Thursday 7 May 2015

மாறுதலான ஒரு மலையாளப்படம்



அரபி கத

- மலையாளத் திரைப்படம்  

இயக்கம் : லால்ஜோஸ்
எழுத்து : இக்பால்

கம்யூனிசத்தை நேசித்து வாழ்க்கையாக ஏற்றுக்கொண்ட ஒரு சாதாரண கம்யூனிஸ்ட் கடைசிவரை கம்யூனிஸ்டாகவே வாழ்ந்து இறந்து போகிறான்….. ஏனெனில் அவன் படித்த சித்தாந்தங்களை அப்படியே நம்புகிறவன்… பணமோ, பதவியோ, புகழோ அவனை எதுவும் மாற்றி விடாது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறது ‘’அரபி கத’’ திரைப்படம்…

செம்மனூரில் வசிக்கிறார்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரப் பொறுப்பாளர்கள் சொஸைட்டி கோபாலனும் (நெடுமுடி வேணு), அவரது மகன் முகுந்தனும் (ஸ்ரீனிவாசன்)…. கட்சி புத்தகங்களையும், கொள்கைகளையும் தவிர வேறெதையும் மகனுக்காக சேர்த்து வைக்கவில்லை கோபாலன்… ஊருக்குள் சாலை போடுவதில் ஆரம்பித்து, பெரிய நிறுவனங்களை இழுத்து மூடுவது வரை சளைக்காமல் போராடிக் கொண்டே இருக்கிறார்கள்… திருவனந்தபுரத்தில் இருக்கும் குஞ்சுண்ணியின் (ஜெகதி) சுகர் ஃபேக்டரியையும் இழுத்து மூடுகிறார்கள்…

திருமணம் செய்து கொண்டால் கட்சி வேலைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறார் முகுந்தன்…. முடிந்தால் கியூபாவில் உள்ள பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என அப்பாவிடம் சொல்கிறார்….. திடீரென ஒருநாள் கோபாலனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது… அந்த நேரத்தில் கட்சியில் மாநிலப் பொறுப்பில் இருக்கும் கருணாகரன் கட்சிப் பணத்தை தன் சொந்த செலவிற்கு எடுத்துக் கொள்கிறார். அவருக்கு வங்கி மேலாளரும், சுகர் ஃபேக்டரி முதலாளி குஞ்சுண்ணியும் உதவி செய்கிறார்கள்… கோபாலன் தான் பணத்தை எடுத்ததாக சொல்லி அவரை கட்சியில் இருந்து நீக்குகிறார்கள்… கோபாலன் இறந்து போகிறார்… அவர் எடுத்த பணத்தை முகுந்தன் திருப்பித் தர வேண்டும் என கட்சி தீர்மானம் நிறைவேற்றுகிறது…
சாயக்கடை நடத்திவரும் முகுந்தனால் அவ்வளவு பணத்தை கொடுக்க முடியாமல் தடுமாறுகிறார்… துபாய்க்கு போனால் பணம் சம்பாதிக்கலாம் என கட்சியில் நண்பர்கள் சொல்கிறார்கள்…. துபாயில் இருந்து ஊருக்கு வருபவர்களை ‘’பூர்ஷ்வா’’என்று அழைக்கும் முகுந்தனுக்கு துபாய் போக மனம் ஒப்பவில்லை… சீனாவுக்கோ, கியூபாவுக்கோ போகட்டுமா என்று கேட்கிறார்.. கடைசியில் வேறு வழியின்றி துபாய் செல்கிறார்.. துபாயில் இருக்கும் மலையாள தொழிலாளர்களிடம் கட்சியை பலப்படுத்தும் வேலையை செய்யலாம் என சொல்லி சமாதானப்படுத்தி முகுந்தனை துபாய் அனுப்பி வைக்கிறார்கள்…

