Tuesday 7 October 2014

தமிழில் கீதாஞ்சலி

தமிழில் கீதாஞ்சலி


பதிப்புத்துறையில் தனிச்சிறப்பான இடம் வகிக்கும் கிழக்கு பதிப்பகம் நடத்தும் மதிப்புரை.காம் மூலம் வா. மணிகண்டன் என்பவர் உலகறிந்த எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும் அறிவியல் மேதையுமான திரு. சி.ஜெயபாரதன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்த கீதாஞ்சலி நூலைக்குறித்து , முழுமையாகப் படிக்காமலும் வேண்டுமென்றே சி.ஜெயபாரதன் அவர்கள் புகழை மங்கச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடும்  அவர் மனத்தை இந்த 80வயதில் புண்படச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடும்  கடுமையாகச் சாடி விமர்சனம் செய்திருக்கிறார்.

நமது நோக்கம் விமர்சனத்தை விமர்சனம் செய்வதல்ல.அதே நூல் மற்றும் அதன் மொழிபெயர்ப்பு குறித்து தினமலர், தினத்தந்தி, குமுதம் ஆகிய பத்திரிகைகள் என்ன கூறின? வாசித்தவர்கள் அந்த நூலின் தரம் மற்றும் மொழிபெயர்ப்புத் திறன் குறித்து என்ன கூறுகிறார்கள் என்பதற்காகப் பின்வரும் பதிவை வெளியிடுகிறோம்.பதிப்புத்துறையில் இருந்துகொண்டே மற்ற பதிப்பாளர்கள் வெளியிடும் நூல்கள் குறித்து எழுதியவர் யார், அவர்கள் புலமைப்பின்னணி என்ன என்று அறியாத நபர்களிடம் விமர்சனம் செய்வித்து அப்படியே வெளியிடுவது கிழக்கு பதிப்பகத்திற்கு இழுக்கு தேடுமே தவிர அவர்கள் உழைப்புக்கு மரியாதை தராது என்பதைச்  சுட்டிக்காட்ட விரும்புகிறேன்-வையவன் 




From: Kalyanaraman ravi
Date: 2014-10-06 12:43 GMT-04:00
Subject: Re: தமிழில் கீதாஞ்சலி – விமர்சனம்
To: “சி. ஜெயபாரதன்”
i read your ​Tamil translation on 103 verses of Geethanjali. An excellent work, sir. I salute you. You have rendered each verse in chaste ​Tamil and at the same time bringing out the spirit of the original. There are numerous poetic sparks like the following:

ஆலமரங்களின் பாதங்களிலே
ஆற்றங் கரைகளின் தோள்களிலே
எத்தகைய பச்சைக் கம்பளம் விரித்துளாய்!
என்னரும் தாயகமே!

கண்ணீர் அருவிகள் ஆறுகளாய்ப்
பொங்கி
“எங்கே? எங்கே?” என்று
கேள்வியும் கூக்குரலும்
கேட்ட போது,
உலகை வெள்ளம் மூழ்கி யடித்து,
“இங்கே நான்” என்னும்
சங்க நாதம்,
எங்கும் உனை
உறுதிப் படுத்தும்!

வேட்கை மீறிக் கீதம்
வெளிவரத் துடிக்கும்
வேதனையே வாட்டும் என் நெஞ்சை!
பூரண மாகக் கீதம்
பூத்து விரிய வில்லைச்
சீராக இன்னும்!
அருகில்
பெருமூச்சு விடுகிறது
காற்று மட்டும்!
++++++++++++
I thank you for sending me this file. i shall preserve it like a treasure.
K Ravi
Advocate,
Raja Annamalai puram
Chennai : 600096
+++++++++++++++++++++++++++++
தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி
கவிஞர் வைகைச் செல்வியின்
அணிந்துரை
விண்வெளியின் விளிம்பில் நான். . . .
பல ஆண்டுகள் கழித்து புல்லாங்குழலை எடுக்கிறேன். ஆம். வெகு காலம் கழித்து கீதாஞ்சலியைப் படிக்கிறேன். என் இனிய தமிழில் படிப்பதால் . . .இசையின் இனிமை கூடியிருக்கிறது.
மூலக் கவிதைகளில் இல்லாத ஒரு சிறப்பம்சமாய், தன் கற்பனைக்கேற்ற விதமாய் மட்டும் அமையாமல், கவிதைக்குப் பொருத்தமாக அருமையான தலைப்புகள் தந்திருக்கிறார் கவிஞர் ஜெயபாரதன். இத்தலைப்புகள் கவிதைகளை இன்னும் எளிமையாக்கிவிடுகின்றன. மொழிபெயர்ப்பும் அப்படியே. சில இடங்களில் மூலத்தினையும் தாண்டி, தமிழ் மொழிக்கேயுரிய சூட்சுமம் பொதிந்துள்ளது.
”உன்னுயிர்க் கரங்கள் தொடுவதை
என்னிதயம் உணர்வதால்
ஓயாமல் முயல்கிறேன் எப்போதும்
என் உடம்பைத்
தூயதாய் வைத்திருக்க!”
