Tuesday 7 February 2017

மணல்வெளி மான்கள் -3

மணல்வெளி மான்கள் -3
---------------------------------------
கையில் தம்ளரோடு ஆதி திரும்புவதைக் கண்டதும் மனசுக்குள் யாரோடு நாம் சண்டை போடுகிறோம் என்று விழிப்பு வந்தது. யாரிடமுமில்லை. சொந்த ஊர் என்பதால் மட்டும் சொந்தம் வந்து விடாது.
சொந்த ஊர் இல்லாததால் அது போய் விடாது.
ஆதி தம்ளரைக் கழுவிக் கொண்டு வந்திருந்தான்.
அவன் மிதமான உயரம். சிரிக்கும் போது ஒரு பேதைமை. உழைக்கும்போது ஒரு மூர்ச்சனை. ஆதிக்கு இது சொந்த ஊர். காலின் சக்கரம் சென்னை, பம்பாய், தில்லி என்று திரிந்து சுற்றிவிட்டு இப்போது துபாய்போக துடிக்கிறது.
அவன் கையிலிருந்த கூழை வாங்கி ஒரு மிடறு குடித்தான்.
ஆலிலையில் எலுமிச்சையளவு புளியும் வெங்காயமும் வைத்து அரைத்த துவையல்.
“இதைத் தொட்டுக்கோ தம்பி...”
கூழில் மிதமான உப்பு. லேசாக மோர் விட்டிருந்தாள் மகாலட்சுமி. துவையல் நாவில் ஊறிய நீரில் ஐக்கியமாகி, சுகம் மண்டையைத் தொட்டது .
“அற்புதம் ஆதி!”
“சும்மானாச்சும் சொல்லாத தம்பீ!”
எளிமையான சொல் , எளிமைதான் எளிமையானதே என்று உணர்ந்திருப்பதால் அது எத்தனை சத்தியம்!
“இந்த ஊரை விட்டுட்டு, இந்த ஆத்தோர நெலத்தை விட்டுட்டு, இந்தக் கூழை விட்டுட்டு, ஏன் எங்கேயோ பறந்து போயிடணும்னு துடிக்கிறே ஆதி?”
அவன் வாயைத் துடைத்துக் கொண்டான். ஏதோ தவறு நேர்ந்து, அதற்கு நீதி உபதேசம் கேட்கிற பாவனையில் ஆதியின் முகம் பவ்யமாயிற்று.
“இதுக்கு மேல நிம்மதியும், திருப்தியும் வெளியே கிடைக்கும்னா நினைக்கிறே?”
ஆதி அவனையே ஒரு முறை கண் சிமிட்டாமல் பார்த்தான். பிறகு தலைகுனிந்து இன்னொரு தம்ளர் கூழ் வார்த்தான்.
“அப்படியில்லே தம்பி...” சொல்லிக் கொண்டே தம்ளரை நீட்டினான்.
கௌதம் வாங்கிக் கொண்டான்.
“நீ பட்டம் வாங்கினே. வேலை கிடைக்கலேன்னு ரோதனை கொட்டிக்காம,பொலம்ல் அலம்பல் இல்லாமே தெரிஞ்ச வேலைகளைச் செஞ்சு காலம் தள்றே. தெம்பா இருக்கே. மனசைச் சஞ்சலப்பட விடாமே கட்டுலே நிக்கிறே.”
“இதெல்லாம் எதுக்கு இப்போ? காதுக்குப் பூ சுத்தறியா?”
“அட நீ ஒண்ணு! உள்ளதுதானப்பா.”
“இப்ப நான் சொல்லட்டா?”
“சொல்லு.”
“எனக்குக் கட்டும் இல்லே. கத்தரிக்காயும் இல்லை. வேலைக்கு எழுதிப் போடறேன். வர்றதில்லை. வந்து தான் எதுவும் ரொம்பணும்னு விதியில்லே. அப்பா பென்ஷன் வந்துட்டிருக்கு. போன வருஷம் ஊர்ல புஞ்சை மோட்டிலே ரெண்டு புட்டிக் கடலைக்காய் வந்தது. கைச்செலவுக்கு அவருக்குப் போதும். படிக்க மட்டும் தானா செஞ்சேன்? எத்தனையோ கைத்தொழில் கத்துகிட்டேன் அதுங்க எல்லாம் எங்கே போறது? பழங்கடத்துப் பானையிலே போட்டு மூடியா வக்கச் சொல்றே?”
ஆதி துவையலை வழித்த விரலைப் பார்த்துக் கொண்டே கேட்டான்;
“வெள்ளிக்கிளமை சினிமாக் கொட்டாயிலே பாதில மிஷின் ரிப்பேர்ன்னு அவுட் பாஸ் குடுத்தானே! அதை நீதான் ரிப்பேர் பண்ணினியா?”
ஆதி திடீரென்று விஷயத்தை விட்டு விட்டு தன் அதிசயோக்திகளுக்குத் தாவி விட்டான். புரிந்தது.
“ஆபரேட்டர் சொன்னாரா?”
“அடடா அவரு ஒன்னைப் புகழ்ந்ததை நீ கேட்டிருக்கணுமே!”
“நீயும் ஒரு கிளாஸ் கூழ் ஊத்திக்க.”
ஆதியை மேலே பேச விடாமல் கரை மாற்றினான். ஆதியும் சொல்லுக்குக் கட்டுப்பட்டான்.
ஒரு வாய் அவன் விழுங்கட்டும் என்று காத்திருந்து கௌதம் கேட்டான்.
“நீ இன்னும் என் கேள்விக்குப் பதில் சொல்லலே ஆதி.”
“நான் மறக்கலியே.”
“சொல்லு.”
ஆதி ஆற்றைப் பார்த்தான், திடீரென்று முகம் திரும்பி அவனது கீழ்க் கன்னச்சதை நடுங்குவது தெரிந்தது.
அழுகிறானோ?
கௌதமுக்கு அழுகை பிடிக்காது. அதுவும் ஆண் அழுகை.
எதற்காகவும் என்ன நேரிட்டாலும் அழுது அழுது புலம்புவதும் அழுகையை ரசிப்பதும், ரசிக்கிறார்கள் என்பதற்காக அழுவதும்!
எட்டாவது முடித்த கையோடு பூந்துறை ஸ்டேஷனில் கௌதமின் அம்மா சாவித்திரியின் பிரேதத்தை இறக்கிய போது, ஓவென்று அவன் கதறிய கதறல் பூந்துறை ஸ்டேஷனைக் கலக்கிற்று.
அம்மாவின் பிரேதத்தோடு உடன் இறங்கிய அவன் தந்தை சபாநாயகம், அவனைக் கட்டிப் பிடித்துக் கதறுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். அவன்கூட.
ஆனால் அவர் கண்களில் மாலை மாலையாகக் கண்ணீர் வந்தது.
சீச்சீ, இதென்ன வெட்கக்கேடு! என்று அவர் வெட்கப்பட்டவர் போலக் கண்ணீர் முகத்தில் வழியுமுன் தோளில் போட்ட துண்டால் துடைத்துக் கொண்டார்.
பிறகு அவனை ஆழமாக, இடைவெளியின்றி வெகு நேரம் பார்த்துவிட்டு அவன் வலக்கையைத் தம் கையால் இறுகப் பற்றிக் கொண்டார்.
அதற்கப்புறம் அவர் அவனுக்கு அழ வாய்ப்பளித்ததே இல்லை.
“என்ன ஆதி?”
அவன் முகம் திரும்பினான். விழிகள் பளபளத்தன. அழுகை கரைகட்டி நின்றது. அதைச் சந்திக்க விரும்பாமல் இமை தாழ்த்தினான் கௌதம்.
“அம்மாவுக்கு, எனக்குக் கல்யாணம் பண்ணிடணும்னு ஆசை தம்பீ... என் கைல நாலு காசு இல்லன்னா ஊமை மாமியாரை எந்த மருமவ மதிப்பா சொல்லு?”
ஆதி மனசைத் தாக்கி விட்டான்!
“அட பொம்பளை வேணும்னா எங்கியோ போய்ப் பொரண்டு எவனையாவது இஸ்தாந்து வச்சுக்கலாம். இந்த வாயில்லா ஜன்மத்து மனசு கலங்காம அதுக்குச் சோறு போட்டு, துணி தொவிச்சு, வாரிப் போடறதுக்கு முன்னே கால் மாட்டிலே ஒக்கார ஒருத்தியாப் பார்க்கறேன். எல்லாம் பணம். எதுக்கும் பணம். ம்ம்ம்.போவுது காலம்! நானும் தேடறேன்.”
ஆக இதுவும் அம்மாக்கள் விவகாரம்.
அம்மா.அம்மா. இப்படி சின்னச்சின்னப் பல் சக்கரங்களாக ஒன்றையொன்று தள்ளி, சிறியது பெரியதைத் தள்ளி, எதற்கோ எங்குமே இயங்கும் யந்திரங்களின் உந்துவிசை அவள்தானா? இருக்கலாம். யார் அறிவார்?
பேச்சை மாற்றியாக வேண்டியிருக்கிறது. இதோ பாம்பு உரித்துப் போட்ட தோல் கிடக்கிறதே இது மாதிரி. புது வளர்ச்சிக்கு, புதிய பரிமாணத்திற்கு புகழ்ச்சியில் மூச்சுத் திணறி விடாமல் இருக்க, ஆள் மாற்றமடைவது போல் பேச்சும் மாற வேண்டும்.
“நொணாமரத்து மாசிலாகிட்டே என்னத்துக்குத் தகராறு?”
“நானா பண்றேன்?”
“பின்னே?”
“நல்ல கதையா இருக்கே! அவ கொளுந்தியா மச்சினன் துபாய்ல வேலை வாங்கித் தர்றான்னு ஆயிர ரூபாயை வாங்கிக்குடுத்தேன். அஞ்சு வட்டி அசலுக்கு நெஞ்சு முட்ட வட்டி ஆயிடுச்சி. வேல வேணாம். ரூபா குடுண்ணு மூணுமாசமாகக் கேக்கறேன். தோ தோண்ணு வாய்தா வக்கிறான். போன செவ்வாச் சந்தையிலே ஆறாந் தேதி தர்றதா சொன்னான். இன்னிக்குத் தேதி எட்டு.”
“என்ன சொல்றான்?”
“கேக்கப்போனா அவன் கொளுந்தியாள வுட்டுட்டு எங்கியோ ஓடிட்டான்னாம். இவன் தானே ஜாமீனு. பொறுப்பா பதில் சொல்லணுமில்லே.”
கௌதம் காது கொடுத்தான்.
“நீ என்ன பண்றியோ பண்ணிக்கன்னான். கொலவுழும்ணு கத்தினேன். கொடலை உருவிடுவேன்னான். உருவுடா பார்க்கலாம். நீ ஆம்பளையானாக் கொடலை உருவுடான்னேன்.”
“கை வச்சுட்டான். இல்லியா?”
ஆதி பதில் சொல்லவில்லை.
“அவனாலே  கொடுக்க முடியாது. அவன் நெலையே ஆட்டம் கண்டு போச்சு. தெரியும்லே.”
“தெரியும் தெரியும்.”
“ஆறு மாசத்துக்குள்ளே ஒருத்தன் ரெண்டு அடி வாங்கினான்னா...அதுவும் என்ன மாதிரி அடி?”
கௌதம் நினைவில் தோய்வது போன்று பேச்சை நிறுத்தினான்.
கூழ் தீர்ந்து விட்டது. ஆதி இரண்டு தம்ளர்களையும் பாத்திரத்தையும் கழுவ எழுந்தான். கௌதம்,  தாம்போகிப் பாலத்தின் மீது வீட்டு வேலை முடிந்து துணி வெளுப்பதற்காக இடுப்பில் ஆளுக்கு ஓர் அன்னக் கூடையோடு கைவீசி நடந்துவரும் பெண்களைப் பார்த்தான். பாத்திரங்களை அலம்பிக் கொண்டே ஆதி பேசினான்.
“நான் கொடுத்த பணத்தைக் கேக்கத் தானே போனேன், தம்பீ?”
“நீ போன வேளை சரியில்லே.”
“நான் என்ன செய்யட்டும், என் கடன்காரன் பொழுது விடியறப்பவே என் வீட்டுக் கதவைத் தட்டிடறான்.”
கிழக்கேயிருந்து லேசான காற்று வந்தது. அலையலையாகப் பயிர் வரிசைகளை, மயில் கழுத்து நெளிவது போல அசையச் செய்தபடி, அந்த அலை நுணாமரத்துப் பம்பு ஷெட் வரை ஒரு சிறு தூரப் பயணம் போயிற்று.
காற்றோட்டத்தோடு கண்ணோட்டம் செலுத்திய கௌதம் பார்வையை மாசிலாவின் குத்தகை நிலத்தில் நிறுத்தினான்.
பதின்மூன்று ஏக்கர் நிலம் அது!
முதலில் மாசிலா பத்து வயதுப் பையனாக மண் மிதித்த பூமி. அவனுடைய அப்பன் மாரிமுத்துதான் கைபிடித்து அவனை அழைத்து வந்தானாம்.
விட்டலாபுரமே சொல்லும்.
கோரையும் காட்டுச் செடிகளுமாகப் புதர் மண்டியிருந்த நிலம். ஆற்றை ஒட்டிய சிறு மேடு. குறுக்கு வழியென்று மாட்டு வண்டிப் பாதைக்காகச் சக்கரங்கள் ஓடி ஓடி திமிசு வாங்கிய பூமி.
மாரிமுத்துவை கௌதம் பார்த்ததில்லை. விட்டலாபுரம் சொல்லியிருக்கிறது.
கருங்காலி மரத்துச் சட்டம் மாதிரி, வலுவான கட்டடம் உள்ள உடம்பாம். ஆள் வைத்து வேலை வாங்கினான் என்றாலும் வெள்ளி முளைத்ததும் தெரியாது; மறைவதும் தெரியாதாம். அப்படி ஓர் ஈடுபாடு! அவன் சமப்படுத்திய நிலம் அது!
இன்றுதானே டிராக்டர்!
அன்று மாரிமுத்து கலப்பையைப் பிடித்தால் ஏர்முனை அரையடி இறங்குமாம். மாசிலாவின் ஏர்முனை முக்கால் அடி இறங்குவதைக் கௌதம் பார்த்திருக்கிறான்.
எவ்வளவு வியர்வை. எல்லாம் ரத்தம். வியர்வையான ரத்தம். அவன் அப்பன் மாரிமுத்து மஞ்சள் காமாலையில் உயிர் விட்டான். விட்டலாபுரத்து விளைச்சல். காண கொல்லி மலையில் இருந்து இறங்கி வந்து உதிரம் ஊற்ற வந்த சொந்தம்.
நுணா மரத்துப் பம்பு ஷெட் அவர்கள் முன்னின்று வெட்டியதுதான். முகம் தெரியாத முதலாளி, பணம்தான் அனுப்ப முடியும். பணமா கிணற்றை வெட்டும்? மனிதர்கள் தேவைப்பட்டனர். மாரிமுத்துவையும் மாசிலாவையும் போல் மண்ணை நேசித்த மனிதர்கள்.
மண் கூட மாதா மாதிரிதான். அம்மாவேதான். முட்டி முட்டிக் குடிக்கிற கன்றுக்குத் தாய்ப் பசு நிறையத்தான் சுரக்கிறது. சொந்தமா சொந்தமில்லையா என்ற கணக்கு வழக்குப் பார்க்காமல் மாதாவின் மார்பில் முட்டி முட்டி வெட்டிய கிணறு அது.
வருஷத்தில் பத்து நாட்கள் மட்டுமே வெள்ளம் ஓடும் பாலாற்றில், மீதி நாட்களில் விட்டலாபுரம் பெண்களுக்கு நுணா மரத்துப் பம்பு ஷெட்தான். படித்துறை, வம்பளப்பு கவுண்ட்டர்.
“கரண்ட் வந்துச்சு தம்பி.”
“போ... போ, போயி மோட்டார் ஸ்விட்சைப் போடு.”
ஆதி ஸ்விட்சைப் போட்டு விட்டான்.
உறுமிக் கொண்டே  உதறி எழுந்து துள்ளிப்பாயும் சிறுத்தையாக  ஹூங்காரமாக ஒலிக்கத் தொடங்கியது மோட்டார்.[தொடரும்]

Monday 6 February 2017

மணல்வெளி மான்கள் 1.1&2.0

வையவன்
மணல்வெளி மான்கள் 1.1
‘தா...ஹை’ என்று மாடுகளைத் தட்டி விட்டதும் தாழ்வாகக் குழி போல் இறங்கிய நடைபாதையில் அவை நகர்ந்தன. கூடவே போய் ஒருவாகாக சிவுக்கென்று வடக்கயிற்றின் மீது உட்கார்ந்தான். அவற்றின் இழுவைப் பளு சற்றே குறைந்தது.
கிரிகிரிகிரியென்று ராட்டின சங்கீதம். இன்னும் கொஞ்சம்... இன்னும் கொஞ்சம் என்று கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல.
தொட்டியில் கொக்கரித்துக் கொண்டு தண்ணீர் பாய்ந்தது.
“பரவால்லே. எண்பது மார்க்!” என்றாள் நித்யா.
திரும்பி அவளைப் பார்த்தான். அவள் கண்களில் வேறு பார்வை. பொய்க் கூச்சமின்றி, மாசுபடாத சௌஜன்யத்தோடு, தன்னை வெளியிடும் அந்த வெளியீட்டிலேயே கிட்டும் பரவசத்தோடு...
...தொட்டி நீர் மாதிரி மனசு உள்ளே நிறைந்தது. மாடுகளை விட்டு விட்டு... அவன் மனசில் இச்சை ஓடிய ஓட்டத்தை இழுத்துப் பிடித்தான் - மூக்கணாங்கயிறு போட்டான். வேலை முக்கியமானது. உரம் ஊட்டுவது!
“ரெண்டு சாலோட நிறுத்திக்கோ. நான் மொதல்லே துணியை நனைச்சுக்கணும்!”
இரண்டாவது சாலுக்கு மாடுகளைக் கிணற்று மேட்டுக்க ஏற்றும் போது தான் கௌதம் திரும்பிப் பார்த்தான். நுணா மரத்துப் பம்பு ஷெட் தெரிந்தது. சிறு கூட்டம். ஆதி கையை ஆட்டி ஆட்டிப் பேசும் அங்க அசைவு. தகராறு யாருடன்?
சால் கிணற்றில் அமிழ்ந்து சாலுடன் இணைந்த தொண்டலக் கயிறு எவ்வி இழுத்தது. ஆதி கையை நீட்டி நீட்டிப் பேசக் கண்ட அதிர்ச்சியில் கௌதம் சால் நிரம்பியதைப் பொருட்படுத்தவில்லை. ஆதி அப்படிப் பேசுகிறவன் அல்ல! கன்னத்தில் அறைந்தால் கூட மென்று விழுங்கி வாங்கிக் கொள்பவன்.
கூட்டத்தைப் பிளந்து, இழுத்துப் பிடித்த இரண்டு புஜங்களை உதறிக் கொண்டு, நுணா மரத்துப் பம்பு ஷெட்டில் குடியிருக்கும் மாசிலா, ஓங்கி ஆதி மார்பில் ஒரு குத்து விட்டது இங்கிருந்து தெரிந்தது. கௌதம் கூர்ந்து கவனித்தான்.
ஆதி பதிலுக்கு மாசிலா மீது தாவி விட்டான். அதற்குள் நாலைந்து பேர் இழுத்து, அவனைத் தடுத்துக் கொண்டு நின்றனர்.
“மாட்டுக்காரே! நீ இப்படி ஒட்டினா நான் துணியை நனைச்ச மாதிரிதான்!” நித்யா அதட்டினாள். கவனம் திருப்பி, நிற்கும் மாடுகளை தட்டிக் கொடுத்தான். இரண்டாவது சால் நீர் தொட்டிக்குள் கொப்புளித்தது.
“நுணா மரத்துப் பம்பு ஷெட்டிலே அடிதடிபோல இருக்கு நித்யா!”
அவளும் திரும்பினாள். தூரத்தில் நுணா மரத்தடியில் கூட்டம் இரு பிளவாக ஆதியையும் மாசிலாவையும் பிரித்து நிறுத்திக் கொண்டிருந்தது.
“யாரு யாரை அடிச்சது?”
“மாசிலா ஆதியை அடிச்சுட்டான்.”
நித்யா பார்த்துக் கொண்டே நின்றாள். முகம் திரும்பாமல் சொன்னாள்.
“இது இத்தோட நிக்கப் போறதில்லே...”
அவள் குரலில் அருள் வாக்கு சொல்கிற மாதிரி ஒரு தூர திருஷ்டி ஒலி.
“என்ன சொல்றே?”
“ஆமா! நாலஞ்சு நாளுக்கு முன்னாடி கூட ஊர்ல ஆதியண்ணனுக்கும் மாசிலாவுக்கும் தகராறுன்னு பேச்சு அடிபட்டது.”
“தகராறா?”
“ஒனக்குத் தெரியாது! நீ எங்கே இருக்கே? ஊர் ஊரா பம்பு ஷெட் ரிப்பேருக்குப் போயிடறே...”
“என்ன விஷயம்?”
“ஆதியண்ணன் மாசிலாவுக்குத் தெரிஞ்சவன் யார்கிட்டேயோ துபாய்க்குப் போறதுக்காக ஆயிரம் ரூபாய் பணம் குடுத்திருக்காம். ஆறு மாசமாகப் போவுது. இதோ அதோன்னு இழுக்கிறானாம் அந்த ஆளு....”
ஆதிக்கு அப்படி ஓர் ஆசை உண்டு என்று கௌதம் அறிவான். இருபத்தெட்டு வயசாகியும் எதிலும் நிலை கொள்ள முடியவில்லை அவனால். மேஸ்திரி வேலை செய்தான். டீக்கடை வைத்தான். டைலராயிருந்தான். ஜவ்வாது மலையில் மூங்கில் கூப்பு காண்ட்ராக்டராக இருந்த முனீம்சாயபுக்கு உதவியாளாய்ப் போனான்.
இந்த நிலம் கூட குத்தகைப் பயிர்தான். நிலை கொள்வதற்கு, தன்னைக் கண்டுபிடிப்பதற்கு, அவன் செய்து வரும் இடைவிடாத பரிசோதனைகளில் இதுதான் சமீபமானது.
துபாய்! எத்தனை மனக்கோட்டைகளுக்கு அங்கே கதவு திறந்திருக்கிறது? தங்கம் தெருவிலே கொட்டிக் கிடக்கிறதென்று போகிறார்களோ!
“பா... பா... பா” என்று குரல் கேட்டுத் திரும்பினான்.
தலையில் கஞ்சிக் கலயத்தோடு ஆதியின் அம்மா மங்கலட்சுமி நின்றாள்.
அவன் பிறவி ஊமை.
மகன் எங்கே என்று கேட்கிறாள்.
என்ன சொல்வது?
“கஞ்சிக் கலயத்தை வச்சுட்டுப் போகச் சொல்லு. வேற விவரம் சொல்லாதே. அதுக்கு மனசு துடிச்சிடும். வாயும் பேச முடியாம பேபேன்னு கத்திக்கிட்டு கண்ணிலே மாலை மாலையாகத் தண்ணி விடும்” என்றாள் நித்யா.
2.0
“ஐயய்ய...இது வேணாம் தம்பி.”
சண்டையிலிருந்து திரும்பிய சக்தி தடுத்தாள்.
“ஏன்?”
“உனக்கு நாஷ்டா வாங்கியாரச் சொல்லியிருக்கேன்.”
“இருக்கட்டும். அதையும் ரெண்டு பேரும் சாப்பிடுவோம்.”
“இது கேப்பக் கூளு. நீயெல்லாம் சாப்பிடக் கூடாது.”
ஒரு மணி நேரத்துக்கு முன் சண்டை போட்ட ஆதியா இவன்? என்னமாய்க் கூசிக் குறுகுகிறான்? மனிதன் கூச்சப்படும்போதுதான் அவன் மேன்மை வெளிப்படுகிறது.
“நானும் கிராமத்தான் தான் ஆதி! நான் ஒண்ணும் மகாராஜா பிள்ளை இல்லே. சாதாரண ஹெட் கான்ஸ்டபிள் மகன்.”
“அதுக்கில்லே.”
“அம்மா போனப்புறம் அப்பாவுக்குப் பிடிக்குமேன்னு கூழ் கிண்டக் கத்துக்கிட்டேன்.”
“பட்டம் வாங்கியிருக்கியே தம்பீ! பம்பு செட்டு ரிப்பேர் பண்ண வச்சதே தப்பு. அப்புறம் வேற கூளைக் கொடுக்கணுமா?”
மேலும் அவனைப் பரிதவிக்க அனுமதியாமல் ஈய டிபன் தூக்கின் மூடியைத் திறந்தான். கும்மென்று மணம் தூக்கிற்று.
“சுடக் கூழா.”
“ஏன் உனக்குப் புடிக்காதா தம்பீ?”
“நானா சொன்னேன்? இங்கே ஒரே ஒரு டம்ளர்தானே இருக்கு? இன்னும் ஒரு டம்ளர் வேணுமே!”
“இரு... பம்பு ஷெட்டிலே வேற ஒரு கிளாஸ் வச்சிருக்கேன்.”
ஆதி எழுந்து போனான்.
யதேச்சையாகப் பார்வையைத் திருப்பிய போது சின்னதாகத் தேய்ந்து போன டிடர்ஜெண்ட் கட்டி தெரிந்தது. நித்யா விட்டு விட்டுப் போனது. ஆதி சண்டையிலிருந்து மீண்டு வருமுன்பே அவள் போய்விட்டாள்.
அவன் அவளுக்காகத் தண்ணீர் இறைத்ததையும், துணி துவைத்துக் கொண்டே அவர்கள் வம்பளந்ததையும் கூட்டம் பார்த்திருக்கிறது. கௌதம் நினைத்தான் ‘விட்டலாபுரத்தில் ஒருவன் பார்த்தாலே ஊரே பார்த்த மாதிரி. இது கூட்டம். கொஞ்சம் சிறகு வைத்துப் பறக்க விடுவார்கள். சிலருக்கு ஆதங்கம். பலருக்கு வயிற்றெரிச்சல்.’
“வெளியூரானுக்குத் தாண்டா நாம் ஊர்லே யோகம்!”
அன்றைக்கு பஸ் ஸ்டாப்பில் டீக்கடை வைத்திருக்கிற நாயருக்கும், தனக்கும் என்று பொதுவாக ஒருவன் வீசிவிட்டுப் போன சொல் நினைவு வந்தது.
அவன் திரும்பி, எத்தனையோ தாம்போகிப் பாலத்தையும் ஆற்று மணல் வெளியையும் கரையோரம் இமைத்து நிற்கும் தென்னை மர வரிசையையும், ஊருக்கு மகுடமிட்டு நிற்கும் அனந்த சயனப் பெருமாள் கோயிலையும் பார்த்தான்.
நெஞ்சில் ஏதோ கேவிற்று. ஆறாம் வகுப்பிலிருந்து ப்ளஸ் டூ வரை ஏழு வருஷம். ஆற்றில் ஏழு வெள்ளங்கள். தாம்போகிக் கண்மாய்க்குள் ஆற்று வெள்ளம் பாயும் போது எதிர் நீச்சல்கள்.
பிறந்து வளர்ந்து இந்த ஊரின் அழகும் அருமையும் அறியாது மாண்டு போன ஆயிரக்கணக்கானோருக்கு அனுமதிக்கப்பட்ட சொந்தம் எனக்கில்லையா?
அம்மா கையைப் பிடித்துக் கொண்டு போய் ஹைஸ்கூலில் சேர்த்தாள். ‘பையன் எப்படிப் படிக்கிறான் சார்?’ என்று மாதம் தவறாமல் வகுப்பு விடாமல் வந்து, ஆசிரியருக்குத் தாய்மைக் கரிசனத்தைக் கூச்சமின்றி வெளிப்படுத்தினாள். கடைசியில் அதோ அந்த ஈச்ச மரப் புதர் அருகே சாம்பலானாள். அப்புறம் அவன் பதக்கம் வாங்கியதைப் பத்திரிகைகள் படம் போட்டு வெளியிட்டன. விட்டலாபுரம் மேல் நிலைப் பள்ளியின் பெயரையும் சேர்த்து.
தான் வெளியூர், இங்கே தனக்குச் சொந்தமில்லை என்று பொறுமுகிறவர்களை நினைத்தான்.
இதற்கு மேல் ஒரு சொந்தமா? யார் வழங்குவது அதை? கிராம நிர்வாக அதிகாரியா? ஜனன மரண ரிஜிஸ்தரா?
நித்யா விட்டலாபுரத்தில் பிறந்தவள். அந்த ஊர் மண் காலில் ஒட்டிக்கொண்டு கூட அடுத்த ஊருக்குப் போய்விடக் கூடாதாம்[Contd]