வேலைக்கு ஆட்களை சப்ளை செய்யும் குஞ்சுண்ணியின்(ஜெகதி) நிறுவனத்தில் தான் தனக்கு வேலை என்பது அங்கு சென்றபிறகே, முகுந்தனுக்கு தெரிய வருகிறது… பனிரெண்டு மணிநேர வேலை, சரியான தங்குமிடம் இல்லாதது என அங்கிருக்கும் குறைகளோடு குஞ்சுண்ணியை சந்திக்க, வேலை பறிபோகிறது.. தொடர்ந்து வேலைக்கான அலைச்சல், பசி என கடக்கிறது முகுந்தனின் நாட்கள்.. கடைசியில் மலபாரைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவரின் ரெஸ்டாரெண்டில் வேலைக்கு சேர்கிறார் முகுந்தன்… அவருக்கு வரும் முதல் கஸ்டமர் ‘’கோககோலா’’ கேட்க, கோககோலாவுக்கு எதிராக கேரளாவில் நடத்திய போராட்டங்கள் முகுந்தனுக்கு நினைவு வருகிறது.. அந்த ஆர்டரை எடுக்க முடியாது என மறுக்கிறார்… முதலாளி பாய் சிரித்தபடியே, கம்யூனிஸ்டா என கேட்கிறார்….

இதற்கிடையில், சீனப்பெண் ஒருவரோடு முகுந்தனுக்கு நட்பு கிடைக்கிறது.. அவள் சீனா என்று சொன்னதும், முகுந்தனுக்கு அவளை பிடித்து விடுகிறது.. அவளோடு மாவோ பற்றியும், கிருஷ்ணபிள்ளை, ஏகேஜி பற்றியும் பேசுகிறார்… அச்சுதானந்தனுக்கும் ,பினராயிக்கும் எதுவும் சண்டை இல்லை என அவளை நம்பவைக்க முயற்சி செய்கிறார்… ஆனால் அவளுக்கு சீன மொழி தவிர வேறு எதுவும் தெரியவில்லை.. ஆனால் அவள் கம்யூனிஸ்டுகள் என்ற வார்த்தையை கேட்டாலே வெறுப்படைகிறாள்… தங்கும் இடத்தில் வாடகை தராமல் அவள் வெளியேற்றப்பட தனக்குத் தெரிந்த நர்ஸ் மாயாவோடு அவளை தங்க வைக்கிறார் முகுந்தன்,,,

ஊரில் கட்சிக் கடனை அடைக்க, பத்து லட்ச ரூபாய் சீட்டு சேருகிறார்… சீட்டு நடத்தும் ஜெயசூரியா பணத்தை முகுந்தனுக்கு தராமல் ஏமாற்றி விட்டு சீனப்பெண் மீது பழிபோடுகிறார்.. இதற்கிடையில் ரெஸ்டாரெண்ட் நடத்தும் பாய் தன் இடத்தை உரிமையாளர் கேட்பதாக கூறிவிட்டு ஊருக்கு கிளம்புகிறார்… முகுந்தனின் வேலை போகிறது… 

இந்த இடத்தில் படம் மூன்றாண்டுகளுக்கு பிறகு தொடங்குகிறது… செங்கன்னூரில் முகுந்தனின் தோழர்களுக்கு கோபாலன் பணத்தை எடுக்கவில்லை என்கிற உண்மை தெரிகிறது.. பணத்தை எடுத்த கருணாகரன் அமைச்சர் ஆகிவிடுகிறார்… அவருக்கு எதிராக போராட வேண்டும் என முகுந்தனின் நண்பன் அன்வர் (இந்திரஜித்) சொல்ல… கட்சித் தொண்டர்களே அதிகாரம் கையில் இருக்கும் அமைச்சருக்கு எதிராக போராட மறுக்கிறார்கள்… நியாயத்தின் பக்கம் மூன்று, நான்கு பேர் மட்டுமே மிஞ்சுகிறார்கள்…