ஆங்கிலத்தில் இவ்வரிகள் உறுப்புகளைத் தொடுவதாகவே இருக்கிறது. ஆனால் மொழி பெயர்ப்பை வாசிக்கையில் தொடுதல் உணர்ச்சி ஆன்மாவிற்குள்ளும் ஊடுருவுவதை உணர முடிகிறது.
அதைப் போல மற்றொரு இடம்.
”கைவசம் உள்ள
எந்தன் படைப்பு வேலைகளைப்
பின்னர்
முடித்துக் கொள்ளலாம்”
ஆங்கிலத்தில் கைவசம் உள்ள வேலைகளை என்று தான் இருக்கிறது. இங்கு இவர் ஒரு மொழி பெயாப்பாளராக இல்லாமல் படைப்பாளியாக இருப்பதை உணர்த்தி விட்டார்.
பிறிதோர் கவிதையில்
”சுதியுடன் சுலோகங்கள் உச்சரித்து,
துதி பாடி, தோத்திரம் பாடி,
கையால்
ஜெபமாலை உருட்டி
உத்திராட்சக் கொட்டை எண்ணுவதை
நிறுத்தி விடு!
கோயில் தனி மூலையில்,
கதவுகளை மூடி,
கண்களை மூடிக் கொண்டு
காரிருளில் நீ
யாரைப் பூஜிக்கின்றாய்?
கண்களைத் திறந்துபார்,
உன் இறைவன்
முன்னில்லை என்பதை!”
ரவிந்திரநாத் தாகூரின் இக்கவிதையை சர்வ மதத்தினரும் படிக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ? சர்வ மதத்தினருக்கும் சாட்டையடி கொடுக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ? ஜெபமாலை, உத்திராட்சக் கொட்டை என்று பாடுகிறார்.
”தன் சொந்த வீடு வந்தடைய
ஒவ்வோர்
அன்னியன் வீட்டுக் கதவையும்
பயணி
தட்ட வேண்டி யுள்ளது!”
தாகூரின் அருமையான வரிகள் அத்தனையையும் அப்படியே கொண்டு வந்திருக்கிறார். படித்ததில் எனக்குப் பிடித்த வரிகள் அத்தனையும் சுவை குன்றாமல் ஏன் மெருகேற்றியும் கூட தமிழுக்குள் பொதியப்பட்டுள்ளன.
30 ஆம் கவிதையில் தாகூர் மனிதனின் அற்ப மனட்சாட்சியையே கூறுகிறார் என்று எண்ணுகிறேன். ஜெயபாரதனும் அப்படித்தான் எண்ணுகிறார் என்று நினைக்கிறேன். ஆனால் வார்த்தைகளில் சிறிது மாற்றம் இருப்பதாகத் தோன்றுகிறது.
41 ஆவது கவிதையில்
உனக்கு நான் காத்துக் கிடப்பதை
உறுதியாய் எப்படி
உரைப்பேன் அவரிடம்?
வெட்கக் கேடிது வெளியே சொல்ல!
வறுமையை வைத்துளேன்,
உனக்கு
வரதட்சணை வழங்க!
மூலத்தில் இல்லாத தொனி மொழிபெயர்ப்பில். ஏதோ சண்டை போடுவது போன்ற ஒரு தொனி. வரதட்சணைக் கொடுமை தமிழ்நாட்டிற்கே அதிகம் உரியது என்று நினைத்ததைப் போல. உறுத்தலாய் அதட்டலாய் ஆயினும் காதலியின் கையறு நிலையும் தமிழில்தான் நன்கு தொனிக்கிறது.
மொழிபெயர்ப்பின் அருமையை, தாகூரின் வார்த்தைகளில் சொல்லப் போனால்,
”இன்னும் நிறைய காலியிடம் இருக்கிறது நிரப்ப… ”
நேரம்தான் இல்லை என் இனிய நண்பர், ஜெயபாரதனின் மொழி நயத்தையும் சிறிதும் அர்த்தம் குறையாத நடையையும் சொல்லிச் சொல்லிப் பக்கத்தை நிரப்ப. ஜெயபாரதனே ஒரு கீதாஞ்சலி எழுதியிருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். ஏனென்றால் தாகூரின் மனத்தைப் போல அவர் மனமும் மென்மையான உணர்வுகளினால்தான் நெய்யப்பட்டிருக்கிறது. அணுவைப் பிளக்கும் விஞ்ஞானியால் மனத்தைப் பிளக்கும் கவிதைகளும் படைக்க இயலுமல்லவா?
