Wednesday 16 July 2014

இப்ப என்ன மாறிப் போச்சு?சிறுகதைத் தொடர்ச்சி

இப்ப என்ன மாறிப் போச்சு-?

 அரிசோனா மகாதேவன் 

          [சிறுகதைத் தொடர்ச்சி ]



“என்ன பாட்டி?” என்று கேட்ட ராஜாவிடம் விஷயத்தை விளக்கிய பார்வதி. “வயசான மனுஷன். பசியோட வருவார். இலை வாங்கி வரச் சொல்லி அவரைத் திரும்ப அனுப்பணுமே.” 


ஆதுரம் தோய்ந்த குரலில் வருத்தப்பட்டாள். என்ன தடுத்தும் கேட்காமல் தானே இலை வாங்கி வருவதாக, ஏர்பாக்கை அங்கேயே விட்டுவிட்டுக் கிளம்பினான் ராஜா.

அவன் புறப்பட்டுச் சென்ற அடுத்த நிமிடத்திலேயே கதவைத் தட்டினார் சிவராமன். அவரிடம் ராஜாவைப் பற்றி புகழாரம் சூட்டி விவரித்தாள் பார்வதி.

“கலிகாலம், கலிகாலம்னு சொல்றா. எனக்கெனவோ திரேதாயுகம் திரும்பறதுன்னுதான் தோண்றது. இந்தக் காலத்துலே இந்த மாதிரியும் ஒரு பிள்ளையாண்டான் இருக்கறதைப் பார்த்தா மனசுக்கு எவ்வளவு குளிர்ச்சியாத் தெரியுமா இருக்கு?  சாட்சாத் முருகப் பெருமானே நேரிலே வந்த மாதிரி இருக்கு,” என்று ராஜா புகழ் பாடி, அவர் வருவதற்கு முன்னால் நடந்ததை வாய் வலிக்க விளக்கினாள்.  

“அவனுக்கு இருக்க ஜாகை இனிமேத்தான் பாக்கணுமாம். நம்மாத்து மாடி ரூம் காலியாத்தானே இருக்கு. அவனே அங்கே தங்கிக்கட்டுமே! நமக்கும் இந்தத் தள்ளாத காலத்திலே ஒரு துணையாக கூட இருக்குமே. தவிர, அவன் உங்க ப்ரெண்டோட பேரன் அப்பிடீன்னு வேற சொல்றான்.”
“நீயே முடிவு பண்ணிட்ட்டே! என்னிக்கு உன் முடிவு தப்பாப் போயிருக்கு? மனுஷாளைப் பார்த்தா ஒரு நிமிஷத்திலேயே அவா எப்படிப் பட்டவான்னு கரக்ட்டாச் சொல்லிடுவே. அப்படியே செஞ்சாப் போச்சு.” சிரித்தவாறே பார்வதியை ஆமோதித்தார் சிவராமன்
.
வாசலில் நிழலாடியது.

“அதோ, அந்தப் பிள்ளையாண்டானே வந்துட்டான்.” வேகுவேகுவென்று சென்று வாசல் கதவைத் திறந்து விட்டாள் பார்வதி. 

“உனக்கு நூறு வயசு ராஜா! வா, வா!” கையில் இலைக்கட்டுடன் நுழைந்த ராஜாவை அன்புடன் வரவேற்றாள்.

இலைக்கட்டை பார்வதியிடம் கொடுத்த ராஜா சிவராமனைக் கைகூப்பி வணங்கினான். 
“வாப்பா ராஜா!” என்று அமைதி ததும்பும் குரலில் பாசமுடன் வரவேற்றார் சிவராமன்.
“என் தாத்தா உங்களுடன் 1942ல் அமராவதி ஜெயிலில் ஆறு மாசம் இருந்தாராம். அவருக்காக நீங்க ஜெயிலர் கிட்ட நிறைய அடியும் உதையும் வாங்கி இருக்கீங்களாம். கூடப் பிறக்காத அண்ணன் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.” 

