Friday 9 November 2012

முத்துகிருஷ்ணனின் கதை

முத்துகிருஷ்ணனின் கதை
என் கதை

”ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார்” என்பது போல் எனக்கும் ஒரு கதை இருக்கும் தானே.

மதுரை மாவட்ட மங்கல்ரேவு கிராமத்தில் 1973ல் பிறந்தேன், எனது அப்பா அழகர்சாமி ஒரு கிராமப்புற விஞ்ஞானி, அம்மா பென்மலர் தையல் கலைஞர். எனது அப்பா வழி தாத்தா ஒரு நாடககலைஞர், அம்மா வழி தாத்தா நேதாஜியில் ஐ.என்.ஏ வில் பணியாற்றிய வீரர். எனது வளர் இளம் பருவம் வரை கோவா, ஹைதிராபாத், மும்பை நகரங்களில் வசித்தேன். அப்பா நவீன மும்பை தமிழ் சங்கத்தின் பல கால செயலராக இருந்ததால் இயக்க பணியின் அறிசுவடிகள் அறிமுகமானது. பல மொழிகள், இனங்கள், கலாச்சாரங்கள் சார்ந்த ஒரு கூட்டு வாழ்க்கை தான் இந்தியாவின் வேற்றுமைகள் குறித்த முழுமையான சித்திரத்தை அளித்தது. இந்த வேற்றுமையின் ஒற்றுமை என்றால் என்ன என்பதை என் பள்ளி வகுப்பறைதான் கற்றுக் கொடுத்தது.

மும்பை பள்ளியில் மராத்தியை தான் இரண்டாம் பாடமாக எடுத்து பயின்றேன். 1986ல் மதுரை நோக்கி பயணமானோம். அதன் பின் இங்கு பத்தாம் வகுப்பு வரை ஹிந்தியை மொழிப்பாடமாக எடுத்து பயின்றேன். மின்னனுவியல் மற்றும் தொலைதொடர்பில் டிப்ளமா முடித்தேன். அந்த காலகட்டத்தில் மின்னனுவியல் இத்தனை பிரம்மாண்ட வளர்ச்சியை கண்டிருக்கவில்லை, மதுரையில் வேலை வாய்ப்புகள் பிரகாசமாக இல்லை, அதனால் மெல்ல வேறு துறைகள் சார்ந்த வேலைகளை பார்க்க தொடங்கினேன். சில ஆண்டுகள் பல வேலைகள் செய்தேன் அதன் பின் சொந்தமாக பல தொழில்கள் செய்தேன். பெரும் மூலதனமோ, உறவினர்களின் ஆதரவோ இல்லாததால் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தே இளமை பருவம் கடந்தது. நண்பர்களான சிலரிடம் உதவி வேண்டி அவர்களுக்கு சேவகம் செய்தே வாழ்வில் பல ஆண்டுகளை, வயதை தொலைத்தேன்.

இந்த அலைக்களிப்பான மனநிலையில் இடதுசாரி இயக்கங்களுடன் தொடர்பு ஏற்பட்டது. பாபர் மசுதி இடிப்பு என் மனநிலையை வெகுவாக பாதித்த பின்புலத்தில் அந்த நேரம் தமுஎசவில் கலை இரவு மேடைகளில் ஒளித்த மதசார்பின்மையின் குரலை கேட்டு உறுப்பினரானேன். உடன் மார்க்சிஸ்டு கட்சியிலும் உறுப்பினராக இணைந்தேன். 10 ஆண்டுகள் தீவிரமான இயக்க அனுபவம். சில கசப்பான அனுபவங்களால் அங்கிருந்து வெளியேறினேன். வேலைக்கு செல்ல வேண்டும் அல்லது தொண்டு நிறுவனம் தொடங்க வேண்டும், இது தான் என் முன் இருந்த வேலை வாய்ப்பிற்கான தீர்வுகள். இரண்டையும் செய்ய கூடாது என்று அறுதி தீர்வு எடுத்தேன். இனி அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் என அனைத்தில் இருந்தும் விலகி நின்று என்னால் இயன்றதை இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்று மனம் தன் நீரோட்ட படுகையை தேர்வு செய்தது.

தமிழக-இந்திய சமூகங்கள் சார்ந்த கேள்விகள் விவாதங்கள் என மனம் வாசிப்பின் மீது மையம் கொண்டது. வாசிக்க வேண்டும் என்றால் முதலில் தமிழ் மொழியை கற்க வேண்டும். 1996ல் தமிழ் மொழியை கற்கத் தொடங்கினேன். இடைவிடாத பயணமும் வாசிப்பும் என் வாழ்வில் புதிய அத்தியாயத்தை மலரச் செய்தது. மொழி இந்த நிலத்தின் சிறகுகளை எனக்கு அளித்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக உலகமயம், சுற்றுச்சூழல், விவசாயம், மதவாதம், அரசியல், சர்வதேச அரசியல், விளிம்புநிலை மக்கள் ஆகிய பல்துறைசார் கட்டுரைகளை எழுதி வருகிறேன். தமிழில் முன்னணி இதழ்களில் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளும், 11 புத்தகங்களும் வெளியாகியுள்ளது. மொழியாக்கங்களும் செய்து வருகிறேன். இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பல கருத்தரங்குகளில் தொடர்ந்து பங்கு கொள்வது எனது பார்வைகளை விசாலபடுத்தி வருகிறது.

கடந்த ஆண்டு எட்டு நாடுகளின் வழியே 10,000 கி.மீ, தரை வழியே பயணித்து பாலஸ்தீனத்தின் காசா பகுதிக்குச் சென்ற சர்வதேச குழிவில் இடம்பெற்றேன். இந்த ஆண்டும் ஜோர்தனில் நிகழ்ந்த பாலஸ்தீன நில மீட்பு போராட்டத்தில் பங்கு கொண்டேன். தொலைக்காட்சி ஊடகங்களில் சமூகம் சார்ந்த உரையாடல்களில் தொடர்ந்து என் கருத்துகளை பகிர்ந்து வருகிறேன்.

மாதத்தின் பாதி நாட்கள் பயணத்திலும், மீதி நாட்கள் மதுரை வீதிகளில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதும் தான் என வாழ்வில் இயல்பாக மாறிவிட்டது. எந்த வருமானமும் இல்லாமல் இது எல்லாம் எப்படி சாத்தியமாகிறது என்று பலர் என்னிடம் விசாரிப்பதுண்டு. இந்த மொத்த நடவடிக்கைகளையும் நான் மேற்கொள்ள உறுதுணையாக இருப்பது எனது அதயந்த நண்பர்களும் எனது குடும்பத்தாருமே.

எனது காதலி சோபியா லாரன்ஸ், எனது தங்கை கல்யாணி - தட்சிணாமூர்த்தி, தம்பி ரவி - காமாட்சி,  இவர்களின் செல்வங்கள் அகில், யுவன், அனன்யா என அனைவரும் என் மீது கொண்ட நம்பிக்கையும் பிரியமும் தான் தொடர்ந்து செயல்பட ஆதாரமாக விழங்குகிறது. வகுப்பு தோழர்கள். கல்லூரி சகாக்கள், இலக்கிய வாசகர்கள், அரசியல் நண்பர்கள் என சகல இயங்குதலும் இவர்களின் அன்பு இல்லாமல் சாத்தியமில்லை
Thanks: Muththukrishnan.com

No comments:

Post a Comment