Sunday 5 February 2017

மணல்வெளி மான்கள்:1

மணல்வெளி மான்கள்
1
------------------------------------------------------------------------------------------------------------
வியர்த்தது,
பின்னங் கழுத்தில். பனியனுக்குள், உடம்பின் ஒவ்வொரு மயிர்க் காலிலும்...
பனியனையும் உரித்துச் சுருட்டிக் கிடாசி விட்டு அப்படியே கிணற்றில், நிற்கிற திட்டிலிருந்தே ஒரு டைவ் அடிக்க வேண்டும்.
‘பொறு!’ அவன் உடம்பு அரிப்புக்குக் கட்டளையிட்டான். கட்டியிருந்த லுங்கி அவிழ்ந்தது. ஸ்பேனரை ஸக்ஷன் பம்ப் கட்டை மீது வைத்து லுங்கியை இறுகக் கட்டினான்.
இன்னும் இரண்டு சுற்று சுற்றினால் அந்த நட்டு இறுகிவிடும். ஸ்பானர்தான் வழுக்குகிறது. கொஞ்சம் வாய் விரிசல். இருந்தாலென்ன? கௌதமுக்குச் சவால்கள். இப்படிச் சின்னச்சின்ன இடைஞ்சல்கள் பிடிக்கும்.
கௌதம் இரண்டு சுற்று வழுக்கி வழுக்கி ‘டைட்’ வைத்தான். ஸக்ஷன் பம்பின் நட்டு, மாடு பிடித் திருவிழாவில் பிடித்து நிறுத்திய காளை மாதிரி ஸ்தம்பித்தது.
அவன் ஸ்பானரைக் கீழே வைத்தான். நெற்றி வியர்வையை விரல் வைத்து வழித்தெறிந்தான்.
ஏழு மணிக்குக் கிணற்றில் இறங்கியது. ஒரு மணி நேரம் ஆகியிருக்கலாம்.
போனது ஃபுட் வால்வ் லெதர் என்று தெரியாமல் ஆதிகேசவன் அலைமோதிவிட்டான். கார் நெல்லுக்கு அன்றாடம் நீர் பாய்ச்ச மோட்டார் பம்ப் கை விட்டு விட, பழைய பாணியில் கவலை மாடுகளை நம்பினான்.
ஏழு நாட்களாக மோட்டார் சப்தம் ஓய்ந்து போன கிணற்றில் இனி அது பலிக்கும்.
ஆதி கிணற்றுக்கு மேலே தான் நின்று கொண்டிருப்பான். கௌதம் உள்ளே இருந்து குரல் கொடுத்தான்.
“ஆதி... மோட்டாரைப் போடு.”
கிணற்றின் சுற்றுச் சுவரில் பட்டுப்பட்டு எதிரொலிகள். ஒன்று, இரண்டு, மூன்று முறை... பதில் வரவில்லை. எங்கே போய்விட்டான்?
தன் சிரமம் பலித்திருக்கிறதா என்று கௌதமுக்கு உடனே முடிவை எதிர்பார்க்கும் தவிப்பு. மேலே போகலாமா? ஸ்பானரை எடுக்கக் கௌதம் குனிந்தபோது அவன் முதுகில் லொட்டென்று குறி பார்த்து அடித்த மாதிரி எதுவோ தாக்கியது. முதுகைத் தாக்கிவிட்டு அந்த ஏதோ ஒன்று தாவி விழுந்து தண்ணீரில் மறைந்தது.
சிவுக்கென்று தலை நிமிர்த்தினான். கிணற்றுக்கு மேலே சாலும் வடக்கயிறும் தொங்கின. யாரும் தென்படவில்லை. ஆனாலும் யாரோ விளையாடுகிறார்கள். ஆதியா? இல்லை. அவனிடம் ஆதி விளையாடமாட்டான். ஸ்பானரை இன்னும் வைத்த இடத்திலிருந்து எடுக்கவில்லை. எனவே மீண்டும் குனிந்தான்.
லொட்டென்று மீண்டும் முதுகில் பனியனின் ஈர நைப்புக்கு உறைக்கிற மாதிரி ஒரு கொட்டையளவு ஏதோ விழுந்தது. அதிகம் வலிக்கவில்லை.
வெள்ளி மணலாக அடி தெரிந்த கிணற்று நீரின் இள நீலத்தில் ஒரு சிலும்பல். இப்போது விழுந்தது ஒரு சின்னஞ்சிறு மாம் பிஞ்சு.
கௌதம் மனசில் ஒரு முகம் தெரிந்தது. நித்யாவாகத் தான் இருக்கும்.
“மேலே ஏறி வந்தா என்ன நடக்கும் தெரியுமா நித்யா?” என்று தலை உயர்த்தாமல் கத்தினான்.
‘நித்யா’ என்று கிணற்றில் எதிரொலி வந்தது. மும்முறை. கிணற்று நீரின் ஒருபுறத்தில், கரை மீதிருந்த நித்யாவின் பிம்பம் சிலும்பலில் நெளிந்தது.
“என்ன பண்ணுவே?” மேலே நின்றபடி நித்யா கேட்டாள்.
அவன் பிம்பத்தைப் பார்த்தே பேசினான்.
“ஆத்து மணல்லே, அன்னக் கூடையை இடுப்பிலே தூக்க வச்சு ஓட ஓடத் துரத்துவேன்.”
“நீ?” என்றாள் நித்யா – எகத்தாளம். கொஞ்சம் சவால்.
கிணற்றின் அலைகள் தத்தித் தத்தி, கோடை வானத்தின் வெளிர் நீலப் பின்னணியில் நித்யாவின் முகபிம்பத்தை அலைக்கழித்தன. அவள் பற்கள் தெரியச் சிரித்தாள்.
“மேலே யாரும் இல்லியா?”
அவன் பிம்பத்தைப் பார்த்துப் பேசினான். அவளும் அவன் பிம்பத்தைப் பார்த்துப் பதில் சொன்னாள்.
“கேக்கறே பாரேன் கேள்வி!”
நாக்கைக் கடித்துக் கொண்டான்.
முட்டாள்! யாராவது இருந்தால் அவள் இப்படி விளையாடுவாளா?
“ஆதி இருப்பானே!” அவன் சமாளித்தான்.
“நுணா மரத்துப் பம்பு ஷெட்டாண்ட ஒரு கூட்டம் நிக்குது. அவரு அங்கே நிக்கறாரு.”
“கூட்டமா?”
“ஆமா...என்னமோ தகராறுன்னு நெனைக்கிறேன்.”
“சரிதான். இப்பத்திக்கி வர மாட்டான்! அப்ப ஒண்ணு செய்யி...”
“என்ன?”
“கெணத்திலே குதிச்சுடு!”
“ஐயா வந்து காப்பாத்திடுவீங்க...”
“நீ குதிச்சா உன்னைக் காப்பாத்தற சாக்கிலே சேர்ந்து குளிக்கலாம் பாரு.”
“இப்ப நெஜமாலும் ஒன் தலை மேல குதிச்சுடுவேன்.”
“இன்னும் சௌகரியம்.”
“வர வர உனக்கு வாய் கொழுத்துப் போச்சு. நான் போறேன்.”
அவள் முகம் விருட்டென்று மறைந்தது.
“நித்யா..நித்யா!”
என்ன?” மீண்டும் அவள் பிம்பம்.
“மோட்டார் ஸ்விட்சு தெரியுமில்லே ஒனக்கு?”
“சொல்லு...”
“அதைப் போடேன். ஃபுட் வால்வ் லெதர் மாத்தினேன். தண்ணி எடுக்குதான்னு பார்க்கணும்.”
“கரெண்ட போயி அரை மணி நேரம் ஆவுது.”
அவன் வெறுத்துப் போனான். பிறகு அவள் வாயைக் கிண்டினாள்.
“வழக்கமா ஒங்க அம்மாதானே துணி துவைக்க வருவாங்க?”
“ஆமா! அவங்க சொந்தக்காரங்க கருமாதிக்குப் போயிருக்காங்க.”
“அதான் நேரா இங்கே வந்துட்டே.”
“ஆமா. பம்ப் ஷெட் ரிப்பேருக்குக்காக கெணத்திலே எறங்கி இருப்பாருன்னு ஞான திருஷ்டியிலே தெரிஞ்சது.” மீண்டும் தலை மறைந்தாள்.
“துணி துவைக்கணுமா வேண்டாமா?”
“அதான் கரண்ட்டும் இல்லே... தண்ணியும் இறைக்கலியே!”
“மாடுங்க நுகத்தடி பூட்டி நிக்குதுங்க இல்லே?”
“நிக்குதுங்க.”
“இரு... தோ வர்றேன்.”
அவன் செருகு செருகாகப் படிக்குப் பதில் கிணற்றோடு பதித்திருந்த ஜல்லிக் கல்லில் ஒவ்வொரு கல்லாகத் தாவித்தாவி ஏறினான். என்ன வேகமாக ஏறுகிறான்! கால் வழுக்கி விடாது என்று நினைத்தாள் நித்யா.
அவளுக்கு அவன் வேகத்தின் மீது இலேசான பயம்.
அவன் கடைசி ஜல்லிக் கல்லில் நின்றபோது கண் பூத்து விடுகிற மாதிரி கிழக்கு மேற்காய் ஆற்று மணல் தெரிந்தது. விட்டலாபுரத்திற்கும் அன்னவாசலுக்கும் இடையில் பாலாற்றின் குறுக்கே போட்ட நீண்ட தாம்போகிப் பாதை தெரிந்தது.
கல் பரவிய அந்தப் பாதை மீது எட்டரை மணி ரயிலின் வரவுக்காகப் பூந்துறை ஸ்டேஷனுக்குச் செல்லும் டவுன் பஸ் போவது தெரிந்தது.
அந்த எட்டரை மணி பஸ்ஸைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு மீன்கொத்தி மாதிரி மனசு இறந்த காலத்திற்குப் பாய்கிறது.
ஒரு நொடி - இல்லை; ஒரு நொடியில் ஒரு சிறு கூறு...
அந்த பஸ்ஸில்தான் பூத்துறையில் அம்மா இறங்குவாள் என்ற ஆவலோடு பதினாலு வயது கௌதம் பூந்துறைக்குப் போவான்.
மனசு விசித்தரமானது. பழக்க வாசனையுள்ள புறா மாதிரி ஒரே கூட்டிற்குத் திரும்பித் திரும்பிப் போகிறது.
நினைவை உதறி விட்டு நித்யாவைப் பார்த்தான். பத்தொன்பது வயசில் எதற்குக் கோடாலி முடிச்சு? சாக்லேட் பாவாடை. பொன்னிழை ஓடிய கறுப்புத் தாவணி... அவன் அவன் நெற்றித் திலகத்தை, கண்மையை, முகத்தை ரசித்துக் கொண்டே நிற்பதை நித்யாவும் ரசித்தாள்.
“இவ்வளவு சிவப்பு ரொம்ப ஓவர்!”
அவன் தன் நிறத்தைச் சொல்கிறான் என்று அவளுக்கும் புரிந்தது.
“என்ன பண்ணச் சொல்றே? கறுப்பு பெயிண்ட் அடிச்சுக்கவா?”
“முயற்சி பண்ணு!”
“இதைச் சொல்றதுக்குத்தான் கெணத்தை விட்டு மேல வந்தியா?”
பூட்டிய நுகத்தடியோடு சிவனே என்று நிற்கும் கவலை மாடுகளை நோக்கி அவன் நடந்தான்.
“தா... ஹை!” என்று மாடுகளை அதட்டினான். ஒன்று திரும்பிப் பார்த்துக் கொம்புகளை ஆட்டிற்று. கலகலவென்று கழுத்துச் சலங்கை மணிகள் அதிர்ந்தன.
“அது முட்டற மாடு. ஒன்னைக் கெணத்துலே தள்ளப் போவுது” என்று நித்யா மிரட்டினாள்.
“இப்பப் பாரு...”
கௌதம் அவற்றின் அருகே சென்று கழுத்தை நீவி, முதுகை இதமாகத் தட்டிக் கொடுத்தான். கொம்பை ஆட்டிய மாட்டின் முதுகுத் தோல் சிலிர்த்துத் துடித்தது.
வடக்கயிற்றைப் பிடித்துக் கொண்டு பின்னோக்கி இழுத்தான். மாடுகள் இரண்டும் பின்வாங்கி நடந்தன. கிணற்றை எட்டிப் பார்த்தான். சால் கிணற்று நீரை முத்தமிட்டது. அமிழ்ந்தது. நிறைந்தது.
[தொடரும்]

மணல்வெளி மான்கள்
-----------------------------------
                                                                  முன்னுரை
ஆசை தான் கானல் நீர் ஓடுகின்ற  மணல் வெளி.மணல் வெளியில் மான்கள் வசிப்பதில்லை. அதன் வெயில் காலத்து வெப்பமும், குளிர்காலத்துக்குளிரும்  அவற்றினால்
 தாங்க முடியாதவை .ஆனால் குரூர சக்திகள் துரத்தி வரும்போது அவை மணல் வெளிகளைக் கடக்க முயலும். சில சமயம் தாண்டிச் சென்றுவிடும் ; சில சமயம் மடியும்.
 இன்றைய மணல்வெளி மான்கள் மனிதகுலமேதான். துரத்துவது வன்முறை. தடுப்பதற்கு அல்லது தவிர்ப்பதற்கு மனிதர்களைத் தவிர வேறு எவருமில்லை.
எதிர்த்துத்தாக்கு!
தீயைத் தீயால் அணை!
முள்ளை முள்ளால் எடு!
இதுதான் காட்டுமிராண்டி வாழ்வின் ஆதி அம்சம். மனிதனின் அந்த விலங்குத் தன்மையை மாற்ற,மாற்றி மாற்றி எழுந்த மகான்களின் குரல்கள் மறு பரிசீலனை செய்தன; பக்குவப்படுத்தின. ஆனால் அது முற்றுப்பெறவில்லை எனினும் அது இடையறாத போராட்டம் ஆயிற்று. நன்மைக்கும் தீமைக்குமான நிரந்தர யுத்தமாகியது.
இதை நீக்க மெய்யறிவு உதவியதைப் போல் அறிவியல் உதவவில்லை. அறிவியல் இதயத்தை, உணர்வுகளை, மனிதனிடம் உள்ள மனிதத்துவத்தை மேன்மைப் படுத்துவதற்கு மாறாக ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளவே அதிநவீன ஆயுதங்களையே உற்பத்தி செய்து வருகின்றது.
அதன் விளைவுகளை அமெரிக்காவில் ‘பெண்டகன்’ சந்தித்தது.  சமீபத்தில் சிரியா .இன்னும் எத்தனையோ!அறிவுத் தீவினைக்கு  மாற்று மருந்து உணர்வின் மேன்மை தான் , கலைகள் அதற்கே முயலுகின்றன.
கலைகளின் தலைமைப்பீடம் அன்றும் இன்றும் என்றும் , இலக்கியமாகவே இருந்து வருகிறது. இலக்கிய ஆசிரியனுக்கு ஒரு பொறுப்பு உண்டு உலகெங்கும் நிகழும் வன்முறைகளைக் கண்டு மனங் கசிந்து வெற்றுக் கண்ணீர் விடாமல் மேலான பாத்திரங்களைச் சிருஷ்டித்துக் காட்ட வேண்டிய பொறுப்பு .இந்த நாவல் அதையே உத்தேசமாகக் கொண்டது. இதன் கதாநாயகனும் கதாநாயகியும் வாழ்ந்து காட்டி, வன்முறைக்கு இரையாகாமல் நிமிர்ந்து நிற்பது எப்படி என்று நிரூபிக்க முனைந்துள்ளார்கள்.நாவலைப் பொழுது போக்குச் சாதனமாகக் கருதாமல் ஆத்மீக வழிபாடாகக் கொண்டு படைத்த முயற்சி இது. படித்துப்பாருங்கள்.
சென்னை – 20 மிக்க அன்புடன்
        வையவன்
1987-88ல்கல்கியில் தொடர்கதையாக வெளிவந்த இந்த நாவல் இன்னும் பலரால் மறக்க முடியாததாக, மீண்டும் படிக்க விரும்புவதாக இருந்து வருவது எழுதிய எனக்கே வியப்பாக
உள்ளது.கலைஞன் மக்களின் சேவகன். அவர்களின் ஆணையின் கீழ் இயங்க வேண்டியவன்.அவர்களில் பலர்  இது மீண்டும் ஒரு தொடராக வரவேண்டுமெனக் கோரியதால்
நாளை முதல் பேஸ்புக்கில்  இது மீண்டும் தொடராக வரும். இதன் பதிவை இங்கும் காணலாம்.
 