வலையைத் திறந்தால் அதில் ஜெயபாரதன் இல்லாமல் இருக்க மாட்டார். கவிதை, சிறுகதை, நாடகம். மொழிபெயர்ப்பு, கட்டுரைகள் என்று நிறைய நிறைய . ஆனால் அனைத்துமே அவர் மனத்தின் சந்தோசத்திற்காக மட்டுமே. இவருக்கென வாசகர் வட்டம் இருந்தாலும், எவ்வித பாசாங்கும் இன்றி, எவ்வித சமரசமும் செய்யாமல் எழுதுபவர் என்பதாலேயே எங்களுக்குள் நட்பு சாத்தியமாயிற்று. ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்னர் கவிஞர் டபிள்யு பி. யேட்ஸ் தாகூருக்கு எழுதியுள்ள தனது அணிந்துரையில் இப்படிச் சொல்லி யிருக்கிறார். நாம் அனைவரும் அதிக பக்கங்கள் உள்ள நீண்ட புத்தகங்களை எழுதுகிறோம். எழுதுவதை இனிமையாக்கும்படி அதில் ஒரு வேளை ஒரு பக்கம் கூட தரமானதாக வந்திருக்காது. ஏதாவது ஒரு பொது வடிவத்திற்குள் அந்த எழுத்துக்கள் அடங்கிப் போகின்றன. இதெல்லாம் பணம் பண்ணுவதற்காகத்தான். நமது மண்டைகளை அரசியலால் நிரப்பி விடுகிறோம். ஆனால் தாகூர் அப்படியல்ல. இந்தியக் கலாச்சாரத்தைப் போன்றே ஆன்மிகத் தேடலில் தன்னை அர்ப்பணித்துள்ளார் என்று கூறுகிறார். கீதாஞ்சலிக் கவிஞருக்கு மட்டுமல்ல இவ்வார்த்தைகள் அதன் ஆன்மாவை மொழிபெயர்த்தவருக்கும் பொருந்தும். ஆம். வேறு சில மொழிபெயர்ப்புகள் வந்திருந்த போதும் ஜெயபாரதனின் மொழிபெயர்ப்பு ஆன்மாவின் கீதமாக இருக்கும்.
சமுதாயத் தீமைகளின் மீதும், சமுதாய நோக்கமில்லாத எழுத்துக்கள் மீதும் கூட அவருக்கு கோபம் உண்டு. முகம் தெரியாத தமிழர்களை, இந்தியர்களை மனதார நேசிப்பவர். அன்பான ஒரு மனிதனாக இருப்பதாலேயே அவருக்கு கீதாஞ்சலியை மொழி பெயர்க்கத் தோன்றியிருக்கிறது.
இந்த விமர்சனத்தை தாகூரின் இந்த வரிகளில் முடிக்க விரும்புகிறேன்.
களைத்துப் போய் நான் வெகுநேரம்
காலோய்ந்து கிடக்கும்
காலமும் உண்டு!
விழித்துக் கொண்டென்
குறிக்கோளைத் தேடி நான்,
விரைந் தோடுவதும் உண்டு!
ஆனால் நீ
இரக்கமற்ற முறையில்
என்கண் முன்பு தோன்றாமல்
ஒளிந்து கொள்கிறாய்!
ஆம். விமர்சனத்திற்காக எத்தனை எத்தனை முறைகள் விதவிதமான பான்ட்களில் இமெயில்கள். ஒவ்வொரு முறையும் நான் வேலைப் பளுவின் நிமித்தம், உடனடியாக அஞ்சல் பெட்டியைத் திறக்க இயலாமல் போய். சில நாட்கள் கழித்து திறக்கையில் •பான்ட் பிரச்சனை. . .மீண்டும் . . மீண்டும் சலிப்பின்றி அனுப்புவார். அலுவலகம் விட்டு ஒன்றுமே செய்ய இயலாமல் கிடக்கும் நாட்களில் திடீரென விமர்சனம் எழுத வேண்டுமே என்று, கீதாஞ்சலியையும் ஜெயபாரதனையும் படிப்பதற்காக நான் விழித்தெழுந்த நாட்கள் உண்டு. ஆனால் ஜெயபாரதன் என் கண் முன் இன்னும் தோன்றத்தான் இல்லை. எனினும் நட்பும் அன்பும் கண்ணுக்குத் தெரியாத இரத்தம் ஓட்டம் போல தமிழ்நாட்டையும் கனடாவையும் இணைத்து ஓடிக்கொண்டே இருக்கிறது.
அன்புடன்
வைகைச் செல்வி
சென்னை
+++++++++++++++++++++
ஜோதிர்லதா கிரிஜாவின் அணிந்துரை
திரு ஜெயபாரதன் அவர்கள் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் அறிமுகமானவர் எனும் ஒரே காரணத்தாலேயே அணிந்துரை எழுத ஒப்புக் கொண்டே.ன். நான் விமரிசகர் அல்லேன். தவிர, ஓர் எழுத்தாளர் மற்றோர் எழுத்தாளரை விமர்சிப்பது (என்னைப் பொறுத்தவரையில்) சம்மதமில்லாத ஒன்று. எனக்கு நானே விதித்துக்​ ​கொண்டுள்ள இவ்விதியை ஜெயபாரதன் விஷயத்தில் நான் மீறுவதற்கு நட்பு மட்டுமே காரணம்.
மேலும் விமர்சிப்பது என்பது ஒரு கலை. அது எனக்குக் கைவராத கலையாகும். ஒரு படைப்பு நன்றாக இருந்தது, சுவையாக இருந்தது என்று சொல்லுவதற்கு மட்டுமே அறிந்தவள் நான். அதனை அக்கு வேறு, ஆணி வேறாகப் பிரித்து முழுமையாக விமர்சிப்பது நா‎ன் துளியும் அறியாத கலை.
ஜெயபாரதன் அவர்களே தமது முன்னுரையில் கூறியுள்ளது போல், ‏ரவீந்திரநாத் தாகூர் தம்மோடும் நம்மோடும் ஆண்டவனோடும் உரையாடுகிறார் எ‎‎ன்றே தோ‎‎ன்றுகிறது. ‘சில சமயங்களில் அவர் பேசுவது கடவுளிடமா, அல்லது காதலியிடமா எ‎‎ன்று தெரிந்து கொள்ளுவது சிரமமாக உள்ளது’ எ‎ன்பதாய் ஜெயபாரத‎ன் அவர்களுக்கு ஏற்பட்ட எண்ணமே எனக்கும் ஏற்பட்டது. எவருக்குமே அது ஏற்படும்தான். .
