Thursday 4 September 2014

தமிழ் இனி மெல்ல 3ம் பாகம் அத்தியாயம் 1“எனக்கு எழுதப் படிக்க சொல்லித் தரீங்களா?

தமிழ் இனி மெல்ல 3ம் பாகம் சென்ற பதிவின் இறுதியில் 
சங்கரன் மனதில் ஏதேதோ எண்ணங்கள் படர்கின்றன. ஈஸ்வரன் இரவு முழுவதும் படித்ததை அவரும் படுத்தவாறு கேட்டுக்கொண்டுதான் இருந்திருக்கிறார். அவர்கள் கையில் இப்படிப்பட்ட ஒரு பொக்கிஷம் கிடைத்திருப்பது ஏதோ ஒரு முக்கியமான விஷயத்திற்குத்தான் என்று உள்மனம் அவருக்குச் சொல்கிறது. எத்தனையோ நாள்கள் தங்கள் நிலை இப்படி ஆனது ஏன் என்று மனதிற்குள் அழுதிருக்கிறார். அதற்கு விடை இச் சுருளில் இருக்கக்கூடும் என்று அவர் மனதில் படுகிறது.

தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டும், அதிலும் முக்கியமாகக் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களையும் மறக்கக்கூடாது என்று அவரது தந்தை அவருக்குக் கற்றுக் கொடுத்ததும், அதைத் தான் ஈஸ்வரனுக்குக் கற்றுக் கொடுத்ததும், இந்தச் சுருளில் உள்ளதைத் தெரிந்து கொள்ளத்தானோ என்றும் படுகிறது. தமிழ் அறிவு உள்ள மூன்று குடும்பத்தினர் ஒன்று சேர்ந்ததும் தமிழ் இனத்திற்கு விடிவைக் கொண்டு வருவதற்காகவோ என்று நினைத்துப் பார்க்கிறார். ஆனால் தமிழே தெரியாத ஒரு பெண் தனக்கு மருமகளாக வந்து தமிழறிவு பெற்றதை நினைத்துப் பார்த்தாலும் அவருக்கு மலைப்பாக இருக்கிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் கனவில் கூட அவரால் கற்பனை செய்து பார்க்க இயலாத ஒன்று, ஈஸ்வரன்-நிமிஷாவின் திருமணம்.

“ஈஸ்வரா, காப்பாற்று!” என்று சிவபெருமானை மனதில் துதித்தவாறு வயலை நோக்கி நடக்கிறார் சங்கரன்.

அன்றைய வேலைகளை முடித்துக் கொண்டு இரவு உணவை உண்டபின் தங்கச் சுருள் உள்ள உருளையைக் கையில் எடுக்கிறான் ஈஸ்வரன். அவனைத் தடுத்த சங்கரன், “ஈஸ்வரா, நேத்திக்குத்தான் நீங்க யாரும் தூங்கவே இல்லை. ரெண்டு நாள் வயல் வேலை முடியட்டும். ராத்திரி முழுக்க கண் முழிக்காம, பகல்லே படியுங்க!” என்று சொல்கிறார். அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள்

மிழ் இனி மெல்ல 3ம் பாகம் அத்தியாயம் 1[தொடர்கிறது ]


அரிசோனா மகாதேவன் 
                                             அத்தியாயம் 1
                  ரோகணம், இலங்கை - முருகேசனின் வீடு
                          ராட்சச, தை 1 - ஜனவரி 14, 1016


வட்டமான வெள்ளித் தட்டை முருகேசனின் முன் வைக்கிறாள் வள்ளியம்மை. கருப்பான, களையுடன் கூடிய முகத்தில் பளிச்சென்று சிறிதாக மூன்று திருநீற்றுப் பட்டையின் நடுவில் பெரிய குங்குமப் பொட்டு மிளிர்கிறது. மஞ்சள் பூசியதால் மெருகேறியிருக்கிறது அவளது கன்னம். மார்புக் கச்சையை மறைத்து கீழாடையை மேலே இழுத்துக் கட்டியிருக்கிறாள்.

அவள் குனிந்து தட்டை வைக்கும் அழகை ரசிக்கிறான் முருகேசன். அவனது பார்வையைக் கண்டு வெட்குகிறாள் வள்ளியம்மை. திருமணம் ஆகி ஏழு ஆண்டுகள் ஆயினும் இளம் காதலன் போல முருகேசன் தன்னைப் பார்ப்பது குறையாதது அவளுக்கு ஒருபுறம் பெருமையாக இருந்தாலும், இன்னொரு புறம் வெட்கமாகவும் இருக்கிறது. இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகியும் அவனுக்கு அவள்பால் கவர்ச்சி இருப்பது இன்று போல என்றும் இருக்க வேண்டும் என்று இறைவி மீனாட்சியை வேண்டிக் கொள்கிறாள்.

