Saturday 1 November 2014

இ.தே.ஏ . 5. தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?

கர்னல் கணேசன் வி.எஸ்.எம் 
         [ இ.தே.ஏ .   5ம் பதிவு]                    
                                      4. தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?

இந்தியத் திருநாட்டின் இராணுவ அமைப்பு நாட்டிற்குரிய பொதுச் சட்டத்தையும் இராணுவத்தினர்களுக்காகப் பிரத்தியேகமாக உருவாக்கிய இராணுவ சட்டங்களும் ஒழுங்கு முறைகளும் கொண்டது. ஒரு அமைப்பின் நிர்வாகத்திற்குத் தேவையான எல்லா விதிமுறைகளையும் எழுத்தில் கொண்டு வர வேண்டும் என்பது முடியாத காரியம். மனித மனம் எப்படியெல்லாம் செயல்படக்கூடும் என்பதை யாருமே அனுமானிக்க முடியாது.

ஒரே சூழ்நிலையில் உள்ள மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக செயல்படுகிறார்கள். இதற்குத் தனி மனிதர்களின் எண்ணப் பரிமாற்றங்களே காரணம். இராணுவ அமைப்பு முழுக்க முழுக்க மனிதர்களின் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. ஒரு தொழிற்சாலையின் உயர்வு தாழ்விற்கு சில மனிதர்களும் ஏராளமான தொழில் நுட்பத்திறன் கொண்ட கருவிகளும் காரணமாகின்றன. ஆனால், இராணுவத்தில் உயர் அதிகாரிகளும் அவர்களுடைய வழிகாட்டுதலில் பணியாற்றும் படைப்பிரிவினரும் முழுக்க முழுக்க மனிதர்களே என்பதால் மனிதவளம் எதிர்பார்க்கும்படி உடனடியாக அமைவதில்லை. அவர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். பயிற்சி தருபவர்கள் சிறப்பானவர்களாக இருந்தால்தான் அவர்கள் நல்ல பயிற்சி முறையை உருவாக்கவும் பயிற்சி தரவும் முடியும்.

                                       அந்தரங்க ரகசிய அறிக்கை

1974ம் ஆண்டு ஆரம்பத்தில் கேப்டன் கணேசன் பணியாற்றிய படைப் பிரிவினர் ராஜஸ்தான் பாலைவனப் பகுதியில் இருந்தார்கள். இராணுவத்திற்களுக்கான இரண்டு மாத விடுமுறை முடிந்து அவர் படைப்பிரிவு சென்றடைந்தார். வழக்கமாக ஆண்டின் முடிவில் அதிகாரிகளுக்கும் அதிகாரிகளல்லாதவர்களுக்கும் வருடாந்திர திறனாய்வு அறிக்கை தயாரிக்கப்படும். இது படைப்பிரிவின் தலைவரது பொறுப்பாகும். படைப் பிரிவில் உள்ள சுமார் 20 அதிகாரிகளுக்கும் சுமார் 50 இளநிலை அதிகாரிகளுக்கும் மற்றும் சுமார் 250-300 Non-Commissioned Officer களுக்கும் இந்த அறிக்கை தயாரிக்க வேண்டும்.

அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் படைத் தலைவரே அறிக்கை தயாரித்து ஒவ்வொரு அதிகாரிக்கும் அதைத் தெரிவித்து அந்த அதிகாரியின் குறை-நிறை என்ன என்பது தெரிவிக்கப்படும். இவற்றை ஏற்றுக் கொண்டதாக அதிகாரிகள் தங்களைப் பற்றிய அறிகையில் கையெழுத்திட வேண்டும். அதிகாரிகள் தங்கள் தலைமையின் கீழ் பணியாற்றுபவர்களுக்கு அதேபோல் திறனாய்வு அறிக்கை தயாரிக்க படைப்பிரிவின் தலைவர் அதை மேல் பரிசிலனை செய்து கையெழுத்திடுவார். தங்களைப் பற்றிய அறிக்கையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அதற்கான வழிமுறைகள்படி முறையிடலாம். இது நடைமுறையில் உள்ள பழக்கம். இந்த திறனாய்வு அறிக்கை ஒரு அந்தரங்க ரகசிய அறிக்கை என்பதால் ஒருவரைப் பற்றிய அறிக்கையை மற்றவர் அறிய வாய்ப்பில்லை.