கீதாஞ்சலியில் கடைசியாக வரும் கவிதைகள் மரணத்தைப் பற்றியதாகவே உள்ளன. படிக்கும் போது ஒரு சோர்வு பற்றிக் கொள்ளுகிறது.
எது எப்படி ‏இருந்தாலும், ஜெயபாரதனின் மொழிபெயர்ப்பும், கவிதை நயமும் அருமை. விமர்சனத்துக்கு நாம் எடுத்துக்கொண்டுள்ளது தாகூர் அல்லர், ஜெயபாரதனே எ‎ன்பதால் அவரது மொழிபயர்ப்பை மட்டுமே பார்ப்போம்.
மூலத்துக்குக் குந்தகம் வராத முறையில் அவரது மொழியாக்கம் அமைந்துள்ளது.
‘அந்திமக் காலமி‎‎ன்றி எ‎ன்னை ஆக்கியுள்ளாய் நீ’ எனத் தொடங்கும் முதல் பாடலிலேயே களை கட்டிவிடுகிறது எனலாம். ‏‏ அவ்வரிகளில் தாகூரி‎ன் சுயமதிப்பீடு வெளிப்படுகிறது. ஜெயபாரதனின் மொழியாக்கம் அருமையாய்த் தொடங்குகிறது.
“எ‎‎ன் வாழ்வில் கட்டுப்பாடு”
ஓயாமல் முயல்கிறேன் எப்போதும்,
என் உடம்பைத்
தூயதாய் வைத்திருக்க
“மாலையில் சேராத மலர்” /
உனக்குப் பூமாலை சமர்ப்பித்து
வணங்கும் நேரம் தவறிப்போய்,
இன்றைய பொழுதும்
எனக்குத் தெரியாமல்
முடிந்து போய்விடும் என்று
நடுங்கும் என் நெஞ்சம்
“இறைவன்‎ எங்கிருக்கிறா‎ன்?”
மெய் வருந்தி இறுகிப்போன
வயலை உழவன் எங்கே
உழுதுகொண்டிருக்கிறானோ,
வேர்வை சிந்தி நடைபாதை போடுபவன்
எங்கே கல்லுடைத்து வருகிறானோ,
அங்கே உள்ளான் இறைவன்
“எங்கிருந்து வந்ததோ?”
மதலையின் இதழ்களில்
மலர்ந்திடும் முறுவல்
எங்கிருந்து வருவதென்று
எவரேனும் அறிவரோ ?
“ஆடும் குழந்தை”
தழுவிச் செல்லும்
வேனிற்தென்றல்
வீசும்போதென்
மேனியின் சிலிர்ப்பு
எப்படி எனச் சொல்வேன்,
உன் முகப் புன்னகை மலரக்
கன்னத்தில்
நான் முத்தமிடும் போது
“உன்னோடு என் கலப்பு”
பாடுபட்டுப் பணி புரிதற்கு
ஈடுபடுத்த வேண்டும்
முழுமையாய் என்னை நான்
“மனவலியைத் தாங்குவேன்”
வணிக உலகிலே
மணிக்கணக்காய்
ஊழியத்தில் உழன்று
தினமும் செல்வம் சேர்த்து,
எனது பை நிரம்பி வழிந்தாலும்
எதுவும் முடிவில்
சம்பாதிக்க​ ​வில்லை
எனும் உணர்ச்சி
வெம்பி மேவுகிறது என்னிடம்
“என் கண்ணீர் முத்தாரம்”
அன்னையே ! சோகத்தில்
சிந்துமென் கண்ணீர்த்
துளிகளை எல்லாம்
ஒரு முத்தாரமாய்க் கோத்துச்
சூடுவேன் உன் எழில் முகத்தில்,
“மரணதேவனுக்கு வரவேற்பு”
வெறுமையான என் வீட்டில்
புறக்கணித்த தனி ஆன்மா மட்டும்
எஞ்சி நிற்கும்
என் இறுதிக்கொடையாக
உனக்கு,
“அவளைத் தேடிச் செல்கிறேன்”
இதில் வரும் ‘அவள்’ யார்?
சக்தியா – அதாவது கடவுளா – காதலியா ?
ஆகியவற்றைப் பெரிதும் ரசிக்க முடிந்தது.
அடையாளமிட்ட வரிகள் அந்தந்தப் பாடலுக்கு உரியன.
102 ஆம் பாடலான “உன் மர்மங்களை அறிவேன்” என்பதில்,
“அவை கூறும் அர்த்தமென்ன
என்றெனைக் கேட்கிறார்,
பதில் தர முடியாது அவர் முன்
பரிதவிப் படைவேன்”
என்று தாகூரே சொல்லுகையில், நாம் அதைப் புரிந்து கொள்ளுவதாவது!
கடைசியாக வரும் 103 ஆம் பாடல் கடவுளுக்கு நன்றி நவிலலுடன் முடிகிறது.