தரையில் பலகையில் அமர்ந்திருக்கும் தன் கணவனை நோக்குகிறாள். தலையில் அள்ளி முடிந்த கேசம், காவல் தெய்வம் ஐயனார் மாதிரி பெரிய முறுக்கு மீசை, கருங்காலி மரத்தைக் கடைந்து எடுத்ததைப் போன்ற உடம்பு, நெற்றி முழுவதும் நிறைந்த திருநீற்றுப் பட்டை, பெரிய விழிகள். வீரம் ததும்பும் பார்வை. பாண்டிய மன்னர்களுக்கு பரம்பரை பரம்பரையாக மெய்க் காப்பாளர்களாக இருந்து அவர்களது விசுவாசமான குடும்பம் என்று நம்பிக்கையைச் சம்பாதித்ததனால் ஏற்பட்ட வீரச் செருக்கு அவன் முகத்தில் மிளிர்கிறது. இப்படிப்பட்ட அரச விசுவாசிக்கு மனையாளாக இருக்கிறோம் என்ற பெருமை வள்ளியம்மைக்கும் நிறையவே இருக்கிறது.

அவனது பார்வையைக் கண்டு தலைகுனிந்த அவள் வெள்ளித் தட்டில் இருக்கும் உரு அமைப்பைக் கண்ணுறுகிறாள். நடுவில் ஒரு மீன், அதற்குப் பாதுகாப்பு போல இரண்டு வாள்கள் அதற்கு இருபக்கமும் ஒன்றன் மீது ஒன்றாக அமைந்திருக்கின்றன. அவன் பாண்டிய நாட்டிலிருந்து இலங்கை வரும்பொழுது அவன் தன்னுடன் கொண்டு வந்தது அவனுடைய வாள், இந்த வெள்ளித் தட்டு, தனது மனைவியான வள்ளியம்மை - அவ்வளவுதான். மற்றபடி அவனது அண்ணன் திருமாறன் பாண்டிய மன்னர் அமரபுஜங்கருடன் இலங்கையிலிருந்து திரும்பிச் சென்ற பொழுது தனது புஜத்தில் கட்டியிருந்த ஒரு வெள்ளித் தாயத்தை அவன் புஜத்தில் கட்டி விட்டுச் சென்றிருந்தான்.

“என்னங்க அத்தான்,” முருகேசன் அவளது மாமன் மகன்தான் - நினைவு தெரிந்ததிலிருந்து அத்தான் என்றுதான் அவனை அழைத்து வருகிறாள். முறைப் பெண் என்றதால் பிறந்த உடனேயே அவனுக்குத்தான் இவள் என்று இருவரின் பெற்றோர்களும் முடிவு செய்து விட்டார்கள். எனவே திருமணம் ஆன பின்பும் மச்சான் என்று அழைக்காமல் அத்தான் என்றே அழைத்து வருகிறாள். “அத்தான், நான் உங்களை ஒன்று கேட்க வேணும். இந்த வெள்ளித் தட்டில் போட்டிருக்கும் ஓவியத்திற்கு என்ன பொருள்? நானும் இந்த ஆறு ஆண்டுகளாகக் கேட்க வேணுமிண்டுதான் என்று நினைத்துக் கொண்டே இருக்கேன். ஆனா ஏதாவது ஒரு காரணத்தால அது மறந்து போயிடுது!” என்று கேட்டபடியே சோற்றைத் தட்டில் வட்டிக்கிறாள். அதன் மீது புளிக்குழம்பை ஊற்றி விட்டு, தேங்காய் கலந்த காய்கறிகளைப் பரிமாறுகிறாள்.

“இது எங்க பரம்பரைச் சொத்து வள்ளி!” என்று பெருமிதத்துடன் கூறுகிறான் முருகேசன். “களப்பிரரை வென்ற பாண்டிய மன்னர் கடுங்கோன் எனது மூதாதையருக்குப் பரிசளித்தது. மீன் பாண்டிய மன்னர்களைக் குறிக்கிறது. இரண்டு வாள்களும் பாண்டிய அரசரைக் காக்கும் எங்களது இரு கரங்களே! கடுங்கோன் எங்கள் மூதாதையருக்கு ஆறு வெள்ளித் தட்டுகளைப் பரிசளித்தார். அதில் ஒன்றை என் அண்ணன் திருமாறன் எனக்குக் கொடுத்தார். அதே இலச்சினைதான் எனது தாயத்திலும் இருக்கிறது. ஆனால் இது ஒரே ஒரு தாயத்துதான் எங்கள் குடும்பத்தில் உள்ளது. அதையும் அண்ணன் எனக்குக் கொடுத்து விட்டுச் சென்றுவிட்டார்.” இதைச் சொல்லும் போது முருகேசனின் கண்கள் பனிக்கின்றன.