Tuesday 8 December 2015

என் சிறுகதை

இந்த குமுதம் [14.12.15] வார இதழில் வெளி வந்துள்ள என் சிறுகதையின் ஸ்கான் உடன் இணைக்கப்பட்டுள்ளது

Wednesday 18 November 2015

ரேணுகா


முன்னுரை
வாழ்க்கை ஒரு பக்கம் எப்போதும் வளர்ந்து கொண்டே வருகிறது; மறுபக்கம் அழிந்து கொண்டே செல்கிறது. பிறப்பும் இறப்பும்போல் உறவும் துறவும். உலகில் சமகாலத்தில் இயங்குகின்றன.
ஆத்ம தாகம் ஒன்றின் பொருட்டு உடல் இச்சைகளை உதறி எறிந்த ஒருவன் இந்த நாவலில் வரும் சங்கர். ஒரு மரணம் அவனைக் கலக்கி ஸ்தம்பிக்க வைத்து விடுகிறது.
உறவுகளைத் தேடி மன இருளில் அலையும் அவனுக்கு மறுகரையில் ஒரு வெளிச்சம். அவனை அவனுக்கே உணர்த்திய வெளிச்சம். அவள் தான் ரேணு.
விரக்திகளுக்குப் பின்னும் வாழ்க்கை உண்டு என்று வெற்றிகரமாக வாழ்ந்து காட்டியவள். ஒரு வகையில் அவளைத் துறந்து ஓடி வந்தவன் தான் சங்கர் துறவிலிருந்து ஓர் உறவுக்கு அவனை மீட்டு அவனையும் துறக்கச்சித்தமாகிய ரேணுவின் ஆத்ம பலம் அவனை முழு மனிதனாக்குகிறது.
எப்போதுமே வெறும் கதை சொல்வது என்னால் முடியாதது. 
காண்ப வெல்லா மறையுமென்றால் மறைந்த  தெல்லாம் காண்பமன்றோ? என்று மகாகவி கேட்ட கேள்வியில் இந்த நாவல் பிறந்தது.
உடலை மறுத்தது போன்று வெளிவேடமிடுவோர் கணக்கிற்கு வராதவர்கள். ஆனால் அதற்கு உரியதை வழங்காதவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.
இந்தியச் சிந்தனை முறை இதை முழுமையாகப் புரிந்து வைத்திருக்கிறது. அதை நினைவுட்டும் முயற்சியே இந்த நாவல் வடிவாயிற்று.
வழக்கமான எனது லகான் இந்த நாவலின் உணர்ச்சி ஓட்டத்தில் சற்றே விடுபட்டுள்ளது.
கூடுகளில் அடைபடாது மனக்கிளி பாயும் வானவிரிவிற்கு சம்பவங்களும் பாத்திரங்களும் ஓடியிருக்கின்றன. ஆயினும் என்ன?.
உன் உத்தேசம் என்றுமே ஒன்றுதான். கதை சொல்வதன் மூலம் மனதையும் ஆன்மாவையும் மேலே உயர்த்துதல்;ஒர் அணுவளவேனும்.
அதில் நான் பெற்ற வெற்றி தோல்விக்கு சான்று அளிக்க வேண்டியது நீங்களே!                                    
மிக்க அன்புடன்
வையவன்

                                             
                                                        1


மிஷன் ஆஸ்பத்திரி மாடி வாரந்தா
இரண்டு ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஓர் ஆக்ஸிஜன் ஸிலிண்டரைத் தள்ளு வண்டியில் ஏற்றினார்.
சங்கர் ஒரு சின்ன பிரார்த்தனை சொல்லிக் பைஜாமா ஜிப்பா. தலைமுடியோடு நிற்கும்போது அதுதான் முடிகிறது.
அந்த ஸிலிண்டர் தான் பிரியமுள்ள தன் மாணவி ஜனவிக்கு உயிர் மூச்சு வழங்கப் போகிற அமுதசுரபி.
ஆக்ஸிஜன் வண்டியைத் தள்ள வேண்டியவன். வம்பளந்தான்.
“மைக்கேலு சாப்பாட்டுக் கூடை வந்திருக்குமா”
“மணி ஒண்ணாவப்போவுது. வந்திருக்கும்!”
“ஒண்ணு பண்ணுவியா.”
“சொல்லு.”
“இப்ப விட்டேன்னா நம்ப கூடைக்காரி வில்லியம்சு பில்டிங்கிலே பூந்துருவா. நீ இந்த ஸிலிண்டரை எம் வார்டுக்கு தள்ளிக்கிணு போயிட்டே இரு. நான் கேரியரை வாங்கி ஒபி கவுண்டர்லே வச்சுட்டு வந்துடறேன்.
“நம்மாலே முடியாது! நான் சாப்பிட மென்ஸீக்குப் போய்ட்டு வரணும்.”
“பாத்தியா.... ஓரு ஹெல்ப் கேட்ட பிரேக் அடிக்கறே!...”
ஒருத்தி உயிருக்குப் போராடுகிறாள். இவர்ரகளுக்கு சோற்றுப் பிரச்னை. சங்கர்  பிரார்த்தித்தான்.
சொற்கள் இல்லாத. பயம் இல்லாத எந்த வேண்டுதலும் இல்லாத பிரார்த்தனை. நாம ரூபமில்லாத ஒரு சர்வ வியாபகத்திடம் ஒரு டிஸ்கனெஷன் நேரிட்டு. அதைப் பழுது பார்த்து ஓர் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளும் பிரார்த்தனை.
ஸிலிண்டர் தள்ள வேண்டியவர்கள் இன்னும் உடன் பாட்டுக்கு வரவில்லை.
“மைக்கேலு.... ஒண்ணு செய். நீ கூடைக்காரிகிட்டே போயி கேரியரை வாங்கி ஓபியிலே வக்கிறே. நீயும் நானும் ஒண்ணாச்சாப்பிடறோம்.”
அவர்கள் சாவதானம் அவனுள் ஒரு பதற்றத்தை வருவித்தது. அங்கே அவள் சிலிண்டரில் ஆக்சஸிஜன் தீர்ந்திருக்குமோ!
“ஏங்க.... இது கொஞ்சம் அர்ஜெண்டு.”
குறுக்கிட்டவனை எரிச்சலோடு பார்த்தான் மெக்கேல்.
“அட நீ ஏன் சார்பதார்றோ எங்களுக்குத் தெரியாது?”
“இன்னிக்கு சாப்பாட்டிலே நமக்கு சிக்கன் வரும்யா”
“எதுவானா வரட்டும் என்னால முடியாது.”
“நீ போயி ஓழி! நானே வண்டியைத் தள்ளிக்கிணு போறேன்!”
தள்ளுவண்டி நகர்ந்தது. சங்கர் அதன் சக்கரங்கள் சுழலும் வேகத்தை உந்திவிட முடியாதா என்று ஏங்குவது போல் வெறித்தான்.
“ஜைனவி.”
பார்மஸி ஜன்னலில் பெயர் கூப்பிட்டார்கள் ஆக்ஸிஜன் ஸிலிண்டரின் பின்னாலேயே போய் திறந்து மூடிய லிஃப்ட் கதவுக்குள் அது மறைவதைப் பார்த்தப்பின் சங்கர்  திரும்பினான்.
பார்மஸியில் ஜப்ரோ பென்ஸில் புருவத்தோடு ஒரு பெண் சாப்பாட்டு நேரச் சலிப்பில் நின்றாள்.
“எஸ்.”
ஆறுபாட்டில் க்ளுகோஸ். கிளிங்.... கிளிங்.. என்று புட்டிகள் மோத வெளியே வந்தன. டாப்ட் அட்டைகள். மாத்திரை கவர்கள்.
ஆறு பாட்டல்களையும் ஒன்றாக எப்படி எடுத்துப் போவது? மார்பில் தழுவியர் பார்மஸி பெண்ணுக்கு இரக்கம் வந்தது.
“மைக்கேல்.... மைக்கேல்”என்று ராகம் போட்டுக் கூப்பிட்டாள்.
“ஹீ ஹாஸ் கான்“ என்றான் சங்கர்.
   ப்ளீஸ்... வெய்ட்  “மருந்துகளும் மாத்திரைகளும் பொதிந்த கிளிப் பொந்து ஷெல்புகளை நோக்கிவெறொரு சீட்டுடன் அவள் நகர்ந்துவிட்டாள்.” 
காத்திருந்தான். காத்திருப்பின் உள்ளசலிப்பு இப்போதில்லை. ஒரு சின்ன திகில். அங்கே க்ளுகோஸ் தீர்ந்திருந்தால்? சே. இருக்காது.
யாரென்ன வரவேண்டியது?  நாமே எடுத்துப் போய் விடலாம். ஆனால் ஆறு பாட்டில்கள்! இரண்டு முழங்கைகளை நீட்டி. ஒன்றின் மீது ஒன்றாக பாட்டில்களை யாராவது அடுக்கி வைத்தால் மாத்திரைப் பைகளையும் டாப்லெட் அட்டைகளையும் வைத்து கீழே விழாமல் மோவாயில் அழுத்திப் பிடித்துக் கொண்டே போய்விடலாம்.
யாராவது வருகிறார்களர் சங்கர் அப்படியும் இப்படியும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவள் நேராக பார்மஸியை நோக்கி வந்தாள்.
“நான் கொஞ்சம் கொண்டு வரட்டும அவள் அத்தனை பாட்டில்களையும் கொண்டு போக முடியாமல் விழிக்கிறான் என்பதை அவள் உணர்ந்திருக்கவேண்டும்.”
சங்கர் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
இவளர்?
மிஷன் ஆஸ்பத்திரி மாதிரி ஒரு பெரிய மருத்துவ மனையில் வாரக்கணக்காகத் தங்கினால் பரிச்சயங்கள். ஆஸ்பத்திரி உறவுகள். சொற்ப காலப் பந்தங்கள் .
எம் வார்டுக்குக் கீழே படிக்கட்டு இறங்கியதும் ஒரு புல்வெளி. சின்ன பார்க். மாலை நேரங்களில் இவள் ஒரு மத்திய வயசுக் குருடனை அழைத்துக் கொண்டு வருவாள். ஆஸ்பத்திரிக்கு வருகின்ற குழந்தைகளில் இரண்டு மூன்று இவளைச் சுற்றிக் கொள்ளும் முன்பின் தெரியாத குழந்தைகள்! அந்த ஈடுபாட்டிற்கு என்ன காரணம்?.
ஜைனவியை படுக்கையில் விட்டு விட்டுக் கொஞ்சம் காற்று வாங்க வரும்போது அவன் எப்போதாவது யோசிப்பான்.
குழந்தைகளோடு குழந்தையாய் சிரித்துக் கொண்டே நிமிரும்போது அந்தச் சிரிப்பிலும் குதூகலத்திலும் கொஞ்சம் அவனுக்கும் வழங்குவது போல் அவனைப் பார்ப்பாள்.
நீருற்றிலிருந்து வாணம் சிதறுவது போல் சிதறும் நீர்த்துளிகள் தான் அவனுக்கு நினைவுவரும். இவ்வளவு தான் அவர்கள் அறிமுகம்.
ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் களித்துக் குலுங்கும் அவள் ஆனந்தம் சங்கரை. கண்கள் சோர்ந்து மூடினால் வராந்தாவில் நடக்கும்போது. லிஃப்டில் இறங்கும் போது நினைவுப் பொந்துகளிலிருந்து வெளிவந்து குசலம் விசாரித்து விட்டுப்போகும்.
அவள் யார்? எந்த வார்டுக்கு வந்திருக்கிறாள்? யாருக்குத் துணையாக? கடைசி கேள்வி மட்டும் சமீபத்தில் விளங்கியது. அந்த குருடனுக்கு.
அவனுக்கு என்ன உடம்பு?
சங்கர் தெரிந்து கொள்ள முனையவில்லை. அந்த முகத்தில் கண்களும் புருவங்களும் உதடுகளும் உணர்ச்சி லாகவத்தை அற்புதமாய் வெளியிடும்.
இப்போது அவளே முன் வந்து நிற்கிறாள்.
“கொஞ்சம் இதை எடுத்து என் கை மேலே வச்சா போதும்.”
“இல்லை.... ஆறு பாட்டில் இருக்கு! நான் ரெண்டு ரெண்டா நாலு எடுத்துக்கறேன். நீங்க ஒரு கையில் ரெண்டு பாட்டிலையும் இன்னொரு கையில மாத்திரை மருந்துகளையும் எடுத்துக்குங்க.”
அவள் சங்கரின் பதிலை எதிர்பாராது பாட்டிலை எடுக்கக் கை நீட்டினாள். அப்போதுதான் அந்த விரல்கள் எவ்வளவு நீளம் அவள் எவ்வளவு சிவப்பு என்று சங்கருக்கு உறைத்தது.
பாட்டிலை எடுத்துக்கொண்டு அவள் திரும்பாமல் நடந்தாள். “எம் வார்ட். ஜ.ஸீ?. யூனிட்.”
எங்கே போவது என்று அவளுக்கு வழி சொன்னான் சங்கர்?. “தெரியும்” என்று அவள் நடந்தாள்.
அந்தத் “தெரியுமில் பல விஷயங்கள் தெரிந்தன. தான் யாருக்காக ஏன் இங்கே தங்கிருக்கிறோம் என்று இவளுக்குத் தெரியும்”.
சங்கர் பின் தொடர்ந்தான்.
எதிரில் ஏதோ யோசனையோடு வந்த ஒரு லேடி டாக்டர் முன்னால் போகிறவளைப் பார்த்து நின்றாள்.
“ஹாய்... உமா”
“குட்மார்னிங் டாக்டர்”
உமா தலையை வளைத்து வணக்கம் சொன்னாள்.
“யாருக்கு குளுகோஸ்?”
“இதோ இவருடையது. எம். வார்டுக்குப் போகணும் இவராலே எத்தனை பாட்டிலைத் தூக்க முடியும்? நான் கூடப் போய்ட்டிருக்கேன்.”
“சோஷியல் ஸர்வீஸா.... குட்! யுவர் ரங்கன் ஈஸ் ஓகே. அடுத்த வாரம் வரைக்கும் ரெஸ்டுக்காகப் பெட்லே இருக்கட்டும். அப்புறம் டிஸ்சார்ஜ் பண்ணிடறோம்?”
“தாங்க் யூ டாக்டர்.”
“சபாஷ்....தாங்க் யூ சொல்லக் கத்துக்கிட்டே! பை தி பை ரங்கனோட ஆர்மி புக் வச்சிருக்கே இல்லை.... டிஸ்சார்ஜ் சமயத்திலே அதைக் காட்டணும்! எக்ஸ் சர்வீஸ் மேன்னா கட்டணத்திலே சலுகை கிடைக்கும்.”
“வச்சிருக்கேன் டாக்டர்.”
“குட்.”
டாக்டர் உமாவைச் சந்தித்த அந்த சிறு நிகழ்ச்சியில் கொஞ்சம் பிரகாசமுற்றது போல் முக மலர்ந்து நகர்ந்தாள்.
உமா சிரித்திருக்கவேண்டும். பின்னால் நின்றதால் சங்கருக்குத் தெரியவில்லை.
படியிறங்கிய உமாவைப் பின் தொடர்ந்த சங்கர் படி திரும்பிய இடத்தில் மீண்டும் நிற்க நேரிட்டது.
கூலிங்கிளாஸ் .பாலியெஸ்டா ஜிப்பா. வேட்டியோடு வஸ்தாத் மாதிரி ஒரு முப்பதுவயதுக்காரன். உமாவை வழி மறிக்கிறவன்போல் நின்றார்.
அவனை ஒதுக்கிக் கொண்டு போக முயற்சிக்கிறவள் போல் படியில் நகர்ந்தாள் உமா.
“என்ன உமா.... குளுகோஸ் யாருக்கு? ரங்கண்ணனுக்கா கொண்டா நான் எடுத்தாரேன்!”
ஆள் சிவப்பாக இருந்தான். வம்புக்கு இழுக்கிற சிரிப்பு. அந்தச் சிரிப்பில் வெளிப்பட்ட மமதை சங்கருக்கு வெறுப்பூட்டியது.
“கோனாருக்கு இல்லே! இதோ கூட வர்றவருக்கு வழியை விடுங்க.”
அவன் கூலிங் கிளாஸைக் கழற்றிவிட்டு அக்கறையோடு சங்கரைப் பார்த்தான். பிறகு மெவாக விசிலடித்தான். கண்களில் சிவப்புக் கோடுகள்.கூலிங் கிளாஸ் சுழற்றிய பின் அந்த முகத்தில் என்னை வெறு அல்லது எனக்குப் பயப்படு என்று சீட்டு எழுதி ஒட்டியது போன்ற ரௌடிக்களை அவள் விடவில்லை.
“மார்க்கு” என்று காரணமாக அவனை அழைத்தாள்.
“கூப்பிட்டியா”
“வழி விடறியா”
“இல்லேண்ணா ஒரு பாட்டிலை எடுத்து மூஞ்சி மேலேயே எறிஞ்சிடுவே போலிருக்கே!”
“இவரு அவசரமா வார்டுக்குப் போவணும்!”
“அப்படியில் லேண்ணா செய்வேங்கிறியா”
இப்போது தான் குறுக்கிட வேண்டியது அவசியம் என்று உணர்ந்தான் சங்கர்
“கொஞ்சம் அவசரங்க.”
அவன் சங்கரை ஏளனமாகப் பார்த்துவிட்டு நகர்ந்தான்.
“இது ஜங்கிளையா இருந்தா நான் என்ன பண்ணுவேன்னு காட்டியிருப்பேன்!” என்று பளிச்சென்று சொன்னாள் உமா.
“ரங்கண்ணனுக்கு உடம்பு நல்லாயிருச்சில்லே.”
“போய்ப் பாரு.”
“அப்புறமாமா ஐந்கிளைக்குத் தானே வரப்போறே?”
சிவுக்கென்று இரண்டுபடி இறங்கிய உமாதிரும்பினாள்.
“என்ன மார்க்கு மிரட்டறியா”
“ப்சு... ப்சு... ப்சு .... நான் மெரட்டறதே கிடையாதே உமா. உனக்கே அது நல்லா த் தெரியுமே?”
உமா இவனோடு பேசுவது வீண் என்று படியிறங்கத் தொடங்கினாள்.
சங்கருக்கு இந்த அவசரத்திடையே இது நடந்திருக்க வேண்டாம் என்று தோன்றியது. இந்த பாட்டில்களைச் சுமந்து வருவதில் இவளுக்கு அநாவசியமாக ஒரு பிரச்னை முளைத்தது போலவும் சங்கர் உணர்ந்தான்.
“ஒங்களுக்கு என்னாலே தொந்தரவு”என்றான் உமாவிடம். இதை விடுங்க. அந்தாளுக்கு அப்பப்ப இப்படி டோஸ் வாங்கியே பழக்கம்.”
உமா அத்துடன் நிறுத்திக் கொண்டாள்.
அவனும் அவளும் படியிறங்கிக் கடைத்தெருத் சந்தடி போன்ற பார்வையாளர் கூட்டத்தில் நீந்தி என்கொயரி வராந்தாவைக் கடந்து எம் வார்ட் “கேட் அருகே வந்தனர்.”
எதிரில் ஆக்சிஜன் ஸிலிண்டர் ஏற்றிச் சென்ற மைக்கேல் திரும்பிக் கொண்டிருந்தான்.அம்மாம் பாட்டிலு இருக்குன்னு முன் கூட்டியே சொல்லக்கூடாது  சார்!”
இவன் ஜைனனியின் படுக்கையருகே சென்று திரும்பியவன்!
அவனைப் பார்ப்பதே ஆசுவாசமாக இருந்தது. இவன் சொல்வதற்கு கெட்ட செய்தி இல்லை. “சீ! என்னது தன் மனம் என்ன இப்படி சஷீணித்துவிட்டது?”
இப்படிச் சின்ன சின்ன விவரங்களில்கூட ஒரு தெம்பைத் தேடுமளவு என்ன பலவீனப்பட்டு விட்டது. சங்கர் அவனுக்கு அவன் கொண்டு போன ஸிலிண்டருக்கு. ரப்பர் இணைப்புகளுக்கு மனப்பூர்வமாக நன்றி சொன்னான்.
அவனைக் கடந்து ஜ.ஸி. யூனிட்டின் உள்ளே நுழையும் வழியில் மூடி நின்ற பச்சைத் திரை முன் இருவரும் நின்றனர்.
ஒரு நர்ஸ் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்தாள்.
“உள்ளே போகக் கூடாது...”
க்ளுக்கோஸ் காட்டில்களைக் காட்டினான் சங்கர்.
“எங்கிட்டே குடுங்க!”
உமா பாட்டில்களைக் கொடுத்தாள்.
இரண்டு கைகளிலும் ஏந்திக்கொண்டே திரும்பியவள் சங்கர் பின் தொடர்வதைக் கண்டு “ஏய் மிஸ்டர் தமிழ்லே தானே சொன்னேன்! உனக்குப் புரியலே.”
சங்கர் எந்த கோபத்தையும் ஆட்சேபத்தையும் பொருட்படுத்தக் கூடிய மனோ நிலையில் இல்லை.
ஆக்ஸிஜன் ஆக்ஸிஜன் ட்யூ இணைப்பில் ஜைனவியின் மார்பு மெல்ல உயர்ந்து தாழும் துடிப்பைப் பார்க்கிறவரை அவன் அவனாக இல்லை.
“ஸாரி... ஸிஸ்டர்.”
அப்புறம்தான் நினைவு வந்தது. தன் பொருட்டு பாட்டில்களைச் சுமந்த உமாவுக்கு ஒரு நன்றி சொல்லி மறந்தது!
பாட்டில்களையும் மருந்துகளையும் ஒப்படைத்து விட்டு அவன் வெளியே வந்தான். உமா போய் விட்டிருந்தாள்.
லிஃப்ட் ஏறி வருகிறது. இறங்கிச் செல்கிறது. மீண்டும் ஏறுகிறது. இறங்குகிறது. லிஃப்டின் இரும்புச் சிறை விரித்து கூட்டமாய். ஒன்றையாய் இரட்டை முகங்கள். கவலை. பயம். அவசரம். சாந்தம். சிரிப்பு. சலிப்பு. உணர்ச்சிச் சுழிப்பின் சித்திரங்கள் எழுதிய முகங்கள்.
சங்கர் லிப்டிற்கு எதிரேயிருந்த பெஞ்சில் காத்திருந்தான். எவருக்காகவும் அல்ல. காத்திருப்பதற்காகக் காத்திருந்தான்.
உள்ளே ஜ.ஸி. யூனிட்டில் ஆக்ஸிஜன் ஸிலிண்டரின் ட்யூப் இணைப்பு வழியாக ஜைனவியின் நுரையீரலுக்கும் இதயத்திற்கும் உயிர் மூச்சு பிரவேசிக்கிறது.
ஒருமுறை லிப்ட் அந்த அடுக்கைக் கடக்கும்போது அதன் ட்யூப் இணைப்பு மேலே ஏறுவது தெரிகிறது. சங்கர் ஆக்சிஜன் சிலிண்டரின் இணைப்பை நினைத்துக் கொண்டான்.
இது மூன்றாவது வாரம்.
ஆனால் ஜைனவிக்கு மூன்று நாளாகத்தான் ஆக்சிஜன்.
“திடிர்னு ஒரே வலி.... அப்பா.... அம்மா...மாஸ்டர் மூச்சுவிடமுடியலே... வலிக்கிறது மாஸ்டர்... வலிக்....”
மூன்று வாரங்களுக்கு முன் பிரக்ஞையிழந்த ஜைனவியைத் தூக்கிக் காரில் போட்டு வந்து எமர்ஜென்ஸி வார்டில் சேர்த்து... மறுநாள் லிப்டில் ஏற்றி....
பகல்களும் இரவுகளும் வளர்ந்து மலர்ந்து உதிர்ந்து சருகாயின.
இதோ அதோ என்று மூன்று வாரங்கள் திரும்பி வராத ஓட்டப் பந்தயத்தில் மறைந்தன.
ஜ.ஸி.யூனிட்டின் விஸிட்டர்ஸ் பெஞ்ச் இவனைப் போல் லட்சம் போரைச் சுமந்து வழவழப்பாயிருந்தது.
நான்காவது நாளாக சங்கர்காத்திருந்தான்.
ஒரு டாக்டர் பச்சைத் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்ததால் எழுந்து ஓடினான்.
“உன்ன கண்டிஷன் டாக்டர்”
“க்ரிடிகள்... எதையும் சொல்றதுக்கில்லே.”
“ஈஸ் தேர் ஹோப்?”
“ஹோப் ஈஸ் த ஒன்லி வே.”
டாக்டர் இடக்கரடக்கலாகச் சொல்கிறாரா? பிலசாபிக்காகச் சொல்கிறாரா?,
டாக்டரை விழுங்கிக் கொண்டு லிஃப்ட் போகிறது. மீண்டும் கொண்டு வருகிறது.
வாரங்கள்...  நாட்கள்.... மணிகள்... வினாடிகள்... காலத்தின் எந்த இஞ்ச் டேப்பிற்கும் அடைபடாத கொடி அவஸ்தை அது. ஒரு இன்ஃபினிடியிலிருந்து இன்னோரு “இன்ஃபினிடி.”
ஜைனவி ஆரம்பித்தது?
மனம் நேர்த் தகவல்களைத் தவிர்த்து தாறுமாறாக ஓடுகிறது.
உயிர் ஆரம்பித்ததிலிருந்து.
ஆணும் பெண்ணும் உருவானதிலிருந்து.
ஆஸ்பத்திரிகள் தொடங்கப்படாததிலிருந்து. இது நோயாளிகளுக்குத் தெரியாது.  அவர்கள் பாக்கியசாலிகள். டாக்டர்கள். நர்ஸ்கள் ஆகியோருக்கோ நூறோடு நூற்றொன்று. எங்கே ஓர் இதயம் துடிக்க மறந்து விடுமோ என்று விஸிட்டர்ஸ் பெஞ்சில் வயிறு கலங்கக் காத்திருந்தால் மட்டுமே இந்த அவஸ்தை விளங்கும்.
அவனோடு காத்திருந்தவர்கள் அடிக்கடி மாறினார்கள். மகன்கள் வந்து போனார்கள்.
இவர்களில் எவனாவது ஒருவன் காதலனாக இருக்கலாம். ஜ.ஸி.வார்டின் பச்சைத் திரையை நீக்கீக் கொண்டு பரஸ்பர பூரண ஆரோக்கியத்தோடு வர வேண்டிய ஒருத்தியுடன் கல்யாணத்திற்காகக் காத்திருப்பவனாக இருக்கலாம்.[தொடரும்]

