Friday 8 August 2014

தமிழ் இனி மெல்ல..[30]சோழப்படைகள் வெள்ளாற்றிற்கு மறுபுறத்தில் எங்கோ

தமிழ் இனி மெல்ல..[29]சென்ற பதிவின் இறுதியில்

புரிந்தது என்றமாதிரி இராஜேந்திரனின் கண்களில் தன் கண்பார்வையை ஒருகணம் நிறுத்தித் தலையை ஆட்டுகிறாள் நிலவுமொழி. இவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த குறியீட்டு உத்தரவையும், அதற்குச் சம்மதமும் தெரிவித்ததையும் யாரும் புரிந்து கொள்ளவில்லை.

“நரேந்திரா! எம்மிடம் ஒரு வேலை செய்கிறேன் என்று ஒப்புக் கொண்டால் அதைச் செய்து முடித்தால்தான் எமது ஆதரவு தொடர்ந்து இருக்கும், அதைப் புரிந்து கொள்!”  என்று இராஜேந்திரன் சிரித்துக்கொண்டே சொன்னாலும், நரேந்திரனின் அடிவயிறு கலங்குகிறது.

இப்பொழுது இராஜேந்திரன் தனக்கு உத்தரவு இடுகிறான் என்று தெளிவாகப் புரிந்து கொள்கிறான் நரேந்திரன். தான் தமிழ் நன்றாகப் பேசக் கற்றுக் கொள்ளாவிட்டால் இராஜேந்திரனது கோபத்திற்கு உள்ளக நேரிடும் என்ற அறிவிப்பு பிறந்ததாகவே தெரிகிறது.

ஒரு பெண்ணிடம் பேசுவதற்காக இப்படித் தான் தமிழ் பேச் கற்றுக் கொள்கிறேன் என்று சொன்னதே கொஞ்சம் அவசரத்தனமோ என்றும் தோன்றுகிறது. தனது தாயான குந்தவியை ஏமாற்றுவதுபோல இராஜேந்திரனை ஏமாற்ற முடியாது என்பதைத் தன் தந்தை விமலாதித்தன் இராஜேந்திரனிடம் குழைவதைப் பார்த்துத் தெரிந்து கொண்டிருக்கிறான்.

அவர்கள் மேற்கொண்டு பேச ஆரம்பிப்பதற்குள் திரிபுவனமாதேவி அங்கு வேகமாக வருகிறாள். அவளைக் கண்டதும் எழுந்து அன்புடன் வரவேற்கிறாள் குந்தவி. ஆனால் திரிபுவனமாதேவியின் முகத்தில் பதட்டம் இருக்கிறது.

“அரசே! இந்த ஓலையைப் படியுங்கள். முக்கியமான செய்தி, தங்களிடம் இதை உடனே சேர்ப்பிக்க வேண்டும் என்று நமது ஓலைதாங்கி நாம் தங்கியிருக்கும் விடுதிக்கு உங்களைத் தேடி வந்தான். நான்தான் அவனை என்னுடன் அழைத்துக் கொண்டு வந்தேன். அந்தப்புரத்திற்குள் அவன் நுழையக்கூடாதே என்றுதான் நானே ஓலையைக் கையில் வாங்கிக் கொண்டு வந்தேன்!” என்று சிவப்புத்துணியில் சுற்றப்பட்டிருந்த ஓலையை இராஜேந்திரனிடம் கொடுக்கிறாள்.

சிவப்புத் துணி என்றால் என்ன என்று இராஜேந்திரனுக்குத் தெரியுமாதலால் உடனே தனியிடத்திற்குச் சென்று அதைப் படிக்கிறான். குறியீட்டுச் சொல்லில் எழுதப்பட்டிருக்கும் விவரங்களைப் படித்ததும் அவன் முகம் சிவக்கிறது. ஒன்றுமே பேசாமல் திரும்பி வருகிறான்.

“குந்தவி. அவசரமான ஒரு வேலை வந்துவிட்டது. நான் உடனே என் விடுதிக்குச் செல்லவேண்டும். மகாராணி, இருந்து குந்தவியிடம் பேசிவிட்டு ஒரு நாழிகையில் விடுதிக்கு மங்கையுடன் திரும்பி வா!”  என்று விடுவிடுவென்று நடந்து செல்கிறான் இராஜேந்திரன். அனைவரும் திகைத்து நிற்கிறார்கள். ஓலையில் என்ன செய்தி வந்திருக்கிறது என்பதுதான் எல்லோரின் மனதிலும் ஓங்கி எழுகிறது

                                                           * * *
தமிழ் இனி மெல்ல..[30]தொடர்கிறது


அரிசோனா மகாதேவன் 

                                                அத்தியாயம் 8
            வெள்ளாற்றின்39 தென்கரை, பாண்டிய நாடு
                          பரிதாபி, ஆனி 18 - ஜூலை 3, 1012
ஞாயிறு கீழ்த்திசையிலிருந்து மேலே கிளம்ப ஆரம்பித்தாலும், அதை மேகங்கள் மறைக்கின்றன. சோழநாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் எல்லையான வெள்ளாற்றின் தென்கரையில் பாண்டியப்படை தண்டூன்றியிருக்கிறது.