“பாண்டியர் அமரபுஜங்கர் சோழர் சிறையிலேயே இறைவனடி சேர்ந்த போது எங்கள் குல வழக்கப்படி தன் வாளினால் என் அண்ணன் தனது தலையையே கொய்துகொண்ட செய்திதான் உனக்குத் தெரியுமே! ஆறு ஆண்டுகளாக இந்த ஈழத்தில் நமது பாண்டியர்களின் பரம்பரைப் பொக்கிஷத்தைக் காத்து வருகிறேன். என்று இவற்றுடன் பாண்டி நாட்டுக்குத் திரும்புவோமோ தெரியவில்லை. நமது கண்மணிகளும் இந்த இலங்கையில் பிறந்து விட்டார்களே, நம் நாட்டை என்று காண்பார்களோ என்று தினமும் துடித்துக் கொண்டிருக்கிறேன்!” அவனது குரல் இலேசாகக் கம்முகிறது.

“கவலைப் படாதீங்க அத்தான். நம்ம விக்ரம பாண்டிய ராசா எப்படியும் பாண்டி நாட்டை மீட்டிடுவாரு.” என்று அவனுக்கு ஆறுதல் சொல்கிறாள் வள்ளியம்மை. “சரி, சரி. சாப்பிடுங்க அத்தான்.” மேலும் தட்டில் சோற்றை வடிக்கிறாள்.

“சொக்கனும், தேவானையும் எங்கே?” என்று மகனையும், மகளையும் பற்றி விசாரிக்கிறான் முருகேசன்.

“அதுங்க வெளியிலே விளையாடிக்கிட்டு இருக்குதுங்க. அப்பவே பசிச்சுதுன்னு நிறையச் சோத்தை தின்னுட்டுத்தான் வெளியிலே போயிருக்குதுங்க.” என்று பதில் சொல்கிறாள்.

“சொக்கனுக்கு எழுதப் படிக்கச் சொல்லி தரணும்” என்று உரக்கச் சொல்கிறான்.

“ஏங்க, உங்களை மாதிரி வாளைச் சுழட்டி ராசாக்களுக்குத் துணையாக இருக்கறவங்க எழுதப் படிக்கத் தெரிஞ்சு என்னத்தைங்க சாதிக்கணும்? புலவர்கள் மாதிரி கவிதையா எழுதப் போறீங்க?” என்று கேட்கிறாள்
.
“அட புள்ளே! எது சொன்னாலும் எதுக்கு எதிர்த்து பேசப் பழகுறே! ராசா ஏது சொன்னாலும் நாங்க அதுக்க மறுவார்த்தை பேசறோமா? பாண்டிய ராசா கடுங்கோன் காலத்துலேந்து நாங்க எழுதப் படிக்க கத்துக்கிட்டுதான் வாரோம். பாரு, உங்கிட்டப் பேசிப் பேசி எனக்குக்கூட நல்ல தமிழ்ல பேசறது மறந்து போயிடுது. நாளைக்கே விக்ரம ராசா வந்தா இப்படிப் பேசிப்புடுவேனோன்னு பயமா இருக்குது புள்ளே! சொன்ன சரீன்னு கேட்டுக்க.” என்று செல்லமாகக் கோபிக்கிறான் முருகேசன்.

“சரி மகாராஜா! எதுக்கப் பேசலை, ஐயா. சின்னப் பிள்ளையாச்சே, கொஞ்சம் விளையாடித் திரியட்டுமேன்னுதான் பார்க்கறேன். உன் பெண்டாட்டிதானே நானு, எனக்கும் நாலு எழுத்து கத்துக் கொடுத்தா என்ன?” என்று அதே பொய்க் கோபத்துடன் அவனை முறைக்கிறாள் வள்ளியம்மை.