Sunday 11 October 2015

உயிர் ஊற்று 2

உயிர் ஊற்று 2
அந்த விடியற்காலை நேரத்தில், புழக்கடையில் பாத்திரங்கள் உருளும் ஓசை கேட்டதும் பாக்கியம் விழித்துக் கொண்டாள்.
அறைச் சுவரில் பதிந்திருந்த கடிகார ஓசை அங்கு நிலவிய அமைதியில் வெகு துல்லியமாகக் கேட்டது. மணி ஐந்தேகால்.
அன்னபூரணி எழுந்து பாத்திரம் துலக்கிக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது. கட்டிலில் பக்கத்தில் படுத்திருந்த விஜயா, காலைத் தூக்கி பாக்கியத்தின் மேல் போட்டுக் கொண்டு தூங்கினாள்.
“அப்பப்பா, ராத்திரியிலே என்னமாப் புரள்றே’’ என்று சொல்லியவாறே காலை எடுத்து அவளைச் சரியாகப் படுக்க வைத்து விட்டு விடியற்காலைக் காற்று தாக்காமலிருக்க, அவள் மீது லேசான போர்வை ஒன்றைப் போர்த்தினாள் பாக்கியம். தலை முடி அவிழ்ந்து தொங்கியதைச் சுருட்டிக் கோடாலி முடிச்சுப் போட்டவாறே எழுந்தாள்.
அவளையுமறியாமல் அவளது கால் அவரது அறையை நோக்கிப் போயிற்று. அது தான் அவளது தினசரி வழக்கம். ஒவ்வொரு சமயம் நினைத்துப் பார்க்கும் போது, அவளுக்கே கூட அது விநோதமாகத் தோன்றும்.
இத்தனை வயதாகி, வாழ்வின் பல பருவங்களைத் தாண்டி இன்ப துன்பங்களை ஆண்டு அனுபவித்த பின், அனுபவங்களின் பயனாய் ஒரு முதிர்ச்சியும் நிதானமும் வந்துங்கூட, அவாள மீது இப்படி ஓர்  ஆழ்ந்த பற்றுதல்.
காலையிலிருந்து இரவு வரை நிழல் போல அவரையே சார்ந்து, அவாள என்ற ஆதாரப் புள்ளியிலேயே இயங்கிக் கொண்டிருக்கும் வாழ்க்கை.
அதற்கு பக்தி என்று அர் த்தமல்ல. பக்திக்கும் அதன் தன்மைக்கேற்ற அர்த்தங்கள் உண்டு. வரம்புகள் உண்டு.
பாக்கியம் அவரிடம் அப்படியெல்லாம் தூரத்தில் நிற்கவே மாட்டாள். அவள் அவாள இன்றி வாழவே மாட்டாள். அவர் இன்றி வாழவே இயலாது.
கல்யாண வீட்டில் அதை எடு, இதை எடு என்று கம்பீரமாக ஆளை விரட்டிய வண்ணம் காரியம் செய்பவர்களைப் போல் கல கலவென்றிருப்பாள்.
பெரிய உள்ளம், பெரிய உடம்பு, பெரிய குரல். எதிலும் அவள் பெரியவள் தான்.
அவள் வட்டாரத்தில் எந்த விசேஷம் நடந்தாலும், அதற்குப் பாக்கியம் போகா விட்டால் களை கட்டாது. அவளது அதிகாரம், செயல், நேர்த்தி , சமயோசிதம் இவைகள் எல்லாம் தம்மையுமறியாது  மற்றவர்களைத் தலை வணங்க வைத்து விடும்.
இத்தனை இருந்தாலும் நாலு நாளைக்குச் சேர்ந்தார்  போல அவர் எங்காவது வெளியூருக்குப் போய் விட்டால், அவள் பலம் எல்லாம் வடிந்து போன மாதிரி பேசாமல் ஒடுங்கி விடுவாள்.
“அப்படி என்னடியம்மா நாங்கள்ளாம் காணாததை நீ கண்டுட்டே!’’ என்று சீண்டி விடுவார்கள் சினேகிதிகள்.
“அதைக் கண்ணாலே பார்க்க முடியாது. கண்டவர் கள் விண்டு  சொன்னாக் கூட புரியறாப்பலே இருக்காது. ஏதோ நாவல்லே படிக்கிறாப்பிலேயும், சினிமாவிலே பார்க்கிறாப்பி லேயும் தான் தோணும்’’ என்று பதிலளிப்பாள்.
சாதாரணமாகத் தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர்  சௌஜன்யத்துடன் நீடித்து இருந்து விட்டாலே அது அதிசயம் தான்.
ஒரு பக்கத்து ஏமாற்றங்கள்….அது வளர்த்த புற்றில் உள்ளுக்குள் சீறிக் கொண்டிருக்கும் கோபதாபங்கள்.
வாழ்க்கையே பலருக்கு இவ்விதம் பதுங்கிய, பழக்கத்திற்காளான,எ டுபட்ட ஏமாற்றங்களாய் நடந்து வருகிறது.
அதற்கு வித்தியாசமான ஒருத்தி என்றால், அவர் களால் நம்ப முடியவில்லை.
ஆனால், அவரே அவளுடைய வாழ்வில் பலம்; நம்பிக்கை அர்த்தம்.
இந்தச் சமூகத்தில் பெண்ணின் வாழ்க்கை ஆமை ஓடு போலக் குறுகி இருக்கிறது.
தான், தன் வீடு, கணவன், பிள்ளைக் குட்டிகள், மிச்சமாகப் போனால் மாதர் சங்கம், பெண் அவ்வளவு தான் ஆணிடம் எதிர்பார்க்கிறாள். அவள் வட்டம் பெரிதாகும் போது அவளுக்கே குறுகுறுப்பு தோன்றுகிறது. தனது ஆட்சிக்குப் பங்கம் நேர்வதுபோல் துணுக்குகிறாள்.
பாக்கியத்தின் உள்ளம் அப்படி ஒரு சின்ன கூண்டில் சிறைப்பட்டதல்ல.
அவளும் அத்தகைய சிறையை ஆமோதிப்பவ ளல்ல. அவாள உள்ளத்தின் திசைகள் விரிந்த அளவு அவளும் பெரியவளாக இருந்தாள். அந்தச் சுதந்திரமே இந்த வயதிலும் அவர் மீது அப்படிக் காதல் நிலவக் காரணமாக இருந்தது.
மேஜை விளக்கைப் போட்டுக் கொண்டு, ஜஸ்டிஸ் ஆனந்தரங்கம் ஒரு கேஸ் பைலை ஊன்றிப் படித்துக் கொண்டிருந்தார்.
ஐம்பத்து நான்கு வயதை அவர் நெருங்கிக் கொண்டிருந்தாலும், ஒழுங்கான யோகாப் பயிற்சியாலும் அன்றாடம்  உடலுழைப்பு வேண்டும் என்று தோட்டத்தில் கையில் மண்வெட்டிபிடித்து வேலை செய்து வருவதாலும், அவர் தோற்றத்தில் இளமையின் அம்சமே அதிகமாக இருந்தது.
சற்று முன் நோக்கி சரிந்தாற் போன்று பரந்த நெற்றி, பெரிய நாசி, தன் கீழே அதிக இடைவெளியில் அமைந்த இறுகிய உதடு.
சதுரமான மோவாய்க் கட்டு. அவரது முகமே எதிராளியின் முகத்தில் சற்று அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.
கண்களின் தீட்சண்யம் அவரது உணர் ச்சிகளையோ அபிப்ராயங்களையோ வெளியிடாது. மற்றவர்  மனத்தை ஆராய்ச்சி செய்யும். சென்னை ஹைகோர்ட்டில் ஜட்ஜ் ஆக சமீபத்தில் நியமனம் ஆகியிருந்தார். அவர் ஆஜராகும் வழக்கு என்றால் வக்கீல்களுக்கு சற்று யோசனை தான். சட்டங்களில் சதுரர்கள். அதன் இடைவெளிகளைப் பயன்படுத்தி,  தமது இழுப்புக்கு அவற்றை வளைத்து என்ன சாதுலுளயம் செய்தாலும், ஆனந்தரங்கத்தை மசிய வைக்க முடியாது. மனித தாளமங்களும், உண்மையும் அவருக்குச் சட்டத்தை விட முக்கியம்.
அவாள நீதிமன்றத்திலும்,  வெளி உலகத்திலும் எவ்வளவுக்கெவ்வளவு நிதான உணர்ச்சியோடும், கண்டிப்போடும் நடந்து கொள்வாரோ அதற்கு முற்றிலும் முரணாக, சமீபத்தில் திருமணமான ஓர் இளைஞன் காதல் மயக்கில் எவ்விதம் தன் மனைவிக்குக் கட்டுப்பட்டிருப்பானோ, அப்படி ஐக்கியமாக இருப்பார் பாக்கியத்திடம்.
இந்த வயதான காதல், வெளி உலகத்திற்கு அவ்வளவாகத் தெரியாது.
பாக்கியம் அவரது பெரியபி ரேம் போட்ட மூக்குக் கண்ணாடி, முகத்திற்கு மிகவும் கம்பீரம் தருவதை மனசுக்குள் ரசித்துக் கொண்டே நின்றாள்.
அவள் வந்து நின்ற ஓசை கேட்டும், கேஸ் கட்டில் ஒரு குறிப்பட்ட பாரா முடியும் வரையில் ஆனந்தரங்கம் நிமிரவில்லை. அப்புறமாகப் பார்த்தார்.

“என்ன பாக்கியம்?’’

“காபி கொண்டு வரட்டுமா?’’