பெரும்பாலும் வரண்டே காணப்படும் வெள்ளாற்றில் நான்கு நாள்களாகப் பெய்த மழையினால் கரை புரண்டு ஓடும் தண்ணீர், வேகமாகத் தஞ்சையை அடைந்துவிட வேண்டும் என்று பொன்னமராவதியிலிருந்து கிளம்பிய பாண்டியப்படையைக் கடந்த இரண்டு நாள்களாக அதன் தென்கரையிலேயே தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறது.

காட்டாறான வெள்ளாற்றில் ஓடும் தண்ணீரின் ஆழம் அதிகம் இல்லாவிட்டாலும், சகதியும், சேறுமாக ஆற்றின் கரைகளும், படுகையும் இருக்கின்றன. கால் திற்கும் மேலாக, அரைக் குறைவாகவே ஆற்றின் பகுதியான கரைப்பகுதியில் தண்ணீர் கோர்த்துக் கொண்டு வழுக்கலாகச் செய்து விட்டிருக்கிறது.

நடந்தால் சகதியில் அரைச்சாண் அளவுக்குக் கால் புதைகிறது. குதிரைகளுக்கும் அதே நிலைதான். இரதங்களைப் பற்றியும், வண்டிகளைப் பற்றியும் கேட்கவே வேண்டாம். எங்கோ காற்றில் ஒடிந்து விழுந்த மரங்களின் கிளைகள் தண்ணீரில் மிதந்து செல்கின்றன. நசநசவென்று தொடர்ந்து பெய்யும் மழையில் நனைந்ததால் வீரர்கள் எரிச்சல் மிகுந்து காணப் படுகின்றனர்.

கரைகளின் இருபுறமும் ஓங்கி வளர்ந்து நின்ற பனை மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் வியப்பைத் தருகிறது. கிட்டத்தட்ட ஐநூறு மரங்களாவது வெட்டப் பட்டிருக்கின்றன. வெட்டப்பட்டு நிற்கும் மரத்தடிகளைப் பார்த்தால் வெட்டி ஒருவாரம் கூட ஆகியிருக்காது என்று தோன்றுகிறது.

39வெள்ளாறு புதுக்கோட்டைக்குத் தெற்கே ஓடுகிறது.

இவ்வளவு மரங்களை யார், ஏன் வெட்டி எடுத்திருக்கவேண்டும்? புதிதாகக் குடிசைகள் போடவும், வீடுகளுக்கு உத்திரங்கள் போடவும் யாராவது எடுத்திருப்பார்களோ? பதினைந்து நாள்களுக்கு முன்னர்கூட மரங்கள் வெட்டப்படவில்லையே? மரங்கள் இருந்திருந்தால் அவற்றை வெட்டித் தெப்பம் செய்து ஆற்றைக் கடந்திருக்கலாமே என்று படைத்தலைவர்கள் எரிச்சல் படுகிறார்கள். தாகத்திற்குச் சாப்பிட பனை நுங்குகளாவது உதவியிருக்கும்.

இடைவிடாத மழையினால் உண்டாகிய சகதியில் மாட்டிக்கொண்டு, உணவு கொண்டுவரும் வண்டிகள் வந்து சேரவில்லை. மேலும் தரையில் தண்ணீர் ஊறி இருப்பதாலும், தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருப்பதாலும் நெருப்பு மூட்டிச் சமைக்கக்கூட இயலாது போனதால் பெரும்பாலோர் இரண்டு நாள்களாகச் சாப்பிடவில்லை.

நடந்து செல்லும்போது அங்காங்கு வளர்ந்து தண்ணீரில் மறைந்திருக்கும் காரைச் செடிகளின் முட்கள் குத்தி வீரர்களுக்கு எரிச்சலை மூட்டிக்கொண்டிருக்கின்றன. இதுதவிர ஓடும் தண்ணீரில் மிதந்து வரும் பாம்புகள் தங்களைக் கடித்துவிடாமல் இருக்கவேண்டும் என்று வாளால் வெட்ட முயலும்போது சில நழுவிச் செல்வதோடு மட்டுமல்லாமல், சில வீரர்களைக் கடிக்கவும் செய்கின்றன. பாம்புகள் மிகுந்த அப்பகுதியில் கிட்டத்தட்ட இருபது முப்பது பேர் பாம்புக்கடிக்கு இரையாகுகின்றனர். குதிரைகளும் மிரண்டுபோல் குழப்பத்தை உண்டாக்குகின்றன.