வருட ஆரம்பத்திலேயே காப்டன் கணேசன் விடுமுறையில் சென்று விட்டதால் அவருடைய திறனாய்வு அறிக்கை அவரது ஒப்புதல் கையெழுத்து இல்லாமலே இருந்தது. ஒருநாள் மாலை நேர விளையாட்டின் போது படைப்பிரிவு தலைவரின் செயலாளர் போல் பணியாற்றும் அதிகாரி கணேசனிடம் ஒரு காப்பகத்தின் சாவியைக் கொடுத்து அவரது திறனாய்வு அறிக்கையைப் படித்துக் கையெழுத்திட்டு விட்டு காப்பகத்தைப் பூட்டி வரும்படி கேட்டுக் கொண்டார். காப்பகத்தைத் திறந்த கணேசனுக்கு ஒரு ஆச்சரியமான செய்தியாக படைப்பிரிவின் எல்லா அதிகாரிகளின் திறனாய்வு அறிக்கையும் ஒரு கோப்பில் வரிசையாகஇருப்பதைக் கண்டார். திறந்து வைத்த கோப்பில் தனது அறிக்கையைத் தேடும் பொழுது சக அதிகாரிகளின் திறனாய்வு அறிக்கையைப் படிப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. கணேசன் தனது அறிக்கையைப் படித்துப் பார்த்து அதில் கையெழுத்திட்டு விட்டு வந்து விட்டார்.

ஆனால், அந்த அறிக்கையைப் படித்த பிறகு கணேசனின் மனநிலையில் சற்றே மாற்றம் ஏற்பட்டது. தனக்கு எழுதப்பட்ட திறனாய்வு அறிக்கை சிறப்பாக இருந்தாலும் தன்னைப்போன்ற பணி அனுபவத்துடனும் ஒரு சிலர் தன்னைவிடக் குறைவான பணி அனுபவத்துடனும் உள்ளவர்களுக்கு படைப்பிரிவு தலைவர் கணேசனை விட மிகச் சிறப்பானத் திறனாய்வு அறிக்கை தயாரித்திருந்தார். தான் எந்தவிதத்தில் அவர்களைவிட திறமையில் குறைந்தவன் என்பது கணேசனுக்கு புரியவில்லை.

இராணுவத்தில் இந்த திறனாய்வு அறிக்கை  இன்று வரை சர்ச்சைக்குள்ளானதே! இந்த அறிக்கை இராணுவ விதிமுறைகளின்படி சில சமயம் பாதிக்கப்பட்டவர்களுக்கு காண்பிக்கப்படும். சில சமயம் காண்பிக்கப்படுவதில்லை. ஏதாவது குறைகள் இருந்தால் அந்தக் குறைகள் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரிவிக்கப்படும். குறைகள் இல்லாமலிருந்தாலும் சிறப்பம்சம் இல்லாத அறிக்கைகள் உயர்வாகக் கருதப்படுவதில்லை. இதனால் ஒரு குறிப்பிட்ட பதவிக்கு அதிகாரிகளைத் தேர்வு செய்யும் போது இந்த அறிக்கைகளின் பேரில்தான் தேர்வு செய்யப்படுவார்கள். அப்பொழுது குறைகளற்ற சிறப்பான அறிக்கை மற்றும் குறைகளற்ற சிறப்பில்லாத அறிக்கை இரண்டையும் ஒப்புநோக்குகையில் குறைகளற்ற சிறப்பான அறிக்கைக்கு உரியவரே தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது வெளிப்படையான உண்மை. இதனால் கணேசன் சற்றே வருத்தமடைந்தார்.