உற்சாகமாகச் சொல்லிக்கொண்டே போனான் ராஜா.“என்னையும் சேர்த்து அஞ்சு பேரை ஒரே அறையில் அடைச்சு வச்சா. எல்லாரையும் மாட்டடி அடிப்பா. படாத இடத்திலே பட்டு ஜெயில்ல ஒர்த்தன் செத்துக்கூடப் போய்ட்டான். அதுனால ஒர்த்தரை அடிச்ச இன்னூர்த்தர் குறுக்கே வந்து அந்த அடியைக் கொஞ்சம் தாங்கிப்போம். அதுலே ஸ்பெஷலா ஒண்ணும் இல்லே.” என்று சிவராமன் விளக்கியபோது ராஜாவுக்கு கண்கள் கொஞ்சம் கலங்கின.

“அது சரி, உன் தாத்தா பெரு என்ன சொன்னே?” சிவராமன் கேட்டார்.

“காதர் பாட்சா ராவுத்தர்.” என்று ராஜா சொன்னவுடன், “அடேடே! நம்ம ராவுத்தர் பேரனா நீ? பார்வதி உன் பெரு ராஜான்னு சொன்னாளே...” என்று சிவராமன் இழுத்தார்.

“அது சுருக்கமான பெயர் தாத்தா. என் பேர் சிக்கந்தர் ராஜா.” என்று தன் முழுப் பெயரைச் சொன்னான் ‘ராஜா’ என்ற ‘சிக்கந்தர் ராஜா’.

“உன்னைப் பார்த்ததுமே எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைச்சுண்டே இருந்தேன். அப்படியே ராவுத்தர் ஜாடைதான் உனக்கு.” என்று அவனை மார்புடன் அணைத்துக் கொண்டார் சிவராமன்.

“பார்வதி, பார்த்தியா! நம்ம காதர் பாட்சா ராவுத்தர் பேரன் நம்மைப் பார்க்க வந்திருக்கான்!” அவருக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. சொந்தப் பேரன் இருந்து, அவனே தங்களைப் பார்க்க வந்ததுபோல ஒரு மகிழ்ச்சி.

“நீ துணைக்கு ஒருத்தர் இருந்தா சௌரியமா இருக்கும்னு சொன்னியே, அது எவ்வளவு சரியாப் போயிடுத்து பார்த்தியா!”

“கொஞ்சம் உள்ளே வரேளா? வெளிலே வாக்கிங் போயிட்டு வந்திருக்கேள். காலை அலம்பிண்டு வந்து பேசலாமே!” 

பதவிசாய்க் கூப்பிட்டாள் பார்வதி.

புருவத்தை உயர்த்தி, “என்ன விஷயம், புதிதாக?” என்று பார்வதியை மௌனமாகக் கேட்டுவிட்டு, “ராஜா, உக்காந்துக்கோப்பா. இதோ வந்துடறேன். நிறையப் பேசவேண்டிய விஷயங்கள் இருக்கு.” என்று புழக்கடைப் பக்கம் நடந்தார்.

அவருடன் நடந்து வந்த பார்வதி, ராஜாவின் காதில் பேச்சு விழாத தூரத்திற்கு வந்து விட்டோம் என்று நிச்சயமானவுடன், “இந்தப் பிள்ளையாண்டானை ஆசீர்வாதம் பண்ணி அனுப்பி விட்டுடுங்கோ. இவன் நம்மாத்தில் ஒண்ணும் தங்கவேண்டாம். நான் அவசரக் குடுக்கையாட்டம் தப்பாச் சொல்லிட்டேன்.” என்றாள்.

அவளை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்த சிவராமன், “இப்ப என்ன மாறிப் போச்சு? மாடி ரூம்லே இருக்கட்டும், நமக்குத் துணையா இருக்கும்னு நீதானே சொன்னே?”

மெதுவாகக் கேட்டாலும் அவர் குரலில் இருந்த கோபம் பார்வதியின் இரத்த ஓட்டத்தையே உறைய வைத்தது.