“கொஞ்ச நேரம் போகட்டும். காலையிலே தரிசனம் ஆச்சில்லே’’ என்று சாவதானமாக,  குறும்பு தொனிக்கக்  கேட்டார்.
“ஆமா, என்னைக் கிண்டல் பண்ணலேன்னா, உங்களுக்கு எங்கே பொழுது விடியப் போகுது?’’ என்று புன்சிரிப்போடு கூறியபடியே அறைக்குள்ளே நுழைந்தாள் பாக்கியம்.
“உள்ளே வந்தாச்சா, இனிமே என் வேலை ஓடினாப்பலேதான்!’’ என்று மெதுவாகச் சிரித்தபடி சொன்னார்  ஆனந்தரங்கம்.
“அடேயப்பா, வேலையை விட்டுட்டு எத்தனை நாள் நீங்களும் என்னோட பேசிக்கிட்டிருந்தீங்க? எத்தனை நாள் உங்க வேலையைக் கெடுத்தேன்?’’ என்று சளைக்காமல் பதில் கொடுத்தவாறே அவரது முதுகுக்குப் பின்னால் நாற்காலியைப் பிடித்தவாறே போய் நின்றாள்.
“எங்க வக்கீல்களை விட நீ கோர்ட்டிலே ஆஜராகலாம் பாக்கியம். உன்னுடைய லா பாயிண்டுகளுக்கு முன்னாலே நான் ஊமையா உட்கார்ந்துட வேண்டியது தான்.’’
“ஐயோ பாவம், நான் சொல்ற பேச்சைத் தப்பாமே கேட்கறீங்க இல்லே...’’ என்று அவர் கையிலிருந்த கேஸ் பைலைப் பார்த்தவாறே கேட்டாள் பாக்கியம்.
 “இன்னிக்கு மாரமங்கலம் கொலைக் கேஸிலே ஜட்ஜ்மெண்ட் இல்லே?’’
“ஆமா… ஏன் உன்னுடைய ஆர்க்யூமெண்ட் ஏதாவது இருக்கா?’’ அவளை குறும்புடன் நிமிர்ந்து பார்த்தார் ஆனந்தரங்கம்.
அவருடைய கிண்டலை லட்சியம் செய்யாமல் “என்ன தீர்ப்பு சொல்லப் போறீங்க?’’ என்றாள்.
“உனக்குத் தான் கேஸைப் பற்றி கிளியராத் தெரியுமே. நீ தான் சொல்லேன் பார்ப்போம்!’’
“எனக்கு என்னமோ அந்தப் பையனை நெனச்சா பரிதாபமாயிருக்கு. அவன் பேச்சும், பத்திரிகையிலே போட்டிருக்கிற அவனுடைய போட்டோவையும் பார்த்தா நிரபராதின்னு தோணுது!’’ என்று அச்சமயம் பத்திரிகையில் விவரமாகப் பி ரசுரிக்கப்பட்டிருந்த ஒரு வழக்கைப் பற்றித் தன் அபிப்ராயத்தைச் சொன்னாள், பாக்கியம்.
“சந்தர்ப்பப் பொருத்தமும், சாட்சியங்களும் ரொம்ப கிரிட்டிகலா இருக்கே பாக்கியம்!’’
“அப்புறம் ஒங்கபாடு, ஒங்க வக்கீல்களாச்சு. நீங்களாச்சு’’
ஒரு நிமிஷம் கண்ணை மூடிக் கொண்டு ஏதோ யோசித்தார் ஜஸ்டிஸ்.
“என்ன திடீர்யோசனை?’’
“இல்லே, உன்னே ஜஸ்டிஸா போட்டா, எத்தனை ஜெயில்களை காலி பண்ணுவேன்னு நெனைச்சேன்.’’
“ஜெயில்கள்ளாம் காலியாயிருந்தா அது தேசத்துக்குப் பெருமை தானே…’’
“ அப்புறமா தேசமே ஜெயிலாடுமே !.’’
“ ஜெயிலுக்குள்ளே ஒரு தேசம் இருக்கறதை வெளியிலே இருக்கலாமே!’’
“சபாஷ், போட்டியே ஒரு போடு.’’
“சரி, காலையிலே உங்கக்கிட்டே பேசிக்கிட்டு நின்னேன்னா எனக்கு வேலை ஆனாப் போலத் தான். இன்னிக்காவது நரேந்திரன் போன் பண்ணுவானா?’’
“அதான் நேத்தே ரகு அவங்கம்மாவுக்கு பண்ணினானே!எழுதியிருந்தானே, இவர் கவி. டூலுளலே எந்த இடத்திலே இவருக்குக் கவிதை உதயமாச்சோ, இவன் பாட்டுக்கு ஒக்காந்துட்டிருப்பான்.’’
“எல்லாரும் சின்ன வயசுலே அப்படித் தான்’’ என்று தன் மகனைப் பற்றிய பெருமிதம் நெஞ்சில் மணக்க பதிலளித்தாள் பாக்கியம்.
“அப்படியா, இன்னிக்குப் புதுக் கவிதையை கன்யாகுமரியிலேருந்து அனுப்பி  வெப்பான். நீ கவலைப் படாமப் போய் காப்பி  கொண்டு வா. ‘’
ஆனந்தரங்கத்திற்கு தன் மகன் கவிதை எழுதுவதில் உள்ளூரப் பெருமையுண்டு.என்ஜினியரிங் காலேஜில் படித்துக் கொண்டு, எந்தப் பாடத்திலும் கோட்டை விடாமல், அற்புதமான கவிதைகளை எழுதுவதில் அவருக்கு வியப்பே உண்டு.இருந்தாலும் அதை யார் முன்னிலையிலும் பாராட்டிக் கொள்ள மாட்டார்.அன்றைய தினத்திற்கு வேண்டிய தெம்பை சேகரித்துக் கொண்டு பாக்கியம் வெளியே போனாள்.
தோட்டத்துக் குழாயடியில் அன்னபூரணி பற்றுப் பாத்திரங்களைப் பரப்பி , தேய்ப்பதில் ஈடுபட்டிருந்தாள். 
புழக்கடைத் தோட்டத்தில் விடியற்காலைக் காகங்கள் கூவிக் கொண்டிருந்தன. ஆனந்தரங்கம் புகழ் பெற்ற வக்கீலாகத் தொழில் நடத்திய காலத்திலேயே விஸ்தாரமான இடம் இருப்பதனால் ஆள்வார்ப்பேட்டையில் அந்த பங்களாவைப் பலத்த போட்டிக்கிடையில் வாங்கினார். மசியாத சென்னை மண்ணையும் மசிய வைக்க, லாரி லாரியாக மண்ணைக் கொண்டு வந்து கொட்டி தோட்டத்தையே செழிக்க வைத்திருந்தார் ஆனந்தரங்கம்.
அழகை மட்டும் கருத்தில் கொண்ட செடிகள் அங்கே இல்லை. தேங்காய் முதற் கொண்டு காய்கறி, கீரை,  சில பழ வகைகள்  வரைப் பயிராயின.
அது தான் அவரது பொழுதுபோக்கு. அவரது முழு ஆர்வத்திற்கும் உரிய விஷயம்.
தம்மை ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்வதில் அவருக்கு ஓர் அபாரப் பெருமை. வீட்டுத் தேவைகளுக்கு குழாய்த்  தண்ணீரே போதுமென்றாலும், தோட்டத்தின் போஷாக்கை உத்தேசித்து ஒரு பெரிய கிணற்றை வெட்டி, மூன்று ஹார்ஸ் பவரில் அதற்கு ஒரு மோட்டார் பம்பும் போட்டிருந்தார்.
பறவைகளின் ஓசையும் தோட்டத்துத் தாவரங்கள் சலசலக்கும் சப்தமும், விடிகாலைக் காற்றும் பாக்கியத்தின் உள்ளத்தில் இனிய மகிழ்ச்சியைப் பரப்பன. அவ்வளவு சீக்கிரம் எழுந்து குளித்து விட்டுப் பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டிருந்த அன்னபூரணியைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள் பாக்கியம்.
பத்து வருடங்களுக்கு முன்னால் கையில் ரகுநாதனைப் பி டித்துக் கொண்டு அவள் கொடுத்த வேலையையே ஏற்றுக் கொண்டு, என்று இந்த வீட்டில் காலெடுத்து வைத்தாலோ, அன்றிலிருந்து அன்னபூரணியின் வாழ்க்கைச் சக்கரம் இதே ரீதியில் தான் ஓடிக் கொண்டிருக்கிறது.
விடிகாலைக் குளியல், நெற்றியில் குங்குமம், ஓயாது, சலித்துக் கொள்ளாது அந்த வீட்டின் இயக்கத்திற்கு ஈடு கொடுத்தபடி  இதே மாதிரி தான் உழைத்துக் கொண்டிருக்கிறாள்.
வந்த போது வறுமையின் உக்கிரத்தால்  வற்றிக் காய்ந்திருந்த உடம்பல், இப்போது கொஞ்சம் சதை பிடித்திருக்கிறது.
அவளது வாழ்வே ஓரிடத்தில் ஸ்தம்பத்து நின்று விட்டது போல், அவளது உடம்பலும் முகத்திலும் எவ்வித உணாளச்சிகளும் அழகும் இருந்தனவோ, அவையே இன்னும் நிலைத்து நின்றிருந்தன.
இளமையில் அவள் இன்னும் அழகாயிருந்திருக்க வேண்டும். பளீரென்று கண்ணுக்கு உறைக்கிற மாதிரி அந்தச் சிவப்பும், இப்போது சாந்தமும் வைராக்கியமும் கலந்ததாக மாறி விட்ட முகமும், ஒரு மன நெகிழ்ச்சியை ஏற்படுத்தின.
இப்போது அவளுக்கு வயது நாற்பத்தி மூன்றோ என்னவோ லேசாகத் தலை நரை கண்டு விட்டது. முகத்திலோ உடம்பிலோ முதுமையின் தளாளச்சி இல்லை.
யந்திரம் கூட நாட்பட நாட்பட தேய்வுறும், பின்னமாகும். அன்னபூரணி அன்று போலவே இன்னும் இருக்கிறாள்.
ஒரு தவத்தினால் எய்திய சாதனை போல் அவளால் இன்னும் சளைக்காமல் உழைக்க முடிகிறது.
“அக்கா, காபி  பாத்திரம் துலக்கி ஆச்சா?’’
“ஓ. முன்னாலேயே தொலக்கி வச்சுட்டேன  பாக்கியம்!’’  என்று அவளைத் திரும்பி ப் பார்த்தவாறே சொன்னாள் அன்னபூரணி.
அன்னபூரணி அந்த வீட்டு மனுஷியாகி எவ்வளவோ நாளாகிறது. அவள் ஸ்தானத்திற்கு வேலைக்காரி என்று போள இருந்தாலும் அதைப் பாக்கியம் மறந்து விட்டாள்.
அந்த வீடே மறந்து விட்டது. ஆனால் அன்னபூரணிக்கு அது நினைவிருந்தது.
அந்த வீட்டின் மீது உண்மையான பாசம் நிலவிக் கொண்டிருந்த போதிலும் தனது ஸ்தானத்தின் எல்லைகளை அவள் மீறியதில்லை.
அவளால் அதை மறைக்க முடியாது.
வாழ்க்கை அவளை வீசியெறிந்த இடத்தில் விதியோடு அவள் இருபது வருஷங்களாக, துவந்த யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் போது, எதைத் தான் மறந்து விட முடியும்?
பாத்திரத்தை எடுத்தவாறே “அக்கா நான் காப்ப அடுப்பை மூட்டி அவருக்கு காப்பி  கொண்டு போய் கொடுத்திட்டு வாசலைப் பெருக்கிடறேன். நீங்க வெந்நீலுள பாய்லரிலே தண்ணி படிச்சு நெருப்புப் போட்டுடுங்க!’’ என்றாள் பாக்கியம்.
“வாசலை நானே பெருக்கிடறேன், நீ எதுக்கம்மா?’’
“ஏன் அக்கா, நான் செய்யக் கூடாதா?’’
“அதில்லே இப்படி எல்லா வேலையிலேயும் பங்குக்கு வந்து வந்து பி டிங்கிக்கிறயேன்று தான்னு.’’
“”நல்ல கதையக்கா இது. ராப்பகலா கஷ்டப்பட்டு மாயறது நீங்க. ஏதோ ஊறுகாத் தொட்டுக்கிறாப்பே ஒண்ணு ரெண்டு காரியம் செய்யக் கூட விடமாட்டேன்னா’’ என்று சொல்லிக் கொண்டே உள்ளே போய் விட்டாள் பாக்கியம்.
பற்றுத்தேய்த்த பாத்திரங்களைப் பளிச்சென்று குழாயடியில் அலம்பக் கொண்டே, சிந்தனையில் ஆழ்ந்தாள் அன்னபூரணி.
“”கஷ்டங்கள்… உழைப்பு… எவ்வளவு சாமான்யமாக இருக்கு. இப்போ நெனச்சா? ரகு திடுதிடுன்னு வளந்து ப.ஈ க்கும் போயிட்டான். ஆச்சு இன்னும் ஒரு வருஷம்!’’ என்று அவளது நீண்ட கனவு கைவசமாவது, வெகு விரைவில் வருவது குறித்து அவள் மகிழ்ந்தாள்.
ஒரு பற்றுத் தேய்க்கும் வேலைக்காரி, பற்றுத் தேய்த்தே தன் மகனை எஞ்சினீயாள ஆக்கி விட்டாள் என்றால் அவளது மகிழ்ச்சிக்கு ஏது எல்லை? இடையில் அவள் பட்ட கஷ்டங்கள் அதன் முன்பு எம்மாத்திரம்.
அன்னபூரணி…
சென்ற இருபது வருஷங்களாக அவள் வேலைக்காரியாகத் தான் இருக்கிறாள்.
செல்வாக்கான பெரிய குடும்பத்தில் பி றந்தாள். தந்தை ஆரணியிலும் வேலூரிலும் பெரிய மண்டி வைத்து நடத்தியவர்.ஆயிரக் கணக்கில் பணம் புரளும்.
அவாள மிகவும் பெரும்பத்தான ஆசாமி. சாப்பாட்டுப் பி ரியாள.
வாழ்வை அதன் ரசம் அலுக்கும் வரை அனுபவித்தவாள.
மூதாதையார்சொத்து, மண்டி வருமானம் கரைவது அறியாமலேயே கரைந்தது.
அந்த நாளில் அன்னபூரணியின் இளமைப் பருவம், பக்தியிலும், படித்த புராணங்களின் ஆதர்ச நாயகிகளின் பெருமையிலுமே கழிந்தது. மார்கழி பி றந்தால் வீடே கொலு மண்டபமாகி விடும்.
விடியற்காலையிலிருந்தே ஆண்டாள் பாசுரங்களைப் படித்து, ஆண்டாள் இருந்த மாதிரியே முப்பது நாட்களும் விரதம் இருந்து, அம்மாதத்தைக் கொண்டாடுவாள்.
அந்த நாட்கள்… தெய்வீகக்களை ததும்பி ய அந்த வீட்டில் நோன்பருக்கும் பசுங்கிளி போல் அன்னபூரணி காத்த விரதம் யாவுமே வித்தியாசமானவை. அவளது கனவுகளில் ஸ்ரீ கிருஷ்ணனைப் போன்ற ஓர் உன்னதமான கணவனை அடைவதே லட்சியமாய் இருந்தது.
மனக் கோட்டைகள் எவ்வளவு வேதனைக்குரிய விதத்தில நகாளந்து போகின்றன! அன்னபூரணியின் தவமும் அப்படித் தான் ஆயிற்று.
அப்பாவின் வியாபாரக் கூட்டாளியாக இருந்த மனிதாள, அப்பாவுக்குத் தெரியாமலேயே பெருந் தொகையை ஏப்பமிட்டுவிட்டார்.
வியாபாரமும் மந்தமடைந்தது. சரக்கு போட்டுப் பணம் வாங்கிக் கொள்ளாதவாளகளும்,  ரொக்கமாகப் பணம் கொடுத்தவாளகளும் நெருக்கத் தொடங்கி விட்டார்கள்.
இன்றும் கூட ஒரு சம்பவம் பசுமை மாறாமல் அவர் நினைவில் பதிந்திருந்தது.
குடும்பத்தோடு எல்லோரும் ஊருக்குப் பக்கத்தில் உள்ள ஒரு சுனைக் கோயிலுக்குப் போய் விட்டிருக்கிறார்கள். அன்னபூரணியும் அவள் அத்தை ஒருத்தியும் மட்டும் தான் வீட்டில் இருப்பது.
கடன் கொடுத்தவர்கள் ஜப்தி வாரண்டுடன் வந்து கதவை இடிக்கிறார்கள். அத்தையோ ஒன்றும் தோன்றாமல் உள்ளுக்கும் வெளிக்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
விஷயத்தை அறிந்த உறவினர்  ஒருவர் புழக்கடை வாசற் பக்கமாக வந்து நகை நட்டுக்களையும், ரொக்கப் பணத்தையும் எடுத்துக் கொடுத்து விடு என்று வற்புறுத்துகிறார்…
ஆண் துணை இல்லை. என்ன வழி என்றும் தோன்றவில்லை. அந்நேரத்தில் யார் எதைச் சொன்னாலும் செய்து விடும் மனோநிலையில் இருந்த அத்தை, அவர் கோரியபடியே நகைகளையும் ரொக்கப் பணத்தையும் ஒரு மூட்டையில் வாரிக் கட்டிக் கொடுத்து விட்டாள் அவரிடம்.
அவாள வெளியேறிய மறு நிமிஷமே கதவை உடைத்துக் கொண்டு ஜப்திக்காரர்கள் உள்ளே நுழைந்து விட்டனர்.
நகையோடும் ரொக்கத்தோடும் வெளியேறிய ஆசாமி,  பத்து வருஷங்களுக்கு அந்த ஊரிலேயே தலை காட்டவில்லை. தலை தூக்க முடியாத அளவு அன்னபூரணியின் வீடு வீழ்ந்தது.
கக்கத்தில் ஒரு குடையை இடுக்கிக் கொண்டு கீழ்ப்பாய்ச்சு வேஷ்டியுடனும், நெற்றியில் பளிச்சென்ற விபூதியுமாக அவளுடைய அப்பா கந்தசாமிப் பி ள்ளை, அன்றாட வாழ்க்கை வண்டி ஓடுவதற்காகக் கணக்கு எழுதுவதற்கு கடை கடையாக ஏறி இறங்கினார்.
அவளது திருமணம் பெரிய நம்பி க்கையாக இருந்தது. கடமையாக மாறிச் சுமையாக முடிந்தது. அன்னபூரணியின் இடைவிடாதபி ரார்த்தனை.
அவளது நோன்புகளும், விரதங்களும் அவளது பேதை இதயத்தின் மதுரமான பொற் கனவுகள் யாவும் இடிந்து நொறுங்கின.வந்ததே போதும் என்று அவளை தூரத்து உறவினர் ஒருவருக்குக் கொடுத்து விட்டார்கள்.
ஈஸ்வரமூர்த்தி அவன் பெயர். ஆள் ஒடிசலாகக் கறுப்பாக இருந்தான். கிராமத்தில் சொற்ப நிலம் இருந்தது.
ஆனால் விவசாயம் செய்யவில்லை. கிராமத்தில் பெரிய கடை ஒன்றில் கணக்கெழுதிக் கொண்டிருந்தான்; சாதுர்யமற்ற மனிதன்.
வானளாவும் ஆசைகள்;  பேராசைகள் மண்டிய இதயம். அது ஒன்று தான் அவனைப் பற்றிய விசேஷ அம்சம்.
பெரிய கோடீஸ்வரனாய் விட வேண்டுமென்றும், மகத்தான தொழில்களைச் செய்ய வேண்டும் என்றும், சில்லறைக் கடை கல்லாவில் உட்கார்ந்தவாறே கனவு காண்பான்.தனது உள்ளத்தில் பொங்கிக் குமுறிக் கொண்டிருந்த ஆசைகளின் மார்க்கம் தெரியாத பாதையில் ஈஸ்வரமூர்த்தி ஓடத் தலைப்பட்டான்.
நிலத்தை விற்று ரொக்கத்துட்ன சென்னைக்குச் சென்று தொழில் ஆரம்பி த்தான்.முன் பன் அனுபவமில்லாததால் வியாபாரம்,  மூன்றே மாதத்தில் படுத்தது.பக்கிரியாகத் திரும்பி  வந்தான். மனத்தின் ஆசைத் தீ தணியவில்லை. இப்படியே பல ஊர்கள், பல தொழில்கள்.
அன்னபூரணி வாழாவெட்டியைப் போலக் கணவன் வீட்டிலிருந்து கொண்டு, உறக்கமற்ற இரவுகளில் கேட்கும் சின்னஞ்சிறு ஓசையும் அவன் தானோ என்று தவித்துக் கொண்டிருப்பாள்.
ரகு அப்போது பிறந்து விட்டான். பணம், தொழில்  இவற்றின் தாக்கத்தால்  ஈஸ்வரமூர்த்திக்கு ஓர் இதயம் தனக்காக உருகித் தவித்துக் கிடப்பதும் அதன் அருமையும் தெரியவே இல்லை.
ஒரு தடவை மலேசியாவிலே பெரிய தொழில்கள் செய்ய முடியும் என்று யாரோ சொன்னதைக் கேட்டுப் புறப்பட்டுப் போனான்.
இருபது வருஷங்கள் ஆயின. இத்தனை வருஷமும் காட்டில் காய்ந்த நிலவைப் போல அவளது அழகும், உள்ளமும் அவனுக்காகவே காத்துக் காத்து வீணாயின.
ஒரே ஒரு கடிதம்!
மலேசியா போனவர் கள் யாரிடமிருந்தாவது ஒரு செய்தி!
அதற்காகத் தவித்தாள் அன்னபூரணி. அக்கம் பக்கத்து ஊர் களில் மலேஷியாவிலிருந்து யாராவது வந்தால், ரகுநாதனைத் தூக்கிக் கொண்டு ஓடுவாள். மலேஷியாவின் ஏதோ ஒரு மூலையிலிருந்து வந்த அவர் களால், அவளது ஆர் வமான கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது.
என்றோ ஒரு நாள் அவாள திரும்ப வருவார் என்ற நம்பி க்கை மட்டும் எவ்வாறோ மிஞ்சிற்று.
அண்ணன் தம்பி யென்று பேருக்கும் ஊருக்குமாக அவளுக்கு சகோதராளகள் இருந்தார்கள்.
அவரவர்  வாழ்க்கை… அவரவர்  வீடு அவரவர் கவலைகள் என்று இறுகி விட்ட மனசோடு பாராமுகமாகி விட்டார்கள்.
ரகுநாதனைப் படிக்க வைக்க வேண்டுமென்று அன்னபூரணி விரும்பி னாள். மாமனார் வீடு என்று சொல்லிக் கொள்ளவும், ஆதரவு தரவும் யாருமில்லாததால் பி றந்த வீட்டிற்கே வந்தாள்.
மனிதர்கள் எவ்வளவு அற்ப புத்தி படைத்தவர் கள் என்று அப்போது நிறையப் பார்த்து விட்டாள் அன்னபூரணி. பார்க்கப் பார்க்க அதிர்ச்சி உண்டாயிற்றே தவிர வெறுப்பு உண்டாகவில்லை.
அவள் சொந்த கைகளையே நம்பினாள் . ஊரில் இருந்த வரைக்கும் நெல் மிஷினில் கூலிக்காரி போல், தவிடு விட்டுக் கொண்டிருந்தாள்.
அண்ணன் தம்பி கள் மானம் போவதாக அரற்றிக் கொண்டதால், பக்கத்து வீட்டில் குடியிருந்த போஸ்ட்மாஸ்டர்  மனைவி சென்னைக்கு மாற்றலாகிப் போகும் போது, வீட்டோடு இருந்துவிட அழைத்தாள்.
ரகுநாதன் அவள் வாழ்க்கைக்கு பலம் தந்தான்.
அர்த்தமானான். தாய் உள்ளத்தின் பாய்மரம் உயர்ந்தது. ஈஸ்வரமூர்த்தியினால் கை விடப்பட்டு, உறவினரிடம் வாழாவெட்டி என்று பட்டம் சுமந்து, பிரேத மாய்த் திரிந்த அன்னபூரணி க்கு அலைகடலில் மிதந்து செல்ல, குழந்தை ரகுவின் எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள் உதித்தன.
போஸ்ட்மாஸ்டரின் மனைவி காசரோகம் வந்து காலமாய் விடவே, சென்னையில் தன்னந்தனியாக அனாதை போல் நின்றாள்.
முறைவாசல்… பற்றுப் பாத்திரம்... எத்தனையோ வீடுகள் அனாதைக்குத் தான் வாழ்வில் எதையும் ஏற்றுக் கொள்ளும் நெஞ்சுரம் வருகிறது.
ரகுநாதனைப் பெரிய டாக்டராகவோ என்ஜினியராகவோ ஆக்கிப் பார்த்து விட வேண்டுமென்ற ஆசை. கடைசியில் ஜஸ்டிஸ் ஆனந்தரங்கத்தின் வீடு அவளை வரவேற்றது.
அவரது சிபாரிசை பிடித்து ஓ அனாதை ஹாஸ்டலில் அவனைச் சேர் த்து விட்டாள்.
மேல்நிலைப் பள்ளிப் படிப்பு வரை ரகுநாதன் அந்த ஹாஸ்டலில் ..அம்மாவின் உழைப்பு தருகிற சௌகரியங்களில் தான் வாழ்ந்து வந்தான். படிக்கும் காலத்தில் சில டியூஷன்கள், பத்திரிகைகளுக்கு எழுதுவது இவற்றில் தன்னைச் சமாளித்துக் கொண்டு என்ஜினியரிங் காலேஜ் ஹாஸ்டலில் சேர்ந்தான்.
எப்படியோ அன்னபூரணி நினைத்ததை ச் சாதித்து வருகிறாள்.
பெரிய வைராக்கியத்துடன், அவள் தனக்குத் தானே விட்டுக் கொண்ட அந்த சவால் பூர்த்தியாக,  ஒரே ஒரு வருஷம் தான் பாக்கி.
காலை மணி ஆறரை.
ஆனந்தரங்கம்,  கீழ்ப்பாய்ச்சி ஒரு குடியானவனைப் போல் வேட்டி கட்டிக் கொண்டு தோட்டத்துக் கீரைப் பாத்திகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.
தோட்டத்துப் பம்பு  ஷெட்டிலிருந்து நீர் குதித்துத் குதித்துப் பாய்ந்து கொண்டிருந்தது. பொன் வெயிலின் கிரணங்கள் அந்த நீரில் பட்டு மின்னின.
ஆனந்தரங்கத்தின் தோட்டம் பெரியது தான்.  மாமரங்கள், கொய்யா, மரங்கள், தென்னை என்று சிறிய தோப்பாகக் கவிந்திருந்தது.
அதன் மத்தியில் ஒரு சிறு மண் வீடு,  மஞ்சம்புல் போர்த்தியது.  ஆசிரமம் மாதிரியிருக்கும். ஆனந்தரங்கம் தனது எதிர் காலத்திற்கென்று திட்டமிட்டு இந்த இடத்தை ஏற்பாடு செய்து வைத்ததைப் போல தோன்றும்.
“என்னங்க, என்னங்க?’’ என்று கூப்பி ட்டவாறே அருகில் வந்து நின்றாள் பாக்கியம்.
பம்ப் ஷெட்டின் ஓசையினாலும்,  வேலை மும்முரத்திலும் ஆனந்தரங்கத்தின் காதில் அது விழவில்லை.
பாக்கியம் இன்னொரு தடவை உரக்கக் கூப்பி ட்டாள்.
மண்வெட்டியோடு ஆனந்தரங்கம் நிமிர்ந்தார்.
“என்ன பாக்கியம்?’’
“அப்பா, இப்பவாவது காதிலே விழுந்ததே, ஆமாம்! மணி என்ன ஆச்சுன்னு நெனைச்சுட்டு நீங்க தோட்டத்திலே வந்து எறங்கிட்டீங்க?’’
“மணி என்ன?’’
“ஆறரை மேலே ஆகிறது!’’
“ஆறரை தானே!’’
“சரி தான், இன்னிக்குக் கோர்ட்டுக்குப் போறதுக்கு முன்னே எழும்பூரிலே யாரையோ போய் பார்க்கணுன்னு சொன்னீங்களே?’’
“ஓ. நல்ல காலம், ஞாபகப் படுத்தினே, பாக்கியம் தோட்டக்காரன் வந்துட்டானா?’’ என்று கேட்டவாறே மண்வெட்டியை வைத்து விட்டு பம்ப் ஷெட்டை நோக்கி நடந்தார் ஆனந்தரங்கம்.
வாயைக் கொப்பளித்து முகம் கழுவிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார்.
வாசலில் நின்ற வேலைக்காரன் “சார் யாரோ பார்க்க வந்திருக்காங்க’’ என்றான்.
“யாரது?’’ என்று அவர் கேட்பதற்குள் காதில் கடுக்கன் அணிந்த ஒரு பெரியவர் கும்பி டு போட்டவாறே உள்ளே நுழைந்தார்.
அவருடன் கூட வந்த ஒரு இளம் பெண் தங்கச்சிலை  மாதிரி கண்களிலும் உதடுகளிலும் கருணை கோரும் ஒரு தீனப்பார்வையோடு சற்றும் எதிர்பாராமல் அவர் கால்களில் வந்து விழுந்தாள்.[தொடரும்]

Thursday 17 September 2015

பொன்னியின் செல்வன் படக்கதை-1

பொன்னியின் செல்வன்
இந்தப்பதிவில் இருந்து  
படக்கதை தொடர்கிறது

[தொடரும்]
காப்பிரைட் உள்ளது. 