பொதுப் பணித்துறையில் அரசாங்க அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த கணேசன் நாட்டின் அவசர நிலையில் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் அதிகாரியானவர். ஆனால் இராணுவத்தில் கூட பாரபட்சம் காட்டப்படுகிறது என்பதை வருத்தத்துடன் புரிந்து கொண்டார். அதன்பிறகு படைப் பிரிவுத் தலைவருடன் கலகலப்பாக அவரால் உரையாட முடியவில்லை. ஆனாலும் இராணுவப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. மற்ற அதிகாரிகளை விட ஏன் தன்னைக் குறைவாக மதிப்பிட்டீர்கள் என்று அவரால் கேட்க முடியாது. தனது ஆய்வறிக்கையில் குறை ஏதுமில்லாததால் அவர் முறையீடு எதுவும் செய்ய முடியாது. இப்படியான ஒரு சூழ்நிலையில் இருந்தார் கணேசன். படைப்பிரிவினர் ராஜஸ்தான் பணி முடிந்த சில நாட்களுக்குள் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் ‘லே” என்ற இடத்திற்கு மாறினார்கள். “லே”யில் படைப்பிரிவின் தலைமை ஒரு இடமும் மற்ற சிறிய படைப் பிரிவுகள் தனித்தனி இடங்களிலும் நாட்டின் பாதுகாப்பிற்கு ஏற்ப பிரிந்து சென்றனர். 

கணேசன் மேஜர் என்ற அடுத்த பதவி உயர்வு பெற்று “கார்கில்” மலைப் பகுதியில் உள்ள பொறியாளர் படைப்பிரிவின் சிறிய பிரிவுக்குத் தலைவராகப் போக உத்தரவு இடப்பட்டார். காஷ்மீர் பகுதி நவம்பர் மாதம் முதல் சுமார் மார்ச் மாதம் வரை கடும் குளிரால் தாகப்படுவது எல்லாரும் அறிந்ததே. இந்த நிலையில் கணேசன் பணியாற்றும் படைப் பிரிவினர் நவம்பர் மாதம் தான் காஷ்மீர் பகுதிக்குச் சென்றார்கள். படைப் பிரிவினர் குளிருக்கு தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்வதற்கு முன்பாகவே குளிர் அவர்களைத் தாக்க ஆரம்பித்து விட்டது. இதனால் படைப் பிரிவினரிடையே உடல் நிலை பாதிக்கப்படுவது அதிகமானது. காஷ்மீர் பகுதியில் உயர் மலைப் பகுதியாகிய “லே’யில் பிராணவாயு குறைவு என்பதால் நல்ல உடல் நிலையில் இருப்பவர்களின் செயலாக்கத் திறமைகூட சுமார் 30 சதவீதம் குறைந்துவிடும். இதனால் சில அதிகாரிகள் கூட உடல் நிலை குன்றி அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டார்கள்.

“லே” பகுதியிலிருந்து மேலும் எல்லைப்புறம் நோக்சி செல்லும் சாலை “ச்சாங்லா” என்ற கணவாய்  வழியாகப் போகிறது. அந்த இடம் 17,350 அடி உயரத்திலிருப்பதால் குளிர்காலத்தில் பனிப்பொழிவு காரணமாக சாலை மூடப்பட்டு விடும் அபாயம் உள்ளது. பொறியாளர் படைப்பிரிவின் ஒரு சிறு பிரிவினர் ஒரு அதிகாரியின் தலைமையில் நாலைந்து பனி அகற்றும் இயந்திரங்களுடன் அந்த மலையடி வாரத்திலேயே பனிக்காலம் முழுவதும் தங்கி இருந்து சாலையைப் பராமரிப்பார்கள். இதற்கிடையில் கணேசன் அந்த படைப்பிரிவிற்கு வந்து சுமார் இரண்டாண்டுகளாகி விட்டதால், இராணுவத் தலைமையகத்திலிருந்து அவருக்குப் பெங்களூருக்கு பணிமாற்றம் வந்துவிட்டது. பொதுவாகப் படைப் பிரிவின் தலைமை அதிகாரி இதுபோன்ற அதிகாரிகளின் பணிமாற்றங்களுக்கு ஒப்புதல் அளிப்பதுண்டு. அது போன்று கணேசனது பணிமாற்றத்திற்கும் அவர் கணேசனைக் கலந்தாலோசிக்காமலேயே ஒப்புதல் தந்துவிட்டார். பணிமாற்ற உத்தரவு வந்தபிறகு கணேசனை இன்னும் ஒரு சில தினங்களில் விடுவித்து விடுவதாக சொல்லி இருந்தார். படைப்பிரிவினர் இது போன்ற உயர்மலைப் பகுதிகளில் கஷ்டமான சூழ்நிலையிலிருக்கையில் அவர்களை விட்டுப் பிரிந்து போவதற்கு கணேசனுக்கு விருப்பமே இல்லை. ஆனால், தன்னைப் பற்றி குறைவாக மதிப்பிட்ட தலைவரிடம் பணியாற்ற விருப்பமில்லாததால் விரைவில் அவரை விட்டு விலகுவதே நல்லது என்று கணேசன் நினைத்தார்.

