Saturday 13 September 2014

தேனே அமுதே கரும்பே

டாக்டர் ஜவாஹர் பிரேமலதா 
                                       
தேனும்,பாலும்,கரும்பும் ......... 
தாய் தன் குழந்தையைத் தேனே அமுதே கரும்பே எனக  கொஞ்சுகிறாள்.ஒன்றன் சுவையை மட்டும் குழந்தையின்பத்தை ஒப்பிடப் பயன்படுத்தாமல் பலசுவையுடன் குழந்தையின்பத்தை ஒப்பிடுகிறாள்.இவ்வாறு ஒப்பிடுவது குழந்தையின்பம் ஒப்பிட முடியாத அளவு இன்பம்  தேனை விடப் பால் இனிமை. பாலைவிடக் கரும்பு இனிமை இப்படி ஒரு தாய் ஒன்றைவிட உயர்ந்த ஒன்றைக் குழந்தைக்கு உவமையாகக்  காட்டி கொஞ்சி மகிழ்கிறாள்.தாய் குழந்தையைக் கொஞ்சுவது பொருந்தும். ஆனால் ஒரு பக்தர் இறைவனைக் கொஞ்சுவது பொருந்துமா?
மாணிக்கவாசகர் இறைவனை, சிவபெருமானை ஒரு தாய் நிலையில் நின்று கொஞ்சுகிறார். நானறிந்தவரை உலக இலக்கியங்களில் பக்தர் இறைவனைக் குழந்தையாக்கிக் கொஞ்சும் நடைமுறை இந்திய மொழிகளிலும் தமிழிலும்  மட்டுமே காணக்கிடைக்கிறது,ர
சிவன் அருளை,அருமையைச் சிவனை நினைக்கும் போது ஏற்படும் இன்பத்தை இவ்வகை உயர்ந்த பொருட்களோடு ஒப்பிட்டுத தாயாகி  உவக்கிறார். முதலில் இறைவனைத் தேனமுது (5.58)என்கிறார். பின்னர்த் தேனோடு பால் கலந்து பருகுவது இனிமையானது, மேலும், சுவையுடையது என்பதால் இறைவனைத் தேனைப்பாலை (5.58), தேனோடுபால்(5.36) என்கிறார். தேனோடு பால் கலந்த இக்கலவை உடலுக்கு ஆக்கம் தருவதுபோல், சிவன் அருள் உயிருக்கு ஆக்கம்  தரக்கூடியது.
இது மாணிக்கவாசகருக்கு  இன்னமுதாகத்  தோன்றுவதால் தேனைப் பாலை நிறையின் அமுதை அமுதின் சுவையை(27.4) என்றெல்லாம் பலபட பாராட்டுகின்றார். இப்படியெல்லாம்  போற்றுவதோடு இறைவனின் திருவடியை இன்னமுது(8.9), ‘ஆராமுதின் அருள்தாளினைப்பாடி‘(16.1)என்று  உவக்கிறார்.

                          

 தனித்தனிச் சுவைகளோடு ஒப்பிடுவதைவிட ஒரு பொருளின் பல சுவைகளை எடுத்துக்காட்டி  ஒப்பிடுவது, சிவனின் அருமையை உணர்த்தும் என்பதால், இறைவனைக் கரும்போடு ஒப்பிடும்நிலையில், கரும்பின் பல சுவைகளோடு ஒப்பிடுகிறார்.
கரும்பு தரு சுவையே’ (38-1) ‘
கரும்பின் தெளிவே’(5-55),
தீக்கரும்பின் கட்டியே’(8-10) எனக் கரும்பின் பல சுவைகளோடு ஒப்பிடுகிறார்.
இரும்பு தரு மனத்தேனை ஈர்த்தென் என்புருக்கிக்
கரும்பு தரு சுவை எனக்குக் காட்டினை’(38-1)
என்றும் கரும்பின் தெளிவே(9-90),
கன்னலின் தெளிவே’(6-58),
தெளிவந்த தேறல்(8-118),
தீக்கரும்பின் கட்டியுமாய்’(8-18)எனக் கரும்பின் பல சுவைகளோடு ஒப்பிடுகிறார்.
இறையருள் இச்சுவைகளையெல்லாம் விட உயர்ந்தது,இவை ஒவ்வொன்றும் தனித்தனி சுவையுடையவை. ஆனால்,இறையருளோ இவ்வெல்லாச் சுவைகளையும் விட மிக உயர்ந்தது. இதை உணர்த்தவே,‘தேனையும் பாலையும் கன்னலையும் அமுதத்தையும் ஒத்தினிய கோன்’(8-14) என அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக இணைத்து இறைவனின் சிறப்பை மேலும் மேலும் ஒப்பிட்டு உவக்கிறார்.
 தேன்,பால்,கரும்பு என வரிசைப்படுத்தியிருக்கும் முறையைப் பண்டிதமணி  அவர்கள், “இம்மூன்று பொருட்களையும் வரிசைப்படுத்தும் பொழுது தேன்-பால்-கரும்பு என்ற வரிசையில் அமைத்துள்ளார்….
                                                                  
பண்டிதமணி 
                                                                                     
தேன் புழுக்களின் எச்சில் மயமாகவும், பால் ஊனுடம்பின் சாரமாகவும் உள்ளவை….கரும்பங்கட்டி எச்சில், ஊன் கலப்பு முதலிய குற்றம் இலாதாய், உடலுக்கு நலம் பயப்பதாகும். இம்முறையில் ஆண்டவன் அன்பரை ஆட்கொள்ளுங்கால், தேனைப்போல, வயப்படுத்தும் பாலைப் போலப், பின் பயன் விளைவித்துக் இனிமை தரும் கரும்பங்கட்டியைப் போலத் தூய இன்பம் அளித்துக் காப்பான்” (1985.285-286)என்று வியக்கிறார்.
                            
மாணிக்கவாசகர் பொருட்களின் தன்மையை நுட்பமாக உணர்ந்த காரணத்தினாலேதான் தேன்,பால்,கரும்பு முதலியவற்றின் வரிசையை முறைப்பட அமைத்து இறையருளோடு மிகப் பொருத்தமுற ஒப்பிடுகிறார்.


No comments:

Post a Comment