அத்தியாயம் 7 – சிரிப்பும் கொதிப்பும்


அரசுரிமையைப் பற்றிப் பழுவேட்டரையரின் வார்த்தைகளைக் கேட்டதும் வந்தியத்தேவன் உடனே ஒரு முடிவுக்கு வந்தான். அரசுரிமையைப் பற்றி இவர்கள் என்ன பேசப் போகிறார்கள்? இவர்கள் யார் பேசுவதற்கு? இந்தக் கூட்டத்தில் நடக்கப் போவதை அறிந்து கொண்டே தீரவேண்டும்! இங்கேயே உட்கார வேண்டியதுதான். இதைக் காட்டிலும் வசதியான இடம் வேறு கிடையாது. ஆழ்வார்க்கடியான் எப்படியாவது போகட்டும் அவனைப்பற்றி நமக்கு என்ன கவலை?
இன்றைக்கு இங்கு ஏதோ மர்மமான நிகழ்ச்சி நடைபெறப் போகிறது என்ற எண்ணம் வந்தியத்தேவன் மனத்தில் முன்னமே உண்டாகியிருந்தது. ஆழ்வார்க்கடியானின் விபரீதமான பொருள் தரும் வார்த்தைகள், கோட்டை வாசற் காவலர்களின் துடுக்கான நடத்தை, சம்புவரையரின் அரைமனதான வரவேற்பு, வெறியாட்டம் ஆடிய சந்நதக்காரனின் ஆவேச மொழிகள் இவையெல்லாம் அவனுக்கு ஏதேதோ சந்தேகங்களை உண்டாக்கியிருந்தன. அந்தச் சந்தேகங்களையெல்லாம் நீக்கிக் கொள்ளவும், உண்மையை அறிந்து கொள்ளவும் இதோ ஒரு சந்தர்ப்பம் தெய்வாதீனமாகக் கிடைத்திருக்கிறது; அதை ஏன் நழுவவிட வேண்டும்? ஆகா! தன்னுடைய உயிருக்குயிரான நண்பன் என்று கருதி வந்த கந்தமாறன் கூடத் தன்னிடம் உண்மையைச் சொல்லவில்லை. தன்னைத் தூங்க வைத்துவிட்டு, இந்த ரகசிய நள்ளிரவுக் கூட்டத்துக்கு வந்திருக்கிறான். அவனை நாளைக்கு ஒரு கை பார்க்க வேண்டியதுதான்.
இதற்குள் கீழே பழுவேட்டரையர் பேசத் தொடங்கி விட்டார். வந்தியத்தேவன் காது கொடுத்துக் கவனமாகக் கேட்கலானான்.
“உங்களுக்கெல்லாம் மிக முக்கியமான ஒரு செய்தியை அறிவிக்கவே நான் வந்திருக்கிறேன். அதற்காகவே இந்தக் கூட்டத்தைச் சம்புவரையர் கூட்டியிருக்கிறார். சுந்தரசோழ மஹாராஜாவின் உடல்நிலை மிகக் கவலைக்கிடமாயிருக்கிறது. அரண்மனை வைத்தியர்களிடம் அந்தரங்கமாகக் கேட்டுப் பார்த்தேன். அவர்கள் ‘இனிமேல் நம்பிக்கைக்கு இடமில்லை; அதிக காலம் உயிரோடு இருக்க மாட்டார்’ என்று சொல்லி விட்டார்கள். ஆகவே, இனிமேல் நடக்க வேண்டிய காரியங்களைப்பற்றி நாம் இப்போது யோசித்தாக வேண்டும்!” என்று கூறிப் பழுவேட்டரையர் நிறுத்தினார்.
“ஜோசியர்கள் என்ன சொல்கிறார்கள்?” என்று கேட்டார் கூட்டத்தில் ஒருவர்.
“ஜோசியர்களைப் போய்க் கேட்பானேன்? சில நாளாகப் பின் மாலை நேரத்தில் வானத்தில் வால்நட்சத்திரம் தெரிகிறதே! அது போதாதா! என்றார் ஒருவர்.
பின்னர் பழுவேட்டரையர் கூறினார்: “ஜோசியர்களையும் கேட்டாகிவிட்டது அவர்கள் சில காலம் தள்ளிப் போடுகிறார்கள்; அவ்வளவுதான். எப்படியிருந்தாலும், அடுத்தாற்போல் பட்டத்துக்கு உரியவர் யார் என்பதை நாம் யோசித்தாக வேண்டும்…”
“அதைப் பற்றி இனி யோசித்து என்ன ஆவது? ஆதித்த கரிகாலருக்குத்தான் இளவரசுப் பட்டம் இரண்டு வருஷத்துக்கு முன்பே கட்டியாகிவிட்டதே!” என்று இன்னொரு கம்மலான குரல் கூறியது.
“உண்மைதான், ஆனால் அப்படி இளவரசுப் பட்டம் கட்டுவதற்கு முன்னால் நம்மில் யாருடைய யோசனையாவது கேட்கப்பட்டதா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இங்கே கூடியுள்ள நாம் ஒவ்வொருவரும் நூறு ஆண்டுக்கு மேலாக, நாலு தலைமுறையாக, சோழ ராஜ்யத்தின் மேன்மைக்காகப் பாடுபட்ட பழங்குடியைச் சேர்ந்தவர்கள். என் பாட்டனாருக்குத் தந்தை திருப்புறம்பியம் போரில் இறந்தார். என் பாட்டனார் வேளூரில் நடந்த போரில் உயிர் விட்டார். என் தந்தை தக்கோலத்தில் உயிர்த் தியாகம் செய்தார். அம்மாதிரியே உங்கள் ஒவ்வொருவரின் மூதாதையரும் இந்தச் சோழ நாட்டின் மேன்மையை நிலைநாட்டுவதற்காக உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். நம் ஒவ்வொருவருடைய குடும்பத்திலும் இளம் பிள்ளைகள் யுத்தகளத்தில் செத்திருக்கிறார்கள். இன்றைக்கும் ஈழ நாட்டில் நம்முடைய குலத்தையும் குடும்பத்தையும் சேர்ந்த பிள்ளைகள் போர் செய்து வருகிறார்கள். ஆனால் அடுத்தபடியாகப் பட்டத்துக்கு வரவேண்டியவர் யார் என்பது பற்றித் தீர்மானிப்பதில் நம்முடைய அபிப்பிராயத்தை மகாராஜா கேட்கவில்லை. தசரதர்கூட இராமருக்குப் பட்டம் கட்டுவது பற்றி மந்திராலோசனை சபை கூட்டி யோசனை செய்தார். மந்திரிகளையும், சாமந்தகர்களையும், சேனைத் தலைவர்களையும், சிற்றரசர்களையும் ஆலோசனை கேட்டார். ஆனால் சுந்தர சோழ மகாராஜா யாருடைய யோசனையையும் கேட்பது அவசியம் என்று கருதவில்லை..”
“நம்மை யோசனை கேட்கவில்லையென்பது சரிதான். ஆனால் யாரையுமே யோசனை கேட்கவில்லையென்று இறைவிதிக்கும் தேவர் கூறுவது சரியன்று. பெரிய பிராட்டியாரான செம்பியன் மகாதேவியின் யோசனையும், இளைய பிராட்டியாரான குந்தவை தேவியின் யோசனையும் கேட்கப்பட்டன. இல்லையென்று பழுவேட்டரையர் கூற முடியுமா?” என்று கேலியான தொனியில் ஒருவர் கூறவும், கூட்டத்தில் ஒரு சிலர் சிரித்தார்கள்.
“ஆகா! நீங்கள் சிரிக்கிறீர்கள்! எப்படித்தான் உங்களுக்குச் சிரிக்கத் தோன்றுகிறதோ, நான் அறியேன். நினைக்க நினைக்க எனக்கு வயிறு பற்றி எரிகிறது; இரத்தம் கொதிக்கிறது. எதற்காக இந்த உயிரை வைத்துக் கொண்டு வெட்கங்கெட்டு வாழ வேண்டும் என்று தோன்றுகிறது. இன்று சந்நதம் வந்து ஆடிய ‘தேவராளன்’ துர்க்கை பலி கேட்பதாகச் சொன்னான். ‘ஆயிரம் வருஷத்துப் பரம்பரை ராஜ வம்சத்தில் பிறந்த நரபலி வேண்டும்’ என்று சொன்னான். என்னைப் பலி கொடுத்து விடுங்கள். என்னுடைய குலம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் தொன்மையானது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கத்தியினால் என் கழுத்தில் ஒரு போடு போட்டுப் பலி கொடுத்து விடுங்கள். அன்னை துர்க்கை திருப்தி அடைவாள்; என் ஆத்மாவும் சாந்தி அடையும்…”
இவ்விதம் ஆவேசம் வந்து ஆடிய சந்நதக்காரனைப் போலவே வெறி கொண்ட குரலில் சொல்லிப் பழுவேட்டரையர் நிறுத்தினார்.
சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. மேற்குத் திசைக் காற்று ‘விர்’ என்று அடிக்கும் சப்தமும், அந்தக் காற்றில் கோட்டைச் சுவருக்கு வெளியேயுள்ள மரங்கள் ஆடி அலையும் ‘மர்மர’ சப்தமும் கேட்டன.
“ஏதோ தெரியாத்தனமாகப் பேசிவிட்ட பரிகாசப் பேச்சையும், அதனால் விளைந்த சிரிப்பையும் பழுவூர் மன்னர் பொறுத்தருள வேண்டும். தாங்கள் எங்களுடைய இணையில்லாத் தலைவர். தாங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்ற இங்குள்ளவர் அனைவரும் சித்தமாயிருக்கிறோம். தாங்கள் காட்டிய வழியில் நடக்கிறோம். தயவு செய்து மன்னித்துக் கொள்ள வேண்டும்!” என்று சம்புவரையர் உணர்ச்சியுடனே கூறினார்.
“நானும் கொஞ்சம் பொறுமை இழந்து விட்டேன். அதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஒரு விஷயத்தை எண்ணிப் பாருங்கள். சரியாக இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் விஜயாலய சோழர் முத்தரையர்களை முறியடித்துத் தஞ்சாவூரைக் கைப்பற்றினார். திருப்புறம்பியம் போரில் பல்லவ சைன்யத்துக்குத் துணையாக நின்று மதுரைப் பாண்டியரின் படையை நிர்மூலமாக்கினார். அதுமுதலாவது சோழ ராஜ்யம் நாளுக்கு நாள் பெருகி விஸ்தரித்து வந்திருக்கிறது. காவேரி நதிக்குக் கரையெடுத்த கரிகால் வளவர் காலத்திலேகூடச் சோழ ராஜ்யம் இவ்வளவு மகோன்னதத்தை அடைந்தது கிடையாது. இன்றைக்குத் தெற்கே குமரி முனையிலிருந்து வடக்கே துங்கபத்திரை – கிருஷ்ணை வரையில் சோழ சாம்ராஜ்யம் பரந்து விரிந்து கிடக்கிறது. பாண்டிய நாடு, நாஞ்சில் நாடு, யாருக்கும் இதுவரையில் வணங்காத சேர நாடு, தொண்டை மண்டலம், பாகி நாடு, கங்கபாடி, நுளம்பபாடி, வைதும்பர் நாடு, சீட்புலி நாடு, பெரும்பாணப்பாடி, பொன்னி நதி உற்பத்தியாகும் குடகு நாடு ஆகிய இத்தனை நாடுகளும் சோழ சாம்ராஜ்யத்துக்கு அடங்கிக் கப்பம் செலுத்தி வருகின்றன. இவ்வளவு நாடுகளிலும் நம் சோழ நாட்டுப் புலிக்கொடி பறக்கிறது. தெற்கே ஈழமும் வடக்கே இரட்டை மண்டலமும் வேங்கியும் கூட இதற்குள் நமக்குப் பணிந்திருக்க வேண்டும். அப்படிப் பணியாததற்குக் காரணங்களை நான் சொல்ல வேண்டியதில்லை; அவைகள் எல்லாம் உங்களுக்குத் தெரிந்ததுதான்!…”
“ஆம்; எல்லோருக்கும் தெரியும்; ஈழமும் இரட்டைப்பாடியும் வேங்கியும் கலிங்கமும் பணியாததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒரு காரணம் வடதிசை மாதண்ட நாயகராகிய இளவரசர் ஆதித்த கரிகாலர்; இன்னொரு காரணம் தென் திசைப் படைத் தலைவரான அவருடைய தம்பி அருள்மொழிவர்மர்..”
“மழவரையர் கூறும் காரணத்தை நான் ஒப்புக் கொள்கிறேன். சென்ற நூறாண்டு காலமாக இந்தச் சோழ நாட்டில் சேனாபதி நியமிக்கும் மரபு வேறாயிருந்தது. பல யுத்தங்களில் ஈடுபட்டு அனுபவம் பெற்ற வீராதி வீரர்களையே படைத் தலைவர்களையும் மாதண்ட நாயகர்களாகவும் நியமிப்பார்கள். ஆனால் இப்போது நடந்திருப்பது என்ன? மூத்த இளவரசர் வடதிசைச் சேனையின் சேனாபதி; அவர் என்ன செய்கிறார்? இரட்டை மண்டலத்தின் மீதும் வேங்கி நாடு மீதும் படையெடுத்துப் போகவில்லை. காஞ்சிபுரத்தில் உட்கார்ந்து கொண்டு பொன் மாளிகை கட்டிக் கொண்டிருக்கிறார். வீரப் பெருங்குடியில் பிறந்த வீராதி வீரர்களாகிய உங்களைக் கேட்கிறேன். இதற்கு முன்னால் தமிழகத்தில் எந்த மன்னராவது தாம் வசிப்பதற்குப் பொன்னால் மாளிகை கட்டியதுண்டா? உலகமெங்கும் புகழ் பரப்பி இப்போது கைலாச வாசியாயிருக்கும் மதுரையும் ஈழமும் கொண்ட பராந்தக சக்கரவர்த்திகூடத் தாம் வசிப்பதற்குப் பொன் மாளிகை கட்டிக் கொள்ளவில்லை. தில்லைச் சிற்றம்பலத்துக்குத்தான் பொன் கூரை வேய்ந்தார். ஆனால் இளவரசர் ஆதித்த கரிகாலர் தாம் வசிப்பதற்குக் காஞ்சிபுரத்தில் பொன் மாளிகை கட்டுகிறார்! பல்லவ சக்கரவர்த்திகள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து ராஜ்ய பாரம் புரிந்த அரண்மனைகள் இவருடைய அந்தஸ்துக்குப் போதவில்லையாம். பொன்னிழைத்த அரண்மனை கட்டுகிறார். ரத்தினங்களையும் வைடூரியங்களையும் அப்பொன் மாளிகைச் சுவர்களில் பதிக்கிறார். கங்கபாடி, நுளம்பபாடி, குடகு முதலிய நாடுகளில் வெற்றியடைந்து, கைப்பற்றிக் கொண்டு வந்த பொருளில் ஒரு செப்புக் காசாவது தலைநகரிலுள்ள பொக்கிஷ சாலைக்கு அவர் இதுவரை அனுப்பவில்லை..”
“பொன் மாளிகை கட்டி முடிந்து விட்டதா?”
“ஆம், முடிந்து விட்டது என்று என்னுடைய அந்தரங்க ஒற்றர்கள் மூலம் அறிந்தேன். அத்துடன் சுந்தர சோழ மகாராஜாவுக்கு அவருடைய அருமை மூத்த புதல்வரிடமிருந்து கடிதங்களும் வந்தன. புதிதாக நிர்மாணித்திருக்கும் பொன் மாளிகையில் வந்து சுந்தர சோழ மகாராஜா சில காலம் தங்கியிருக்க வேண்டும் என்று.”
“மகாராஜா காஞ்சிக்குப் போகப் போகிறாரா?” என்று ஒருவர் கவலை ததும்பிய குரலில் கேட்டார்.
“அத்தகைய கவலை உங்களுக்கு வேண்டாம், அப்படி ஒன்றும் நேராமல் பார்த்துக் கொள்ள நான் இருக்கிறேன்; தஞ்சைக் கோட்டைக் காவலனாகிய என் சகோதரனும் இருக்கிறான். சின்னப் பழுவேட்டரையன் அனுமதி இல்லாமல் யாரும் தஞ்சைக் கோட்டைக்குள் புக முடியாது. என்னையறியாமல் யாரும் மகாராஜாவைப் பேட்டி காணவும் முடியாது; ஓலை கொடுக்கவும் முடியாது. இது வரையில் இரண்டு மூன்று தடவை வந்த ஓலைகளை நிறுத்தி விட்டேன்.”
“வாழ்க பழுவேட்டரையர்!”, “வாழ்க பழுவூர் மன்னரின் சாணக்ய தந்திரம்!”, “வாழ்க அவர் வீரம்!” என்னும் கோஷங்கள் எழுந்தன.
“இன்னும் கேளுங்கள், பட்டத்து இளவரசர் செய்யும் காரியங்களைக் காட்டிலும் ஈழத்தில் போர் நடத்தச் சென்றிருக்கும் இளவரசர் அருள்மொழிவர்மரின் காரியங்கள் மிக மிக விசித்திரமாயிருக்கின்றன. யுத்த தர்மத்தைப் பற்றி நாம் அறிந்திருப்பதென்ன? பரம்பரையாகப் பல நூறு ஆண்டுகளாக ‘நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்திருப்பதென்ன? நம் நாட்டுப் படைகள் வேறு நாடுகளின் மீது படை எடுத்துச் சென்றால், நம் படைகளுக்கு வேண்டிய உணவுகளை அந்த வேற்று நாடுகளிலேயே சம்பாதித்துக் கொள்ள வேண்டும். அந்த நாடுகளில் கைப்பற்றும் பொருளைக் கொண்டே வீரர்களுக்கு ஊதியமும் கொடுக்க வேண்டும். மிகுந்த பொருளைத் தலைநகரிலுள்ள அரசாங்க பொக்கிஷத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் இளவரசர் அருள்மொழிவர்மர் என்ன செய்கிறார் தெரியுமா? ஈழ நாட்டிலுள்ள நம் போர் வீரர்களுக்கெல்லாம் இங்கிருந்து கப்பல்களில் உணவு அனுப்பி வைக்க வேண்டுமாம்! ஒரு வருஷ காலமாக நானும் பத்துத் தடவை பல கப்பல்களில் ஏற்றி உணவு அனுப்பி வந்திருக்கிறேன்..”
“விந்தை! விந்தை!”, “இந்த அநியாயத்தைப் பொறுக்க முடியாது!”, “இப்படிக் கேட்டதே இல்லை!” என்ற குரல்கள் எழுந்தன.
“இந்த அதிசயமான காரியத்துக்கு இளவரசர் அருள்மொழிவர்மர் கூறும் காரணத்தையும் கேட்டு வையுங்கள். படையெடுத்துச் சென்ற நாட்டில் நம் வீரர்களுக்கு வேண்டிய உணவுப் பொருளைச் சம்பாதிப்பது என்றால், அங்குள்ள குடிமக்களின் அதிருப்திக்கு உள்ளாக நேரிடுமாம். ஈழத்து அரச குலத்தாரோடு நமக்குச் சண்டையே தவிர ஈழத்து மக்களோடு எவ்விதச் சண்டையும் இல்லையாம். ஆகையால் அவர்களை எவ்விதத்திலும் கஷ்டப்படுத்தக் கூடாதாம்! அரச குலத்தாருடன் போராடி வென்ற பிறகு மக்களின் மனமார்ந்த விருப்பத்துடன் ஆட்சி நடத்த வேண்டுமாம். ஆகையால் பணமும் உணவும் இங்கிருந்து அனுப்ப வேண்டுமாம்!”
இச்சமயம் கூட்டத்தில் ஒருவர், “படையெடுத்துச் சென்ற நாடுகளில் உள்ள ஜனங்களிடம் ஒன்றுமே கேட்கக் கூடாது; அவர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டும் என்ற யுத்த தர்மத்தை இதுவரை நாங்கள் கேட்டதே கிடையாது!” என்றார்.
“அதனால் விளையும் விபரீதத்தையும் கேளுங்கள். இரண்டு இளவரசர்களும் சேர்ந்து செய்யும் காரியங்களினால் தஞ்சை அரண்மனைத் தன பொக்கிஷமும் தானிய பண்டாரமும் அடிக்கடி மிகக் குறைந்து போகின்றன. உங்களுக்கெல்லாம் அதிக வரி போட்டு வசூலிக்கும் நிர்ப்பந்தம் எனக்கு ஏற்படுகிறது. இதற்காகத்தான் என்னை இறை அதிகாரியாக நியமித்திருக்கிறார்கள்! சோழ நாட்டின் மேன்மையே முக்கியம் என்று நான் கருதியிராவிட்டால், எப்பொழுதோ இப்பதவியை விட்டுத் தொலைத்திருப்பேன்.”
“ஆ! கூடவே கூடாது! தாங்கள் இப்பதவியிலிருப்பதுதான் எங்களுக்கெல்லாம் பெரிய பாதுகாப்பு. இந்த முறைகேடான காரியங்களைப் பற்றித் தாங்கள் மகாராஜாவிடம் சொல்லிப் பார்க்க வில்லையா?”
“சொல்லாமல் என்ன! பல தடவை சொல்லியாகிவிட்டது. ஒவ்வொரு தடவையும் பெரிய பிராட்டியிடம் கேளுங்கள்; இளையபிராட்டியிடம் கேளுங்கள்!’ என்ற மறுமொழிதான் கிடைக்கிறது. முன்னமே தான் சொன்னேனே, மகாராஜாவுக்குச் சுயமாகச் சிந்தனை செய்யும் சக்தியே இப்போது இல்லாமற் போய்விட்டது! முக்கியமான காரியங்களில் நம்முடைய யோசனைகளைக் கேட்பதும் இல்லை. அவருடைய பெரியன்னை செம்பியன் மாதேவியின் வாக்குத்தான் அவருக்கு வேதவாக்கு; அடுத்தபடியாக, அவருடைய செல்வக் குமாரி குந்தவைப்பிராட்டியிடம் யோசனை கேட்கச் சொல்கிறார். இராஜ்ய சேவையில் தலை நரைத்துப் போன நானும் மற்ற அமைச்சர்களும் அந்தச் சின்னஞ்சிறு பெண்ணிடம் கொள்ளிடத்துக்கு வடக்கேயும் குடமுருட்டிக்குத் தெற்கேயும் சென்றறியாத பெண்ணிடம் யோசனை கேட்பதற்குப் போய் நிற்க வேண்டும்; எப்படியிருக்கிறது கதை! இந்தச் சோழ ராஜ்யம் ஆரம்பமான காலத்திலிருந்து இப்படி இராஜ்ய காரியங்களில் பெண்கள் தலையிட்டதாக நாம் கேள்விப்பட்டதில்லை! இத்தகைய அவமானத்தை எத்தனை நாள் நாம் பொறுத்திருக்கமுடியும்? அல்லது நீங்கள் எல்லாரும் ஒருமுகமாகச் சொன்னால், நான் இந்த ராஜாங்கப் பொறுப்பையும், வரி விதித்துப் பொக்கிஷத்தை நிரப்பும் தொல்லையையும் விட்டு விட்டு என் சொந்த ஊரோடு இருந்து விடுகிறேன்…”
“கூடாது! கூடாது! பழுவூர்த்தேவர் அப்படி எங்களைக் கைவிட்டு விடக் கூடாது. அரும்பாடுபட்டு, ஆயிரமாயிரம் வீரர்கள் நாலு தலைமுறைகளாகத் தங்கள் இரத்தத்தைச் சிந்தி ஸ்தாபித்த சோழ சாம்ராஜ்யம் ஒரு நொடியில் சின்னாபின்னமாய்ப் போய் விடும்” என்றார் சம்புவரையர்.
“அப்படியானால் இந்த நிலைமையில் என்ன செய்வது என்று நீங்கள்தான் எனக்கு யோசனை சொல்ல வேண்டும். அல்லி ராஜ்யத்தைவிடக் கேவலமாகிவிட்ட இந்தப் பெண்ணரசுக்குப் பரிகாரம் என்ன என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்” என்றார் பழுவூர் மன்னர்.

அத்தியாயம் 8 – பல்லக்கில் யார்?