“ஆமாம். நீ பெரிய காரைக்கால் அம்மையார், இல்லே ஔவைப் பாட்டி! உனக்கு எழுதப் படிக்க கத்துக் கொடுத்துட்டுத்தான் முதல் வேலை பாக்கணும்! இப்பவே, ஒழுங்கா சமைச்சுப் போட மாட்டேங்கறே. நாலு எழுத்துப் படிச்சுட்டியானா, நான்தான் ஒனக்குச் சமைச்சுப் போடணும்னு சொல்ல ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுடுவே!”  என்று சாப்பாட்டை முடித்துவிட்டு எழுந்திருக்கிறான் முருகேசன், வாயிலில் யாரோ வரும் அரவம் கேட்கிறது.

“முருகேசா, முருகேசா!” என்று அழைத்தபடி உள்ளே வருகிறான் பாண்டிய ஒற்றன் முத்து வீரப்பன். “நல்ல அரிசிச் சோறு மணம் வெளியே எவ்வளவு தூரம் மூக்கைத் துளைக்குது!” அவனது நாக்கு சப்புக்கொட்டுகிறது.

“அண்ணாச்சி. வந்து சாப்பிட உக்காருங்க. புளிக்குழம்பும், காய்கறியும் செய்திருக்கேன். பசியாறுங்க.” என்று அன்புடன் தமிழருக்கே உரித்தான விருந்தோம்பலுடன் உபசரிக்கிறாள் வள்ளியம்மை.

“இருக்கட்டும் தங்கச்சி, பரவாயில்லை,” என்று ஒப்புக்குச் சொல்லிவிட்டு சப்பணம் போட்டு அமர்ந்து விடுகிறான் முத்து வீரப்பன். மாடத்திலிருந்து வாழையிலையை எடுத்து வைத்து, சொம்பு நிறையத் தண்ணீர் வைக்கிறாள் வள்ளியம்மை. வெளியில் சென்று கைகழுவிக் கொண்டு திரும்ப உட்காருகிறான் முத்துவீரப்பன். நன்றாகச் சாப்பாட்டை ஒருகை பார்த்து விட்டு, பெரிதாக ஏப்பம் ஒன்றையும் விட்டபடி எழுந்திருக்கிறான்.

“தங்கச்சி, மகராசியா இரும்மா. நல்ல சாப்பாடு சாப்பிட்டு மாசக்கணக்காச்சு. சொக்கனைப் பார்த்து ஒரு வருசம் ஆயிருச்சே - அவன் நல்லா வளர்ந்துட்டாம்மா! அப்படியே முருகேசன் அச்சுதான். பொண்ணு உன்னையே உரிச்சு வைச்சுக்கிட்டு பொறந்திருக்கா.” என்று அவள் பிள்ளைகளை உயர்த்திப் பேசுகிறான் அவன்.

“அண்ணாச்சி. மதனி எப்படி இருக்காங்க? பிள்ளைகள் எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என்று குசலம் விசாரிக்கிறாள் வள்ளியம்மை.
“மீனாட்சிம்மா, சொக்கையா அருள்ல அவங்க எல்லாரும் நல்லா இருக்காங்க அம்மா. நாலு மாசம் முன்னால அவங்களை மதுரைல விட்டுட்டுக் கிளம்பினேன். அங்கே இங்கே அலைஞ்சுட்டுக் கடைசியா
முருகுவைப் பார்க்க வந்திருக்கேன்.” என்று பதில் சொல்கிறான்.

“மதுரைக்குப் போனீங்களா, அண்ணாச்சி?” மதுரை என்னும் போதே அவள் குரல் குழைகிறது. “மீனாட்சி அம்மையையும், சொக்கநாதரையும் தரிசனம் செஞ்சீங்களா? மதுரை எப்படி இருக்கு?” என்று விசாரிக்கிறாள் வள்ளியம்மை. மதுரை அவள் பிறந்த ஊராயிற்றே!

“தரிசனம் செஞ்சேம்மா. எப்பம்மா நம்ம பாண்டிய நாட்டுக்கு விடிவு வரும் அப்படீன்னு அவ சன்னதிலே அழுது தீர்த்தேம்மா! எங்கே பார்த்தாலும் சோழங்க தடபுடல்தாம்மா நடக்குது. மதுரைக் கோட்டையிலே கூட புலிக்கொடிதாம்மா பறக்குது. அதைப் பார்க்க பார்க்க வயிறு எரியுதும்மா. அமரபுஜங்க ராசாவோட மதுரையிலே மீன் கொடி இறங்கிப் போச்சும்மா!

