Friday 18 July 2014

தமிழ் இனி மெல்ல -10 :கடலில் விழுந்து நொறுங்குகிறது விமானம்

அன்பர்கள் ஒவ்வொருவருக்கும் 

ந்தியாவில் வசிப்பவர் ஆயின் அஞ்சல்  மூலம் அச்சுப்புத்தகம் ஒன்றும் வெளிநாட்டில் வசிப்பவர் ஆயின் அவர் கூறும் இந்திய முகவரிக்கு அச்சுப்புத்தகம் ஒன்றும் இந்த நாவலை வெளியிட  இருக்கும் தாரிணி பதிப்பகம் இலவசமாக அனுப்பி வைக்கும் .விவரமான அஞ்சல் முகவரி அவசியம் என்று நாம் முன் பதிவில் அறிவித்திருந்ததை நினைவூட்டுகிறோம் 
தற்போது கடல் கடந்து வசிப்பவர் எவராயினும் அவருக்கு ஒரு மின்னூல் அனுப்பும் திட்டம் அமுலுக்கு வருகிறது. தாங்கள் செய்ய வேண்டியது ஒன்றே. இந்தப் பதிவைப் படித்தேன். பிடித்தது. பிடிக்கவில்லை.ஒரே ஒரு சொல் போதும்.  அதுவும் இயலவில்லையா? உங்கள் ஈமெயில் முகவரி மட்டும் பொத்தும்./ஒரு நூல் உங்களைத் தேடிவரும்.
சென்ற பதிவு பற்றி  C.R.Rajashree has left a new comment on your post "தமிழ் இனி மெல்ல...": Congrats good work of Dave Mahadevan  என்றுஒரு பாராட்டு அனுப்பிய  அவர்களுக்கு நன்றி 
தமிழ் இனி மெல்ல சென்ற பதிவின் நினைவூட்டல் 
நிமிஷாவையும், அவளது கூட்டாளிகளையும், ஊஞ்சலில் ஆடவேண்டாம் என்று தடுத்து விடுகிறான் அழகேசன். அது நிமிஷாவுக்குப் பிடிக்காவிட்டாலும், ஷிஃபாலியும் அழகேசன் சொல்வதை ஆமோதித்ததால் ஊஞ்சல்கள் நிறுத்தப்படுகின்றன. உடலை வளைத்து வளைத்து பாம்பு மாதிரி ஒரு நாட்டியம் ஆடுகின்றனர். அதைப் பார்க்கும் ஏகாம்பரநாதனுக்கு ஒரே சிரிப்பாக இருக்கிறது. அவனும் தான் இருக்கும் இடத்திலேயே நின்று கொண்டு வளைந்து வளைந்து ஆடுகிறான். தன் தம்பியின் ஆட்டத்தைப் பார்த்து பொங்கிப் பூரித்த காமாட்சி அனைவருக்கும் குடிக்க பழச்சாறும், தின்பண்டங்களும், சாப்பாடும் கொடுத்த வண்ணம் இருக்கிறாள். அவ்வப்பொழுது தன் தமக்கைக்கு உதவிக்கு வருகிறான் ஏகாம்பரநாதன்.
“ஏகாம்பரம். நீ சும்மா இருடா. என் தலையெழுத்துதான் இப்படி உடுப்பு மாட்டிக்கிட்டு அலைஞ்சுக்கிட்டிருக்கேன். நீ நல்லா எல்லாத்தையும் சாப்பிட்டு விட்டு இவங்க ஆடறதை சந்தோசமா பார்த்துக்கிட்டிரு.” என்கிறாள்.

தன் தமக்கையை ஏற இறங்கப் பார்த்தவாறே, “அக்கா, உன்னைப் பார்த்தா ஒரு தேவதை மாதிரி இருக்கு அக்கா! இந்த ஓட்டல் வாசல்ல வச்சுருக்கற பொம்மை மாதிரி அழகா இருக்கே அக்கா. தினமும் இந்த மாதிரி உடுப்பு போட்டுக்கோ!” என்று உள்ளன்புடன் சொல்கிறான். உடனே காமாட்சிக்கு மனது நெகிழ்ந்து விடுகிறது.

“இந்தக் கண்ராவியை நான் தினமும் வேறு மாட்டிக்கணுமாக்கும்!” என்று செல்லமாக அவன் கன்னத்தில் கிள்ளுகிறாள். விருந்து தொடர்ந்து நடக்கிறது
தமிழ் இனி மெல்ல -10 [தொடர்கிறது ]

அரிசோனா மகாதேவன் 


                   விண்வெளி ஆராய்ச்சி மையம்,  காரைகட்
                    பிரஜோற்பத்தி, ஆடி 7 - ஜூலை 22, 2411
 க ண்களைக் கசக்கிக் கொண்டு பிலிப்பீன்ஸிலிருந்து வரும் கிரகண ஒளிபரப்பை மீண்டும் உற்று நோக்குகிறார் சோம்காந்த். ஒரு பெரிய கண்ணாடித் திரையில் ஒளிருகிறது அந்தக் காட்சி. காரைகட் வான ஆராய்ச்சி மையத்தின் தொலைக்காணும் அரங்கத்தில் தன் உதவியாளர்களுடனும் மற்ற நிபுணர்களுடனும் அமர்ந்திருக்கிறார் அவர். அதிகாலையிலேயே எழுந்து இந்தக் காட்சியைப் பார்த்து ஆராய அனைவரையும் அழைத்திருக்கிறார் அவர். கிட்டத்தட்ட முப்பத்தைந்து பேர் அவருடன் இருக்கிறார்கள்.