மழை நின்றபாடில்லை.

தனது கூடாரத்திலிருந்து வெளி வருகிறான் அமரபுஜங்கன். கூடாரத்தைச் சுற்றியும் பெய்து கொண்டிருக்கும் மழை உள்ளேயும் தண்ணீரைக் கொண்டு வந்திருக்கிறது. பொன்னமராவதியிலிருந்து தஞ்சைக்குக் கிளம்பியபோது அவனது முகத்தில் இருந்த உற்சாகம் மிகவும் குறைந்து விட்டிருக்கிறது. தலையில் விழும் மழைத்தண்ணீர் கண்களில் வந்து நிறைந்து காட்சியை மறைக்கிறது.

“ஐம்பது காத தூரத்தில் இருக்கிறது தஞ்சை! மிஞ்சிப் போனால் நமது படைகள் இரண்டு நாள்களில் தஞ்சை எல்லையை அடைந்திருக்கும். ஒருநாள் இடைவிடாத தாக்கலில் தஞ்சைக் கோட்டை நமக்கு விழுந்து விட்டிருக்கும். அதை இயலாமல் செய்து விட்டதே இந்த மழை!” என்று குமுறுகிறான் அமரபுஜங்கன்.

திடுமென்று அவனது காலைச் சுற்ற ஆரம்பிக்கிறது ஒரு நெளியும் பாம்பு. அதைக் கண்ட அமரபுஜங்களின் மெய்காப்பாளன் திருமாறன், சட்டென்று அதன் வாலைப்பிடித்துத் தலைக்கு மேல் சுழற்றி கூடாரத்தின் வெளிக் கயிற்றின் மேல் பலமாக அடிக்கிறான். நாலைந்து அடிகளில் இரத்தவிளாறாகிச் சாகிறது அப்பாம்பு. ஒருகணம் அமரபுஜங்கனுக்குப் பேச்சே எழவில்லை. திருமாறன் அவ்வளவு வேகமாகச் செயல்பட்டிராவிட்டால்... போரில் விழுப்புண் பெற்று மரணமடைவதற்குப் பதிலாக பாம்பு கடித்தல்லவா நாம் மரித்திருப்போம்! சூழ்நிலையைக் கவனிக்காமல் சிந்தனையைச் செலுத்துவது எவ்வளவு தவறு!

“நன்றி திருமாறா! மிக்க நன்றி!” என்று தன் கழுத்தில் கிடந்த முத்து மாலையைக் கழட்டி திருமாறனின் கழுத்தில் அணிவிக்கிறான் அமரபுஜங்கன். “உனக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்!”

“அரசே! ஆழந்த சிந்தனையில் இருக்கும் தங்கள் காலை ஒரு பாம்பு சுற்றும் அளவுக்குக் கவனமில்லாது நானும் இருந்து விட்டேனே!என்னை மன்னியுங்கள்! தண்டனை பெற வேண்டிய என்னை முத்து மாலையைச் சூட்டி வெட்கப்படச் செய்துவிட்டீர்களே! கொஞ்ச நேரம் நான் தாமதித்திருந்தால் தங்களையே...” திருமாறனின் முகம் கவலையில் சிவக்கிறது. உடனே அருகிலிருக்கும் குதிரையை இழுத்து வருகிறான்.

“தங்களின் நீண்ட ஆயுள் பாண்டிநாட்டிற்கு அவசியமானது! குதிரையில் அமர்ந்து கொள்ளுங்கள். இப்பகுதியில் பாம்புகள் நிறைந்திருக்கின்றன. மழைத் தண்ணீர் அவற்றை இழுத்து வருவதால் அவை மிகவும் சீற்றத்துடன் இருக்கின்றன. தண்ணீர் இல்லாத மேட்டுப் பகுதிக்குச் செல்வோம். வாருங்கள். அரசே!”

குதிரையில் அமரபுஜங்கன் அமர்ந்ததும், திருமாறன் அதன் கடிவாளத்தைப் பிடித்து மெதுவாக இழுத்துச் செல்கிறான்.

அவர்களுக்கு முன்னால் அரைக்காத தூரத்தில் ஆற்றங்கரைப் பக்கம் இருக்கும் படையினரிடம் ஒரு சலசலப்பு ஏற்படுகிறது. அங்கிருந்து ஒரு குதிரைவீரன் இவர்கள் பக்கம் வருகிறான். “அரசே! அக்கரைப்பக்கம், திடுமென்று பனைமரங்கள் கட்டப்பட்ட வண்டிகள் வருகின்றன. அவற்றை யானைகள் இழுத்து வருகின்றன. அவை என்னவென்று தெரியவில்லை.” என்று பரபரப்புடன் கூறுகிறான்.