“போதாததுக்கு சோழங்க கெடுபிடி வேற தாங்க முடியலைம்மா. ஒரு ஊருலேந்து இன்னோரு ஊரு போறதுக்கு அவங்க அனுமதிச் சீட்டு இருந்தாத்தான் போனமுடியுது. இராவோட ராவா மறைஞ்சுதான் நான் ஒரு இடத்துலேந்து இன்னோரு இடம் போயிட்டு இருக்கேன். நெல்லையிலேதான் இன்னும் மீன்கொடி பறக்குது. அங்கேதான் நாம கொஞ்சம் நல்லா மூச்சு விட்டுக்க முடியுது.” என்று ஆதங்கத்துடன் பதில் சொல்கிறான் முத்துவீரப்பன். அதைக் கேட்கக் கேட்க முருகேசனின் மீசை துடிக்கிறது. உடல் முழுவதும் இரத்தம் கொதிக்கிறது.

ஒன்றும் பேசாமல் வெளியேறுகிறான் முருகேசன். அதை புரிந்துகொண்டு, “தங்கச்சி, நீயும் சாப்பிடும்மா. நான் முருகுகிட்ட கொஞ்சம் பேசிட்டு வாரேன்.” என்று முருகேசனைப் பின் தொடர்கிறான் முத்துவீரப்பன்.

முருகேசன் சாப்பிட்ட தட்டிலேயே சோற்றைப் போட்டுக்கொண்டு உண்ண அமருகிறாள் வள்ளியம்மை. அரசு விஷயமாகப் பேசத்தான் முத்துவீரப்பன் வந்திருக்கிறான் என்று அவனுக்குத் தெரியும். நல்ல சேதியாக இருக்க வேண்டுமே என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டே சாப்பிட ஆரம்பிக்கிறாள்.

இருவரின் காலடி ஒலிகளும் மெல்ல மெல்ல மறைகின்றன. “ஆத்தா, சொக்கன் என் காத்தாடியைப் பிச்சுட்டாம்மா.” சிணுங்கியபடியே உள்ளே வருகிறாள் தேவானை.
                                                                  * * *
                                             பழையாறை மாளிகை
                             ராட்சச, தை 1 - ஜனவரி 14, 1016

மாதப் பிறப்பு சமயத்தில் செய்ய வேண்டிய நீத்தார் சடங்கைச் செய்து முடித்து விட்டு மாளிகைக்குள் வருகிறான் சிவாச்சாரி. புதுப் பானையில் புதிதாக அறுவடையான புத்தரிசியைப் போட்டுப் பொங்க வைக்கும் சர்க்கரைப் பொங்கலின் மணம் அவனது மூக்கைத் துளைக்கிறது. அருள்மொழிநங்கையும், அவனது முதல் மனைவியும் புத்தாடையணிந்து பொங்கல் கொதிப்பதை அருகில் நின்று கொண்டிருக்கிறார்கள். நங்கையின் கீழாடைக்கச்சை நுனியைப் பற்றியபடி தளதளவென்று கொதிக்கும் பொங்கலைப் பார்த்தவாறே நின்று கொண்டிருக்கிறான் இரண்டு வயதான அவளது மகன், மறையன் அருள்மொழி1. இராஜராஜ சோழரின் நினைவாக “அருள்மொழி” என்றும், தனது பாட்டனாரின் பெயரில் ஒரு பகுதியான “மறையன்” என்ற பெயரையும் அவனுக்குச் சூட்டியிருக்கிறான் சிவாச்சாரி. முதல் மனைவியின் அருகில் அவளது பெண் சிவகாமி நின்று கொண்டிருக்கிறாள்.
.
தன் மனைவியர் இருவரின் உடையமைப்புகளின் வேறுபாடைக் கண்ட சிவாச்சாரியனுக்கு உள்ளூர நகைப்பாக இருக்கிறது. முதல் மனைவி வேதியப் பெண்மணியைப் போல உடையணிந்திருக்கிறாள். அருள்மொழிநங்கை மார்புக் கச்சையும், கீழாடையும் அணிந்து இருதோள்களையும் சுற்றி மார்புக்கச்சைக்குமேல் ஒரு உத்தரீயத்தை அணிந்திருக்கிறாள்.

இருவரின் நகைகளும் மாறுபட்டே இருக்கின்றன. நங்கையின் நெற்றியில் சிறியதாக திருநீற்றுக் கோடுகள் மூன்றும், நடுவில் செஞ்சாந்துப் பொட்டும் காணப்படுகிறது. முதல் மனைவி இருபுருவங்களுக்கு நடுவிலும், நெற்றியின் உச்சியில் வகிடுத் தொடக்கத்திலும் குங்குமத்தை அணிந்து, சிறிய திருநீற்றுப் பூச்சும் தடவியிருக்கிறாள். நங்கையின் முகத்தில் அமைதியான அரசகளையும், முதல் மனைவியின் முகத்தில் பரபரப்பும் காணப்படுகிறது. அவன் வரும் காலடி ஒலியைக் கேட்டதும் இருவரும் திரும்பிப் பார்க்கிறார்கள்.