கிரகணம் ஆரம்பிக்க ஆரம்பிக்க அனைவரது ஆர்வமும் அதிகமாகிறது. மறையாமல் மிச்சமிருக்கும் சூரியத்துண்டின் நிறம் ஒருவிதமான திகிலை அளிக்கும் விதமாக மாறுகிறது. இதுவரை அவர்கள் கண்டிராத மாற்றமாக இருக்கிறது அது. சூரியனின் வண்ணம் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கிறது. பளிச்சென்றிருந்த சூரிய வட்டத்தில் பலவிதமான கறுப்புப் புள்ளிகள் (ண்தண ண்ணீணிtண்) அவர்களுக்குத் தெரிய ஆரம்பிக்கின்றன. இதுவரை தெரியாமலிருந்தவை இப்பொழுது திடீரென்று தோன்றுவது எப்படி என்று அவர் சிந்திக்கிறார். அந்தக் கறுப்புப் புள்ளிகளை பெரிதாக்கும்படி ஹைஜாவைக் கேட்டுக் கொள்கிறார். புள்ளிகளைச் சிறிது சிறிதாகப் பெரிதாக்குகிறாள் ஹைஜா. புள்ளிகள் விரிந்து பலவிதமான வடிவங்களை அடைகின்றன. அவற்றிற்குள்ளிலிருந்து இளம் பச்சை நிறத்தில் ஒளிப் புகை வருவது தெரிகிறது.

“ஸஹ்ஜ். நேற்று நாலைந்து தடவை மின்சார வெட்டு வந்ததே! எனவே இந்த ஒளி பரப்பு தடையில்லாமல் இருக்க ஏற்பாடு செய்தாகி விட்டதா?” என்று கேட்கிறார்.

ஆமென்று தலையாட்டுகிறாள் ஹைஜா. “சோம்த், மின் ஜெனரேட்டர்களை ஏற்கனவே இணைச்சாச்சு. அவை ஓடிக்கொண்டிருக்கின்றன. இப்ப நமக்கு வர்ற மினசாரம் ஜெனரேட்டர் மூலமாகத்தான் வருது. ஒரு விநாடிகூட மின்துண்டிப்பு இருக்க வாய்ப்பே இல்லை!”  என்று பெருமையுடன் கூறுகிறாள்.

வெரிகுட்! இப்படித்தான் இருக்கணும்! இனிமே நாம நிம்மதியா எல்லாத்தையும் பார்த்து கணிக்கலாம்.” என்று உற்சாகமாக ஆரம்பித்து, ஒரு பெருமூச்சுடன் முடிக்கிறார். கடந்த ஒரு வாரமாக நிழல் போல் அவருடன் இருந்ததால் அவரை நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது ஸஹஜாவால். அவர் மனதில் இருக்கும் ஒரு மிகப் பெரிய சுமையை அவள் நன்றாகப் புரிந்து கொள்கிறாள். அவர் என்னதான் மறைத்தாலும் அவர் உள்ளூர ஏதோ ஒன்றை தங்கள் அனைவரிடமிருந்தும் மறைக்கிறார் என்ற அளவுக்குப் புரிகிறது. அது என்னவாக இருக்கும் என்று யோசிக்க யோசிக்க அவனுக்கு ஒருவிதமான திகில்தான் ஏற்படுகிறது. எனவே, தன் மனதில் வரும் அந்த எண்ணங்களை வலுக்கட்டாயமாக ஒதுக்கிவிட்டு ஒளிபரப்புக் கண்ணாடியில் தன் கவனத்தைச் செலுத்துகிறார்.

கிரகணம் ஆரம்பித்து பதினைந்து நிமிடங்கள் ஆனதும் அவர்களால் தங்கள் கண்களையே நம்பமுடியாத அளவுக்கு ஒரு நிகழ்ச்சி அப்பொழுது நடக்கிறது. சந்திரனின் நிழல் மறைக்கப்படும் தருணத்தில் ஒரு சூரியப் புள்ளி வெடித்துச் சிதறுவது போல மிகவும் பிரகாசமாகத் தெரிகிறது. ஓரத்தில் சிவப்பும் நடுவில் வெள்ளையும் கலந்த கண்ணைக் கூசும் வெளிச்சம் சூரியத் துண்டை மறைப்பது தெரிகிறது. பின்னர் ஒரே இருட்டு!!!