                                     உறைபனியோடு  ஒரு சாகசப்போராட்டம் 

இந்த இடைக்காலத்தில் பனிப்பொழிவு மிக அதிக அளவு இருந்ததால் ச்சாங்லா கணவாய்   மூடிப் போய்விட்டது. பாதை சரியாக தெரியாததால் சாலைப் பராமரிப்புக்கு சென்ற ஒரு பனி அகற்றும் வண்டி மலை உச்சியிலிருந்து சரிந்து பள்ளத்தில் போய்விட்டது. அங்கு பொறுப்பேற்றிருந்த அதிகாரியும் மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கார்கில் பகுதியில் பணியாற்றிக் கொண்திருந்த மேஜர் கணேசனை உடனடியாக   ச்சாங்லா கணவாய்ச்சாலை பராமரிப்புக்கு மாற்றி படைப்பிரிவு தலைவர் உத்தரவிட்டார். கணேசன் 17,350 அடி உயர ச்சாங்லா கணவா#க்கு தனது முகாமை மாற்றிக் கொண்டு பனி அகற்றும் வேலையில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டார்.

இளமை முதலே விளையாட்டுகளிலும் வீரதீர சாகசங்களில்   விருப்பமுள்ள கணேசனுக்கு உறைபனியில் சாலை பராமரிப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கணேசன் அங்கு போய் சேர்ந்த நாள் முதல் சாலைப் போக்குவரத்து தடையின்றி இருந்தது. (சுமார் - 30டிகிரி ) குளிரில் கணேசன் சிறப்பான பனி உடைகளுடன் கொஞ்சம் கூடக்  கவலை இன்றி பணியாற்றிக் கொண்டிருந்தார். மலைச்சரிவில் உருண்டிருந்த பனி அகற்றும் வண்டி மீட்கப்பட்டது.

பனிப்பொழிவின் தாக்கத்தில் சாலை மூடப்படுவதும் மறுநாள் கணேசனின் படைப்பிரிவினர் பனி அகற்றும் வண்டி  உதவியுடன் சாலையை சீரமைப்பதும் மனிதனுக்கும் இயற்கைக்கும் நடக்கும் கண்ணாமூச்சி விளையாட்டு போல் நடந்து கொண்டிருந்தது. ஒருமுறை மிகவும் கடுமையானப் பனிப்பொழிவினால் மலை உச்சியிலிருந்து கீழ்ப்பகுதி வரை பனிமூடி சாலை அடையாளம் காணமுடியாத அளவு பனிமூடிவிட்டது.

ஆனாலும், பனி அகற்ற வேண்டிய கட்டாயமிருந்ததால் சுமார் 13 கி.மீ. நீளமுள்ள அந்த சாலையில் கணேசன் நடந்தே முன் செல்வார். அவர் பின்னால் பனி அகற்றும் வண்டி மூலம் பனி அகற்றும் வேலை நடந்து கொண்டிருந்தது. சூரியன் அஸ்தமனமாகும் வேளையில் கணேசன் கிட்டத்தட்ட மலை உச்சியில் பனி அகற்றிக் கொண்டிருந்தார். அந்நிலையில் பனியில் சிக்கி பனி அகற்றும் வண்டி நின்று போய் விட்டது. முகாமுக்குத் திரும்பி விடலாம் என்று பயணிகள் வண்டியை சாலையில் திருப்ப முயற்சித்தபொழுது அதுவும் பனியில் சிக்கி நின்று போய்விட்டது. உயிர் பிழைக்க வேண்டுமென்றால் முகாமுக்கு நடந்தே திரும்புவதைவிட வேறு வழியில்லை.

