Sunday 22 June 2014

சூரியக் கதிர்வீசல் திடும்னு அதிகமாகி இருக்கு

                           தமிழ் இனி மெல்ல  

                                                அரிசோனா மகாதேவன்                                                    
                                                   

......தொடர்கிறது

[சென்ற பதிவின் முடிவு]
ஸம்ஸ்கிருதத்தை அவமதித்ததற்காக நான் உன்னைப் பதவி இறக்கம் செய்து மீண்டும் கடைநிலை ஊழியன் ஆக்குகிறேன். இருப்பதிலேயே கீழ்த்தரமான எடுபிடி வேலைதான் நீ செய்ய வேண்டும். வெளியே போ.” 

தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்து அவன் கன்னங்களில் மாறிமாறி அறைந்து விட்டார்

...இந்தச் சத்தத்தைக் கேட்ட அவரது உதவியாளர் உள்ளே ஓடி வந்தாள்.

“இந்த நாயைப் பதவி இறக்கம் செய்து விட்டேன். இனி இவன் எச்சில் தட்டு கழுவும் வேலைதான் செய்ய வேண்டும். வாழ்நாளுக்கும் இனி இவனுக்குப் பதவி உயர்வு கிடையாது என்று பதிந்து கொள். இவனை இனிமேல் “கார்டு”கள் தனிப்பட்ட முறையில் கண்காணிக்க வேண்டும். இனி இவன் இந்தி பேசினால் இவன் உரிமைகள் பறிக்கப்பட வேண்டும். இவனது வசதியான குடியிருப்பைப் பறித்து கடைநிலை ஊழியனுக்கான குடியிருப்புக்கு மாற்று.” என்று உதவியாளருக்கு உத்தரவிட்டார்.

“ஐயா, இனி எனக்கு இது தேவையில்லை.” என்று தமிழில் பேசிவிட்டு, தன் காதிலிருந்த மொழிமாற்று கருவியைக் கழட்டி, அவரது மேஜையில் பணிவுடன் வைத்துவிட்டுத் திரும்பினான் ஈஸ்வரன். 

அவரது கோபம் இன்னும் அதிகமாகியது. ஏதேதோ கெட்டவார்த்தை சொல்லி அவனைத் திட்டிக்கொண்டு அவன் முதுகில் எட்டி உதைத்தார். எடுபிடி என்பதால் அவனுக்கு உரிமைகளும் இல்லை. அவன் உரிமைக்காக யாரும் பரிந்தும் பேசமாட்டார்கள். எனவே, இந்த அநியாயத்தை மனச்சலனம் துளிகூட இன்றி அவரது உதவியாளர் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கீழே விழுந்த ஈஸ்வரனுக்கு மூக்கில் அடிபட்டு ரத்தம் ஒழுகித் தரையில் கொட்டியது. தன் அலுவலக அறை ரத்தக் கறை படுவதைக் கண்டு பொருமிய முனைவர், “ஏ குட்டிச் சாத்தானே! உன் எடுபிடி ரத்தம் இந்த உயர்ந்த இடத்தில் பட்டு அசுத்தப் படுத்திவிட்டதே! இதை நன்றாகத் துடைத்து விட்டுப் போ!” என்று கத்தினார். 

பதிலே பேசாமல் அவர் சொன்னதைச் செய்தான் ஈஸ்வரன்.

...ஒரு பெருமூச்சு வெளிப்படுகிறது அவன் நெஞ்சிலிருந்து...

...அவனுக்கு நேர்ந்ததைக் கண்டு துடித்துவிட்டாள் அவனது தாய்.

 “ஏண்டா மகனே! ஏழைசொல் அம்பலம் ஏறுமா? உனக்கு ஏண்டா இந்த வேலை? உனக்கு அவங்க பாஷை தெரிஞ்சதுனாலே நல்லது நடக்கும்னா ஏண்டா அதை விட்டுட்டு நாயடி படணும்? இப்படியா உன் வாழ்க்கையைக் கெடுத்துப்பே?” என்று கண்ணீரும் கம்பலையுமாகப் புலம்பினாள்.