“பனை மரங்கள் கட்டப்பட்ட வண்டிகளா? என்ன உளறுகிறாய்? திருமாறா, வா! என்னவென்று சென்று பார்ப்போம்.” என்று கிளம்பும் அமரபுஜங்கனைத் தடுத்து நிறுத்துகிறான் திருமாறன்.

“இந்த மழையில் தாங்கள் அங்கு செல்லவேண்டாம். ஏனாதி ஒருவரை அனுப்பினால் போதும். எனக்கு இந்தச் செய்தி நல்ல செய்தியாகத் தோன்றவில்லை!”  என்று குதிரையைத் திருப்புகிறான் திருமாறன். அவனது உள்ளுணர்வை மதிக்கும் அமரபுஜங்கன் மேட்டுப் பகுதியை நோக்கி நகர்கிறான்.

வெள்ளாற்றின் கரையருகே நிற்கும் வீரர்கள் நிறுத்தப்பட்ட பனைமரங்களால் செய்யப்பட்ட விசித்திரமான வண்டியைக் கண்டு திகைக்கிறார்கள். பனைமரங்களின் ஓலைகள் வெட்டப்பட்டு அவை மொட்டையாகத் தெரிகின்றன. தொலைவில் இருப்பதாலும், வடகரை திட்டாக உயர்ந்திருப்பதாலும் அவற்றின் அடிப்பாகம் வீரர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. அந்தப் பனைமரங்களுக்கு நடுவில் பெரிதாக இன்னொரு பனை மரம் ஒன்று கட்டப் பட்டிருக்கிறது. அந்தப் பனைமரம் வேறொரு பனைமரத்துடன் இணைக்கப்பட்டு கீழே செல்கிறது. உயர்ந்த பனைமரத்தின் நுனியில் பெரிய பாறாங்கல் கட்டப்பட்டு மெல்ல மேலே உயர்கிறது. அந்தப் பாறாங்கல் தரையிலிருந்து கிட்டத்தட்ட அறுபது அடி உயரம் சென்று நிற்கிறது. கீழே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.

அந்தப் புதுவிதமான வண்டிக்குப் பின்னால் இருபுறமும் யானைகளின் தலைகள் புலப்படுகின்றன. அந்தமாதிரி பத்து வண்டிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. இதுவரை பாரத்திராத அந்த வண்டிகளை மந்திரத்தால் கட்டுண்டது போல வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள்.

திடுமென்று பாறாங்கல் கட்டப்பட்டிருக்கும் பனைமரம் வேகமாகக் கீழே இறங்குகிறது. அதன் கீழ்ப்பக்கம் மேலே உயர்ந்து, அதில் கட்டப்பட்டிருக்கும் பெரிய மரத் தொட்டியிலிருந்து நூற்றுக்கணக்கான கற்கள் வானத்தில் பறந்து, வெள்ளாற்றைக் கடந்து இக்கரையில் இருக்கும் வீரர்கள்மேல் வந்து விழுகின்றன. கையகலமே இருந்தாலும், வந்து விழும் வேகத்தில் அந்தக் கற்கள் வீரர்களின் தலைகளை உடைக்கின்றன. அடிபட்ட குதிரைகள் தலை தெரிக்க ஓடுவதால் அவற்றின் குளம்புகளில் உதைபட்டும் மிதிபட்டும் வீரர்கள் கீழே சாய்கின்றனர்.

கற்களிலிருந்து தப்பிக்க ஓடும் வீரர்கள் சகதியில் வழுக்கி விழ, ஒரே குழப்பம் ஏற்படுகிறது. இவர்கள் மீது இடறிக் கீழே விழுகின்றனர் இன்னும் பலர். வழுக்கி விழுபவர்கள் மேல் ஏறி மற்றவர்கள் ஓடுவதால் கீழே விழுந்தவர்கள் இன்னும் படுகாயத்திற்கு உள்ளாகிறார்கள். ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை அந்தப் பனைமர வண்டிகளிலிருந்து கற்கள் சரமாரியாக வந்தவண்ணம் இருக்கின்றன. அந்தக் கற்கள் கிட்டத்தட்ட ஒருகாத தூரத்திலிருந்து கிட்டத்தட்ட இருநூறு, முந்நூறு அடி உயரம் சென்று வருவதால், அவற்றின் வேகமும், அவற்றால் விளையும் சேதமும் மிகவும் அதிகமாக இருக்கின்றன. பாண்டிய நாட்டு வில்லாளிகளின் அம்புகள் அந்த வண்டிகளை அடைய முடியாத அளவுக்கு தொலைவில் இருப்பதால் அவற்றை ஒன்றும் செய்ய இயலவில்லை.

