த்துக்குத் தெரிவிக்கிறாள் ஸஹஜா.

ஹைஜா காட்டிய படங்களையும் புள்ளி விவரங்களையும் பார்த்துவிட்டு,  “ஓ ஈஸ்வரா!” என்று முனகுகிறார் சோம்காந்த். அவரது முனகல் ஹைஜாவின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. அவள் மனம் ஆயிரம் தடவை ஹாத்விக்கைத் திட்டுகிறது.

சோம்காந்த் “ஓ ஈஸ்வரா!” என்றால் அனைவரும் நடுங்குவார்கள். அது எதிராளிக்கு நல்லதற்கே அல்ல. அவள் பயந்தமாதிரியே பூகம்பமாக வெடிக்கிறார் சோம்காந்த்.

“ஏன் நாலு நாள் ஆறப் போட்டாய்? உனக்கு எதிலாவது சந்தேகமிருந்தாலோ,  அல்லது முக்கியமான விஷயம் என்றாலோ,  எனக்கு உடனே தகவல் சொல்ல வேண்டுமா, இல்லையா? மேலிடத்திற்கு பதில் சொல்லப் போறது நீயா, நானா? சுந்தரேச சாஸ்திரி உன் முதுகுத் தோலையா உரிக்கப் போகிறார்? இப்படிப் பட்ட உதவாக்கரைகளை என் தலையில் ஏன் கட்டுகிறார்களோ தெரியவில்லை!” காரைகட்டில் வெடிக்கும் எரிமலை, கொட்கல்லில் இருக்கும் ஸஹஜாவை உருக்குகிறது.

சுந்தரேச சாஸ்திரி காரைகட் ஆராய்ச்சி மையத்தின் தலைவர். அவரிடம் இந்த விஷயம் போகப் போகிறது என்றால்..

“அட கடவுளே! நான் தொலைந்தேன்! என்னை உயிரோடு கடித்துத் தின்று, எலும்புகளை உமிழ்ந்து விடுவார்கள்” என்று மனதிற்குள் நடுங்குகிறாள் ஸஹஜா.

“வெரி வெரி ஸாரி ஸார். நான் உடனே உங்களிடம் விஷயத்தைச் சொல்லணும்னுதான் சொன்னேன். ஆனால் ஸாத்விக்தான் உங்களுக்குத் தகவல் அனுப்பவிடாமல் நேராக மேலிடத்திற்கு அனுப்பச் சொன்னாள்..” என்று ஆரம்பித்தவளை உடனே இடைமறிக்கிறார் சோம்காந்த்.

“உடனே எமர்ஜென்ஸி ஹெலிகாப்டரில் இங்கே வா. வர்றதுக்கு முன்னாலே எல்லாப் புள்ளி விபரங்களையும் என் கம்ப்யூட்டருக்கு அனுப்பிட்டு, நீயும் கையில் அதோட காப்பியைக் கொண்டு வா. இன்னும் ஒரு மணி நேரத்திலே நீ காரைகட்டில் இருக்கணும். நான் எமர்ஜன்ஸி ஹெலிகாப்டருக்கு அனுமதி உடனே அனுப்புகிறேன். இணைப்பை ராம்ஸுக்கு (கீஅMண்) மாத்து! அந்த திருட்டுப் பயல் ஸாத்விக்கின் குடலை நானே கட்டாயம் உருவி மாலையாகப் போட்டுக் கொள்கிறேன்” என்று பொறிந்து தள்ளுகிறார்
.
அப்படியே செய்துவிட்டு ஒரு நிமிஷம் இடிந்து போய் உட்கார்ந்த ஸஹஜா பரபரப்புடன் ஆவணங்களை சோம்காந்துக்கு அனுப்புகிறாள். அதே சமயம் தன் விரலில் அணிந்திருக்கும் மோதிரத்தைக் கழற்றி கம்ப்யூட்டரின் தட்டில் இருக்கும் ஒரு குச்சியின் மேல் அதைச் சொருகுகிறாள். அந்த மோதிரத்திற்கு நகல் மாற்றப்படுகிறது. பதட்டத்துடன் மோதிரத்தைத் தன் கையில் அணிந்து கொண்டு ஹெலிபாடிற்குப் புறப்படுகிறாள். வெளியில் வீசும் சில்லென்ற காற்றுகூட அவளது வியர்வையைக் குறைக்கவில்லை. சோம்காந்த் இவ்வளவு தூரம் கொதிப்புடன் பேசி அவள் கேட்டதே இல்லை. அப்படியானால் தான் கண்டது என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? யோசிக்க யோசிக்க அவள் மூளைதான் குழம்புகிறது.