சற்று நேரம் அந்தக் கூட்டத்தில் ஒருவருக்கொருவர் ஏதோ பேசி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். பல குரல்கள் ஒருங்கே கலந்து ஒலித்தபடியால் வந்தியத்தேவன் காதில் ஒன்றும் தெளிவாக விழவில்லை.
சம்புவரையர் உரத்த குரலில், ” பழுவூர் மன்னர் கேட்டதற்கு நாம் மறுமொழி சொல்ல வேண்டாமா? தலைக்குத் தலை பேசிக் கொண்டிருந்தால் என்ன ஆகிறது? இரவு மூன்றாம் ஜாமம் ஆரம்பமாகி விட்டது. அதோ சந்திரனும் வந்து விட்டது” என்றான்.
“எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. என்னைப் போல் இன்னும் சிலருடைய மனத்திலும் அது இருக்கலாம். பழுவூர்த்தேவர் கோபித்துக் கொள்வதில்லையென்றால், அதைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன்!” என்று முன்னால் ஒரு தடவை பேசிய கம்மல் குரல் சொல்லிற்று.
“இப்போது பேசுகிறது வணங்காமுடியார் தானே? எழுந்து நன்றாக வெளிச்சத்திற்கு வரட்டும்!” என்றார் பழுவேட்டரையர்.
“ஆமாம்; நான் தான் இதோ வெளிச்சத்துக்கு வந்து விட்டேன்.
“என்னுடைய கோபத்தையெல்லாம் நான் போர்க்களத்தில் காட்டுவதுதான் வழக்கம்; பகைவர்களிடம் காட்டுவது வழக்கம்; என் சிநேகிதர்களிடம் காட்டமாட்டேன். ஆகையால் எது வேண்டுமானாலும் மனம் விட்டுத் தாராளமாகக் கேட்கலாம்.”
“அப்படியானால் கேட்கிறேன், சுந்தரசோழ மகாராஜாவின் பேரில் பழுவேட்டரையர் என்ன குற்றம் சொல்கிறாரோ, அதே குற்றத்தைப் பழுவேட்டரையர் மீதும் சிலர் சுமத்துகிறார்கள்! அதை நான் நம்பாவிட்டாலும் இந்தச் சமயத்தில் கேட்டுத் தெளிய விரும்புகிறேன்!” என்றார் வணங்காமுடியார்.
“அது என்ன? எப்படி? விவரம் சொல்ல வேணும்?”
“பழுவூர்த்தேவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை மணம் புரிந்து கொண்டது நம் எல்லோருக்கும் தெரியும்…”
இச்சமயம், சம்புவரையரின் குரல் கோபத்தொனியில், “வணங்காமுடியார் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம். நம் மாபெருந் தலைவரை, நமது பிரதம விருந்தாளியை, இவ்விதம் அசந்தர்ப்பமான கேள்வி கேட்பது சிறிதும் தகாத காரியம்…” என்றார்.
“சம்புவரையரைப் பொறுமையாயிருக்கும்படி நான் ரொம்பவும் கேட்டுக் கொள்கிறேன். வணங்காமுடியார் கேட்க விரும்புவதைத் தாராளமாகக் கேட்கட்டும். மனத்தில் ஒன்றை வைத்துக் கொண்டிருப்பதைவிடக் கீறிக் கேட்டு விடுவதே நல்லது. ஐம்பத்தைந்து பிராயத்துக்கு மேல் நான் ஒரு பெண்ணை மணந்து கொண்டது உண்மைதான். அதைத் தாராளமாக ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நான்தான் கலியுக ராமாவதாரம் என்று எப்போதும் சொல்லிக் கொண்டதில்லை. ஏகபத்தினி விரதம் கொண்டவன் என்றும் சொல்லிக் கொண்டதில்லை. அந்தப் பெண்ணை நான் காதலித்தேன்; அவளும் என்னைக் காதலித்தாள். பழந்தமிழ்நாட்டு முறைப்படி இஷ்டப்பட்டு மணந்து கொண்டோம் இதில் என்ன தவறு?”
“ஒரு தவறும் இல்லை!” என்று பல குரல்கள் எழுந்தன.
“மணம் புரிந்து கொண்டது தவறு என்று நானும் சொல்லவில்லை. நம்மில் யார்தான் ஒரு தார விரதம் கொண்டவர்கள்? ஆனால்….ஆனால்…”
“ஆனால் என்ன! தயங்காமல் மனத்தைத் திறந்து கேட்டு விடுங்கள்!”
“புது மணம் புரிந்து கொண்ட இளைய ராணியின் சொல்லை எல்லா காரியங்களிலும் பழுவேட்டரையர் கேட்டு நடப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். இராஜரீக காரியங்களில் கூட இளைய ராணியின் யோசனையைக் கேட்பதாகச் சொல்லுகிறார்கள். தாம் போகுமிடங்களுக்கெல்லாம் இளைய ராணியையும் அழைத்துப் போவதாகச் சொல்லுகிறார்கள்.”
இப்போது கூட்டத்தில் ஒரு சிரிப்புச் சப்தம் எழுந்தது.
சம்புவரையர் குதித்து எழுந்து, “சிரித்தது யார்? உடனே முன் வந்து சிரித்ததற்குக் காரணம் சொல்லட்டும்!” என்று கர்ஜித்துக் கத்தியை உறையிலிருந்து உருவினார்.
“நான்தான் சிரித்தேன்! பதற வேண்டாம் சம்புவரையரே!” என்றார் பழுவேட்டரையர்.
பிறகு, “வணங்காமுடியாரே! தாலி கட்டி மணந்த மனைவியை நான் போகுமிடத்துக்கெல்லாம் அழைத்துப் போவது குற்றமா? அவ்விதம் நான் பல இடங்களுக்கு அழைத்துப் போவது உண்மைதான். ஆனால் ராஜரீக காரியங்களில் இளையராணியின் யோசனையைக் கேட்கிறேன் என்று சொல்வது மட்டும் பிசகு. அவ்விதம் நான் ஒரு நாளும் செய்வதில்லை…”
“அப்படியானால், இன்னும் ஓரே ஒரு சந்தேகத்தை மட்டும் நிவர்த்தி செய்யும்படி பழுவூர்த்தேவரை வேண்டிக் கொள்கிறேன். அந்தப்புரத்தில் இருந்திருக்க வேண்டிய பல்லக்கு இங்கே நாம் அந்தரங்க யோசனை செய்யும் இடத்திற்கு ஏன் வந்திருக்கிறது? பல்லக்கிற்குள்ளே யாராவது இருக்கிறார்களா; இல்லையா? இல்லையென்றால் சற்று முன்பு கேட்ட கனைப்புச் சத்தமும், வளையல் குலுங்கும் சத்தமும் எங்கிருந்து வந்தன?”
இவ்விதம் வணங்காமுடியார் கேட்டதும் அந்தக் கூட்டத்தில் ஒரு விசித்திரமான நிசப்தம் நிலவிற்று. பலருடைய மனத்திலும் இதே வித எண்ணமும் கேள்வியும் தோன்றியிருந்தபடியால், வணங்காமுடியாரை எதிர்த்துப் பேச யாருக்கும் உடனே துணிவு ஏற்படவில்லை. சம்புவரையரின் உதடுகள் ஏதோ முணுமுணுத்தன. ஆனால் அவர் வாயிலிருந்தும் வார்த்தை ஒன்றும் கேட்கவில்லை.
அந்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு பழுவேட்டரையர் கணீர் என்று கூறினார்: “சரியான கேள்வி; மறுமொழி சொல்ல நான் கடமைப்பட்டவன். இந்தக் கூட்டம் கலைவதற்கு முன்னால் உங்கள் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறேன். இன்னும் அரை நாழிகை பொறுத்திருக்கலாம் அல்லவா? அவ்வளவு நம்பிக்கை என்னிடம் உங்களுக்கு இருக்கிறதல்லவா?”
“இருக்கிறது, இருக்கிறது பழுவேட்டரையரிடம் எங்களுக்குப் பரிபூரண நம்பிக்கை இருக்கிறது!” என்று பல குரல்கள் கூவின.
“மற்றவர்களைக் காட்டிலும் பழுவேட்டரையரிடம் எனக்குப் பக்தியும் மரியாதையும் குறைவு என்று யாரும் எண்ண வேண்டாம். அவர் மனத்தைத் திறந்து கேட்கச் சொன்னபடியால் கேட்டேன். மற்றபடி அவர் இட்ட கட்டளையை நிறைவேற்றச் சித்தமாயிருக்கிறேன். இந்தக் கணத்தில் என் உயிரைக் கொடுக்கச் சொன்னாலும் கொடுக்கச் சித்தம்!” என்றார் வணங்காமுடி முனையரையர்.
“வணங்காமுடியாரின் மனத்தை நான் அறிவேன். நீங்கள் எல்லோரும் என்னிடம் வைத்துள்ள நம்பிக்கையையும் அறிவேன். ஆகையால் இன்று எதற்காகக் கூடினோமோ அதைப் பற்றி முதலில் முடிவு கொள்வோம். சுந்தர சோழ மகாராஜா நீடூழி இவ்வுலகில் வாழ்ந்து இந்தச் சோழ சாம்ராஜ்யத்தை ஆளட்டும்.ஆனால் ஒருவேளை ஏதாவது அவருக்கு நேர்ந்துவிட்டால், வைத்தியர்களுடைய வாக்குப் பலித்து விட்டால், சில நாளாகத் தோன்றி வரும் தூமகேது முதலிய உற்பாதங்கள் பலித்து விட்டால், அடுத்தபடி இந்தச் சோழ சாம்ராஜ்யத்தின் பட்டத்திற்கு உரியவர் யார் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்.”
“அது விஷயமாகத் தங்கள் கருத்தைத் தெரிவிக்கும்படி கோருகிறோம். தங்களுடைய கருத்துக்கு மாறாகச் சொல்லக் கூடியவர் இந்தக் கூட்டத்தில் யாரும் இல்லை.”
“அது சரியல்ல, ஒவ்வொருவரும் சிந்தித்துத் தங்கள் கருத்தை வெளியிட வேண்டும். சில பழைய செய்திகளை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். மகா வீரரும் மகா ஞானியும் புண்ணிய புருஷருமான கண்டராதித்ததேவர் யாரும் எதிர்பாராத வண்ணம் இருபத்து நாலு ஆண்டுகளுக்கு முன்னால் காலமானார். அச்சமயம் அவருடைய புதல்வர் மதுராந்தகத் தேவர் ஒரு வயதுக் குழந்தை. ஆகவே தமது தம்பி அரிஞ்சயதேவர் பட்டத்துக்கு வர வேண்டும் என்று திருவாய் மலர்ந்து விட்டுப் போனார். இதை அவருடைய தர்ம பத்தினியும் பட்ட மகிஷியுமான செம்பியன் மாதேவி தான் நமக்கு அறிவித்தார்கள். அதன்படியே அரிஞ்சய சோழருக்கு முடிசூட்டி சக்கரவர்த்தி பீடத்தில் அமர்த்தினோம். ஆனால் விதிவசமாக அரிஞ்சய சக்கரவர்த்தி சோழ சிம்மாசனத்தில் ஓர் ஆண்டுக்கு மேல் அமர்ந்திருக்கவில்லை. அரிஞ்சய சோழருடைய மூத்த புதல்வர் பராந்தக சுந்தர சோழர் இருபது வயது இளங் காளைப் பருவம் எய்தியிருந்தார். எனவே ராஜ்யத்தின் நன்மையை முன்னிட்டு மந்திரிகளும் சாமந்தர்களும் குறுநில மன்னர்களும் நகரத் தலைவர்களும் கூற்றத் தலைவர்களும் சேர்ந்து யோசித்துப் பராந்தக சுந்தர சோழருக்கு முடிசூட்டினோம். அதைக் குறித்து யாரும் வருத்தப்பட இடமில்லை. ஏனெனில், சுந்தர சோழ மகாராஜா இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வரையில் நெறி தவறாமல் நாட்டைப் பரிபாலித்து வந்தார். நம்மையெல்லாம் நன்கு மதித்து யோசனை கேட்டு ராஜ்ய பாரம் நடத்தினார். இதனால் சோழ ராஜ்யம் மேலும் விஸ்தரித்துச் செழித்தது. இப்போது சுந்தர சோழ மகாராஜாவின் உடல்நிலை கவலைக்கிடமாயிருக்கிறது. இந்த நிலைமையில் அடுத்தபடி பட்டத்துக்குரியவர் யார்? கண்டராதித்ததேவரின் திருக்குமாரர் மதுராந்தகர் இப்போது பிராயம் வந்து ராஜ்ய பரிபாலனம் செய்யக் கூடியவராயிருக்கிறார். அறிவினாலும் கல்வியினாலும் குணத்தினாலும் பக்தி சிரத்தையினாலும் எல்லா விதத்திலும் பட்டத்துக்கு தகுந்தவராயிருக்கிறார் அவரிலும் ஒரு வயது இளையவரான ஆதித்த கரிகாலர் – சுந்தர சோழரின் புதல்வர் – காஞ்சியில் வடதிசைப் படையின் சேனாதிபதியாக இருந்து வருகிறார். இந்த இருவரில் யார் பட்டத்துக்கு வருவது நியாயம்? குலமுறை என்ன? மனு நீதி என்ன? தமிழகத்தின் பழைமையான மரபு என்ன? மூத்தவரின் புதல்வர் மதுராந்தகர் பட்டத்துக்கு வருவது நியாயமா? அல்லது இளையவரின் பேரர் பட்டத்துக்கு வருவது முறைமையா? நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கருத்தை மனம் விட்டுச் சொல்ல வேண்டும்…”
“மூத்தவராகிய கண்டராதித்ததேவரின் புதல்வர் மதுராந்தகர் தான் பட்டத்துக்கு உரியவர். அதுதான் நியாயம், தர்மம், முறைமை” என்றார் சம்புவரையர்.
“என் அபிப்பிராயமும் அதுவே”, “என் கருத்தும் அதுவே” என்று அக்கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் சொல்லி வந்தார்கள்.
“உங்கள் அபிப்பிராயம்தான் என் அபிப்பிராயமும். மதுராந்தகருக்குத்தான் பட்டம் உரியது. ஆனால் அந்த உரிமையை நிலைநாட்டுவதற்காக நாம் ஒவ்வொருவரும் பிரயத்தனம் செய்யச் சித்தமாயிருக்கிறோமா? உடல் பொருள் ஆவியைத் தத்தம் செய்து போராடச் சித்தமாயிருக்கிறோமா? இந்த நிமிஷத்தில் துர்க்காதேவியின் பாதத்தில் ஆணையிட்டு அவ்விதம் சபதம் செய்வதற்குச் சித்தமாயிருக்கிறோமா?” என்று பழுவேட்டரையர் கேட்டபோது அவர் குரலில் அதுவரையில் இல்லாத ஆவேசம் தொனித்தது.
கூட்டத்தில் சிறிது நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. பிறகு சம்புவரையர், “அவ்விதமே தெய்வ சாட்சியாகச் சபதம் கூறச் சித்தமாயிருக்கிறோம். ஆனால் சபதம் எடுத்துக் கொள்வதற்கு முன்னால் ஒரு விஷயத்தைத் தாங்கள் தெளிவுபடுத்த வேண்டும். இளவரசர் மதுராந்தகரின் கருத்து என்ன? அவர் சிங்காதனம் ஏறி ராஜ்யபாரத்தை ஏற்கச் சித்தமாயிருக்கிறாரா? கண்டராதித்தரின் தவப் புதல்வர் உலக வாழ்க்கையை வெறுத்துச் சிவபக்தியில் பூரணமாக ஈடுபட்டுள்ளார் என்று கேள்விப்படுகிறோம். இராஜ்யத்தில் அவருக்கு விருப்பமில்லை என்று பலர் சொல்லவும் கேட்டிருக்கிறோம். அவருடைய அன்னையார் செம்பியன் மாதேவியார் தமது புதல்வர் பட்டத்துக்கு வருவதற்கு முற்றும் விரோதமாயிருக்கிறார் என்றும் கேட்டிருக்கிறோம். தங்களிடமிருந்து இதைப் பற்றிய உண்மையை அறிய விரும்புகிறோம்.”
“சரியான கேள்வி; தக்க சமயத்தில் கேட்டீர்கள். இதைத் தெளிவுபடுத்தும் கடமையும் எனக்கு உண்டு. முன்னமே சொல்லியிருக்க வேண்டும். சொல்லத் தவறியதற்காக மன்னியுங்கள்” என்று பீடிகை போட்டுக் கொண்டு பழுவேட்டரையர் கூறத் தொடங்கினார். “செம்பியன் மாதேவி தமது ஏக புதல்வரை இராஜ்யபார ஆசையிலிருந்து திருப்பிச் சிவபக்தி மார்க்கத்தில் செலுத்துவதற்குப் பிரயத்தனப்பட்டு வந்தது நாடு அறிந்த விஷயம். ஆனால் இதன் காரணம் என்னவென்பதை நாடும் அறியாது; மக்களும் அறியார்கள். மதுராந்தகருக்கு இராஜ்யமாளும் விருப்பம் இருப்பதாகத் தெரிந்தால் அவருடைய உயிருக்கே ஆபத்து வரலாம் என்று பெரிய பிராட்டியார் பயந்தது தான் காரணம்… “
“ஆஹா!” “அப்படியா?” என்ற குரல்கள் கூட்டத்தில் எழுந்தன.
“ஆம்; பெற்ற தாய்க்குத் தன் ஏக புதல்வன் சிம்மாசனம் ஏற வேண்டும் என்னும் ஆசையைக் காட்டிலும் பிள்ளை உயிரோடு இருக்க வேண்டும் என்ற ஆசை தானே அதிகமாயிருக்கும்? அன்னையின் வாக்கே தெய்வத்தின் வாக்கு என்று மதித்து வந்த மதுராந்தகரும் மனத்தை விரக்தி மார்க்கத்தில் செலுத்தியிருந்தார். சிவ பக்தியில் முழுதும் ஈடுபட்டிருந்தார். ஆனால் சில காலமாக அவருடைய மனது சிறிது சிறிதாக மாறி வந்திருக்கிறது. இந்தச் சோழ சாம்ராஜ்யம் தமக்கு உரியது, அதைப் பராமரிப்பது தம்முடைய கடமை என்ற எண்ணம் அவருடைய மனத்தில் வேரூன்றி வளர்ந்திருக்கிறது. நீங்கள் எல்லாம் அவரை ஆதரிப்பதாகத் தெரிந்தால், தக்க சமயத்தில் பகிரங்கமாக முன்வந்து சொல்லவும் சித்தமாயிருக்கிறார்..”
“இதற்கு அத்தாட்சி என்ன?”
“உங்களுக்கெல்லாம் திருப்தி தரக்கூடிய அத்தாட்சியை இப்போதே அளிக்கிறேன். அளித்தால் அனைவரும் பிரமாணம் செய்யச் சித்தமாயிருக்கிறீர்களா?”
பல குரல்கள் “இருக்கிறோம்! இருக்கிறோம்!” என்று ஒலித்தன.
“யாருடைய மனதிலும் வேறு எவ்விதச் சந்தேகமும் இல்லையே?”
“இல்லை! இல்லை!”
“அப்படியானால் இதோ அத்தாட்சி கொண்டு வருகிறேன். வணங்காமுடி முனையரையரின் சந்தேகத்தையும் இப்போதே தீர்த்து வைக்கிறேன்!” என்று கூறிக் கொண்டே பழுவேட்டரையர் எழுந்தார். கம்பீரமாக நடந்து அங்கே சமீபத்தில் வைக்கப்பட்டிருந்த மூடு பல்லக்கின் அருகில் சென்றார்.
“இளவரசே! பல்லக்கின் திரையை விலக்கிக் கொண்டு வெளியே எழுந்தருள வேண்டும். தங்களுக்காக உடல் பொருள் ஆவியை அர்ப்பணம் செய்யச் சித்தமான இந்த வீராதி வீரர்களுக்குத் தங்கள் முக தரிசனத்தைத் தந்தருள வேண்டும்!” என்று மிகவும் பணிவான குரலில் கூறினார்.
மேல்மாடத்தில் தூண் மறைவில் உட்கார்ந்து ஒரு வார்த்தை விடாமல் அடங்கா ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த வந்தியத்தேவன் இப்போது ஜாக்கிரதையாகக் கீழே பார்த்தான். பல்லக்கின் திரையை முன்போலவே ஒரு கரம் விலக்கிற்று. அது பொன் வண்ணமான கரம். முன்னே ஒருமுறை அவன் பார்த்த அதே செக்கச் சிவந்த கரந்தான். ஆனால் அவன் முன்னம் வளையல் என்று நினைத்தது உண்மையில் அரச குமாரர் அணியும் கங்கணம் என்பதை இப்போது கண்டான். அடுத்த கணம் பூரண சந்திரனையொத்த அந்தப் பொன் முகமும் தெரிந்தது. மன்மதனையொத்த ஓர் அழகிய உருவம் பல்லக்கிலிருந்து வெளியே வந்து புன்னகை புரிந்து நின்றது.ஆகா! கண்டராதித்த தேவரின் புதல்வரான இளவரசர் மதுராந்தகரா இவர்! பல்லக்கினுள் இருந்தபடியால் பெண்ணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் அல்லவா அந்தத் தவறைச் செய்து விட்டோம்? தன்னைப் போல் அதே தவறைச் செய்த ஆழ்வார்க்கடியான் நம்பி சுவர் மேல் தலையை நீட்டிக் கொண்டிருக்கிறானா என்று வந்தியத்தேவன் பார்த்தான். அந்த இடத்தில் மர நிழல் விழுந்து இருள் சூழ்ந்திருந்தது ஆகையால் அங்கு ஒன்றும் தெரியவில்லை.
இதற்குள் கீழே, “மதுராந்தகத்தேவர் வாழ்க! பட்டத்து இளவரசர் வாழ்க! வெற்றி வேல்! வீரவேல்!” என்ற ஆவேசமான முழக்கங்கள் கிளம்பின. கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லோரும் எழுந்து நின்று வாளையும் வேலையும் உயரத் தூக்கிப் பிடித்துக் கொண்டு அவ்விதம் கோஷமிட்டதை வந்தியத்தேவன் கண்டான். இனிமேல் அங்கிருப்பது அபாயமாக முடியலாம் என்று எண்ணி, தான் படுத்திருந்த இடத்துக்கு விரைந்து சென்று படுத்துக் கொண்டான்.

