Tuesday 16 October 2012

தமிழில் நாடகம் 

[கடந்த ஞாயிறு அன்று (14-10-2012முற்பகலில்) கோயம்பேடு தங்கபுஷ்பம்  ஹோட்டலில் தமது 75வது பிறந்த நாளை நான்கு முன்னாள் துணைவேந்தர்களும் பேராசிரியர்களும் மாணவர்களும் (லேனா. தமிழ்வாணன் உட்பட ) கலைமாமணி டாக்டர். ஔவை .நடராஜன்  அவர்களின் தலைமையின் கீழ் கொண்டாடிய தமிழ் நாடக ஆய்வாள ரும் பல பேராசிரியர்களின்  பேராசிரியருமான கலைமாமணி டாக்டர் இரா. குமாரவேலன் அவர்கள் எழுதிய தமிழக அரசின் நூல் நிலையப் புறக்கணிப்பால்  வாங்கப்படாது போன இந்த நூலின் விமர்சனத்தை மகிழ்ச்சியோடு வெளியிடுகிறோம்] 

கலையின் ஆற்றல் எவ்வளவு வலிமை வாய்ந்தது நாட்டிற்கு எடுத்துக்காட்டியது நடக்கலை. தேசிய இயக்கத்தில் தொடங்கி திராவிட இயக்கம் வரை தமிழ் நாடகம் மக்களின் கருத்துக்களை வடிவமைப்பதில் தனிப்பெரும் பொறு ப்பேற்றிருந்ததை வரலாறு உணர்த்துகிறது. நாடகம் தாய். சினிமா செய் அன்று நாடகம் வளரவில்லை எனில் இன்று தமிழ் சினிமாவே இல்லை. சினிமா மொழியின் மீது அரசியல் மீது செலுத்தி வருகிற செல்வாக்கை மூளையில் நின்று விமர்சிக்கலாமே தவிர அடியோடு மாற்றி விட முடியாது .அண்ணா, கலைஞர், எம்.ஜி .ஆர்., ஜெயலலிதா இப்படி ஓடுகிறது செல்வாக்கின் நதி 

இந்த நூலை எழுதிய டாக்டர் குமாரவேலன் தம் இளமைப் பருவம் தொட்டு, திராவிட இயக்கச் சிந்தனை உள்ளவர். மாறாத சார்புநிலையும் தமக்கென்று தனிப்பார்வையும் கொண்ட இவர் நாடகம் என்ற கலையின் பொதுமைச் சிறப்பை எந்த மனச்சுளிப்புமற்ற விரிந்த போக்குடன் அணுகி இந்த நூலை எழுதியிருப்பது குறிப்பிட்டே தீர வேண்டியது. திராவிட இயக்க நாடகங்களை மட்டுமே காட்டி மற்ற வகை நாடகங்களை இருட்டடிப்பு செய்யாத அவரது மனப்பக்குவம் நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் அணி செய்கிறது 

சிறந்த படைப்பைப் போல்வே  வந்திருக்கிற படைப்புக்களை திறந்த மனத்தோடு விமர்சனம் செய்வது முக்கியம் .அந்த பொறுப்பை உணர்ந்து குமாரவேலன் படைத்திருக்கும் இந்த நூல் நான் படித்தவரை தமிழில் இது வரை வெளிவந்த நாடக ஆய்வு நூல்களில் காணாத மனத்தேளிவுள்ள முத்திரையை இதில் நான்  கண்டேன் .ரசித்தேன். வாசிக்க வாசிக்க ஆய்வு நூல் வாசிப்புகளில் வரும் ஆயாசம் வராது ஒரு வரலாற்றுக் காலகட்டத்திற்கே பயணம் சென்று திரும்பிய நிறைவு  அனுபவப்பட்டது. 

திராவிட இயக்க நாடகங்களை அலட்சியப்பார்வையோடு ஒதுக்கும் அறிவுஜீவிக் கண்ணோட்டத்தை மேந் தட்டு விமர்சனப்போக்கை உரத்து முழங்கி இடித்துக்காட்டாத தொனியில் அவை பெற்ற வெற்றியின் விளைவுகளை மௌனமாக உணர்த்துகிறார் டாக்டர் குமாரவேலன் அவர்கள். நவீன நாடகம் என்ன செய்ய வேண்டும் என்று வழிகட்டியிருப்பது நாடகத்தில் ஈடுபாடு உள்ள அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும் .டாக்டர் குமாரவேலன் அவர்களின்  வாழ்நாள் சாதனைகளில் இந்த நூல் தனி முக்கியத்துவம் பெறுகிறது 

-வையவன் 



No comments:

Post a Comment