“என்ன ஆச்சு? மின்சாரம் போய்விட்டதா?” என்று இறைகிறார் சோம்காந்த்.
ஸஹஜாவுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. சுற்று முற்றும் பார்க்கிறாள். அவள் முன்னால் இருக்கும் மேஜையில் இருக்கும் “கன்ட்ரோல் பானலி”ல் இருந்து வெளிச்சம் தெரிகிறது. மற்றும் அரங்கத்தின் ஓரத்தில் இருக்கும் நடை விளக்குகளின் ஒளியையும் அவள் கண்கள் கவனிக்கின்றன.

“இது மின்வெட்டு இல்லை சோம்த். வேறு ஏதோ ஒண்ணு. பிலிப்பீன்ஸிலிருந்து வரும் ஒளிபரப்பு நின்று விட்டமாதிரி தெரிகிறது” என்று பதில் சொல்லிவிட்டுத் தன் முன்னால் இருக்கும் மைக்கில் இருக்கும் பொத்தானை அழுத்திக் கொண்டு பிலிப்பீன்ஸ் வான ஆராய்ச்சி மையத்துடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறாள். ஆனால் “உஸ்ஸ்ஸ்..” என்ற காற்று சத்தம்தான் கேட்கிறது.

“பாங்காக் மையத்திற்குத் தொடர்பை மாத்து. வேறு சாட்டலைட்டுக்கும் தொடர்பை மாத்து. பின்னால் பிலிப்பீன்ஸில் என்ன ஆச்சுன்னு பாத்துக்கலாம்.” என்று உத்தரவிடுகிறார் சோம்காந்த். அவர் குரலில் ஒரு பரபரப்பு தெரிகிறது.

“இப்பொழுதுதான் பாங்காக்கில் சூரிய கிரகணம் ஆரம்பிக்கப் போகிறதாம். இதோ, அங்கிருந்து தொடர்பு கிடைத்து விட்டது.” என்று இணைப்புக் கொடுக்கிறாள் ஸஹஜா. ஒளிபரப்புக்கண்ணாடியில் சூரியன் மீண்டும் தெரிகிறது. அதன் நிறமே மங்கி மங்கிப் பளிச்சிடுகிறது. வானம் கொஞ்சம் கருநீலமாகத் தெரிகிறது. பாங்காக்கில் கிரகணம் தொடங்குகிறது.

“சுர்ஸ், வெளியில் வானம் நிஜமாகவே கருநீலமாகத் தெரிகிறதா என்று பாங்காக் மையத்தைக் கேள். ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துச் சொல்லச் சொல்லு. அப்ஸ், நீ வெளியே போய் வானம் எந்த நிறத்தில் இருக்கு, சூரியன் எப்படி இருக்கு என்று பார்த்து எனக்கு அவ்வப்போது செய்தி அனுப்பு. இரு, இரு, வெளியே ஒரு காமிராவை வைச்சு, இங்கே ஒளி பரப்ப ஏற்பாடு செய்” என்று சுரேஷ், அப்ஸர் என்னும் தன் உதவியாளர்களுக்கு உத்தரவிடுகிறார். உடனே காரைகட் மையத்தின் தலைவருடன் தொடர்பு கொள்கிறார். அவர் முக்கியமான கூட்டத்தில் இருப்பதாகவும், அவரைத் தொந்தரவு செய்யமுடியாதென்றும் பதில் கிடைக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------
அரிசோனா மகாதேவன்  


 தமிழில் முதன் முதலாக  வெளிவரும் விண்வெளி ஆய்வு மையத்தை வைத்துக்கொண்டு காலத்தைக் கடக்க வைக்கும் அறிவியல் புதினம். மொழிப் பற்று மொழி மூர்க்கமாகும் போது நிகழும் மாற்றங்களை ஆயும் பார்வை

-----------------------------------------------------------------------------------------------------------------------

“மூர்ட், உடனே ஸோஹன்லாவின் ஆபீஸுக்குப் போ. தலை போகிற விஷயம் நான் அவருடன் பேச வேணும்னு சொல்லு. எப்படியாவது அவரை நீ சம்மதிக்க வைக்கணும். போ, போ, போ” என்று விரட்டுகிறார். எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறார் என்று புரியாமல் வெளியே செல்கிறான் மூர்ட் என்று அழைக்கப்பட்ட மூர்த்தி. ஸஹஜாவுக்கு சோம்நாத்தின் பதட்டம் புரிகிறது. கூடவே அடிவயிற்றில் ஒரு பய உணர்வும் பிறக்கிறது. அவர் முகம் பேயறைந்த மாதிரி மாறி வருவதைப் பார்க்கிறாள். மெதுவாக அவர் அருகில் சென்று அவரது கைவிரல்களுடன் தன் கைவிரல்களைப் பின்னிக் கொள்கிறாள். அவளைத் திரும்பிப் பார்த்த சோம்நாத் மெதுவாகப் புன்னகை புரிகிறார்.