மிகச்​ ​சிலவற்றையே எடுத்துக்காட்டியுள்ளேன். ஒவ்வொரு பாடலும் சத்தானதுதான். மொத்தத்தில், ஜெயபாரதனின் மொழிபெயர்ப்பு அருமையாக உள்ளது. நம் பாராட்டுகள்!
ஜோதிர்லதா கிரிஜா
சென்னை 600 101
ஜூலை 12, 2008.
​++++++++++++++++++++++++++++++++++++++++++++++++​
தமிழில் கீதாஞ்சலி
=================
அணிந்துரை: கவிதாயினி மதுமிதா
“எவ்வளவுதான் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனானாலும், நம்பிக்கைக்குரிய பணியாளிடம், தன்னுடைய
காதலியின் முத்தத்தை வாங்கி வரச் சொல்ல இயலாது”
இப்படி கூறியவர் யார் தெரியுமா?
தாகூர்தான்.
எதற்காகத் தெரியுமா?
தன்னுடைய கீதாஞ்சலியினை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க இன்னொருவரிடம் கொடுக்க நினைப்பது இதனை ஒத்தது என்று தாகூர் கூறியதாய் சிறுவயதில் செவிவழியாய் கேட்ட நினைவு. அப்படியே யாரிடமும் மொழிபெயர்க்க அளிக்காமல் தானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். நோபல் பரிசும் பெற்றார்.
பள்ளிகளில் கீதாஞ்சலியின் ஓரிரு பாடல்கள் வாசிக்கக் கிடைத்தன. நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞனின் பாடல்களை அறியும் விருப்பம் வளர்ந்தது. சில தமிழாக்கங்கள் வாசிக்கக் கிடைத்தன. அந்த வரிசையில் மகுடத்தில் ஒளிரும் ரத்தினமாக இன்று நமது கைகளில் திரு. ஜெயபாரதனின் தமிழ் கீதாஞ்சலி.
கீதாஞ்சலி முழுக்க முழுக்க பாடல்களாக, இசை ஓவியமாக, எழுத எழுத திருப்தி இல்லாததால் தொடர்ந்து படைக்கப்பட்ட இசைக்கான அஞ்சலியாக மலர்வண்ணமாகக் கொட்டிக் கிடக்கிறது. வாசம் நுகரலாம். வண்ணம் காணலாம். அழகை ரசிக்கலாம். அவரவருக்கான பொருள் பெற்றுக் கொள்ளலாம்.
வாழ்க்கை ஆரம்பத்திலிருந்து, பயணத்தின் முடிவுக்கு காத்திருக்கும் வரையிலான விழிப்புணர்வு மிக்க கீதங்கள் இவை. தாகூரின் வாழ்வின் தேசம், மொழி, தேடல், வேதனை, தாக்கம், இன்பம், துன்பம், அன்பு, நட்பு, கருணை, சோதனைக் காலம், ஆற்றாமை, காத்திருப்பு, மாயை, ஆன்மா, மரணம் என அனைத்தும் அவரின் வாழ்வின் அனுபவம் சார்ந்த உணர்வுகளுடன் அளிக்கப்பட்ட பாடல்களாகவே காணப்படுகின்றன.
நான்காம் பாடலில்
‘இது என் வாழ்வின்
வாழ்வைப் பற்றிய வரலாறு’ என அவரே சொல்கிறார்.
‘தமஸோமா ஜ்யோதிர் கமய’
இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்.
இது அவர் மனதில் ஆழப் பதிந்து பல பாடல்களில் வெவ்வேறு ரூபமாக வெளிப்படுகிறது.
அப்படியே மரணம் குறித்த பல பாடல்களும் திரும்பத் திரும்ப வருகின்றன.
‘ஏழைகளின் தோழன் நீ’ பாடலில்
‘பாதை காண முடியாத
ஒதுக்குப்புறங்களில்
ஒடுங்கி வரும்
துணையற்ற எளியோரிடம்
கீழே அமுக்கப்பட்ட மக்களிடம்
ஏழை மாந்தரிடம் என்றென்றும்
தோழமை
கொண்டுள்ளாய் நீ’ வரிகளும்,
‘சிறைக்கைதி’ பாடலில்
மெய்வருத்தி
இறுகிப் போன வயலை
உழவன் எங்கே
உழுது கொண்டிருக்கிறானோ,
வேர்வை சிந்தி
நடைபாதை போடுபவன்
எங்கே கல்லுடைத்து வருகிறானோ
அங்கே உள்ளான் இறைவன்!
வெட்ட வெளியிலும்
கொட்டும் மழையிலும்
தூசி படிந்த ஆடையுடன்
உழைப்பாளி
கூடவே குடியுள்ளான் இறைவன்!
மெய் வருத்திப் பணிசெய்யும்
உழைப்பாளியை
சந்தித்து
நில் அவனருகே நீ,
நெற்றி வியர்வை நிலத்தில்
சிந்தி!
பாடல் வரிகளும் சிறந்தவை. மற்ற பாடல்களை விட இவை சொல்லும் மனிதம் மீதான அன்பின் நுட்பம் நெஞ்சை கொள்ளை கொள்கிறது.
‘எங்கிருந்து வந்ததோ’ என்னும் குழந்தையின் பாடல்கள் நம்மை குழந்தை உலகத்தில் குதூகலிக்கச் செய்திடும் ஆற்றல் மிக்கவை.