இருந்தாலும், தன்னைச் சமாளித்துக்கொண்டு, “உங்களுக்கு நன்னாத்தான் பைத்தியம் பிடிச்சிருக்கு. பரம்பரை பரம்பரையா வேதகோஷம் நடந்த இந்த வீட்டிலே ஒரு துலுக்கப் பையனையா குடி வைக்கப் போறேள்? பேரு ராஜான்னு சொன்னான். முகத்திலே மீசை இல்லாம, வெள்ளை வேஷ்டியைக் கட்டிண்டு, புஷ்பம் வாங்கிண்டு வந்து, ஆசிர்வாதம் வாங்கிக்க வந்திருக்கேன்னு பதவிசாப் பேசினதைப் பார்த்தா பிராமணப் பையன் மாதிரி இருந்துது. அதுதான் சொன்னேன். இப்பத்தானே தெரியறது, இவன் யாருன்னு!” என்று நீட்டி முழக்கினாள்.
“தப்பு பார்வதி! ரொம்பத் தப்பு. சாட்சாத் முருகப் பெருமானே நேரிலே வந்தது மாதிரி இருக்குன்னு சொன்னியே, அப்ப அவன் உன் கண்ணுக்கு முருகனாத்தானே தெரிஞ்சான்? இப்ப எப்படிடீ அவன் வேற ஒர்த்தனாத் தோணறான்? வெறும் ராஜா ‘சிக்கந்தர் ராஜா’ ஆனதுனாலையா? எதுவுமே மாறலைடீ. அறுபத்தஞ்சு வருஷமா நான் எப்படி வாழறேன், எதுக்கு வாழறேன்னு என்கூட இருந்து பார்த்துமா, என்னை நன்னாத் தெரிஞ்சுண்டுமா நீ இப்படிப் பேசறே?

“இந்தப் பையனோட தாத்தாவைப் பத்தி உனக்குத் தெரியுமாடீ? நானும், அவரும் எப்படி இருந்தோம்னாவது உங்க யாருகிட்டயாவது சொல்லி இருப்பேனா? கவர்மென்ட்டுக்கு எதிரா சத்தியாக்கிரகம் பண்ணிட்டு, ஆறு மாசம் ஜெயிலுக்குப் போனேன்னுதான் உனக்குத் தெரியும். 
“என் முதுகிலே வரிவரியா இருக்கற தழும்புகள் அங்கே ஜெயில்ல இருந்த வெள்ளைக்காரனோட கைக்கூலியான ஜெயிலர் எனக்குத் பரிசாத் தந்ததுன்னுதானே தெரியும்? முழுக் கதையையும் உனக்கு இப்பச் சொல்லறேன், கேட்டுக்கோ!”

சிறிது நேரம் தன்னுள் பொங்கி எழும் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு மீண்டும் தொடர்ந்தார் சிவராமன்.

“ஜெயில்ல இருந்தாக்கூட நான் தினமும் சந்தியாவந்தனம் பண்ணுவேன். அப்ப ஒரு ஜெயிலர், எண்டா ஐயரே, நீ பாட்டுக்கு தெனமும் கோயிலுக்குப் போயி, செபத்தை சொல்லி, மணியடிச்சுட்டு, அவனவன் தட்டுலே போடற காசை எடுத்துட்டுப் போயி பொழப்ப நடத்தாம, கவிர்மின்ட்டுக்கு எதுரா சத்தியாக்கிரகம் பண்ணிட்டு இங்க வந்துட்டு, உனக்கு என்னடா செபம் வேண்டிக் கெடக்குன்னு அடிக்க வந்தபோது, குறுக்க விழுந்து அடியைத் தாங்கிட்டவன்தாண்டீ, துலுக்கன்னு சொன்னியே, அந்தப் பிள்ளையாண்டானின் தாத்தா - அது தெரியுமா உனக்கு?