சிவாச்சாரியைக் கண்டதும், குழந்தைகள் இருவரும் அவனை நோக்கி ஓடி வருகிறார்கள். அவர்கள் இருவரையும் தூக்கி அணைத்துத் தோளில் ஏற்றிக் கொள்கிறான் அவன். சிறிது நேரம் அவர்கள் இருவரிடமும் கொஞ்சிப் பேசிவிட்டுக் கீழே இறக்கி விடுகிறான்.

பானையிலிருந்து பொங்கல் பொங்கி வழிகின்றது. அனைவரும் பானையை நோக்கிக் கைகூப்பி வணங்குகிறார்கள். சிவாச்சாரி கூடத்திற்குச் சென்று அங்கிருந்த மனையில் அமர்ந்து கொண்டு அவனது பார்வைக்கு வந்திருக்கும் ஓலைச் சுவடிகளைப் பார்வையிடஆரம்பிக்கிறான். பிறகு அருகிலிருந்த பெட்டியைத் திறவுகோலால் திறந்து, அதிலிருந்து திருப்பணிக் குழலை எடுத்து, தங்கச் சுருளை எடுக்கிறான். அதை பிரித்துத் தன் முன்னர் இருக்கும் சிறு மனையில் வைக்கிறான். பத்து நிமிடங்கள் அதில் விடுவெடன்று எழுத்தாணியால் எழுதி முடிக்கிறான். பிறகு கவனமாக அச்சுருளைச் சுருட்டி குழலுக்குள் வைத்து, பெட்டியில் வைத்துப் பூட்டுகிறான்.

“அம்மா சாப்பிடக் கூப்பிடறாங்க!” என்றபடி அங்கு வருகிறாள் சிறுமி சிவகாமி.

புன்னகைத்தபடியே அவளுடன் உணவருந்தும் இடத்திற்குச் செல்கிறான் சிவாச்சாரி.

“என்ன எழுதினீங்க? ஏன் உள்ளே வைத்து பூட்டறீங்க?” என்று வினவுகிறாள் சிவகாமி.

“அது விலை மதிக்கமுடியாத பொக்கிஷம், அம்மா. மறைந்த சக்ரவர்த்தி அவர்களும் எனது குருநாதர் கருவூராரும் எனக்குத் தந்து சென்று பணியம்மா!” என்று பெருமிதத்துடன் கூறுகிறான்.

“அவங்க என்ன சொன்னாங்க? நீங்க அவங்க தந்த பணியைக் கவனமா, முழுக்க முழுக்கச் செய்யறீங்களா?” என்று ஆவலுடன் கேட்கிறாள்.

“முடிந்தமட்டும், கோப்பரகேசரியார் அனுமதிக்கும் வரைக்கும் செய்து வருகிறேன்.” என்று சிவாச்சாரி சொன்ன பதில் சிவகாமிக்குத் திருப்தியாக இல்லை.

“அது எப்படி முடிந்தவரைன்னு சொல்றீங்க? குருநாதரும், சக்ரவர்த்திகளும் கொடுத்த பணிக்கு கோப்பரகேசரியாரின் அனுமதி எதுக்கு? நீங்க என்னை ஏதாவது செய்யச் சொன்னா, நான் தட்டாமல் செய்யறேனே! அதே மாதிரி நீங்க பணியாளர்களுக்கு கொடுக்கற வேலையை அம்மாவோ, சின்னம்மாவோ அவங்க அனுமதியோடதான் செய்யணும்னு சொல்றதில்லையே? அப்படி இருக்க, சக்ரவர்த்திகள் உங்களுக்குக் கொடுத்த பணியை அவரோட மகன் எப்படி மாற்ற முடியும்?” ஐந்து வயதுகூட ஆகாத சிவகாமியின் அறிவுக்கூர்மை சிவாச்சாரியனை வியக்க வைக்கிறது. அப்பொழுது அவன் மனத்தில் ஒரு திட்டமும் உருவெடுக்க ஆரம்பிக்கறது. தமிழ் திருப்பணிக்கு இவளுடைய உதவி பிற்காலத்தில் தேவைப்படும் என்று அவனுக்குத் தோன்றுகிறது.