அத்தியாயம் 9 – வழிநடைப் பேச்சு


பாலாற்றுக்கு வடக்கேயுள்ள வறண்ட பிரதேசங்களிலேயே வந்தியத்தேவன் அதுகாறும் தன் வாழ்நாளைக் கழித்தவன் ஆகையால் ஆற்று வெள்ளத்தில் நீந்துவதற்கு அவனுக்குத் தெரியாமலிருந்தது. ஒரு சமயம் வடபெண்ணைக் கரையில் எல்லைக் காவல் புரிந்துவந்தபோது, குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினான். ஒரு பெரிய நீர்ச் சுழலில் அகப்பட்டுக் கொண்டான். அந்தப் பொல்லாத விஷமச் சுழல் அவனைச் சுற்றிச் சுற்றி வரச் செய்து வதைத்தது. அதே சமயத்தில் கீழேயும் இழுத்துக் கொண்டிருந்தது. சீக்கிரத்தில் வந்தியதேவனுடைய பலத்தையெல்லாம் அந்தச் சுழல் உறிஞ்சிவிட்டது. “இனிப் பிழைக்க முடியாது, சுழலில் மூழ்கிச் சாக வேண்டியதுதான்!” என்று வந்தியத்தேவன் நிராசை அடைந்த சமயத்தில் தெய்வாதீனமாக நதிச் சுழலிலிருந்து வௌிப்பட்டான். வெள்ளம் அவனை அடித்துக் கொண்டு போய்க் கரையில் ஒதுக்கிக் காப்பாற்றியது!
அன்றிரவு வந்தியத்தேவன் மீண்டும் சென்று படுத்தபோது அவனுக்கு நதியின் சுழலில் அகப்பட்டுத் திண்டாடியது போன்ற அதே உணர்ச்சி ஏற்பட்டது. ஒரு பெரிய இராஜாங்கச் சதிச் சுழலில் தன்னுடைய விருப்பமில்லாமலே விழுந்து அகப்பட்டுக் கொண்டதாகத் தோன்றியது. அந்த நதிச் சுழலிலிருந்து தப்பியது போல் இந்தச் சதிச் சுழலிலிருந்தும் தப்ப முடியுமா? கடவுள் தன்னை மறுமுறையும் காப்பாற்றுவாரா?
அன்று அவன் கடம்பூர் மாளிகையில் நடந்த நள்ளிரவுக் கூட்டத்திலிருந்து அறிந்து கொண்ட விஷயங்கள் அவனைத் திக்குமுக்காடச் செய்து விட்டன. சோழ மகா சாம்ராஜ்யத்துக்கு வெளிப்பகைவர்களால் ஏற்பட்டிருந்த தொல்லைகள் நீங்கிச் சில வருஷங்கள்தான் ஆகியிருந்தன. இளவரசர் ஆதித்த கரிகாலர் மகாவீரர், போர்க் கலையில் நிபுணர்; ராஜதந்திரத்தில் சாணக்கியர். தம்முடைய அறிவாற்றல்களையும் சோழ நாட்டுப் படைகளின் போர்த் திறனையும் பூரணமாகப் பயன்படுத்தி இரட்டை மண்டலத்துக் கிருஷ்ண மன்னனின் ஆதிக்கத்தைத் தொண்டை மண்டலத்திலிருந்து அடியோடு தொலைத்தார். வெளிப்பகை ஒருவாறு ஒழிந்தது. இந்த நிலைமையில் உட்கலகமும் சதியும் தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன. வெளிப்பகையைக் காட்டிலும் அபாயகரமான இந்த உட்பகையின் விளைவு என்ன ஆகும்?
சோழ நாட்டின் புகழ்பெற்ற வீரர்களும் அமைச்சர்களும் தலைவர்களும் அதிகாரிகளும் அல்லவா இந்தப் பயங்கரமான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்? பழுவேட்டரையரும் அவருடைய சகோதரரும் எப்பேர்ப்பட்டவர்கள்? அவர்களுடைய சக்தி என்ன? செல்வாக்கு என்ன? இங்கே இன்று கூடியிருந்த மற்றவர்கள்தான் எவ்வளவு பெயரும் புகழும் செல்வாக்கும் பராக்கிரமமும் வாய்ந்தவர்கள்? இத்தகைய கூட்டம் இதுதான் முதற் கூட்டமாயிருக்குமா? பழுவேட்டரையர் மூடுபல்லக்கில் மதுராந்தகரை வைத்து இவ்விதம் இன்னும் எத்தனை இடங்களுக்குக் கொண்டு போயிருக்கிறாரோ? அடாடா! முதிய வயதில் ஓர் இளம்பெண்ணை மணந்து கொண்டது இவருக்கு இந்தச் சதிகார முயற்சிக்கு எவ்வளவு சாதகமாகப் போய்விட்டது?
சோழ சிம்மாசனத்துக்கு உரியவர் இளவரசர் ஆதித்த கரிகாலர்தான் என்பது பற்றி இன்று வரை வந்தியத்தேவனுடைய மனதில் எவ்விதச் சந்தேகமும் உதிக்கவில்லை. போட்டி ஒன்று ஏற்படக் கூடும் என்று அவன் கனவிலும் கருதவில்லை. கண்டராதித்தனுடைய புதல்வர் மதுராந்தகரைப் பற்றி அவன் கேள்விப்பட்டதுண்டு. தந்தையைப் போலவே புதல்வரும் சிவபக்திச் செல்வர் என்று அறிந்ததுண்டு. ஆனால் அவர் இராஜ்யத்துக்கு உரிமையுள்ளவர் என்றோ, அதற்காகப் போட்டியிடக் கூடியவர் என்றோ கேள்விப்பட்டதில்லை. அந்த எண்ணமே அவனுடைய மனத்தில் அது வரையில் தோன்றியதில்லை.
ஆனால் நியாயா நியாயங்கள் எப்படி? பட்டத்துக்கு உரியவர் உண்மையிலே யார்? ஆதித்த கரிகாலரா? மதுராந்தகரா? யோசிக்க யோசிக்க, இரு தரப்பிலும் நியாயம் இருப்பதாகவே தோன்றியது. போட்டி என்று உண்மையில் ஏற்பட்டால், இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள்? தன்னுடைய கடமை என்ன? ஆஹா! என்னென்னவோ மனக் கோட்டை கட்டிக் கொண்டு காஞ்சியிலிருந்து இந்த யாத்திரை கிளம்பினோமே? பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலருக்கு உகந்தபடி நடந்து கொண்டு சோழப் பேரரசில் பெரிய பதவிகளை அடையலாம் என்று ஆசைப்பட்டோமே! காலாகாலத்தில் வாணர் குலத்தின் பூர்வீக ராஜ்யத்தைக்கூடத் திரும்பப் பெறலாம் என்று நினைத்தோமே? இதற்கெல்லாம் சாதனமாக எந்தப் புளியங்கொம்பைப் பிடித்தோமோ அதுவே முறிந்துவிடும் போலிருக்கிறதே…? இத்தகைய சிந்தனைகளினால் வந்தியத்தேவன் இரண்டாம் முறை வந்து படுத்த பிறகு வெகுநேரம் தூக்கம் பிடிக்காமல் திண்டாடினான். கடைசியாக, இரவு நாலாம் ஜாமத்தில் கிழக்கு வெளுக்கும் நேரத்தில் அவனுக்கு ஒருவாறு தூக்கம் வந்தது.
மறுநாள் காலையில் உதய சூரியனுடைய செங்கிரணங்கள் சுளீர் என்று அவன்பேரில் பட்டபோது கூட வந்தியத்தேவன் எழுந்திருக்கவில்லை. கந்தமாறன் வந்து தட்டி எழுப்பியபோதுதான் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்தான்.
“இராத்திரி நன்றாய்த் தூக்கம் வந்ததா?” என்று கந்தமாறன் விருந்தினரை உபசரிக்கும் முறைப்படி கேட்டான். பிறகு அவனாகவே, “மற்ற விருந்தினரெல்லாம் தூங்கச் சென்ற பிறகு நான் இங்கு வந்து பார்த்தேன். நீ நன்றாய்க் கும்பகர்ண சேவை செய்து கொண்டிருந்தாய்!” என்று சொன்னான்.
வந்தியத்தேவன் மனத்தில் பொங்கி எழுந்த நினைவுகளையெல்லாம் அடக்கிக் கொண்டு, “குரவைக் கூத்துப் பார்த்து விட்டு இங்கு வந்து படுத்ததுதான் தெரியும், இப்போதுதான் எழுந்திருக்கிறேன். அடாடா! இவ்வளவு நேரம் ஆகி விட்டதே! உதித்து ஒரு ஜாமம் இருக்கும் போலிருக்கிறதே! உடனே நான் கிளம்ப வேண்டும். கந்தமாறா! குதிரையை ஆயத்தம் பண்ணும்படி உன் வேலைக்காரர்களுக்குக் கட்டளையிடு!” என்றான்.
“அழகாயிருக்கிறது! அதற்குள்ளே நீ புறப்படுவதாவது? என்ன அவசரம்? பத்து நாளாவது இங்கே தங்கிவிட்டுத்தான் போக வேண்டும்” என்றான் கந்தமாறன்.
“இல்லை, அப்பனே! தஞ்சாவூரில் என் மாமனுக்கு உடம்பு செவ்வையாக இல்லை. பிழைப்பதே துர்லபம் என்று செய்தி வந்தது. ஆகையால் சீக்கிரத்தில் அவரைப் போய்ப் பார்க்க வேண்டும், உடனே புறப்பட வேண்டும்” என்று ஒரே போடாகப் போட்டான் வல்லவரையன்.
“அப்படியானால், திரும்பி வரும் போதாவது இங்கே சில நாள் கட்டாயம் தாமதிக்க வேண்டும்.”
“அதற்கென்ன, அப்போது பார்த்துக் கொள்ளலாம், இப்போது நான் புறப்படுவதற்கு விடைகொடு!”
“அவ்வளவு அவசரப்படாதே! காலை உணவு அருந்திவிட்டுப் புறப்படலாம். நானும் உன்னுடன் கொள்ளிட நதி வரையில் வருகிறேன்.”
“அது எப்படி முடியும்? யார், யாரோ, பெரிய பெரிய விருந்தாளிகள் உன் வீட்டுக்கு வந்திருக்கிறார்களே, அவர்களை விட்டுவிட்டு..”
“உன்னைவிடப் பெரிய விருந்தாளி எனக்கு யாரும் இல்லை!..” என்று கூறிய கந்தன் மாறவேள் சட்டென்று நிறுத்திக் கொண்டான். “வந்தவர்கள் பெரிய விருந்தாளிகள் தான் ஆனால் அவர்களைக் கவனித்துக்கொள்ள என் தந்தை இருக்கிறார்; அரண்மனை அதிகாரிகளும் இருக்கிறார்கள். உன்னோடு நேற்று ராத்திரிகூட நான் அதிக நேரம் பேசவில்லை. வழி நடையிலாவது சிறிது நேரம் உன்னோடு சல்லாபம் செய்தால்தான் என் மனம் நிம்மதி அடையும். அவசியம் கொள்ளிடக்கரை வரையில் வந்தே தீருவேன்!” என்றான்.
“எனக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லை. உன் இஷ்டம், உன் சௌகரியம்” என்றான் வந்தியத்தேவன்.
ஒரு நாழிகை நேரத்துக்குப் பிறகு இரு நண்பர்களும் இரு குதிரைகளில் ஏறிச் சம்புவரையர் மாளிகையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். குதிரைகள் மெதுவாகவே சென்றன. பிரயாணம் மிகவும் இன்பகரமாயிருந்தது. மேலக்காற்று சாலைப் புழுதியை வாரி அடிக்கடி அவர்கள் மேல் இறைத்ததைக் கூட அந்த நண்பர்கள் பொருட்படுத்தவில்லை. பழைய ஞாபகங்களைப் பற்றிய பேச்சில் அவ்வளவாக மனத்தைப் பறிகொடுத்திருந்தார்கள்.
சிறிது நேரத்துக்கெல்லாம் வந்தியத்தேவன் கூறினான்; “கந்தமாறா! உன் வீட்டில் ஒரே ஒரு இரவுதான் தங்கினாலும் அது எனக்கு எவ்வளவோ பயனுள்ளதாயிருந்தது.ஆனால் ஒரே ஒரு ஏமாற்றம். உன் சகோதரியைப் பற்றி வடபெண்ணை நதிக்கரையில் என்னவெல்லாமோ வர்ணனை செய்து கொண்டிருந்தாய்! அவளை நன்றாய்ப் பார்க்கக் கூட முடியவில்லை. உன் அன்னைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு அவள் எட்டிப் பார்த்தபோது அவள் முகத்தில் எட்டில் ஒரு பங்குதான் தெரிந்தது! நாணமும் மடமும் பெண்களுக்கு இருக்க வேண்டியதைவிட உன் தங்கையிடம் சற்று அதிகமாகவேயிருக்கிறது.”
கந்தமாறனுடைய வாயும் உதடுகளும் ஏதோ சொல்வதற்குத் துடித்தன. ஆனால் வார்த்தை ஒன்றும் உருவாகி வரவில்லை.
“ஆயினும் பாதகமில்லை நீதான் நான் திரும்பி வரும்போது சில நாள் உன் வீட்டில் தங்கவேண்டும் என்று சொல்கிறாயே? அப்போது பார்த்துப் பேசிக் கொண்டால் போகிறது. அதற்குள் உன் தங்கையின் கூச்சமும் கொஞ்சம் நீங்கிவிடலாம் அல்லவா? கந்தமாறா! உன் சகோதரியின் பெயர் என்னவென்று சொன்னாய்?”
“மணிமேகலை!”
“அடடா! என்ன இனிமையான பெயர்! பெயரைப் போலவே அழகும் குணமும் இருந்து விட்டால்..”
கந்தமாறன் குறுக்கிட்டு, “நண்பா! உன்னை ஒன்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.என் தங்கையை நீ மறந்து விடு; அவளைப் பற்றி நான் சொன்னதையெல்லாம் மறந்துவிடு; அவள் பேச்சையே எடுக்காதே!” என்றான்.
“இது என்ன, கந்தமாறா! ஒரே தலை கீழ் மாறுதலாயிருக்கிறதே! நேற்று இரவு கூட உன் வீட்டுக்கு நான் மருமகனாக வரப் போவதைப் பற்றி ஜாடையாகச் சொன்னாயே!”
“அவ்விதம் நான் சொன்னது உண்மை தான். ஆனால் பிறகு வேறு நிலைமை ஏற்பட்டுவிட்டது. என் பெற்றோர்கள் வேறு இடத்தில் என் சகோதரியைக் கலியாணம் செய்து கொடுக்க முடிவு செய்து விட்டார்கள்; மணிமேகலையும் அதற்குச் சம்மதித்து விட்டாள்!”
வந்தியத்தேவன் மனத்திற்குள் “மணிமேகலை வாழ்க!” என்று சொல்லிக் கொண்டான். மணிமேகலையை யாருக்குக் கொடுக்க நிச்சயித்திருப்பார்கள் என்று ஊகிப்பதிலும் அவனுக்குக் கஷ்டம் ஏற்படவில்லை. மூடு பல்லக்கிலிருந்து வெளிப்பட்ட இளவரசர் மதுராந்தகருக்குத்தான் நிச்சயித்திருப்பார்கள். மதுராந்தகருடைய கட்சிக்குப் பலம் தேட இப்படியெல்லாம் உறவுகளையும் ஏற்படுத்துகிறார்களாக்கும். பழுவேட்டரையர் பொல்லாத கெட்டிக்காரர்தான்!
“ஆஹா! நேற்று ராத்திரி வந்திருந்த பணக்கார விருந்தாளிகளில் ஒருவரை மாப்பிள்ளையாக்கத் திட்டம் செய்தீர்களாக்கும்! கந்தமாறா! இதில் எனக்கு வியப்பும் இல்லை; ஏமாற்றமும் இல்லை ஒரு மாதிரி நான் எதிர்பார்த்ததுதான்…”
“எதிர்பார்த்தாயா அது எப்படி?”
“என்னைப்போல் ஏழை அநாதைக்கு யார் பெண்ணைக் கொடுப்பார்கள்? ஊரும் வீடும் இல்லாதவனை எந்தப் பெண் மணந்து கொள்ள இணங்குவாள்? எப்போதோ என் குலத்தைச் சேர்ந்த முன்னோர்கள் அரசு செலுத்தினார்கள் என்றால், அது இப்போது என்னத்துக்கு ஆகும்.”
“நண்பா! போதும் நிறுத்து; என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் அவ்வளவு கேவலப்படுத்தாதே! நீ சொல்வது ஒன்றும் காரணமில்லை. வேறு மிக முக்கியமான காரணம் இருக்கிறது. அதை அறிந்தால் நீயே ஒப்புக் கொள்வாய். ஆனால் அதை நான் இப்போது வெளிப்படுத்துவதற்கில்லை. சமயம் வரும்போது நீயே தெரிந்து கொள்வாய்!”
“கந்தமாறா! இது என்ன ஒரே மர்மமாகவே இன்றைக்கு நீ பேசிக் கொண்டு வருகிறாயே?”
“அதற்காக என்னை மன்னித்துவிடு. உன்னிடம்கூட நான் மனம் விட்டுப் பேச முடியாதபடி அப்படி ஒரு பெரிய காரியந்தான். எது எப்படியானாலும் நம்முடைய சிநேகத்துக்கு எவ்வித பங்கமும் வராது என்பதை நம்பு. விஷயம் வெளியாக வேண்டிய சமயம் வரும்போது, ஓட்டமாக ஓடி வந்து உன்னிடந்தான் முதலில் சொல்வேன். அதுவரையில் என்னிடம் நம்பிக்கை வைத்திரு. உன்னை நான் ஒருநாளும் கைவிட மாட்டேன் என்னை நம்பு!..”
“இந்த வாக்குறுதிக்காக ரொம்ப வந்தனம். ஆனால் என்னைக் கைவிடும்படியான நிலைமை என்ன என்பதுதான் தெரியவில்லை! அப்படி நான் இன்னொருவரை நம்பிப் பிழைக்கிறவனும் அல்ல, கந்தமாறா! என்னுடைய உடைவாளையும் கைவேலையுமே நான் நம்பியிருப்பவன்!”
“அந்த உடைவாளையும் வேலையும் உபயோகிக்க வேண்டிய சந்தர்ப்பம் சீக்கிரத்தில் வரலாம். அப்போது நாம் இருவரும் ஒரே கட்சியில் நின்று தோளோடு தோள் சேர்ந்து போரிடுவோம்; அதனால் உன்னுடைய நோக்கமும் கைகூடும்…”
“இது என்ன? ஏதாவது யுத்தம் சீக்கிரம் வரும் என்று எதிர்பார்க்கிறாயா? அல்லது ஈழ நாட்டில் நடக்கும் யுத்தத்துக்குப் போகும் உத்தேசம் உனக்கு உண்டா?”
“ஈழத்துக்கா? ஈழத்தில் நடக்கும் அழகான யுத்தத்தைப் பற்றிக் கேட்டால் நீ ஆச்சரியப்பட்டுப் போவாய்! ஈழத்தில் உள்ள நம் வீரர்களுக்காகச் சோழ நாட்டிலிருந்து அரிசியும் மற்ற உணவுப் பொருள்களும் போக வேண்டுமாம்! வெட்கக்கேடு! நான் சொல்லுவது வேறு விஷயம். கொஞ்சம் பொறுமையாயிரு, சமயம் வரும்போது சொல்லுகிறேன்; தயவு செய்து இப்போது என் வாயைப் பிடுங்காதே!”
“சரி, சரி! உனக்கு விருப்பம் இல்லை என்றால் ஒன்றும் சொல்ல வேண்டாம். வாயைக்கூடத் திறக்க வேண்டாம் அதோ கொள்ளிடமும் தெரிகிறது!” என்றான் வந்தியத்தேவன்.
உண்மையில் சற்றுத் தூரத்தில் கொள்ளிடப் பெரு நதியின் வெள்ளம் தெரிந்தது. சில நிமிஷ நேரத்தில் நண்பர்கள் நதிக்கரையை அடைந்தார்கள்.
ஆடிப் புதுப் பிரவாகம் அந்த மாநதியில் கரை புரண்டு சென்றது. மறுகரை வெகு தூரத்தில் இருப்பதாகத் தோன்றியது. மறுகரையிலேயுள்ள மரங்கள் சிறிய செடிகளைப் போலிருந்தன. செக்கச் சிவந்த பெரு நீர் வெள்ளம் சுழிகளும் சுழல்களுமாக, வட்ட வடிவக் கோலங்கள் போட்டுக் கொண்டு, கொம்மாளம் அடித்துக் கொண்டு, கரையை உடைக்கப் பிரயத்தனம் செய்து கொண்டு, ‘ஹோ’ என்று இரைந்து கொண்டு, கீழ்க் கடலை நோக்கி அடித்து மோதிக் கொண்டு விரைந்து சென்ற காட்சியை வந்தியத்தேவன் பார்த்துப் பிரமித்து நின்றான்.
தோணித்துறையில் ஓடம் ஒன்று நின்றது. ஓடந்தள்ளுவோர் இருவர் கையில் நீண்ட கோல்களுடன் ஆயத்தமாயிருந்தார்கள். படகில் ஒரு மனிதர் ஏற்கனவே ஏறியிருந்தார். அவரைப் பார்த்தால் பெரிய சிவபக்த சிகாமணி என்று தோன்றியது.
கரையில் வந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து, “சாமி படகில் வரப் போகிறீர்களா? என்று படகோட்டிகளில் ஒருவன் கேட்டான்.
“ஆம்; இவர் வரப்போகிறார் கொஞ்சம் படகை நிறுத்து!” என்றான் கந்தமாறன்! இரு நண்பர்களும், குதிரை மீதிருந்து கீழே குதித்தார்கள்.
“யோசனை இல்லாமல் வந்து விட்டேனே? இந்தக் குதிரையை என்ன செய்வது? படகில் ஏற்ற முடியுமா?” என்று வந்தியத்தேவன் கேட்டான்.
“தேவையில்லை, நம்மைத் தொடர்ந்து இதோ இரண்டு ஆட்கள் வந்திருக்கிறார்கள். ஒருவன் உன் குதிரையை இங்கிருந்து கடம்பூருக்கு இட்டு வருவான். இன்னொருவன் உன்னுடன் படகில் ஏறி வந்து அக்கரையில் உனக்கு வேறு குதிரை சம்பாதித்துக் கொடுப்பான்!” என்றான் கந்தமாறன்.
“ஆஹா! எவ்வளவு முன்யோசனை? நீ அல்லவா உண்மை நண்பன்!” என்றான் வந்தியத்தேவன்.
“பாலாற்றையும் பெண்ணையாற்றையும் போலத்தான் கொள்ளிடத்தைப் பற்றி நீ நினைத்திருப்பாய். இதில் குதிரையைக் கொண்டு போக முடியாது என்று நீ எண்ணியிருக்கமாட்டாய்!”
“ஆமாம்; அவ்விதம் உங்கள் சோழ நாட்டு நதியைப் பற்றி அலட்சியமாய் நினைத்ததற்காக மன்னித்துவிடு! அப்பப்பா இது என்ன ஆறு? இது என்ன வெள்ளம்? சமுத்திரம் போலவல்லவா பொங்கி வருகிறது?”
இரு நண்பர்களும் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டு விடை பெற்றுக் கொண்டார்கள்.
வந்தியத்தேவன் நதிக்கரையோரமாகச் சென்று படகில் ஏறினான்.
கந்தமாறனுடன் வந்த ஆட்களில் ஒருவனும் ஏறிக் கொண்டான்.
படகு புறப்படுவதற்குச் சித்தமாயிருந்தது. ஓடக்காரர்கள் கோல்போட ஆரம்பித்தார்கள்.
திடீரென்று கொஞ்ச தூரத்திலிருந்து, “நிறுத்து! நிறுத்து! படகை நிறுத்து!” என்று ஒரு குரல் கேட்டது.
ஓடக்காரர்கள் கோல் போடாமல் கொஞ்சம் தயங்கி நின்றார்கள்.
கூவிக் கொண்டு ஓடி வந்தவன் அதிவிரைவில் கரைக்கருகில் வந்து சேர்ந்தான். முதற் பார்வையிலேயே அவன் யார் என்பது வந்தியத்தேவனுக்குத் தெரிந்து போயிற்று; அவன் ஆழ்வார்க்கடியான் நம்பி தான்.
வருகிறவர் வைஷ்ணவர் என்பதை அறிந்ததும் படகிலிருந்த சைவர், “விடு! படகை விடு! அந்தப் பாஷாண்டியுடன் நான் படகில் வரமாட்டேன்; அவன் அடுத்த படகில் வரட்டும்!” என்றார்.
ஆனால் வந்தியத்தேவன் ஓடக்காரர்களைப் பார்த்து, “கொஞ்சம் பொறுங்கள் அவரும் வரட்டும்! படகில் நிறைய இடம் இருக்கிறதே! ஏற்றிக் கொண்டு போகலாம்!” என்றான்.
ஆழ்வார்க்கடியானிடமிருந்து நேற்றிரவு நிகழ்ச்சிகளைப் பற்றிப் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வந்தியத்தேவன் விரும்பினான்.