மெதுவாக அவள் காதுகளில் மட்டுமே கேட்கும்படியாக, “மிக்க நன்றி ஸஹ்ஜ். நான் சமாளிச்சுக்குவேன். நீ உன் இடத்துக்குப் போ. அதுதான் இப்ப எனக்கு ரொம்ப உதவியா இருக்கும்.” என்று அவள் கைகளைப் பற்றி அமுக்குகிறார். அவரது நன்றி உணர்வு அந்த அமுக்கல் மூலம் தன் உடல் முழுவதும் பரவுவதை உணர்கிறாள் ஸஹஜா. அவனுள் அவரிடம் ஒரு தந்தைப் பாசம் பொங்குகிறது. மீண்டும் தன் இருப்பிடத்திற்கு வந்து அமர்கிறாள்.

“கிரகணம் ஆரம்பித்தவுடன் பாங்காக்கில் வானம் கருநீலமாக ஆகிக் கொண்டுதான் இருக்கிறது.” என்று தகவல் வருகிறது. பிலிப்பீன்ஸ் தொலைநோக்கு மையத்தை இணைக்கும் தகவல் அனுப்பும் வான் கோள் (SATELLITE) திடுமென்று செய்தி அனுப்பாமல் நின்று விட்டதால்தான் அவர்களால் செய்தி அனுப்பமுடியவில்லை என்றும், நுண்ணலை, வான்வழித் தொடர்பு அனைத்தும் நின்று விட்டதாகவும், கடலடிக் கம்பி மூலம் மட்டும்தான் வெளியிடத்திற்குத் தொடர்பு கொள்ள முடிகிறது என்று தகவல் வருகிறது.

“நான் சந்தேகப்பட்டபடி நடக்க ஆரம்பித்து விட்டது. ஈஸ்வரா! இது பிலிப்பீன்ஸில் ஏற்பட்ட தனி நிகழ்ச்சியாக மட்டும் இருக்கட்டும் என்று தனக்குள் முணுமுணுக்கிறார் சோம்காந்த்.

கிரகணம் மேலும் தொடர ஆரம்பிக்கிறது. சூரியன் கால்வாசி மறைய ஆரம்பித்ததும் சூரியப் புள்ளிகளைக் கண்காணிக்க ஆரம்பக்கிறார்கள. முன்பு தெரிந்ததைவிட அதிகமாக பச்சைப் புகை தெரிகிறது. அதோடு மட்டுமில்லாமல் சில புள்ளிகளிலிருந்து எரிமலை பொங்குவது போல சிவப்பு, வெள்ளை நிறக்கலவைகள் பீச்சி அடிக்கின்றன. சூரியனிலிருந்து நெருப்புப் பொறிகள் வெடித்துப் பறப்பதுபோன்ற தோற்றம் தென்படுகிறது. கருநீல வானத்தில் அவை மின்னல் கொடிகளாகப் பரவுகின்றன.

“ஸஹஜ், உடனே அந்தமான் அருகிலிருக்கும் நிகோபார் தீவு தொலைநோக்கு மையத்தின் ஒளிபரப்பைத் தயாராக்கு. நான் நினைப்பது சரியானால் இன்னும் பத்து நிமிடங்களில் நமக்கு பாங்காக்கிலிருந்து தகவல் வருவது நின்று போக வாய்ப்பிருக்கு.” என்று எச்சரிக்கிறார் சோம்காந்த். அவரது குரலில் தொளித்த லேசான நடுக்கம், ஸஹஜாவுக்கு ரத்தத்தை உறைய வைக்கிறது.

---------------------------------------------------------------------------------------------------------------------


தமிழில் முதன் முதலாக  வெளிவரும் விண்வெளி ஆய்வு மையத்தை வைத்துக்கொண்டு காலத்தைக் கடக்க வைக்கும் அறிவியல் புதினம். மொழிப் பற்று மொழி மூர்க்கமாகும் போது நிகழும் மாற்றங்களை ஆயும் பார்வை  



                                                                                                                            
----------------------------------------------------------------------------------------------------------------------

மூர்த்தியிடமிருந்து தகவல் வருகிறது, ஸோஹன்லால் சோம்காந்த் மீது மிகவும் கோபமாக இருக்கிறார் என்று, காதில் கேட்க முடியாத வார்த்தைகளைச் சொல்லிச் சோம்காந்த்தைத் திட்டினார் என்று சொல்கிறான். இது எதையும் காதில் வாங்காமல் தான் ஸோஹன்லாலுடன் பேசவேண்டும் என்று வற்புறுத்துகிறார் சோம்காந்த். சிறிது நேரத்திற்குப் பிறகு தனியிடத்தில் அவருக்குத் தொடர்பு கிடைக்கிறது.

“சோம்த்,  என் பொறுமையை நீ மிகவும் சோதிக்கிறாய். நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் டெல்லி செல்லும் பிளேனில் இருக்கணும். உனக்கு ஒரு நிமிஷம் தறேன். நீ சொல்ல வேண்டியதைச் சொல்லு.” ஸோஹன்லாவின் உறுமல் ஒலிக்கிறது.