ஈஸ்வரனின் தந்தை சங்கரன், “பெரியநாயகி, இது என்ன பேச்சு? நம்மை நம் நாட்டிலேயே எடுபிடி ஆக்கினவங்களுக்கு அடிவருடி ஆகணும்னா சொல்றே? இப்படி எல்லாரும் நினைச்சதுனாலதானே நம்ம மொழிக்கு இந்த நிலைமை வந்து சேந்துது?  இந்த நாட்டைக் கட்டி ஆண்டவங்க நாம. இப்ப நம்ம நாட்டிலேயே எடுபிடி ஆயிட்டோம். எதுனாலே? உம் மாதிரி எல்லாரும் உரிமைக்கு குரல் கொடுக்காம பணம், வசதிக்கு பின்னால போனதுனாலேதான். ஏதோ விடாப்பிடியா நம்ம மொழியைப் பேசி வர்றது மட்டுமில்லாம அதை எழுதப் படிக்கவும் தெரிஞ்சு வச்சுக்கிட்டுருக்கோம். அதையும் விட்டுப்புட்டு ஒரேயடியாகத் தலை முழுகிடுன்னு சொல்லறியா?” என்று தன் மனைவியைக் கடிந்து கொண்டார்.

ராஜராஜசோழச் சக்கரவர்த்தியின் அரசகுரு கருவூர்த் தேவரின் தங்கை வழித்தோன்றல்கள் அவர்கள் என்பது தெரிந்திருக்காவிட்டாலும் தமிழ் மீது அளவிலாப் பக்தியும் காதலும் கொண்ட அவரது ரத்தம் அவர் உடலிலும், ஈஸ்வரன் உடலிலும் ஒரு துளியாவது ஓடிக் கொண்டுதானே இருக்கிறது? எனவே, தமிழ் மீது இருக்கும் ஈர்ப்பு அவர்களுக்கு எப்படிக் குறையும்?

தந்தையின் துடிப்பு, தவிப்பு ஈஸ்வரனுக்கும் நன்றாகப் புரிந்துதான் இருந்தது. தனக்கு ஏற்பட்ட அவநிலை அவர் மனதை எந்த அளவுக்கு பாதித்து இருக்கும் என்றும் அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது. ஆயினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன் தாயின் மனநிலை தவறு என்று எடுத்துரைக்க அவருக்கு எத்தனை பக்குவம் இருக்கவேண்டும் என்பதைப் பார்த்துப் பெருமை கொண்டான்.

“அப்பா, இவர்கள் என் உடலை வருத்தியிருக்கலாம். என் மனம் என்றும் உறுதியாகத்தான் இருக்கும். நம் தமிழுக்காக உரிமைக் குரல் கொடுத்தேன் என்ற மன நிறைவு இருக்கிறதே, அதை யாராலும் குறைக்கமுடியாது! அம்மா, எனக்காகக் கலங்காதீங்க அம்மா. நம்ம நாட்டிலேயே இப்படி வாழற வாழ்வும் ஒரு வாழ்வா அம்மா? பணம், வசதி கிடைக்கும்னு உன்னை விட்டுட்டு வேற ஒருத்தியை அம்மான்னு கூப்பிட்டு அவ பின்னால நான் போனா நீ எப்படி மனசு வருத்தப்படுவே? நம்ம தமிழை விட்டுட்டு, அதை மறந்து நாமும் மத்தவங்க மாதிரி மாறினா அது நாம தமிழுக்குச் செய்யற துரோகம் இல்லையா அம்மா?” என்று பெரியநாயகியைச் சமாதானப் படுத்த முயன்றான் ஈஸ்வரன்.

“நீங்க ரெண்டு பேரும் சொல்றது எனக்குப் புரியாம இல்லைடா, நான் பெத்த ராசா. ஆனாலும் இப்படி நீ மூக்கை உடைச்சுக்கிட்டு, கண்டவன் கால்ல உதையை வாங்கிட்டு, எல்லாத்தையும் இழந்து வந்து நிக்கறதப் பாத்தா பெத்த வயறு எரியாதாப்பா, ராசா?” என்று அங்கலாய்க்கிறாள் பெரியநாயகி.

“இப்ப ரொம்ப ராஜாமாதிரியா வாழறோம் அம்மா? விட்டுத்தள்ளு. நமக்கு ஒரு நல்ல நிலைமை வராமலா போகும்?” என்று அவளைச் சமாதானப் படுத்தினான் ஈஸ்வரன். 

அந்த நிலைமை விரைவிலேயே எதிர்பாராத அதிர்ச்சியுடன் வரத்தான் போகிறது என்று யாருக்குமே தெரிந்திருக்க நியாயம் இல்லைதான்...

...மனது ஒருமாதம் முன்பு நடந்ததை அசை போடப்போட, எச்சில் தட்டுகளை கழுவும் இயந்திரத்தில் அடுக்கிவைக்கிறான் ஈஸ்வரன்.