இதோ தமிழில் கீதாஞ்சலியை அளித்துள்ளார் திரு.ஜெயபாரதன். அவரின் உழைப்பு போற்றுதலுக்குரியது. தாகூரை இடைவிடாது மனதில் சுமந்து சீரிய முயற்சியுடன் தமிழ் கீதாஞ்சலியினை அர்ப்பணிப்புணர்வுடன் தாகூரின் உள்ளம் தன்னுள் ஏந்தி தமிழில் படைத்தளித்துள்ளார். கீதங்களின் உலகுக்கு தமிழ் வாசகர்களை அழைத்துச் செல்லும் பணியினை சிரத்தையாய் செய்துள்ளார். மென்மேலும் சிறந்த நூல்கள் அவர் படைக்கட்டும். அவர் தம் வாழ்வு பொன்னேட்டில் பொறிக்கப்படட்டும்.
அன்புடன்
மதுமிதா,
தமிழ்நாடு, இந்தியா
10.02.2007
++++++++++++++++++++++++++
தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி
கவிஞர் புகாரியின் அணிந்துரை
உன்னை அறிந்தவர் எவரும் எனக்கு அன்னியர் ஆகார்…
தமிழ் என்பதொரு கடல். அதில் உலக நதிகள் அத்தனையும் வந்து கலந்திட
வேண்டும். தமிழ்க்கடல் வந்து சேராத ஒரு துளி எழுத்தும் உலகின் எந்த
மூலையிலும் இருத்தல் கூடாது. ஒவ்வொரு மொழியின் அத்தனை
எழுத்துக்களும் அச்சுமாறாமல் தமிழுக்குப் பெயர்க்கப்பட வேண்டும்.
தமிழ் என்பதொரு மழை. இந்த மழை பொழியாத எந்த நிலமும் உலகில் எங்கும்
இருத்தல் கூடாது. ஒவ்வொரு மொழியின் காய்ந்த மண்ணிலும் ஈரமாய் தமிழ்
நின்று பொழிந்திட வேண்டும். தமிழின் ஒவ்வொரு எழுத்தும் உலகின் அத்தனை
மொழிக்கும் பெயர்க்கப்படவேண்டும்.
இவை செய்பவன் போற்றுதலுக்குரிய தமிழன். அந்தத் தமிழனை தமிழ் தன்
முத்தங்களுக்குள் பொத்தி வைத்துத் தாலாட்டும். அப்படித் தாலாட்டப்படும் சில
நூறு தமிழர்களுள் அறிவியல் சிரிப்போடு ஜெயபாரதனும் இருப்பார்.
கவியோகி இரவீந்திரநாத் தாகூர் நோபல் பரிசு பெற்ற தேசியக் கவிஞர். அவர்
எழுதிய பாடலைத்தான் நமது தேசிய கீதமாய் ஏற்று நூறு+ கோடி மக்களும்
தினமும் மரியாதை செலுத்திப் பாடி வருகிறோம்.
பழம்பெரும் இந்தியப் பண்பாட்டை மேற்குலகக் கருத்துக்களோடு இணைத்து
சிறப்புறச் செய்து பெருமை பெற்றவர் தாகூர். அவரின் கீதாஞ்சலிக்கு ஒரு சிறப்பு
உண்டு. அது தாகூரின் தாய் மொழியான வங்காளத்தில் எழுதப்பட்டு அவராலேயே ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது. அப்படியான ஒரு
மொழிமாற்றத்திலிருந்து இன்னொரு மொழிமாற்றமாக நம் ஜெயபாரதன்
கீதாஞ்சலியைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார்.
மொழிபெயர்ப்பென்பது எளிதான காரியமல்ல. காலமாற்றம், இடமாற்றம்,
பண்பாட்டுமாற்றம் என்ற பல மாற்றங்களையும் சிதையாமல் அப்படியே
மாற்றப்படும் மொழிக்கு ஏற்றவாறு மீண்டும் செதுக்கித் தரவேண்டும். அப்படி
செதுக்கப்படும் சிலைகள் மீண்டும் உயிருள்ளவையாய் நம்மோடு பேசவும்
வேண்டும். செதுக்கும்போது, ஜீவனின் தலையைச் சீவிவிட்டால் மூலப்படைப்பு
செத்துப் போய்விடும். அது மொழிமாற்ற வந்த எழுத்தாளனுக்கும் இழுக்கு
மூலம்படைத்த கவிஞனுக்கும் அழுக்கு.
ஜெயபாரதனின் மொழியாக்கம் சிறப்பாய் அமைந்திருக்கிறது. அதற்கு முக்கிய
காரணம் அவர் மூலப்படைப்பின் சொல் பொருள் கவிதை நயங்களின்
அலைகளில் அப்படியே சிலிர்த்துப்போயிருக்கிறார். அவை அப்படியே அவர்
இதயத்தில் கூடுகட்டிக்கொண்டிருக்கின்றன. அந்தக் கூட்டுக்குள்ளிருந்து வெளிவந்த
குஞ்சுகள் மூலத்தின் ராகத்தை அப்படியே இயல்பாய் இசைத்திருக்கின்றன.