எச்சிலை விழுங்கிக் கொண்டு,  “சார், தயவுசெய்து பிளேனில் போகாதீங்க! உங்க செல்வாக்கை உபயோகிச்சு இன்னும் ரெண்டு மணி நேரத்திற்கு, அதாவது சூரிய கிரகணம் முடியறவரை எல்லா விமானப் போக்குவரத்தையும் நிறுத்தும்படியும், பறக்கற எல்லா விமானங்களையும் உடனே தரையிறங்கும்படியும் அதிரடி உத்தரவு போடச்சொல்லுங்க. இது மிகமிக முக்கியம்.” என்று கெஞ்சுகிறார் சோம்காந்த்.

எரிமலையாக வெடிக்கிறார் ஸோஹன்லால். “உனக்கு பைத்தியம்தான் பிடிச்சிருக்கு சோம்த்! எவ்வளவு முக்கியமான கலந்துரையாடலுக்கு நான் டெல்லி போறேன் தெரியுமா?” என்றவரை சோம்காந்த் இடைமறித்து, “சார், ஒரு நிமிஷம் நான் காட்டும் சூரிய கிரகண ஒளிபரப்பைப் பாருங்க. பிலிப்பீன்ஸ்ல எல்லா வைர்லெஸ் அலைபரப்புகளும் நின்னு போச்சு. அலைபரப்பு ஸாடலைட் பழுதாயிடுத்து. நமக்கு அங்கேந்து தகவலே கிடைக்கலே. பாங்காக்லேந்து வர்ற ஒளிபரப்பைப் பார்க்கும்போது, பயங்கரமான சூரியக் கதிர்வீசல் வந்து எல்லா செயற்கைக் கோள்களும் (satellites) பாதிக்கப்பட்டு, விமானங்கள்...”

சோம்காந்துக்கும், ஸோஹன்லாலுக்கும் இடையே இருக்கும் தொடர்பு துண்டிக்கப்படுகிறது. நாற்பது விநாடிகளில் மூர்த்தியிடமிருந்து தகவல் வருகிறது - அவரை தாற்காலிக வேலைநீக்கம் செய்திருப்பதாகவும், வான ஆராய்ச்சி மையத்திலிருந்து உடனே கிளம்பும்படியும் ஸோஹன்லால் உத்திரவிட்டிருப்பதாக, “கான்க்காத்” (பழைய கானாடுகாத்தான்) விமானநிலையத்திற்கு அவர் ஹெலிகாப்டரில் கிளம்பி விட்டதாகவும் தகவல் வருகிறது.


“ஈஸ்வரா!” என்று சொல்லிக்கொண்டே தலையில் கைவைத்தபடி இடிந்து உட்கார்ந்து விடுகிறார் சோம்காந்த்.

                                       தஞ்ஜு விமான நிலையம்
                          பிரஜோற்பத்தி, ஆடி 7 - ஜூலை 22, 2411
பாங்காக் வழியாக ஷாங்ஹை செல்லும் விமானம் தஞ்ஜு ஸாம்ராட் ராஜ்ராஜ் பன்னாட்டு விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு வானில் எழும்புகிறது. அதேசமயம் ஷிஃபாலியின் மனம் பின்னோக்கிச் சென்று நிகழ்ச்சிகளை அசை போடுகிறது...

...ஷிஃபாலி கிளம்பும் சமயம் நிமிஷாவின் கண்கள் மிகவும் கலங்கி விடுகின்றன. மூன்று மாதங்கள் தனது தாயை நேரில் காணமுடியாது என்பது அப்பொழுதுதான் அவனுக்கு உரைக்க ஆரம்பிக்கிறது. என்னதான் துணிவுடன் சொல்லியிருந்தாலும், தாயைப் பிரிந்து இருக்கப் போவது அவனுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. இருந்தாலும் அழுது தாயைக் கலங்கவைக்க வேண்டாம் என்று புன்னகை செய்யப் பார்க்கிறாள். இருப்பினும் கலங்கும் கண்கள் அவளது உள்ளத்தை ஷிஃபாலிக்குக் காட்டிக் கொடுக்கின்றன. தாயை இறுக அணைத்துக் கொண்டவள், அவளை விட மனமில்லாது அப்படியே நின்று கொண்டிருக்கிறாள். மெதுவாக அவளது உடும்புப் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறாள் ஷிஃபாலி.

“நிம்ஸ், நான் தினமும் உன்னோட பேசுவேன். உனக்கு துணையா காம்ஸும், ஏக்ஸும் இருக்காங்க இல்லையா? உனக்கு என்ன சாப்பிடனும்னாலும் காம்ஸ் செஞ்சு தருவா. வேற எதுன்னாலும் கேஷைக் கேளு. உன்னை எங்கே வேணும்னாலும் அவன் கூட்டிப் போவான். எதுவும் வாங்கி வருவான். நீ அழுதா எனக்கு சீனாவிலே வேலையே ஓடாது. சந்தோஷமா எனக்கு டாட்டா சொல்லு.” அவள் குரல் நிமிஷாவைக் கெஞ்சுகிறது.