எங்கிருக்கிறார் எனத் தெரியாமல் போன முகுந்தனைத் தேடி, துபாய் செல்கிறார் அன்வர்… அங்கு துபாயின் வெளிப்புற நகர் ஒன்றில் பண்ணையாளாக முகுந்தனை கண்டுபிடிக்கிறார்… அப்போது தான் தானும், தன் அப்பாவும் வஞ்சிக்கப்பட்டது முகுந்தனுக்கு தெரிய வருகிறது… அரபு மலையாளிகள் ஏற்பாடு செய்யும் விழாவிற்கு வருகை தந்து பெண்கள், மது என கூத்தடிக்கும் கருணாகரனை ஷூட் செய்கிறார்கள்… அவர்களை பாலைவனத்தில் விட்டுப்போவது என அதெல்லாம் சினிமா…

கிளைமாக்ஸில் சீனப்பெண் தன்னை ஏமாற்றவில்லை என முகுந்தனுக்கு தெரிய வருகிறது… சீன கம்யூனிஸ்ட் அரசை எதிர்த்ததால் மோசமாக தாக்கப்பட்டிருக்கும் தன் காதலனை குணப்படுத்தவே அவள் துபாய் வந்ததும், அவள் கம்யூனிஸ்டுகளை வெறுப்பவள் என்பதும் தெரிய வருகிறது… தன் அத்தனை நாள் சேமிப்பையும் அவளது காதலனின் மருத்துவச் செலவிற்காக தருகிறார் முகுந்தன்… அவள் மறுக்க, ‘’தேவைக்கு அதிகமாக ஒரு கம்யூனிஸ்ட் பணம் வைத்துக் கொள்ளக் கூடாது’’ என சொல்கிறார் முகுந்தன்… அவர் அவளை நேசிக்கவில்லை, அவள் வழியே சீனாவை நேசித்ததாக சொல்கிறார்…

மீண்டும் அன்வரோடு செம்மஞ்சேரி வரும் அவரை வரவேற்க கம்யூனிசத்தை இன்னமும் நம்பும் எளிய தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்… இன்குலாப் சிந்தாபாத்தோடு படம் முடிகிறது… கேரளாவில் மார்க்சிஸ்டின் தலைவர்கள் தடம் மாறிப்போன கதை, தொண்டர்கள் இன்னமும் மார்க்சியத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, வளைகுடா நாடுகளில் அடிப்படை வேலைகளுக்காக போகும் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை எல்லாவற்றையும் மிக விரிவாகவே பேசுகிறது படம்…

இன்னொரு மொழிபேசும் தேசத்தில் முகுந்தனுக்கு துரோகம் செய்பவர்கள் அனைவரும் மலையாளிகளாகவே இருக்கிறார்கள்… ’’மலையாளி அளவுக்கு இன்னொரு மலையாளிக்கு உதவுபவன்’’ என்கிற வாக்கியத்தையும் முடிந்த வரைக்கும் காலி செய்திருக்கிறார்கள்…இந்தப்படம் கேரளாவில் பெரிய வரவேற்பு பெற்றதும், இந்தப் படத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து பெரிய எதிர்ப்பு எழாததும் கலை சமுதாயத்தை மாற்ற முடியும் என்கிற மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது… வலது கம்யூனிஸ்டுகளின் ரஷ்ய ஆதரவை கிண்டல் செய்வது, வோட்காவால் தான் ரஷ்யா உடைந்தது என கிண்டல் செய்வது என படத்தின் எதார்த்தத்திற்காக நிறைய காட்சிகள் படத்தில் இருக்கிறது...

சமீபமாக மலையாளப் படங்களில் இஸ்லாமியர்களின் வாழ்க்கை நிறைய இடம்பெறுவதை (இந்தப் படத்திலும்) காண முடிகிறது. அதற்கு அடிப்படை காரணம் மலையாளப் பட உலகில் இயக்குனராகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் அவர்கள் அதிக அளவு இடம்பெறத் தொடங்கியிருப்பதே… உலகம் முழுக்க படைப்பு ரீதியாக இஸ்லாமியர்கள் மீதான காழ்ப்புணர்வை சீர்செய்ய, அதே படைப்புத் துறையில் அவர்கள் கால்பதிப்பதே சிறந்த வழியாக இருக்க முடியும் எனத் தோன்றுகிறது..
நன்றி:பிரியா 

No comments:

Post a Comment