கற்களுக்கு அடுத்தபடியாக ஈட்டிகளும், அம்புகளும் அந்தப் பனைமர ஏவுகணை வண்டிகளால் எய்யப்படுகின்றன. அம்புகள் கற்களை விட இலேசாக இருப்பதால் அவை இன்னும் அதிக தூரம் சென்று தப்பி ஓடும் படைவீரர்களின் உடம்பில் தைக்கின்றன. ஈட்டிகள் குதிரைகளின் மீதும், யானைகளின் மீதும் விழுந்து தைப்பதால் அவை கட்டுக்கடங்காமல் ஓடி அதிக சேதத்தை விளைவிக்கின்றன. இந்த எதிர்பாராத தாக்குதலினாலும், படைகள் சிதறி ஓடுவதாலும், படைகளைக் கட்டுக்குக் கொண்டுவர முடியாமல் திணறுகின்றனர் படைத் தலைவர்கள்.

மழை திடுமென நிற்கிறது. மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பதைப் போல கிட்டத்தட்ட அரைமணி நேரம் இப்படிப்பட்ட தாக்குதல் நடக்கிறது. மரண ஓலமும் கூக்குரலும் வானைப் பிளக்கிறது.

திருமாறனும் அமரபுஜங்கனும் தள்ளி இருந்து இந்தக் காட்சியைக் கண்டு, ஒன்றும் செய்ய இயலாது உள்ளம் குமுறுகின்றனர்.

“தளபதியாரே! படைகளைக் கட்டுக்குள் கொண்டு வருவீராக! முன்னால் ஓடி வருபவர்களுக்கு உதவியாக இருக்கும் பொருட்டு பின்னால் இருக்கும் படையை நகர்த்துவீராக! பொன்னமராவதியிலிருந்து மருத்துவர்கள் பலரை அழைத்துவரும் வேலை உடனே தொடரட்டும்!”  என்று உத்தரவுகளைப் பிறப்பிக்கிறான் அமரபுஜங்கன்.

“அரசே! தாங்களும் பொன்னமராவதிக்குத் திரும்புங்கள்! மழை நின்ற பிறகு திரும்பி வரலாம்!” என்று பாண்டியர் படைத் தலைவரும், திருமாறனும் அமரபுஜங்கனை வற்புறுத்துகிறார்கள்.

“முடியாது. என் வீரர்களை விட்டுவிட்டு, கோழையைப் போல நான் புறமுதுகிட்டு ஓடமாட்டேன்!” என்று உறுமுகிறான் அமரபுஜங்கன்.

“அரசே! இப்பொழுது நடப்பது போரல்ல, தாங்கள் பின்வாங்க மாட்டேன் என்று கூறுவதற்கு! இது ஒரு படுகொலை! நம் முன்னால் வந்து நின்று எதிர்த்தா போர் செய்கிறார்கள்? வெள்ளாற்றிற்கு மறுகரையில் நின்று கொண்டு புதிதாக இயந்திரங்களை வைத்துக் கொண்டு கவன் கல் எறிந்து விளையாடுகிறார்கள். இது கோழைகள் நம்மீது கல் எறிந்து விளையாடும் ஒரு விளையாட்டு! இதற்கு நம் வீரர்களைப் பலிகடாக்கள் ஆக்குவதும், நாம் பலிகடா ஆகுவதுமா வீரம்! பொன்னமராவதிக்குத் திரும்புவோம். மழை நின்றதும் மீண்டும் தாக்குதலைத் தொடரலாம். உயிரோடு இருக்கும் ஒவ்வொரு பாண்டிய வீரனும் பத்து சோழவீரர்களை எமனுலகுக்கு அனுப்புவான்!”

சிறிது நேரம் சிந்தனை செய்கிறான் அமரபுஜங்கன். அப்படியே செய்யலாம் என்று தலையசைத்துவிட்டு, பொன்னமராவதி திரும்ப படைகளுக்கு உத்தரவிடுகிறான்.

அந்த உத்தரவு சிங்களப் படைத் தலைவனுக்குத் தெரியும் முன்னர் அவன் தனது யானைகளுடன் வெள்ளாற்றில் இறங்க ஆரம்பித்து விடுகிறான். அவன்மீது சரமாரியாக அம்புகளும் ஈட்டிகளும் பொழியப்படுகின்றன. அதிலிருந்து சோழப்படைகள் வெள்ளாற்றிற்கு மறுபுறத்தில் எங்கோ மறைந்திருக்கின்றன என்று தெரிகிறது.