“ஓகேம்மா. என்னைப் பத்தி கவலைப்படாம போய்ட்டு வா. என்னை இவங்க கவனிச்சுக்குவாங்க. நான் பாடங்களை நல்லா படிப்பேன். உனக்கு தினமும் அதைப் பத்திச் சொல்றேன். பத்திரமா சீனா போயிட்டு வா!” என்று பதிலளிக்கிறாள்.

ஹோட்டலின் வாயிலில் ஷிஃபாலியின் குழு அவளுக்காக சிறு பஸ் ஒன்றில் காத்திருக்கிறது. ஷாங்ஹையில் இறங்கியவுடன் ஓட்டல் அறையில் அவர்களுடன் தொடர்பு கொள்வதாகச் சொல்லி, அந்த பஸ்ஸில் ஏறிக்கொண்டு, மகனுக்கும், அவளுடன் நிற்கும் காமாட்சி, ஏகாம்பரநாதன், அழகேசன், இவர்களை அங்கே இருப்பதைப் பார்த்துவிட்டு வந்த ஈஸ்வரனுக்கும் கையசைத்து விடை பெறுகிறாள். அடுத்த நாள் அழகேசன் அவர்களை ஷெனாய்க்கு அழைத்துச் சென்று விடுவாள், பிறகு ஒவ்வொரு நாளும் அவர்களுடன் முப்பரிமாணத் தொடர்பு கொள்ளலாம். நிமிஷாவும் தான் இல்லாத குறையை உணரமாட்டாள் என்று நினைத்தபடி சக்ரவர்த்தி ராஜ்ராஜ் பன்னாட்டு விமான நிலையத்திற்குப் பயணிக்கிறார்.

என்னதான் தக்கண்கண்டிலேயே ஷெனாய் பெரிய நகரமாய்ப் பரிணமித்திருந்தாலும், அலுவலக வசதியை முன்னிட்டும், மாநிலத்திற்கு நடுவில் இருக்கிறது என்பதாலும், தக்கண்கண்ட்டின் தலைநகரம் 2300லேயே ஷெனாயிலிருந்து தஞ்ஜுவுக்கு மாற்றப்பட்டது. ஒரு மாநிலத்தின் தலைநகரம் என்பதால் அதன் உள்நாட்டு விமானநிலையம் பெரிதாக விரவுபடுத்தப்பட்டு, பெரிய பன்னாட்டு விமான நிலையமாகவும் ஆக்கப்பட்டு விட்டது.

...“அனைவரையும் வரவேற்கிறோம். இந்த வானப் பயணத்தில் ஒரு சிறப்பு இருக்கிறது. நாம் நிறைய நேரம் முழு சூரிய கிரகணத்தின் வழியில் செல்வதால் அது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். பாதி கிரகணத்தின் பொழுது நீங்கள் வெறுங்கண்ணுடன் பார்த்து விடக்கூடாது என்பதற்காக நிழற் கண்ணாடிகள் வைத்திருக்கிறோம். ஜன்னலோரம் இருக்கை இல்லாதவர்களுக்காக முப்பரிமாணக் கண்ணாடி இருக்கிறது. அதை அணிந்து கொண்டு கிரகணத்தைப் பார்த்து அனுபவியுங்கள். அந்தமான் தீவுகளைத் தாண்டும்பொழுது கிரகணம் உச்சக்கட்டத்தை அடையும். அப்பொழுது வானமே இருட்டாகிவிடும். அந்தப் பயங்கலந்த இருட்டை ரசித்துப் பாருங்கள்! உங்கள் தேவையைக் கவனிக்க விமான உபசரிப்பாளர்கள் இருக்கிறார்கள்! இப்பொழுது ஓய்வுடன் பயணத்தைத் தொடருங்கள்.” தலைமை விமானியின் அறிவிப்பு அவள் கவனத்தை நிகழ்காலத்திற்குக் கொண்டுவருகிறது.

அவளது இருக்கை ஜன்னலருகில் இருந்தாலும், அவள் கணிணியை எடுத்துக்கொண்டு அலுவலக வேளைகளைக் கவனிக்க ஆரம்பிக்கிறாள். பதினைந்து நிமிஷங்கள் ஆனதும் ஜன்னலுக்கு வெளியே நிகழும் ஒன்று அவளது கவனத்தைத் திருப்புகிறது. ஜன்னல் வழியே வெளியே பார்த்தவள் திடுக்கிடுகிறாள். வானம் கருநீலமாக ஆகிக் கொண்டிருக்கிறது. வானமெங்கும் சிவப்பும், வெளுப்புமாகப் பொறிகள் சூரியனிடமிருந்து பறந்து கொண்டிருக்கின்றன. பொறிகள் கண்ணைப் பறிக்கும் அளவுக்கு பிரகாசமாக இருக்கின்றன. நிலவின் நிழலால் முழுவதும் மறைக்கப்படாத சூரியன் விட்டுவிட்டுப் பிரகாசிக்கிறது. இதுவரை பார்க்காத நிகழ்ச்சியாக இருக்கிறதே என்று ஷிஃபாலி நிழற்கண்ணாடியை அணிந்து கொண்டு கவனிக்கிறாள். அவளது நெஞ்சைக் கலக்குகிறது அந்தக் காட்சி.