உதாரணத்திற்காக ஜெயபாரதனின் மொழியாக்க வானத்திலிருந்து ஓரிரு
நட்சத்திரங்களின் ஓரங்களை மட்டும் இங்கே நாம் உரசிப் பார்ப்போம்.
ஆதியில்லாக் காலத்திற்கு அந்தமில்லை
உந்தன் கைகளுக்குள் நகர்வதால்
எந்தன் அதிபதியே
காலச் சக்கரத்தின் சுழற்சி நிமிடங்களை
எண்ணிக் கணிப்பவர் எவருமில்லை
சூட்சும தரிசனங்களின் ஆணிவேர்களைத் துலாவிப் பார்க்கும் இம்மாதிரியான
வெளிச்ச விரல்கள்.
மெய்வருந்தி இறுகிப்போன வயலை
உழவன் எங்கே உழுதுகொண்டு இருக்கிறானோ
வேர்வை சிந்தி நடைபாதை போடுபவன்
எங்கே கல்லுடைத்து வருகிறானோ
அங்கே உள்ளான் இறைவன்
ஆன்மிகத் தேடலின் நிதரிசனங்களாய் உருளும் இம்மாதிரியான மனப்பயணச்
சக்கரங்கள்.
தன் சொந்த வீட்டை வந்தடைய
ஒவ்வோர் அன்னியன் வீட்டுக் கதவையும்
பயணி தட்ட வேண்டியுள்ளது
பிறரிடம் பிச்சை எடுப்பவனே
முதலில் உன் வீட்டு வாசல்
முன்னின்று யாசித்திடு
இயல்பான அசைவுகளால் காற்றில் துடிப்போடு மிதக்கும் இம்மாதிரியான
சிந்தனைச் சிறகுகள்.
குளிரும் மழை வேளைகளில்
அங்குமிங்கும் அலையும் காற்றைப் போல்
நிலைமாறிக் கலங்குது என் நெஞ்சு
எப்போது முகம் காட்டுவாய் நீ என் அன்பே
கண்ணிமை கொட்டாது கவலையில் சோர்ந்துபோய்
விண்வெளிக்கு அப்பால் நோக்கியவண்ணம்
நிற்கிறேன் விழித்துக்கொண்டு
அழைத்துப் பாடுவது காதலியையா கடவுளையா என்று மயங்கவைக்கும்
இம்மாதிரியான அழகு நயங்கள்.
நான் இசைத்த முந்தைய பாசுரங்கள்
நாக்கில் வரண்டு போனதும்
புதிய கீதங்கள் ஊறிப்
பொங்கி எழுந்தன நெஞ்சில்
பழைய தடங்கள் மறைந்து போன இடத்தில்
புதிய பூமி உதித்தது அதிசயமாய்
அவநம்பிக்கைக்கும் நம்பிக்கைக்கும் இடையில் நம்பிக்கையின் திசையில்
மனதை நகர்த்தி அந்த அதிசயம் நிகழ்வதே வாழ்க்கையென்று அறிவிப்பதுபோல்
இருக்கும் இம்மாதிரியான முத்திரைச் சித்திரங்கள்.
நெஞ்சில் பளிச்சிட்டு நான் பாடநினைத்த கீதம்
இன்றுவரை வெளியில் வராமலே
ஒளிந்து கொண்டுள்ளது
வேட்கை மீறி கீதம் வெளிவரத் துடிக்கும்
வேதனையே வாட்டும் என் நெஞ்சை
பூரணமாகக் கீதம் பூத்து
விரியவில்லை சீராக இன்னும்
அருகில் பெருமூச்சு விடுகிறது
காற்று மட்டும்
கவியோகி தாகூருக்கும் அதே திருப்தியற்ற நிலைதானா என்று வியக்கவைக்கும்
இம்மாதிரியான முத்துச் சரங்கள்.
இப்படியாய், இந்தத் தொகுப்பு முழுவதும் தாகூரின் கவிதைகள் ஜெயபாரதனின்
மொட்டிலிருந்து பூத்தவைபோல் பூத்திருக்கின்றன. மொழிபெயர்ப்புதானா என்று
வியக்க வைக்கும் வண்ணம் குற்றால அருவிகளாய்க் கொட்டுகின்றன.
தாகூரின் எண்ண நுணுக்கங்களை அப்படியே நுணுங்காமல் தருவதிலும், பரந்து
விரிந்த தாகூரின் ஆன்மிக இதயத்தை அப்படியே தமிழ்த் தாம்பூலத்தில் ஏந்தித்
தருவதிலும் வெற்றி பெற்றிருக்கிறார் ஜெயபாரதன்.
இணையம்தான் ஜெயபாரதனை எனக்கு அறிமுகம் செய்தது.
இணையவலை பிரித்துக் கொரித்துக்கொண்டிருந்த ஓர் மதியப் பொழுது
ஜெயபாரதனின் கட்டுரை ஒன்றை என் கண்களுக்குள் இழுத்து வந்தது. அது ஓர்
அறிவியல் கட்டுரை. நீளம் அகலம் ஆழம் என்று எல்லா திசைகளிலும்
அடர்த்தியாய் இருந்த அந்தக் கட்டுரை என்னை வெகுவாகக் கவர்ந்தது.