                                                            * * *

                                          தஞ்ஜுவுக்கும் மத்ராவுக்கும் நடுவே
                                    பிரஜோற்பத்தி,  ஆனி 30 - ஜூலை 14,   2411

காமாட்சி என்னதான் கவனமாகப் பார்த்துக் கொண்டாலும், ஷிஃபாலிக்கு அவளை நம்பி மூன்று மாதங்கள் நிமிஷாவைத் தனியாக விட்டுச் செல்ல மனம் துணியவில்லை. அவனுக்கும் காமாட்சிக்கும் வேறு ஒரு காவல் துணை வைத்தால் நன்றாக இருக்கும் என்ற நினைப்பு தோன்றுகிறது. எனவே உடனுக்குடனாக இவ்வகைத் துணையாட்களை ஏற்பாடு செய்யும் கம்பெனியுடன் தொடர்பு கொள்கிறாள். மிகவும் நம்பகமான,  மூன்று அல்லது நான்கு மாதங்கள் தன் வீட்டில் இருந்து கவனித்துக் கொள்ளக்கூடிய ஆள் வேண்டும் என்று கேட்கிறாள். தவிர அந்த ஆள் கொஞ்சம் பலசாலியாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறாள். அவனுக்கு உடனேயே பதில் வருகிறது. மத்ராவில் அந்த மாதிரி ஒரு ஆள் இருக்கிறான் என்று.

எப்படியும் தன்னுடைய திட்டத்திற்கு தேர்ந்தெடுக்க வேண்டிய உதவியாளர்கள் மத்ராவில்தான் இருக்கிறார்கள். எனவே, முடிவெடுப்பதற்குள் அவர்களையும் நேரில் சந்தித்தது மாதிரி இருக்கும், அப்படியே,  இந்த ஆளை நேர்முகத் தேர்வும் செய்து விடலாம் என்று தீர்மானிக்கிறாள். உடனே உதவியாளரைக் கூப்பிட்டு மத்ராவுக்குச் செல்லும் விரைவு வண்டியில் டிக்கெட் வாங்கச் சொல்கிறாள். ஆறு மணி நேரத்திற்குள் எல்லா விஷயங்களையும் முடித்துக் கொண்டு திரும்பி வந்து விடலாமே!

இருநூறு கி.மீ வேகத்தில் விரைந்து கொண்டிருக்கும் விரைவு வண்டியில் அமர்ந்தபடி அவள் மனம் தஞ்சைப் பெரிய கோவிலில் நிகழ்ந்த எதிர்பாராத நிகழ்ச்சியை அசை போடுகிறது...

...அந்த எடுபிடி இந்தியில் பேசியதும் அதிர்ந்துதான் போனாள். இந்தி பேசத் தெரிந்தவன் எப்படி எடுபிடியாக இருக்கமுடியும் என்றும் தோன்றியது. எனவே அவனிடம் தொடர்ந்து பேசினாள். ஈஸ்வரனும் தன் கதையைத் தட்டுத் தடுமாறியவாறு,  தனக்குத் தெரிந்த இந்தியில் அவளிடம் சொல்ல ஆரம்பித்தான். 

அவன் பேச ஆரம்பித்த சில நிமிஷங்களுக்குள்ளேயே அவனை விரட்டியபடி ஒரு “காப்பாளி” வந்தாள். ஆனால் ஷிஃபாலியைக் கண்டவுடன் கொஞ்சம் தயங்கினாள்.

“நான் இவனுடன் சிறிது நேரம் பேசி ஆக வேண்டும். இதை நீ தடுத்தால் உன் மீது எடுபிடிச் சட்டத்தை மீறியதாகப் புகார் கொடுப்பேன்” என்று மிரட்டியவுடன் காப்பாளி பயந்து போனாள்.

 ஷிஃபாலியின் கம்பீரமான தோற்றம் அவளைக் கொஞ்சம் மிரளச் செய்தது. ஒரு வேளை புதிதாக நியமிக்கப் பட்ட மேலதிகாரியோ என்று பயப்பட்டாள்.

