Wednesday 9 July 2014

விண்வெளி ஆராய்ச்சி மையம், காரைகட்-5

பூகாந்தப் புயல்


















 

அன்பர்கள் ஒவ்வொருவருக்கும் 

ந்தியாவில் வசிப்பவர் ஆயின் அஞ்சல்  மூலம் அச்சுப்புத்தகம் ஒன்றும் வெளிநாட்டில் வசிப்பவர் ஆயின் அவர் கூறும் இந்திய முகவரிக்கு அச்சுப்புத்தகம் ஒன்றும் இந்த நாவலை வெளியிட  இருக்கும் தாரிணி பதிப்பகம் இலவசமாக அனுப்பி வைக்கும் .விவரமான அஞ்சல் முகவரி அவசியம் என்று நாம் முன் பதிவில் அறிவித்திருந்ததை நினைவூட்டுகிறோம் 
தற்போது கடல் கடந்து வசிப்பவர் எவராயினும் அவருக்கு ஒரு மின்னூல் அனுப்பும் திட்டம் அமுலுக்கு வருகிறது. தாங்கள் செய்ய வேண்டியது ஒன்றே. இந்தப் பதிவைப் படித்தேன். பிடித்தது. பிடிக்கவில்லை.ஒரே ஒரு சொல் போதும்.  அதுவும் இயலவில்லையா? உங்கள் ஈமெயில் முகவரி மட்டும் பொத்தும்./ஒரு நூல் உங்களைத் தேடிவரும்.
சென்ற பதிவு பற்றி  C.R.Rajashree has left a new comment on your post "தமிழ் இனி மெல்ல...": Congrats good work of Dave Mahadevan  என்றுஒரு பாராட்டு அனுப்பிய  அவர்களுக்கு நன்றி அவர்கள் தமது முகவரியைத் தரவில்லை. இந்தப் பதிவை அவர்கள்  கண்டால் அன்புகூர்ந்து தம் முகவரி வழங்கி எங்கள் வாக்குறுதியை நாங்கள் காப்பாற்ற ஒரு வாய்ப்பளிக்க வேண்டுகிறோம் 
                            விண்வெளி ஆராய்ச்சி மையம்,  காரைகட்
                            பிரஜோற்பத்தி,   ஆடி 1 - ஜூலை 15,   2411
 தஇ மெ  4ம் அத்தியாயம் தொடர்கிறது
சென்ற பதிவின் இறுதி ஒங்களுக்கு ரொம்ப நல்ல மனசு நிமிசாம்மா. 
அப்படியே அதைப் புரிஞ்சுக்கிட்டு இருக்கறவரைக்கும் 
இருந்துட்டுப் போயிடறோம்மா. இதுக்கு மேலே என்னை 
எதுவும் கேக்காதீங்கம்மா. அதுக்கு ஒங்களுக்குப் புரியறபடி
 நான் பதில் சொல்லறது நல்லா இருக்காதும்மா.” 
மேலே ஒன்றுமே பேசாமல் நிமிஷாவுக்குப் பரிமாறி 
முடித்துவிட்டு,  அங்கிருந்து தம்பியை அழைத்துச் 
செல்கிறாள் காமாட்சி.காமாட்சி கடைசியாகச் சொல்லிவிட்டு
 நிறுத்திக் கொண்டதின் பொருள் நிமிஷாவுக்கு விளங்கவே 
இல்லை. புரியாத குழப்பத்துடன் சுவையான அந்தச் 
சாப்பாட்டை ரசித்துச் சாப்பிட ஆரம்பிக்கிறாள் நிமிஷா.

  காரைகட் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் “இ” பிரிவு மிகவும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதன் தலைவரான சோம்காந்த் தன் கீழ் வேலை பார்க்கும் மற்ற நிபுணர்களோடு மட்டுமல்லாது, மற்ற பிரிவுகளிலுமுள்ள சிறந்த வான் ஆராய்ச்சி நிபுணர்களையும் தன் “இ” பிரிவுக்கு வரவழைத்திருக்கிறார். மற்றபடி சீனா, மற்றும் பல நாடுகளிலிருக்கும் வான் ஆராய்ச்சி நிபுணர்களும் கலந்துரையாடலில் பங்கு பெற இணையத்தின் மூலம் இணைக்கப்பட்டிருந்தனர். விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் பெரிய அரங்கத்தில் (auditorium குழு கூடியிருக்கிறது.