நாள் முழுவதும் பனியில் நடந்து கொண்டிருந்ததால் எல்லோரும் மிகவும் களைத்துப் போயிருந்தனர்.அந்த நீண்ட பாதையில் ஓரிரு இடங்களில் விபத்துகள் காரணமாகவோ அல்லது பனிப்பொழிவில் சிக்கியோ உயிரிழந்த ஓரிரு இராணுவத்தினர்கு நினைவுக் கல் வைத்திருந்தார்கள். இருட்டில் மிகவும் களைத்துப்போன மேஜர் கணேசன் ஒரு சமயம் தனக்கும் ஒரு நினைவுக்கல் அங்கு வைக்க நேர்ந்திடுமோ என்று எண்ணினார்.

எந்தவிதமான உணர்வுகளும் இன்றி நடைப்பிணம் போல் அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். கைரேடியோவில் முகாமுக்கு செய்தி தெரிவிக்கப்பட்டு உடனடி மருத்துவ முதலுதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு வழியாக அதிகாலை 2 மணி போல் அவர்கள் முகாம் வந்தடைந்தார்கள். சூடாக பானம் அருந்தி ஏதோ சாப்பிட்டு விட்டு உறங்கிப் போனார்கள். மறுநாள் கணேசனின் உதவியாளருக்கு 104 கடுமையான ஜுரம் வந்துவிட்டது. அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பதற்கும் தானும் சற்று ஓய்வெடுத்துக் கொள்ளவும் கணேசன் “லே” திரும்பிவிட்டார். உதவியாளர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபோன்று குளிரில் அதிக நேரம் இருந்தால் கால், கை விரல் நுனிகள், மூக்கின் முனை, காது மடல் போன்ற மென்மையானப் பகுதிகள் குளிரினால் தாகப்பட்டு உணர்விழந்து ‘ஊணூணிண்t ஆடிtஞு” என்ற பனிக்கடி விபத்து காரணமாக இற்று விழுந்து விட வாய்ப்புண்டு. நல்ல வேளையாக அந்த நிலை வருமுன் அவர்கள் இறைவன் கருணையினால் திரும்ப நேர்ந்து பிழைத்து விட்டார்கள்.

                               உயர் அதிகாரியோடு  ஒரு மோதல்

தனக்குப் பணிமாற்றம் வந்த பிறகும் விடுவிக்காமல் அதிகாரி இப்படி இடமாற்றம் செய்து தனது உயிரைக் குடிக்க நினைப்பது கணேசனுக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுத்தது. அதுவும் திறனாய்வு அறிக்கையில் சுமாரான மதிப்பே கொடுக்கப்பட்டிருந்த கணேசனுக்கு இனியும் அந்த தலைவரிடம் பணியாற்ற விருப்பமில்லை. இந்நிலையில் மீண்டும் வேறு வேலையைப் பராமரிக்க கணேசன் உத்தரவிடப்பட்டார். அதற்கு கணேசன் திட்டவட்டமாக மறுத்து விட்டார். தரைப்பிரிவினரிடையே அன்றிருந்த மனநிலையில் கணேசன் முரட்டுத்தனமாக நடந்து கொண்டது எல்லோருக்கும் வியப்பாக இருந்தது.