பழைய புராணங்கள் சொல்லுமே, சூரியனைப் பாம்புகளான ராகுவும் கேதுவும் விழுங்கித் துப்புவதுதான் கிரகணம் என்று - அது ஒருவேளை உண்மைதானோ என்பதுபோல - வளைந்து நீண்ட மேகத்திரளின் நுனியில் தெரியும் அரைகுறையான சூரியன் பாம்பின் வாயில் துடிப்பது போல இருக்கிறது. ஒரு கணம் மிகவும் பிரகாசமாகவும், அடுத்த கணமே மிகவும் மங்கலாவும் சூரியன் தெரிகிறது. அச்சமயம் அதனிடமிருந்து சிவப்பும் வெள்ளையுமாக ஒளித் தெறிப்புகள் வெடித்துச் சிதறுகின்றன. கருநீல வானத்தில் அவை தீபாவளி வாணவேடிக்கையாகப் பரிணமிக்கின்றன. மனோவசியப்பட்ட மாதிரி அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஷிஃபாலியை விமானத்தின் குலுக்கல்கள் திடுக்கிட வைக்கின்றன.

தொப்பென விமானம் கீழிறங்கி, அவளது குடலை இரைப்பைக்கு கொண்டு வருகிறது. அதே சமயம் விமானிகளின் அறையில் பதட்டம் நிலவுகிறது. இதுவரை கண்டிறாத கருநீல வானத்தில் எழுகின்ற வாணவேடிக்கைகளையும், ஒளித் தெறிப்புகளைச் சிதறவிடும் சூரியனையும் ரசித்தவாறு ஒட்டிக்கொண்டிருந்த விமானிகளை செயற்கைச் கோள் வழிகாட்டும் கருவிகள் (satellite guidance systems) திடுமென மங்கி, இருளடைந்து திண்டாட வைக்கின்றன.

விமானத்தின் “தானியங்கி விமானி” (Auto pilot) தன் பிடியை நழுவ விட்டுவிடுகிறது. தலைமை விமானி எத்தனை தடவை முயன்றும் அது வேலை செய்ய மறுக்கிறது. எனவே அவர் விமானத்தின் சுக்கானைப் பிடித்து ஓட்ட ஆரம்பிக்கிறார். தானியங்கி விமானி வேலை செய்யாததால் அந்தமானில் தரையிறக்கத் தீர்மானிக்கிறார். உடனே ஆபத்து என்று அந்தமான் வீர்ஸாவர்க்கர் விமானநிலையத்திற்கு ஒலிபரப்பு செய்யும்படி உதவி விமானிக்குக் கட்டளையிட நினைக்கும்போது, “காப்டன், ரேடியோ வேலை செய்யவில்லை. நம்மாலும் எந்த அலைவரிசைகளிலும் ஒலிபரப்பைக் கேட்க முடியவில்லை!” என்று பதட்டத்துடன் அவருக்குத் தகவல் கொடுக்கிறார் உதவி விமானி.

“என்ன ஆயிற்று? விமானமே வேலை செய்ய மறுக்கிறதே! அந்தமானில் தரையிறக்கவேண்டும்! தேவைப்பட்டால், தண்ணீரில் விமானத்தை இறக்கவும் தயாராக இருப்போம்! செயற்கைக்கோள் வழிகாட்டி இல்லாததால் நாம் திசைகாட்டியின் (Compass) உதவியுடன் சென்று அந்தமானில் தரையிறக்க முயற்சிப்போம். நான் பயணிகளுக்கு அறிவிக்கிறேன்” என்று ஒலிவாங்கியைக் (microphone) கையில் எடுத்து அறிவிக்க ஆரம்பித்தார்.

ஆனால் விமானத்தின் ஒலிபெருக்கிகள் வேலை செய்யவில்லை. அவருக்கு சட்டைக்குள் வியர்க்க ஆரம்பிக்கிறது.

விமானத்தில் ஒருபொழுதும் மொத்த வேலை செய்யாமை (total failure) ஏற்படாது. எத்தனையோ முறை சில கருவிகள் வேலை செய்யாமல் சிமிலேட்டரில் (ண்டிட்தடூச்tணிணூ) விமானத்தை ஓட்டப் பயிற்சி எடுத்திருந்தாலும் இம்மாதிரியான ஒரு நிலைமை அவருக்குச் சொல்லித் தரப்படவில்லை. எனவே, அவரது அதிர்ச்சிக்கு அளவே இல்லை.
கதவைத் தட்டிக் கொண்டு தலைமைப் பணிப்பெண் ப்ரீதி உள்ளே வருகிறாள். “காப்டன், உள்ளே அனைவரும் மிகவும் பயந்து போய் இருக்கிறார்கள். என்ன ஆகிறது என்று தெரியவில்லை. உங்களிடமிருந்து ஒரு அறிவிப்புமே இல்லையே?”