“சரி, சரி, சீக்கிரம் பேசிவிட்டு இவனை விட்டு விடுங்கள். இவனுக்குத் தலைக்குமேல் வேலை காத்துக் கிடக்கிறது.” என்று öŒõல்லிவிட்டு ஆடிஆடி அங்கிருந்து நகர்ந்து சென்றாள். பத்து நிமிஷங்களில் தன் கதையையும், கல்வெட்டுகள் மீது சாந்து பூசப்படுவதை எதிர்த்துக் குரல் கொடுத்ததால் தன் சலுகைகள் எல்லாவற்றையும் இழந்து, கடைநிலைக்கும் கடைநிலைக்குத் தள்ளப் பட்டதையும் விவரித்தான் ஈஸ்வரன்.

எடுபிடி ஒருவன் தானாக இந்தி கற்றுகொள்வது என்பது இதுவரை சரித்திரத்திலேயே நடக்காத விஷயம். அப்படி இருக்கும் போது, அவனை எடுபிடித் தட்டிலிருந்து உயர்த்தாமல் இப்படிப் பதவி இறக்கம் செய்து விட்டிருப்பது அவளுக்குப் பொறுக்கவில்லை. இப்படி எடுபிடிகளெல்லாம் இந்தி கற்றுக்கொண்டு முன்னேறிவிட்டால் எடுபிடி வேலைகளை யார் செய்வது என்றும் அதே சமயம் அவளுக்குத் தோன்றியது. ஆனாலும் ஈஸ்வரனின் அறிவு ததும்பும் முகம், நிமிஷாவுடன் தான் மகிழ்ச்சியாக நடந்துகொள்ளவேண்டும் என்று சொன்னபோது அவன் முகத்திலிருந்த கனிவு, தன் சீனப் பயணம் இனிது நடக்க அவன் வாழ்த்திய வாழ்த்து அவள் மனதில் அவன்பால் பாசத்தைப் பொங்க வைத்தது. அவனுக்கு உதவி செய்வதாக வாக்களித்து, விவரங்களை வாங்கிக் கொண்டாள்.

தஞ்ஜு கோவில் முனைவருடன் அடுத்த நாள் தொடர்பு கொண்டு தன் செலவில் தஞ்ஜுவிலேயே பெரிய ஹோட்டலில் மதிய உணவு கொள்ள அழைத்தாள். அவள் குரலில் இருந்த குழைவு அவரைச் சம்மதிக்க வைத்தது. அவர் போதும் போதும் என்று சொல்லும்வரை அவரை உணவு உண்ண வைத்தாள்.

தான் எங்கு வேலை பார்க்கிறோம் என்றும், தனக்கு உள்ள செல்வாக்கு பற்றியும் அவ்வப்போது அவருக்குத் தெரிவித்தாள். அவர் நல்ல மனநிலைக்கு வந்தவுடன் மெதுவாக ஈஸ்வரனைப் பற்றி பேச்சுக் கொடுத்தாள். உடனே அவர் முகம் மாறியது.

அவர் முகத்தில் பயம் கலந்த கோபம் தோன்றியது. வக்கில்லாத எடுபிடிக்கு வக்காலத்து வாங்குவதற்கு இப்படி ஒருத்தியா, அதுவும் நல்ல பசையுள்ள, செல்வாக்குள்ள ஒருத்தியா? எடுபிடிகளுக்கு எங்கு போய்ப் புகார் கொடுக்கவேண்டும் என்று தெரியாது. ஆகவேஎடுபிடிகள் விஷயத்தில் உரிமைக்குடிமக்களுக்கு “கொலை செய்துகூட தப்பித்துக்கொள்ளும்” வாய்ப்பு இருந்தது. ஆனால் செல்வாக்குள்ள இவள் தன்னைப்பற்றி புகார் கொடுத்தால், விசாரணை அல்லவா வைத்துவிடுவார்கள்!

என்னதான் எடுபிடிச் சட்டம் மேல்தட்ட மக்களுக்குச் சலுகையை வாரி வழங்கினாலும், எடுபிடிகளின் உரிமைகளைப் பறித்தாலும், அவர்களுடைய அடிப்படை உரிமையை யாரும் பறிக்கமுடியாமல் தடுத்துக் கொண்டுதான் இருந்தது. 

அதுவும் தானாகவே இந்தி கற்றுகொண்ட எடுபிடி என்றால் அவனுக்கு மேலும் பல சலுகைகள் தானாகவே கிடைத்துவிடும். என்னடா கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதை மாதிரி இருக்கிறதே என்று பயப்பட்டார் அவர். தன்னைச் சுதாரித்துக் கொண்டு பிகு செய்து கொள்வது போல நடிக்கத் துவங்கினார்.