“அதை எப்படி உனக்குப் புரியும்படி சொல்வது அம்மா? சக்ரவர்த்திகள் உயிரோட இருந்தவரைக்கும் அவர் சொல்வதைத்தான் நான் செய்து வந்தேன். இப்பொழுது கோப்பரகேசரியாரிடம் நான் பணி செய்கிறேன். எனவே அவர் சொல்வதைத்தான் நான் கேட்க வேண்டும்.” தன்னால் இயன்ற அளவு அந்தக் குழந்தையின் மனதில் தோன்றும் கேள்விகளுக்கு விடை அளிக்கிறான்.

“தன்னோட தந்தை சொன்னதை அவர் ஏன் மாத்தணும்?” சிவகாமியின் குரலில் மழலை இருந்தாலும் அவள் கேள்விகளில் இருக்கும் உண்மைக்கு அவனால் தன் மனதைத் திறந்து விளக்க அவனால் இயலவில்லை.
“போகப் போக உனக்குத் தெரியும் அம்மா. சாப்பிட்டு விட்டு விளையாடப் போகிறாயா?” என்று அவளது கேள்விகளின் திசையை மாற்ற முயற்சிக்கிறான் சிவாச்சாரி.

“எனக்கு எழுதப் படிக்க சொல்லித் தரீங்களா? எனக்கு நிறைய ஆசையா இருக்கு.” என்று சிவகாமி அறிவித்ததைக் கேட்டபடி அங்கு வந்த அவளது தாய் முகவாயைத் தோளில் இடித்துக் கொள்கிறாள்.

“இவள் பெரிய மனுஷி, எழுதப் படிக்கக் கத்துக்க வேணுமாக்கும்! வீட்டு வேலைகள், சமையல், கைவேலைகளைக் கத்துக்க வேணும்னு சொல்லுங்கோ!” என்று தனது கணவனுக்குத் தன் விருப்பத்தை வெளியிடுகிறாள்.

“ஏன் அக்கா அவளது விருப்பத்தைத் தடை செய்கிறீர்கள்? கலைவாணியே அவள் நாவின் மூலமாக இந்த விருப்பத்தைத் தெரிவித்திருக்கலாம் அல்லவா?” என்று பரிந்து பேசுகிறாள் அங்கு வந்த அருள்மொழிநங்கை.

“பெண் பிள்ளைகளுக்கு எழுத்துப் படிப்பு என்னத்துக்கம்மா? இவள் கவிதை எழுதப் போகிறாளா, இல்லை காவியம் தீட்டப் போகிறாளா? இல்லை அரசுப் பணிதான் இவளைத் தேடி வரப் போகிறதா? சிவாச்சாரியாரின் மகள்தானே இவள்!” அவள் குரலில் இருக்கும் உண்மை அருள்மொழிநங்கையின் உள்ளத்தைத் தொடுகிறது.

“அப்படிச் சொல்லாதீர்கள் அக்கா. இவளது தந்தையார் பிறப்பால் சிவாச்சாரியாராக இருந்தாலும், சோழ நாட்டின் திருமந்திர ஓலைநாயகராக உயரவில்லையா? அது மட்டுமன்றி எனது பாட்டனாருக்கே தமிழ்த்திருப்பணி ஆலோசகராக என் தந்தையாரால் அமர்த்தப்படவில்லையா? மேலும் பாண்டியர் சேனையை நிர்மூலமாக்கும் பொறிகளை வடிவமைக்க மூலகாரணம் ஆகவில்லையா? பிறப்பால் யார் எப்படி இருந்தாலும், அறிவால் எப்படி வேண்டுமானாலும் உயரலாம் அல்லவா?” என்று எதிர்க்கணை தொடுக்கிறாள்.

அவர்களது சொற்போரை எதுவும் பேசாமல் ரசிக்கிறான் சிவாச்சாரி. திருமணம் ஆன புதிதில் அருள்மொழிநங்கையிடம் பேச அவனது முதல் மனைவிக்குத் தயக்கமாக இருந்தாலும், இப்பொழுது அது முற்றிலும் நீங்கி இருக்கிறது. இருவரின் உடைகள் மாறுதலாக இருப்பதைப் போலவே இவர்கள் எந்த விஷயத்தையும் அணுகும் முறையும் வேறாகவே இருக்கிறது.