அவன் செல்வதைப் பார்த்தவுடன் சிங்களப் படைகள் தங்கள் படைத்தலைவனைத் தொடர்கின்றனர். அவர்களின் முன்னேற்றம் மிகவும் கடினமாகத்தான் இருக்கிறது. அக்கரையை அடைவதற்குள் பாதிப்பேர்களின் கதை முடிந்து விடுகிறது. சிங்களப் படைத்தலைவனின் யானை கரையை அடைந்த பின்னர் மெல்லச் சரிந்து விழுகிறது. அதன் மேல் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேலான ஈட்டிகள் பாய்ந்து அதன் உடல் முழுவதும் இரத்தப் பெருக்காக இருக்கிறது.

யானையுடன் அதன் மேலிருக்கும் அம்பாரமும் சரிகிறது. அதிலிருந்து சிங்களப் படைத் தலைவனின் உயிரற்ற உடல் சரிந்து கீழே விழுகிறது. அவர்கள் மீதும் பழையபடி கல்மாரி பொழிகிறது. இதிலிருந்து சோழர்கள் தங்களது ஏவுகணைக் கருவிகைப் பல இடங்களில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. வெள்ளாற்றில் ஓடும் சகதி கலந்த பழுப்பு நிறமான வெள்ளம், படைவீரர்களின் இரத்தத்தினால் சிவப்பாக மாறுகிறது.

பாண்டிய, மற்றும் சேரப் படைகள் பின்வாங்குவது என்று தீர்மானித்து விட்டபடியால் சிங்களப் படை தனித்து விடப்படுகிறது. வெள்ளாற்றுக்கு மறுபுறம் எப்படிப்பட்ட போர் நடக்கிறது என்று இந்தப் பக்கத்திலிருந்து தெரிந்து கொள்ள இயலவில்லை. ஆனால் மதியமாகியும் யாரும் திரும்ப வராததிலிருந்து சிங்களப் படைகள் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டன என்பது தெரிகிறது.

“பாவம், சிங்களப் படைத் தலைவன்! தன் உயிருடன், சிங்களப் படைகளின் உயிரைக் கொடுத்து, என் தாத்தா வீரபாண்டியனாரின் தோல்விக்கும் மரணத்திற்கும் காரணமாக இருந்த நாலாம் மகிந்தரின் அவச் சொல்லை நீக்கி விட்டானே! பொறுத்திருந்து அனைவரிடமும் இணைந்து போரிட்டிருக்கலாமே!” என்று வருந்துகிறான் அமரபுஜங்கன்.

அன்று காலை மட்டும் ஆறாயிரம் பேருக்கு மேல் இறந்து விட்டதாகக் கணக்கர்கள் செய்தி தெரிவிக்கிறார்கள். போரே நடக்காமல் இப்படி ஒரு இழப்பு நேர்ந்தது அவனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

மேலும், கவண்கற்களையும் ஈட்டிகளையும் கிட்டத்தட்ட ஒருகாத தூரம் எறியும் ஏவுகணைக் கருவிகள் எப்படிச் சோழரிடம் வந்து சேர்ந்தன, அவை எப்பொழுது செய்யப் பட்டன, அவை எவ்வாறு இயங்குகின்றன என்று தெரியாமல் குழம்பினான்.

இவ்வளவு பெரிதான எந்திரங்களைப் பற்றி ஒற்றர்களிடமிருந்து ஒரு தகவலும் வரவில்லையே, அது எப்படி சாத்தியமாயிற்று என்றும் குழம்புகிறான்.

மாலையில் மழை முழுவதும் நின்று போகிறது. கதிரவன் மேகங்களைக் கிழித்துக் கொண்டு எட்டிப் பார்க்கிறான்.
                                                      * * *
                                           திருநின்றவூர்
                        பரிதாபி, ஆனி 18 - ஜூலை 3, 1012
காஞ்சிக்கு இன்னும் ஐம்பது காத தூரம் இருக்கிறது என்பதை அறிந்துகொண்ட இராஜேந்திரன், அன்று இரவைத் திருநின்றவூரில் கழிக்கத் தீர்மானிக்கிறான்.

தூரத்தில் திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவில் விமானம் தெரிகிறது. அதற்குச் சற்று தூரத்தில் பக்தவத்சலப் பெருமாள் கோவிலின் விமானமும் தெரிகிறது.