மேடையில் சோம்காந்த், சஹஜா  , மற்றும் சில நிபுணர்கள் அமர்ந்திருக்கின்றனர். அனைவரும் ஒருவிதமான எதிர்பார்ப்புடன் மெதுவான குரலில் கசமுசவென்று தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கின்றனர். இத்தனை பேரையும் ஒருமணி நேரத்திற்குள் கலந்துரையாடலுக்கு அழைத்திருப்பதன் காரணம் என்ன என்ற துடிப்பு அனைவருக்குள்ளும் ஒரு பரபரப்பைத் தூண்டுகிறது.

“க்ளிங்,  க்ளிங்” என்று மணி அடிக்கிறது. உடனே பேச்சுக் குரல்கள் அடங்கி அரங்கத்தில் ஒரு அமைதி நிலவுகிறது. சோம்காந்த் தன் இருக்கையை விட்டு எழுந்திருக்கிறார்.

“என் அருமை நட்பு நிபுணர்களே! இதுவரை நாம் எதிர்கொள்ளாத ஒரு நிகழ்ச்சியைக் காண இருக்கிறோம். நாம் இதுவரை காணாத அளவுக்கு நிகழப் போகும் சூரியக் கதிர் வீசல் மட்டுமல்ல, இன்னும் ஒரு புரியாத நிகழ்ச்சியும் அதனோடு சேர்ந்து நிகழும் வாய்ப்பும் இருக்கிறது. தயவுசெய்து அனைவரும் ஹோலோ ப்ரொஜக்ஷன் கண்ணாடியை அணிந்து கொள்ளுங்கள். நான் விளக்கத்தை ஆரம்பிக்கிறேன்.” என்று அழைப்பு விடுக்கிறார்.(1)

அரங்கத்தில் அனைவரும் ஹோலோ-ப்ரொஜக் ஷன்   கண்ணாடியை அணிந்து கொள்கிறார்கள். அவர்கள் முன் சூரியனின் மேற்பரப்பில் தோன்றிய குழப்பங்களும்,  சூழலும் கதிர்களும் தோன்றுகின்றன. 

“சாதாரணமாக ஒரு ஆண்டில் நிமிஷத்திற்கு நூறு நானோ டெஸ்லாவுக்கும் (NanoTesla/min)  குறைவான பூகாந்தப் புயல்கள் (Magnetic Storms ) நாலிருந்து ஐந்தை சூரியக் கதிர்வீசல்கள் தோற்றுவிக்கின்றன என்பதும், அவைகள் விண்வெளி ஒலிபரப்பைச் சிறிது பாதிக்கும் என்பதும் நீங்கள் நன்கு அறிந்ததே!

“நானூறு ஆண்டுகளுக்கு முன்பு நிமிஷத்திற்கு 348 நானோ டெஸ்லா அளவுக்கு வீசிய பூகாந்தப் புயல் மின்சாரக் கம்பிகளில் புவி தூண்டிய மின்சாரத்தை (Geo induced current or GIC)  ஏற்படுத்தியதின் விளைவாக சில அதிக மின்னழுத்த டிரான்ஸ்ஃபார்மகளைச் (EHVTransformers)  சேதப் படுத்தியது. அந்த மாதிரி ஒரு டிரான்ஸ்ஃபார்மரின் விலை அந்தக் காலத்திலேயே ஐம்பது லட்சத்திலிருந்து இரண்டரைக் கோடி ரூபாய்வரை இருந்தது. அதனால் அந்தக் காலத்திலேயே பல நூறு கோடிக்கணக்கான ரூபாய்கள் இழப்பும்,  மின்வெட்டும் ஏற்பட்டது.

“அமெரிக்க, மற்றும் ஐரோப்பிய நாடுகள் பெரிய பூகாந்தப் புயல்களால் எப்படிப் பட்ட தொந்தரவுகள்,  பொருளாதார இழப்புகள் வரும், அதை எப்படிச் சமாளிக்கலாம் என்பது பற்றி ஆராய்ச்சிகள் செய்து ஏற்பாடுகளும் செய்து வந்தன. ஆனால் அவை எதிர்பார்த்த அளவுக்குப் பூகாந்தப் புயல்கள் நிகழவில்லை. எனவே அந்த விதமான ஆராய்ச்சிகளும் மிகவும் குறைந்து விட்டன.

