Thursday 31 July 2014

வாழ்த்துகிறோம் கவிஞர் வெண்ணிலாவுக்கு புதுமைப்பித்தன் நினைவுச் சிறுகதை விருது

வாழ்த்துகிறோம் 
கவிஞர் வெண்ணிலாவுக்கு   புதுமைப்பித்தன் நினைவுச் சிறுகதை விருது

  வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமான அ.வெண்ணிலா எழுதிய ' பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் ' சிறுகதைத் தொகுப்பிற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் மாநில அளவில் நடத்திய புதுமைப்பித்தன் நினைவுச் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான முதல் பரிசு கிடைத்துள்ளது.  

     இதற்கான விருது வழங்கும் விழா கோவையில் கடந்த ஞாயிறு மாலை நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமுஎகச.வின் மாநிலத் தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் தலைமையேற்றார். கோவை மாவட்டத் தலைவர் மணி அனைவரையும் வரவேற்றார்.    மாநில அளவில் நடைபெற்ற புதுமைப்பித்தன் நினைவுச் சிறுகதைத் தொகுப்புக்கான போட்டியில் முதல் பரிசினை வென்ற கவிஞர் அ.வெண்ணிலாவுக்கு ரூ.5000/- பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழை எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் வழங்கினார்.    

பரிசு வென்ற வெண்ணிலாவின் சிறுகதைத் தொகுப்பு பற்றி  தமுஎகச.வின் மாநிலப் பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், பேராசிரியர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன், செம்மலர் ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாள் ஆகியோர் பாராட்டிப் பேசினர்.  

    கவிஞர் அ.வெண்ணிலா இதுவரை ஆறு கவிதை நூல்களையும்,  சிறுகதைத் தொகுப்பும், கட்டுரைகள், கடித நூலொன்றும் எழுதியுள்ளார்.சாகித்திய அகாதெமிக்காக உலகமெங்குமுள்ள தமிழ்ப் பெண் கவிஞர்களின் கவிதைகளையும், என்.சி.பி.ஹெச். பதிப்பகம் வெளியிட்டுள்ள 75 ஆண்டுகால பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் தொகுத்துள்ளார். இவரது படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், இந்தி. தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழக பாடத் திட்டத்திலும் நூல்கள் இடம் பெற்றுள்ளன.  

இணையவெளியின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்     

No comments:

Post a Comment