இடைவிடாது ஓடிய களைப்பினால் அவனது குதிரையின் வாயில் நுரை வழிந்து கொண்டிருக்கிறது. இதற்கு மேல் விரட்டினால் குதிரை இறந்து விடக்கூடும் என்று உணர்கிறான்.
-----------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு முக்கிய அறிவிப்பு: விரைவில்  கந்தன் புகழ் பாடும் கந்த புராணம் சித்திரக்கதையாகத் தொடர்ந்து வெளிவரும்
                                                                                                                                             
கதை அமைப்பு: வையவன் 
ஓவியம்: பிரபல ஓவியர்: தமிழ் 

-----------------------------------------------------------------------------------------------------------------------


அவன் வேங்கை நாட்டிலிருந்து கிளம்பி பன்னிரண்டு நாள்கள் ஆகி விட்டன. தினமும் நாற்பது காதத்திற்குமேல் ஓய்வில்லாத குதிரைப் பயணம் செய்து வந்திருக்கிறான். அவனுடன் கிட்டத்தட்ட இரண்டாயிரம் குதிரை வீரர்களும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். அவன் மூன்று நாழிகைகளுக்கு ஒரு தடவை மாற்றுவதற்காக மாற்றுக் குதிரைகளும் ஆளில்லாமல் அவர்களுடன் வந்து கொண்டிருக்கின்றன.

அவனுடைய எண்ணமெல்லாம் எப்படியாவது தஞ்சையை அடைந்து தனது தந்தைக்கு உதவியாகப் போர் செய்து, பாண்டியப் படைகளை அழிக்க வேண்டும் என்பதுதான். தானிருக்கும்போது, அறுபத்தைந்து வயதான அவர் இப்பொழுது போர் செய்யச் செல்கிறார் என்பதை அவனால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை.

வேங்கைநாட்டில் குந்தவியின் அந்தப்புரத்தில் குறியீட்டு மொழியில் கிடைத்த ஓலையைப் படித்தவுடன் அவன் உள்ளம் பதறி நின்றது. “பாண்டியன் நாற்பதாயிரம் படை வீரர்களுடன் தஞ்சையைத் தாக்க முடிவு செய்திருக்கிறான். நம்மிடம் இருபத்தைந்தாயிரம் படை வீரர்களே இருக்கிறார்கள். நீ உடனே கிடைக்கும் படையுடன் தஞ்சைக்கு வர முயற்சி செய். நாங்கள் கடைசி வீரர்கள் உள்ளவரை தஞ்சைக்காகப் போராடுவோம்!” என்பதைத் தவிர அதில் வேறு ஒரு செய்தியும் இல்லை. இராஜராஜரின் முத்திரை அரக்கின் மேல் பதிக்கப் பட்டிருந்ததால்தான் அந்தச் செய்தி உண்மையானது என்ற நம்பிக்கைக்கு அவனால் வரமுடிந்தது.

தனது விடுதிக்குச் சென்ற இராஜேந்திரன் உடனே தஞ்சை கிளம்ப முடிவு செய்தான். சோழப் படைகளின் வட மண்டலத் தண்டநாயகர் விடுப்புப் படைகள் மெதுவாகச் செல்வதனால், தற்சமயம் காஞ்சியை நெருங்கிக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கவே, காஞ்சியில் அவர்களைச் சந்தித்து கூட்டிச் செல்லலாம் என்று முடிவு செய்தான். தன்னுடன் தலை சிறந்த இரண்டாயிரம் குதிரை வீரர்களை உடனே கிளம்புமாறு பணித்தான். அவர்களுக்குப் பின்னால் ஐநூறு யானைகளை எவ்வளவு விரைவாகத் தஞ்சைக்கு அனுப்ப முடியுமோ, அவ்வளவு விரைவில் அனுப்பவும் ஆணையிட்டான்.

இந்த ஏற்பாடுகள் அனைத்தும் செய்து முடிக்கவும், திரிபுவனமாதேவி அம்மங்கையுடனும், குந்தவியுடனும் அங்கு வந்து சேரவும் சரியாக இருந்தது. அவர்களிடம் விவரத்தை முழுவதும் சொல்லாமல், இராஜராஜர் அவசரமாகத் தன்னை அழைத்திருப்பதால் தான் உடனே சோழநாடு செல்ல வேண்டும் என்று தெரிவித்தான். தான் உடனே கிளம்புவதால் விமலாதித்தனிடம் விடைபெற்றுக்கொண்டு செல்ல இயலாது போவதால் விமலாதித்தனுக்கு விவரத்தைத் தெரிவிக்குமாறு குந்தவிக்குச் சொல்லிவிட்டுக் கிளம்பினான். நெருக்கடியான நிலையில் தான் சோழநாடு செல்வது அங்கிருந்து கிளம்பும்வரை யாருக்கும் தெரியக்கூடாது என்பதால் அப்படிச் சொல்கிறான் என்பதை உணர்ந்த குந்தவி இராஜேந்திரனுக்கு தடை சொல்லாமல் விடை கொடுத்து அனுப்பினாள்.

தன்னிடமிருந்து செய்தி வரும்வரை அம்மங்கையையும், திரிபுவனமாதேவியையும் கண்ணிமைபோல் பாதுகாத்து வருவதற்காக ஐநூறு தற்காப்புப் படையினரை ஏற்பாடு செய்திருப்பதாக அறிவித்து விட்டுக் கிளம்பியதையும், கனத்த இதயத்துடன் அவனுக்கு அம்மூவரும் விடைகொடுத்து அனுப்பியதையும் நினைவு கூர்கிறான் இராஜேந்திரன்.
குதிரை திருநின்றவூருக்குள் நுழைகிறது.