“இப்பொழுது நாம் பார்க்கும் சூரியக் கதிர் வீசல் அதைவிடப் மிகமிகப் பெரிய பூகாந்தப் புயலை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. கணக்கிட்டால் நிமிஷத்திற்கு 1500 நானோ டெஸ்லாவுக்கும் அதிகமான பூகாந்தப் புயலை அது ஏற்படுத்துமோ என்று நான் பயப்படுகிறேன். இந்த மாதிரி பூகாந்தப் புயல் லட்சத்து ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு தடவைதான் ஏற்படக்கூடும் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இப்படிப்பட்ட புயல் விண்வெளித் தொடர்பு மட்டுமன்றி டிரான்ஸ்ஃபார்மர்களுக்கு அளவிட முடியாத சேதங்களை ஏற்படுத்தக் கூடும்.

“பொதுவாக பூகாந்தப் புயல்களின் தாக்கம் வட ஐரோப்பிய, வட அமெரிக்க, மற்றும் வட சைபீரிய நாடுகளில் மட்டுமே ஏற்பட்டு வந்தன. ஆனால் இந்தமுறை இதன் தாக்கம் அந்தப் பகுதிகள் மட்டுமன்றி, சீனா, மற்றும் இந்தியா உலகம் முழுவதும் பரவலாம் என்று தோன்றுகிறது. அதனால் இதன் விளைவு மிகவும் பயங்கரமாக இருக்குமோ என்று நான் அஞ்சுகிறேன்.” இதைச் சொல்லிவிட்டு, சில கணங்கள் அமைதியாக அரங்கத்தில் உள்ளவர்களின் பதில் உணர்வுக்காகக் காத்திருக்கிறார் சோம்காந்த்.

“ஓ!” என்ற முனகல் மெதுவாக ஆரம்பித்துப் பலமாகத் தொடர்கிறது. முதல்நாள் சோம்காந்த் எப்படி முனகினாரோ, அப்படி அரங்கமே முனகுவது போல ஸஹஜாவுக்குத் தோன்றுகிறது. இவ்வளவு மோசமான விஷயத்தை நான்கு நாள்கள் மறைத்து விட்டோமே என்று நினைத்தபோது இதயத் துடிப்பே ஒரு விநாடி நின்று விட்டுத் துவங்குகிறது. உடனேயே பல குரல்கள் கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பிக்கின்றன. அரங்கத்தில் ஒரே கூச்சலாக இருக்கிறது.

சோம்காந்த் கையை உயர்த்தி அமைதியை வேண்டுகிறார். மெல்ல இரைச்சல் குறைந்து அமைதி நிலவுகிறது. 

“இன்னும் நான் சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்கவில்லை. எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் கொடுங்கள். நான் முடித்து விடுகிறேன். பிறகு கலந்துரையாடலைத் துவக்கலாம்.” என்று தொடர்கிறார்.

“பட்ட காலிலேயே படும் என்பது போல, இப்பொழுது இன்னும் ஒரு நிகழ்ச்சியையும் நமது கோட்கல் வான ஆராய்ச்சி நிலையம் கண்டுபிடித்திருக்கிறது.” 

இதைச் சொன்னதும் ஸஹஜா பயத்துடன் எழுந்து நிற்கிறாள். அரங்கத்தில் மட்டுமல்ல, இணைய மூலம் தொடர்பு கொண்டிருக்கும் அத்தனை பேர்களுடைய கண்களும் அவள் மேல் நிலைக்கின்றன. அது ஸஹஜாவின் உடம்புக்குள் நடுக்கத்தை உண்டு பண்ணுகிறது. அனைவருக்கும் கைகூப்பி வணக்கத்தைத் தெரிவித்து விட்டு அமர்கிறாள்.

“இப்பொழுது சூரியனைச் சுற்றியிருக்கும் பலவிதமான ”சுழலும் கதிர்களைக் கவனியுங்கள். இவைகள் ஒருவகைன ஒளியைப் பரப்புவதைக் கவனியுங்கள். அவைகளின் வடிவமைப்பு, அசையும் விதம் - இவற்றை பார்க்கும்போது இவை சூரிய மண்டலத்திற்குச் சொந்தமானவை அல்ல என்றே தோன்றுகிறது. இவற்றை “இரண்டாம் நிகழ்ச்சி என்று குறிப்பிடுவோம். சற்றுப் பொறுங்கள்!” என்று கூறி தன் கையில் ஒரு கோலை எடுத்து சில சைகைகள் செய்கிறார்.