“அப்ப அந்த ஜெயிலருக்கு வந்ததே பாரு கோபம், ‘எண்டா ராவுத்தா, பாப்பானுக்கு என்னடா பரிஞ்சுக்கிட்டு வாரே? அவன் வீட்டுக்குப் பொண்ணைக் கொடுத்திருக்கியா, இல்லை பொண்ணை எடுத்திருக்கியா அப்படீன்னு அவனை நாயை அடிக்கற மாதிரி அடிச்சு வெளுத்து வாங்கிட்டான். எனக்குத் தாங்கலே. சந்தியாவந்தனத்தை நிறுத்திட்டு அடி விழறதைத் தடுக்கப் போனேன்.
“வேண்டாம் ஐயரே! நீ ஜபத்தை தொடந்து பண்ணு. ஈஸ்வரு அல்லா தேரே நாம்னு சொல்ற மகாத்மாவை நாம ஏத்துக்கிட்டிருக்கோம். நான் எங்க அல்லாவைத் தொழுது நமாஸ் படிக்கறப்போ என்னை அடிக்க வந்தா நீ தடுக்க மாட்டியா? அதே மாதிரி நீ ஒங்க ஈஸ்வரரைக் கும்பிடற போது உனக்கு விழற அடியை நான் தாங்கிக்கறேன்னு அடியை வாங்கிண்டான்.

“அதைக் கேட்டுண்டே போன ஜெயிலர் ரம்ஜான் அன்னிக்கு ராவுத்தர் கண்ணை மூடிண்டு தொழுகை நடத்தபோது அங்கே வந்தான். என்கிட்டே ‘ஐயரே, அன்னிக்கு உனக்காக இந்த ராவுத்தன் அடி வாங்கினான். இப்ப அவன் தொலை உரிக்கப் போறேன். முடிஞ்சாத் தடுத்துக்கோ’ அப்படீன்னு லாட்டியை எடுத்து அடிக்கப் போனான். நான் தடுத்தேன். என்னை வேணும்னா அடிச்சுக்கோ, தொழுகை பண்றவனை ஒண்ணும் செய்யாதேன்னு கெஞ்சினேன். 

“இரக்கமில்லாத அந்த ஜெயிலர், சரி ஐயரே, நீ வாயைத் தொறந்து கத்தாதவரைக்கும் ராவுத்தனை அடிக்காம உன்னை அடிக்கறேன்’ அப்படீன்னு ஒத்துண்டான். 

“நரக வேதனை, நரக வேதனை அப்படீன்னு சொல்லுவா, அதை நான் அடுத்த பதினைஞ்சு நிமிஷம் அனுபவிச்சேன். அப்படி ஒரு அடி விழுந்தது எனக்கு. ஜெயிலரும், அவனோட அசிஸ்டன்ட்டும் சேர்ந்து என்னை நொறுக்கித் தள்ளிப்பிட்டா. என் வாயை அடைச்சுடுப்பா ஈஸ்வரான்னு வேண்டிண்டு ருத்ரம், தேவாரம், திருவாசகம் எல்லாத்தையும் மனசிலே சொல்லிண்டே போனேன். சுண்ணாம்புக் காளவாயிலே போட்டப்போ அப்பர் சொன்ன ‘மாசில் வீணையும், மாலை மதியமும், வீசு தென்றலும், வீங்கிள வேனிலும், ஈசன் எந்தை இணையடி நீழலே’ன்னு தேவாரத்தைச் சொல்றப்ப அடி தாங்க முடியாம எனக்கு நினைவு தப்பிடுத்து. கண்ணை முழிச்சுப் பாக்கறப்போ நான் ராவுத்தர் மடிலே கிடந்தேன்.