சோழ இளவலின் வருகையால் திகைத்துப் போன ஊர்த்தலைவர், பரக்கப் பரக்க ஓடிவந்து வரவேற்கிறார். கோவில் விடுதியில் தான் தங்கப் போவதாகச் சொல்கிறான் இராஜேந்திரன். தன்னுடன் இரண்டாயிரம் வீரர்கள் வந்திருப்பதாகவும், அவர்கள் அவசரப் பணியில் வந்திருப்பதால் தங்களுடன் உணவு கொண்டுவரவில்லை என்றும், அவர்களுக்கு உணவும், குதிரைகளுக்குத் தீவனமும் வேண்டும் என்று கேட்கிறான். உணவுக்கும், தீவனத்திற்கும் உரிய விலையைப் பொற்காசுகளாகக் கொடுத்து விடுவதாகவும் சொல்கிறான்.

நெகிழ்ந்து போகிறார் ஊர்த்தலைவர். வராத விருந்தினராக நாட்டுக் காவலரான அரசர் தங்கள் ஊருக்கு வந்திருப்பதால் தாங்கள் உணவுக்கு எந்த விலையும் வாங்க மாட்டோம் என்றும், தன் வீட்டிலிருந்து அவனுக்கும், அவனுடைய பிரதானிகளுக்கும் உணவு உடனே சமைத்து எடுத்து வருவதாகவும், இருதயாலீஸ்வரர், மற்றும் பக்தவத்சலப் பெருமாள் கோவில்களின் மடைப்பள்ளிகளில் வீரர்களுக்கு உணவு சமைக்கச் செய்தி அனுப்புவதாகவும் சொல்கிறார். கோவில்களில் சமைப்பதால், புலால் உணவு கிடைக்காது என்று தெரிவிக்கிறார். அதனால் குறையொன்றுமில்லை என்று அறிவித்த இராஜேந்திரன், தனக்கும் சைவ உணவே கொடுக்குமாறு தெரிவிக்கிறான்.

அதன்பின் இருபது குதிரை வீரர்களை, உணவு உண்டுவிட்டுக் காஞ்சி செல்லுமாறு பணிக்கிறான். மறுநாள் தான் காஞ்சி வந்து சேருவதற்குள், அங்கு இருக்கும் காலாள், குதிரை, யானைப் படைகள் அனைத்தும் தஞ்சை புறப்பட ஆயத்தமாக இருக்கவேண்டும் என்றும் செய்தி எழுதுவித்து இலச்சினையைப் பதித்து அனுப்புகிறான்.

கோவில் குளத்தில் குளித்து, இறைவனைப் பணிகிறான் இராஜேந்திரன். இதயத்தைப் போல வடிவமைக்கப்பட்டிருக்கும் உட்பிரகாரத்தின் கருவறையில் வீற்றிருக்கும் இருதயலீஸ்வரைக் குழைந்து வணங்குகிறான்.
“இறைவா, என் தந்தைக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படாவண்ணம் காப்பாற்றுவாயப்பா! சைவம் தழைக்க நாங்கள் திருப்பணி செய்கின்றோம். உனக்குப் பலப்பல கோவில்களைக் கட்டித் திருப்பணி செய்த விஜயாலய சோழனின் வழி வந்த நாங்கள் உன் திருப்பணியைத் தொடர அருள் செய்யுமய்யா! ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும் கற்கோவில்களைக் கட்டி சைவத்தின் பெருமை நிலைக்கச் செய்வோம். இதற்கு உன்னருள் வேண்டுமய்யா! அதற்கு எனக்குத் திறனைக் கொடுத்து அருள்வாயப்பா!”  என்று உள்ளம் கசிந்து வேண்டிக் கொள்கிறான். பூசை செய்த சிவாச்சாரியார் கொடுத்த திருநீரைப் பணிவுடன் நெற்றியில் தீட்டிக்கொண்டு இறைவனின் பிரகாரத்தைச் சுற்றிப் பணிந்துவிட்டு கோவில் விடுதிக்குத் திரும்பி வருகிறான்.

அங்கு ஊர்த்தலைவர் உணவுடன் காத்துக்கொண்டிருக்கிறார். ஊர் நலத்தை விசாரித்து அறிந்தபின் தன் பரிவாரத்துடன் உணவுண்டுவிட்டு, மறுநாள் செய்யவேண்டியதைப் பற்றிய சிந்தனையில் ஆழ்கிறான்.[வளரும்]
* * *

No comments:

Post a Comment