உடனே சூரியன் மிகச் சிறியதாக ஆகி விடுகிறது. சூழலும் கதிர்கள் எங்கோ தொலைவில் இருப்பது போலத் தெரிகின்றன. அவை வடிவம் பெரிதாகிச் சுழலுகின்றன. இப்பொழுது அந்தக் கோடுகளுக்குள் உள்ளவை தெரிய ஆரம்பிக்கின்றன. 

அவற்றின் உள்ளே  ஏதோ கொதித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது. அப்படிக் கொதிக்கும் திரவம் அவ்வப்போது கதிர்களுக்கு வெளியில் சிதறுகிறது. அப்படிச் சிதறும் சமயம் வெளியேறும் துளிகள் வெடித்து பலவிதமான வண்ணங்களுடைய ஒருவிதமான அச்சமூட்டும் ஒளியைப் பரப்புகின்றன.

“நண்பர்களே! இந்த அமைப்புகள் நமது சூரிய மண்டலத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றன. இவை எந்த விதமான கதிர் வீசல்களைப் பரப்பும், இவை மனித இனத்திற்குக் கெடுதல் செய்யுமா, இதனால் தீமையா, நன்மையா என்று தெரியவில்லை. இப்பொழுது ‘தெரியாமையின் அச்சம் (Fear of the unknown)’ தான் என்னைக் குழப்புகிறது.”

சோம்காந்த் மேலும் தொடருகிறார். “நான் மேலிடத்திற்கு இந்நிகழ்ச்சியைப் பற்றித் தெரிவித்துவிட்டேன். நாம் ஒன்று சேர்ந்து இரண்டாவது நிகழ்ச்சியைப் பற்றி ஆராய்ச்சி செய்து அதன் விளைவு என்ன என்பதைக் கண்டு பிடித்தாக வேண்டும். நேரம் என்பது நமக்குக் கிடைக்காத ஒரு ஆடம்பரமாகும். கோட்கல் மூலம் கிடைத்த விபரங்கள் உங்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை ஆராய என்னைத் தலைவனாக மேலிடம் நியமித்துள்ளது. ஆகவே, உங்கள் கண்டுபிடிப்புகளையும், ஆராய்ச்சி முடிவுகளையும் எனக்கு அவ்வப்பொழுது அனுப்புங்கள். எவ்வளவு சிறிய விஷயமாக இருந்தாலும் விட்டு விடாதீர்கள்! எனக்கு நேரடி உதவியாக இங்கு பதினைந்து நிபுணர்களும் கொட்கல் ஆய்வாளர் ஹைஜாவும் இருப்பார்கள்.

“இந்திய, சீன மேலிடம், மற்றும் அனைத்து அரசாங்கங்களுக்கும் இந்நிகழ்ச்சியைப் பற்றி தகவல் அனுப்பி உள்ளோம். அரசாங்கம் இந்நிகழ்ச்சிகளுக்கு எப்படிப்பட்ட பாதுகாப்பு, மற்றும் பதில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தீர்மானித்து வருகிறது. நீங்கள் இந்தக் கூட்டத்தைப் பற்றியோ, அல்லது இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்பதைப் பற்றியோ எவருக்கும் - உங்கள் குடும்பத்திற்கும் கூடத் தெரிவிக்கக் கூடாது.
“கடைசியில் என் கவலை வீண் கவலை ஆனாலும் ஆகக் கூடும். அப்படி ஆகவேண்டும் என்றுதான் நான் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொண்டு வருகிறேன். இனிமேல் பேச ஒன்றும் இல்லை. எனக்குத் தெரிந்த அளவுக்கு உங்கள் எல்லோருக்கும் தெரிந்தாகிவிட்டது. உங்கள் கூட்டுறவு, உதவி மிகவும் தேவைப்படுகிறது. உங்கள் இருப்பிடத்திற்குச் சென்று உடனே ஆராய்ச்சியைத் துவங்குங்கள். குட் லக்.” கண்ணாடியைக் கழட்டி விட்டு மேடையை விட்டு இறங்குகிறார் சோம்காந்த். ஸஹஜாவும் அமைதியாக அவரைப் பின் தொடர்கிறாள்.[வளரும்]
----------------------
1 சோம்காந்த் கொடுக்கும் விளக்கங்கள் சென்ட்ரா டெக்னாலஜி, இங்க் (CENTRA Technology.)  நிறுவனத்தால், அமெரிக்க ஐக்கிய நாட்டின், உள்நாட்டு பாதுகாப்பு இலாகாவுக்குக் கொடுத்த “பூகாந்தப் புயல்கள் (Geomagnetic Storms)” என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டன

No comments:

Post a Comment