“ப்ரீத், நாம் மிகவும் பெரிய சங்கடத்தில் இருக்கிறோம்! என்னுடைய மைக் வேலை செய்யவில்லை. அந்தமானில் தரையிறங்கப் போகிறோம். உடனே, நீ எல்லோரையும் அதற்காகத் தயார் செய். மிகவும் கலவரப் படுத்தாதே. என் மைக் வேலை செய்யாவிட்டாலும் ஒருவேளை வெளியில் இருக்கும் மைக்குகள் வேலை செய்யலாம். உடனே போ!” என்று அவளை விரட்டுகிறார்.

கதவைச் சாத்திக்கொண்டு பரபரப்புடன் செல்கிறாள் தலைமைப் பணிப்பெண் ப்ரீதி.

“காப்டன், வலது பக்க எஞ்சின் தடுமாறுகிறது. அதன் சக்தி குறைந்து கொண்டே வருகிறது!” என்று அறிவிக்கிறார் துணை விமானி. சில கணங்களில் வலது பக்க என்ஜின் நின்று விடுகிறது.

சூரிய கிரகணத்தை முப்பரிமாணத்தில் பார்த்த பயணிகளுக்கு காட்சி நின்று போய் இப்பொழுது கருமை மட்டுமே தெரிகிறது. காதில் கேட்ட ஒலிகளும் நின்று விடுகின்றன. எஞ்சின்களின் ஒலியும், சமனப்படுத்திய காற்றும் நின்றுவிட்டதால் விமானத்திலுள்ளே அமைதி நிலவுகிறது.

அடிக்கடி விமானம் கண்டபடி குலுங்கி விழுந்து விழுந்து செல்கிறது. ஒலிபரப்புக் கருவிகள் வேலை செய்யாததால் சரியான நேரத்தில் அறிவிப்பு கொடுக்க இயலாமல் போய்விடுகிறது. பெல்ட் அணியாத பயணிகள் குலுக்கி எடுக்கப்படுகிறார்கள். நின்றும், நடந்து கொண்டிருக்கும் பயணிகள் தூக்கி எறியப்படுகிறார்கள். உள்ளே ஒரே கூச்சல் எழுகிறது.

பெல்ட் அணிந்து கொண்டிருந்ததால் ஷிஃபாலி தூக்கி எறியப்படாவிட்டாலும், அவளது கணினி தூக்கி எறியப்படுகிறது. விமானத்தின் நிலை அவளை நடுங்க வைக்கிறது. இருக்கையின் கைகளை இறுகப் பற்றி கொள்கிறாள். விமானம் சுழன்றுகொண்டே கிடுகிடுவென்று கீழே இறங்குவது தெரிகிறது.

விமானம் பலமாகக் குலுங்குகிறது. திடுமென்று ஒரு பக்கம் சாய ஆரம்பிக்கிறது. அதைச் சரி செய்ய முயல்கிறார் தலைமை விமானி. திடுமென்று எல்லாக் கருவிகளும் இருண்டு போகின்றன. இடது பக்க எஞ்சினிலிருந்து வரும் சத்தமும் குறைந்து அதுவும் நின்று விடுகிறது. விமானத்தின் மூக்கு கீழிறங்க ஆரம்பிக்கிறது. கீழே அந்தமான் தீவுகள் புள்ளி போலத் தெரிந்து பெரிதாக ஆரம்பிக்கின்றன. எல்லா விளக்குகளும் மங்கி அணைந்து போகின்றன. கருவிகள் வேலை செய்யாததால் எவ்வளவு உயரத்தில் விமானம் பறக்கிறது என்றும் தெரியவில்லை. அவர் சுக்கானை இறுகப் பிடித்து விமானத்தை நிலைப்படுத்த முயல்கிறார். அவரது முயற்சிக்கு விமானம் கட்டுப்பட மறுக்கிறது.

எல்லா விமானங்களும் கம்பி மூலம் பறப்பதால் (Flown by wire controls) மின்சாரம் இல்லாமல் அவை வேலை செய்யாது. ஆகவே, அவசரத் தேவைக்காக மின்கலங்கள் இருக்கும். ஆனாலும் அவைகளும் வேலை செய்யாததால் சுக்கானால் விமானத்தின் இறக்கைகளை இயக்க முடியாது போகிறது. விமானத்தை சமநிலைப் படுத்தவோ, அதன் மூக்கை நிமிர்த்தி தண்ணீரில் இறக்கம் செய்யவோ முடியாது என்று உணர்கிறார் தலைமை விமானி.


வெளியே மிகப் பெரிதாகத் தரை தெரிய ஆரம்பிக்கிறது. சுழன்று சுழன்று கீழே இறங்கும் விமானம் சில விநாடிகளில் தரையைத் தாண்டிச் சென்று கடலில் விழுந்து நொறுங்குகிறது.[வளரும்]

No comments:

Post a Comment