                                                                         * * *
                                                              Highlight 

                                       ஸஹஜாவுக்கு ஸாத்விக்கின் பேச்சு அவ்வளவு 
                                      சமாதானமாகப் படவில்லை. தான் பார்த்தது 
                                      தங்களுக்கு அப்பாற்பட்ட விஷயம் என்றும், 
                                     நிபுணர்களிடம் தெரிவிப்பதுதான் சரி என்றும் 
                                     அவளது உள்மனது கூறுகிறது. மேலிடத்திலிருந்து 
                                      உடனே பதில் வராது. மேலும் நிபுணர்களுக்கு 
                                     இதை ஏன் தெரிவிக்கவில்லை என்று கேள்வி 
                                     வந்தால் என்ன பதில் சொல்லமுடியும்?
                                     ஒருக்கால் இது ஒன்றுக்கும் உதவாத நிகழ்ச்சியாக
                                      இருந்து விட்டால்? ..

                                 கொட்கல் விண் நோக்கு நிலையம்

                                       பிரஜோற்பத்தி, ஆனி 24 - ஜூலை 10, 2411

கண்களைக் கசக்கிக் கொண்டு கணிணியில் தெரிந்த விவரங்களைப் பார்க்கிறாள் ஸஹஜா. இது உண்மையாக இருக்க முடியுமா என்ற கேள்வி அவனுக்குள் எழுகிறது. உடன் வேலை செய்யும் ஸாத்விக்கை அழைக்கிறாள்.
“என்ன ஸஹஜ், என்ன வேணும்? ஒரே பரபரப்பாக இருக்கியே?” என்றவாறு அவள் அருகில் வருகிறான் ஸாத்விக்.

“ஸாத்வ், இந்த டேட்டாவைப் பார். ஒரே குழப்பமாக இருக்கு. சூரியக் கதிர்வீசல் (solar flares) திடும்னு அதிகமாகி இருக்கு. இது தவிர, சூரியன் பின்னாலேந்து ஏதோ கோடு கோடாகத் தெரிகிறதே, அது என்ன? அது சூரியனிடமிருந்து வருவதாகத் தெரியவில்லை. கொஞ்சம் பாரேன்...” என்று கணிணியில் தெரிந்த புள்ளிவிபரக் காட்சியின் ஒரு பகுதியைக் காட்டுகிறாள் ஹைஜா.

“ம்,” என்று பேனாவை வாயில் கடித்தபடியே உற்று நோக்குகிறான் ஸாத்விக். அவன் நெற்றியில் கோடுகள் கீழும் மேலும் எழுந்து வளைகின்றன. பேனாவால் உச்சி மண்டையில் இரண்டு தட்டுத் தட்டிக் கொள்கிறான்

. “ஸஹஜ், இரு, இந்தக் கோடுகள் நிஜமா, இல்லே ஸ்டாடிக்கா (static)  என்று சரி பார்த்துடறேன்.” என்று கணிணியில் இணைத்திருந்த ஒரு கருவியைக் காதில் மாட்டிக் கொள்கிறான்.

அது ஒரு மூக்குக் கண்ணாடியை ஒத்திருக்கிறது. அதிலிருந்து ஒரு சிறிய குழல் அவன் வாய் வரை வந்து தொங்குகிறது. வலது காதுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பொத்தானைத் தட்டி, கையில் இருந்த பேனாவால் ஏதேதோ சைகை செய்கிறான். அவர்களுக்கு முன்னால் ஒரு ஹோலோ கிராம் விரிகிறது. அதில் உள்ள கோடுகள் சூரியனுக்குப் பின்னால் இருக்கின்றன. பேனாவினால் மீண்டும் சைகை செய்கிறான். ஆனாலும் கோடுகள் விரிவடையவில்லை. ஆனால், அவைகள் கொஞ்சம் அசைவது போலத் தோன்றுகிறது.

“ஸ்டாடிக் என்றும் சொல்ல முடியவில்லை. இல்லை என்றும் சொல்ல முடியவில்லை...” என்று இழுத்தவன், மீண்டும் பேனாவினால் சைகை செய்கிறான். இருந்தபோதிலும் கோடுகள் விரிவடையவில்லை. அசைவுகள்தான் தெரிகின்றன. “இது என்னை மீறிய ஃபினாமினன் (நிகழ்ச்சி) ஸஹஜ். மேலிடத்திற்குத்தான் தெரியப்படுத்த வேண்டும்.”