“அவன் தினமும் என்னை தடவி ஒத்தடம் போடுவான். எனக்கு ரணம் சீக்கிரம் குணம் ஆகணும்னு அல்லாவை வேண்டிண்டு நமாஸ் படிப்பான். அப்ப இந்து என்னடி, முஸ்லிம் என்னடி, ஒரே இந்தியத்தாய் பெத்த சகோதரர்களாகத்தான் இருந்தோம். பெண் கொடுத்து பெண் எடுத்தால்தான் உறவுன்னு நாங்க நினைக்கலே. ஆனா, ஒத்தர் மேலே ஒத்தர் உயிரையே வச்சிருந்தோம். ஒத்தருக்காக ஒத்தர் உயிரையும் கொடுக்கத் தயாரா இருந்தோம்.
“அப்படிப் பட்ட உத்தமன் சந்ததிலே வந்தவன்டீ இந்தப் பிள்ளையாண்டான்! அவனுக்கு எதிராப் பேச உனக்கு - சீ, சீ!” என்றவரின் வாயைப் பொத்தினாள் பார்வதி.

“வேண்டாம்னா, வேண்டாம். உங்க வாயாலே என்னைச் சீச்சீன்னு சொல்லிடாதேங்கோ. எனக்குப் புத்தி வந்துடுத்து. வாங்கோ. அந்தப் பிள்ளையாண்டானுக்கு ஆசிர்வாதம் பண்ணி, சாப்பாடு போட்டு, ஆத்துலே தங்க வச்சுப்போம்!” 

தழுதழுத்த குரலில் சொன்னாள் பார்வதி.

சிவராமனின் முகத்தில் நூறு கோடி சூரியப் பிரகாசம் மலர்ந்தது.[முற்றும்]

4 comments:

  1. Replies
    1. Thanks Veera raghavan. Send me your Postal address. I will send a book immediately as promised

      Delete
  2. Comments from Veeraraghavan Chidambaram:
    இப்ப என்ன மாறிப்போச்சு என்ற கேள்வியை விட எல்லாமே மாறி விட்டது என்பதே மெய். .மனிதநேயம் சுத்தமாக காணாமல் போய் விட்டது..உறவுகளிலேயே பிரிவுகள்..பாசம் நேசம் விலகி விட்டது..Nuclear குடும்பங்கள் பெருகி விட்டன. மேலும் அவை பெருமையாகி விட்டது...மொழி சிதைந்து விட்டது,,கலாச்சாரம் கேள்விக்குறி ஆகிவிட்டது..படிப்படியாக உறவுகள் சுருங்கி விட்டன..கடலாடித் திரவியம் தேடும் வேட்கையில், நிர்ப்பந்தத்தில் உறவுகள் இரண்டாம் பக்ஷ்மாகிப் போனது..சுதந்திரம் கிடைத்த உடனேயே வேற்றுமைகள் உருவாகிப் பொது மனித சகோதரத்துவம்,புரிதல்கள் யாவும் மறைந்து நிலைகுலைந்து போய் வருடங்கள் பலவாகின..என்ன செய்துவிட முடியும்? வடிகாலாக எழுதலாம்..உணர்ச்சிகளை ஒருவருக்கொருவர் ஆவேசமாகப் பகிர்ந்து கொள்ளலாம்.உச்சுக் கொட்டி அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு போகலாம் இது தானே நடக்கிறது,, கலி முற்றும் போது அராஜகங்கள் அரங்கேறும். ஒன்றுமே அறியாத அப்பாவிகள் கூடமடிந்து போவர்..எப்போது கலி முடியும்? முடியுமா..வீட்டுக்குள் அமர்ந்து சொகுசாக எழுதிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் யாரையோ குறி வைத்து அனுப்பப்பட்ட ஏவுகணை தாக்கி நானும் மடிந்து போனதாக நாளை தகவல் வரலாம்..இது தானே இன்றைய ய்தார்த்தம்....Your narration resembles writing style of the sixty's..ஆயின் கதாபாத்திரங்கள் இப்போதும் எங்கோ அருகில் உலவிக்கொண்டிருப்பவர்கள் தாம்..Good attempt Devan..

    ReplyDelete
  3. மனித நேயத்தை விளக்கும் அருமையான கதை. Hats off.

    ReplyDelete