Saturday 31 January 2015

விடியாத சுதந்திர சூரியன்

விடியாத சுதந்திர சூரியன்

சி. ஜெயபாரதன் 

நடு ராத்திரி பெற்ற சுதந்திரம்
கண் திறக்க
விடிய வில்லை !
முடிய வில்லை  இருளாட்சி !
மடிக்குள் வெடி மறைத்து
நடக்குது மதப்போர் !
ஏர் முனைகள் வளைக்கப் பட்டு
வாள் முனைகள் ஆயின !
கார்மேகம் இப்போ தெல்லாம்
கரியமிலம் பொழிகிறது !

பாரதப் பண்பாடுகள்
நாராய்க் கிழிந்து,
வேர்கள்
கீழ்நோக்கிப் போகாது
மேல் நோக்கித் துளைக்கும் !
ழுத்தாணிகள் அமணமாய்
ஒழுக்கம் தவறிக்
குத்தூசி களாய்க் குத்தி எடுக்கும் !
பத்திர காளியின் கைச் சூலாயுதம்
பக்தரின் கைவசம் மாறும் !
பல்கலைக் கழகங்கள் வணிகச் சந்தையாய்
பண வேட்டை ஆடும்.
வேலை கிடைக்குது
கப்பம் ஒரு லட்சம் கட்டினால் !

கீழ் ஜாதியார் மேல் மட்டம் போய்
ஒதுக்கப் பட்டார் !
மேல் ஜாதியார் கீழ் மட்டம் போய்
விரட்டப் பட்டார் !
கணினி வர்த்தகம் 
நூற்றுக் கணக்கில் பெருகி
ஏழை செல்வந்தர்
வேற்றுமை ஏறிப் போச்சு !
நடிப்புக்கு மதிப்பளிக்கும்
நாட்டில்
படிப்புக்கு மதிப்பில்லை !

மருத்துவம் பணப் பட்டம் ஆனது !
உயிர்களுக் கில்லை மதிப்பு !
உன்னைப் பெற்ற அன்னையோ  
உடன் பிறந்த தங்கையோ
தனியாக
நடக்க முடியாது தெருவில் !
கருவிலே உருவாகும் பெண் சிசு
பிறக்கும் முன் பெறும் மரண தண்டனை !
பாரத மணிக்கொடி கிழிந்து போகுது !
விடியாத சுதந்திர சூரியன்
அத்தமிக்குது !
குடியாட்சியைத் தைப்பதா ?
முடிப்பதா ?

No comments:

Post a Comment