“ஸாத்வ், எக்ஸ்பர்ட்ஸ்களிடம் தெரியப்படுத்தாமல் மேலிடத்திற்கு விஷயத்தைக் கொண்டுபோக வேண்டுமா? மேலிடத்தில் மேற்கொண்டு கேள்வி கேட்டால் என்ன செய்வது?” என்று இழுக்கிறாள்.

“அப்பொழுது எக்ஸ்பர்ட்ஸ்களிடம் எடுத்துக்கொண்டு போவோம். இது பெரிய நிகழ்ச்சியாக இருந்தால் நமக்குத்தானே பேர் கிடைக்கும்!” என்று சாதுர்யமாகப் பேசுகிறான் ஸாத்விக். “மேலிடத்திலிருந்து பதில் வருவதற்குள் இதற்கு விடை கிடைத்து விட்டால் நமக்குப் பதவி உயர்வு கிடைத்தாலும் கிடைக்கலாமல்லவா?”

ஸஹஜாவுக்கு ஸாத்விக்கின் பேச்சு அவ்வளவு சமாதானமாகப் படவில்லை. தான் பார்த்தது தங்களுக்கு அப்பாற்பட்ட விஷயம் என்றும், நிபுணர்களிடம் தெரிவிப்பதுதான் சரி என்றும் அவளது உள்மனது கூறுகிறது. மேலிடத்திலிருந்து உடனே பதில் வராது. மேலும் நிபுணர்களுக்கு இதை ஏன் தெரிவிக்கவில்லை என்று கேள்வி வந்தால் என்ன பதில் சொல்லமுடியும்?

ஒருக்கால் இது ஒன்றுக்கும் உதவாத நிகழ்ச்சியாக இருந்து விட்டால்? 

எது எப்படி இருந்தாலும் இந்தக் கோடுகளைத் தொடர்ந்து கவனித்து வரலாம் என்று முடிவு செய்துவிட்டு, அரைகுறை மனத்துடன் ஸாத்விக்குக்கு சம்மதம் தெரிவிக்கிறாள்.

இந்த உரையாடல் “கொடைக்கானல்” என்று அழைக்கப்பட்ட “கொட்கல்” வான ஆய்வு தொலைநோக்கிக் கூடத்தில் நடைபெறுகிறது. தென் பாரதத்தின் தலைமை வானஆராய்ச்சி மையம் “காரைகட்” (இருபதாம் நூற்றாண்டுக் காரைக்குடி)டில் மிகப் பெரிதாக நிறுவப்பட்டிருக்கிறது. அங்குதான் ஸாத்விக் குறிப்பிட்ட மேலிடம் இருக்கிறது.

கிட்டத்தட்ட எண்ணூறு ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டிருக்கும் அந்த மையத்திற்கு உலகத்தைச் சுற்றிவரும் ஏராளமான செயற்கைக் கோள்களில் இருந்து தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இது தவிர பாரதத்தில் பல இடங்களில் மலை உச்சிகளில் நிறுவப்பட்டிருக்கும் தொலைநோக்கிக் கூடங்கள் காரைகட் மையத்திற்கு தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐநூறு நிபுணர்கள், ஐயாயிரத்து அறுநூற்றுக்கும் மேற்பட்ட உதவியாளர்கள், நூற்றைம்பது மேலதிகாரிகள், இவர்களுக்கு உதவி செய்யும் “எடுபிடிகள்” என்று நிறையப் பேர் அங்கு பணிபுரிகிறார்கள். உலகத்திலேயே தலைசிறந்த வானஆராய்ச்சி மையமாக அது திகழ்கிறது.

இந்த மையத்திலிருக்கும் ஒரு மேலதிகாரியிடம்தான் ஸஹஜாவும், ஸாத்விக்கும் தாங்கள் பார்த்த கோடுகளைப் பற்றித் தெரிவிக்கத் திட்டம் தீட்டி விபரம் அனுப்பியிருக்கின்றனர். பொதுவாக “முக்கியம்” என்று குறியிட்டு அனுப்பியிருந்தால் அவருக்கு உடனே விஷயம் போயிருக்கும். ஆனால் “பார்வைக்கு மட்டுமே” என்று குறியிட்டு அனுப்பியதால் அவரே வந்து நேரில் பார்க்கும்வரை அவரது அலுவலகத்தில் அந்த கணிணி அஞ்சல் காத்துக் கிடக்கிறது.
[தொடரும்]

No comments:

Post a Comment