அறிவியல் கட்டுரை எழுதுவோர் ஆங்கிலச் சொற்களைத் தவிர்க்க இயலாமல்
திண்டாடுவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் அக்கட்டுரையோ மிக இயல்பான
அழகு தமிழில், ஒவ்வொரு கலைச் சொல்லுக்கும் எளிதான தரமான தமிழ்ச்சொல்
இட்டு, எண்ணத்தில் ஒரு வண்ணத்துப் பூச்சியைப்போல சட்டென
ஏறிக்கொள்ளும் வண்ணமாய், பல புகைப்படங்களால் சூழப்பெற்று ஒரு காட்சி
வர்ணனையைப் போல ஆக்கப்பட்டிருந்தது.
இன்று கனடாவில் வாழும் ஜெயபாரதன், 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித்
துறையகத்திலும் 17 ஆண்டுகள் கனடிய அணுசக்தித் துறையகத்திலும்
பணியாற்றிவிட்டு இப்போது முழு ஓய்வில் இருக்கிறார். “ஆக்க வினைகளுக்கு
அணுசக்தி” என்னும் இவரது முதல் புத்தகத்துக்கு சென்னை பல்கலைக் கழகம்
மாநில முதற் பரிசை அளித்துள்ளது.
கடந்த கோடை விடுமுறையில் என் குடும்பத்தோடு இவர் இல்லம் சென்றேன்.
நோக்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருந்தவை புத்தகங்கள் புத்தகங்கள்
புத்தகங்கள். நடந்தால் புத்தகம் நிமிர்ந்தால் புத்தகம் அமர்ந்தால் புத்தகம் என்று
புத்தகங்களுக்குள் புதைந்து கிடந்தார் ஜெயபாரதன்.
தன் இரு மகள்களையும் கனேடியர்களுக்கு மணமுடித்துக் கொடுத்து பேரப்
பிள்ளைகளோடு குதூகலமாய் வாழும் இவரை நேரில் சந்தித்துக் கைகுலுக்கும்
ஒருவரால் இவரை ஓய்வு பெற்று வாழும் ஒருவராகக் காண்பது கடினம். நேற்றே
மீசை முளைத்த துடிப்பான இளைஞரைப் போல சுறுசுறுப்பாய்ச் செயலாற்றி
வருகிறார்.
தமிழறிவும் அதற்கு இணையான ஆங்கில அறிவும் மட்டுமல்லாமல் கவிதை
ரசிப்பும் ஆன்மிகத் தேடலும் ஜெயபாரதனின் விரல்களை கீதாஞ்சலி மொழியாக்கத்
தளத்தில் உறுதியானவையாக ஆக்கி உலவ விட்டிருக்கின்றன.
தாகூரின் கீதாஞ்சலியை நான் இப்போதுதான் முழுவதுமாக வாசிக்கிறேன்.
ஜெயபாரதனின் தமிழ் உள்ளத்தால் அது என் கூரையைப் பொத்துக்கொண்டு
கொட்டி இருக்கிறது. வாசித்து மகிழ்ந்தவன் நன்றி கூறுகிறேன். என்னைப்போல்
பலரும் நிச்சயம் நன்றி கூறுவர்.
தாகூர் கவிதை எழுதவில்லை. கவிதைகள் தாகூரை எழுதி இருக்கின்றன.
தன்னுள்ளம் எதுவென்று பாடுகிறாரா, தன் காதலியிடம் ஏங்குகிறாரா அல்லது
கடவுளிடம் தவிக்கிறாரா என்ற பொதுநிலைப்பாடு கீதாஞ்சலியின் வெற்றி.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கு ஆன்மிகப்பற்றும் அற்புத வழிதரும்
என்பதற்குச் சான்றுகளாய் இத்தொகுப்பெங்கும் பல பாடல்கள்.
ஒவ்வொரு மொழி மாற்றத்தின்போதும் ஏதோ ஒரு வகையில் மூலம்
சிதைவடைவது இயல்புதான். இருந்தும், ஆங்லத்துக்கு மொழிமாற்றப்பட்ட
தாகூரின் வங்காளக் கவிதைகளை நம் தமிழ்க் கடற்கரைகளில் சூரியனைத்
தொட்டுப் பறக்கும் பட்டங்களாய் பறக்கவிட்டிருக்கிறார் ஜெயபாரதன்.
தாகூரின் சொற்களில் சிறு சிதறலுமின்றி லயித்திருந்தால்தான், தாகூரின்
கருத்தோட்டங்களோடு செம்புலப்பெயல் நீரென ஒன்றிப்போயிருந்தால்தான், இப்படி ஓர் அழகான அச்சுமாறாத இரட்டைக் குழந்தைகளில் இரண்டாம் குழந்தையைப் பெற்றெடுத்த இன்னொரு தாயைப்போல் நிறைவோடு நிற்கமுடியும் ஜெயபாரதனால்.
பிறமொழிச் செழுமைகளை தன் இதய இழைகளால் தாவிப்பிடித்து தமிழ்
வாழையில் விருந்துவைக்கும் ஜெயபாரதனின் பணி போற்றுதலுக்குரியது.
இனியெல்லாம் ஜெயபாரதனைக் காணும்போது அவரிடம் தாகூரின் நிழல் முகம்
தெரிந்தால், ஆச்சரியப்பட ஏதுமில்லை.
அன்புடன்
புகாரி
டொராண்டோ, கனடா

No comments:

Post a Comment