கணேசன் உடனடியாகப் படைப் பிரிவின் தலைமை அதிகாரி முன் நிறுத்தப்பட்டு பணி மறுப்புக்குக் காரணம் கேட்கப்பட்டது. கணேசன், தான் சுமார் மூன்று மாதத்திற்கு முன்பே பணிமாற்றம் பெற்றிருப்பதாகவும் தன்னை விடுவிக்காமல் ஒன்று மாற்றி ஒன்றாக தனக்கு உத்தரவுகள் கொடுப்பது தனது மனநிலையை மிகவும் பாதிக்கிறது என்றும் தன்னைத்  தயவு செய்து விடுவிக்கும்படியும் கேட்டுக் கொண்டார். படைப்பிரிவின் தலைவர், அன்றைய காலகட்டத்தில் படைப்பிரிவு குளிரின் தாக்கத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கணேசனைப் போன்று உடல் உறுதியுள்ளவர்கள் உடனிருக்க வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் சொன்னார்.

 மனஆழத்தில் தான் குறைவாக மதிப்பிடப்பட்டு விட்டோம் என்று வருத்தப்பட்ட கணேசன் அதை வெளிக்காட்டாமல், தனது பணி மாற்றத்தில் பிடிவாதமாக இருந்தார். படைத்தலைவர் உடனே கோபத்துடன் அன்றிரவே கணேசனுக்குப் பிரிவு உபசாரவிருந்து என்றும் மறுநாள் கணேசன் படைப் பிரிவைப் பிரிந்து போய்விடலாம் என்றும் உத்தரவிட்டார்.

அன்று இரவு பிரிவு உபசார விருந்து நடந்தது. மறுநாள் காலை மோசமான வானிலை காரணமாக அவரை ஏற்றிச் செல்லவேண்டிய விமானம்  வரவில்லை. சுமார் 4-5 மாத குளிர்கால நிலையில் இராணுவ படைப்பிரிவினர் “லே” பகுதிக்கு விமானப் படையின் விமானம் மூலம் தான் போக முடியும். உணவும் மற்ற பொருள்களும் கூடியவரை கோடைகாலத்தில் ஸ்டாக்  செய்து விடுவார்கள். காய்கறிகள் போன்றவை விமானத்தில் தான் வரும். ஆகையினால், அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு விமானம் இல்லை

. இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான திறனாய்வு அறிக்கைக்கான நேரம் வந்து விட்டதால் படைப்பிரிவு தலைவர் உடனடியாகக் கணேசனுக்கான திறனாய்வு அறிக்கையைத் தயார் செய்து அதைப் பார்த்து ஒப்புதல் கையெழுத்திடுமாறு உத்தரவிட்டார். கணேசன் அந்த அறிக்கையைப் படிக்காமலேயே தான் கையெழுத்திட வேண்டிய பகுதியைத் திருப்பி உடனடியாகக் கையெழுத்திட்டார். இதைப் பார்த்த படைப் பிரிவு தலைவர், நேற்று முன்தினம் நடந்த வாக்குவாதங்களைப் பற்றி கவலைப்படாமல் தான் கணேசனுக்கு நல்ல மதிப்புள்ள திறனாய்வு அறிக்கை எழுதி இருப்பதாகவும் அதைப் படிக்கும் படியும் கேட்டுக் கொண்டார்.

 அதை மறுத்த கணேசன், “எனது திறமையைப் பற்றிய உங்களது எண்ணத்தைப் பிரதிபலிப்பது இந்த அறிக்கை. ஆனால், என்னைப் பற்றியும் எனது திறமை பற்றியும் உங்களை விட எனக்கு நன்றாகத் தெரியும் என்றும் உங்களது அனுமானம் எப்படி இருந்தாலும் என்னுடைய திறமையில் எனக்கு நம்பிக்கை உண்டு” என்றும் கணேசன் எதிர்வாதமிட்டார். [வளரும்]

1 comment:

  1. Sir,it is strange that even though hundreds of viewrs are going through this page,no one is posting their views.There is a proverb that the one who asks a question is a fool for few seconds,but the one who does not asks a question remains a fool for ever.Perhaps one is happy to remain a fool than to seek clarifications.Also we dont feel free to appreciate or give our views or encourage honesty and integrity.This is a curse of this country which lead us to be slaves to small state like country UK for hundreds of years.Even there a foreginer has to come and kick us and ask"are you not ashamed to be a slave",come on get up and fight.
    well done sir, good going!

    ReplyDelete