“மேடம், தேவபாஷையான சமஸ்கிருதத்தைப் பழித்தான் அவன். அவனுக்கு வக்காலத்து வாங்குகிறீர்களே! உங்களை மாதிரி நாலு பேர் இப்படிச் செய்தால் நமது கலாசாரத்தை இந்த எடுபிடிகள் அழித்து விடுவார்கள். பிறகு இவர்களின் பாஷையைக் கற்று கொள்ளும்படி ஆகிவிடும்!” என்று தன் செய்கை நியாயமானதே என்று கட்சி கட்டினார்.

ஷிபாலி முத்துப் பல் தெரியச் சிரித்தாள். அதில் சொக்கினார் முனைவர்.

“ஸார், உங்கள் பக்கம் உள்ள நியாயம் எனக்கு நன்றாகத் தெரிகிறது. நீங்கள் சொல்வதை நான் நூற்றுக்குநூறு ஒப்புக் கொள்கிறேன். அவன் தேவபாஷையைப் பழித்தது மிகவும் தவறுதான். அதற்காக அவனை மன்னிப்புக் கேட்கச் சொல்கிறேன். அவன் தனது கட்சியைப் பற்றி பேசவேண்டியது தானே தவிர ஸம்ஸ்கிருதத்தைப் பழித்திருக்கக்கூடாது. இருந்தாலும், கடைசி முடிவு உங்களிடம்தானே இருக்கிறது? அவனைக் கடுமையாகத் திட்டிவிட்டு,  உங்களது முடிவை நீங்கள் நிறைவேற்றிவிட வேண்டியதுதானே! அதற்காக முயற்சி எடுத்துக் கொண்டு நம் பாஷையைத் தானாகத் தெரிந்து கொண்டவனுக்குச் சிறிது கருணை நீங்கள் காட்டியிருக்கலாமே!” அவருக்குப் பரிந்து பேசுவது போல ஆரம்பித்து, தன் பக்கத்து வாதத்தை நிலை நிறுத்தினாள்.

அதனால் முனைவர் சிறிது கீழே இறங்கி வந்தார்.

“மேடம், உங்களை மாதிரி காருண்யவாதிகள் இருப்பதால்தான் நாட்டில் சுபிட்சம் நிலவுகிறது. இவ்வளவுதூரம் நீங்கள் எடுத்துச் சொல்வதால் உங்கள் கோரிக்கையை நான் பரிசீலிப்பது பற்றி யோசனை செய்கிறேன்.” என்று நழுவ முயன்றார்.

ஷிஃபாலிக்கா அவரது போக்கு புரியாது? இப்படிப் பட்ட எத்தனை ஆட்களை தன் வேலையில் சந்தித்திருக்கிறாள்? சிரித்துக்கொண்டே மறுத்துத் தலையாட்டினாள். “நை,  நை ஸாப். நான் இன்னும் ஒரு வாரத்தில் சீனா போக வேண்டும். ஆகவே திரும்பத் திரும்ப உங்களது விலைமதிப்பில்லாத நேரத்தை இந்த எடுபிடிக்காக வீணாக்க நான் விரும்பவில்லை. அது உங்களுக்குத் தேவை இல்லாத தலைவலி. அவன் பொறுமை இழந்து உங்கள் மேலிடத்திற்குப் புகார் செய்தால்...”

தன் குடுமி இந்தப் பெண்ணிடம் சரியாகச் சிக்கிவிட்டதை உணர்ந்து கொண்டார் முனைவர்,  “சரியான “வில்லி”தான் இவள்! அவள் சொல்வதைக் கேட்காவிட்டால்,  என்னைப் பற்றி புகார் செய்யப் போவதை எவ்வளவு நாசூக்காகச் சொல்கிறாள்! கேவலம், ஒரு எடுபிடிக்காக அப்பழுக்கில்லாத என் ஆவணத்தில் களங்கம் ஏற்படுத்திக் கொள்வதா?” 

இருந்தாலும் அவள் இன்னும் கொஞ்சம் கெஞ்ச வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது.

“மேடம் எந்த எடுபிடிக்கும் அந்த தைரியம் வராது. இவன் மேல் நான் “காப்பாளி”டம் எத்தனை விதமான புகார் செய்யலாம்? உடனே அவனை உள்ளே போட்டு விடுவார்கள். பின்னால் அவன் எப்படி என்மேல் புகார் செய்ய முடியும்?” என்று ஆழம் பார்த்தார்.