“என்ன சொன்னாலும் நீ ராஜ பரம்பரை, நான் சிவாச்சாரி பரம்பரை. எனக்கு தீர்க்கமா எதையும் சிந்திக்கப் பார்க்க முடியாதம்மா. உனக்கு குந்தவைப் பிராட்டியார் அத்தைப் பாட்டி. அவர்கள் உனக்கு நிறைய ராஜாங்க விஷயங்கள் கற்றுக் கொடுத்திருப்பாங்க.” என்று இழுத்தவளை இடைமறித்துப் பேசுகிறாள் அருள்மொழிநங்கை.

“என்ன அக்கா இப்படிப் பேசுகிறீர்கள்? உங்கள் அம்மான் கருவூர்த் தேவர் எனது பாட்டனார் இராஜராஜச் சக்கரவர்த்தி அவர்களின் குருநாதர் இல்லையா! அவரை நினைத்தபடிதானே என் பாட்டனார் சிவலோகம் சென்றார்! அப்படிப்பட்ட கருவூராரின் தங்கை மகளான நீங்கள் உங்களைத் தாழ்த்திக் கொள்வது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.”

“சரிம்மா. நான் இனிமேல் அப்படிப் பேசலை. உன் மனசு கலங்கினால் என் மனசும் கலங்கிடும். சிவகாமி ஒரு ஔவையாகத்தான் வந்துட்டுப் போகட்டுமே, அதுனால என்ன, அவ தாயார்னு நான் பெருமைப்பட்டுக்கறேன்.” என்று அருள்மொழிநங்கையை அன்புடன் அணைத்துக் கொண்டவள், சிவாச்சாரி தங்கள் அருகில் நிற்பதைப் பார்த்து விட்டு, “அடாடா, எத்தனை நேரமாய் நீங்க எங்க பேச்சைக் கவனித்துக் கொண்டு நிற்கறேன்! சாப்பிடக் கூப்பிட்டுட்டு நாங்க பாட்டு பேசிண்டே இருக்கோமே!” என்று உணவு பரிமாற விரைகிறாள்.

“ ‘செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்’ என்றுதானே செந்நாப் போதார் சொல்லி இருக்கிறார்! உங்கள் பேச்சைக் கேட்டதில் என் பசியே பறந்து போய் விட்டது!” என்று அவர்களை நகையாடுகிறான் சிவாச்சாரி.

வெட்கத்தில் முகம் சிவக்கிறது இருவருக்கும். அதை ரசித்த சிவாச்சாரி, ஆளரவம் கேட்கவே திரும்பிப் பார்க்கிறான்.

அரச தூதுவன் வாயிலில் நின்று கொண்டிருக்கிறான். சிவாச்சாரி உடனே அவன் அருகில் செல்கிறான். முக்கியமான அலுவல் இல்லாவிட்டால் பொங்கல் நாளில் வரமாட்டானே என்ற சிந்தனையுடன் என்னவென்று கண்ணாலேயே வினவுகிறான்.

“கோப்பரகேசரியார் வந்து கொண்டிருக்கிறார், ஓலைநாயகம் அவர்களே!” என்று பணிவுடன் கூறிவிட்டு தள்ளி நிற்கிறான். அவன் சொல்லி முடிப்பதற்குள் மாளிகை வாயிலில் இராஜேந்திரனின் ரதம் வந்து நிற்கிறது.

“நங்கை, உன் தந்தை வருகிறார். உன் அக்காவை இரண்டு மூன்று இலைகள் கூடப் போடச் சொல்லு.” என்று உள்பக்கம் திரும்பிச் சொன்ன சிவாச்சாரி, வாசலை நோக்கி விரைகிறான்.

இரதத்திலிருந்து இறங்குகிறான். கோப்பரகேசரி இராஜேந்திரன். அவனுக்கு கைலாகு கொடுத்து வரவேற்கிறான் சிவாச்சாரி. ”வரவேண்டும், வரவேண்டும்! இந்த நல்ல நாளில் தங்கள் வருகையால் நான் மிகவும் கௌரவமடைகிறேன்.”

இராஜேந்திரனுக்குப் பிறகு இருபத்திரண்டிலிருந்து இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞனும் இரதத்திலிருந்து இறங்குகிறான். அவனுக்கும் இராஜேந்திரனுக்கும் உள்ள உருவ ஒற்றுமையைக் கண்டு வியக்கிறான் சிவாச்சாரி.[வளரும்]
                                                              * * *
---------------------------------------------------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு 
1இராஜேந்திர சோழ பிரம்மாதிராயருக்கு (கதைப்படி சிவாச்சாரி) “மறையன் அருள்மொழி” என்ற மகன் இருந்ததாகச் சோழச் செப்பேடுகள் கூறுகின்றன

No comments:

Post a Comment