மயிலே, மயிலே இறகு போடு என்றால் வேலை நடக்காது, கொஞ்சம் விரட்டினால்தான் நடக்கும் என்று புரிந்துகொண்ட ஷிஃபாலி. “ஓகே சார், உங்கள் நேரத்தை இனிமேலும் நான் வீணடிக்க விரும்பவில்லை,” என்று எழுந்தாள். 

தான் ஜெயித்துவிட்டோம் என்று கொஞ்சம் இறுமாந்த முனைவருக்கு உடனே அடி விழுந்தது.

“நான் இப்பொழுதே மனிதாபிமான அதிகாரி அலுவலகத்திற்குச் சென்று புகார் கொடுத்து விட்டுப் போகிறேன். இதுவரை நாம் பேசியதும் பதிவாகி இருக்கிறது. நீங்கள் வீண்பழி சுமத்தி ஒருவனின் வாழ்வை வீணாக்கவும் தயாராக இருக்கிறீர்கள் என்று புகார் செய்து விட்டும் போகிறேன். அதற்குப் பிறகு உங்கள் பாடு, அவன் பாடு!
முனைவர் வெலவெலத்துப் போய்விட்டார். 

“இந்தப் பெண்ணிடம் விறைத்துக் கொள்ள முடியாது போலிருக்கிறதே! ஓய்வு பெறுவதற்கு இன்னும் பத்து மாதங்கள்தான் இருக்கின்றன. அதற்குள் புகார், விசாரணை என்று படி ஏறி இறங்க வேண்டுமா? அதுவும் ஒரு எடுபிடிச் சனியனிடம் தகராறு செய்து கொண்டு? எப்படி அந்த எடுபிடி இந்தப் பெண்ணைப் பிடித்தான்” என்று மனதிற்குள் பொறுமினார்.

“எதற்கு மேடம் இந்த அளவுக்குக் கோபப்படுகிறீர்கள்? போயும் போயும் ஒரு எடுபிடிக்காக நாம் இந்த நல்ல நேரத்தில் தகராறு செய்து கொள்ள வேண்டுமா? உங்களுக்காக அந்த நாயை நான் மன்னித்து விட்டுவிடுகிறேன். ஆனால் நீங்கள் சொல்லியபடி அந்த நாய் என்னிடம் மனந்திருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொண்டால் தான் நான் இரக்கம் காட்டமுடியும்.” என்று குழைந்தார்.

அந்த ஆளைப் பார்க்கவே ஷிஃபாலிக்கு ஒருபக்கம் அருவறுப்பாகவும்,  இன்னொரு பக்கம் எரிச்சலாகவும், மற்றொரு பக்கம் பரிதாபமாகவும் இருந்தது. அவள் என்றுமே எடுபிடிகளுக்கு பரிந்து பேசியதில்லை. அவர்கள் தங்களுக்கு பணிபுரிவதற்கு என்றே பிறப்பெடுத்தவர்கள் என்று நம்பி வந்தவள்தான். ஆனாலும் இந்தி தெரிந்திருந்ததால் ஈஸ்வரனுக்கு ஒரு விதிவிலக்கு கொடுத்தாள்.

“சரி சார். நீங்களே இவ்வளவு தூரம் சொல்லும்போது நான் ஏன் உங்களைப் பற்றி புகார் செய்யப் போகிறேன்? நீங்கள் உங்கள் அலுவலகத்திற்கு தகவல் சொல்லுங்கள். நான் அந்த எடுபிடிப் பையனை உங்களிடம் மன்னிப்பு கேட்க அனுப்பி வைக்கிறேன். இன்னும் ஒரு விஷயம். இவள்தான் சீனா போய்விடுவாளே என்று அந்த எடுபிடியைப் பின்னால் அதட்டி உருட்ட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” 

மீண்டும் ஒரு கொக்கியைப் போட்டு அவர் குடுமியைத் தன்கையில் வைத்துக் கொண்டிருப்பதாக மறைமுறைமாக அவரிடம் எச்சரித்ததபடி,  அவர் சொல்வதற்குச் சம்மதம் தெரிவித்தாள்.

அவர் தன் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு ஈஸ்வரனின் பதவி நீக்கத்தை ரத்து செய்தவுடன் ஷிஃபாலி எழுந்து வந்து அவருடன் கைகுலுக்கினாள்..

...“மத்ரா வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் இறங்குவதற்குத் தயார் செய்து கொள்ளுங்கள்!” என்று ஒரு இனிய பெண்குரல் ஷிஃபாலியை நிகழ்காலத்திற்குக் கொணர்கிறது.

No comments:

Post a Comment